Showing posts with label அரசியல் சும்மா ஒரு மாறுதலுக்கு. Show all posts
Showing posts with label அரசியல் சும்மா ஒரு மாறுதலுக்கு. Show all posts

Wednesday, April 11, 2018

கவிதையை நிறைவு செய்யலாமே

போர்க்களமென
இதிகாச காலங்களில்
ஓரிடமிருந்தது
வீரர்கள் மட்டும் தம் வீரம் காட்டும்
ஒரு பெரும் மைதானமாய்...

இன்று போல்
எந்த விதத்திலும் காரணமாகாத
வெகு ஜனங்கள்
வாழும் பகுதியாய் அல்லாமல்

வீரர்களென
மன்னர் காலம் வரை
மனிதர்கள் இருந்தார்கள்
நேருக்கு நேர் நின்று போர்புரிதலே
வீரத்திற்கு இலக்கணமென

இன்றுபோல்
எங்கிருந்தோ நள்ளிரவில்
எவரோ குண்டுமழை
பொழிதல் போலல்லாமல்..

மன்னர்களென
ஒரு குடும்பமே தொடர்ந்து
நாட்டை ஆண்டுவந்தது
மக்களுக்காக வாழ்வதே
தமக்கான பணியென்று குழப்பமில்லாமல்

இன்றுபோல்
தம் குடும்ப நலன் காக்க
தம் குடும்பமே பதவியில் தொடரவேண்டும்
என்னும் சுய நலம் போலல்லாமல்

இவை அனைத்திற்கும் காரணம்...

(அவரவருக்குத் தோன்றும் காரணங்களை
சுருக்கமாய்ப் பதிவு செய்து
கவிதையை நிறைவு செய்யலாமே )

Tuesday, June 7, 2016

எந்த முதல்வர் ?

மீண்டும் நம்முள் பரபரப்பூட்ட
பதட்டமூட்ட
முயற்சிக்கின்றன.....

செய்திகள் என்னும் முகமூடியணிந்து
கருத்தைப் பரப்பும்
"வியாபாரப் " பத்திரிக்கைகள்

அவர்கள் எதிர்பார்க்கிறபடி
இனி நாம்
பரப்படையப் போவதில்லை
பதட்டம் கொள்ளப் போவதும் இல்லை

தீர்ப்பு இப்படி எனில்
அவர் தமிழக முதலவர்

தீர்ப்பு ஒருவேளை
அப்படியெனில்
அவர் மக்கள் முதல்வர்

முன் அனுபவம்
அவர்களுக்கும் இருக்கிறது
நமக்கும் இருக்கிறது

எந்த முதல்வர் என்பதைத்தான்
நீதி மன்றம் முடிவு செய்யப் போகிறதே ஒழிய
முதல்வர் இல்லை என்பதை அல்ல

அவர்களும்
தெளிவாகத்தான் இருக்கிறார்கள்
நம்மைப் போலவே

பத்திரிக்கைகள்தான்
குழம்பித் திரிகின்றன
அதனால் நம்மையும்
குழப்ப முயற்சிக்கின்றன

நாம் தொடர்ந்துத் தெளிவாய் இருப்போம்
நம் கடமையில் கவனமாய் இருப்போம்

Monday, March 14, 2016

ஒரு ஜென் கதை

ஒரு ஜென் கதை

அந்த நெடுஞ்சாலைச் சந்திப்பில் ஒரு சிறிய கடை
 வைத்தபடி ஒரு ஜென் குரு இருந்தார்

அவர் ஜென் குரு என அறிந்ததால் அவரிடம்
வாழ்வியல் பாடங்களை உடன் இருந்து
அறியலாம் என ஒரு அறிஞரும் அவருடனிருந்தார்

ஒரு நாள் அந்த வழி வந்த ஒரு வழிப்போக்கன்
ஜென் குருவிடம் "ஐயா நான் வெளியூர்.
பஞ்சம் பிழைக்கவென்று ஒரு நல்ல ஊரைத் தேடிப்
பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன்

தங்களைப் பார்க்க கொஞ்சம் விஷயமானவர் போல்
தெரிகிறது .அதனால் கேட்கிறேன்
அதோ அங்கு தெரிகிற ஊர் நல்ல ஊரா ?
அந்த ஊர் மக்கள் நல்ல மக்களா ?
நான் அங்கு சென்றால் நிம்மதியாகச் சில காலம்
இருக்கலாமா ? " எனக் கேட்கிறார்.

அவர் உற்றுப் பார்த்த ஜென் குரு "
ஐயா தாங்கள் எந்த ஊரில் இருந்து வருகிறீர்கள்
அந்த ஊர் மக்கள் எப்படிப்பட்டவர்கள்
அதைச் சொன்னால் நான் உங்களுக்கு
இந்த ஊர் சரிப்பட்டு வருமா எனச் சரியாகச்
சொல்லிவிடுவேன் " என்கிறார்

அதைக் கேட்ட அந்த வழிப்போக்கன் "ஐயா
அதை ஏன் கேட்கிறீர்கள் .நான் இருந்த ஊரைப் போல
மோசமான ஊரையோ மோசமான மனிதர்களையோ
உலகில் எங்கும் பார்க்க முடியாது
அடுத்தவன் வாழ்வதை பொறுக்காத
பொறாமைக்காரர்கள்
அதுதான் கிளம்பிவிட்டேன் " என்கிறார்

அதைக் கேட்ட ஜென் குரு " நீங்கள்
சொன்னது நல்லாதாய்ப் போயிற்று. ஏனெனில்
உங்கள் ஊரைப் போலத்தான் இந்த ஊரும்,
இந்த ஊர் மக்களும்.
அடுத்தவன் வாழப் பொறுக்காதவர்கள்
எனவே இந்த ஊர் வேண்டாம் " என்கிறார்

அதைக் கேட்ட வழிப்போக்கனும் " நல்லது ஐயா
வேறு ஊர் பார்க்கிறேன் எனத்
தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

அவர் சென்ற சில மணி நேரத்தில் அதைப் போன்றே
வந்த வேறொரு வழிப்போக்கன்
 அதைப் போன்றே தான் பஞ்சம் பிழைக்க
புதிய ஊர் தேடிப் போவதைச் சொல்லி தூரமாகத்
தெரிகிற ஊர் நல்ல ஊரா அந்த ஊர் மக்கள்
நல்ல மக்களா எனக் கேட்கிறார்

முதல் வழிப்போக்கன் கேட்டதைப் போலவே
ஜென் குருவும் அவரது பழைய ஊர் மக்கள்
குறித்தும் ஊர் குறித்தும் கேட்கிறார்

அதற்கு அந்த வழிப்போக்கன் " ஐயா என் ஊர் மக்கள்
மிகவும் நல்லவர்கள். உதவும் குணமுடையவர்கள்
ஊரில் மழை இன்றி பஞ்சம் வந்து விட்டது
அதனால் பஞ்சம் பிழைக்க வேறு ஊர் தேடுகிறேன்
நிச்சயம் சில மாதங்களில் எங்கள்  ஊர்
 திரும்பி விடுவேன்

அதுவரை இருக்கத்தான் இந்த ஊரைப்
பற்றிக் கேட்கிறேன்" என்கிறான்

அதைக் கேட்ட ஜென் குரு " அப்படியா ரொம்ப நல்லது
உன் ஊரைப் போலத்தான் இந்த ஊர் மக்களும்
மிக மிக நல்லவர்கள்.உதவும் குணமுடையவர்கள்
தாராளமாக இந்த ஊருக்குப் போகலாம் " என்கிறார்

பாதசாரியும் குருவை வணங்கி தன் பயணம்
தொடர குருவுடன் இருந்த அறிஞர் குழம்பிப் போகிறார்

ஒரே ஊர் எப்படி இரு தன்மை உடையதாய் இருக்கும்
குரு ஏன் ஒருவருக்கு அப்படியும் ஒரு வருக்கு இப்படியும்
சொல்கிறார் எனக் குழம்பி குருவிடமே
விளக்கம் கேட்கிறார்

ஜென் குரு சிரித்தபடி சுருக்கமாக " ஊருக்கெனத் தென
தனிக் குணமில்லை நாம் எப்படி இருக்கிறோமோ
அப்படித்தான் ஊரும் இருக்கும்

முன்னவன் ஊரின் மோசமான பகுதியை மட்டும்
அறிந்திருக்கிறான்.பின்னவன் ஊரின் நல்ல பகுதியை
அறிந்திருக்கிறான்.
ஊரும் அப்படித்தான் இருந்திருக்கும்
இவர்கள் போகிற ஊரும் அவர்களுக்கு அப்படித்தான்
இருக்கும் " என்கிறார்.

அறிஞரும் ஒரு வாழ்வியல் பாடம்
மிக எளிமையாகப் புரிந்ததில் மகிழ்ந்து
குரு நாதரைப் பார்த்து மெல்லப் புன்னகைத்தார்

 பின் குறிப்பு  :

 இது எல்லோருக்கும் தெரிந்த கதைதான்
ஆனாலும்  இந்தக் கட்சிச் சரியில்லை என்று
அந்தக்  கட்சிக்கும் அந்தக் கட்சி சரியில்லையென்று
இந்தக் கட்சிக்கும்.....

 இந்தச் சங்கம் சரியில்லையென்று  அந்தச்
 சங்கத்திற்கும்   அந்தச் சங்கம் சரியில்லையென்று
இந்தச் சங்கம்   மாற நினைக்கிறவர்களுக்கு
எதற்கும்  ஒரு படிப்பினையாக  இருக்கட்டுமே
என்றுதான் இது  ...

Saturday, February 27, 2016

விஜயகாந்த் அண்ணே....

நானும் நம்ம மதுரைதான் அண்ணே.

கண்கள் சிவப்பேற ஆரம்ப கால சினிமாக்களில்
கொடியவர்களைப்  பந்தாடுவதையும்
காக்கிச் சட்டையில் ரவுடிகளையும்
போலி அரசியல்வாதிகளையும்
போட்டுத் தாக்கியதையும்
ரசித்து புரட்சித் தலைவருக்கு அடுத்து
உங்கள் படங்களைத்தான்  அண்ணே
அதிகம் பார்ப்பேன்

பின் கொஞ்சம் நகர்ந்து நடிகர்
சங்கத் தலைவர் ஆனது
அது வைத்திருந்த கடனை அடைத்தது
எல்லாம் தங்கள் மதிப்பை என்னுள்
கூட்டியது  நிஜம்தான் அண்ணே

அணி மாறி நின்னு பின்னால தனித்து
நின்னு நீங்க செய்த அரசியலையெல்லாம்
விரிவா எழுதனும்னா அதிகப் பக்கம்
ஆகிடும் அண்ணே.அதனால அதையெல்லாம்
விடுத்து நேரடியாக இப்ப விஷயத்துக்கு
வரேன் அண்ணே.

இப்படியெல்லாம் அறிந்தோ அறியாமலோ
அல்லது அரசியல் சூழலினாலோ அல்லது
சுய நல ஆதாயத்துக்காகவோ நீங்க
மாறி மாறி நின்னதுனால உங்களுக்குன்னு
ஒரு ஓட்டு சதவீதம் இருக்குன்னு
எல்லோருக்கும் புரிஞ்சு போச்சு அண்ணே

உங்களுக்கும் புரிஞ்சு போச்சு அண்ணே
அதனாலதான் நீங்களும் இப்ப ரொம்ப
போங்கு ஆட்டம் போடறிங்க  அண்ணே

ஆனா இப்ப மிகச் சரியா முடிவு எடுக்காட்டி
அது தலைகிழா மாறவும் தரிசாப் போகவும்
நிச்சயம் வாய்ப்பிருக்கு அண்ணே

எனக்குத் தெரிய தமிழகத்தில்
ஒவ்வொரு ஜாதிக்கும்
ஒரு பெல்ட் இருக்குண்ணே

உங்க இனத்துக்கு மட்டும் ஒரு பெல்ட்டுன்னு
இல்லாம பரவலா இருக்கிறது மட்டுமல்லாம
எண்ணிக்கை ரீதியாக நடுத்தர மக்களாகவும்
இன்னும் உழைக்கும் மக்களாகவும்
கணிசமான பணக்கார்களாகவும் பரந்து
கிடக்குண்ணே

அதனாலதான் புரட்சித்தலைவரை
தி.மு.கவே எதிர்த்து போராட்டம் நடத்தத்
தயங்கியபோது நாராயணசாமி நாயுடுவாலே
ஒரு பெரிய இயக்கத்தை தலைவருக்கு எதிரா
நடத்த முடிந்தது

தி.மு.க வில் சுப்புவுக்கு  (பின் அதிமுகவில்  )
மிக மோசமாக மின்சாரத்துறை இருந்தபோதும்
ஆற்காட்டாரை விடாது கலைஞர்
 தாங்கிக்  கொண்டிருந்ததெல்லாம்
மறைமுகமாகஉங்கள் ஜாதியைத்
திருப்திப்படுத்தத்தான் அண்ணே

வை.கோ அவர்கள் பிரிந்தபோது கூட
எல்லா கட்சியிலேம் நம்ம கறிவேப்பிலைபோல
பயன்படுத்தறாங்க, இதோ நமக்குன்னு
ஒரு தலைவர்ன்னுஅவர் பின்னால
போனாங்க அண்ணே

அவர் பாவம் நிலைமை புரியாம
மோசபோட்டொமியா,கிரீஸு,மார்க்ஸுன்னு
புலி சிங்கம்முன்னு  கவுண்டமணி
மாதிரி உள்ளூரைபத்தியே பேசாம
 வெறுப்பேத்தி நோகவிட்டுட்டாரு அண்ணே

அதுல வேறுத்துப் போனது பெரும்வாரி  ஜனம்
உன்னை நம்பி உங்கப் பக்கம் இருக்கு அண்ணே

இதை மனசுல வைச்சு முடிவு எடுங்க அண்ணே
நிலைமைய கொஞ்சம்  தெரிஞ்சுக்க  அண்ணே

இல்லாட்டி முன்னால சொன்னவங்க
நிலைமைதான் உங்களுக்கும் அண்ணே

எங்களுக்கு அதுல சந்தேகம் இல்ல அண்ணே

Saturday, February 20, 2016

ஊரான் வீட்டு நெய்யே.. ......

ஒரு பிரபலமான சோப்புக் கம்பெனியில்
ஒரு பெரும் பிரச்சனை.

சோப்பின் தரம்,சோப்பின் பெயர், மார்கெட்டிங்
எல்லாம்மிகச் சிறப்பாக இருந்தும்,எவ்வளவுதான்
கவனமாக இருந்தும்,இயந்திரத்தில் ஏற்படும்
சில தவறுதல்கள் காரணமாக சில சோப்பு பேக்கில்
சோப்பு இல்லாமல் மார்கெட்டுக்குப் போய்விடுகிறது.

இதனால் ஏற்படும் கம்பெனியின் மெரிட்
குறைவினைச்சரி செய்ய அந்தக் கம்பெனியின்
 உயர் மட்டஅதிகாரிகள் கூடி  விவாதித்து
முடிவுக்கு வந்தார்கள்

அதன்படி சோப்பு முடிவாக பேக் ஆகி செல்லும்
இடத்தில் எக்ஸ்ரே கருவியையப் போன்று ஒரு
கருவியை நிறுவுவதென்றும் அதன் மூலம்
சோப்பு இல்லாத பேக்கைக் கண்டு பிடித்து
எடுத்துவிடலாம் எனவும்,அதற்குச் சில இலட்சங்கள்
செலவாகும் என்றாலும் கம்பெனியின் தரம்
நிலை நிறுத்தப்படும் என்பதால் அந்தச் செலவு ஒரு
பெரிய பிரச்சனையில்லை என முடிவு செய்தார்கள்

அந்த உயர் அதிகாரிகளில் ஒருவர் மட்டும்
எப்போதும்கீழ் நிலை ஊழியர்களிடம் கலந்து பேசி
ஒருபிரச்சனைக்குத் தீர்வு கண்டால் அது
நடைமுறைக்குச் சாத்தியப்பட்டதாக இருக்கும்
என்கிற கருத்துக் கொண்டவர்.

அதனால் எப்போதும் கீழ் நிலை ஊழியர்களிடம்
கேண்டீனில் டீ சாப்பிடுகிற சாக்கில் எப்போதும்
அவர்களுடன் ஒரு சுமுக உறவினையும்
தொடர்பினையும் வைத்திருப்பார்

அதன்படி  மறு நாள் கேண்டீனில் டீ சாப்பிட்டபடி
இந்தக் காலி டப்பா பிரச்சனைக் குறித்தும்,அதற்கு
ஒரு மிஷின் வாங்க இருக்கிற விஷயம் குறித்தும்
மெல்லச் சொல்ல...

ஒரு ஓரம் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த
ஒரு தொழிலாளி

" ஐயா நாங்களும் இது விஷயம் கேள்விப் பட்டோம்
எக்ஸ்ரே மிஷினுக்கு என அத்தனை இலட்சங்கள்
செலவு செய்வதற்குப் பதிலாக , சோப்புபேக் ஆகி
வருகிற இடத்தில் கொஞ்சம் வேகமாக
காத்துவரும்படி ஏற்பாடு செய்தால்
காலி டப்பா விழுந்து விடும்
அதற்கு அதிகம் செலவாகாது.சரியாகச் சொன்னா
ஒரு ஃபேன் செலவுதான் " என்றார்

அந்த அதிகாரி இந்த சின்ன விஷயம் நமக்கு
எப்படித் தோன்றாது போயிற்று எனவெட்கப் பட்டுப்
போனார்

இந்தக் கதை இப்போது எதற்கெனில்..

நமது தமிழ் நாடு அரசு பல ஊதாரிச் செலவுகள்
செய்துஇலட்சம், கோடியென கடன் தொல்லையில்
இருக்கிற நிலையில், தமிழில் பெயர் வைத்தால்
அந்தத் திரைப்படத்திற்கு வரி விலக்கு எனச்
சொல்லி பல இலட்சம் வருவாயை வீணாக்குவதை விட
தமிழ் அல்லாது வேறு மொழியில் பெயர்
இருக்குமானால்கொஞ்சம் வரி கட்டணும் எனச்
சொன்னால் வீண் செலவுகள் குறையுமே

கோடிக் கோடியாய் நடிகர் நடிகையருக்கு
கருப்புப்பணம் கொடுத்து படம் எடுக்கும் நபருக்கு
எதுக்கு மக்கள் பணத்தை வீணாய்க்
கொட்டித் தொலைக்கணும் ?

தமிழில் பெயர் வைப்பதும் நிச்சயம் தொடருமே

இதை  இவர்கள் யோசிக்காததன் காரணம்
தலைப்பில் சொன்னதுதான்......

Tuesday, February 16, 2016

அம்மணமானவர்களின் ஊரில்.........

மந்தைகளாய்த் தொண்டர்கள் இருத்தலே
தான் தலைவானாகத் தொடர்வதற்கான
மிகச் சரியான தகுதியென்பதில்
தலைவர் மிகக் கவனமாய் இருந்தார்

அதுவரை எதிரியாயிருந்த அணியுடன்
கூட்டு சேரவேண்டிய அவசியம் குறித்து
அடுக்குமொழியில் மிக அழகாகக்
காரணங்களை  அவர் அடுக்கிப் போக
தொண்டர்கள் "அசந்தே" போயினர்

கரகோஷத்தை எதிர்பார்த்த தலைவருக்கு
அவர்களின் மௌனமான சம்மதம்
சங்கடமளிக்க, அதிர்ச்சியளிக்க,
புரியவில்லையோ என்கிற குழப்பத்தில்
கதை சொல்லி விளக்கத் துவங்கினார்

"நமக்கும் அவர்களுக்கும் இடையில்
கொள்கைகளில் கோட்பாடுகளில்
மாறுபாடு இருக்கத்தான் செய்கிறது\
அது குறையவில்லை
அதை நான் மறுக்கவுமில்லை
ஆனாலும் கூட
பொதுவான எதிரியை வீழ்த்துவதற்காக
நாம் ஒன்று சேருவது என்பது
காலத்தின் கட்டாயம் "
என்ற முன்னுரையோடு
கதை சொல்லத் துவங்கினார் தலைவர்

"ஒரு கிராமத்து தோட்டத்தில்
செழித்து வளர்ந்திருந்தது ஒரு வாழைமரம்
அதன் அடியில் கிடந்தது ஒரு மண்ணாங்கட்டி
இருவரும் அருகருகே இருந்தும்
இருவரும் எதிரிகளைப் போலிருந்தனர்
ஒருவருக்கொருவர் உதவியாயில்லை
இதை மிகச் சரியாகப் புரிந்து கொண்ட
ஆதிக்க மனம் கொண்ட
காற்றும் மழையும் அவைகளை ஒழிக்கப் பார்த்தன
காற்றில் வாழை சாய்வது குறித்து
மண்ணாங்காட்டி கவலைகொள்ளவில்லை
மழையில் மண்ணாங்கட்டி கரைவது குறித்து
வாழையும்  வருத்தப்படவில்லை
அவைகள் அழிந்து கொண்டிருந்தன

அந்த சமயத்தில்தான் நம் போல
சுயமாக சிந்திக்கும் ஆற்றல் அந்த வாழைக்கும் வந்தது

"மண்ணாங்கட்டி நாம் மிக அருகில் இருந்தும்
சிறு சிறு வேறுபாடுகளை பெரிதுபடுத்தி
மிக விலகிப்போய்விட்டோம்
அது இந்த ஆதிக்கக் காரர்களுக்கு
மிகுந்த வசதியாய் போய்விட்டது
இனியும் இந்த அவலம் தொடரக்கூடாது
காற்று பலமாக வீசினால் நீ என் மீது
சாய்ந்துகொள் நான் சாயமாட்டேன்
மழையெனில் நான் உன்னை மூடிக்கொள்கிறேன்
நீ கரையமாட்டாய்"  என்றது
அது போலவே நாமும் அவர்களும் ..." என
கதை சொல்லி முடிப்பதற்குள்
கரகோஷம் அரங்கத்தை அதிரச் செய்தது

மிகப் பெரிய கொள்கை விளக்கத்தை
ஒரு எளிய கதையில் சொல்லிய தலைவரின்
மதியூகத்தை எண்ணி தொண்டர்கள்
புளங்காகிதம் கொண்டனர்

தலைவர் பெருமையுடன் கூட்டத்தைப் பார்த்திருக்க
முன் வரிசையில் இருந்த தொண்டர் ஒருவர் எழுந்து
"தலைவா நீங்கள் சொல்வது மிகச் சரி
ஆனால் காற்றும் மழையும் சேர்ந்து வந்தால்
என்ன செய்வது ? " என்றான்

தலைவர் அதிர்ந்து போனார்
இப்படி யோசிக்கத் தெரிந்தவன் எப்படி நம்
கட்சிக்குள் வந்தான் எனக் குழம்பியும் போனார்
இதனை வளர விடுவது ஆபத்து என்பது
அவருக்குப் புரிந்து போயிற்று
அவரது பழுத்த அரசியல் அறிவும்
உடன் கைகொடுத்தது

"கூட்டத்தில் குழப்பம் ஏற்படுத்த முயலுகிற இவன்
நிச்சயம் நம் தொண்டனில்லை
எதிரிகளின் ஒற்றன்
இவனை அடித்து வெளியேற்றுங்க்கள் " என்றார்

வெறி பிடித்த கூட்டம் அந்த "முட்டாளை " நோக்கி
அதி வேகமாய் முன்னேறிக் கொண்டிருந்தது

Sunday, September 13, 2015

ஸ்டாலினின் முன்நகர்வும் கலைஞரின் கோபமும்

மாணவர் மன்றம் "புதுயுக சிற்பிகள் "என்கிற பெயரில்
திருவண்ணாமலையில் ஏற்பாடு செய்திருந்த
கூட்டத்தில் ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டதை
கலைஞர் விரும்பவில்லை என்கிற செய்தி
பத்திரிக்கையில்  வந்ததை
அனைவரும் பார்த்திருக்கக் கூடும்

ஏன் விரும்பவில்லை என்பதை பழைய
அரசியல் நிகழ்வுகள் அறிந்தவர்களுக்கு மட்டுமே
புரியக் கூடிய விஷயம்

அண்ணா அவர்கள் மறைந்து புதிய முதல்வரை
தேர்ந்தெடுக்கவேண்டிய சூழலில் சட்டசபைத்
 தலைவராக நெடுஞ்செழியன் அவர்களும்
மதியழகன் அவர்களும் கலைஞர் அவர்களும்
போட்டியிடுகிற சூழல்

அண்ணாவால் தனக்கு அடுத்தவர் என மக்களுக்கு
அறிமுகப்படுத்தப்பட்ட நெடுஞ்செழியன் அவர்களும்
கட்சியில் அதிக ஆதரவுடைய கலைஞர் அவர்களும்
அவருடன் போட்டியிடக்கூடிய  கட்சிச்செல்வாக்குடைய
மதியழகன் அவர்களும் போட்டி என அறிவிக்கப்பட
தமிழகமே அந்த சட்டசபை உறுப்பினர்களின்
கூட்டத்தின் முடிவை ஆவலுடன்
எதிர்பார்த்திருந்த சூழல்

கட்சிச் சம்பந்தம் இல்லாத அனைவரும்
அண்ணாவால் அதிகம் தனக்கு அடுத்தவர்
என்கிற முறையில் அதிகம் குறிப்பாக உணர்த்தப்பட்ட
நெடுஞ்செழியன் அவர்கள்தான் தேர்ந்தெடுக்கப் படுவார்
என எதிர்பார்த்திருந்த சூழலில்.....

மூவரும் போட்டியிடுகிற பட்சத்தில் ஓட்டு
பிரிவதன் அடிப்படையில் மதியழகன் கூட
வெல்வதற்குவாய்ப்புள்ளது என சில
கட்சிக்காரர்கள் கற்பனை செய்ய

கூட்டத்தில் போட்டியாளர் என நினைத்துக்
 கொண்டிருந்தமதியழகன் அவர்கள் கலைஞரை
 முன்மொழிய புரட்சித்தலைவர் வழி மொழிய

கலைஞரின் ராஜ தந்திரம் கட்சியில் வென்ற விஷயம்
குறித்து எழுத நிறைய இருக்கிறது

(ஆயினும் கட்டுரைக்கான பிரதான விஷயம்
அது இல்லை என்பதால் அதை இப்போது விட்டுவிடுவோம் )

அவ்வாறு சட்டசபைக் கட்சித் தலைவராக கலைஞர்
அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுவிட்டாலும் கட்சியில்
செல்வாக்குள்ள தலைவர்களில் ஒருவராக இருந்தாலும்
அண்ணாபோல் எம் ஜீ ஆர் அவர்களைப் போல
கட்சி சாராத பொதுமக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய
தலைவராக இல்லை

எனவே கட்சியில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள
கட்சிப் பணிகளில் ஈடுபடமுடியாத சபா நாயகரின்
பதவியில் மதியழகனை நிறுத்தி ஓரம் கட்டி
அடிமட்டத்து கட்சிக்காரர்களிடம் அவ்வளவு நெருக்கம்
இல்லாத நெடுஞ்செழியனை வேறு ஒரு மாதிரியாக
டீல் செய்து கட்சியில் தன்னை முழுமையாக
நிலை நிறுத்திக் கொண்டார்

பொது ஜனமக்களிடம் தன்னை மக்கள் தலைவராக
நிலை நிறுத்திக் கொள்ள பதவியின் மூலம்
தன் சுய விளம்பரத்தை அதிகம் செய்து கொண்டார்

அப்போதுதான்  "நாம் இருவர் நமக்கு இருவர் " என்கிற
குடும்பக் கட்டுப்பாடு போஸ்டர் கலைஞரின்
முகம் போட்டு சமூக நலத் துறையினரால் பட்டி தொட்டி
யெல்லாம் ஒட்டப்பட்டது

அதை விமர்சித்துக் கூட அப்போதைய பழைய
காங்கிரஸ் பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம்
"இந்தப் படத்தை ஒரு பெண் படித்தால்
என்ன அர்த்தம் கிடைக்கும் " என ஆபாசமாக
விமர்சித்தப் பேச்சு அப்போது அதிகப் பிரசித்தியம்

அரசின் சாதனைகளை விளக்குவதன் மூலம்
கலைஞரை பிரபலப்படுத்த அப்போது உருவாக்கப்
பட்டதுதான் உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகள்
( அதன்படி நுழைந்தவர்தான் சசிகலா நடராஜன்
என்பதுவும் கூடுதல் தகவல் )

எப்படி கட்சி தாண்டி தன்னை நிலை நிறுத்திக் கொள்ள
வேண்டிய அவசியம் கலைஞருக்கு ஏற்பட்டதோ
அதே நிலை கனிமொழி மற்றும் அழகிரி அவர்களை
மீறி ஸ்டாலின் அவர்கள் தன்னை நிலை
நிறுத்திக் கொள்ளவேண்டிய அவசியம்
இன்று நேர்ந்துள்ளது

அதை மிகச் சரியாக ஸ்டாலின் அவர்கள் செய்கிறார்

அப்படி ஸ்டாலின் தேர்தலுக்குள் தன்னை நிலை
நிறுத்திக் கொள்வாரேயானால் நிச்சயம் கலைஞரால்
தம் இஷ்டம் போல் குடும்ப உறுப்பினர்கள் யாரையும்
கட்சியின் மிக உயர்ந்த பதவிகளில் நியமனம் செய்வது
சாத்தியப்படாது

அதற்கெனவே ஸ்டாலின் அவர்களின் முன்நகர்வை
கலைஞர் அவர்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை
என்பதே என் வாதம்

தங்கள் விமர்சனம் எதிர்பார்த்து ....

வாழ்த்துக்களுடன்.....

Monday, August 17, 2015

நாம் வெற்றி கொள்வோம் இனி வரும் தேர்தலிலேனும்

பதவிக்கான
தகுதி  இருந்தும்
பதவி  அடையாதவர்கள்
பிரச்சனைக் குரியவர்கள் இல்லை

அவர்கள்
சட்டெனச் சோர்ந்துபோய்
இலக்குவிட்டு  விலகிவிடுதலே
இங்குள்ள பிரச்சனை

பதவிக்குரிய
தகுதி இன்றி
பதவியடந்தவர்களாலும்
நிச்சயம் பிரச்சனை இல்லை

அவர்கள்
பதவியடைந்தும் தம்மை
தகுதிபடுத்திக் கொள்ளாததே
இங்குள்ள பெரும் பிரச்சனை

தகுதிக்குரியவர்கள்
பதவிபெறாததும்
பதவிபெற்றவர்கள்
தகுதியற்று இருப்பதும் கூட
இங்கு பிரச்சனையில்லை

பதவியின் பலமும்
தகுதி குறித்த   அறிவுமற்றவர்களே
பதவிக்குரியவர்களைத் 
தேர்வுசெய்பவர்களாக இருப்பதே
இங்குள்ள  பெரும் பிரச்சனை

இலைக்கும் கிளைக்கும்
நீரூற்றலை விடுத்து
இனியேனும்
வேருக்கு  நீரூற்றுவோம்

தலைமையையும் கட்சியையும்
விமர்சித்தலைவிடுத்து
இனியேனும்
வாக்காளர்களுக்கு விழிப்பூட்டுவோம்

தும்பைவிட்டு வாலைப்பிடித்து 
இதுவரை பட்டதெல்லாம்
போதும்  போதும்

கொம்புபிடித்து காளைகளை அடக்கி
நாம் வெற்றி கொள்வோம்
இனி வரும் தேர்தலிலேனும்
  

Monday, February 2, 2015

கொடிகளும் நிறங்களும்...

ஏழ்மையை
இருவகையில் அழிக்கலாம்

ஏழைகளை அழித்தாலும்
ஏழ்மை அழிந்துவிடும்

ஏழ்மையை அழித்தாலும்
ஏழைகள் அழிந்திடுவர்

நம் அரசியல்வாதிகளுக்கெல்லாம்
ஏனோ முதலில் சொல்லியதே
சுலபமானதாகப் படுகிறது

செல்வத்தை
இருவகையில் பெருக்கலாம்

செல்வர்களை வளர்த்து
செல்வத்தைப் பெருக்கலாம்

செல்வத்தைப் பெருக்கியும்
செல்வர்களைப் பெருக்கலாம்

நம் அரசியல் தலைவர்களுக்கெல்லாம்
நம் தலையெழுத்தோ என்னவோ
முன்னதே சுலபமானதாய்த் தெரிகிறது

என்ன செய்வது
கொடிக்கம்பத்தில்
வேறு வேறு வண்ணத்தில்
தெரிகிற கொடிகளெல்லாம்
வேறு வேறு கொள்கையைச் சொல்வதாய் எண்ணி
நாமும் மாறி மாறி ஓட்டளித்து
ஓட்டாண்டி ஆகிக் கொண்டிருந்தும்..

அனைத்து கொடிகளும்
ஒரே ஆலையில் நெய்யப்பட்டு
வித்தியாசமாகத் தெரியவேண்டும்
என்பதற்காக மட்டுமே
பல்வேறு நிறமேற்றப்பட்டவை என்பது மட்டும்
எத்தனை அடிவாங்கியும்
நம் புத்திக்கு  மட்டும்
இதுவரை ஏனோ உறைக்கவே இல்லை

Wednesday, January 21, 2015

" உம் "புராணம்

"மாதா
பிதா
குரு
தெய்வம்  "

என்றான் ஆன்மீக வாதி

"மாதா"வும் "
பிதா "வும் "
குரு "வும்தான் "
தெய்வம் "

என்றான் பகுத்தறிவு வாதி

"உம் தான் "
தேவையற்ற பிரிவினைகளின்
மூலம் என நவில்ந்தபடி
நகர்ந்தான் பொருள்முதல்வாதி

 "உம் தான் "
நமக்கு மூலதனம்
அதைவிடாது பெருக்கணும்
உறுதி கொள்கிறான் அரசியல்வாதி


"உம்மின்  "
உண்மை பலம் புரியாது
உம்மென  உலவுது
ஊமையாய் ஒரு பெருங்கூட்டம்

Thursday, January 15, 2015

பகைவனுடன் தொடர்பில் இரு

எதிரிகளை மிகச் சரியாக
அடையாளம் கண்டுகொள்
அவன் கருத்துக்கள் முழுமையாக
உன்னைச் சேரும்படி
வழிவகைச் செய்து கொள்

ஏனெனில்

உன் திட்டம் குறித்து
அதன் பலவீனம் குறித்து
உன் செயல்பாடுகள் குறித்து
உன்னை விட அவனே அதிகம் யோசிக்கிறான்
அது உனக்கு நிச்சயம் பலன் கொடுக்கும்

துதிப் பாடுபவனைக்
கொஞ்சம் எட்டியே வை
அவன் பாராட்டுக்கள் துளியும்
உன்னில் ஒட்டி விடாதபடி
எப்போதும் தட்டிவிட்டுக் கொண்டே இரு

ஏனெனில்

உன் செயல்பாடுகளில்
ஒரு அலட்சியம் வரவும்
அதன் காரணமாய்
உன் வேகம் குறையவும்
நிச்சயம் கூடுதல் வாய்ப்பிருக்கிறது

ஆலோசனை சொல்பவனிடம்
கொஞ்சம் எச்சரிக்கையாய் இரு
அவன் அலோசனைகள் எதையும்
அலசி ஆராயாது உன்னுள்
அடுக்கி வைக்கத் துவங்காதே

ஏனெனில்

முன் இருவரை விட
உன்னிடம் மிகவும் நெருங்கவும்
உனக்கே அறியாது உன் இலக்குகளை
மாற்றிவிடும் அதீத ஆற்றலும்
இவனிடம்தான் அதிகம் உள்ளது

Wednesday, November 19, 2014

ஒரு "ஏ "மட்டும் சேர்

அவர்கள் சரியாகச் சொல்லவில்லையா ?
நாம் சரியாகக் கேட்கவில்லையா ?
அது சரியாகத் தெரியவில்லை
ஆனால் புரிந்து கொண்டது எல்லாமே
மிகத் தவறாகவே இருக்கிறது

"அதிகம் படிச்ச மூஞ்சூரு
கழனிப் பானையிலே " என்றார்கள்
மூஞ்சூரு ஏன் படிக்கணும்
கழனிப் பானையிலே ஏன் விழணும்
குழம்பித் திரிந்தேன் பல நாள்

தோழன் ஒரு நாள் சொன்னான்
"அது அப்படியில்லை
அதிகம் படிந்த முன் சோறு
கழனிப் பானையிலே " என்றான்

அது சரியாகத் தான் இருந்தது

நான் தொடர்ந்து கேட்டேன்

"இன்னும் சில மொழிகள் குழப்புகிறது
உழைப்பு ஒன்றே உயர்வைத் தரும் என்கிறார்கள்
உழைப்பவன் எவனும்
முன்னேறியதாகத் தெரியவில்லை

மாற்றம் ஒன்றே மாறாதது என்கிறார்கள்
ஏழைகள் வாழ்வு
மாறியதாகவே தெரியவில்லையே "என்றேன்

நண்பன் அழகாகச் சொன்னான்

"இதிலும் வார்த்தை விளையாட்டிருக்கிறது
ஒரு எழுத்தை நாம்
மாற்றிப் புரிந்து கொண்டிருக்கிறோம் "என்றான்:

அதிக ஆர்வமாய்  "எப்படி " என்றேன்

அவன் அலட்சியமாய்ச் சொன்னான்

"முதல் மொழியில்
உயர்வில் உள்ள" உ  "என்பதற்குப் பதில்
" அ "போடு சரியாக இருக்கும்

இரண்டாவதில் மாற்றத்திற்கு முன்
ஒரு "ஏ "மட்டும்
 சேர் வாக்கியம் மட்டும் இல்லை
நடைமுறையிலும் சரியாக இருக்கும் " என்றான்

சேர்த்துப் பார்த்தேன்
எனக்கு அது சரியென்பது போலத்தான் படுகிறது

Wednesday, February 5, 2014

தலைமையின் பலமும் பலவீனமும்

அந்த முக்கியப் பிரமுகர் கடந்து செல்வதற்காக
எங்கள் வண்டியை ஓரம் கட்டினார் காவலர்
நாங்கள் எரிச்சலுடன் காத்திருந்தோம்

அந்தச் சிவப்பு சுழல் விளக்கு பொருத்திய வண்டி
அதற்கான நூற்றுக்கும் அதிகமான
இணைப்பு வண்டிகளுடன் கடந்து செல்ல
அரை மணி நேரத்துக்கு மேலாகிவிட்டது

போக்குவரத்தும் ஸ்தம்பித்துப் போய்விட்டது

போரடிக்காது இருப்பதற்காகவோ அல்லது
நிஜமான சந்தேகத்திலோ
நண்பன் இப்படிக் கேட்டான்
"சமூக வாழ்வில் இத்தனை உயரம் தொட்டு
நம்மை வியப்பிலாழ்த்தும் இவர்கள்
தனி மனித வாழ்வில் ஏன்
சராசரிக்கும் கீழாகக் கிடக்கிறார்கள்
சமூகத்தையே சீர்திருத்து இவர்களுக்கு
தன் குடும்பத்தை சரியாக்கத் தெரியாதா ?"என்றான்

எல்லோரும் அமைதியாக என் முகத்தைப் பார்த்தார்கள்

"இதோ உனக்கான பதில் நடு ரோட்டிலேயே நிற்கிறது "என்றேன்

"புரியவில்லை "என்றனர் கோரஸாக

"இதோ சில நிமிடங்களில்
சீர்கெட்டுப் போன இந்த போக்குவரத்தை
சீர் செய்யும் காவலருக்கு
கார் ஓட்டத் தெரியுமா என்பது கூட சந்தேகமே

ஆயினும்
மற்றவர்கள் முறையாக பயணம் செல்ல
மிகச் சரியாக வழிகாட்டத் தெரியும்
அவருடைய முழுத் திறனையும் அதில் ரசிப்போம்
அவருக்கும்  நம்மைப் போல் கார் ஓட்டத் தெரிந்து
என்ன ஆகிவிடப் போகிறது "என்றேன்

அவர்களுக்கு என் பதில் புரிந்ததாகத் தெரியவில்லை

போக்குவரத்து சீராகிக்  கொண்டிருந்தது