Sunday, September 30, 2012

கவிஞனாக-எளிய வழி

கவிதைத் தாயின் கருணை  வேண்டி
நாளும் தொழுதிடு-அவள்
பாதம் பணிந்திடு-நெஞ்சில்

தகிக்கும் உணர்வை சொல்லில் அடக்கி
கொடுக்கத் துடித்திடு-கவியாய்
நிலைக்கத் துடித்திடு-நாளும்

தவிக்கும் உந்தன் தவிப்பைக் கண்டு
கருணை கொள்ளுவாள்-தாயாய்
பெருமை கொள்ளுவாள்-முதல்

அடியை எடுத்துக் கொடுத்து உன்னைப்
பாடச் சொல்லுவாள்-அவளே
பாடல் ஆகுவாள்-அவள்-

பார்வை பட்ட கணமே நீயும்
மாறிப் போகலாம்-ஏதோ
ஆகிப் போகலாம்-உடன்

நீரைக் கண்ட பாலை நிலமாய்
சிலிர்ப்பைக் காணலாம்-உன்னுள்
விழிப்பைக் காணலாம்-மயக்கும்

வார்த்தை ஜாலம் வடிவ நேர்த்தி
ஏதும் இன்றியே-துளியும்
தெளிவு இன்றியே-மிரட்டும்

சீர்கள் அணிகள் எதுகை மோனை
அறிவு இன்றியே-புலவர்
தொடர்பும் இன்றியே-

நினைவைக் கடந்து கனவை அணைந்து
கிறங்கிப் போகலாம்-உன்னுள்
கரைந்தும் போகலாம்-காட்டில்

விதைப்போர் இன்றி தானே வளரும்
செடியைப் போலவே-முல்லைக்
கொடியைப் போலவே-உன்னுள்

விரைந்துப் பெருகும் உணர்வு நதியில்
நீந்திக் களிக்கலாம்-உன்னை
மறந்துக் களிக்கலாம்-என்றும்

நிறைந்த ஞானம் உயர்ந்த கல்வி
ஏதும் இன்றியே-கவிதை
வானில் உலவவே -நாளும்        (கவிதைத் தாயின் )

Wednesday, September 26, 2012

துவக்கமல்ல முடிவே முக்கியமானது

துவக்கத்தைவிட முடிவு முக்கியமானது என்பது
விளையாட்டுக்கு மட்டுமல்ல
தலைமைக்கும் மிகச் சரியாகப் பொருந்தும்

அடுத்தத் தெரு தலைவராயினும் சரி
அகில உலகத் தலைவராயினும் சரி
யாரும் பிறப்பெடுக்கையிலேயேபெருந்தன்மையோடும
தலைமைப் பண்போடும் பூவுலகில் அவதரிப்பதில்லை

சராசரியாக அவர்கள் வலம் வருகையில்
அவர்களது சுய நலத்தைக் கீறிச் செல்லும்
ஒரு சிறு நிகழ்வு அல்லது அதிர்வு
அவர்களது சிந்தனைக்குள் தீமூட்டிப்போகிறது

அது
ஆட்சிக்கு எதிராக போராடியதற்காக
மன்னனால் கொல்லப்பட்ட தனது சகோதரனின் 
மரணமாகவோ
பயணச் சீட்டு கையிலிருந்தும் அவமதிக்கப்பட்ட
நிகழ்வாகவோ
எப்படி முயன்ற போதும்
தன் இனத்திற்கு முக்கியமளித்து
தன்னைப் புறக்கணித்த தலைமையின்
அலட்சியமாகவோ
கூட இருந்திருக்கக் கூடும்

சராசரிகள் சுய நலக் கீறலை
மருந்திட்டு ஆற்றிக் கொள்ளவோ முயல்வோ
அல்லது தனி நபர் தாக்குதலாய் எண்ணி
பழி கொள்ளத் துடிக்கையிலே
தலைவர்கள் மாறுபட்டு சிந்திக்கிறார்கள்
பிரச்சனையின் ஆணிவேரைக் தேடிப் பிடித்து
அதனை அடியோடு அழித்தொழிக்க முயல்கிறார்கள்

காலம் காலமாய் வேறூன்றிப் போன கயமைகளை
சமுகத்தின் களங்கங்களை சாபகேட்டினை அவலங்களை
அடியோடழிக்கும் அதீத முயற்சியில்
தன்னை,தன் சுகத்தை, தன் குடும்ப நலத்தை
அனைத்தையும் ஆகுதியாக்கி  
தன்னலம் மறந்த தலைவர்களாய் விஸ்வரூபமெடுக்கிறார்கள்
காலம் கடந்தும் மக்கள் மனதில் தங்கமாய் ஜொலிக்கிறார்கள்

மாறாக சிலர் மட்டும்
தன் முயற்சியால் உயரப் பறந்தும் உச்சம் தொட்டும்
அழுகிய மாமிசப் பிண்டங்களைத் தேடும் வல்லூறாய்
மீண்டும்வட்டமடித்து துவக்கத்திற்கே வந்து சேர்ந்து
தான்.  தன் சுகம். தன் குடும்ப நலம் என
தன்னை தன் மனத்தைச் சுருக்கிக் கொண்டு
அதற்கு வியாக்கியானங்களும் செய்து கொண்டு
சமூகத்தின் அவலச் சின்னமாகிப் போகிறார்கள்
ஒரு தலைமுறை கெடக் காரணமாகியும் போகிறார்கள்

எனவே
துவக்கத்தை விட முடிவு முக்கியமானது என்பது
விளையாட்டுக்கு மட்டுமல்ல
தலைமைக்கும் மிகப் பொருந்துமென்பது
மிகச் சரி தானே ?

Sunday, September 23, 2012

அரவாணி -அது ஒரு குறீயீடு

மணம்  முடித்த மறு நாளில்
கணவனை  இழப்பதை
அறிந்தே  இழந்த
கைம்பெண்ணை மட்டும் குறிப்பதல்ல
 அரவாணி என்பது......

அது ஒரு குறியீடு

கூச்சல் கும்மாளம் மகிழ்ச்சி ஆரவாரம்
அனைத்தையும் ஒரே நாளில்
அனுபவித்து முடித்து
மறு நாள் யாருமற்ற அனாதையாய்
பொட்டிழந்த முகமாய்
பொட்டல் காடாய்
அனைத்து அலங்காரங்களையும்
இழந்து  அலங்கோலமாய்க் கிடக்கும்
அந்த மாசித் திருவிழா மைதானம் போல்

உறவுக் கூட்டம் உற்சாக நிகழ்வுகள்
மண மலர்கள் வாசம்
விருந்து உபச்சாரம்
அனைத்தையும் ஒரே நாளில்
அனுபவித்து முடிந்து
குப்பை கூளமாய் இருளடைந்து
வெறுமையில் வெம்பிக் கிடக்கும்
தனிமை வேதனையைச் சுமந்துத் தவிக்கும்
அந்த ராசியான திருமண மண்டபம் போல்

முள்வெட்டி ஒதுக்கி
பந்தலிட்டு தோரணங்கள் கட்டி
குலவை ஒலியுடன்  பொங்கலிட்டு
பழங்கதைகள் பலபேசி
உறவுகளோடு பகிர்ந்துதுண்டு பசியாறி
வெளிச்சம் குறைவதற்குள் அனைவரும் வெளியேற
மீண்டும் இருளிலும் தனிமையிலும்
கிடக்கும் அவலம் குறித்து அழுது புலம்பும்
அந்தக் கிராமத்துக் குலச்சாமி போல்

உயிருள்ளவைகளோ உயிரற்றவைகளோ
உச்சம் தொட்ட மறு நொடியில்
அதலபாதாளத்தில் வீழந்தவைகளை எல்லாம்
அதீத மகிழ்வில் திளைத்த மறு நொடியில்
அதிக அவலத்தைச் சந்தித்தவைகளை எல்லாம்

குறீயீடாகக் காட்டிச் செல்லும்
அதிகப் பொருள் கொண்ட
அற்புதச் சொல் அது

மணம் முடித்த மறு நாளில்
கணவனை இழப்பதை
 அறிந்தே இழந்த
கைம்பெண்ணை  மட்டும் குறிப்பதல்ல
அரவாணி  என்பது

அது ஒரு அவலத்தின்  குறியீடு

Friday, September 21, 2012

படைப்பாளியின் பலவீனம் ?

யாரும் கேட்டுவிடக் கூடாது என
மெல்லிய விசும்பலுடன்
யாரும் பார்த்துவிடக் கூடாது என
விழி  ஓரத்து நீரைத் துடைக்கும்
அந்தப் பெண்மணியைக் கண்டவுடன்
அவள் யாரெனத் தெரியாத போதும்
காரணம் எதுவெனத் தெரியாத போதும்...

அதுவரை  நண்பர்களுடன்
உல்லாச  ஊஞ்சலாடிக் கொண்டிருந்த நான்
சிதைந்து போகிறேன்
சின்னாபின்னப்பட்டுப்போகிறேன்

கோபம் போல
கோடை மழை போல
மாலையின்றி
சட்டென வரும் இரவு போல
தடம் மாறி குடிசைக்குள்
கண் இமைப்பதற்குள் நுழையும்
கனரக வாகனம்போல்
சுனாமி போல்
என்னுள்ளும் ஒரு சோகம்
புயலாய் விரைந்து வீசி
என்னை  நிலை குலையச் செய்து போகிறது
என்னுள் வெறுமையை விதைத்துப் போகிறது

நான் சோர்ந்துச் சாய்கிறேன்

" என்ன ஆனது உனக்கு
இதுவரை சரியாகத்தானே இருந்தாய் "
அக்கறையுடன் கையைப்பற்றுகிறான்
ஆருயிர்  நண்பன்

 "இல்லையில்லை இப்போதுதான்
சரியாய் இருக்கிறேன்
நான் சரியாகத் தெரிந்த பொழுதுகள்தாம்
சரியில்லாத பொழுதுகள் "என்கிறேன்

குழம்பிப்போய் பார்க்கிறான அவன்

எனக்கும்  அதற்கு மேல்
எப்படி விளக்குவது எனத் தெரியவில்லை

அவனும்  படைப்பாளியாய் இருந்தால்
ஒருவேளை என்னைப் புரிந்து   கொண்டிருப்பானோ ?


Wednesday, September 19, 2012

ஓடுதலின் சுகமறிவோம்

மைதானத்தின் மேடையில்
சுகமாய்  அமர்ந்தபடி
ஓடிச் ஜெயித்தவனுடன் சேர்ந்து மகிழ்ந்து
ஓடித் தோற்றவனுடன் சேர்ந்து வருந்தி
தனக்கென  ஏதுமற்று
தெருக் கல்லாய் இருந்தே
நொந்துச் சாவோரே உலகில் சரிபாதி
அவர்கள் உணர்வு நமக்கெதற்கு?
அவர்கள் உறவும் நமக்கெதற்கு ?

பந்தயத்தில்  இணைந்திருந்தும்
முன் செல்பவனை எண்ணி வருந்தி
பின் தொடர்பவனை எண்ணி மகிழ்ந்து
ஓடுதலின் சுகம் மறந்து
ஓடுதலின் பயன் மறந்து
கடலலையில் வீழ்ந்த துரும்பாய்
கலங்கிச் சாவாரே உலகில்  மறுபாதி
அவர்கள் மன நிலை நமக்கெதற்கு ?
அவர்கள் இழி நிலையும் நமக்கெதற்கு ?

பந்தயத்தில் பங்கேற்றும்
பரிதவிப்பும் பதட்டமுமின்றி
வெற்றிக்கான முயற்சியில்
சிறிதளவும் தொய்வின்றி
ஓடுதலின் சுவையறிந்து சுகமறிந்து
தன்னைத் தானே   வெல்ல முயல்பவர்

மிகச் சிலரே
 ஆயினும்

அவரே வாழ்வைப் புரிந்தவர்
அவரே வழிகாட்டவும் தகுந்தவர்

அவர் வழி என்றும் தொடரப்  பழகுவோம்
என்றென்றும் எதையும் வென்று மகிழ்வோம்

Sunday, September 16, 2012

புரியாத சில புதிர்கள்

கடவுள் மீதும்
சாஸ்திரங்கள் மீதும்
நம்பிக்கையற்றவனுக்கு வாரீசுகள்
டஜன் கணக்கில் இருக்க
பூர்வ புண்ணிய  பாக்கிய ஸ்தானங்க்களின்
தோசங்களை சீர் செய்யும் பண்டிதருக்கு
ஏனோ குழந்தைப் பாக்கியம் இல்லை

இலக்கண அறிவு மருந்துக்கும் இன்றி
இட்டுக் கட்டிப் பாடும்
சுந்தர பாகவதரின் பாடல்களில்
இலக்கண  இலக்கியம் பூரணமாய் அமைய
 இருபதாண்டு அனுபவமிக்க
தமிழ் பேராசிரியருக்கு
எத்தனை முயன்றும்  ஏனோ
ஒரு கவிதை எழுத வரவில்லை

வரப்பு வாய்க்கால் தகராறில்
பங்காளியின் தலையெடுத்தவனின் வாரீசு
படித்து முடித்து முதல் நிலை அலுவலராய்
முன்னேறிச் சிறக்க
சமூகத்தின் மேன்மை குறித்து
அன்றாடம் மேடையில் முழங்கும்
தலவரின் வாரீசுகள்  எல்லாம்
தறுதலையாய்த் திரியவதை
ஏனோ தடுத்திட முடியவில்லை

கீழான உணர்வுகளைத் தூண்டிவிட்டு
ஒரு தலைமுறையையே
தடம் மாற்ச் செய்பவனின்
படைப்புகள் எல்லாம்
பட்டி தொட்டியெல்லாம் பவனி வர
அடுத்த தலை முறை குறித்து
அக்கறை கொண்டவனின் படைப்புகள் எல்லாம்
கரையானுக்கு விருந்தாவதை
ஏனோ தடுத்திட முடியவில்லை

விளக்கங்கள் ஆயிரம் சொன்ன போதும்
சில விஷயங்கள் புரியத்தான் இல்லை
எப்படித்தான் முயன்றபோதும்
சில புதிருக்கான விடை
புரியத்தான் இல்லை
 

Friday, September 14, 2012

மதத்தின் பெயரால்..மனிதனைப் பிரிப்பது...

என்னுடையது சிறந்தது
என்னுடையதும் சிறந்தது
என்பதற்கும்
என்னுடையது மட்டுமே சிறந்தது
என்பதற்கும் வேறுபாடு இல்லையா ?

கடவுள் ஒருவரே என
அவரவர்கள் சொல்லி கொள்வதற்கும்
கடவுள் ஒருவரே
அவர் இவர் மட்டுமே என்பதற்கும்
வித்தியாசம் இருக்கிறதா இல்லையா  ?

இல்லையெனச் சொல்பவர்களுக்கும்
இருக்கிறது எனச் சொல்பவர்களுக்கும்
இடையினில் முரண் எனில் சரி
நம்புபவர்களுக்கிடையில்
வாதப் பிரதிவாதம் என்பது
கேலிக் கூத்தாக இல்லையா ?

மாறுதல் ஒன்றே மாறாதது
எனபதற்கு மறுப்பற்ற
இந்த விஞ்ஞான யுகத்தில்
விஞ்ஞானத்தின்  முழுப்பயனையும் ருசித்தபடி
பழமைச் சேற்றில் காலூன்றி நின்று
கத்தி தூக்குதல் தவறா இல்லையா ?

உடல் மூலம்  செயல் மூலம் மனம் அடக்கி
அடங்கிய மனம் மூலம் அறிவொளி பெருக்கி
வாழும் உலகை சொர்க்கமாகப் பிறந்ததே
எந்த மதமும் எந்த மார்க்கமும்
இதனை அறியாது புரியாது
குள்ள நரிகளின் ஊளையினை
சங்கீதமெனப் புகழ்தலும் தொடர்தலும்
முட்டாள்களின் செயல்தான்  இல்லையா ?
மதத்தின் பெயரால் மனிதனைப் பிரிப்பது
மதிகெட்ட செயல்தான்  இல்லையா ?

Thursday, September 13, 2012

நல்லோர் நட்பு

நெருக்கிக் கட்டப்பட்ட
மணமிக்க
ரோஜா மலர் மாலைதான் ஆயினும்
பிணத்தின் மீது
போடப்பட்ட மறு நொடி முதல்
நாற்றமெடுக்கத் தொடங்கி
முகம் சுழிக்கச் செய்து விடுகிறது

மங்கல நிகழ்வு முடிந்து
நாட்கள் பல கடந்த பின்னும்
வாடி உதிர்ந்தது போக
ஒட்டிக்கொண்டிருக்கிற
ஒன்றிரண்டு இதழ்களிலும் கூட
மலர்ந்த போது இருந்த மணம்
தொடரத்தான் செய்கிறது

Tuesday, September 11, 2012

தமிழ் பாடும் பாட்டு

தர்பார் மண்டபங்களில்
மன்னனைக்  குளிர்விக்கும்
வெற்றுச் சாமரமாய் இருந்த என்னை

அந்தப் புரங்களில்
மன்னனுக்கு உண்ர்வூட்டும்
ஆண்மை லேகியமாய் இருந்த என்னை

கோவில் சன்னதிகளில்
ஆண்டவனுக்கும் அடியார்களுக்கும்
இடைத் தரகனாய் இருந்த என்னை

குறு நில மன்னர்கள்
வீட்டுத் திண்ணைகளில்
புலவர்கை திருவோடாய் இருந்த என்னை

அடிமையாய்க் கிடந்த என்னை
அடைக்கப்பட்டுக் கிடந்த என்னை
சிறைபட்டுக் கிடந்த என்னை
சிறப்பிழந்துக்  கிடந்த என்னை

கைவிலங்கொடித்துக் காத்தவனே
ஆரியம்போல் பண்டிதர் மொழியாகி
பாழ்பட்டுப்  புதையுண்டுப்  போகாது
பாமரருடன் இணைத்து ரசித்தவனே

தன்னிகரில்லாக்  கவிஞனே
என தவப்புதல்வனே
உன்னை  இந்நாளில் நினவு கூர்வதில்
நானும் மகிழ்வு கொள்கிறேனடா
உன்னைப் புதல்வனாய்ப் பெற்றதற்கு
நாளும் பெருமை கொள்கிறேனடா

Monday, September 10, 2012

ஒட்டக் காய்ச்சிய உரை நடையே

ஒட்டக் காய்ச்சிய உரை நடையே

காதல் உணர்வு  பூக்கையில்
சேர்ந்தே பிறந்து பரவும்
மகரந்த மணமே

வண்ண வண்ண வார்த்தைப் பூக்களைச்
சந்தச் சரடில் சேர்த்திணைக்க வளரும்
மனங்கவர் பூமாலையே

கவிஞனும் கற்பனையும்
கந்தர்வ மணம்புரிந்து
கூடிக் களிக்கப் பிறக்கும்
அதியக் குழந்தையே

மடமை மரம் முறிக்க
சிந்தனைச் சிற்பிகளுக்கு வாய்த்த
 கூர்மிகுக்  கோடாலியே

தனிமைத் துயர் போக்கி
ஏகாந்த சுகத்தில் மிதக்கவிடும்
ரம்பையே ஊர்வசியே

குறிவைத்த இலக்கினை
மிகச் சரியாய்த்
தாக்கிக் தகர்க்கும் விசைமிகு  பாணமே

எண்ணச் சுமைகளை
எளிதாக ஏற்றிச் செல்ல
ஏதுவான எழில்மிகு வாகனமே

தூங்கச் செய்யவோ
ஏக்கத்தைச்  தூதாய்ச் சொல்லவோ
கவலையை மறக்கவோ
களிப்பில் மூழ்கிச் சுகிக்கவோ
வாழ்வை ரசிக்கவோ
ரசித்தததை சுருக்கமாய் விளக்கவோ

கவிதைபெண்ணே உன்னைவிட்டால்
உலகினில் மாற்று ஏது சொல்
என்றும்போல உன் அருளை
எமக்குநீ வாரிவழங்கிச் செல்

Saturday, September 8, 2012

பதிவர்கள்- ஒரு சிறு அறிமுகம்

எம் படைப்புகள் எல்லாம்...

ஆற்று நீரை எதிர்த்துப்போகும் எனும்
அதீத  எண்ணம் ஏதும் எங்களில்
நிச்சயம் எவருக்குமில்லை

தீயில் தூக்கி எறிந்தால்
புத்தம் புதிய மலராய்
எரியாது சிரிக்கும் என்கிற
நினைப்பும் எங்களுக்கில்லை

எண்ணையில்லா தீபத்தை
எரியச செய்யவோ
அமாவாசை வானில்
முழு நிலவை ஒளிரச் செய்யவோ
 எம் படைப்புகளுக்கு
நிச்சயமாய்  சக்தியில்லை

சராசரித்  தேவைகளை அடையவே
அன்றாடம்  திணறும் கதைகளை
நியாயமாக  நேர்மையாக வாழ
நாங்கள் படும் அவதிகளை
எமக்குத் தெரிந்த பாமர மொழியில்
ஒருவருக்கொருவர் சொல்லி
ஆறுதல் கொள்கிறோம்

அன்றாட அவசர வாழ்வில்
நாங்கள் எதிர்கொள்ளும்
சிறு சிறு சந்தோஷங்களை
மனம் கீறிப்போகும்
சிறுச்  சிறு அல்லல்களை
அதிக மசாலாக் கலக்காது
பகிர்ந்துண்டு மனப் பசியாறுகிறோம்

எம் சிற்றறிவுக்கு எட்டிய வகையில்
எங்கள் வசதிக்கு ஏற்றவகையில்
நாங்கள் சமைத்த விருந்தினை
எங்களுக்குள் நாங்களே
ஒருவருக்கொருவர் பரிமாறி
மட்டில்லா மகிழ்ச்சி கொள்கிறோம்

உலகையே ஒரு வீடாக்கி
அறிந்தவர்களையெல்லாம் உறவாக்கி
 "யாது ஊரே யாவரும் கேளீர்  "என
பண்புடன் வாழ முயலும்
 பதிவர்கள்  நாங்களெல்லாம்
விஞ்ஞானம்  ஈன்றெடுத்த
புதிய  இனிய இனமே
எங்கள் கைகளில்தான் இருக்குது
புதியதோர் உலகு செய்யும்
அதீத அசுர  பலமே

Friday, September 7, 2012

ஏன் ? எதற்கு ? எதனால்?....

உற்பத்தியாளனைவிட
விற்பவன்
அதிக லாபம் பெறுவது
சரியா ?

மூல ஆசிரியனைவிட
உரை ஆசிரியன்
அதிகம் அறிந்தவன்போல் நடிப்பது
எதற்கு ?

சரக்கு மாஸ்டரைவிட
பறிமாறுபவனே
பாராட்டும் டிப்ஸும் பெறுவது
முறையா?

காரியமாற்றுபவனை விட
சோம்பி நிறபவன்
அதிகம் அலுத்துக்  கொள்வது
சரியா ?

சொற்பொழிவாளரை விட
மொழிபெயர்ப்பாளர்
தன்னை உயர்த்திக் காட்ட முயல்வது
தவறில்லையா ?

சிறப்பு விருந்தினரைவிட
அறிமுகம் செய்பவனே
அதிகம் அலட்டிக் கொள்வது
சரிதானா ?

வித்துவானைவிட
முன் வரிசை ரசிகனின்
அதிக  அங்க சேஷ்டைகள்
கூ டுத்ல் இல்லையா  ?

ஆண்டவன் குறித்து
ஆத்திகனை விட
நாத்திகனே அதிகம் சிந்திப்பது
அவசியம்தானா  ?

செய்து முடிப்பவனை விட
துரும்பசைக்காதவனின்  விமர்சனத்திற்கு
முக்கியத்துவ ம் தருவது
ஏற்கக் கூடியதா?

இவையனைத்தும்
சரியில்லை எனத் தெரிந்தும்
சகித்துக் கொள்வது
சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு
அழகா  என்ன ?

Thursday, September 6, 2012

எழுதாத எழுத்தாளர்களுக்கு....

அதிக அனுபவச் சேர்க்கையும்
அதீத வாசிப்பின் தாக்கமும்
இயல்பாக வசப்படும் வார்த்தைகளின் நேசமும்
எதையும் எழுதிவிடலாம் என்னும்
நம்பிக்கை இருந்த போதினும்..

.எத்தனை உயர்ந்த வாகனமாயினும்
எவ்வளவு வேகப் பயணமாயினும் 
இலக்கற்ற பயணம்
வெட்டி அலைச்சலே என
மனதினில் எண்ணம் கொண்டு

பொருளற்ற பேச்சில்
சந்தமும் அணிகளும்
அதிகமாய்க் கலந்திருந்தபோதும்
உளறலே என்ற
உறுதியினை அறிவில் கொண்டு

எத்தனைத் திறத்துடன்
செய்யப்பட்ட்டபோதும்
பயனற்ற செயல்கள்
விழலுக்கு இறைக்கும் நீரென்ற
கொள்கையினை  சிரமேற்கொண்டு

மிகச் ச்ரியாகச் சொன்னால்
கருவுறவே அல்லாது கொள்ளுகிற
உடல் சேர்க்கைக் கூட
காமக் களியாட்டமே என
வெறுத்தொதுக்கும் உறுதிகொண்டு

பிண்டத்தைப் பெற்று
தாயெனப் பெருமிதம் கொள்ளுதலை விட
மலடியாய் இருத்தலே மகத்தானது எனும்
மந்திரச் சொல்லினை
வேதமாய் மனதினில் கொண்டு

எழுதாது இருப்பதாலேயே
எங்களையும் எழுத்தாளர்களாக
தலை நிமிர்ந்து உலவ விடும்
தாயுள்ளம் கொண்ட முதிர்ந்த வாசகர்களே
உங்களுக்கே  சரண் நாங்களே 

Tuesday, September 4, 2012

பெண்ணெழுத்து

ஆட்சிப்பொறுப்பில்
மக்களின் தலையெழுத்தை
நிர்ணயிக்கும் நிலைக்கு
உய்ரந்திருந்த போதும்

பல்வேறு நிர்வாக நிலைகளில்
ஆணுக்கு நிகர் என்பதனைத் தாண்டி
 முயன்று முதலெழுத்தாய்
முன்னேறிய போதும்

சமூகத்தின் பல்வேறு தளங்களில்
ஆணுக்கு மிகச் சமமாய்
சமுக மாற்றத்திற்கு உயிர் மெய்யாய்த்
திகழ்கிற போதும்

குடும்ப உறவுகளில் மட்டும்
பெண்ணென்பவள் இன்னும்
தனித்து இயங்க இயலாது
ஒரு ஒற்றெழுத்தாகவோ
துணையெழுத்தாகவோ மட்டும்
இருந்து தொலைக்கவேண்டியிருக்கிறது ?

பெயரில் ஆயுதம் இருந்தும்
அதிகம் பயன்படுத்தப்படாது துருப்பிடித்திருக்கும்
ஆயுத எழுத்தைப் போல
சக்தி சக்தியெனச் சொல்லியே
மூலையில் அமர்த்தி சாமரம் வீசி
செயல்படவிடாது ஏய்க்கும்
ஆணாதிக்கச் சமூகத்தினைப் புரியாத வரையில்
பெண்ணினத்தின் தலையெழுத்தும்
ஒற்றெழுத்தும் துணை எழுத்தும் தானோ  ?

Sunday, September 2, 2012

ரூப அரூப ரகசியம்

ரூபங்களை விட
அரூபங்களே சக்திமிக்கவை
ரூபங்கள் அரூபங்களின்
இச்சைக்கு ஆடும்
கருவிகள் மட்டுமே

ரூப அரூப ரகசியம் அறிந்தவன் எவனும்
ரூபத்தின் வழி அரூபத்தை அணுகுவதில்லை
அரூபத்தின் வழியேதான்
ரூபத்தை அறிய முயல்கிறான்

ரூபங்கள்
வெறும் சுற்றுச் சுவர் மட்டுமே
அதனை விலக்கியோ அல்லது தவிர்த்தோ
உள் நுழைந்தால் ஒழிய
அரூப தரிசனம் சாத்தியமே இல்லை

ரூபத்தின் வழி
பார்த்துப்பழகியவன் மட்டுமே
ஓவியத்தின் வெளிக் கோடுகள் இல்லாது போயின்
திருவிழாவின் தாயின் கைவிட்ட பிள்ளைபோல்
மூச்சுத் திணறிப்போகிறான்

அரூபவத்தின் வீரியம் அறிந்தவன்
அலைகளைத்  தாண்டி கடலையும்
எண்ணம்  தாண்டி மனத்தையும்
மிக எளிதாய்த் தெரிந்து தெளிகிறான்

ரூப விழியினில் பார்வையாய்
ரூப உடலினில் உயிராய்
ரூப வார்த்தைகளுக்கும் பொருளாய்
ரூபச் செயல்களின் அர்த்தமாய்
ஊடுருவிக்கிடக்கும்  அரூபத்தை
அறிய முயல்தலே தேடல் எனக் கொள்வோம்
அறிந்து தெளிதலே ஞானம் எனக் கொள்வோம்

Saturday, September 1, 2012

தங்கக் கவிதையும் கவிதைத் தங்கமும்

மிக ஆழத்திலிருந்து
எடுக்கப்படுவதனாலோ என்னவோ
இரண்டுக்குமான மதிப்பு
என்றென்றும்
கூடிக்கொண்டிருப்பதாகவே
தோன்றுகிறது

குன்றாத மதிப்பினால் மட்டுமல்லாது
காலச் சூழலுக்கு தக்கவாறு
தன்னை உருமாற்றி
நிலை நிறுத்திக் கொள்ளும்
திறத்தினாலே கூட
இவையிரண்டும்
என்றென்றும்
இளமைத் திறனுடன்
இருப்பதாகப் படுகிறது

அழகைச் சார்ந்தும்
உணர்வைச் சார்ந்தும்
இன்னும்  மிகச் சரியாகச் சொன்னால்
அழகுப் பெண்களைச் சார்ந்தும்
அதிகம் இருப்பதாலேயே
இவையிரண்டின்  கவர்ச்சியும்  மோகமும்
 என்றென்றும்
குறையாது கூடிக்கொண்டேச்
செல்வதாகப் படுகிறது

 இரண்டுக்குமான ஒற்றுமை
இதுபோல நிறைய இருப்பினும்
ஒன்றிருக்குமிடத்தில்
ஒன்றில்லாது இருப்பதும்
ஒன்றை ஒன்று நெருங்கிவிடாது
 இரண்டும் விலகியே திரிவதும்
ஏன் என்பது மட்டும்
எப்படி யோசித்த போதும்
 துளியும் விளங்குவதில்லை

ஆயினும்
ஒன்றின் பாதையில்
பாதி சென்றவன் மடடுமே
மற்றொன்றை எண்ணி  ஏங்குகிறான்
ஒன்றைக் குறித்து தெளிவாக  அறிந்தவன் எவனும
மற்றொன்றை  விட்டு
விலகி இருக்கவே   விரும்புகிறான்

ஏனெனில்
பார்வைக்கு நாணயத்தின்
இருபக்கம்போல் காட்டிக்கொள்ளும் 
அவைகள் இரண்டும் உண்மையில்
இரு  வேறு துருவங்கள் என்பது
தெளிந்தவனுக்குத்தான் தெளிவாகத்தெரியும்