Thursday, December 29, 2011

கர்ப்பக் காலக் கோளாறுகள்

எங்கோ ஒளிந்துகொண்டு  
நூற்கண்டை மேலும் சிக்கலாக்கிப் போகிறது
நூலின் நுனி

பயணத்தையே முடக்கிப் போகிறது
பயணத்தின் முன்
புறப்பட்ட குழப்பமும் சந்தேகமும்

எப்படிச் சிறப்பாகத் துவங்குவது என்று
விடாது தொடர்கிற சிந்தனையில்
மொட்டிலேயே கருகத் துவங்குகிறது
ஒரு தூய காதல்

அனுபல்லவியும் சரணங்களும்
மிகச் சரியாக அமைந்தும்
பல்லவி அமைந்து தொலையாததால்
கண் திறக்கப் படாத சிற்பமாய்
சிற்பக் கூடத்திலேயே
சிற்பமாகவுமில்லாது
பாறையாகவுமில்லாது
விடிவு காலம் எதிர்பார்த்து
தவமாய்த் தவமிருந்தும் பலனின்றி
கலையத் துவங்குகிறது
ஒரு கவிதைக் கரு

Tuesday, December 27, 2011

அழகு


பூமிக்கு நீர் நதி அழகு
பூவைக்கு நளினமே அழகு
சாமிக்கு அருளலே அழகு
செல்வர்க்கு கருணையே அழகு

மலருக்கு வண்ணமே அழகு
மன்னருக்கு மணிமுடி அழகு
நிலவுக்கு வெண்பனி அழகு
நினைவுக்கு நல்லதே அழகு

வயலுக்கு விளைச்சலேஅழகு
வார்த்தைக்கு வாய்மையே அழகு
யுவதிக்குப் பருவமே அழகு
தமிழுக்குத் தொன்மையே அழகு

முதுமைக்கு நிதானமே அழகு
முயற்சிக்கு தொடரலே அழகு
பதுமைக்கு இருப்பிடம் அழகு
புலமைக்கு சொற்திறம் அழகு

வீணைக்கு நாதமே அழகு
விருந்துக்கு இன்முகம் அழகு
யானைக்குத் தந்தமே அழகு
கவிதைக்குச் சந்தமே அழகு

Sunday, December 25, 2011

நாமும் கவிமன்னர்கள்தான்...

வானக் கடலில் பறவை ஒன்று
சிறகை விரித்து நீந்தும்-அதைக்
காண மனதில் பொங்கும் மகிழ்வு
கவியாய் மாற ஏங்கும்

மௌன மொழியில் மலரை அணைத்து
நிலவு கதைகள் பேசும்-அந்தக்
காமக் கதைகள் கேட்க நெஞ்சில்
கவிதை புயலாய்ச் சீறும்

பருவ உணர்வில் முதிர்ந்த நாற்று
தலையைத் தாழ்த்தி நாணும்-அதை
அறிந்த எந்த இளமை நெஞ்சும்
புதிய சந்தம் தேடும்

மலையைத் தடவி  மகிழ்ந்த அருவி
மண்ணில் வெட்கி ஓடும்-அந்த
அழகை ரசிக்க  மனதில் கவிகள்
அருவி போலப்  பாயும்

கரையைத் தழுவி முத்தம் ஈந்து
அலைகள் மயங்கித் திரும்பும் -அதன்
நிலையை உணர்ந்தால் கவிதைப பூக்கள் 
நெஞ்சில் தானே அரும்பும்

உலகில் காணும் காட்சி யாவும்
கவிதைக் கோலம் தானே -இதை
உணர்ந்து கொண்டால் போதும் நாமும்
கவிதை மன்னர் தானே


Friday, December 23, 2011

நெடும் பயணம்

நாடு விட்டுத்தான் போகிறோம்
ஆயினும் பாஸ் போர்ட் தேவையில்லை

ஊரை விட்டுத்தான் போகிறோம்
ஆயினும் ஆடை அணிகலங்களோ
பெட்டி படுக்கைகளோ தேவையில்லை

போகாத ஊர்தான்
ஆயினும் ஊர் பற்றிய தகவல்களோ
வரை படங்களோ தேவையில்லை

பார்க்காத ஊர்தான்
ஆயினும் யாரும் உடன் வந்து
வழிகாட்டத் தேவையில்லை

உடலையே சுமையென விட்டுத்தான் போகிறோம்
என்வே சுமை கூலிப் பிரச்சனை
நிச்சயமாய் இல்லை

சாப்பாட்டுப் பிரச்சனையில்லை
பஸ் கட்டணப் பிரச்சனையில்லை
போக்குவரத்துப் பிரச்சனையில்லை
காசுப் பிரச்ச்னையில்லை
சக பயணிப் பிரச்சனையில்லை

புறப்படுகிற கணத்தில் மட்டும்
வலியோ உணர்வோ மட்டும் இல்லாது போயின்
பெரும் பயணம்போல் ஒரு சிறந்த பயணம்
சத்தியமாய் உலகினில் இல்லை

Tuesday, December 20, 2011

உயிரேணி

சிறு புன்னகைதானே
என்னசெய்துவிடப் போகிறது என
அலட்சியமாய் எப்போதும் இருப்பதில்லை

என்று எங்கு எப்போது கிழியும் எனத் தெரியாது
நைந்துபோன சட்டையாய்
பிரச்சனைகளில் அசுரப் பிடியில்
மனம் துடிக்க அலைபவனுக்கு அது ஒரு
சால்வையாகக் கூட ஆகலாம்

சிறு ஆறுதல் வார்த்தைதானே
அதனால் என்ன பயன் என எண்ணி
அசட்டையாய் இதுவரை இருந்ததில்லை

நிலைத்தலுக்கான  அதீத ஓட்டத்தில்
தடம் மாறி நிலை தடுமாறி
அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடந்து
ஒரு சிறு பிடிதேடித் துடிப்பவனுக்கு
அது ஒரு உயிரேணியாகக் கூட இருக்கலாம்

சிறு பாராட்டு மொழியில்
என்ன விளைந்துவிடப் போகிறது என எண்ணி
சோம்பி இருக்க முயன்றதில்லை

உச்சம் மிக அருகில் இருப்பது அறியாது
கடந்த கால வேதனைகள் தந்த அலுப்பில்
அசந்து தூங்கிக் கிடப்பவனை
எழுப்பி உச்சம் ஏற்றும் அபூர்வ
தாரக மந்திரமாகக்  கூட அது இருக்கலாம்

போகிற வழியில் முடிந்தவரையில்
புன்னகையையும் ஆறுதல் மொழிகளையும்
பாராட்டையும்விதைத்துக் கொண்டே போகிறேன்
என்றேனும்  கோடை வெய்யிலின்
உக்கிரம் பொறுக்காதுதுடிதுடித்தழ நேரும்
எனக்காக  மட்டுமல்ல
என் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்காகவும்
விதைத்தவை நிழல் கொடுக்க நிச்சயம்
விஸ்வரூபமேடுத்துக் காத்திருக்கும் என்கிற
அதீத நம்பிக்கையில்

Sunday, December 18, 2011

எதிர் திசையில் ஓரடி .....

புரியாது என புலம்பித் திரிந்ததைவிட
புரிந்து கொள்ள முயன்றது
கொஞ்சம் புரியத்தான் வைத்தது

கிடைக்காது என சோம்பித் திரிந்ததைவிட
தேட முயன்றதில்
கொஞ்சம் கிடைக்கத்தான் செய்தது

முடியாது என முடங்கிக் கிடந்ததைவிட
அடைய முயன்றது
கொஞ்சம் முடித்துத்தான் கொடுத்தது

மாறாது என மறுகித் திரிந்ததை விட
மாற்ற முயன்றது
கொஞ்சம் மாற்றம்தான் காட்டியது

கிடையாது என அவநம்பிக்கைகொண்டதை விட
நமபத் துவங்கியதில்
கொஞ்சம் உண்டெனத்தான் புரிந்தது

என்றும்
பொய்த்து எரிக்கும் வானத்தைப் பார்த்து
அழுது கொண்டிருந்ததை விட
நாளைய மழையை எதிர்பார்த்து
உழுது வைத்தது
கொஞ்சம் பலன் தரத்தான் செய்தது

Thursday, December 15, 2011

விழிப்புணர்வின் உச்சம்


புதிய பாணியில் ரேசர்கருவி
 ஒரு கடையில் இருந்தது
விலையும் குறைவாய் இருந்தது
அதற்கு பின்னாளில்
பிளேடு வாங்குகையில்தான்
அதன்  விலை தெரிந்து அதிர்ந்து போனேன்
வேறு பிளேடு பொருந்தாததால்
ரேசரை மாற்றவும் முடியவில்லை
மாட்டிக் கொண்டது புரிந்தது
இனி இதுபோல் ஏமாறமாட்டேன்
பிளேடு விலை கேட்டுத்தான் ரேசர் வாங்குவேன்

கொஞ்சம் சுமாரான
ஓட்டல் ஒன்றுக்குப் போனேன்
சப்பாத்தியின் விலையும் நானின் விலையும்
பூனை விலையில் இருந்தது
அவசரப்பட்டு ஆர்டர் கொடுத்துவிட்டு
சைடு டிஷ் ஆர்டர் கொடுக்கையில்தான்
அவர்கள் தந்திரம் புரிந்தது
அது யானை விலையில் இருந்தது
ஏமாந்தது புரிந்தது
இனி இதுபோல் ஏமாறமாட்டேன்
சைடு டிஷ் விலையைக் கேட்டுத்தான்
மெயின் டிஷ்ஸே ஆர்டர் செய்வேன்

இலவச மிக்ஸியும் கிரைண்டரும்
கொடுப்பதாகச் சொன்னதும் மகிழ்ந்து போய்
பட்டனை அழுத்தமாய் அழுத்தினேன்
பின்னாளில் பஸ் கட்டண உயர்வையும்
மின்சாரக் கட்டண உயர்வையும்
அரசு அறிவித்தவுடன்தான் அதிர்ந்து போனேன்
அவர்களது அரசியலும் புரிந்தது
ஏமாந்ததும் புரிந்தது
அடுத்த தேர்தலில் அவசியம் ஏமாறமாட்டேன்

கொடுக்கிற பொருளைப் பொருத்தே
இறுதி முடிவெடுப்பேன் என்பதில்
இப்போது நான் மிக உறுதியாய் இருக்கிறேன்
நல்ல குடிமகனாக விழிப்புடன் இருக்கிறேன்


Wednesday, December 14, 2011

புதுப் பொங்கலில் பழைய உப்பு

மனவெளிக்காட்டினில்
மண் மேடாய் எண்ணங்கள்
சிந்தனை ஏர் நடத்தி
விதைத்து வைத்த கவி விதைகள்
கால வெள்ளத்தில் கரைந்து போமோ ?
எண்ணங்கள் கேள்வியாய்
உருமாறி என்னை
உலுக்கி எடுத்துப் போக
ஆழ உழுகிறேன்
தேவுடா நுவ்வே கதி

இதய கட்டுத்தறியில் எண்ணப் பாவுகள்
பொருட்சுவை இழையோட
நெய்துவைத்த கவியாடைகள்
கால நகம் பட்டுக்
கிழிந்தழிந்து போமோ ?
மனக் குளத்தில்
சிறுகல் எழுப்பிய சிற்றலயையாய்
எண்ணங்கள் விரிந்து பரவ
அழுந்த நெய்கிறேன்
ஈஸ்வரோ ரஷது

மனப் பட்டறையில்
வார்ப்புகளாய் எண்ணங்கள்
அனுபவ உலையிலிட்டு
சீர் செய்த கவிதாயுதங்கள்
காலக் காற்றினில் துருவேறி
மண்ணாகி மக்கிப் போமோ ?
கேள்விகள் பயமாகி
வெறியேற்றிப் போக
இன்னும் கூராக்குகிறேன்
தெய்வமே நீயே துணை

Sunday, December 11, 2011

சிரிப்பின் பலமறிவோம்

சிரிக்கத் தெரிந்த பிறவி உலகில்
மனிதப் பிறவியே-இதை
அறிந்தும் இங்கு சிரிக்க மறுத்தல்
பெரிய கொடுமையே
இதழ்கள் வலிக்கச் சிரித்து விட்டால்
இன்பம் இன்பமே-எதையும்
இதயம் தன்னில் மூடி வைத்தால்
என்றும் துன்பமே

வளர்ந்த நிலவு வானில் இருந்து
மெல்லச் சிரிக்குமே-அதன்
அழகு சிரிப்பில் மயங்கி மலரும்
மணந்து சிரிக்குமே-அதன்
மணத்தில் மயங்கி சோலை யெல்லாம்
சொர்க்க மாகுமே-அந்த
உணர்வை உணர்ந்த மனிதர் மனத்தில்
மனிதம் பூக்குமே

குழந்தை மனதில் தெய்வம் இருந்து
சிரிப்பைத் துவங்குமே-அது
குழந்தை இதழில் மெல்ல வழிந்து
இல்லம் நிறைக்குமே-அந்த
அழகை உணர துன்பம் எல்லாம்
அழிந்து ஒழியுமே-இந்த
உலகே உண்மை சொர்க்க மென்று
புரிய லாகுமே

விழிகள் இரண்டும் காண வென்றே
அறிந்தி ருக்கிறோம்-கொண்ட
செவிகள் இரண்டும் கேட்க வென்றே
புரிந்தி ருக்கிறோம்-இனி
இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்-இதை
உலகு அறியச் சொல்லி நாமும்
உயர்வு கொள்ளுவோம்

Thursday, December 8, 2011

அனுபவமே விலை


ஒரு மலை வாசகஸ்தலத்திற்கு ஒரு செல்வந்தர்
தன் மனைவி மக்களுடன் சென்று கொண்டிருந்தார்
இருள் சூழத் தொடங்குகிற பொழுது திடுமென்று
பாதி வழியில் கார் பழுதாகி நின்று போனது
கார் டிரைவர் என்ன முயன்றும் என்ன காரணம் எனக்
கண்டுபிடிக்க முடியவில்லை

அந்த இடம் வனாந்திரம் போல் இருந்ததாலும்
காட்டு விலங்குகள் அதிகம் திரியும் பகுதி எனவும்
திருடர்கள் பயம் அதிகம் உண்டு எனக்
கேள்விப் பட்டிருந்ததாலும் செல்வந்தர்
மிகவும் கலங்கிப் போனார்

வயதுக்கு வந்த இரண்டு பெண்களும் மனைவியும்
அணிந்திருந்த அதிகப் படியான நகைகளும்
அவர் அடி வயிற்றைக் கலக்கத் தொடங்கியது

அந்த வழியில் தெய்வாதீனமாக ஒருகார் வர
அதை நிறுத்தி ஏதும் உதவ முடியுமா எனக் கேட்க
அந்தக் கார் டிரைவரும் சிறிது நேரம் எஞ்சினை
செக் செய்துவிட்டு தான் சரிசெய்து தருவதாகவும்
ஆனால் அதற்கு கூலி ஆயிரம் ரூபாய் ஆகும்
 எனத் தெரிவித்தார்

செல்வந்தர் இருந்த நிலைக்கு அது மிக
அதிகமாகப் படவில்லைஉடன் சரி செய்யச்
 சொல்லி ஆயிரம் ரூபாயைக் கொடுக்க
கார் டிரைவரை காரில் ஏறி அமரச் சொல்லி காரை
ஸ்டார்ட் செய்யச் சொல்லிவிட்டு எஞ்சினில் ஒரு
குறிப்பிட்ட இடத்தில் ஒரு சிறு கல்லைவைத்துத் தட்ட
கார் ஸ்டார்ட் ஆகிப் போனது

செல்வந்தர் மிகவும் சங்கடப்பட்டுப் போனார்
வெறுமனே ஒரு கல்லைவைத்து தட்டியதற்கு
ஆயிரம் ரூபாய் கூலி என்றால் அது மிகவும்
அநியாயமாகப் பட்டது பொறுக்காமல் கேட்டும் விட்டார்
"ஏனப்பா வெறும் கல்லைவைத்து தட்டியதற்கு
ஆயிரம் ரூபாய் என்றால் அநியாயம் இல்லையா ?"

வந்தவன் அமைதியாகச் சொன்னான்
"சார் நான் கல்லை வைத்து தட்டியதற்கு
உங்களிடம் பணம் வாங்கவே இல்லை அது ஓ.சி
ஆனால் இங்கு தட்டினால் கார் ஸ்டார்ட்
ஆகும் என்பதைத்தெரிந்து கொள்ள பதினைந்து
ஆண்டுகள் செலவிட்டு இருக்கிறேன்
அந்த அனுபவத்திற்குத்தான் இந்தக் காசு "என்றான்

செல்வந்தரால் பதில் ஏதும் பேச முடியவில்லை


Wednesday, December 7, 2011

தாய்மை ( 2 )


ஒவ்வொரு கணமும் அவன் செய்யும்
அளவிடமுடியா முயற்சியும்
அதனைத் தொடர்ந்து
அவனை வாரி அணைக்கும்
அளவிடமுடியா வளர்ச்சியும்
என்னை திக்கு முக்காடச் செய்து போகிறது

அதே சமயம்
அவனது அல்ட்சியமான ஒரு பார்வையும்
முகம் பாராது பேசிப் போகும்
ஒவ்வொரு சிறுச் சிறு பேச்சும்
பெறுகையில் பேருவகை கொண்ட என்னை
பரிதவிக்க வைத்துப் போகிறது

ஆயினும் என்ன
சின்னஞ்சிறு பிராயத்தில்
அவன் நடை பயில முயலுகையில்
தட்டுத்தடுமாறி வீழ்ந்ததையும்
ஒவ்வொரு முறை வீழும்போது
வாரி அணைத்து உச்சி மோந்து
மீண்டும் நடைபயில வைத்ததையும்
எண்ணி எண்ணி
தாயாக மீண்டும் பெருமிதம் கொள்கிறேன்

இன்று
ப்தவி தரும் சுக போகங்களில்
செல்வம் தரும் மதமதப்பில்
தட்டுத் தடுமாறும் அவன்
இன்றில்லையெனினும் நாளை
அல்லது அடுத்து ஒரு நாள்
அல்லது என்றேனும் ஒரு நாள்
அல்லது விழிமூடும் முன்னரேனும் ஒரு நாள்
ஒரே ஒரு நாள்
மகனாக இல்லையென்றாலும் கூட
ஒரு மனிதனாக வேனும்
நின்று காட்டாமலா போவான் ?

Thursday, December 1, 2011

போதைக்காரனின் புலம்பல் (நிச்சயமாக நானில்லை )


மாலை நேரம் ஆனாப் போதும்
மனசு குளிருதே-இந்த
பாழாய்ப் போன உடம்பு மட்டும்
அனலாய் காந்துதே
கால்கள் இரண்டும் கடையைப் பார்த்து
தானாய் நடக்குதே-இந்த
பாழாய்ப் போன போதைப் பழக்கம்
பாடாய்ப் படுத்துதே

வேட்டி துண்டு விலகி கிடக்க
விழுந்து கிடந்ததும்-நடு
ரோட்டில் விழுந்து வாந்தி எடுத்து
நாறிக் கிடந்ததும்
வீடு போகும் வழியை  மறந்து
தெருவில் திரிந்ததும்-நினைவில்
கூடி வந்தும் என்ன செய்ய
உடம்பு கொதிக்குதே

வ்லியைப் போக்க நல்ல மருந்து
என்று சொல்லியே -ஒரு நாள்
வலிய எனக்கு ஓசி தந்து
உசுப்பு ஏத்தியே
குழியில் என்னைத் தள்ளிப் போனான்
சகுனி நண்பனே-இன்று
குழிக்குள் கிடக்கேன் குப்பை போல
நாறி அழுகியே

காசு கொடுத்து யாரும் முதலில்
குடிப்பதே இல்லை-பின்னே
தாலி வித்து கூடக் குடிக்க
தயங்குவ தில்லை
கேடு கெட்ட இந்தப் பழக்கம்
எவர்க்குமே வேண்டாம்-பின்னே
கூறு கெட்டு என்னைப் போல
புலம்பவும் வேண்டாம்