Saturday, November 30, 2013

மரபுக் கவிதையும் ரவை உப்புமாவும்

எப்பொழுதும் எம்வீட்டில் குறைவு இன்றி
எப்பொருளும் எந்நாளும் இருக்கும் அதனால்
முப்பொழுதும் தப்பாது குறைகள் இன்றி
நளபாகம் படைத்திடுவாள் எந்தன் துணைவி

எப்படித்தான் சுதாரித்து இருந்தால் கூட
என்றேனும் ஒர்நாளில் சமையல் செய்ய
எப்படியோ பொருளொன்று குறைந்து போகும்
அப்போது சிலநிமிடம் குழப்பம் சூழும்

மல்யுத்தப் போட்டியிலே கீழே வீழ
மறுகணமே துள்ளியெழும் வீரன் போல
இல்லாத பொருள்குறித்தே எண்ணி இராது
சட்டெனவோர் முடிவெடுப்பாள் இல்லக் கிழத்தி

எதிர்க்கடைக்கு உடனடியாய் என்னை அனுப்பி
வறுத்தரவை அரைக்கிலோவும் அதற்குத் தோதாய்
கிளிநிறத்து மிளகாயும் வாங்கச் சொல்லி
உடனடியாய் செய்திடுவாள் உப்பு மாவே

நினைத்தவுடன் உடனடியாய் செய்யும் உணவு
உப்புமாபோல் உலகினிலே ஏதும் இல்லை
மனைவியர்க்கும் அவசரத்தில் உதவும் பதார்த்தம்
நிச்சயமாய் உப்புமாபோல் எங்கும் இல்லை

அதுபோல

எழுதுவது என்றெண்ணி அமர்ந்த பின்னே
எல்லாமே கற்பனையில் வந்து போகும்
எழுதிவிடத் துவங்கியதும் ஊற்று நீராய்
வார்த்தைகளும் சரளமாக வந்துச் சேரும்

எப்படித்தான்  ஆர்வமாக இருந்தால் கூட
என்றேனும் ஒருநாளில் கவிதைப் புனைய
எப்பொருளும் அமையாதுப் பூச்சிக் காட்டும்
எரிச்சலிலே எனைநிறுத்தி ஆட்டம் காட்டும்

வள்ளலுக்கு வருகின்ற வறுமை போல
வீரனுக்குள் வளர்கின்ற சோர்வு போல
உள்ளமதில் வெறுமையது சூழ்ந்த போதும்
அறிவதுவோ வேறுவழி ஒன்றைக் காட்டும்

"அச்சதற்குள் களிமண்ணைத் திணித்து எடுக்க
அழகான பொம்மையது வருதல் போல
சட்டத்துள் வார்த்தைகளை அடுக்கி எடுநீ
அழகான கவியொன்று கிடைக்கும்  "என்கும்

அதன்வழியே ஏழெட்டு எதுகை எடுத்து
அதற்கீடாய் மோனையையும் சேர்த்து எடுத்து
உடனடியாய் கவியொன்றைச்  செய்வேன் நானே
ஒருநொடியே ஆகுமதைச்  செய்யத் தானே

அதனால்

நினைத்தவுடன் செய்கின்ற உப்பு மாபோல்
உடன்கவிதை வேண்டுமெனில் தடங்கல் இன்றி
அனைவருக்கும் உதவுவது மரபு ஒன்றே
இளைஞரெல்லாம் இதையறிந்தால் நன்மை உண்டே

Wednesday, November 27, 2013

" யாதோ"

கவிஞனாக அறிமுகமாயிருந்த
என் நண்பனிடம்தான்
முதன் முதலாக
என் படைப்புகளைக் கொடுத்தேன்
பாதிபடிக்கும் வரை சமநிலையில் இருந்த
அவன் முகம்திடீரெனக் கறுத்துப் போனது

"கவிதைக்குரிய எந்தக் கூறும் இ ல்லை
இதைச் சரி செய்வதற்கான வாய்ப்பும் இல்லை
எந்தத் தைரியத்தில் என்னிடம் வந்தாய்" என்றான்
"என்ன செய்யலாம்" எனப் பயந்த படி கேட்டேன்
"வேண்டுமானால் கட்டுரையாளரை சந்தித்துப் பார்
அவர்கள் தான் எதையும் ஒப்புக் கொள்வார்கள்"என்றான்

கட்டுரையாளரைச் சந்தித்தபோது அவர்
புத்தகத்தில் புதைந்து கிடந்தார்
படைப்பினில் பாதிக் கடக்கும்போதே
அவர் உடல் குலுங்கத் துவங்கியது
சப்தம் போட்டுச் சிரித்தபடி சொன்னார்
"கட்டுரைக்குரிய எந்த லாஜிக்கும் இல்லை
உனக்குப் போதிய பயிற்சியும் இல்லை"என்றார்

"இதை என்ன செய்வது" என்றேன்
"வேண்டுமென்றால் கதாசிரியரிடம் போ
அவர்கள் தான் எதையும்
சரி பண்ணத் தெரிந்தவர்கள்" என்றார்

எழுதியபடியே இருந்த கதாசிரியர்
என்னைப் பார்ப்பதற்கே அரை மணி ஆனது
நம்பிக்கை இழந்த நிலையில்
என் படைப்புகளை அவரிடம் நீட்டினேன்
"அங்கே வைத்து விட்டுப் போ நாளை வா"என்றார்

அரசமரத்தடி பிள்ளையாரை
மௌனமாய் வேண்டியபடி
மறுநாள் அவரைப் பயத்துடன் பார்த்தேன்
அவர் மேசையில் என் படைப்பு இல்லை
தூரமாய்க் கூடைக்கருகில்
குப்பை போல் இருந்தது

"கதைக்கு அவசியம் கரு வேண்டும்
உணரும்படியாகவும் ரசிக்கும்படியாகவும்
நிகழ்வுகள் வேண்டும்
கொஞ்சம் கொஞ்சமாய் வளர்பிறை போல்............"
இன்னும் என்னென்னவோ சொன்னார்
எனக்கு எதுவுமே விளங்கவில்லை

முடிவாக

"இதனை இப்படியே கட்டி மூலையில் வை
ஓராண்டு தொடர்ந்து படி
பின்னர் முயற்சி செய்து பார்" என்றார்
"நல்லது" எனச் சொல்லி நொந்தபடி
நடுவீதிக்கு வந்தேன்

"கைகளில் என்ன பார்சல்"
இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய்"என்றான்
எதிரில் வந்தபத்தாம் வகுப்பில்தமிழில்
முப்பது மதிப்பெண்களே எடுத்ததால்
படிப்பிற்கே முழுக்குப் போட்ட
என் பால்ய நண்பன்.

"எழுத்தில் ஆர்வம்
கொஞ்சம் எழுதியிருக்கிறேன்
இது எதில் சேர்த்தி எனத் தெரியாமல்
அலைகிறேன்" என்றேன் பயந்தபடி

"பிள்ளையைப் பெற்று விட்டு
பேருக்காக அலைகிறாயா" என்றவன்
ஆவலாய் அதனைப் பிடுங்கி
அவசரம் அவசரமாய்ப் படிக்கத் துவங்கினான்
ஒவவொரு பக்கம் முடிய முடிய
"பேஷ் பேஷ்" என்றான்

அவன் முகம் ப்ரகாசமாகிக் கொண்டே போனது
எனக்குள் பயம் அதிகமாகிக் கொண்டே போனது

"நான் கிளம்பலாம் என நினைக்கிறேன்"என்றேன் மெதுவாக
கொஞ்சம் பொறு இன்னும் இரண்டு பக்கம் தான்"என்றான்

முதன் முதலாக
எழுத்தின் மீது நான் கொண்ட காதலுக்காகவும்
இதை எழுதியதற்காகவும் மனம் நொந்து அழுதேன்

திடுமென என் தோளை தட்டியபடி
"பிரமாதம்" என்றான்

தமிழில் தோற்றவனா என் எழுத்தை
ஏற்க வேண்டும்
எல்லாம் தலை விதி என்று நொந்து
"எப்படி" என்றேன்

"உன்னைப் பாதித்தவைகளை எழுதியிருக்கிறாய்
படிப்பவரை பாதிக்கும்படியும் எழுதியிருக்கிறாய்
குறிப்பாகப் புரியும்படியும் எழுதியிருக்கிறாய்
நோகாமல் தேன் கிடைப்பது சுகம் இல்லையா"என்றான்

அவனை அதிசயமாய்ப் பார்த்து
அச்சத்துடன் கேட்டேன்
"இது எதில் சேர்த்தி"

அவன் அமர்க்களமாய் ஆரம்பித்தான்
"சங்க காலங்களில் எழுதியவர் பெயர் தெரியாத
எத்தனையோ நல்ல கவிகள் கிடைத்தன
அவைகளைப் புறக்கணித்தா விட்டோம்

எழுதியவரை " யாரோ "எனச் சொல்லி
 சேர்த்துக் கொள்ளவில்லையா"என்றான்

நான் அமைதியாய் இருந்தேன்

எழுதியவர் பெயர் தெரியாதபோது
பெயரை" யாரோ "எனக் கொள்ளுதல் போல
எழுதியது எதனுள்ளும் அடங்காத போது
அதன் பெயர்" யாதோ" என்றான்

போதி மரத்து புத்தன் போல்
என் முன் அவன் பிரசன்னமானான்

எனது சிந்தனைகளை இப்போதெல்லாம்
ஒரு வகைக்குள்ளோ ஒரு வரையரைக்குள்ளோ
சிறை பிடித்துக் கொள்ளுவதேயில்லை

இப்போதெல்லாம்நான்
கதை கட்டுரை கவிதைப் பக்கம்
தலை வைத்துப் படுப்பதே இல்லை

நான் எழுதுவதெல்லாம்" யாதோ" தான்

Sunday, November 24, 2013

வாழும் வகையறிந்து....

அந்த அழகிய ஏரியில்உல்லாசப் படகில்
எல்லோரும் பயணித்துக் கொண்டிருந்தார்கள்
அதில் நீச்சல் அறிந்தவர்களும் இருந்தார்கள்
அறியாதவர்களும் இருந்தார்கள்

அறிந்தவர்கள் எல்லாம்
ஏரி நீரின் குளுமையை
கரையோர மலர்களை
படகு செலுத்துவோனின் லாவகத்தை
ரசித்து மகிழ்ந்து
உல்லாசமாய் பயணித்துக்கொண்டிருந்தார்கள்

அறியாதவர்கள் எல்லாம்
ஏரியின் ஆழத்தையும்
படகின் வேகத்தையும்
இதற்கு முன் நடந்த விபத்தையும்
எண்ணி எண்ணிப்  பயந்து
படகுக்குள்  ஒடுங்கிக் கிடந்தார்கள்

படகில் பயணம் செல்வதற்கு
நீச்சல் தெரிந்திருக்கவேண்டியது
நிச்சயம் அவசியமில்லைதான்
உல்லாசமாக பயணம் செய்வதற்கு
அவசியம் தெரிந்திருக்கவேண்டும்

Wednesday, November 20, 2013

தமிழ்மணக் குழப்பம் வந்ததுவே எனக்கும்

சங்கர பாஷ்யத்திற்கு அர்த்தம் அத்துப்படி
பிரம்ம ரகசியம் என்பதெல்லாம் எனக்கு வெறும் ஜுஜுபி
என்பவர்களையெல்லாம் அழைத்து
தமிழ்மணத் தர வரிசைப் பட்டியல் எப்படி
தீர்மானிக்கப்படுகிறது எனக் கேட்டால்
நிச்சயம் தலையைப் பிய்த்துக்
கொள்ள ஆரம்பித்துவிடுவார்கள்

அவர்கள் குறிப்பிட்டிருக்கிறபடி பார்வைகள்
மறுமொழிகள் ,வாசகர் பரிந்துரை, வாக்குகள்
என வருகிறதா எனப் பல நாள் தொடர்ந்து
கவனித்துக் குழம்பிப் போன பலருள் நானுமொருவன்

சரி அது எப்படியோ போகட்டும்
அது அவர்கள் விதிப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்

போட்டி என்றால்
தனி நபருக்கும் தனி நபருக்கும்
இருப்பதைப் பார்த்திருக்கிறோம்
குழுக்களுக்கும் குழுக்களுக்கும்
நடப்பதைப் பார்த்திருக்கிறோம்

தனி நபருக்கும் குழுக்களுக்கும்
குழுக்களுக்கும் தனி நபருக்கும் இருப்பதை
எங்காவது பார்த்திருக்கிறோமா ?

அப்படி ஒருவேளை நடந்தால் தனிநபர் 
என்றாவது முதலாவதாக வரச்   சாத்தியம் உண்டா ?

தமிழ்மணத் தர வரிசைப் பட்டியலில்
பதிவர்களைப் பொருத்துப் பட்டியலிடுவது சரி

அதற்குள் திரட்டிகளையும் ஒரு பதிவர் கணக்கில்
எடுத்து பட்டியலிடுவது எப்படிச் சரி ?

தமிழ் நியூஸ்,புரட்சி நியூஸ் மற்றும்
வலைச்சரத்தையெல்லாம் ஒரு பதிவாகக் கொண்டு
பட்டியலிடுதல் எந்த வகையில் சரியென எனக்கு
விளங்கவே இல்லை

இப்படித் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில்
 திரட்டிகளைத்  தவிர தனிப்பதிவர்கள்  என்றேனும்
வெற்றிபெற  வாய்ப்பிருக்கிறதா ?
எனக்குப் புரியவில்லை
   
இது குறித்துப் புரிந்தவர்கள் பதிவிட்டால்
மிகவும் மகிழ்ச்சி கொள்வேன்

Tuesday, November 19, 2013

கருவும் படைப்பும்

 பதிலை
கேள்வி தீர்மானிப்பதைவிட
கேட்கும் தொனியே
மிகச் சரியாய்த் தீர்மானிக்கிறது

"சாப்பிட்டாகிவிட்டதா ? "என்றால்
"ஆகிவிட்டது "என்பதாக

"சாப்பிடுகிறீர்களா ? "என்றால்
"இல்லை மனைவி காத்திருப்பாள் " என்பதாக

"முதலில் சாப்பிடுங்கள்
அப்பத்தான் பேச்சே எப்படி வசதி ?"என்றால்
"சரி "என்பதாக

கேள்வி பதிலைத் தீர்மானித்தலை விட
கேட்பவனின் தொனியே
அதிகம் தீர்மானிக்கிறது

படைப்பை
கரு தீர்மானிப்பதைவிட
படைப்பாளியின் மன நிலையே
மிகச் சரியாகத் தீர்மானிக்கிறது

"எதையாவது எந்த வடிவிலாவது"எனில்
சொத்தையாகக் குப்பையாக

"இதை எந்த வடிவிலாவது" எனில்
சராசரியாக ஒப்புக்கொள்ளும்படியாக

"இதை இந்த வடிவில் இப்படித்தான் "எனில்
சிறந்த படைப்பாகக் காலம் கடப்பதாக

படைப்பைக் கரு தீர்மானித்தலை விட
படைப்பாளியின் மன நிலையே
மிகச் சரியாய்த் தீர்மானிக்கிறது
தொனி  பதிலைத் தீர்மானிப்பது  போலவே

Sunday, November 17, 2013

வெள்ளத்தனைய......

தெளிவடைந்தவர்கள் யாரும்
அலட்டிக்கொள்வதில்லை எதற்கும்

அவர்களுக்குத் தெரியும்
அவர்கள் கொடுப்பதெல்லாம்
இங்கிருந்து எடுத்ததுதான்
முடியுமானால் எடுத்ததை
செழுமைப்படுத்திக் கொடுப்பதிலும்
இன்னும் முடியுமானால்
எடுத்ததை விட
கூடுதலாக்கிக் கொடுப்பதிலும் மட்டுமே
கூடுதல் கவனம் கொள்கிறார்கள்

முதிர்சியடைந்தவர்கள் எவரும்
அகங்காரம் கொள்வதில்லை  எதற்கும்

அவர்களுக்குத் தெரியும்
அவர்கள் எடுத்ததெல்லாம்
அவர்கள வரும் முன்பே
இங்கிருந்ததுதான்
முடியுமானால் எடுப்பதை
போதுமான அளவில் எடுப்பதிலும்
இன்னும் முடியுமானால்
குறைந்த அளவில் எடுப்பதிலும் மட்டுமே
அதிக ஆர்வம் கொள்கிறார்கள்

ஞானமடைந்தவர்கள் எவரும்
மயக்கம் கொள்வதில்லை எதற்கும்

அவர்களுக்குத் தெரியும்
அவர்களின் இருப்பு  அநித்தியமானது  என்பதும்
அவர்கள் வரும் முன்பே  இருந்தது
அவர்கள் இல்லையெனினும் இருக்குமென்பதுவும்
முடியுமானால் அவர்களின் இருப்பை
பயனுள்ளதாக்கப்  பார்க்கிறார்கள்
இன்னும் முடியுமானால்
நல்ல வழிகாட்டியாக இருந்து போவதில் மட்டுமே
அதிக அக்கறை கொள்கிறார்கள்

Friday, November 15, 2013

ஜாலியும் ஜோலியும்

"ஜோலி ஜோலி "என்றே இருந்தால்
வாழ்க்கைப் "போராய்ப்  " போகும் என்று
"ஜோலிக் "குள்ளே ஜாலியைக் கொஞ்சம்-சோற்றில்
உப்பைப் போலச் சேர்த்தார் அன்று

"ஜாலி " ஒன்றே வாழ்க்கை என்று
வாழ்தல் ஒன்றேச் சரியெனக் கொண்டு
வாலிபர் எல்லாம் மாறினார் இன்று-சோற்றை
ஊறு காய்க்குத் தொட்டுக் கொண்டு

பொழுதைப் போக்கத் தேவை இல்லை
போதல் ஒன்றே பொழுதின் தன்மை
உழைத்தக் களைப்பைப் போக்க மட்டும்-பொழுதுப்
போக்குப் போதும் என்றார் அன்று

போகும் வழியது தெரியா தென்று
பொழுது நின்று தவிப்பது போன்று
நாளும் பொழுதும் பொழுதை வீணே-இங்கே
போக்கித் திரிகிறார் பலரும் இன்று

அதனால் தானே தமிழில் இங்கு
"டயம்பாஸ் " என்கிறப் பெயரையேக் கொண்டு
உதவாக் கரையாய்ப்  புத்தகம் ஒன்று-அழகாய்
உலவியும் வருகுது பொழுதையும் விழுங்குது

இழந்த எதையும் பெற்றிட முடியும்
ஒன்றை இரண்டாய்ப் பெருக்கிட முடியும்
இழந்தக் காலம் இறந்தக் காலமே-இதனை
உணர்ந்து தெளிவோம் உச்சம் தொடுவோம்

Wednesday, November 13, 2013

ராஜாவான ரோஜா

நேரு மாமா பிறக்கும் முன்பும்
ரோஜா இருந்ததே - அது
நூறு பூவில் அதுவும் ஒன்றாய்
கணக்கில் இருந்ததே

நேரு மாமா மார்பில்  அதனைச்
சூடிக் கொண்டதும்-உடனே
ரோஜா பூவின் ராஜா என்று
பெருமை கொண்டதே

பஞ்சம் பசியும் பிணியும் நாட்டில்
விரைந்து பெருகவே-எங்கும்
மிஞ்சும் போரை ஒழிக்க வென்று
உறுதிக் கொண்டதும்

பஞ்ச சீலக் கொள்கை கண்டு
உலகுக் களித்தாரே-அதனால்
ஐந்து கண்டமும்  புகழும் ஆசிய
ஜோதி ஆனாரே

முதலாய் இருப்பது மட்டும் என்றும்
பெருமை கிடையாது-அதிலே
முதன்மை பெற்று இருத்தல் ஒன்றே
பெருமை என்றுணர்ந்து

ஐந்து ஆண்டுத் திட்டம் தந்து
பெருமை சேர்த்தாரே-நமது
இந்திய நாடு வளர்ந்து சிறக்க
வழியை வகுத்தாரே

குழந்தை மனதைக் கொண்டே அவரும்
வாழ்ந்து வந்ததனால்-என்றும்
குழந்தை நலமே நாட்டின் வளமென
உறுதி கொண்டதனால்

குழந்தை தினமாய் பிறந்த நாளை
சொல்லி மகிழ்ந்தாரே-என்றும்
உலகே விய ந்து   போற்றும்  உன்னதத்
தலைவர் ஆனாரே   

Monday, November 11, 2013

அந்தநாள் எனக்குப் பொன் நாள்

கவியது படைக்க எண்ணி      
மனமது முயலும் போதே
சதியது செய்தல் போல
சங்கடம் நூறு நேரும்
எதிரியாய் எதுகை மாறி
எடக்கது செய்து போக
புதிரென மோனை மாறிப்
புலம்பிட வைத்துப் போகும்

இனியொரு கவிதை யாரும்
இயற்றுதல் கடினம் என்னும்
கனிநிகர் கவிதை யாக்க
கடிதுநான் முயலும் போதே
அணியது முரண்டு செய்து
மனமதை நோகச் செய்ய
பனியது விலகல் போல
படிமமும் ஒதுங்கி ஓடும்

யுகக்கவி இவனே என்று
உலகிது போற்றும் வண்ணம்
நவகவி ஒன்று நானும்
நவில்ந்திட முயலும் போதே
உவமையும் வெறுப்பை ஊட்டி
ஒழிந்துதன் இருப்பைக் காட்ட
அவதியில் மனமும் மாறிக்
கவிதையை வெறுத்துச் சாடும்

ஆயிரம் முறையே வீழ்ந்தும்
எழுந்திட முயலும் சேயாய்
காவியம் ஒன்றை வாழ்வில்
செய்திட முயல்வேன் ஓர்நாள்
மேவிடும் முயற்சிக் கண்டு
மனதினில் மகிழ்வுக் கொண்டு
காளியே அருள்வாள் ஓர்நாள்
அந்தநாள் எனக்குப்  பொன் நாள்

Thursday, November 7, 2013

பிரசவ வைராக்கியம்

தன்னைப் பாதிக்கிற
ஒவவொரு நிகழ்வும்
ஒவவொரு உணர்வும்
கருவாகி
அவனுள் வளர்ந்து
கவியாக வரும் வரை
கவிஞன் படும் பிரவச அவஸ்தை
அவன் மட்டுமே அறிந்தது
ஆயினும்
கருவானது கவியாகி
கால் கொண்டு நடக்கையில்
அது தரும் அவஸ்தை
அது கூட அவன் மட்டுமே அறிந்தது

இளைஞர்களை கொள்ளை கொண்ட
'இழந்த காதலை'
இயற்றிய அவனே
மறந்து போன நிலையில்
கவிஞனின் மனைவி ஒரு நாள் கேட்டாள்
'யார் அந்த அழகு சுந்தரி
இப்பொது கூட விலகி கொள்கிறேன்
இடைஞ்சலாக இருக்க மாட்டேன்' என
கண் கசக்கிப் போனாள்
இந்தப் பிரச்சனை ஒயவே
ஆறு மாதங்கள் ஆகிப்போனது

'நண்பனின் நயவஞ்சகம்'
கவிதை வெளிவந்த பின்னே
கவிஞனின் நெருங்கிய நண்பன்
தொடர்பு எல்லையை விட்டு
தொலைந்தே போனான்
அதற்கான காரணம்
இதுவரை
கவிஞனுக்கு விளங்கவே இல்லை

'சம்பந்திகளின் தர்பார்'
கவிதைக்கு பின்னே
மாப்பிள்ளை முகம் கொடுதது பேசுவதே இல்லை
'தவறினை நேரடியாகச் சொல்லியிருக்கலாம்
கவிதையாக்கி அசிங்கப் படுத்தியிருக்க வெண்டாம்' என
சொல்லி போன சம்பந்தி
கவிஞனின் வீட்டுப் பக்கம்
இன்று வரை வரவே இல்லை

முத்தைக் கொண்டு
கடற் பரப்பைக் கூட
அளந்து அறியக் கூடும்
படைப்பைக் கொண்டு
படைப்பாளியை அறியக் கூடுமோ?

கவிதைக்குள் கவிஞனைத் தேடினால்
கவிதைகள் நீர்த்துப் போகும்
கவிஞனுக்குள் கவிதையைத் தேடினால்
'தங்க முட்டை வாத்தே' மிஞ்சும்

ஆனாலும் என்ன
கவிஞனை பாதிக்கும்
நிகழ்வுகளும் உணர்வுகளும்
தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன
கவிதைகள் பிறந்து கொண்டுதான் இருக்கின்றன

Saturday, November 2, 2013

போதையும் திருவிழாவும்

முற்றியப்  போதை தெளிந்த பின்
குடிகாரன் பார்வையில் படும்   சூழலாய்
விரிந்து கிடக்கிறது
திரு விழா முடிந்த மறுநாள்

நட்புக்காகத் எனத் துவங்கி
சகமரியாதைக்கு எனத் தொடர்ந்து
போதையின்  பிடியில் நகரும் இரவாய்

சம்பிரதாயம் எனத் துவங்கி
தனக்கானக்   கௌரவம் எனத் தொடர்ந்து
விளம்பரங்களுக்கிடையில்  சிக்கிய  போதையில்
தத்தளித்துக்   கிடந்த நடுத்தரக் குடும்பம்

கட்டுப்பாட்டை  முழுதும் இழக்க 
கடந்து   சென்ற   இரு நாட்கள்
லேசாய்  நினைவுக்கு வர
தலை உலுக்கி
 ஒரு சராசரி நாளை எதிர்கொள்ள
வழக்கம்போல்  தயாராகிறது மீண்டும்

அளவை  மீறியச் செலவு
அலங்கோலமாய்  கிடக்கும் இருக்கைகள்
காலி பாட்டில்கள்அலங்கோலம்போல்

எல்லை மீறியச்  செலவுகளும்
வரும் மாதத் தேவைகளும்
லேசாக  மனத்தைக்  கலக்கிப்போக

அடுத்தமுறையேனும்
தேவையற்றதை தவிர்க்கணும்  
செலவினை  வரவிற்குள் அடக்கணும் எனும்
பிரசவ   சங்கல்பமெடுக்கிறது அது
வழக்கம்போல் எடுக்கும்
பல வருடாந்திரத் தீர்மானங்கள் போலவே

 இனியேனும்
குடிப்பதை   அடியோடு நிறுத்தனும்
குடித்தாலும்  அளவோடு குடிக்கணும் என
நாற்பட்ட குடிகாரன்   எடுக்கும்
அன்றாடத்  தீர்மானம் போலவே
என்றும்   நிறைவேறாது போகும்
அந்த அதிசயத் தீர்மானங்கள் போலவே