Wednesday, November 28, 2012

சாணக்கியத் தனத்தை தொடருங்கள்


அரசியல் வித்தகரே
தமிழகத்துச் சாணக்கியரே
எந்தச் சோதனையையும் சொந்தச் சாதனையாக்கி
மக்களை முட்டாளாக்குவதை
கைவந்தக் கலையாகக் கொண்ட
தமிழகத்தின் மூத்தத் தலவரே

இப்போதும் எங்களை மண்ணைக் கவ்வ விட்டு
நீங்கள்  வெற்றி வாகை சூடியதை எண்ணி எண்ணி
எத்தனை மகிழ்வு கொள்கிறோம் தெரியுமா ?

அன்னிய முதலீடு ஆபத்தானதுதான்
பல லட்சம் பேர் வாழ்வாதாரம்
பாதிக்கப்படக் கூடும்தான்
அதற்காக மந்திரியாயிருக்கிற மகனை
விட்டுக் கொடுக்கமுடியுமா ?
சட்டத்தின் கோரக்கைகள் தேடுகிற
பேரனைக் காக்க வேண்டாமா?
இன்னும் மகள் பிரச்சனை
நில ஆக்கிரமிப்புப் பிரச்சனை என
பூதாகாரமாய் ஆயிரம் பிரச்சனை இருக்க
மக்கள் பாதிப்புக்காக
இருக்கிற பதவியையும் விட்டு விட
நீங்கள் என்ன உள்ளூர் அரசியல்வாதியா ?

கடலில் தூக்கிப்போட்டாலும்
எங்களை கஷ்டப்படுத்தாமல் இருக்கமாட்டீர்கள்
என எங்களுக்கு நிச்சயமாகத் தெரியும்
எப்படி அடித்தாலும் தாங்கிக் கொள்ளும்படியான
தடித்த தோள்களைப் பெற்ற நாங்கள்
இதையும் எளிதாகவே எடுத்துக் கொள்கிறோம்

மருமகன் இறந்த பின்புதான்
வாஜ்பாயீ தலைமையிலான அரசு
ஒரு மதசார்புள்ள கட்சியின் அரசு என்பதை
எத்தனைத்  தெளிவாகப் புரிந்து கொண்டு
எங்களுக்கும் புரிய வைத்தீர்கள்
அதைப் போன்றே
கடைசி ஆறு மாதத்தில்
இவர்களுக்கு எதிரான ஒன்றை
கண்டுபிடிக்காமலா போய்விடுவீர்கள் ?
நீங்கள் சொல்வதை
நாங்களும் நம்பாமலா போய்விடுவோம்

சில ஆண்டுகளாக உங்களை
குடும்பத் தலைவராக பார்த்துப் பழகிய நாங்கள்
இந்த  முடிவுக்கு குழம்பவில்லை
தங்களை அரசியல் தலைவராக
பார்த்துக் கொண்டிருப்பவர்கள்தான்
தங்கள் முடிவால் குழம்பித் தவிக்கிறார்கள்
அவர்களை அப்போது
சரிபண்ணிக் கொள்வோம் தலைவரே
இப்போது தங்கள்
சாணக்கியத் தனத்தை தொடருங்கள்
முத்தமிழ் வித்தகரே


Tuesday, November 27, 2012

முக நக அக நக


ஒவ்வொரு முறை
அவனைச் சந்திக்கையிலும்
மகிழ்ச்சியினை புன்னைகையாய்
வெளிப்படுத்த முயல்வேன்  நான்

நான் புன்னகைத்ததை
உறுதி செய்து கொண்டபின்
மிக மிக யோசித்து
மெல்ல இதழ் விரிப்பான் அவன்

ஒவ்வொருமுறை
அவனை நெருங்குகையிலும்
ஆர்வமாய் அழுத்தமாய்
கை குலுக்க முயல்வேன் நான்

எனது ஆர்வத்தை
தவிர்க்க முடியாதவன் போல்
செய்யக் கூடாததைச் செய்பவன்போல்
சோர்வாய் கை நீட்டுவான்

ஒவ்வொருமுறை சிந்திக்கையிலும்
அவனை சந்தித்தது முதல்
அதுவரை நடந்தவைகளை
விஸ்தாரமாய்ச் சொல்லி
மனம் கவர முயல்வேன் நான்

தவிர்க்கமுடியாதவன்போல்
ஒரு சிறிய நிகழ்வை
பதிலுக்குச் சொல்லவேண்டுமே என்பது போல்
சுருக்கமாய் சொல்லி முடிப்பான் அவன்

சிலநாளாய் எனக்குள்ளும்
மிக லேசாய்  இவன் நமக்கு நண்பன்தானா
இவன் தொடர்பு தேவைதானா எனும் நினைவு
மனத்தைத் தொட்டுத் தொட்டு விலகிப் போக
குழம்பிக் கிடந்தேன் நான்

திடுமென்று எதிர்பாராது தேடிவந்த அவன்
தன்னை பாதித்த ஒரு நிகழ்வினை
மிக மிக  விஸ்தாரமாய்
தொடர்ந்து பேசி முடித்தான்

திரும்பிப் போகையில்
"ஏதோ உன்னிடம் மட்டும்
சொல்லவேண்டும் போல இருந்தது "என்று
கண் கலங்கிப் போனான்

முக நக என்பதற்கும் அக நக என்பதற்கும்
உண்மையான அர்த்தம் மெல்லப் புரிய
நன்பர்களைப் பெறுவதும் வெல்லுவதும் குறித்து
புத்தகத்தில் கற்றுத் தெரிந்து கொண்டதற்கு
வெட்கித்தலை கவிழ்ந்து போனேன்


Monday, November 26, 2012

நாங்கள் யாரெனத் தெரிகிறதா ?

ஈட்டி எறியவும்
வாள் சுழற்றவும்
பயிற்சியளிக்காது
கவசங்கள் அணியவும்
கேடயங்கள் தாங்கவுமே
பயிற்றுவிக்கப் பட்டதால்
எங்கள் கனவுகளில் கூட
கிரீடங்கள் வருவதே இல்லை

அன்றாடப் போர்களில்
அடிபடாது திரும்புதலையும்
உயிரோடு இருத்தலையுமே
நாங்கள் வெற்றியாகக் கொள்கிறோம்

நாங்கள்  யாரென உங்களுக்குத் தெரிகிறதா ?

ஆற்று விசைக்கு எதிராக முயலாது
இலக்கை நோக்கி நீந்த அறியாது
ஆற்றின் போக்கோடு
அமிழ்ந்துவிடாது போதலையே
நீச்சலெனப் பயிற்றுவிக்கப் பட்டதால்
நாங்கள் விரும்பிய இடம்
போய்ச் சேர்ந்ததே இல்லை

புதையாது ஏதோ ஒரு கரையினை
எட்டிப் பிடித்தலையே
நாங்கள் சாதனையாகக் கருதுகிறோம்

உங்கள் வழிகளில் எங்களைப் பார்த்திருக்கிறீர்களா ?

தன் பலம் அறியாது
தும்பிக்கையில் நம்பிக்கை கொள்ளாது
அங்குசத்திற் கடங்குதலையே
தர்மமெனக் கொள்கிற
முட்டாள் யானையாயிருக்கப்
பயிற்றுவிக்கப் பட்டிருப்பதால்
நாங்கள் தவறியும்
மதம் கொள்வதே இல்லை

கொடுத்ததைப் பெறுதலையும்
கிடைத்ததை தருதலையுமே
எமக்கான சுய தர்மமாய்க் கொள்கிறோம்

எங்களை  உங்களுக்குப் புரிகிறதா ?

எங்களை மிதித்து ஏறி
சிகரம் தொட்டவர்களே
எங்களை இகழ்ந்த போதும்
எங்கள் மேல் பயணித்து
கரை கடந்தவர்களே
எங்களை மறந்த போதும்
நாங்கள் என்றும்  எப்போதும்
துளியும் மாறாதே இருக்கிறோம்

மாறாததொன்றே மாறாத விதி என்பதுதான்
மிகச் சரியான விதி என்பதற்கு
சாட்சியாகவும் இருக்கிறோம்

நாங்கள் யாரென உங்களால்
ஊகிக்க முடிகிறதா ?

Friday, November 23, 2012

என்னை விட்டு விடுங்களேன் பிளீஸ்


வானம் பார்த்து மண்ணில் நடந்து
இன்னும் எத்தனை நாள்
பாதாளத்தில் வீழ்ந்து கொண்டிருக்கப் போகிறீர்கள்

ஞானம் தேடி காடு மலை ஓடி
இன்னும் எத்தனை யுகம்
வாழ்வை இழந்து கொண்டிருக்கப் போகிறீர்கள்

நான் இருப்பதும் இல்லாதிருப்பதும்
உலகுக்கு பிரச்சனையே இல்லை

என்னை வைத்துப் பிழைப்பவனும்
என்னை  "வைதுப் " பிழைப்பவனும் தான்
உலகில் பெரும் பிரச்சனை

வேண்டுதல் நிறைவேற்ற அள்ளிக் கொடுக்கவோ
செருப்படி கொடுத்தால் சீரழித்துப் போகவோ
நான் அற்ப  மனிதனில்லை

ஒலியாக ஒளியாக பொதுவாக இருந்தவனை
மொழியானதும் விளக்கானதும் நீங்கள்தான்
பிரித்துத் தொலைத்தீர்கள்

வெளியாக புரியாது தெளிவாக இருந்தவனை
கோவிலாக்கி சிலையாக்கி என்னைப்
சின்னாபின்னப்படுத்திவிட்டீர்கள்

நான் ஒருவனே என்று சிலரும்
நானே எல்லாம் என்று சிலரும்
என்னை நீங்களாகவே உருவகப் படுத்திக்கொண்டீர்கள்

மிகப் பெரியவனான எனக்கு
ஊடகமும் ஏஜேண்டுகளும் தேவையென முடிவு செய்து
என்னை மகா சிறியவனாக்கிவிட்டீர்கள்

உறுதியாகவும் சொல்கிறேன்
இறுதியாகவும் சொல்கிறேன்
எல்லோருக்குமாகவும் சொல்கிறேன்

என்னைப் படைத்து என்னைப் புகழ்ந்து
நீங்கள் எதுவும் அடையப் போவதுமில்லை
என்னை நீங்கள் அடையப் போவதும் இல்லை

உங்கள் நிம்மதிக்காக இல்லையென்றாலும்
என் நிம்மதிக்காக வேணும் என்னை சிலகாலம்
கண்டு கொள்ளாது விட்டு விடுங்களேன்
பிளீஸ்

Thursday, November 22, 2012

முரண்


கூந்தலைச் சரியாக முடியாது
பொட்டுவைக்கக் கூட மறந்து
அழுக்கேரிய மஞ்சள் சரடுடன்
மிகச் சாதாரணமான நூல் சேலையணிந்து
ரேசன் கடையில் புகை படிந்த ஓவியமாய்
அந்தப் பெண்ணைப் பார்க்க
அவள் வறுமை தெரிந்தது
ஆயினும் அவள் மேல் ஒரு
மரியாதை இருந்தது

கூந்தலை நாகரீகமாகப் பின்னி
மிகப் பெரிய பொட்டுவைத்து
அன்றுதான் கட்டியது போன்ற புதிய சரடுடன்
மிக நவ நாகரீமாய் உடையணிந்து
பஜார் வீதியில் அலங்கார விளக்காய்
அவளைப் பார்க்கையில்
கவர்ச்சி இருந்தது
ஆயினும் அவள் மேல் அதீத
வெறுப்பே படர்ந்தது

இப்போதெல்லாம் ஏனோ
பட்டங்களையும் பட்டயங்களையும்
சாட்சிகளையும் விரித்து வைப்பதிலேயும்
அடுத்தவர்களை முற்றாக கவர்வதிலேயும்
அதிக கவனம் கொள்கிறவர்களைவிட
இயல்பாய் எளிமையாய் பாசாங்கின்றி
தொடர்பவர்களுடன்தான் பயணிக்கவும் பிடிக்கிறது
அவர்களுடைய தொடர்பில்தான்
தொடர்ந்து எப்போதுமிருக்கவும் பிடிக்கிறது


Wednesday, November 21, 2012

வஸந்த வாழ்வு எளிதாய்ப் பெற


உனக்கு பேசவும் எழுதவும்
கொடுத்துள்ள உரிமையின் எல்லையை
சோதிக்க முயலாதே
அந்த எல்லை மிகச் சிறியது என உனக்கு
புரிந்தும் போகலாம்
அதனால் நீ நொந்தும் போகலாம்
எனவே அந்த வழி வேண்டாம் நமக்கு

உண்மையைத்தானே சொல்கிறேன் என
சிறுபிள்ளைத்தனமாய்
உளறித் தொலைக்காதே
நீ கைது செய்யவும் படலாம்
உன் வீடும் தாக்கப் படலாம்
ஊமையாய் இருக்கப் பழகு
காசு கொடுத்து கருமாந்திரம் நமக்கெதுக்கு

எழுதுபவன் வாசிப்பவன் எல்லாம்
சராசரியைத் தாண்டியவன் என
தப்புக் கணக்குப் போடாதே
நீ ஏமாந்துத் தொலைக்கலாம்
எழுத்தையே வெறுக்கலாம்
தெரிந்ததைப் பதுக்கப் பழகு
அதுதான் என்றும் சுகம் நமக்கு

மதம்" பிடித்தவனாயினும்
"மதம்" பிடிக்காதவனாயினும்
அவனவன் நிலையில் "மதம் 'பிடித்தவனே
நியாயம் பேசி ஏமாறாதே
நிம்மதி இழந்துத் திரியாதே
சராசரியாய் இருக்கப் பழகு
சங்கடங்களை விலக்கப் பழகு

பயனற்றதை சுவாரஸ்யமாகச் சொல்லிப்போ
ஆடிக்காற்றுப் போல எதன் மீதும்
மிகச் சரியாகப் படாது புழுதிக் கிளப்பிப் போ
மகுடங்களும் மலர் மாலைகளும் நிச்சயம் கிட்டும்
யானைவைத்து பிச்சை எடுப்பது போல்
அறிவைக் கொண்டு பிழைக்கப் பழகு
நிச்சயம் வஸந்த காலம் உன் வாசல் கதவைத் தட்டும்

Sunday, November 18, 2012

பரிணாமம்


அவனை அவர்கள் முதன் முதலாகப்
பார்த்தபோது.....

பிறரை விட நிஜமாக வளராது
வளர்ந்ததாகக் காட்ட
கட்டைக் கால்களை
இணைத்துக் கொண்டிருந்தான்

எல்லோரும் கலைக்கூத்தாடி என
இகழ்ச்சியாய்ப் பார்த்தார்கள்

பின்னர் சில நாட்களில்
பிறர் பார்வையைக் கவர்வதற்காக
வண்ண வண்ண ஆடைகள்
அணிந்து திரிந்தான்

எல்லோரும் கோமாளியோ என
குழம்பியபடி ஒதுங்கினார்கள்

அடுத்து வந்த நாட்களில்
பிறர் கவனத்தை ஈர்ப்பதற்காக
சப்தமெழுப்பியபடியே
சுற்றிச் சுற்றி வந்தேன்

ஒருவேளை பைத்தியமோ என
பயந்தபடி விலகினார்கள்

முடிவாக

கவருதலுக்காக மட்டுமே
செய்கிற எல்லாமே
அதீத அற்பத்தனம் எனப்
புரியத் துவங்கியதால்
கும்பலைவிட்டு
கவனமாக ஒதுங்கத் துவங்கினான்

எட்ட நின்று அவனைக்
கவனித்தவர்கள் இப்போது
அவனருகில் வரத் துவங்கினார்கள்

நெருங்கியவர்களை
ஒரு பொருட்டாகவே  கருதாது
சூழல் மறந்து சுயம் இழந்து
அவனுள் கரையத் துவங்கினான்

கவனிக்கத் துவங்கியவர்கள்
இப்போது அவன் காலடியில் அமரத் துவங்கினர்

பூரண விழிப்பைக் கண்டவன்
இமைகளைத் திறக்க
எதிர் நின்ற கூட்டம் கண்டு
அதிர்ந்துதான் போனான்

காலடியில் அமர்ந்தவர்கள்
எதையெதையோக் கொடுத்து அவனிடம்
எதையேனும் பெறுவதற்காக
கண்விழித்தபடி தவித்துக் கொண்டிருந்தார்கள்

முதன் முதலாக
அவனது இருப்பிடம் அது இல்லை என்றும்
தவிப்பவர்களுக்காக கொடுப்பதற்கு
தான் இன்னும் அதிகம்
பெற வேண்டியதைப் புரிந்து கொண்டான்

ஒரு நாள் அதிகாலையில்
சுபவேளையில்
மக்கள் கூட்டம் அவனைத்
தரிசிக்கக் கூடுகையில்;;

அவன் அங்கு இல்லாது இருந்தான்

Saturday, November 17, 2012

மீட்பின்றி சபிக்கப்பட்ட" நடுத்தரங்களாய் "


ஊழல் பெருச்சாளிகளுக்கும்
உதவாக்கரை தலைவர்களுக்கு மிடையில்
ஈட்டி ஏந்திய கோழைகளாய்
வெறும் வாக்காளிக்கும் எந்திரங்களாய்

புரட்டு மதவாதிகளுக்கும்
முரட்டு பகுத்தறிவாளருக்கு மிடையில்
சுழலில் மாட்டிய படகுகளாய்
இரு தலைக் கொல்லி எறும்புகளாய்....

திமிங்கல  நிறுவனங்களுக்கும்
உள்நாட்டு  முதலைகளுக்கு மிடையில்
தீயில் உருகும் மெழுகாய்
ஏழ்மையில் கரையும் உயிரினங்களாய்.

சிகரத்தைப் பார்த்து ஏங்கியபடி
பாதாளம் பார்த்துப் பயந்தபடி
சரிவினில் தொங்கிடும் ஜந்துக்களாய்
இலக்கற்றுத் திரியும் விலங்கினங்களாய்..

பல்லாண்டு அலைந்து திரிகிறோம்
நல்லதொரு மேய்ப்பனைத் தேடி
தீராத பாவப்பட்ட ஜென்மங்களாய்
மீட்பின்றி சபிக்கப்பட்ட" நடுத்தரங்களாய் "


Wednesday, November 14, 2012

ஆதலினால்...... காமம் கொள்வோம் உலகத்தீரே

காதல்
காற்று வெளியிடை
அவள் சௌந்தர்ய ரூபங்களை
உன்னதங்களுடன் ஒப்பிட்டு மகிழுகையில்..

காமம்
தனிமையில் இருளில்
அவள் அங்கங்களின் திரட்சியில்
ஆழ்ந்துக் கிறங்கி உன்மத்தம் கொள்கிறது

காதல்
கொடுப்பதிலும் பகிர்வதிலும்
அவசியமானால் இழப்பதிலும்
தன்னைத் தயார் செய்து கொண்டிருக்கையில்

காமம்
ஆக்கிரமிப்பதிலும் எடுப்பதிலும்
அவசியமானால் அழிப்பதிலும்
எப்போதும் தயார் நிலையில் இருக்கிறது

காதல்
ஆற்று நீராய் பரவி
ஆழமாய் ஊடுருவி
அன்பு வேரை உயிர்ப்பிக்க முயலுகையில்

காமம்
கொடும் நெருப்பாய்ப் பற்றி
உடலெரித்து உணர்வெரித்து
வாழ்வெரிக்க முழுமூச்சாய் முயல்கிறது

காதலில் காமம்
உப்பாய் சுவைசேர்த்து
சுவை சேர்த்து சுகம் சேர்த்துப் போக

காமமோ காதலில்
விஷமாய் ஊடுருவி
புயலாய் சிதைத்தும் சீரழித்துமே போகிறது

காமத்தில் காதல்
விஷக் குட த்தில் துளிப் பாலாக

காதலில் காமமோ
பாற்குடத்தில்  தேனாகிப் போகிறது

ஆகையினால்
 உலகத்தீரே
காமத்தை அடியோடு வேரறுப்போம் வாரீர்
காதலின் மேல்
மாறாத காமமது கொண்டிடுவோம் வாரீர்

Tuesday, November 13, 2012

குழந்தையோடு இணைந்திருங்கள்

அதிகாலைச் சூரியனோடு
கைகோர்த்து நடை பயிலுங்கள்
அது உடலினை உறுதி செய்யும்

மாலை நேரத் தென்றலோடு
மனம் திறந்து பேசுங்கள்
அது மனப்பளுவைக் கனவாக்கிப் போகும்

முழு நிலவின் ஒளியோடு
கரையக் கற்றுக் கொள்ளுங்கள்
அது பல உன்னதங்களை அறிமுகம் செய்து போகும்

பூத்துச் சிரிக்கும் மண  மலரோடு
சினேகம் செய்து கொள்ளுங்கள்
அது வாழ்வின் அர்த்தத்தை தெளிவாக்கிப் போகும்

நீலக் கடலின்  பிரமாண்டத்தில்
இலயிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
அது  பேரறிவாளனை உணரச் செய்து போகும்

காட்டோடும் மலையோடும்
தனித்திருக்கப் பழகுங்கள்
அது   அமைதியின்  அருமை  உணர்த்திப் போகும்

 இவை எதற்கும் நேரமில்லையெனில்
குழந்தைகளோடு  இணைந்திருக்க  முயலுங்கள்
நிச்சயம்  அது
இவை அனைத்தையும்  ஒன்றாகச் சேர்த்துத் தரும்


Sunday, November 11, 2012

ரஜினி போலத் தானும் ஆக

 ஒருவன்
தலையைச் சீவி தலையைச் சீவி
திரும்பக் கலைக்கிறான்-கேட்டா
ரஜினி  போலத் தானும் ஆக
ரிகர்சல் என்கிறான்

ஒருவன்
முழுங்கி முழுங்கிப் பேசிப் பேசி
நம்மைக் குழப்புறான்-கேட்டா
கமலைப் போல தானும் அறிவு
ஜீவி என்கிறான்

 ஒருவன்
கார ணங்கள்  இன்றி தினமும்
ஏனோ நடக்கிறான்-கேட்டா
அஜீத் பாணி இதுதான் என்று
சைசாய்  சிரிக்கிறான்

 ஒருவன்
கோபம் வந்தால் நண்பனையும் 
போட்டுத்  தாக்கறான்- கேட்டா
கேப்டன்  எந்தன் தலைவன்  என்று
கண்கள் சிவக்கிறான்

இங்கு
 காணு கின்ற   இளைஞர் எல்லாம்
நடிகர் போலவே -தினமும்
வீணேத்    தன்னை  எண்ணிக் கொண்டு
மகிழ்ந்து திரிகிறான்

ஒருவன் 
சொல்லச்  சொல்லத்  திரும்பச் சொல்லும்
கிளிகள் தன்னையே -கூ ண்டின்
உள்ளே  வைத்து காட்சிப் பொருளாய்
 ரசிக்கத் தெரிந்தவன் ...

ஒருவன்
இயக்க இயக்க  இயங்கிச் செல்லும்
நடிகன் அவனையே  -தன்னை  
இயக்க விட்டு மந்தை ஆடாய்
 சுயத்தை  இழக்கிறான்

உலகில்
சிறிய பொருளே  ஆனால்  கூட
அசல்  அசலுதான் -இந்தச்
சிறிய கருத்தை இளமை   நெஞ்சில்
பதியச் சொல்லுவோம்

இனியும்
நடிகன் ஒருவன்  தலைவன் ஆகும்
நிலையை   ஒழிப்போம் -அதற்கு
முடிந்த வரையில் நம்மால் ஆன
உழைப்பை விதைப்போம்  


Friday, November 9, 2012

சிறு பிரிவுகள்

அவன் வீட்டில்
அன்றுதான்
அவன் அவனை அன்னியனாய் உணர்ந்தான்

வீடு நிறையப் பொருளிருந்தும்
எது எங்கிருக்கிறது என்றும்
எது எதற்கானது என்றும்
எதற்கடுத்து எது என்றும்
அதை எப்படிப் பயன்படுத்துவதென்றும்
எதுவுமே புரியவில்லை அவனுக்கு

விழித்தது முதல்
மெத்தையில் சாயும் வரை
அறுவை சிகிச்சையின் போது
அடுத்து  அடுத்துக்  கருவிகளை
மிக நேர்த்தியாய்    எடுத்துத் தரும்
தாதியாய் இருந்தவள்
இன்றில்லை என்றபோதுதான்
கையறு நிலை என்ற சொல்லின் பொருளும்
இரு கையிழந்தவன்  படும் துயரும்
தெளிவாய்த்  தெரிந்தது அவனுக்கு

 இந்தச் சிறு அசௌகரியங்களைக் கூட
அவனால் சகித்துக் கொள்ள முடிந்தது.....

திருமணம் முடிந்த  சில நாட்களில் 
ஏதோ  ஒரு நாளில்
ஒரே ஒரு நாளில்
ஏதோ ஒரு பொருளை
 தேடித் தரத்  தாமதமானதற்காக 
தான்  ஆடிய ருத்ர தாண்டவம்
நினைவுக்கு வர
வெந்துதான்   போனான்
மிகவும் நொந்துதான்  போனான்

 என்ன செய்வது
 "மனித்த பிறவியும்
வேண்டுவதே இந்த மாநிலத்தே"
என்பதுபோல
சில ஆணாதிக்க  ஜென்மங்கள்
பட்டுத் திருந்தி 
சம நிலைப்பெறக் கூட
இதுபோன்ற  சிறு பிரிவுகள்
அவசியத் தேவையாகத்தான் இருக்கிறது        

Wednesday, November 7, 2012

விளங்குவதும் விளங்காததும்

தனித்துவமும் ஜன ரஞ்சகமும்
நேர் எதிரானவைகளாக இருப்பதைப் போன்றே
பயனும் சுவாரஸ்யமும்
எப்போதும்
எதிர் துருவங்களாகவேத்  திரிகின்றன

 பயனற்றதாயினும்
சுவாரஸ்யமாய் தரத் தெரிந்தவன்
பிழைக்கத் தெரிந்தவனாகவும்
புகழடைந்தவனாகவும் விளங்க

சுவாரஸ்யத்தைப் புறம் தள்ளி
பயனுள்ளதை மட்டுமே தருபவனோ
ஊருக்குத்   தெரியாதவனாகவும்
உலகுக்கு "  விளங்காத "வனாகத்தான்  தெரிகிறான்

 ஆயினும் என்ன
 கால  நெருப்பு தீண்டுகையில்

விளங்கியவன் படைப்பு
எரிந்து கருகி
எதற்கும் விளங்காது  போக

 விளங்காதவன் படைப்போ
 சுட்ட சங்காய்
கூடுதல் வெண்மை  கொண்டு
ஒளி விளக்காய்  விளங்கத்தான்   செய்கிறது

என்ன செய்வது 
 காலம் கடந்த பின்புதான்
படைப்பாளியைக்
காலன்   கவர்ந்த பினபுதான்
உலகுக்கும் கூட
ஆண்  மயிலுக்கும்  
வான் கோழிக்குமுள்ள வித்தியாசம்
விளங்கித் தொலைக்கிறது 


Sunday, November 4, 2012

காலமும் வாழ்வும்

ஆற்றின் போங்கில்
படகு போவது அறியாது
படகும் துடுப்பும்
தனக்குக்தான் கட்டுப்பட்டதென
உணர்வுப்பூர்வமாய்
அறிவுப் பூர்வமாய்ச்
சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர்
படகில் பயணிக்கும் இருவர்

மௌனமாய்ச் சிரித்துக் கொள்கிறது
அகன்று  விரிந்த பெருவெளி 

Friday, November 2, 2012

வெற்றி வெற்றியே

சின்னச் சின்ன அடிகள் வைத்து
சிகரம்  ஏறுவோம்
சிந்தை தன்னில் குழப்ப மின்றி
இன்றே ஏறுவோம்

ஞாலம் என்னும் பூதம் கூட
துகளால் ஆனது
மாயம் செய்யும் காலம் கூட
நொடியால் ஆனது
சீறும் அலைகள் கொண்ட கடலும்
துளியால் ஆனது-இங்கு
காணும் பெரிய  பொருட்கள் எல்லாம்
சிறிதால் ஆனது

வெற்றி பெற்ற மனிதர் என்றால்
இதனை அறிந்தவர்
பொத்தி நாமும் தூங்கும் போது
விழித்து எழுந்தவர்
முயலும் தோற்று ஆமை வென்ற
கதையைச் சொல்வதே -இந்த
ரகசி யத்தை நாமும் நன்றாய்ப்
புரிந்து கொள்ளவே

வானை முட்டி திமிராய் நிற்கும்
மலையைக் கூடவே
காணத் தெரியா சிறிய வேர்கள்
எளிதாய் உடைக்குமே
தொடர்ந்து முயன்றால் இந்த உலகில்
எல்லாம் முடியுமே-இதை
உணர்ந்தால் போதும் என்றும் வாழ்வில்
வெற்றி தொடருமே