Saturday, October 31, 2015

"ஊற்று "வலையுல எழுத்தாளர்கள் மன்றம்





Displaying Untitlednm-1 copy.jpg

மிகக் கனத்த மழைக்குப் பின்
மீண்டும் ஒரு பெரும் கனத்த மழைக்கு
அவ்வளவாக வாய்ப்பில்லை

அதைப் போல உலக அளவில் வலைப்பதிவர்கள்
சார்பாக நடத்தப்பட்ட கவிதைப் போட்டிக்குப் பின்
கவிஞர் ரூபன் அவர்களின்
தனிப்பட்ட முயற்சியால் துவக்கப்பட்ட
 "ஊற்று  "
வலையுல எழுத்தாளர்கள் மன்றத்தின்  
சார்பாக நடத்தப்பட்ட
தீபாவளிப் பண்டிகைக்கான பரிசுப் போட்டியில்
இத்தனைக் கவிஞர்கள்
கலந்து கொள்வார்கள்,
இத்தனை அற்புதமான கவிதைகள் வரும்
என நாங்கள் நிச்சயம் எதிர்பர்க்கவில்லை

கலந்து கொண்ட கவிஞர்கள் அனைவருக்கும்
எங்கள் மன்றத்தின்  சார்பாக மனமார்ந்த
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்

கவிதைகள் நடுவர் குழுவின்
பரிசீலனையில் உள்ளன
இன்னும் சில தினங்களில் போட்டி
முடிவுகள் வெளியாகும் என்பதை
நடுவர்களின் சார்பாகத் தெரிவித்துக் கொள்வதில்
பெரும் மகிழ்வு கொள்கிறேன்

வாழ்த்துக்களுடன்...



விஷய ஞானத்தினும்....

குப்பை மூடைகளை
வீடு முழுதும் அடுக்கிவைத்து
இடமற்று வெளியில்
மனம்பிசகிக் கோட்டியாய்
கிடப்பவனுக்கும்

வீடு குப்பைக்கானதில்லை
தனக்கானதென்று
அறியாதவனுக்கும்

ஊர் விஷயங்களை
மூளை நிறையக் குவித்துவைத்து
தனைக் குறித்து ஏதுமறியாது
அறிவானவன் என
இறுமாந்துத் திரிபவனுக்கும்

தன்னை அறிதலே
அறிவென்பதை
அறியாதிருப்போனுக்கும்

என்ன வித்தியாசமிருக்கிறதென்று
எனக்குப் புரியவில்லை
உங்களுக்கேதும் புரிகிறதா ?

Friday, October 30, 2015

கொசுறு

நான் பதிவர்கள் மைய அமைப்பு இருந்தால்
மிக மிக நல்லது என்கிற கருத்துப் பதிவுக்கு
பின்னூட்டமிட்ட கர்னல் கணேசன் அவர்கள்
கீழ்க்குறித்தபடி ஒரு அற்புதமான கருத்தை
பின்னூட்டமிட்டிருந்தார்


the poles "colonelpaaganesanvsm.blogspot.com" said...

Excellent idea.All registered Bloggers contribution can be published
as a book for the the benifit of the posterity.
Like "Pura Nanooru" is the contribution of many poets
.A good number of Bloggers are arround Pudukkottai.
It can be thought over by Mr.Muthunilavan sir.
congratulations Mr.Ramani for thr the story and the idea.

அந்த வகையில் பெற்றோர் ஆசிரியர் கழகம்
வெளியிடுகிற மாதிரி வினா விடை போல
(அதற்கு இருக்கும் மதிப்பு அனைவரும் அறிந்ததே )

குறிப்பிட்ட பதிவர்கள் பத்துஅல்லது
இருபது பதிவர்களைத் தேர்ந்தெடுத்து
அவர்களிடம்  அவர்கள் விரும்புகிற
ஐந்து/அல்லது பத்துப்   படைப்புகளைப் பெற்று
( முதல் நூல் கவிதையாக இருக்கலாம்)
பதிவர் அமைப்பின் முதல் வெளியீடாக
அதை வெளியிடலாம்

தனி ஆசிரியரின் நூலாக இல்லாமல்
ஒரு அமைப்பின் நூலாக  இருக்குமாயின்
கதம்ப மாலை போல அதுவும்
இன்னும் சிறப்பாகத்தான் இருக்கும்

பதிப்புச் செலவை அந்த ப் பத்து/இருபது
படைப்பாளிகளை ஏற்றுக் கொள்ளச் செய்து
அதற்கு ஈடாக அவ்ர்களுக்குத் தேவையானப்
புத்தகங்களைக் கொடுத்து மீதம் உள்ளதை
விரும்பும் பதிவர்களுக்கு அனுப்பிவைக்கலாம்

காலப் போக்கில் பதிவர்களின் நூல்கள்
என்கிற புதிய வெளீயீடுகள் பெரும் வரவேற்பை
 நிச்சயம் பெறும்படிச் செய்யலாம்

ஆயிரம் புத்தகங்கள் கொண்ட முதல் வெளியீடு
இருபது/பத்துப் படைப்பாளிகளின் நூறு கவிதைகள்
இருக்கும்படியாக வெளியிடப்படுமாயின்
இருபதில் அல்லது பத்தில் நானும் ஒருவனாக
 இருக்கிறேன் என்பதையும்,

மொத்தச் செலவில் இருபதில்
அல்லது பத்தில் ஒரு பங்கைத் தரவும்
ஐம்பது அல்லது நூறு நூல்களைப் பெற்றுக்
கொள்ளவும் சம்மதிக்கிறேன் எனவும்
தெரிவித்துக் கொள்கிறேன்

இது குறித்து பதிவர்கள் தங்கள்
விரிவான கருத்தினைப் பதிவிடலாமே

வாழ்த்துக்களுடன்...

மழையைத் தொடரும் தூவானம் ( 3 )

நான் இந்தத் தொடரில்  முதலில் சொன்ன
பீர்பால் கதை, தொடர்ந்து முயன்று கொண்டிருந்தால்
எதையும் காரிய சித்தி ஆக்கிவிடமுடியும்
என்பதை வலியுறுத்தத்தான்

எவர் மனத்துள்ளும்  நம்  கருத்தை
நிலை நிறுத்திவிடமுடியும்  என்பதற்காகத்தான்

நம் பதிவர் சந்திப்புக்கென மைய அமைப்பு
நிச்சயம் வேண்டும் எனது அவா.
பெரும்பாலோரின் அவாவும் கூட..

ஐந்தறிவை ஆறறிவு அடக்கிப் பயன்படுத்திக்
கொண்டாலும் ஆறாவதை வழி நடத்த ஒரு ஏழாவது
அறிவு தேவைப்படுவதைப் போல

சிறந்த  மனிதர்களாயினும்   அவர்களை
ஒருங்கிணைத்து வழி நடத்திக் கொண்டு செல்ல
ஒரு ஏழாவது மனிதன் தேவைப்படுவதைப் போல

ஒரு சில மாவட்டங்களில் தனித்தனியாக
பதிவர்கள் அமைப்பு இருந்தாலும் கூட
தூண்டுதலுக்கு ஒரு மைய அமைப்பு இருந்தால்
இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் அவா.

சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பில்
மதுரைக்கும் ஈரோட்டுக்கும் அடுத்த சந்திப்பு
நடத்துவது தொடர்பாக ஒரு போட்டியே இருந்தது

மதுரைக்குப் பின் புதுகை என ஏக மனதாக
முடிவு செய்ய்ய்ப்பட்டது. புதுகைக்குப் பின் எது
என புதுகையில் முடிவு செய்யப்படவில்லை

ஒரு மைய அமைப்பு இருக்குமாயின் இதுபோன்ற
விஷயங்களில் கவனம் செலுத்த இயலும்

மேலும் இரண்டாவது தொடரில் அசரீரிக் குறித்து
விளக்கியதைப் போல அனைவர் மனதிலும்
மைய அமைப்புக்குத் தகுந்த தலைமையும்
செயல்வீரர்கள் படையும் புதுகையில்
அமைந்திருப்பதால்......

உடன் அங்கு ஒரு மைய அமைப்பு அமைப்பதற்கான
ஆயத்த வேலைகளைச் செய்யலாம் என்கிற ஒரு
திடமான குரல் ஒலித்துக் கொண்டே இருப்பது
நாம் அனைவரும் உணர்வதே.....

அந்தக் குரலை அலட்சியப்படுத்தாது
 ஒத்த கருத்துடைய பதிவர்களை
ஒருங்கிணைத்து உடன் பதிவர் கூட்டமைப்பு
ஏற்படுத்துவதற்கான ஆயத்த வேலைகளை
புதுகைப் பதிவ்ர்கள் ஐயா முத்து நிலவன் அவர்கள்
தலைமையில் உடன் செய்ய வேண்டும் என்பதை
வலியுறுத்தவே .....

மழையைத் தொடரும் தூவானமாய்
பதிவர் சந்திப்புத் தொடரைத் தொடர்ந்து
இந்தத் தொடர் பதிவு

தங்கள் வெளிப்படையான மனம் திறந்த
கருத்துக்களை பதிவு செய்ய வேண்டுமாய்
பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்

வாழ்த்துக்களுடன்.... 

Tuesday, October 27, 2015

மழையைத் தொடரும் தூவானம் ( 2 )

ஏறக்குறைய இருபது வருடங்களுக்கு முன்பு
நடந்த ஒரு சிறு சம்பவம்

அப்போது அரசுத் துறையில் பொறியியல் துறையில்
பணியாற்றிக் கொண்டிருந்தேன்.

என்னிடம் அப்போது பணியாற்றிக் கொண்டிருந்த
அடிப்படை ஊழியர் தன் மகனுக்குத் தீவீரமாக
பெண்பார்த்துக் கொண்டிருந்தார்.

பையன் பார்க்கக்  கொஞ்சம் லெட்சணமாகவும்
இருப்பான். தனியாக ஒரு மோட்டார் மெக்கானிக்
ஷாப் வைத்தும் நடத்திக் கொண்டிருந்தான்
எனவே நிறைய  இடத்தில் இருந்து சம்பந்தம் பேச
வந்தார்கள்.

அவர்கள்  கொஞ்சம் சீர் செனத்தி ஜாஸ்தி
கொடுக்கும் /வாங்கும் இனமாக இருந்ததால்
இவர்கள் எதிபார்க்கும் அளவு கிடைக்காததால்
நிறையச் சம்பந்தம் தட்டிப் போய்க் கொண்டிருந்தது

அந்த வகையில் ஒரு நாள் லீவு எடுத்து வெளியூரில்
பெண் பார்க்கப் போய் வந்திருந்தார்.
எப்போதும் எல்லோரும் என்னிடம் தங்கள் தனிப்பட்ட
விஷயங்களை மனம் திறந்து பேசுவார்கள்
நானும் மனம் திறந்து எனக்குத் தோன்றும் கருத்தை
அக்கறையோடுச் சொல்வேன்

அந்த வகையில் வெளியூர் பெண் பார்க்கச் சென்ற 
விஷயம் குறித்து அவரிடம் விசாரித்தேன்

அவரும் " ,பொண்ணு அழகா இருக்கு
பையனுக்குப் பிடிச்சிருக்கு.பொண்ணுக்கும்
பையனைப் பிடிச்சிருக்கு.சீர் செனத்தியெல்லாம்
நாம் எதிர்பார்க்கிற அளவு செய்வார்கள்
ஆனாலும்.. " என இழுத்தார்

" என்ன ஆனால்.. இது இரண்டும் தானே
நீங்க எதிர்பார்த்தது .முடித்துவிடவேண்டியதுதானே"
என்றேன்.

" என் மனைவியும் அதைத்தான் சொல்கிறாள்
ஆனால் எனக்குத்தான் ஒரு சிறு குறை
அவர்கள் வசதி வாய்ப்பாக இருந்தாலும்
நகைப் பணம் சேர்த்திருந்தாலும் வாடகை வீட்டில்
இருப்பது எனக்கு ஒப்பவில்லை
சொந்த வீடு இல்லாத இடத்தில் எப்படிச்
சம்பந்தம் செய்வது " என்றார்.

எனக்குத் திக்கென்றது.

நானும் அப்போது வாடகை வீட்டில் இருந்தேன்
 வீடு கட்டிக் கொள்ளும் அளவு இடமும் 
பணமும் இருந்ததாலும்
பொறியியல் துறையிலேயே இருந்ததாலும்
எப்போது நினைத்தாலும்  நம்மால் கட்டிக் கொள்ள
முடியுமே என்கிற அலட்சிய மனோபாவத்தில்
இருந்தேன்

இவர் இப்படிச் சொன்னது சட்டென என்னை
உலுக்கிப் போனது

அப்போது என் இரண்டு பெண் குழந்தைகளும்
உயர் நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்கள்

நாளை நாமும் ஒரு நல்ல சம்பந்தம் பேச
இருக்கையில் சம்பந்திகளுக்கும் இப்படி ஒரு
எண்ணம் வந்தால் என்ன செய்வது ?

குழந்தைகள் கல்லூரிப் படிப்புக் கென
தயாராகையில் நாம் வீடு கட்டிக் கொண்டிருந்தால்
சரியாக வருமா என்றெல்லாம் யோசனை
மட மட வென எகிறியது

சரி ஆண்டவன் அசரீரி போல இவர் மூலம்
நமக்கு ஏதோ குறி காட்டுகிறார். இனியும்
அலட்சியம் காட்டக் கூடாது என அடுத்த
முஹூர்த்த நாளிலேயே தச்சு செய்து
ஆறு மாதத்தில் வீடு கட்டி முடித்து புதிய
வீட்டில் குடியேறி விட்டேன்

குழந்தைகள் புதிய வீட்டிலிருந்தே பொறியியல்
பட்டப் படிப்பும் முடித்து வேலைக்கும் சேர்ந்து
திருமணமாகியும் செட்டிலாகிவிட்டார்கள்

இப்போது நினைத்தால் கூட அந்த சமயத்தில்
அசரீரி போல அந்த வாக்கை எடுத்துக் கொள்ளாமல்
அசட்டையாக இருந்திருந்தால் நிச்சயமாக
வீடு கட்டி இருப்பேனா என்று சந்தேகமாகத்தான்
இருக்கிறது

அது சரி. நீங்கள் வீடு கட்டிய கதைக்கும்
இப்போது மழையைத் தொடரும்  தூவானம் என்பதற்கும்
அந்தப் பீர்பால் கதைக்கும் என்ன சம்பந்தம்
என்கிறீர்களா ?

அடுத்த பதிவில் அவசியம் சொல்கிறேன்

( தொடரும் )

மழையைத் தொடரும் தூவானம்

 ஒருமுறை பீர்பாலும் மன்னரும் நடந்து
சாலை வழி மாறுவேடத்தில் போய்க்
கொண்டிருக்கையில் ஒருவன் இறைவனைக்
குறித்து வேண்டிக் கொண்டிருக்கிறான்

அப்போது மன்னர் பீர்பாலை நோக்கி
 " என்ன பீர்பால்இவன் இங்கு அமர்ந்து
வேண்டிக் கொண்டிருப்பது
அந்த ஆண்டவனுக்கு எப்படிச் சேரும் ?
ஏன் இப்படி காலத்தை விரயம்
செய்து கொண்டிருக்கிறான் ?" என்கிறார்

அதற்குப் பீர்பால்  "இவன் உண்மையாக
உறுதியாக வேண்டிக் கொண்டால் நிச்சயம்
அது ஆண்டவனுக்குச் சேரும் மன்னா ?"
என்கிறார்

மன்னருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை
" இதை நிரூபிக்க முடியுமா ?" எனச் சவால்
விடுகிறார். பீர்பாலும் அந்தச் சவாலை
ஏற்றுக் கொள்கிறார்

பின் பீர்பால் ஒரு கிராமத்தானை ஏற்பாடு செய்து
" நான் மன்னரைக் காணவேண்டும் " எனத்
திரும்பத் திரும்பச் சப்தமாகத் தினமும்
சாலை ஒரம் அமர்ந்து சொல்லச்
சொல்கிறார்.

முதலில் இதைப் பார்த்த ஒற்றன் எவனோ
கிறுக்கன் உளறுகிறான் எனக் 
கண்டு கொள்ளாமல் சென்று விடுகிறான்

நாளும் பொழுதும் அதே இடத்தில்
அதே வார்த்தையைச் சொல்லிக்
கொண்டிருப்பதைக் கண்ட ஒற்றன் இதைத் 
தலைமை ஒற்றனிடம் சொல்கிறான்

முதலில் இதை வெறும் தகவலாக மட்டும் கொண்ட
ஒற்றர் தலைவன், இது தொடர்ந்து
தொடர்வதைக் கண்டு எதற்கும் சேனாதிபதியிடம்
சொல்லிவிடுவோம் எனச் சொல்லி விடுகிறான்

இப்படியே தகவல் மந்திரி கடந்து மன்னரிடம்
சென்றுவிடுகிறது.முதலில் தகவலாக
அதை எடுத்துக்கொண்ட மன்னர் தொடர்ந்து
 அவன் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறான்
எனத் தெரிய ஒரு நாள் ஏன் தான் நம்மைப் பார்க்க
வேண்டுமென்பதில் இவ்வளவு உறுதியாய்
இருக்கிறான் எனத் தெரிந்து கொள்ளும்
ஆவலில் அவன் இருப்பிடம் தேடி வருகிறார்

அப்போதும் அதையே சொல்லிக் கொண்டிருந்த
அந்தகிராமத்தானை நோக்கி "
இதோ மன்னனே வந்து விட்டேன்.
என்ன விஷயம் சொல் " என்கிறார்

கிராமத்தானோ "மன்னா மன்னிக்க வேண்டும்
பீர்பால்தான் தினமும் இப்படி இங்கே அமர்ந்து
இப்படிச் சப்தமாய்ச்  சொல்லிக் கொண்டிரு
மன்னர் நிச்சயம் வருவார். அப்படி வருகிற நாளில்
நான் உனக்கு நூறு பொற்காசுகள் தருவேன் என்றார்
தங்கள் கருணையால் எனக்கு இன்று நூறு
பொற்காசுகள் கிடைக்கப் போகிறது" என்கிறான்

மன்னருக்கு  பீர்பால் ஏன் இப்படி ஏற்பாடு செய்தார்
என்கிற விஷயம் விளங்கவில்லை

உடன் பீர்பாலை வரவழைத்து காரணம் கேட்க
பீர்பால் 'மன்னா தாங்கள் அன்றொரு நாள்
தொடர்ந்து வேண்டிக் கொண்டிருப்பவன் குரல்
எப்படி ஆண்டவனுக்கும் கேட்கும் எனக்
கேட்டதற்கு இதுதான் பதில்

ஒரு சாதாரண கிராமத்தானின் புலம்பல்
அவன் சந்திக்கவே முடியாத மன்னருக்குக்
கேட்கும்பொழுது,ஒரு பக்தனின் குரல் எப்படி
அந்த எல்லாம் வல்லவனுக்குக் கேட்காமல் இருக்கும்"
என கேட்க மன்னருக்கும் இது சாத்தியம் தான்
புரிய, கிராமத்தானுக்கு தானே நூறு  பொற்காசுகள்
கொடுத்து பீர்பாலை மனதாரப் பாராட்டுகிறார்

அது சரி இந்தக் கதை இப்போது எதற்கு
என்கிறீர்களா ? அதை அடுத்துச் சொல்கிறேன்

Monday, October 26, 2015

புதுகைப் பதிவர் சந்திப்பு ( 12 )

நான் சிறுவனாக இருக்கையில்
எல்லா விஷயங்களிலும் ஒற்றுமையாக
இருந்தவர்கள் எல்லாம்  சிவாஜி
எம்.ஜி.ஆர் விஷயத்தில் இரண்டாகப்
பிரிந்து விடுவோம்

யாராக இருந்தாலும் இரண்டில் யாராவது
ஒருவர் பக்கம் நின்றாகவேண்டும்

இரண்டு பக்கமும் என்பதற்கெல்லாம்
அப்போது வாய்ப்பே கிடையாது

எப்படித்தான் அருமையாக சண்டைப்
போட்டாலும்  எம்.ஜி ஆர்அவர்களுடன்
ஒப்பிட்டுப் பேசுதல் என்பது கிடையாது
அவர் லெவலே வேறு

ஆனால் புதிதாக நடிக்க வந்தவர்கள்
யாராக இருந்தாலும் மிகச் சிறப்பாக நடித்தால்
அவரை சிவாஜி அவர்களுடன் ஒப்பீடு
செய்வோம்.அனேகமாக அது
சிவாஜிக்கு முக்கால்  வருவார்,அரை வருவார்
கால் தூசி பெறமாட்டார் என்பதைப்
போலத்தான் எப்போதும் இருக்கும்

எனக்குத் தெரிய அந்த லிஸ்டில் மேஜர்
சவுந்திரராஜன்,ஏ.வி எம் ராஜன் எல்லாம்
 வந்து போனதுண்டு

ஆனால் யாரும் சிவாஜி அவர்களுக்கு
இணையாக வந்ததில்லை

அதைப் போலவே இனி பதிவர் சந்திப்பு
என்றால் புதுகைப் பதிவர் சந்திப்புத்தான்
நிச்சயம் ஒரு அளவுகோலாக இருக்கும்
புதுகைப் பதிவர் சந்திப்புப் போல் வராது
அல்லது புதுகைச் சந்திப்பைப்போலச்
சிறந்தது,அல்லது புதுகைப் பதிவர் சந்திப்பை
விட மிகச் சிறப்பாக இருந்தது
என்பதைப் போலத்தான் நிச்சயம் இருக்கும்

அந்த அளவுக்கு மிகச் சிறப்பாக பதிவர்
சந்திப்பை நடத்தி முடித்த அனைவருக்கும்
அதற்கு முழுமையாக அனைத்து விதத்திலும்
ஒத்துழைப்புக் கொடுத்த அனைவருக்கும்
மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்
கொள்வதோடு...

இந்த ஒற்றுமையும்,அமைப்பும் பதிவர்
சந்திப்பு நடத்துவதற்காகக்த்தான்
என்பதற்காக மட்டும் இல்லாது,

பதிவர்களுக்குள் எப்போதுமே ஒரு
இணப்புப் பாலமாக இருக்கும்படியான
ஒரு அமைப்பாக மாற்றினால்...

கூட்டு முயற்சியில் பொதுவாக ஒரு
வலைத்தளம்(தமிழ்மணம் போல் )
உருவாக்கும்படியான முயற்சியில் ஈடுபட்டால்...

புத்தகமாக தமது படைப்புகளை வெளிக்
கொணர விரும்புவோருக்கு  உதவும் ஒரு நல்ல
அமைப்பாக மாறினால்...

தொழில் நுட்ப ரீதியாக ஆலோசனை
வேண்டுவோருக்கு எப்போது வேண்டுமானாலும்
உதவும் ஓர் அமைப்பாக மாறினால்..

நல்லதோர் வீணையை  நலங்கெடாது
அதற்குரிய உயரிய பீடத்தில் வைத்தது போலாகும்
எனக் கூறி எனது இந்தத் தொடர்பதிவை
மகிழ்வுடன் நிறைவு செய்கிறேன்

வாழ்த்துக்களுடன்....

























Sunday, October 25, 2015

புதுகைப் பதிவர் சந்திப்பு ( 11 )

ஓரளவு பழக்கமுள்ளவர்கள் வீட்டு
விஷேசம் என்றால் நிகழ்வு நடக்கிற
வேளையில் செல்வதும் 
மிகவும் நெருங்கிய
உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டு விஷேசம்
என்றால் முதல் நாளே போய்ச் 
சிறப்புச் செய்வதும் எல்லோரும் செய்வதுதானே

அந்த வகையில் எப்போது எங்கு பதிவர்
சந்திப்பு நடந்தாலும் முதல் நாளே சென்று விடுவது
எனது பழக்கம்.சென்னையில் நடந்த
இரண்டு சந்திப்பு மற்றும் புதுகைச் சந்திப்புத்
திருவிழாவிற்குஅப்படித்தான் முதல் நாளே
 சென்றிருந்தேன்

தூரம் ஒரு காரணம் என்றாலும் கூட
முக்கிய காரணம் முதல் நாள் சென்றால்தான்
சிலரையாவது மிகக் குறிப்பாக நிகழ்வு
நடக்கிற ஊரில் இருக்கிற முக்கியப்
பதிவர்களையாவது சிறிது நேரமாவது
முகம் பார்த்துப் பேச முடியும்

மறு நாள் நிகழ்வுகள் துவங்கிவிட்டால்
நாம் அதில்தான் கவனம் செலுத்த முடியுமே
தவிர இயல்பாய் மனம் விட்டுப் பேச முடியாது

அப்படிப் பேச முயன்றால் நிகழ்வுக்கும்
அதில் கவனம் செலுத்திக் கொண்டிருப்பவர்களுக்கும்
நிச்சயம் இடைஞ்சலாகத்தான் இருக்கும்

அந்த வகையில் நான் பதிவர் சந்திப்புக்கு
மதுரையில் இருந்து மாலை மூன்று மணியளவில்
புறப்பட்டு மிகச் சரியாக ஆறு மணிக்கெல்லாம்
புதுகை வந்து அடைந்துவிட்டேன்

ஏற்கெனவே பதிவில் வரும் வழியினைக் குறித்து
மிகத் தெளிவாக குறிப்பிட்டிருந்ததால்
விழா மண்டபத்தை அடைவது மிக எளிதாக இருந்தது

இது போன்ற விழாக்களுக்கெல்லாம்
மேடை அமைப்பை மறு நாள் நிகழ்வு நடக்க
இருக்கும் ஒரு மணி நேரத்துக்கு முன்பு வரை
செய்து கொண்டிருப்பதைத்தான் பெரும்பாலும்
பார்த்திருப்போம்

புதுகைச் சந்திப்பில்தான் மிக
 ஆச்சரியப்படும்படியாக
நான் சென்ற பொழுதிலேயே மேடை அலங்காரம்
முடித்து ஒலி வாங்கியைபொருத்த
முயன்று கொண்டிருந்தது எனக்கு
ஆச்சரியமளிப்பதாகத்தான் இருந்தது





வாசலிலேயே அடையாளம் கண்டு மிக மிக
உற்சாகமாக கீதா மேடம் உள்ளிட்ட
புதுகைப் பதிவர்கள் வரவேற்றதும்
அந்த சமயத்தில் வந்திருந்த சக பதிவர்களுடன்
அமர்ந்து பேசிக் கொண்டிருந்தது
ஒரு இனிய அனுபவமாக இருந்தது
அது குறித்த புகைப் படங்களைஇங்கு
பகிர்வு செய்வதில் மிக்க
மகிழ்ச்சி கொள்கிறேன்









அப்போது அந்த மண்டபத்தின் மூலையில்
புதுகைப் பதிவர்கள் டுவல்த் ஹவர் மீட்டிங்
எனச் சொல்லத் தக்க கூட்டத்தைக் கூட்டி
நடந்தது இனி நடக்க இருப்பது என்பது
குறித்து அமைதியாக கலந்துரையாடிக்
கொண்டிருந்தார்கள்.அதுதான்  உச்சக்கட்ட
கலந்துரையாடல் ,இனியெல்லாம்
செயல்பாடுகளே  எனப் புரிந்து கொண்டேன்





எதிர்பாராத விதமாகவெளியே
பெய்து கொண்டிருந்த மழை சூழலை
குளிர்வித்து இரம்மியமாக்கி கொண்டிருக்க

வெளியே மழை பெய்த்து கொண்டிருக்கிறது
எனவே  இங்குள்ள பதிவர்கள் அனைவருக்கும்
இரவு சிற்றுண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது
என எப்போதும் சிரித்த முகத்துடனிருந்த
உணவுக் குழுத்  தலைவி திருமிகு  ஜெயலெட்சுமி
சகோதரி அவர்கள் சொல்ல
மெல்ல மாடியேறி அந்த அதி ருசியான
கிச்சடியையும் சப்பாத்தி குருமாவையும்
ஒரு பிடிபிடித்தோம்





தொடரும்

Friday, October 23, 2015

புதுகைப் பதிவர் திருவிழா ( 10 ) ( ஆ )

நான் தொடர்ந்து பதிவர் சந்திப்புக் குறித்து  
எழுதுவதற்கு பின்னூட்டமிடுவது சிலராக
இருந்த போதிலும் பார்வையாளர்கள் அதிகம்
வந்து போவது பதிவர் சந்திப்புக் குறித்து
அறிந்து கொள்வதில் அனேகருக்கு
( கலந்து கொண்டவர்களுக்கும்  அதை விட
கலந்து கொள்ளாதவர்க்கும் ) அதிக ஆர்வம்
இருக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது

கடந்த பதிவைக் கண்ட பிரபலமான பதிவர்கள்
ஐவர் என்  முக நூல் உள் டப்பிக்கு வந்து
அடுத்த பதிவு கடைசிப் பதிவு எனத் தெரிகிறது

பதிவின் படி இன்னும் நீங்கள் புதுக் கோட்டைக்கே
வந்து சேரவில்லை .விழா குறித்தும் மிகச் சரியான
விமர்சனத்தை வைக்கவில்லை.அதற்குள் தொடரை
முடித்தால் எப்படி என பதிவு செய்திருந்தனர்

என்னைப் பொருத்தவரை ,வெப்பம் இல்லாமலோ
அல்லது கழிவு இல்லாமலோ ஒரு புதுப் பொருளை
உண்டாக்குதல் என்பது கடினம்.

 புதுப் பொருள் உருவாக்குகையில் உண்டாகும்
வெப்பம் மற்றும்  கழிவின் சதவீதம் அல்லது
அவைகள் உருவாக்கும் தாக்கத்தின்
அளவு குறித்தேபுதிய பொருள்களைப் பற்றி
அறிஞர்கள் மதிப்பீடுசெய்வர்

புது பொருள்கள் உண்டாக்குதலுக்கு மட்டுமல்ல
ஒரு பெரும் நிகழ்வை நடத்துவதற்கும் இந்த விதிகள்
மிகச் சரியாகப் பொருந்தும்

பாற்கடல் கடைந்து சாகாமையைத் தரும்
அமிர்தம் பெறுவதாயினும்   ஆலகால விஷத்தைப்
புறக்கணித்து அமிர்தம் பெற வாய்ப்பேல்லை.
அதை ஆண்டவர்களே முன்னின்று செய்வதாயினும்...

அதைப் போலவே இத்தனை மாபெரும் சந்திப்பை
நிகழ்த்துகையில்  ஒரு சிறு  குறை குற்றம் ஏற்படாது
நடத்த நிச்சயம் வாய்ப்பே இல்லை.

அந்த வகையில் இந்தச் சந்திப்பிலும் மிகச் சிறிய
குற்றம் குறைகள் இருந்ததென்னவோ உண்மை

காலை நிகழ்வுகள் அனைத்தும் கல்வித் துறை
சம்பத்தப்பட்டவர்களாகவே இருந்ததால்
பதிவர் சந்திப்புஎன்பதை விட
கல்வியாளர்கள் சந்திப்பு
என்பதைப் போலவே இருந்தது.

ஆனால் மதிய நிகழ்வில் எஸ் ரா அவர்களின்
சொற்பொழிவு லேசாக இருந்த அந்த எண்ணத்தை
அடியோடு புரட்டிப் போட்டது

பதிவர் அறிமுகம் செய்ய விடுதல் இல்லாமல் அறிமுகம்
செய்ய இரண்டாம் முறை அழைக்கையில் ஏற்கெனவே
அழைத்தவர்களை அழைத்தது கொஞ்சம்
நிர்வாகத்தில் ஏற்பட்ட  சிறு குழப்பத்தைக் காட்டியது.

ஆயினும் உடன் புரிந்து அதைச் சமாளித்த
முத்து நிலவன் ஐயா அவர்களின் செயல் திறனால்
பலரால் அது கண்டுபிடிக்க முடியாமலே போனது

நினைவுப் பரிசு வழங்கியதில் இருவருக்கு
இல்லாமல் போனது

உடன்  அந்த இருவரிடம் தனிப்பட்ட முறையில்
விடுதலுக்கு வருத்தம் தெரிவித்ததோடு அல்லாமல்
அதை பெருந்தனமையுடன் அதைத் தவறு என்றும்
அவர்களுக்கு அது அனுப்பிவைக்கப்படும் என
பதிவின் மூலமே தெரிவித்தது அந்தக் குறையையும்
சரி செய்தது போலாகி விட்டது

ஆக மொத்தத்தில் இந்த பதிவர் சந்திப்பில்
மேற்சொன்ன சிறுச் சிறு  குறைகளும் கடலில்
கரைத்த பெருங்காயம் போலத்தான் எனவும்

இந்த சந்திப்பு ஒரு முழுமையான நிறைவான
பதிவர் சந்திப்பு என்பதை எனது எண்ணமாக
முடிவாகப் பதிவு செய்வதில்
மிக்க மகிழ்வு கொள்கிறேன்

( தொடரும் )

Wednesday, October 21, 2015

பதிவர் சந்திப்பு, ( 9 )

"நான் விழிக்கும் முன்பே
கதிரவன் விழித்துத் தன் ஒளிக்கரங்களால்
உலகை அணைக்கத் துவங்கியிருந்தான்

தோட்டத்துப் பூக்களும்
மலர்ந்து சிரித்து மணம் பரப்பி
சூழலை ரம்மியமாக்கிக்  கொண்டிருந்தன

சின்னஞ் சிறு பறவைகளும்
கூடுவிட்டுக் வெளிக் கிளம்பி
சந்தோஷக் குரலெழுப்பித் திரிந்தன

இவையெல்லாம்
அவைகளில் இயல்பு
இயற்கையின் நியதி என
எண்ணித் திரிந்தவரை
எனக்கும் அவைகளுக்குமான உறவு
அன்னியமாகத்தான் இருந்தது

கதிரவனின் அதிகாலை விழிப்புக் கூட
என் தூக்கம் கலைத்து
என்னை விழிக்கச் செய்யத்தான்
என புரிந்தது முதல்

மலர்கள் சிரித்து மகிழ்ந்து
மணம் பரப்புதல் கூட
என்னைக் கவரத்தான்
என அறிந்தது முதல்

பறவைகளின் சந்தோஷப் பாடலும்
உற்சாகப் பவனியும் கூட
எனக்குள் அதை விதைக்கத்தான் என
உணர்ந்து கொண்டது முதல்

"உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக " எனச் சொன்ன
கவிஞனின் உள்ளத்துணர்வு மட்டுமல்ல

விலகி நின்று ரசிப்பதை விட
இயைந்து போவதிலும
இணைத்துக் கொள்வதிலும் உள்ள
உண்மையான சுகம்
மெல்ல மெல்ல புரியத்தான் செய்கிறது "

                      ------------------------------------
சில மாதங்களுக்கு முன்பு
இணைத்துக் கொள்வதில் உள்ள சுகம்
என  இப்படி ஒரு  கவிதை எழுதி இருந்தேன்

அதன் காரணம் , நான் சார்ந்திருக்கிற
இணைந்திருக்கிற எந்த அமைப்புக்குள்ளும்
முற்றிலுமாக என்னைச் செயல் அளவிலும்
மனத்தளவிலும் முழுமையாக
ஈடுபடுத்திக் கொள்வேன்

அப்படித்தான் பதிவர் சந்திப்பு எனத்
தகவல் வந்ததும்,நானும் ஒரு பதிவர் இது
எனக்கான சந்திப்பு என மனத்தளவில் ஒரு
உத்வேகம் கொண்டதால்தான் என்னால்
சந்திப்புக்கு முன்பு சந்திப்புக் குறித்த 16 பதிவுகள்
தொடர்ந்து எழுத முடிந்தது

சந்திப்புக் குறித்து கருத்துக்களும் ஆலோசனைகளும்
பதிவர் குழுவால் வரவேற்கப் பட்டபோது

1 )ஒத்த உடை  (பதிவர் குழுவிற்கு )

2 )புரவலர் மற்றும் நன்கொடையாளர்கள்
    எனப் பிரித்து நிதி திரட்ட முயற்சிக்க
    ஆலோசனை

என நடைமுறைச் சாத்தியப்பட்ட அவசியமான
ஆலோசனைகளை உரிமையுடன் சொல்ல முடிந்தது

"உங்கள் பாணியில் பதிவர் சந்திப்புக் குறித்த
விமர்சனப் பதிவுகளை  எழுதுங்கள் "
என மரியாதைக்குரிய முத்து நிலவன் ஐயா
உரிமையுடன்  எனக்குக் கோரிக்கை வைக்கவும்
அதன் தொடர்ச்சியாய் நான்  இப்படித் தொடர்ந்து
எழுதவும் முடிகிறது

புதுகையில் இல்லாமல் ,செயல்படுத்துகிற
நிர்வாகக் குழுவிலும் இல்லாமல் இது
எனக்கான சந்திப்புஎன நான் உரிமை எடுத்து
எழுதுவதைப்போலக் களத்தில் இருந்துப்
பணியாற்றியவர்கள் எழுதினார்களேயானால்
நிச்சயம் இதுபோல் ஆயிரம் எழுத முடியும்

அவைகள்  நம்  பதிவர் ஒற்றுமையை

பயனுள்ள அடுத்தத் தளத்திற்குக் கொண்டு
செல்லவும்  நிச்சயம்  உதவும்

அது அப்படி இருக்க ...

நான் இப்படி  தொடர்ந்து விரிவாகப்  பதிவர்
சந்திப்புக் குறித்து எழுதக் காரணம் இல்லாமலும் இல்லை

( தொடரும் )

Tuesday, October 20, 2015

புதுகைப் பதிவர் சந்திப்பு ( 8 )

கோவில் திருவிழாக்களில்  கூட்டாகப்
பொங்கல் வைக்கையில் நம் அடுப்புச்
சரியாக எரியாமல் பால் பொங்கத்
தாமதமானால்உடன் அடுத்து அடுத்து
இருக்கிறப் பொங்கல்
பானைகளைப் பார்க்கிறமாதிரி...

மரபுக் கவிதைகள் 51 ம் மிகச் சிறப்பாக இருக்க
அதில் மிகச் சிறந்ததை தேர்ந்தெடுக்க
சிரமப்  பட்ட வேளையில் கொஞ்சம்
ஆறுதலுக்காக மற்ற போட்டிப் பதிவுகளைப்
படித்துப் பார்க்கலாம் எனப் பார்த்தால்
உண்மையில் அரண்டுதான் போனேன்

அந்த ஏழு நாட்களில் இறுதிக்காட்சியில்
பாக்கியராஜ் அவர்கள் மாடி ஏறும்  முன் கீழே
ராஜேஷ் அழைக்கட்டும் என அமர்ந்திருப்பார்

அப்போது சும்மா இராமல் முன் மேஜையில்
இருந்த பொம்மை ஒன்றைக்  கையிலெடுப்பார்
பொம்மையின் முன்புறம் ரொம்பச் செக்ஸியாக
இருக்க முகம் சுழித்து பொம்மையைத் திருப்புவார்
பின் புறம் அதைவிட செக்ஸியாக இருக்கும்
அரண்டு போய் பொம்மையைச் சட்டென
இருந்த இடத்தில் வைத்துவிடுவார்

அப்போது தியேட்டரில் எழும்
நமட்டுச் சிர்ப்பொலிஅரங்கம் அதிரும்படி இருக்கும்

அதைப் போலத்தான் நம் மரபுக் கவிதை
போட்டிப் பதிவுகளை விட மற்றபோட்டிப்
படைப்புகள் எளிதாகத் தேர்ந்தெடுக்கும்படி
இருக்கும் எனப் போன எனக்கு படக் காட்சியில்
பாக்கியராஜ் அவர்களுக்கு ஏற்பட்ட
அதிர்ச்சிதான் ஏற்பட்டது

காரணம் மரபுக் கவிதைகளை விட
அந்தப் போட்டியில் கலந்து கொண்டவர்களின்
 படைப்புகள் எல்லாம் மிக  மிக  ஆழமாகச்
 சிந்தித்துப் படைக்கப்பட்ட
அற்புதமானப்    படைப்புகளாக இருந்தன.

சரி நாம் அடுத்தவர் பகுதிக்குள் மூக்கை
 நுழைத்துக்  காலத்தை விரயமாக்காமல்
நம் பணியைப் பார்ப்போம் என கவிதைகளைப்
படிக்கத் துவங்கினேன்

முதலில்  51  கவிதைகளையும் முழுவதுமாகப்
படித்து முடித்து விட்டு ,இரண்டாவது தடவையாக
விழாக் குழுவினர் கொடுத்திருந்த விதிகளின் படி
முதல் 25  கவிதைகளைத் தேர்ந்தெடுத்து...

பின் 25 லிருந்து 10 ஐத் தேர்ந்தெடுத்து
பின்  ஐந்து அதில் மூன்றைத் தேர்ந்தெடுப்பதற்குள்
மூளை குழம்பியதோ இல்லையோ
மூலம் தொந்தரவு செய்யத் துவங்கிவிட்டது

அதனால் தொடர்ந்து உட்கார்ந்து வேலை
செய்ய முடியாததால் முடிவை அனுப்பி
வைப்பதற்கான தேதியும் நெருங்கி விட்டதால்
தொகையைச் சரியாக எழுதி
வகையைச் சொதப்பிய கதையாய்
ஒருவாறு என் முடிவை அனுப்பி இருந்தேன்

மறு நொடியே முத்து நிலவன் ஐயா அவர்கள்
எழுத்தில் கொஞ்சம் காரம் கூட்டி ,தாங்கள்
கடமையை மிகச் சரியாகச் செய்வீர்கள் என
எதிர்பார்க்கிறேன்,இப்போது அனுப்பியது
சரியில்லை என உடன் ஒரு மின்னஞ்சல்
அனுப்பினார்.

இந்தக் கண்டிப்பு எனக்குப் பிடித்திருந்தது
உடன் அவர்கள் கோரிய படிவத்தில் கோரியபடி
என் முடிவுகளை அனுப்பி வைத்துவிட்டுத்தான்
படுத்தேன்

இதைச் சொல்வதற்கான காரணம்,சந்திப்புக்கான
பின்னூட்டப் பதிவில் செலவை குறைக்க
ஆலோசனை சொல்லுகிறபோது
நடுவர்களுக்கான நினைவுப் பரிசினைத்
தவிர்த்திருக்கலாம் என எழுதி இருந்தவர்களுக்கு
நடுவர்களின் சிரமமும் புரியவேண்டும்
என்பதற்காகவே இதனை எழுதுகிறேன்

இதனைப் புரிந்து கொண்டு  நடுவர்களைக்
கௌரவித்த   விழாக் குழுவினருக்கு
நன்றியினைத்  தெரிவிப்பதற்காகவும்
இதனை எழுதுகிறேன்

( தொடரும் )

புதுகைப்பதிவர் சந்திப்பு ( 7 )

எனது கல்லூரி நாட்களில் ஒரு கதையில்
வந்திருந்த "இன்ப அதிர்ச்சி "
என்கிற வார்த்தையைக்  கிண்டலடித்து
ஒரு கூட்டத்தில் கலாய்த்திருக்கிறேன்

இன்பம் என்றால் நிச்சயம் அதிர்ச்சி தருவதாய்
இருக்காது. அதிர்ச்சி என்றால் அது நிச்சயம்
இன்பம் தருவதாக இருக்காது என்கிற ரீதியில்
உதாரணத்துடன் பேசிப் பாராட்டுப்
பெற்றிருக்கிறேன்

உண்மையில் இன்ப அதிர்ச்சி என்பது மிகச் சரியான
வார்த்தைதான் என்று பதிவர் தினத்திற்கு சில
தினங்களுக்கு முன்பு சந்திப்பின் ஒருங்கிணைப்பாளர்
என்கிற முறையில் ஐயா முத்து நிலவன்
அவர்களிடம் இருந்து வந்த மின் அஞ்சலைப்
பார்த்துத்தான் என்று ஒரு முடிவுக்கு வந்தேன்

சந்திப்பு நிகழ்வினை ஒட்டி பல்வேறு போட்டிகளுக்கு
ஏற்பாடு செய்திருப்பதாகவும் அதில் மரபுக்
கவிதைக்கென ஒரு போட்டி வைத்திருப்பதுக் குறித்தும்
எழுதி  அதில் நடுவராக மூவரைத்
தேர்ந்தெடுத்திருப்பதாகவும் அதில் நானும் ஒருவன்
என்கிற செய்திதான் அந்த  இன்ப அதிர்ச்சி தந்த செய்தி

காரணம் கவிதையில் ஜாம்பவான்கள் பதிவுலகில்
பலர் இருக்க என்னை நடுவராகத் தேர்ந்தெடுத்தது
மிக்க மகிழ்ச்சி தருவதாக இருந்தாலும்
அதனை மிகச் சரியாகச் செய்து முடிக்க முடியுமா
என்பதை நினைக்க அது அதிர்ச்சித்  தருவதாகவும்
இருந்தது. அதற்கு வலிமையான காரணம்
இல்லாமல் இல்லை

ஏனெனில் வசன கவிதை என்றால் யாருக்கும்
எவ்வித அச்ச உணர்வு இல்லாமல் எழுதிவிடுவோம்
என்கிற தன்னம்பிக்கைத் தானாகவே வந்து விடுகிறது

ஆனால் மரபுக் கவிதை எனில் அப்படி இல்லை
இலக்கண அறிவு மற்றும் பயிற்சி இல்லாதவர்கள்
அதற்கு முயல்வதில்லை.முயல்பவர்கள் நிச்சயம்
ஏற்கெனவே எழுதி அனுபவம் பெற்றவர்களாகத்தான்
இருப்பார்கள்

இன்னும் சரியாகச் சொன்னால் மிக நேர்த்தியாக
நித்தமே ஆடை அலங்க்காரம் செய்து கொள்கிறவர்கள்
அழகுப் போட்டியெனில் எப்படியெல்லாம்
இன்னும் மிகச் சிறப்பாக அலங்காரம்
செய்து கொள்வார்கள் என விளக்கத் தேவையில்லை

அதைப் போலவே மரபுக் கவிதை எழுதுவதில்
தேர்ச்சிப் பெற்றவர்கள் இதுபோல் போட்டிக்கு
எழுதுகிறார்கள் என்றால் நிச்சயம் நான் மேற்குறித்த
உதாரணத்தில் சொன்னது போல
நன்றாக அலங்காரம் செய்து கொள்கிறவர்கள்
அழகிப் போட்டிக்குத் தயாராவதைப் போல
நிச்சயம் ஒரு மெனக்கெடல் இருக்கும்

அது நிச்சயம் நடுவர்களுக்கு ஒரு சவாலாகத் தான்
இருக்கும் என்கிற முடிவுக்கு நான் வந்தேன்

நிஜமாக அது அப்படித்தான் இருந்தது

( தொடரும் )

Monday, October 19, 2015

புதுகைப் பதிவர் சந்திப்பு ( 6 )

இந்துக்களின்  சம்பிரதாயப்படி ஒரு விஷயத்திற்கு
ஆண்டவனிடம் வேண்டிக் கொள்பவர்
முகச் சவரம் செய்வதைத் தவிர்த்து
தாடி மீசை வளர்த்துக் கொண்டிருப்பார்

திரு விழா முதலான நாட்களில்
அக்னி சட்டி எடுப்போர் முதலானோர்கள்
கையில் காப்புக் கட்டிக் கொள்வார்கள்

அது எல்லாம் மனதளவில் அவர்
எப்போதும் அந்த வேண்டுதலை
நேர்த்திக் கடனை மறக்காது நினைத்துக் கொண்டே
இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்

அந்த வகையில் பதிவர் சந்திப்புத் தேதியும்
இடமும் முடிவானதும்  தொடர்ந்து பதிவர்களை
பதிவிடச் சொல்லி பதிவர் சந்திப்பை நடத்துவோர்
கேட்டுக் கொள்வதும் ,

பதிவர்களும் கவிதையாக கட்டுரையாக
வித்தியாசம் வித்தியாசமாகப் பதிவிடுவதும்,
சென்னைப் பதிவர் சந்திப்பு மற்றும்
மதுரைச் சந்திப்பு நடைபெறுகையிலும்
நடைபெற்றதுதான்

ஆனாலும் கூட புதுகையில் இருந்து
பதிவர்கள் பதிவிடுங்கள் என வேண்டுகோள்
வந்தவுடன்,மட மட வென நித்தமும்
பதிவர் சந்திப்புக்கு இத்தனைப் பதிவுகள்
வெளியானது இது தான் முதல் முறை

அப்படி மொத்தம் வந்த பதிவர் சந்திப்பு
பதிவுகள் 222 என்பது ஒரு பிரமிப்பூட்டும்
நிகழ்வுதான்

அத்தனைப் பதிவையும் விட்டுவிடாது
ஒரு பதிவின் கீழ் தொடர்ந்து தாமதிக்காது
இணைத்து அவர்களுக்கு இணைத்த தகவலையும்
உடனே தெரிவிப்பது என்பது ஒரு அசுரப்பணிதான்

அந்தப் பணியில் எவ்வித தொய்வுமின்றி
சித்தத்தைச் சிதறவிடாது அதிலேயே நிறுத்தி
அனைவரையும் பிரமிக்க வைத்த திண்டுக்கல்
தனபாலன் அவர்களின் பணியினை எவ்வளவு
பாராட்டினாலும் தகும்

வலைவிட்டு  ( மிகக் குறிப்பாகப்  பதிவர்கள் வலைவிட்டு )
 சிதறாத சித்தத்தைக் குறிக்கும்படியாக
வலைச் சித்தர் எனப் பட்டம் வழங்கியதும்
மிக மிகப் பொருத்தமானதே

இப்படி தனிப்பட்ட நபர்கள் பலரின் அதீத
உழைப்பும் , குழுவாக ஒருங்கிணைந்தோரின்
ஒத்த சிந்தனையும் ,உழைப்பும் இல்லையெனில்
இந்தப் பதிவர் சந்திப்பு இத்தனை சிறப்பாக
நடைபெற வாய்ப்பேயில்லை

அதிலும் குறிப்பாக சந்திப்புக்கென உண்டாக்கிய
பக்கத்தில் கவுண்ட் டவுன் டிஜிடல் கடிகாரத்தை
இணைத்தவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்

ஒவ்வொரு நாளும் அதைப் பார்க்கையில்
பதிவர் சந்திப்புக் குறித்த நினைவில் இருந்த
என்போன்றோருக்கு அது எங்கள்
இதயத் துடிப்பைப் போலத்தான் இருந்தது என்றால்
நிச்சயம் அது மிகைப்படுத்திக் கூறல் இல்லை

( தொடரும் )

Sunday, October 18, 2015

புதுகைப் பதிவர் சந்திப்பு ( 5 )

கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்
"தோட்டத்தில் பாதி கிணறாய் இருந்தால்
வெள்ளாமை விளங்கினமாதிரிதான் " என்று
அது வெள்ளாமைக்கு வேண்டுமானால்
பொருந்தலாம்.

ஒரு பத்திரிக்கை . செய்தித்தாள் அல்லது
நமது சந்திப்பைப் போன்ற நிகழ்வுகளுக்கு
செலவில் பாதி நன்கொடைகள் மூலமாகவோ
ஸ்பான்சார் மூலமாகவோ வந்தால்தான்
மிகச் சிறப்பாகக் கொண்டு செல்லமுடியும்

மாறாக விற்பனை விலையைக் கொண்டு
பத்திரிக்கையோ,பதிவுக் கட்டணத்தைக் கொண்டு
நிகழ்வுகளை நடத்துவதென்பது அதுவும்
நம் பதிவர் சந்திப்பைப் போல ஒரு பெரும்
நிகழ்வை நடத்துவதென்பது நிச்சயம் சாத்தியமே
இல்லை.

பொது வாழ்க்கையில் தொடர்ந்து இருப்பதனால்
இது குறித்து எனக்கு ஒரு தெளிவான கருத்து
இருந்ததால்,சந்திப்பின் ஒருங்கிணைப்பாளர்
என்கிற முறையில் திருமிகு.முத்து நிலவன் ஐயா
அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் ஒன்று
இது விஷயமாய் அனுப்பிவைத்தேன்

நமது பதிவர்களைப் பொருத்தவரையில்
பதிவர் சந்திப்புக்கெனில் தாராளமாக நிதி
உதவி செய்வார்கள்.மிகக் குறிப்பாக வெளி
நாட்டில் வாழ் பதிவர்கள் எனக் குறிப்பிட்டு
அது குறித்து ஒரு வேண்டுகோள் விடுமாறு
அதில் குறைந்த பட்சம் நிதி
ஒரு இலட்சத்திற்கு மேல்சேருவதற்கு
வாய்ப்பிருக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தேன்

ஐயா அவர்களும் இது குறித்து  கலந்து பேசி
அறிவிப்பதாகச் சொல்லி, பின் இது குறித்து
புரவலர்களாக விருப்பம் உள்ள பதிவர்களுக்கு
ஒரு அன்பு வேண்டு கோள் விடுத்தார்

அது நாம் எதிபார்த்தபடியே அந்த நிதி
ஒரு இலட்சத்தை தாண்டி வந்தது.
விழா மிகச் சிறப்பாக நடைபெற காரணமாயிருந்த
பலவற்றுள் இந்தப் புரவலர்களின் பங்கும்
( "ம் "மைக் கவனிக்கவும் ) மிக முக்கியமானது
என்றால் அது மிகையில்லை

பதிவர் சந்திப்பு நிகழ்ச்சி நிரலில்
புரவலர்களைக் கௌரவித்தல் என ஒரு குறிப்பு
இருந்தது போல் ஒரு ஞாபகம்

அது விழாவின் சிறப்பு விருந்தினர் வருகையில்
ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக சிறு சிறு
மாறுதலுகுண்டான காரணத்தால் அது  விடுபட்டுப்
போய்விட்டது என் நினைக்கிறேன்

புரவலர்களின் பெயரைக் குறிப்பிட்டு ஒரு
ஃபிளக்ஸ் வைத்திருந்தாலும் மேடையில் ஒருமுறை
பெயரை வாசித்திருக்கலாமோ என எனக்குப் பட்டது
(அந்த  பிளக்ஸ் படம் ஏதேனும் பதிவில்  
பதியப்பட்டிருக்கிறதா ?  )

ஏனெனில் புரவலர்களில் ஏறக்குறைய எல்லோருமே
வெளி நாட்டில் வாழ்பவர்கள். அவர்கள் அனைவரும்
நேரலையில் விழா நிகழ்வுகளைப் பார்த்துக்
கொண்டிருப்பதாக அவ்வப்போது தகவல்
கொடுத்துக் கொண்டிருந்தார்கள்

அவர்களில் யாரும் இதை அதிகம்
விரும்ப மாட்டார்கள் என்றாலும் கூட
அடுத்த நிகழ்வுக்கு அல்லது இந்த நிகழ்வுக்கே
நாமும் புரவலர்களாகி இருக்கலாமோ என்கிற
எண்ணத்தை பதிவர்களுக்கு ஏற்படுத்த
வாய்ப்பிருக்கிறது என்பதற்காக இதை எழுதுகிறேன்

இது குறை அல்ல. அதைச் செய்திருந்தால் இன்னும்
சிறப்பாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்

( தொடரும் )

புதுகைப் பதிவர் சந்திப்பு ( 4 )

பதிவர் குழு திருமிகு சகாயம் அவர்களைச் சந்தித்து
அவருடைய ஒப்புதல் பெற்று வெளிவந்த பின்தான்
நான் அவர்களைச் சந்திக்க முடிந்தது

சுய அறிமுகங்களுக்குப் பின்  பதிவர் விழா
ஏற்பாடுகள் குறித்து கொஞ்சம் பேசினோம்

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குழு அமைத்திருப்பது
குறித்தும் விழா மண்டபம் முடிவு செய்திருப்பது
 குறித்தும்இன்னும் செய்ய வேண்டிய
பணிகள் குறித்தும்முத்து நிலவன் ஐயா அவர்கள்
விளக்கினார்கள்

அவர்களின் தெளிவான திட்டமிடுதல் குறித்து
அறிய நான் பிரமித்துப் போனது நிஜம்

ஆரம்பச் செலவுக்காக புதுகைப் பதிவர்கள்
பலரும் ஒரு குறிப்பிட்டத் தொகையைப் போட்டு
செலவு செய்து கொண்டிருப்பதாகவும்
நிதி திரட்டுதல் குறித்துதான் ஒரு மிகச் சரியான
ஆலோசனையும் செயல்திட்டமும்
வேண்டி இருக்கிறது எனச் சொன்னார்கள்

பொது விஷயத்திற்காக நிதி திரட்டுவதில்
குறித்து எப்போதும் இரண்டு வித கருத்துக்கள் உண்டு

அது போல எளிதான விஷயம் ஒன்றுமில்லை
என்பது ஒன்று

அதுபோல மிகக் கடினமான விஷயம் வேறேதுமில்லை
என்பது மற்றொன்று

உண்மையில் இந்த இரண்டுமே  சரியான கருத்துதான்
என்பது என் கருத்து

அது நமது நோக்கம் குறித்தும், நாம் நிதிக்காக
தொடர்பு கொள்பவர்களைப் பொறுத்துத்தான்
எது சரி என்பது முடிவாகும்

அந்த வகையில் பதிவர் சந்திப்புக்கு நிதி திரட்டுவது
நிச்சயம் ஒரு பெரிய பிரச்சனையாக இருக்காது
என உறுதி சொல்லிவிட்டு,அது விஷயமாக
மதுரைப் பதிவுக்கு நிதி கொடுத்தவர்கள் பட்டியலை
தமிழ்வாசி அவர்களிடம் பெற்றுத் தருகிறேன்
கொடுக்கக் கூடியவர்களை அறிந்து கேட்க அது
உதவும் எனக் கூறினேன்

பின் தொர்ந்து சந்திப்பில் இருப்போம் எனக் கூறி
விடைபெற்றோம்

அந்த அவசரகதியிலும் முத்து நிலவன் ஐயா அவர்கள்
அவருடைய அற்புதமான புத்தகங்கள் இரண்டை
கையொப்பமிட்டு அன்பளிப்பாகக்
கொடுத்துச் சென்றது நெகிழச் செய்தது

மதுரை சந்திப்புக்கான கணக்குகளைக்
கொடுக்கவில்லைஎன்பதால் , வரவு குறித்தாவது
தெரிந்து கொள்வோம் எனத்  தமிழ்வாசி
அவர்களைத் தொடர்பு கொண்ட போது
அது பதிவாகியிருந்த  டிஸ்க் கரப்ட்டாகி
அழிந்து போனதாக சொல்ல  வேறு
என்ன செய்யலாம் என யோசிக்கத் துவங்கினேன்.

( சென்னைப் பதிவர்கள் அவர்கள் பதிவர் சந்திப்பை
முடித்து அதில் மீதமான தொகையென பத்தாயிரம்
ரூபாயை மதுரைப்பதிவர் சந்திப்பில்
கொடுத்தார்கள் என்பதை நன்றியுடன்
இங்கு நிச்சயம் குறிப்பிட்டாகவேண்டும் )

தொடரும்....

Saturday, October 17, 2015

புதுகைப் பதிவர் சந்திப்பு ( 3 )

இப்படியாக அனைத்து விதத்திலும்
புதுகையில் நடக்கிற பதிவர் சந்திப்புதான்
மற்றபடி இந்தப் பதிவர்  சந்திப்பு பதிவர்கள்
அனைவரும் சேர்ந்து நடத்தும்பதிவர்  சந்திப்புத்தான்
என்பதை ஆரம்பம் முதலே அனைத்துப் பதிவர்
மனதிலும் பதியும் படியாக மிகச் சரியாக செய்தது
ஐயா முத்து நிலவன் தலைமையிலான
புதுகைப் பதிவர் அணி

இதற்கு முன் உதாரணமாக ஏற்கெனவே பதிவர்
சந்திப்பை வெற்றிகரமாக நடத்து முடித்த
சென்னை மற்றும் மதுரை பதிவர்களைச் சந்தித்து
அது குறித்து ஒரு தெளிவான ஒரு கருத்தை
உருவாக்கிக் கொள்ளவேண்டும் என முடிவு செய்து
சென்னைப் பதிவர்களைச் சந்தித்து முடித்து...

அதைப் போலவே மதுரையிலும் சந்திக்க
சீனா ஐயா அவர்களை பலமுறை முயன்றும்
தொடர்பு கொள்ள முடியாததால் என்னைத்
தொடர்பு கொண்டு அதற்கு ஏற்பாடு செய்யுமாறு
கேட்டுக் கொண்டார்கள்

நானும் அது மிகச் சரியாகப் பட்டதால் என்னிடமிருந்த
மதுரைப் பதிவர்கள் இணைப்பில் அனைவருக்கும்
செய்தி அனுப்பி கலந்து கொள்கிறவர்கள் தங்கள்
விருப்பத்தைத் தெரிவிக்குமாறு பணித்திருந்தேன்

எதனாலோ நால்வரைத் தவிர பிறரிடமிருந்து
பதில் பெற முடியவில்லை

உடன் இது விவரம் முத்து நிலவன் அவர்களுக்குத்
தெரிவித்து விட்டு சந்திப்பு இல்லையென்றாலும்
தனித்தனியாக தொடர்பு கொண்டு கருத்தைத்
தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துவிட்டேன்

ஆயினும் இன்று வரை அவ்வாறு ஒரு முன் சந்திப்புக்கு
ஏற்பாடு செய்ய முடியாமல் போனது எனக்கு அதிகம்
மன வருத்தம் தரும் நிகழ்வாகத்தான் உள்ளது

இ ந்நிலையில் பதிவர் சந்திப்பிற்கு புதுக் கோட்டையை
சொந்த ஊராகக் கொண்ட சமூகத்தின் பால்
அதிக அக்கறை கொண்ட நேர்மைக்கு
முன் உதாரணமாக விளங்குகிற மாவட்ட ஆட்சியர்
மதிப்பிற்குரிய திருமிகு. சகாயம் அவர்களைச்
சிறப்பு விருந்தினராக அழைக்கலாம்
என நினைப்பதாகவும் அது குறித்துஅவரை
 நேரடியாகச்சந்தித்து அழைக்கமுடிவு
செய்திருப்பதாகவும்,
அது சமயம் மதுரையைச் சேர்ந்த பதிவர்கள்
உடன் இருந்தால் சிறப்பாக இருக்கும்
எனத் தகவல் தெரிவித்திருந்தார்கள்

அது சமயம் தான் முத்து நிலவன் ஐயா அவர்களையும்
உடன் வந்த புதுகைப் பதிவர்களையும் சந்திக்கும்
வாய்ப்புக் கிடைத்தது

சரியான அனுமானமா அல்லது தவறான அனுமானமா
எனத் தெரியவில்லை, அன்றைய நிலையில் இந்த
பதிவர் சந்திப்பை நடத்தி முடிப்பது தொடர்பாக
அவர்களிடம் ஒரு மலைப்பு உணர்வு  இருப்பது
போலத்தான்  எனக்குப் பட்டது

( தொடரும் )

( நீரில் மிதக்கிற பனிக்கட்டியின் ஒரு சிறு பகுதியே
வெளியில் தெரியும்.பெரும்பகுதி தெரிய வாய்ப்பில்லை
அந்த வகையில் புதுகைப் பதிவர்கள்
இந்த நிகழ்வுக்காக எடுத்துக் கொண்ட
அக்கறை இதுபோல் அப்போதுதொடர்பில் இருந்த
பலரும் எழுதினால்தான் அவர்கள்
உழைப்பு அனைவருக்கும் புரியும் என்பதால்
இதனை எழுதுகிறேன் )

Friday, October 16, 2015

மாபெரும் கவிதைப் போட்டி

தீபாவளித் திரு நாளை  முன்னிட்டு

உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி

தவறாது  கலந்து கொள்வீர்

தமிழுக்கும்  வலையுலகிற்கும்

சிறப்புச் செய்வீர்


வாழ்த்துக்களுடன்.......


விவரங்களுக்குப்   படத்தினைக்   கிளிக் செய்யவும்


TRTAMILKKAVITHAIKAL.COM|BY ர

Thursday, October 15, 2015

புதுகைப் பதிவர் சந்திப்பு ( 2 )

நான் திருவிழா மற்றும் கோவிலுக்குச்
செல்லுகையில் முண்டியடித்து முன்னேறி
நெருக்கடிமிக்க பகுதிக்கு செல்வதை
விரும்ப மாட்டேன்

விளக்கம் கேட்போருக்கு " சாமியை
நாம் பார்ப்பதை விட சாமி நம்மைப் பார்க்கணும்
அதுதான் முக்கியம் " என்பேன்

சிலர் இதை விதண்டவாதம் எனக் கூட
முகம் சுளித்திருக்கிறார்கள்.அதைப் பற்றி
நான் அதிகம் கவலை கொள்வதில்லை

அதைப் போலவே ஒரு பொது நிகழ்வென்றால்
நிகழ்வை நடத்துபவர்கள் போக்கிலேயே
யோசிப்பேனே ஒழிய எனக்கு அது குறித்த
மிகச் சரியான அனுபவம் இருந்தாலும்
அதில் அதிகம் மூக்கை நுழைப்பதில்லை

புதுகைப் பதிவர் சந்திப்பு என்கிற தகவல்
கசியத் துவங்கிய உடனேயே அவர்கள்
மதுரை சந்திப்புக்கு வந்திருந்து கலந்து கொண்ட
முறையைக் கொண்டும்,
புதுகையில் பதிவர்களுக்கென மிகச் சிறப்பாக
ஒருதொழிற் நுட்பக் கருத்தரங்கு
நடத்தியதிலிருந்தும் நிச்சயம்இந்தப்
புதுகைப் பதிவர் சந்திப்பு வித்தியாசமானதாகவும்
மிகச் சிறந்ததாகவும் இருக்கும் என்ற நம்பிக்கை
எனக்கு மட்டுமல்ல
எல்லோருக்குமே இருந்தது

அதிலும் குறிப்பாக 10 ஆம் தேதி வைக்கலாம
இல்லை 11ம் தேதி வைக்கலாமா எனத் தேதி நிர்ணயம்
செய்வதில் கூட அனைவரின் ஒருமித்த கருத்தை
அறிந்து செய்ய முயன்றது நம் நம்பிக்கைக்கு
உறுதி சேர்ப்பதாக இருந்தது

என்னுடைய கருத்தைக் கேட்டபோது கூட
இது குறித்து அனைவரிடமும் கேட்பது சரியாக வராது
மண்டபம் அமைவது, உள்ளூர் திருவிழா, சந்தை
இவைகளை உத்தேசித்து புதுகைப்பதிவர்களே
முடிவு செய்வதுதான் சரியாக இருக்கும்
எனத் தெரிவித்தேன்

(மதுரை பதிவர் சந்திப்பில் தீபாவளி ஒட்டி
இந்த தேதி முடிவு செய்வதில்தான்
 ஆரம்பக் குழப்பம்வந்தது
 என்பதை இங்கு குறிப்பிடுவது தவறாகாது )

இரண்டாவதாக பதிவர்கள் பதிவுக் கூட்டத்தில்
நடந்து கொள்ளவேண்டிய முறைகளெனச் சொல்லி
அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை
பதிவர்கள் அறிமுகம் குறித்து  காலதாமதம்
செய்யாமல் அறிமுகம் செய்து கொண்டால் நல்லது
என்பதைத்தான் அதிகம் வலியுறுத்தினார்கள்

(முதலில் நடத்தியதாலோ என்னவோ
சென்னைப் பதிவர்கள்  சந்திப்புக்கு
பதிவர்கள் பெண் பதிவர்களை அனுமதி இன்றி
புகைப்படம் எடுக்கக் கூடாது மற்றும்
இன்னபிற வலியுறுத்தல்கள் அதிகம் இருந்தது )

இப்படித் துவக்கமே சிறப்பாக இருந்ததால்
 நிகழ்வும் மிக்ச் சிறப்பாக இருக்கும் என்கிற
 நம்பிக்கையில்தான் அனைவரும் புதுகைச் சந்திப்பை
 மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கத் துவங்கினார்கள்

( தொடரும் )

Wednesday, October 14, 2015

விடாது தொடரும் உங்கள் நினைவு நிச்சயம் எங்களைத் தூங்க விடாது

இந்தியர்கள் அனைவருக்கும்
ஆகஸ்ட் பதினைந்து ஒரு
விடியல் நாளெனில்

இளைஞர்கள் அனைவருக்கும்
அக்டோபர் பதினைந்தை ஒரு
எழுச்சி நாளாக்கிப் போனவரே

இந்தியாவின் கடைக் கோடியில்
ஒரு சாமானியனாய்ப் பிறந்து
இந்தியா முழுமைக்கும்
ஒரு ஆதர்ஷ நாயகானாய் உயர்ந்தவரே

அலங்காரமிக்க அதிகாரமிக்கப்
ஒரு பதவியை
முதன் முதலாய்
மக்களுக்கான பதவியாக்கியவரே

வல்லமையுள்ளோருக்கானது
என்றான  ஜனாதிபதி மாளிகையை
சாமானியர்களும்  மிக இயல்பாய்
நமக்கானது என உணரச் செய்தவரே

ஓயாத உழைப்பின் மூலம்
சாமானியனும்
உச்சத்தைத் தொட முடியும் என
நிரூபித்துக் காட்டியவரே

பதவியால் அல்ல
செய்வதற்கரிய செயல்களால்
தலைநகரையே ஒரு சிற்றூருக்கு
மாற்றிக் காட்டியவரே

உங்கள் பிறந்த நாள்
இளைஞர்களுக்கான
எழுச்சி நாள் மட்டுமல்ல

இந்தியர்கள் அனைவரும்
2020 என்னும் இலட்சியத்தை
எண்ணச் செய்யும் நாள்

இந் நாளை
நீங்கள் அவதரித்த நாளாக மட்டுமல்ல
உலகத் தலைமைக்கு
இந்தியாவைத்
தயார்ப்படுத்தும் நாளாகக் கொள்கிறோம்

விடாது தொடரும் உங்கள் நினைவு
நிச்சயம் எங்களைத் தூங்க விடாது

வாழ்த்துக்களுடன்....

பதிவர்கள் ஆயிரம் மடங்கு உயர்வானவர்களே

பதிவெழுத்தினை நாட்குறிப்பு எனச்
சொல்ல முடிவதில்லை
ஏனெனில் அதில்
அந்தரங்களைப் பதிவு செய்வதில்லை
ஆயினும் அந்தரங்கங்களின்
சாரத்தைப் பதிவு செய்வதால்
இது நாட் குறிப்பினும் மிகச் சிறந்ததே

பதிவர்களின் பெரும்பாலோரின்
கவிதைகளை  கவிதைகள் எனச்
சொல்லமுடிவதில்லை
ஏனெனில் பதிவர்கள்
எதுகை மோனை சீர் செனத்திக்காக
அதிகம் மெனக்கெடுவதில்லை
ஆயினும் அவர்கள் சமூக நோக்கத்திலும்
கருத்தின் ஆழத்திலும்
அதிகம் கவனம் கொள்வதால்
பதிவர்களின் படைப்புகள்
கவிதையினும் அதிகச் சிறப்புடையதே

பதிவினை ஊடகம் என்றும்
வகைப் படுத்த இயலவில்லை
ஏனெனில் ஊடகம் போல அதிக வீச்சும்
ஜனரஞ்கத் தன்மையும் இல்லை
ஆயினும் சுயக் கட்டுப்பாடும்
ஒரு நொடியில்
உலகைச் சுற்றி வரும் தன்மையிலும்
உடனுக்குடன் எதிர்விளைவுகளை
உண்டாக்கிப் போகும் திறத்தாலும்
பதிவுகள் ஊடகத்தினும் உயர்வானதே

பதிவர்கள் ஊடக எழுத்தாளர்களைப் போல
பிரபல்யமானவர்கள் இல்லை
ஆயினும் ஒருவர் நலத்தில்
ஒருவர் அக்கறை கொள்வதிலும்
பரஸ்பர புரிதலிலும்உதவிக் கொள்வதிலும்
எழுத்தாளர்களுக்கு
நேர் எதிரானவர்களாய் இருப்பதால்
பதிவர்கள்  ஊடக எழுத்தாளரினும்
ஆயிரம் மடங்கு உயர்வானவர்களே

(மிகச் சிறப்பாக பதிவர் திரு விழாவினை
 நடத்திக் கொடுத்த புதுகைப் பதிவர்களுக்கும் 
சிறப்பாக நடைபெற அனைத்து விதத்திலும்
ஒத்துழைத்த பதிவர்கள் அனைவருக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்  )

Monday, October 12, 2015

சுற்றுச் சூழல் விழிப்புணர்வுப் பேரணி

மதுரையில் மிகவும் பொல்லாதபுரமாக இருந்த
வில்லாபுரத்தை எங்கள் வில்லாபுரம் புது நகர்
குடியிருப்போர் சங்கத்தின் மூலமாக
எங்கள்பகுதி காவல்துறை ஆய்வாளர்
திரு சேதுமணிமாதவன் அவர்களின்
வழிகாட்டுதலின்படி அறுபது கண்காணிப்புக்
காமிராக்களைப்  பொருத்தி
மதுரை நகரிலேயே குடியிருக்கப் பாதுகாப்பான
பகுதி என மாற்றம் செய்தோம்

அதன் தொடர்ச்சியாய் இந்தப் பகுதியில்
சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு
ஒரு விழிப்புணர்வுப் பேரணியை  எங்கள்
குடியிருப்போர் சங்கம்,மற்றும் இப்பகுதியில்
மிகச் சிறப்பாக இயங்கி வரும் புது நகர்
அரிமா சங்கம் மற்றும் எங்கள்
அண்டைப் பகுதியில்மிகச் சிறந்த
பெண்கள் கல்லூரியான
சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரி
நாட்டு நலப் பணிக்குழுவின் முலமாகவும்
ஏற்பாடு செய்தோம்

இந்த நிகழ்வுக்கு முக்கிய காரணமாக இருந்த
காவல்துறை ஆய்வாளர்
திரு, சேதுமணிமாதவன் அவர்களே
இந்த மூன்று அமைப்புக்கும் ஒரு இணைப்பை
 ஏற்படுத்திக்கொடுத்ததோடு இந்தப் பேரணி
மிகச் சிறப்பாக நடைபெறஅனைத்து பாதுகாப்பு
ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துச்
சிறப்புச் செய்தார்கள்

எங்கள் பகுதி மாநகராட்சி  உதவிப் பொறியாளர்
திருமிகு இந்திரா அவர்கள்  துவக்க நிகழ்ச்சியில்
 கலந்து கொண்டு பிரச்சார வாசகங்கள்
அடங்கிய பிரதியை பொதுமக்களிடம்
விநியோகித்து பேரணியைத் துவக்கி வைத்தார்கள்

சேர்மத்தாய் கல்லூரி துணைப்பேராசிரியர்
நாட்டு நலப் பணிக்குழுத் தலைவர் திரு மிகு
ஜி. மீனலோசினிமற்றும் அவரது குழுவினரும்
 மிகச் சிறப்பாக இந்தப் பேரணி
நடைபெற அனைத்து பொறுப்புக்களையும்
எடுத்துக் கொண்டுஎங்களுக்கு  முழுமையாக
ஒத்துழைப்புக் கொடுத்தார்கள்

அவனியாபுரம் மாநகராட்சி  பகுதி அலுவலகத்தில்
துவங்கிய 200 மாணவிகள் மற்றும் 50 சமுக நல
ஆர்வலர்கள் கலந்து கொண்ட இந்தப் பேரணி
அவனியாபுரம் மற்றும் வில்லாபுரம் மீனாட்சி நகர்
மற்றும் வில்லாபுரம் குடியிருப்புப் பகுதியில் உள்ள
அனைத்து பொது மக்களிடமும் சுற்றுச் சூழல்
பாதுகாப்பின்அவசியத்தை விளக்கி
(சுமார் ஐந்து கிலோ மீட்டர் வரை )
துண்டுப் பிரசுரங்கள்  கொடுத்துப் பிரச்சாரம்  செய்தது

இந்தப் பேரணி மிகச் சிறப்பாக நடைபெற
 நிதிப் பொறுப்புமுழுவதையும் தானே ஏற்றுக் கொண்ட
 புது நகர் அரிமாசங்க துணைத் தலைவரும்
குடியிருப்போர் சங்கபகுதித் தலைவர்
லயன்.சக்திவேல் அவர்களுக்கும்
(முதல் புகைப்படத்தில் இடது ஓரம்
தொப்பியுடன் இருப்பவர் )

புது நகர் அரிமா சங்கத் தலைவர்
மற்றும் புது நகர் குடியிருப்போர் சங்கச்  செயலாளர்
ஏ.இப்ராஹிம் சுல்தான் சேட்

செயலாளர்.ஜி.சரவணன் பொருளாளர்.எஸ்.சீனிமுகமது
மற்றும் உறுப்பினர்களுக்கும்

புது நகர் குடியிருப்போர் சங்கத் தலைவர்
எஸ் கே.எஸ் காதர் மைதீன், பொருளாளர்
எஸ் கே பிரகாஷ் மற்றும் உறுப்பினர்கள்
அனைவருக்கும்அரிமா வட்டாரத் தலைவர்
என்கிற முறையில் எனது நன்றியையும்
வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்

அது குறித்த புகைப் படங்கள் சில தங்கள் மேலான
பார்வைக்காக இணைத்துள்ளேன்

வாழ்த்துக்களுடன்..

எஸ்.வெங்கட சுப்ரமனியன் என்ற ரமணி
அரிமா சங்க வட்டாரத் தலைவர்






Sunday, October 11, 2015

புதுகைப் பதிவர் விழா ( 1)






தலைவர் உள்ளிட்ட இந்த அறிஞர் சபைக்கு
எனது பணிவான வணக்கம்

இந்த இனிய விழாவில் தனது
முற்றத்து நிலா என்னும்
கவிதை நூலுக்கு வாழத்துரை  வழங்கப் பணித்த
நன்பர் கவிஞர்ரூபன்  அவர்களுக்கும்
அவர் வேண்டுகோளுக்கிணங்கி எனக்கு
வாய்ப்புக் கொடுத்தவிழாக் குழுவினருக்கு
எனது நன்றியையும்
வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டு
எனது சிற்றுரையைத் துவங்குகிறேன்

நான் எழுதிய பதிவுகளில் கவிதை குறித்தான
பதிவுகள் கொஞ்சம் அதிகமே இருக்கும்

மிகக் குறிப்பாக ஒரு கவிதையில் கவிதை என்பது
உணர்வு கடத்தி எனக் குறிப்பிட்டிருப்பேன்

ஒருவர் தன்னைப் பாதித்த விஷயத்தைச்
சொல்வார் எனிலோ
அருமையாக விளக்குவார் எனிலோ
,அல்லது மிகத் தத்ரூபமாக
புரிந்து கொள்ளும்படியாக
எழுதிச் செல்வார் எனிலோ
அது கவிதை ஆவதில்லை

மாறாக தன்னைப் பாதித்த விஷயத்தை
தான்பாதித்தபடி  படிப்போரும்  பாதிப்பினைப்
படிப்பதன் மூலமே உணரும்படிச்
சொல்லிச் செல்லும் எதுவோ அதுவே கவிதையாக
இருக்க முடியும்

அந்த வகையில் ரூபனின் கவிதைகள் அனைத்தும்
நிச்சயமாக  அவர் அனுபவித்த பாதிப்பினை
நம்மையும் உணரச் செய்து போகும் என்பது
நீங்கள் ஒருமுறைப் படித்துப்பார்த்தாலே புரியும்


மற்றொரு கவிதையில் கவிதை என்பது
ஒட்டக் காய்ச்சிய உரை நடை
எனக் குறிப்பிட்டிருப்பேன்

எப்படி கோவா செய்ய பாலைக் காய்ச்சுகையில்
நீர்த்தன்மை முற்றாக இல்லாதபடியும்
இதற்கு மேல் காய்ச்சினால் பதம் முறிந்து போகும்
என்கிற ஒரு நிறைவான நிலையில்
நிறுத்தக் கற்றுக் கொண்டிருக்கிறோமோ

அதைப் போலவே தேவையற்ற
நீர்த்த சொற்களைஎவ்வளவுகெவ்வளவு முற்றிலுமாக வெளியேற்றுகிறோமோஅந்த வகையிலும்
இதிலிருந்து ஒரு சொல்லை எடுத்தாலும்
கவிதையின் பொருள் மிகச் சரியாகப்
புரிந்து கொள்ளாமல்போகும் என்கிற நிலையிலும்
சொற்களை பயன்படுத்துதலே
கவிதைக்கும் அழகு,கவிஞருக்கும் அழகு

அந்த வகையில் மட்டும் கவிஞ்ர் ரூபன் அவர்கள்
சொற்சிக்கனத்தைக் கையாளப் பழகினார் ஆயின்
மிகச் சிறந்த கவிஞராக பரிமளிப்பார் என்பதை
உறுதியாக கூறி...

கால அவகாசம் கருதி விரிவான நூல் அறிமுகம் செய்ய
இயலாத நிலையில் கவிஞர் ரூபன் அவர்களின்
கவிதைகள் கவிதை வானில் நிச்சயம் ஒரு
என்றும் ஒளி குன்றா நட்சத்திரமாய்
காலம் கடந்தும் ஒளிரும்
எனபதே  ரூபன் கவிதைகள் குறித்தான
எனது மதிப்பீடுஎனப் பதிவு செய்து வாய்ப்பிற்கு
மீண்டும் ஒருமுறை
நன்றி கூறி விடைபெறுகிறேன்

நன்றி வணக்கம்


( புதுகைப் பதிவர் விழாவில்  ரூபனின்
கவிதை  நூலுக்கான  என் வாழ்த்துரை )

Thursday, October 8, 2015

அரிமா லியோ சங்கத் துவக்க விழா

324 பி 3 அரிமா மாவட்டத்தின் சார்பில் 
நான் வட்டாரத்தலைவராக பொறுப்பில்  இருக்கிற 
மதுரைவில்லாபுரம் புது நகர் அரிமா சங்கத்தின் சார்பில்
கடந்த மாதம் அரிமா இயக்கத்தின் துணை அமைப்பாக
இருக்கிற லியோ சங்கத்தைத் துவக்கினோம்

அதன் தொடர்ச்சியாக என் பொறுப்பில் இருக்கிற
மற்றொரு சிறந்த சங்கமான மதுரை டிலைட்
சங்கத்தின் சார்பில் அதன் தலைவராக இருக்கிற
லயன் எம்.ஜி உமா அவர்களின் சீரிய முயற்சியால்
மற்றுமொரு லியோ சங்கத்தை திருமங்கலம்
பாய்ஸ் டவுனில் நேற்றுத் துவக்கினோம்( 8/10/2015 )


சிறு வயது முதலே தலைமைப் பண்புப் பயிற்சியும்
பொதுவாழ்வில் அனுபவமும்,கிடைக்கிற வாய்ப்புக்களை
மிகச் சரியாக பொது நல நோக்கத்திற்காக பயன்படுத்திக்
கொள்ளுகிற ஆற்றலையும் கற்றுக் கொள்வதற்காகத்தான்
இந்தப் பயிற்சி என்பதை  முன்னாள் ஆளுநர் பெருந்தகை
பாண்டியராஜன் எம்.ஜே ஃப் அவர்களும்
மண்டலத் தலைவர் ஏ மோஹன் எம் ஜே ஃப் அவர்களும்
மிக மிக அருமையாக பயிற்சிக் கொடுத்தார்கள்

திரு நகர் பெஸ்ட் அரிமா சங்க்கத்தின் தலைவர்
டாக்டர் சுப்ரமணியம் அவர்கள் ஒரு சிறந்த 
விளக்கவுரை ஆற்றியதோடு யோகா குறித்த
ஒரு செயல் விளக்கப் பயிற்சியும் கொடுத்தது
நிகழ்ச்சிக்கு கூடுதல் சிறப்புச் சேர்த்தது

இந்த அருமையான விழாவிற்கு மதுரை திரு நகர் பெஸ்ட் 
அரிமா சங்கமும் திருமங்கலம் சுப்ரீம் சங்கமும்
மதுரை டிலைட் சங்கமும் மிகச் சிறப்பான ஏற்பாடுகளைச்
செய்திருந்தார்கள்

அதற்கான சில புகைப்படக் காட்சிகள்
தாங்கள் கண்டு மகிழ்வதற்காக....

...


Wednesday, October 7, 2015

புதுகைப் பதிவர் சந்திப்பு (16 ) பூனைக்கு மணி கட்டலாம்

சென்னையில் நான் ஒவ்வொருமுறை புலவர் ஐயா
இராமானுஜம் அவர்களைச் சந்திக்கும் போதெல்லாம்
ஒரு பதிவு பெற்ற அமைப்பாக நமது வலைப்பதிவர்
அமைப்பை ஆக்க வேண்டும் என
வலியுறுத்திச் சொல்வார்

இது ஒருவகையில் அது அவரது இலட்சியக் கனவு என்று
கூடச் சொல்லலாம்

எனக்கும் இந்தக் கருத்தில் உடன்பாடு உண்டு

இதுவரை நடந்த பதிவர் சந்திப்புகளை விட இந்த
புதுகைப் பதிவர் சந்திப்பு அனைத்துத் தரப்பினரையும்
அரவணைத்துச் செல்வதில் ஆகட்டும், மிகத் திட்டமிட்டு
செயல்பாடுகளை பிரித்துப் பரவலாக்கி
செயல்படுத்துவதிலாகட்டும்,
அனைத்து செயல்பாடுகளையும்
ஒரு வெளிப்படைத்தன்மையாகச் செய்வதிலாகட்டும்
ஒரு நிறைவான பதிவர் சந்திப்பாக
இந்தச் சந்திப்பு இருக்கும்
என்பதை பதிவர்கள் அனைவரும் உணரும்படி
செயல்பட்டுக் கொண்டிருக்கிறது

இந்தச் சந்திப்பில் ஒரு பதிவு பெற்ற அமைப்பாக இந்த
அமைப்பை உருவாக்கலாமா என்பது
குறித்த கேள்வியைமுன்வைத்தும்,
பதிவர்களிடமிருந்து  எதிர்பார்க்கின்ற
வேறு பல கருத்துக்கள் குறித்தும் ஒரு மாதிரிப் படிவம்
தயார் செய்து ( கூடுமானவரையில் ஆம் அல்லது இல்லை
என இருக்கும்படியாக) நமது பதிவர் சங்கத்திற்கான
வலைத்தளத்தில் பதிவிடலாம்

பதிவர்களின் பெருவாரியான கருத்தின்
அடிப்படையில் இது குறித்து பரிசீலிக்கலாம்.

பெருவாரியோரின் கருத்து அமைக்கலாம் என்பதாக
இருக்குமாயின் அது குறித்து ஒரு தெளிவான விதிகளை
வகுக்க ஒரு அமைப்புக் குழுவை அனைத்து மாவட்டம்
மற்றும் ஆர்வமுள்ள அயல் நாட்டில் வாழ்
பதிவர்களையும்  உள்ளடக்கிய
குழு ஒன்றைஇந்தச் சந்திப்பில் அமைக்கலாம்.

"ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின்  "

என்கிற வள்ளுவன் குரல்
நமக்கெல்லாம் அதிகப் பரிச்சியம் உள்ள குறள் தான்
இல்லையா ?

புதுகைப் பதிவர் திருவிழா ( 15 )

முகம் மட்டுமா மனம் காட்டும்
ஒருவரின் பேச்சும் எழுத்தும்
செயலும் கூடத்தான்
துல்லியமாய் மனம் காட்டும்

உள்ளத்தில் உண்மை ஒளிஉண்டாயின் அது
வாக்கினில் உண்டாம் என்கிற கவிதையின்
 பொருள் கூட அதைத்தானே சொல்கிறது

கையில் கிடைத்த ஒரு முடியைவைத்து
சாமுத்திரிகா லட்சணத்தின் விதிகளின்படி
அந்தஅழகு நங்கையின் உருவை வரைந்து
அந்த மகாராணியைத் தேடிப்பிடித்த
விக்ரமாதித்தன் கதை நாம் அனைவரும்
அறிந்ததுதானே

அதைப்போன்றே முகக்கண்ணால் காணாது
 பதிவர்கள்அனைவரையும் அவர்களது
பதிவின் முலம் அவர்களது பரந்த உயர்ந்த
உள்ளத்தினை அகக்கண்ணால்
 புரிந்து கொண்ட நாம் அவர்களை
 நேரடியாகச் சந்தித்துஉரையாடவும் தொடர்ந்து
அவர்களுடன் பாசத் தொடர்பினை
ஏற்படுத்திக் கொள்ளவும் இந்த
 புதுகை ப்  பதிவர் சந்திப்புத் திருவிழா
அனைவருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக
அமையவுள்ளது என்றால் அது மிகை அல்ல

அதற்காக பெரிதும் பாடுபட்டு மிகச் சிறப்பான
ஏற்பாடுகளைச் செய்துள்ள புதுகைப்  பதிவுலக
நண்பர்களுக்கு மகிழ்வூட்டும் விதமாகவும்
நன்றி காட்டும் விதமாகவும் இந்த திருவிழாவில்
பெருந்திரளாக கலந்து கொள்வதுடன்
 இந்த விழாமிகச் சிறப்பாக நடைபெற
நம்மால் ஆனஉதவிகளை செய்வதுடன்
நாம் நம்மை முழுமையாக இந்த நிகழ்வுடன்
ஐக்கியப்படுத்திக் கொள்வோமாக

மாறுதலை நம் எழுத்து
உருவாக்குகிறதோ இல்லையோ
மாறுதலுக்கான சூழலை  நம் எழுத்து
உருவாக்கும் என்பது நிச்சயமான உண்மை

இப்போது திரைப்படங்களில் எல்லாம்
பத்திரிக்கையுலக நண்பர்களுக்கு
நன்றி சொல்லுகையில்
மறக்காது   வலையுலகத்திற்கும்   நன்றி
சொல்வதை  நிச்சயம் கவனித்திருப்பீர்கள்

ஒரு பொதுக் கருத்தை உருவாக்குவதில்
வலைத்தளம்   எப்படி   ஒரு வலுவான
புறக்கணிக்க இயலாத சக்தியாக உள்ளது
என்பதற்கு  இது ஒரு சிறு உதாரணம்

நம் சக்தியை ஒருங்கிணைக்க    வலுவூட்ட
நிச்சயம் இதுபோன்ற   சந்திப்புகள்
உதவும் என்பது எனது
அசைக்கமுடியா நம்பிக்கை

புதுகையில் சந்திப்போம்
வாழ்த்துக்களுடன் .....


Monday, October 5, 2015

புதுகை பதிவர் சந்திப்பு ( 14 )

பெண் :
வெத்தலைப் பாக்கு வச்சு உன்னை
அழைச்சாங்களா-இல்லை
வீடு வந்து  உனக்குத் தாக்கல்
சொன்னாங்களா

எதுக்கு நீயும் புதுகை  போக
இப்படித் துடிக்கிறே-கேள்வி
கேட்டா மட்டும் என்னை எதுக்கு
இப்படி முறைக்கிறே

ஆண் :
காசு கொடுத்து கட்சி கூட்டும்
 கூட்டமில்லடி -இது
தலைவனாக நடிகன் கூட்டும்
கூட்டமில்லடி

காசு போட்டு நாம நடத்தும்
 நல்ல கூட்டமே-இதில
கலந்துக் காம நாம இருந்தா
நமக்கும் நட்டமே

செய்திக் குள்ளே கருத்தை நுழைச்சு
 குழப்பும் பேப்பரும்-தினமும்
தொடருக் குள்ளே விஷத்தை மறைச்சு
 பரப்பும் டி. வியும்

நல்ல வழியை நம்மை விட்டு
மறைக்கப் பார்ப்பதை-தினமும்
சொல்லிச் செல்லும் உறுதி இங்கே
யாருக்கி ருக்குது ?

இரத்தச் சூடு இருக்கும் வரையில்
கும்மாளம் போட்டு-பணத்தை
கறுப்பு வெள்ளை யென்று கணக்கில்
 மறைச்சுச் சேத்து

அரசுச் சின்ன மிரட்டல் போட
மக்களைப் பார்க்கும்-நடிகரின்
முகத்தி ரையினைக் கிழிக்கும் தெனவு
 யாருக்கி ருக்குது ?

விதியைச் சொல்லி மதியை மாற்றி
 பிழைக்கும் மனிதரை-அதையே
மாற்றிச் சொல்லி பிழைப்பை ஓட்டும்
தெளிந்த எத்தரை

சரிக்குச் சரியாய் கேள்வி கேட்டு
மடக்கும் தைரியம்-இங்கு
பதிவர் தவிர உலகில் வேறு
யாருக்கி ருக்குது ?

ஆண்கள் பெண்கள்  பாகு பாடு
ஏதும் இன்றியே-மயக்கும்
ஜாதி மதங்கள் பிரிக்க முடியா
 தனித்த வழியிலே

ஆண்டு மூன்றைக் க் கடக்கும் பதிவர்
அமைப்புப் போலவே
நல்ல அமைப்பு உலகில் வேறு
எங்கு இருக்குது ?

பெண்:
சொல்லிச் சொல்லி கேட்கக் கேட்க
இனிக்குது மச்சான்-இன்னும்
சொல்லச் சொன்னா நூறு சொல்வே
புரியுது மச்சான்

சட்டு புட்டுனு கிளம்பி நீயும்
போய்வா மச்சான் -சரியா
 பத்து பதிவு போட   விஷயம்
தேத்திவா மச்சான்

புதுகை பதிவர் சந்திப்பு, ( 13 )

சென்றஆண்டு மதுரையிலே
சந்தித்த நினைவோடு
சந்தோஷமா  இந்தஆண்டும் வாரோம்-எல்லோரையும்
சந்திக்கவே புதுகைநோக்கி வாரோம்

முத்துநிலவன்  முன்னிருந்து
நடத்துகின்ற  சந்திப்பது
கச்சிதமாய் இருக்குமென்று வாரோம் -இதில்
கலந்துகொள்ளல் சிறப்பென்று வாரோம்   

எல்லையென்ற தொல்லையது
பதிவர்க்கில்லை என்பதனை
சொல்லிடவே புதுகை  நோக்கி வாரோம்-உலகம்
முழுதிருந்தும் உற்சாகமாய் வாரோம்

ஜாதிமத பேதமது
ஏதுமில்லை எமக்கென்ற
சேதிசொல்லப புதுகைநோக்கி  வாரோம்-அதற்குத்
தெளிவானச் சாட்சியாக வாரோம்

இல்லையில்லை இதுபோன்ற
நல்லதொரு அமைப்பென்று
உறுதிசெய்ய புதுகை நோக்கி வாரோம் -நாங்கள்
உறுதியாக முதல்நாளே வாரோம்

Sunday, October 4, 2015

புதுகை பதிவர் சந்திப்பு ( 12 )

 களிப்பின் உற்பத்திச் சாலையாய்
விரிந்து பரந்து
ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது
அந்த அற்புதக் கடல்

இயலாமையாலும்
நேரமின்மையாலும்
எட்டி நின்று அதன் அழகை
ரசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு
ஒரு அற்புத ஓவியமாய்...

குளிர்ந்த காற்றும்
இரசிப்பவர்களை  இரசிப்பதே போதுமென்று 
கரையோரம் அமர்ந்திருந்து
அந்தச் சூழலை
உள்வாங்கிக் கொண்டிருந்தோருக்கு
ஒரு அதிசயப் பொருளாய்...

இரசித்தலும்
அனுபவித்தலும்
இணைத்துக் கொள்வதில்தான் என
உணர்ந்து தன்னுள் இறங்கியவர்களுக்கு
ஒரு கற்பக விருட்ஷமாய்....

நம்பிக்கையின்
ஆழம் பொருத்து
அருள் தரும் ஆண்டவானாய்
அவரவர் மன நிலைக்குத் தக்க
தன்னை உருமாற்றிக் கொண்டிருக்கிறது
அந்த அற்புத அதிசயக் கடல்

நம்  புதுகைப் பதிவர் சந்திப்பைப் போலவும் ....

Saturday, October 3, 2015

வாழும் வகையறிந்து.....

அந்த அழகிய ஏரியில்
உல்லாசப் படகில்
எல்லோரும் பயணித்துக் கொண்டிருந்தார்கள்
அதில் நீச்சல் அறிந்தவர்களும் இருந்தார்கள்
அறியாதவர்களும் இருந்தார்கள்

அறிந்தவர்கள் எல்லாம்
ஏரி நீரின் குளுமையை
கரையோர மலர்களை
படகு செலுத்துவோனின் லாவகத்தை
ரசித்து மகிழ்ந்து
உல்லாசமாய் பயணித்துக்கொண்டிருந்தார்கள்

அறியாதவர்கள் எல்லாம்
ஏரியின் ஆழத்தையும்
படகின் வேகத்தையும்
இதற்கு முன் நடந்த விபத்தையும்
எண்ணி எண்ணிப்  பயந்து
படகுக்குள்  நடுங்கிக் கிடந்தார்கள்

படகில் பயணம் செல்வதற்கு
நீச்சல் தெரிந்திருக்கவேண்டியது
நிச்சயம் அவசியமில்லைதான்
உல்லாசமாக பயணம் செய்வதற்கு
அவசியம் தெரிந்திருக்கவேண்டும்

Friday, October 2, 2015

புதுகை நகரைக் கலக்க வாரீர் 11

எதுகை மோனைத் தேடித் தேடி
இளைத்துக் கிடந்த பதிவர் எல்லாம்
புதுமை புரட்சி என்று எழுதி
பொங்க வைத்த பதிவர் எல்லாம்
முதுமை வந்தும் இளையோர் போல
இயங்கி வந்தப் பதிவர் எல்லாம்
புதுகை புதுகை என்று நித்தம்
பதிவு போடும் மாயம் என்ன ?

முகநூல் போதும் என்று ஓடி
மூலம் மறந்த பதிவர் எல்லாம்
பகர எளிது டுவிட்டர் என்றே
பறந்து போன பதிவர் எல்லாம்
உடனே பகிர வாட்ஸப் போல
உண்டோ என்ற பதிவர் எல்லாம்
திடமாய்  மாறி பதிவர் அணியில்
திரண்டு விட்ட மாயம் என்ன ?

நான்காம் சங்கம் இதுவே என்று
நாடே வியந்து போற்றும் வண்ணம்
மீண்டும் இதுபோல்  நடத்தல் அரிதே
என்று உலகே வியக்கும் வண்ணம்
மாய்ந்து மாய்ந்து புதுகைப் பதிவர்
ஆற்றும் பணியே காரண மென்பேன்
ஆய்ந்து அறிய  திரண்டு வாரீர்
புதுகை நகரைக் கலக்க வாரீர்

Thursday, October 1, 2015

புதுகை பதிவர் சந்திப்பு ( 10 )

மக்களால் மக்களுக்காக மக்களுடன் என்பதைப்போல்
பதிவர்களால் பதிவர்களுக்காக பதிவர்களுடன்
வருடா வருடம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்
பதிவர்  சந்திப்புத் திரு நாளுக்கான அழைப்பிதல்
இதோ இப்போது தங்கள் பார்வையில்..

முதல் ,இடை ,கடையென தமிழ்சங்கம்
முடிவடையாது கணினி ச் சங்கம் என
 நான்காவது சங்கமாய் தொடர்ந்து கொண்டுதான்
 இருக்கிறது என்பதற்கு அத்தாட்சியாய்
இதோ இப்போது நம் புதுகையில்...

தங்கள் படைப்பில் சிறந்து எது எனக் கேட்பின்
இதுவரை படைத்ததல்ல இப்போது
படைத்துக் கொண்டிருக்கும் இந்தப் படைப்பு
எனச் சொல்லும் துடிப்புமிக்க படைப்பாளியைப் போல்

இதுவரை நடந்து முடிந்த பதிவர் சந்திப்பை
மிஞ்சும் வகையில்உங்கள் பங்களிப்புடன்
நடைபெற இருக்கிறது
இந்தப்  புதுக்கோட்டை பதிவர் சந்திப்பு

அவசியம்  தவறாது கலந்து கொள்வீர்
நிறைவான மகிழ்வை அள்ளிச் செல்வீர்

 

" வாழ்க காந்தி மகான் "

 ஆண்டுக்காண்டு
வலிமை மிக்க ஆயுதங்களை
உற்பத்தி செய்யதலும்
அதன் பயன்படுத்துவதற்கு இசைவாக
நாட்டுக்கு நாடு
வன்மம் வளர்த்தலுமே
சரியானதாக இருக்கிற உலகுக்கு
நிராயுதபாணிப் போராட்டத்தைப் போதித்த
"அவரின்" போதனை எப்படிச் சரிவரும் ?

அன்னிய முதலீடுகளும்
பன்னாட்டு நிறுவனங்களுமே
நம் கால் வயிறுக்கு
கஞ்சி ஊற்றும் என
நம்பி செயலபட்டுக் கொண்டிருக்கும் நமக்கு
"அவரின்"கிராமப் பொருளாதாரமும்
சுயசார்புத் தத்துவங்களும்
எப்படிச் சரியானதாக இருக்கும் ?

நுகர்வுக் கலாச்சாரமே
பொருளாதார வளர்ச்சிக்குத் தூண்டும் எனவும்
உணர்வைத் திருப்திப்படுத்துதலே
வாழ்வின் உன்னத நோக்கம் என்பதில்
சந்தேகமின்றி இருக்கும் நமக்கு
"அவரின்" அமைதித் தேடலும்,புலனடக்கமும்
எப்படிப் பொருந்தி வரும் ?

பொய்யும் பித்தலாட்டமுன்றி
நம்பிக்கைத் துரோகமும் நயவஞ்சகமுமின்றி
ஒரு நாளைக் கடத்துதல்
அரிதென ஆகிப்போன இன்றையச் சூழலில்
அதுதான் வாழ்க்கை நெறியென
ஆகிப்போன நிலையில்
"அவரின் "சத்தியமேவ ஜெயதே
எப்படி உதவக் கூடியதாய் இருக்கும் ?

கரன்சியில் "அவரின் திருவுருவை அச்சிட்டு
கோடிக் கோடியாய் ஊழல் செய்யும் நமக்கு
அவரின் கொள்கைகளுக்கு அஞ்சலி செய்துவிட்டு
"அவர்""பிறந்ததைக் கொண்டாடுவதுதான்
ஆகக் கூடிய அருமையான வழி
அவ்வழி அயராது இன்றுபோல்
என்றும் தொடர்வோம்
இருபதில் வல்லரசாய் உயர
அயராது முயல்வோம்
 "
வாழ்க காந்தி மகான் "