Thursday, August 30, 2012

"போல " இருப்பதே நிஜம்

உண்மையானவனாய் இருப்பதைவிட
உண்மையானவனைப்போல இருப்பது
அதிகத் துயர் தராது
அது எளிதானதும் கூட

நேர்மையானவனாய் இருப்பதைவிட
நேர்மையானவனைப்போல் இருப்பது
அதிகச் சிரமம் தராது
அதுதான் ஆகக் கூடியதும் கூட

புத்திசாலியாய் இருப்பதைவிட
புத்திசாலியைபோல் இருப்பது
எளிதில் பிறரைக் கவரும்
அதிலதான் அதிக வசீகரமும்  கூட

சக்திமிக்கவனாய் இருப்பதைவிட
சக்திமிக்கவன் போல் இருப்பது
 பாதித்துயர் அழிக்கும்
அதுவே பாதுகாப்பானது  கூட

நண்பனாய் இருப்பதை விட
நண்பனைப்போல்  இருப்பது
ஏமாற்றத்தை அடியோடு அழிக்கும்
அதுதான் பிழைக்கும் வழி கூட

போல இருப்பது போலி என்பது
இலக்கணத்திற்குத்தான் பொருந்தும்
மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பது
பழமொழிக்குத் தான் சரி

இக்காலச் சூழலில்
 "போல " இருப்பதுவே
நிஜமாகக் கருதப்படும்
 "மின்னுவது " மட்டுமே
 பொன்னாக மதிக்கப்படும்

என்வே...... ( உண்மையானவனாய்.... )

Wednesday, August 29, 2012

நினைவுகூறல் கடமை அல்லவா

ஆடிப்பாடி எல்லோரும் கொண்டாடுவோம்
ஆனந்தமாய் இந்தநாளைக் கொண்டாடுவோம்
கூடிப்பாடி மகிழ்வுடனே கொண்டாடுவோம்-மாண்டிச்சோரி
பிறந்த நாளைத் திருநாளாய் கொண்டாடுவோம்

குழந்தை மனம் பஞ்சுபோல மென்மையானது-அதை
அறிவதுதான் அனைத்திலுமே முதன்மையானது-இதை
உலகறிய சொல்லிவைத்த அன்னையல்லவா-அவர்
அவதரித்த நாளுமிந்த நாள்தான் அல்லவா

பள்ளியது ம் இன்னுமொரு வீடுபோலவே-இதை
குழந்தைகள் உணருமாறு செய்தல்வேண்டுமே -என
எல்லோரும் அறியவைத்த அறிஞர் அல்லவா-அவர்
பிறந்திட்ட நாளுமிந்த நாள்தான் இல்லையா

திணிக்கின்ற பண்டமல்ல கல்வியென்பது-எளிதாய்
புரிந்துகொள்ள உதவுவதே பள்ளியென்பது-இதை
அனைவருக்கும் புரியவைத்த மேதையல்லவா-அவ்ர்
வந்துதித்த இந்நாளே நன்நாள் அல்லவா

இரண்டுமுதல் ஆறுவரை ஈர்க்கும் பருவமே-இதைத்
தெளிவாகத் திட்டமிட முயல்தல் வேண்டுமே -என்ற
சிறப்புமிக்க சேதிசொன்ன தெய்வ மல்லவா-அவரை
இந் நாளில் நினைவுகூறல் கடமை அல்லவா

(மரியா மாண்டிச் சோரி 31.08.1870)

 மீள் பதிவு  

Monday, August 27, 2012

அந்த நீலக் கடல்


அகன்று விரிந்து பரந்து
ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தது
அந்த நீலக்கடல்

 கடற்கரையோரம்
யாருமற்ற தனிமையில்
"இனியும் வாழ்வதில் அர்த்தமில்லை "
என்கிற திடமான முடிவுடன்
கடல் நோக்கி விரைந்து கொண்டிருந்தான்
இளைஞன் ஒருவன்

தன்னுடன் விளையாடத்தான்
அலைகள் தத்தித் தத்தி வருவதான நினைப்புடன்
கரைக்கும் கடலுக்கும் இடையில் ஓடி
மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தாள்
சிறுமி ஒருத்தி

"காமத்தில் திளைப்பவர்களுக்குத் தேவை
அடர் இருளும் யாருமற்ற தனிமையும்
தூய காதலுக்குத் தேவை
காற்று வெளியும் கடற்கரையும்தான் "
காதல் மொழிகள் பேசி
காதலியைக் கரைத்துக் கொண்டிருந்தான்
காதலன் ஒருவன்

ஒவ்வொரு பருவத்திலும்
கடல் தன்னுடன் கொண்ட பரிச்சியத்தை
நெருக்கத்தை நேசத்தை
அசைபோட்டபடி கடல் தாண்டிய வெறுமையில்
எதையோ தேடிக்கொண்டிருந்தார்
பெரியவர் ஒருவர்

என்றும் போல
எப்போதும் போல
தனக்கென ஏதுமற்று
கண்போருக்குத் தக்கபடி
மிகச் சரியாகப் பொருந்தியபடி
அகன்று விரிந்து பரந்து
ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது
அந்த நீலக் கடல்

Friday, August 24, 2012

பதிவர் சந்திப்பு -கவுண்ட் டவுன் ஆரம்பம்-


 பதிவர் சந்திப்பு -கவுண்ட் டவுன் ஆரம்பம்-

முகம் மட்டுமா மனம் காட்டும்
ஒருவரின் பேச்சும் எழுத்தும்
செயலும் கூடத்தான் துல்லியமாய் மனம் காட்டும்
உள்ளத்தில் உண்மை ஒளிஉண்டாயின் அது
வாக்கினில் உண்டாம் என்கிற கவிதையின்
 பொருள் கூட அதைத்தானே சொல்கிறது

கையில் கிடைத்த ஒரு முடியைவைத்து
சாமுத்திரிகா லட்சணத்தின் விதிகளின்படி
அந்தஅழகு நங்கையின் உருவை வரைந்து
அந்த மகாராணியைத் தேடிப்பிடித்த
விக்ரமாதித்தன் கதை நாம் அனைவரும்
அறிந்ததுதானே

அதைப்போன்றே முகக்கண்ணால் காணாது
 பதிவர்கள்அனைவரையும் அவர்களது
பதிவின் முலம் அவர்களது பரந்த உயர்ந்த
உள்ளத்தினை அகக்கண்ணால்
 புரிந்து கொண்ட நாம் அவர்களை
 நேரடியாகச் சந்தித்துஉரையாடவும் தொடர்ந்து
அவர்களுடன் பாசத் தொடர்பினை
ஏற்படுத்திக் கொள்ளவும் இந்த
 சென்னைப்  பதிவர் சந்திப்புத் திருவிழா
அனைவருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக
அமையவுள்ளது என்றால் அது மிகை அல்ல

அதற்காக பெரிதும் பாடுபட்டு மிகச் சிறப்பான
ஏற்பாடுகளைச் செய்துள்ள சென்னை பதிவுலக
நண்பர்களுக்கு மகிழ்வூட்டும் விதமாகவும்
நன்றி காட்டும் விதமாகவும் இந்த திருவிழாவில்
பெருந்திரளாக கலந்து கொள்வதுடன் இந்த விழா
மிகச் சிறப்பாக நடைபெற நம்மால் ஆன
உதவிகளை செய்வதுடன் நாம் நம்மை முழுமையாக
இந்த நிகழ்வுடன் ஐக்கியப்படுத்திக் கொள்வோமாக

நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லட்டும்
இப்படை தோற்கின் எப்படைதான் வெல்லும் என
 "எப்படையும் " மனத்தினுள் ஐயம் கொள்ளட்டும்

Wednesday, August 22, 2012

நீரோடு செல்கின்ற ஓடம்

நல்ல படிப்பு 
நல்ல வேலை
என்னை
ஊரைவிட்டும்
உறவைவிட்டும்
பிரித்துப் போடும்

சம்பளத்தொகையே
என் இல்லத்திற்கும்
என் அலுவலகத்திற்க்கான
இடைவெளியை
நிர்ண்யித்துப் போகும்

வீட்டுக்கடன்
பிடித்தத் தொகையே
எனக்கான
சம்பாதிக்கும் பெண்ணை
முடிவு செய்துப்போகும்

யாரை அழைத்துக் கொள்வது
அல்லது
யாரிடம் பராமரிக்க அனுப்புவது
என்கின்ற தீர்மானமே
நான் தகப்பனாவதை
நிர்ணயிக்கும் காரணியாகிப் போகும்

திங்கள் காலை முதல்
வெள்ளி மாலைவரை
என் உணர்வுகளும்
என் செயல்களும்
அலுவலக திசை நோக்கியே நீளும்
இல்லம் கூட
அலுவலகம் போல வேகும்

அவசியப் பேச்சுக்கே
நேரமில்லை என்பதால்
எங்களுக்கான
அன்னியோன்னிய பேச்சுக்கள்
அடியோடு நசுங்கிப்போகும்

மறுவார தயாரிப்புக்கு
சனிக்கிழமை பலியாகும்
நாவுக்கு ருசிகாட்டவோ
உடலுக்கு சுருதி கூட்டவோ
ஞாயிறு ஒதுக்கீடாகிப்போகும்

என் இஷ்டப்படி எதுதான் நடந்தது என
அவ்வப் போது புலம்பி
தொடர் ஓட்டத்தின்
துயர் தாங்காது
மன இறுக்கத்தின்
வலி பொறுக்காது
குறிப்பிட்ட கால இடைவெளியில்
என்னைக்
கடித்துக் குதறி சின்னா பின்னமாக்கி
தன் துயர் குறைக்க முயன்று
தோற்று வீழ்வாள் துணைவி

என் இஷ்டபடியும்
இதுவரை எதுதான் நடந்தது
என்பதை விளக்கிச் சொல்லி
அவளுக்கு ஆறுதல் சொல்லி
நானும் ஆறுதல் பெறலாம் என
எத்தெனிக்கையில்
கடந்தகால இழப்புகளும்
எதிர்கால கவலைகளும்
நிகழ்கால பொறுப்புகளும்
என்னை
கையாலாகாதவன் ஆக்கிப்போகும்

இத்தனைக்கும் இடையில்......

ஆற்றங்கரையோரம்
வியாபாரத்திற்க்காக
பரப்பி வைக்கப்பட்ட மீன்கள் மேல்
சாகாதிருப்பதற்க்காக
அவ்வப்போது தெளிக்கப்படும்
துளி நீர் போல
உயிர் நீர் போல

"மின்னோடு வானம் தண் துளி தலை இ ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம் புணைபோல் ஆர் உயிர்
முறை வழிபடூஉம்..."என்ற
பூங்குன்றனின் அருள்வாக்கு
அவ்வப்போது ஆறுதல் சொல்லிப் போகும்

 மீள்பதிவு 

Monday, August 20, 2012

நடிப்பறியா நடிகர்கள்

ஒத்திகையற்ற அரங்கேற்றம்
சோபிப்பதில்லை
முதல் ஒத்திகையில்
நடிகனுக்கு கதாபாத்திரத்தை
அறிமுகப் படுத்தும் இயக்குனர்
பின்னர் தொடர்கிற ஒத்திகைகளில்
கதாபாத்திரத்தின் இயல்பறியவும்
அதனுடன் இணையவும்
பின் அதுவாக மாறவுமே
பயிற்சியளிக்கிறார்

அதனால்தான்
ஒத்திகையின் போது
நடிகன் முதலில் அவனை
மறக்கக் கற்பிக்கப்படுகிறான்
பின் படிப்படியாய்
கதாபாத்திரமாகவே
மாறக் கற்பிக்கப்படுகிறான்

அரங்கேற்ற நாளில்
தன்னை முற்றாக மறந்த
கதாபாத்திரமாகவே மாறிய நடிகன்
அவனது அத்துணை நாள் முயற்சியும்
முழுமையடைந்ததாய் அறிகிறான்
பெரும் மகிழ்ச்சியும் கொள்கிறான்

 நடிப்பின்  இலக்கண மறியாத
நாடகத்தின் சூட்சுமம் அறியாத
பேதை நடிகனோ
மாறவும் தெரியாது
தன்னை மறக்கவும் தெரியாது
தான் தானாகவே இருந்து
அவனும் கஷ்டப்படுகிறான்
நம்மையும் கஷ்டப்படுத்துகிறான்.......

தினம் இரவில் கண் மூட
வாழ்நாளெல்லாம்
அந்தப் "பெரிய இயக்குனர் "
ஒத்திகை நடத்தியும்
மரண அரங்கேற்றத்தில்
முழுமையாய்
இணைத்துக் கொள்ளவும்
மாறிக் கொள்ளவும் அறியாது
நாம் நாமாகவே  இருந்து
துடிக்கிற தவிக்கிற
அஞ்ஞான மனிதர்கள்
நமமைப்போலவே


Sunday, August 19, 2012

கவிதையும் குழந்தையும்

விரும்பி வருந்தி
அணைக்க அழைக்கையில்
பழுப்புக்காட்டி ஓடி மறையும்
எதிர்பாரா நேரத்தில்
மனம் குளிர
மடியில் விழுந்து புரளும்......

சில சமயம்
பெரிய தோரணைக்காட்டி
சின்னஞ்சிறு கதைகள் பேசும்
பல சமயம்
கைக்கடக்கமாய்க் கிடந்து
பல அரியதை உணரக் காட்டும்....

கடலாய் மலராய்
காவியமாய் ஓவியமாய்
ப்ன்முகங் கொண்டிருந்தபோதும்
அவரவர் மன நிலையளவே
தன்னுயரம் காட்டும்
இன்சுவையும் கூட்டும்.....

ரசிக்கத் தெரிந்தவனுக்கு
மகிழ்வூட்டும் மலர்ச் செண்டாய்
ரசித்துப் படைத்தவனுக்கு
பேரின்பப் பெட்டகமாய்
உருமாறித் தன் முகம் காட்டும்
உணர்வுக்குள்  சொர்க்கத்தைச் சேர்க்கும் ...

சுயமாக தன்னிலையில்
துரும்பசைக்க முடியாத தெனினும்
தன் சிறு அசைவால்
இருளோட்டி ஒளிகூட்டிப்  போகும்
துயர்போக்கி சுக்ம் சேர்த்துப்போகும்.....

குழந்தையை கவிதை என்றால் என்ன ?
கவிதையை குழந்தை என்றால்தான் என்ன ?

Saturday, August 18, 2012

" யாதோ"

கவிஞனாக அறிமுகமாயிருந்த 
என் நண்பனிடம்தான்
முதன் முதலாக
என் படைப்புகளைக் கொடுத்தேன்
பாதிபடிக்கும் வரை சமநிலையில் இருந்த 
அவன் முகம்திடீரெனக்  கறுக்கத் துவங்கியது 

"கவிதைக்குரிய எந்தக் கூறும் இ ல்லை
இதை சரி செய்வதற்கான வாய்ப்பும் இல்லை
எந்தத் தைரியத்தில் என்னிடம் வந்தாய்" என்றான்
"என்ன செய்யலாம்" என பயந்த படி கேட்டேன்
"வேண்டுமானால் கட்டுரையாளரை சந்தித்துப் பார்
அவர்கள் தான் எதையும் ஒப்புக் கொள்வார்கள்"
 என்றான்

கட்டுரையாளரைச் சந்தித்தபோது அவர்
புத்தகத்தில் புதைந்து கிடந்தார்
படைப்பினில் பாதி கடக்கும்போதே
அவர் உடல் குலுங்கத் துவங்கியது
சப்தம் போட்டுச் சிரித்தபடி சொன்னார்
"கட்டுரைக்குரிய எந்த லாஜிக்கும் இல்லை
உனக்கு போதிய பயிற்சியும் இல்லை" 
என்றார்

"இதை என்ன செய்வது" என்றேன்
"வேண்டுமென்றால் கதாசிரியரிடம் போ 
அவர்கள் தான் எதையும் 
சரி பண்ணத் தெரிந்தவர்கள்" என்றார்

எழுதியபடியே இருந்த கதாசிரியர்
என்னைப் பார்ப்பதற்கே அரை மணி நேரம்  ஆனது
நம்பிக்கை இழந்த நிலையில்
என் படைப்புகளை அவரிடம் நீட்டினேன்
"அங்கே வைத்து விட்டுப் போ நாளை வா" 
என்றார்

அரசமரத்தடி பிள்ளையாரை
மௌனமாய் வேண்டியபடி
மறுநாள் அவரைப்  பயத்துடன் பார்த்தேன்
அவர் மேசையில் என் படைப்பு இல்லை
தூரமாய் கூடைக்கருகில்
குப்பை போல் இருந்தது

"கதைக்கு அவசியம் கரு வேண்டும்
உணரும்படியாகவும் ரசிக்கும்படியாகவும் 
நிகழ்வுகள் வேண்டும்
கொஞ்சம் கொஞ்சமாய் வளர்பிறை போல்............"
இன்னும் என்னென்னவோ சொன்னார்
எனக்கு எதுவுமே விளங்கவில்லை

முடிவாக

"இதனை இப்படியே கட்டி மூலையில் வை
ஓராண்டு தொடர்ந்து படி
பின்னர் முயற்சி செய்து பார்" என்றார்
"நல்லது" எனச் சொல்லி நொந்தபடி
நடுவீதிக்கு வந்தேன்

"கைகளில் என்ன பார்சல்"
இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய்"
 என்றான்எதிரில் வந்த
பத்தாம் வகுப்பில்தமிழில்
 முப்பது மதிப்பெண்களே எடுத்ததால் 
படிப்பிற்கே முழுக்குப் போட்ட
என் பால்ய நண்பன்.
"எழுத்தில் ஆர்வம் 
கொஞ்சம் எழுதியிருக்கிறேன்
இது எதில் சேர்த்தி என தெரியாமல் 
அலைகிறேன்" என்றேன் பயந்தபடி

"பிள்ளையை பெற்று விட்டு
பேருக்காக அலைகிறாயா" என்றவன்
ஆவலாய் அதனைப் பிடுங்கி
அவசரம் அவசரமாய் படிக்கத் துவங்கினான்
ஒவவொரு பக்கம் முடிய முடிய
"பேஷ் பேஷ்" என்றான்
அவன் முகம் ப்ரகாசமாகிக் கொண்டே போனது
எனக்குள் பயம் அதிகமாகிக் கொண்டே போனது

"நான் கிளம்பலாம் என நினைக்கிறேன்" 
என்றேன் மெதுவாக
கொஞ்சம் பொறு இன்னும் இரண்டு பக்கம் தான்"
 என்றான்
முதன் முதலாக
எழுத்தின் மீது நான் கொண்ட காதலுக்காகவும்
இதை எழுதியதற்காகவும் மனம் நொந்து அழுதேன்
திடுமென என் தோளைத்  தட்டியபடி
"பிரமாதம்" என்றான்

தமிழில் தோற்றவனா என் எழுத்தை
ஏற்க வேண்டும்
எல்லாம் தலை விதி என்று நொந்து
"எப்படி" என்றேன்

"உன்னை பாதித்தவைகளை எழுதியிருக்கிறாய்
படிப்பவரை பாதிக்கும்படியும் எழுதியிருக்கிறாய்
குறிப்பாக புரியும்படியும் எழுதியிருக்கிறாய்
நோகாமல் தேன் கிடைப்பது சுகம் இல்லையா" 
என்றான்
அவனை அதிசயமாய் பார்த்து 
அச்சத்துடன் கேட்டேன்
"இது எதில் சேர்த்தி"

அவன் அமர்க்களமாய் ஆரம்பித்தான்
"சங்க காலங்களில் எழுதியவர் பெயர் தெரியாத
எத்தனையோ நல்ல கவிதை கள் கிடைத்தன
அவைகளை புறக்கணித்தா விட்டோம்
எழுதியவரை  " யாரோ "
எனச் சொல்லி சேர்த்துக் கொள்ளவில்லையா"
 என்றான்
நான் அமைதியாய் இருந்தேன்

எழுதியவர் பெயர் தெரியாதபோது
பெயரை" யாரோ "எனக் கொள்ளுதல் போல
எழுதியது எதனுள்ளும் அடங்காத போது
அதன் பெயர்" யாதோ" என்றான்

போதி மரத்து புத்தன் போல்
என் முன் அவன் பிரசன்னமானான்
எனது சிந்தனைகளை
இப்போதெல்லாம்
ஒரு வகைக்குள்ளோ
ஒரு வரையரைக்குள்ளோ
சிறை பிடித்துக் கொள்ளுவதேயில்லை
இப்போதெல்லாம் நான்
கதை கட்டுரை கவிதைப் பக்கம்
தலை வைத்துப் படுப்பதே இல்லை
நான் எழுதுவதெல்லாம்" யாதோ" தான்


மீள்பதிவு 

Friday, August 17, 2012

அழுக்கு மன மூட்டை

எப்போதுமே
பயன்படுத்தமுடியாத அளவு
பயன்படுத்தப்பட்ட
பொருட்கள் அடங்கிய….
இதற்குமேலும்
அழுக்கடையமுடியாத அளவு
அழுக்கடைந்துபோன
மூட்டையைச் சுமந்தபடி….
புதர்முடிக்குள்
புதைந்துபோன முகத்தோடு
நிகழ்காலம் அல்லாத
ஏதோ ஒரு காலத்தில் சஞ்சரித்தபடி
எப்போதும் அவன்
எங்கள் தெருவில் திரிவான்.

அந்த மூட் டை
சிலசமயம் அவன்மடியில்
குழந்தையைப் போல கிடந்து சிரிக்கும்
சிலசமயம் சிம்மாசனமாகி
அவனைத் திமிர்பிடித்தவன்போலக் காட்டும்
சிலசமயம் தலையணையாய் மாறி
அவன் தூங்கத் தாலாட்டும்
ஆனாலும் பலசமயம்
அவனுள் பொக்கிஷம்போல் பொதிந்துகிடந்து
லேசாக முகம் காட்டும்.
இப்படி
எத்தனை அவதாரம் அது எடுத்தபோதும்
உடல்தாங்கும் உயிர்போல
எப்போதும் அது
அவனுள் ஒரு அங்கமாகவே வாழும்

அவனை அடிக்கடி பார்க்கிற உரிமையில்
அல்லது
உணவு கொடுத்த பரிச்சயத்தில்
எவரேனும் எதிர்பாராது
அவனை நெருங்க நேர்ந்தால்கூட
உடல்படபடக்க
நம்பிக்கை இழந்தவனாய்
அந்த மூட் டையைப் பொக்கிஷம் போல்
அவனுள் புதைத்துக்கொள்வான்

அவனுள் நேரும் ஒரு மறுபிறப்போ
அவனைத் தழுவும் மரணமோ அன்றி
அவனுக்கும் மூடைக்குமான பந்தம்
அறுந்து போகாது….
அந்த மூடையை அறுத்து எறிந்தால்
அவன் சரியாகக் கூடும்
அல்லது
அவன் சரியானால் கூட அந்த மூடை
அவனைவிட்டுச் சாகுமென
அவ்வப்போது ஒரு எண்ணம் என்னுள் ஓடும்

கோட்டியாய்....
தெருவெங்கும் வலம்வரும் அவன்
என்றேனும் ஒரு நாள்
துருவாசனைப் போல்
உருமாற்றம் கொள்வான்
ஜடாமுடிகள் காற்றில் பறக்க
விழிகள் இரண்டும் நெற்றியில் ஏற
ருத்தர தாண்டவம் ஆடத்துவங்குவான்
அந்த அழுக்கு மூட் டையை உயரப்பிடித்தப டி
போவோர் வருவோரின்
மார்பினை  உற்று நோக்கி-
இதுதான் இதுதான் – என உரக்கக் கத்துவான்

அந்த ஆனந்தக் கூத்தின் உச்சத்தில்
அவன் நெற்றிக்கண் வெடித்துத் திறப்பதுபோலவும்
அனைவருக்குள்ளும் இருக்கும்
அந்த அழுக்கு மூடை
அவிழ்ந்து விரிந்து அம்மணமாவது போலவும்
என்னுள் பயம் விரைந்துபரவ
உடல் லேசாக நடுங்கத் துவங்கும்
என்னையும் அறியாது எனது கைகள்
என் நெஞ்சை மறைக்க முயன்று தோற்கும்.

மீள்பதிவு 

Wednesday, August 15, 2012

முடிவின் விளிம்பில்

குழப்பம் என்னுள் சூறாவளியாய்
சுழன்றடிக்கிறது
நான் எத்தனை நாள் இப்படி இருக்கிறேன்?
இருக்கிறேன் என்பது சரியா?
அல்லது
கிடக்கிறேன் என்பது சரியா?
அல்லது
இறக்கிறேன் என்பதுதான் சரியா?

ஐம்புலன்களின் கட்டுப்பாட்டை
முழுவதும் இழந்து போனதால்
கால உண்ர்வு அற்றுப்போனதா? 
கால உண்ர்வு அற்றுப்போனதால்
அனைத்தையும் இழந்து போனேனா?

தொடர்ந்து விஸ்வரூபம் எடுக்கும்
விடையற்ற கேள்விகளை புறம்தள்ளி
விழிகளைத் திறக்க முயல்கிறேன்

இருப்பிடம் தெரியாது இருந்த
இமைகள் இரண்டும்
சிதிலமடைந்த அரண்மனையின் 

புறவாயில்கள்போல்
கனத்து கிறீச்சிடுகின்றன
பட்டப்பகலில் குளத்து நீரில்
பட்டுத்தெறிக்கிற சூரியஒளிபோல்
பார்க்குமிடமெல்லாம்
ஒளிச்சிதறல்களே பரவிச் சிரிக்கின்றன
பயப்பாம்பு மனமெங்கும் ஊர்ந்து திரிகிறது
பார்வையும் பட்டுப்போய்விட்டதா?

எரிமலையாய் என்னுள்
மரணபயம் வெடித்துச்சிதற
அதன் அக்கினிக்குழம்புகள்
என் நாடி நரம்பெல்லாம் பரவி விரிய
என் சக்தியனைத்தையும் திரட்டி ஓலமிடுகிறேன்


மலைச்சரிவினில் உருண்டுவரும் பெரும்பாறைபோல்
ஏதோ ஒன்று உள்ளிருந்து உருண்டு
என் குரல்வளையை அடைத்துச் சிரிக்கிறது
நான் மரண வாசலை நெருங்கிவிட்டேனா?

தன் முகத்தையே
என் மார்பினில் புதைக்க முயல்பவள்போல்
முட்டிமோதி பிதற்றுகிறாள் என் மனைவி
முப்பதாண்டுகால உடல் பரிச்சியம் என்னுள்
காந்த அலையாய் பரவித் தெறிக்கிறது
விழிமூடும் முன் ஒருமுறையேனும்
அவளை த் தொட்டுவிட்டு வீழத் துடிக்கிறேன்
என் கைகள் இரண்டும்
எனக்கு சம்பந்தமற்றவைகள்போல்
வெட்டிவீழ்த்தப்பட்ட பனைமரங்களைப்போல்
மல்லாந்து கிடக்கின்றன
எரிகின்ற வீட்டின்முன்
செயலற்றுக் கதறுபவர்கள்போல்
யார் யாரோ கூக்குரலிட்டு அழுவது
மிக லேசாய் கேட்கிறது
நான்தான் எறிந்துகொண்டிருக்கிறேனா?

சுட்டெரிக்கின்ற பாலைவனத்தில்
கொப்பளிக்கின்ற சுனை நீர்போல
இத்துணை  அவஸ்தைகளுக்கும் மத்தியில்
இவைகளுக்கெல்லாம்

 தொடர்பே இல்லாததுபோல்
தென்றலின் குளுமை அடிவயிற்றை நிறைக்க
நாபிக்கு கீழே மொட்டு ஒன்று மலர்தலைப்போல
சிப்பி ஒன்று மிதந்து வந்து வாய்திறக்க
வண்ணத்துப் பூச்சியின் வர்ணஜாலங்களோடு

 தங்கத்தின் தகதகக்கும் ஜொலிப்போடு
ஒரு ஒளிக்கொத்து
லேசாக மிக லேசாக
எட்டிப் பார்த்துச் சிரிக்கிறது

அந்த ஒளிக்
கொத்தின் மாயாஜாலத்தில்
என்னுள் பேயாட்டம் போட்ட
அத்துணை வலிகளும்
அத்துணை துயர்களும்
ஒளிகண்டு ஓடும் இருள் போல
எங்கோ ஓடி மறைகிறது

அந்தக் கருணை ஒளி
முகம் நோக்கி ஈரடியாய்
பின்னோக்கி ஓரடியாய்
தொடர்ந்து மெல்ல நகர
அது கடந்த வழியெல்லாம் சில்லிட்டுப்போக
அது நடக்கும் வழியெல்லாம் பரவசம்  பரந்து விரிய
நானே பாதி உடலாகவும்
நானே பாதி பிணமாகவும் மாறிப்போகிறேன்

இனி எப்போதுமே திரும்பமுடியாத உலகுக்கும்
இனி போய்ச் சேரவேண்டிய வெட்டவெளிக்கும்
இடையிலான லட்சுமணக்கோட்டில்
என் உயிர்மூச்சு ஊசலாடிக்கொண்டிருக்கிறது
இப்போது எனக்கு எல்லாமே தெளிவாகத் தெரிகிறது

என்பார்வை அவள்மீது படுகிற அதிர்வினிில்
செய்வதறியாது திகைத்து
என்முகத்தோடு முகம்சேர்த்து கதறுகிறாள் மனைவி
"பெரிய உயிர் அடங்கப்போகிறது
பால்வார்பவர்கள் பக்கம் வாங்கோ"என
யாரோ கூக்குரலிடுகிற்ர்கள்
கதறல் ஒலி கூடமெங்கும் பட்டுத்தெறிக்க
கூட்டம் கட்டிலைச்சுற்றி அடைக்கிறது

தொப்புள்கொடி அறுபட
காலத்தாய் ஊட்டிய முதல்மூச்சுதான் உயிரா?
காலத்தாயோடு நித்தம்
உடல்கொண்ட பரிச்சியம்தான் ஜீவித்திருத்தலா?
காலவெளியில் காலத்துளி

 மீண்டும் இணைதல்தான் காலமாதலா?

காலத்தாயை அடைகிற வெறியில்
காலத்துளி என்னை விலக்கிப் பறக்கிறது
நான் பிணமாகிறேன்
அறையெங்கும் மரண ஓலம் தீயாய் பரவுகிறது



மீள்பதிவு  

Tuesday, August 14, 2012

திரிசங்கு நரகம்

செல்வம்
இரவை பகலாக்கி
பகலை இரவாக்கி
கோடையை வாடையாக்கி
வாடையை கோடையாக்கி
செல்வந்தர்களின்
உடலையும் மனத்தையும்
நலத்தில் இல்லையாயினும்                        சுகத்தில் நிலை நிறுத்திப்போகிறது

வறுமை
இரவை இரவாகவும்
பகலை பகலாகவும்
கோடையை கோடையாகவும்
வாடையை வாடையாகவுமே வைத்திருந்து
ஏழைகளின்
உடலையும் மனத்தையும்
சுகத்தில் இல்லையாயினும்                        நலத்தில் நிலை நிறுத்திப்போகிறது

எப்படி முயன்றும்
முடியாமையால்
முன்னவர்போல்
சுகத்தில் நிலைக்க இயலாமலும்
ஒருபடி இறங்க
இயலாமையால்
பின்னவர்போல்
நலத்தை சுகிக்க முடியாமலும்
 பாவம் மத்திமரின்
உடலும் மனமும் மட்டும்
நாளும் ஏங்கி  ஏங்கியே தேய்கிறது
கௌசிக  மனம் தானே  படைத்த
திரிசங்கு நரகத்தில்
நாளும் உழன்று  வாழ்ந்தே சாகிறது

Sunday, August 12, 2012

வட்டம் ஞானத்தின் சின்னமே

சராசரியாக இருப்பதில்
எரிச்சல் கொண்டு
மீறத் துவங்குகையில்தான்
வட்டத்தின்
முதற்புள்ளி வைக்கப்ப டுகிறது
அவனும் வாழத் துவங்குகிறான்

 வாழ்வைக் கூர்ந்து நோக்குதலும்
தன்னை ஈடுபடுத்திக் கொள்ளுதலுமே
வட்டத்திற்கான கோட்டை
வளர்த்துப் போகிறது
அவனும் வளரத் துவங்குகிறான்

கண்டதை புரிந்ததை
தன்னில் புதைத்துக்கொள்ளாது
பகிர்தலைப் பற்றி
அறியத் துவங்குகையில்தான்
வட்டம் மிக லேசாக வளைந்து
வடிவம் கொள்ளத் துவங்குகிறது
அவனும் நிமிறத் துவங்குகிறான்

பகிர்தலின் பரிமானங்களைப்
புரிந்து கொண்டவன்
பகிரத் தக்கவைகளைப்
புரிந்து கொள்கையில்தான்
வட்டம் ஆரம்பப் புள்ளியை நோக்கி
மெல்ல நகரத் துவங்குகிறது
அவனும் முதிரத் துவங்குகிறான்

மிகத் தெளிவாகப் பகிரவும்
பகிரத் தக்கவைகள் குறித்த முதிர்ச்சியும்
முழுமையாக அறிந்தவனுக்கு
 "அனைவரும் அனுபவித்து அறியட்டுமே
நாம் ஏன் குழப்பவேண்டும் " என்கிற  எண்ணம்
அடி மனதில் உதயமாக
வட்டம் முழுமையடையத் துவங்குகிறது
அவனும் ஞானம் பெறத் துவங்குகிறான் 

Saturday, August 11, 2012

சிற்பியும் கல்கொத்தியும்

குளங்களில் கண்மாயில்
விளைந்து கிடக்கிற
வளமான களிமண்ணெடுத்து
கையில் இருக்கிற அச்சினில்
திணித்துத் திணித்து எடுக்கிறேன்
கண்ணனும் சிவனும்
சதுர்த்திப் பிள்ளையாரும்
பொம்மைகளாய்
என் எதிரில் பிறந்துப் பெருகுகிறார்கள்

ஆயினும் வீட்டில்
எப்போதும் பூசைக்கு
என் பேரன் கைகளால் பிசைந்து
அரை நாள் செலவ்ழித்து
மீண்டும் மீண்டும் திருத்திப்
பிள்ளையாரைப் போலச  செய்திருக்கிற
விக்ரகத்தைத்தான் பயன்படுத்துகிறேன்

பிள்ளையர்ர் கூட
அதில் கு டியிருக்கத்தான்
விருப்பப்படுவார்ப்  போலப் படுகிறது
 எனக்கு

Thursday, August 9, 2012

சென்னையில் சங்கமிப்போமாக புதிய சரித்திரம் படைப்போமாக


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjq6eEfqFqZWWjHpednr9SToFoGYiw8aOn9hXRAgifPNrMoyaQdCEewI_ybQdc_8oeIuJhGPOBmFqcbWko0lKssvpE0tR8FxipI6GW95rMSecUtGuPV85baniyvV-xitQyrioC-bU0AlT8Q/s1600/chennai+bloggers+meet+invitation.jpg

 நூறு குடம் நீரூற்றி ஒரு பூ பூத்தது
என்பதைப்போல பல்வேறு பதிவுலக நண்பர்களின்
எண்ணத்திலானும் முயற்சியினாலும்
சென்னைப்பதிவர்களின் அதிதீவீர அயராத
முயற்சியினாலும் 26/08/2012 இல்
தமிழ் வலைப்பதிவர்களின் திருவிழா
சென்னையில் சாத்தியமாகி இருக்கிறது

தவறாது கல்ந்து கொள்வதன் மூலமும்
நமது சீரிய கருத்தைப் பதிவு செய்வதுடன்
நம்மை முழுமையாக
இணைத்துக்கொள்வதன் மூலமும்
அர்பணித்துக் கொள்வதன் மூலமும்
இந்த பதிவர் சந்திப்பு ஒரு புதிய சகாப்தத்தின்
துவக்கமாக இருக்கச் செய்வோமாக

எழுத்துக்கள் மூலம் நல்லெண்ணெங்களைப்
புரிந்துகொண்டு தொடர்ந்து தினமும்
 தொடர்பில் இருக்கிற நாம்
முகம்பார்த்து சிரித்து
மன்ம் திறந்து பேசி
இன்னும் நெருக்கமாக நிச்சயம் இந்தச்
சந்திப்பு உதவும் என உணர்ந்து தவறாது
சென்னையில் சங்கமிப்போமாக
புதிய சரித்திரம் படைப்போமாக

வாழ்த்துக்களுடனும்
தங்களை எதிர்பார்த்தும்


அன்புடன்
ரமணி (தீதும் நன்றும் பிறர்தர வாரா)

Wednesday, August 8, 2012

பிரசவமும் படைப்பும்

."இப்போதெல்லாம் ஏன் அதிகம் எழுதுவதில்லை ?
கற்பனை வறண்டு போனதா ?
சமூக அக்கறை குறைந்து போனதா ?"
 போகிற போக்கில் 
கேள்வியை விதைத்துப் போகிறான் நண்பன்.

 அவனுக்கு எப்படி புரியச் சொல்வது ?

 கொத்துகிற தூரத்தில் 
சீறுகிற நாகமாய்
நித்தம் எதிர்கொள்ளும்
அவலங்களும் அசிங்கங்களும் 

கணந்தோறும் காயப்படுத்தும்
சிறுமைகளும் துரோகங்களும்

 என்னை எப்போதும்
சுடும் நெருப்பில் நிறுத்திப்போக

 அதன் தாங்கவொண்ணா பாதிப்பில்
 ஒரு பாம்பாட்டியின் லாவகத்தோடு
 அவைகளை சொற்களுக்குள் அடைக்க முயல
 அவைகள் அடங்காது சீறிக் கொத்த

 ஒவ்வொரு கணமும்
 நான் நொந்து வீழ்வதும்
 ஒவ்வொரு நாளும்
வேதனையில் சாவதும் 

எப்படிச் சொன்னால் அவனுக்குப் புரியும் ?

திடுமென
 சீறிக் கிளம்பும் காட்டாற்று வெள்ளமென 
 உணர்வுகள் பொங்கிப் பெருக
சம  நிலை தடுமாறித தொலைய 

தலையணைக்குள் மெத்தையினை
 திணிக்கமுயலும் முட்டாளாய்
உண்ர்வுகளை வார்த்தைக்குள்
 திணிக்க முயன்று தோற்கிற கணங்களை
 வார்த்தைகள் கிழிந்து சிரிக்கிற அவலங்களை 

எப்படி  விளக்கினால் அவனுக்குப் புரியும் ?

கைதேர்ந்த விளையாட்டுக்காரன்
 கலைத்துப் போட்ட சீட்டுகள்போல்
லைந்துகிடக்கும்  வார்த்தைகளை 
லாவகமாய் சேர்த்துக் காட்டும்
 பண்டித விளையாட்டா படைப்பு ?


இனியும் தங்க முடியாதென
வெளியேறத் துடிக்கும் உயிர்க்கருவும்
 இனியும் தாங்க இயலாதென
உந்தித் தள்ளுகிற உள்ளுணர்வும்
 இணைவாகச் சேரும் 
காலத்தையும் கணத்தையும்
 எது நிர்ணயம் செய்யக்கூடும்? 

பல சமயங்களில்
கறுத்துக் கனத்த கருமேகங்களை
 ஒன்று சேர்த்த பெருங்காற்றே
அதனை கலைத்துவிட்டுப் போவதும்

 எங்கோ தலைதெறிக்கப் போகும்
 ஒரு சிறு வெண்மேகம்
சாறல் உதிர்த்துப் போவதும் 

விரதங்களும் வேண்டுதல்களும்
வேண்டிய மட்டும் செய்துமுடித்து
 இணைகிற இணைப்பு வீணாகிப்போக
 வேண்டா வெறுப்பாக புணரும் நாளில்
 கரு தங்கிச் சிரிப்பதையும்
விளக்கிச்சொன்னால்

ஒ ருவேளை அவன்
 புரிந்து கொள்ளக்  கூடுமோ ?

மீள்பதிவு 

Tuesday, August 7, 2012

நரகமாகும் வாழ்வு

ஆடைகளை
பகட்டும் நாகரீகமும் தீர்மானிக்க
நொந்து நூலாகிப்போகிறது உடல்

உணவினை
நாவும் மனமும் தீர்மானிக்க
வெந்துச் சாகிறது குடல்

செயல்பாடுகளை
உணர்வும் ஆசையும் தீர்மானிக்க
பாடய்ப்படுகிறது அறிவு

தேவைகளை
விளமபரங்களும் கௌரவங்களும் தீர்மானிக்க
ஓடாய்த் தேய்கிறது செழுமை

தொடர்புகளை
பயனும் "பசையும்" தீர்மானிக்க
போலியாகிப் போகிறது நட்பு

காதலை
சந்தர்பங்களும் காமமும் தீர்மானிக்க
கண் கலங்கி நிற்கிறது இல்வாழ்வு

வெற்றியினை
பணமும் ஜாதியும் தீர்மானிக்க
கேலிக் கூத்தாகிறது தேர்தல்

நியாயத்தை
பதவியும் மிருகபலமும் தீர்மானிக்க
இறந்து கொண்டிருக்கிறது தர்மம்

மொத்தத்தில்
தீர்மானம் செய்ய வேண்டியவைகள் எல்லாம்
செயலிழந்து கிடக்க
கேடுகெட்டவை எல்லாம்
அரியனையேறி சிரிக்க
நரகமாகிக் கொண்டிருக்கிறது
நாம் வாழும் வாழ்வு

Sunday, August 5, 2012

சில "ஏன் "கள்

அழகானவர்கள் அதிகம்
அலங்கரித்துக் கொள்வதில்லை
சுமாரானவர்களே அதிகம்
அலட்டிக் கொள்கிறார்கள்

செல்வந்தர்கள் அதிகம்
பகட்டித் திரிவதில்லை
நடுத்தரவாசிகளே அதில்
அதிக கவனம் கொள்கிறர்கள்

நல்லவர்கள் தன்னை நிரூபிக்க
அதிகம் முயலுவதில்லை
பித்தலாட்ட்க்காரர்களே
அதிகம் மெனக்கெடுகிறார்கள்

சக்திமிக்கவர்கள் அதிகம்
சச்சரவுகளை விரும்புவதில்லை
பலவீனமானவர்களே எப்போதும்
நெஞ்சு நிமிர்த்தித திரிகிறார்கள்

அறிவுடையோர் தன்மீது
வெளிச்சமடித்துக் கொள்வதில்லை
முட்டாள்களே எப்போதும்
மேடைதேடி அலகிறார்கள்

ஆன்மீகவாதிகள் அதிகம்
கடவுள் நினைப்பில் இருப்பதில்லை
நாத்திகர்களே எப்போதும்
அவர் குறித்தே பேசித் திரிகிறார்கள்

மொத்தத்தில்

இருப்பவர்கள் இருப்பது குறித்து
அதீதக் கவனம் கொள்வதில்லை
இல்லாதவர்களே இல்லாமை குறித்து
அதீதக் கவலை கொள்கிறார்கள்

Friday, August 3, 2012

எண்ணங்களின் வலிமையறிவோம்

மனவெளிச் சாலைகளில்
கனவுகளும் நினைவுகளும்
நடத்துகிற கூத்துகளில்
மயங்கவிட்டு
பல சமயங்களில்
நமக்கான
பயணப் பாதையை
மறக்க வைப்பது எண்ணமே

நிகழ்வுகளும் உணர்வுகளும்
கொடுக்கிற நெருக்கடிகளில்
முற்றாக
நம்மை மூழ்கவிட்டு
புத்திகெடுத்து
வாகனம் மாற்றி ஏறவிட்டு
எங்கோ  எங்கோ
அலைய விடுவதும் எண்ணமே

நேற்றிலேயே உழலவிட்டு
கவலையூட்டி
நாளையிலேயே புரளவிட்டு
பயமூட்டி
இன்றையகணத்தை
 மறக்க வைத்து
இழக்கவைத்து
உயர்வைத் தடுப்பது எண்ணமே

தன் நிழலைத் தான்தொடர்ந்து
ஊர் சேர நினைக்கும்
முட்டாள் மனிதனாய்
உணர்வு தொடர்ந்து
கண் மூடி நடக்க விட்டு
செயல்கெடுத்து
புகழ் கெடுத்து
பரிதவிக்க விடுவதும் எண்ணமே

நூலைப் பொருத்தே
சேலையின் வனப்பு
வேரைப்  பொருத்தே
செடியின் செழிப்பு
எண்ணம் பொருத்தே
மனத்தின் உயர்வு
மனத்தைப் பொருத்தே
வாழ்வின் சிறப்பு

என்றும்  எப்போதும் இதனை
மறவாது மனதில் கொள்வோம்-வாழ்வில்
எதிர்படும் தடைகள்  எதையும்
 மிக மிக எளிதாய் வெல்வோம்

Wednesday, August 1, 2012

சதுப்பு நிலம்

வீட்டை அடுத்திருந்த
திருமண மண்டபத்தில்
முகூர்த்தக் கால் ஊன்றப் பட்டவுடன்
எங்கள் வீட்டில் அனைவருக்கும்
மூச்சுத் திணற துவங்கி விடும்

மந்திர சப்தமும்
மங்கள வாத்தியமும்
கேட்க துவங்கியதும்
நா ங்கள் மூவரும்
மூலைக்கு ஒருவராய் தூக்கி எறியப் படுவோம்

வாழ்வில் தொலைந்து போனவைகள் எல்லாம்
ரேஷன் அரிசியில் இருப்பது போல்
முற்றத்தில் அமர்ந்து
முறத்தில் முகம் புதைப்பாள் அம்மா

அறுத்து அறுத்து தேய்ந்து போன
கதிர் அரி வாளாய்
இயலாமையின் மொத்த உருவாய்
ஈசி சேரில் மிகச் சாய்ந்து
முகட்டினில் முகம் புதைப்பார் அப்பா

முன்னறை ஜன்னலோரம்
முழங்காலில் முகம் புதைத்து
திருமணத்தில் இரண்டறக் கலப்பேன் நான்

நம்பிக்கைகளும் ஆசைகளும்
சமதளத்தில் இருந்தவரை
என் கனவுகளும் கற்பனைகளும் கூட
நாகரிகம்தான் இருந்தன

நம்பிக்கைகள் முழுவதும் தொலைந்து போக
ஆசைகள் ஆர்ப் பரித்துச்சீற
ஜானவாசத்தில்
மாப்பிள்ளை அருகில்
நெருங்கி அமர துவங்கிய நான்
தவறெனத் தெரிந்த போதும்
இப்போதெல்லாம்
பள்ளியறையில்
பின்னிரவு வரை
பயணித்து கொண்டே இருக்கிறேன்

மீள்பதிவு