Tuesday, June 21, 2011

நமைச்சல்..

தனித்து நிற்கவா ?
உயரம் கூட்டிக் கா  ட்டவா ?
எப்போதும் பசி வெறியில் திரியும்
தன்முனைப்பு ஓ நாய்க்கு விருந்தளிக்கவா ?
அறிமுகத்திற்கு ஓர் அடையாளம் தேடியா ?
மன முதுகின் அழுக்கெடுக்க சில
நகங்கள் கொண்ட கைகள் தேடியா ?
யதார்த்தப் புறவெளிக் கஞ்சி
குகைக்குள் பதுங்கும் கோழைத்தனமா ?
செயலற்ற தன்மைக்கு வாங்கும்
கௌரவ வக்காலத்தா ?
அறிந்தவைகள் தெரிந்தவைகள்
செரிக்காது எடுக்கும் வாந்தியா ?
புண் மறைக்கப் போடும் பட்டுச் சட்டையா ?
அல்லது
போனபின் சொல்வதற்கு ஒரு
சிறப்புத் தகுதி வேண்டியா ?
நமைச்சலுக்கான காரணம் தெரியாவிடினும்
சொறியாது இருக்க முடியவில்லை
எப்படி யோசித்த போதும்
ஒரு காரணமும் தெரியவில்லை
ஆனாலும்
எழுதாது இருக்க முடியவில்லை

21 comments:

  1. உங்களுக்குக் கவிதை எழுத காரணம் இல்லாவிடிலும் தொடர்ந்து எழுதுங்கள்… அப்போது தானே எங்களுக்குத் தெவிட்டாத சுவையுள்ள கவிதைகள் கிடைக்கும்… நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி. தொடருங்கள்…

    ReplyDelete
  2. //நமைச்சலுக்கான காரணம் தெரியாவிடினும்
    சொறியாது இருக்க முடியவில்லை
    எப்படி யோசித்த போதும் ஒரு காரணமும் தெரியவில்லை, ஆனாலும் எழுதாது இருக்க முடியவில்லை//

    இது எழுத்தாளர்களுக்கே ஏற்படும் ஒருவித பிரத்யேக நமைச்சல். எழுதி எழுதித்தான் (சொரிந்து சொரிந்து தான் என்பதுபோல) சுகம் காண முடியும்; சொஸ்தம் அடைய முடியும். வேறு மாற்று மருந்தேதும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
    எனவே விடாது சொரியுங்கள்
    ஸாரி விடாது எழுதுங்கள்.

    அதே நமைச்சலுடன் தவித்துத் தத்தளித்து வரும்,
    உங்கள் அன்புள்ள vgk

    ReplyDelete
  3. //நமைச்சலுக்கான காரணம் தெரியாவிடினும்
    சொறியாது இருக்க முடியவில்லை
    எப்படி யோசித்த போதும் ஒரு காரணமும் தெரியவில்லை, ஆனாலும் எழுதாது இருக்க முடியவில்லை//

    சில இயல்பானது. கவிதை அருமை!

    ReplyDelete
  4. காரணம் கண்டறிய முடியா "வாழ்க்கை" வரிகள். . .

    ReplyDelete
  5. தங்களைப் போன்றவர்களின் கவிதைகளுக்கு காரணம் எதற்கு.
    எழுதும் நமைச்சல் இருக்கும் வரை எழுதலாமே

    ReplyDelete
  6. எத்தனை ஆழமான வரிகள். உள்ளார்த்தம் நிறைந்த சொற்சேர்க்கை. மன முதுகின் அழுக்கெடுக்க சில
    நகங்கள் கொண்ட கைகள் தேடியா ?அறிந்தவைகள் தெரிந்தவைகள் செரிக்காது எடுக்கும் வாந்தியா ?
    அற்புதம். வாழ்த்துகள்

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள்.
    கவலைப்படாதீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். யாரைப்பற்றியும் கவலைப் படாதீர்கள். எழுதுவது ஒரு ஆத்மா திருப்தி.
    நன்றி.

    ReplyDelete
  8. எழுதுவது மனதுக்கு ஒரு மருந்தே..

    ReplyDelete
  9. எழுத முடியாமலிருப்பதையே அழகாக எழுதி கவிதையாக்கும் திறன் படைத்த்வர் நீங்கள். மனசில் தோன்றும் எண்ணங்களுக்கு வரி வடிவம் கொடுத்தாலே நமைச்சல் குறைய வாய்ப்பு அதிகம் என்பது என் அபிப்பிராயம். தொடர்ந்து எழுதுங்கள் .தவறாது தொடர்வேன்.

    ReplyDelete
  10. சுகமான நமைச்சல்கள்... இருக்கலாம்.. தொடரலாம்.. சொறியலாம்..... நல்ல நமைச்சல்... ;-))

    ReplyDelete
  11. //அறிந்தவைகள் தெரிந்தவைகள்
    செரிக்காது எடுக்கும் வாந்தியா ? //

    அருமை !

    ReplyDelete
  12. ஒவ்வொரு வரியும் ஆயிரமாயிரம்
    அர்த்தங்கள் சொல்லும்
    அசத்தல் வரிகள்
    ரமணி சார்
    படைப்பாளியின்
    வித்யாவஸ்த்தையை
    விளக்கமாக
    சொல்லியவிதம்
    அருமையிலும் அருமை

    ReplyDelete
  13. நமைச்சல் கூட நலம் பயக்கிறது அருமையான கவிதை வரிகளாய்!

    ReplyDelete
  14. நிச்சயம் இந்தக் காரண‌ங்களுக்காகவெல்லாம் நீங்கள் கவிதை எழுதுவதில்லை! கலைத்தாகம் இருக்கிறவர்களுக்கு எத்தனை எழுதினாலும் அந்த தாகம் தீராது! நிறைவும் வராது! பாறையைச் செதுக்கச் செதுக்கத்தான் அழகிய சிற்பம் உருவாகிறது! அதே மாதிரி தான் உங்களை நீங்களே செதுக்கச் செதுக்க கவிதைச் சிற்பங்கள் அழகழகாய் வந்து விழுகின்றன! அருமையான படைப்பாளிக்கு எதற்கு எதிர்மறைக் காரணங்கள்?

    ReplyDelete
  15. ம்ம்ம் உண்மைதான். எழுதுவதில் உள்ள சுகம், சோகம்
    இரண்டுமே சுவையானதுதான்.அடுத்து என்ன என்ன என்று மனம் முரண்டும் போதுகள் தான் அதிகம்.

    ReplyDelete
  16. செயலற்ற தன்மைக்கு வாங்கும்
    கௌரவ வக்காலத்தா ?-

    எப்படியாயினும் எழுதுதல் சுகமே.

    ReplyDelete
  17. அடடா அருமை ரமணி சார், எல்லோருக்குள்ளும் இருக்கும் நமைச்சலை பட்டவர்த்தனமாக சொல்லிவிட்டீர்கள் . அழகாக முடித்துள்ளீர்கள் என்ன பண்ண எழுதாம இருக்க முடியலையே superb

    ReplyDelete
  18. நெஞ்சத்தின் குடைச்சலை நமைச்சலென்றே-நீர்
    கொடுத்திட்ட தலைப்பே மிகவும்நன்றே
    வஞ்சிக்கும் சிலநேரம் வாரா உண்மை-அடுத்த
    வார்த்தைக்கு வழிதேடி வருந்தநம்மை
    பஞ்சடி படுவது போன்றதாமே-உள்ளம்
    படுகின்ற பாட்டினை சொல்லநாமே
    துஞ்சவும் இயலாது முடிக்கும்வரை-இரமணி
    தொடுத்தீரே கவிதையாய் இல்லைகுறை

    புலவர் சா இராமாநுசம்

    அல்லது
    போனபின் சொல்வதற்கு ஒரு
    சிறப்புத் தகுதி வேண்டியா
    நல்ல வரிகள், கருத்தாழம் மிக்க வரிகள்
    நன்றி இரமண நன்றி
    சா இரா






    நெஞ்சத்தின் குடைச்சலை நமைச்சலென்றே-நீர்
    கொடுத்திட்ட தலைப்பே மிகவும்நன்றே
    வஞ்சிக்கும் சிலநேரம் வாரா உண்மை-அடுத்த
    வார்த்தைக்கு வழிதேடி வருந்தநம்மை
    பஞ்சடி படுவது போன்றதாமே-உள்ளம்
    படுகின்ற பாட்டினை சொல்லநாமே
    துஞ்சவும் இயலாது முடிக்கும்வரை-இரமணி
    தொடுத்தீரே கவிதையாய் இல்லைகுறை

    புலவர் சா இராமாநுசம்

    அல்லது
    போனபின் சொல்வதற்கு ஒரு
    சிறப்புத் தகுதி வேண்டியா
    நல்ல வரிகள், கருத்தாழம் மிக்க வரிகள்
    நன்றி இரமண நன்றி
    சா இரா

    ReplyDelete
  19. நீங்கள் சொன்ன அனைத்து காரணங்களும் ஒரு காரணம்.
    அதைத் தவிர நிறைய நேரம் சும்மா கிடைப்பதும் , கணினி
    நம் கையில் உள்ளதும் சில புறக்காரணங்கள் . ஹஹஹா...
    நீங்கள் ஆழ்ந்து அடுக்கிய விதம் அருமை சார்.

    ReplyDelete
  20. ஸ்ரவாணி //.

    தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி
    நீங்கள் சொல்லிப்போகும் காரணம்தான் யதார்த்தமானது
    உண்மையானதும் கூட
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete