Wednesday, February 2, 2011

குழப்பத்தை மீண்டும் குழப்புவோமா ?


நான் குழப்பவாதி இல்லை
.உங்களை குழப்புகிற நோக்கமும் இல்லை.
சொல்லுகிற விசயம் கொஞ்சம் குழப்பமானது
.நீங்கள் குழம்பாது படிக்கவே
இத்தனை பீடிகை.

நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா ?
நம்புங்கள்
அதில் பிரச்சனை ஏதும் இல்லை
ஆனால்
நம்பச் சொல்லுகிறவனை நம்பாதீர்கள்.
ஏனெனில்
அவன் நம்பிக்கையை விதைக்கிற சாக்கில்
பல மூட நம்பிக்கைகளையும் விதைத்துப் போகிறான்

நீங்கள் கடவுளை நம்பவில்லையா?
நம்பாதீர்கள்.
அதில் பிரச்சனை ஏதும் இல்லை.
ஆனல்
நம்பாதீர்கள் என்பவனை நம்பாதீர்கள்
ஏனெனில்
அவன் மூட நம்பிக்கையை வேரறுக்கிற சாக்கில்
நம்பிக்கையின் ஆனிவேரையும் அசைத்துப் போகிறான்

பாற்கடலை  கடைந்தெடுக்கையில்
விஷத்தைத் தொடர்ந்துதான்
அமிர்தமே கிடைக்கிறது.

எனவே
முழுமையான நன்மை என்பதோ
முழுமையான தீமை என்பதோ
முழுமையான உண்மை என்பதோ
முழுமையான பொய்மை என்பதோ
உலகில் நிச்சயம் இல்லை.
விகிதாச் சாரங்களே
அதனதன் தன்மையை நிர்ணயித்துப் போகின்றன

நீங்கள் பூசை செய்தால்
மனங்குளிர்ந்து வரமளிக்கவோ
நீங்கள் மேடைபோட்டுத் தாக்கினால்
மனம் வெறுத்து சாபம் தரவோ
கடவுள் என்பவன் மனிதப் பிறப்பு இல்லை

அவன் இருக்கிறானா?
அவன் இல்லையா ?
என்கிற தேவையற்ற கேள்விகளில்
நாம்தான் சண்டையிட்டுச் சாகிறோம்
அவனை நிரூபிக்க.
அவன் என்றுமே
முயற்சி செய்த்தும் இல்லை
இனி முயலப் போவதும் இல்லை

அனைத்தையும் ஆட்டுவிப்பது அவன் என
ஆத்திகர்கள் நம்பித்தொலைக்கட்டும்
அனைத்தையும்..இயக்குவது "அதுவே  'என
நாத்திகர்கள்.சொல்லி இருக்கட்டும்
நாம் இவர்களுக்கிடையில் சிக்காது
நிம்மதியாய் இருப்போம்.

இயற்கையின் மாறாத விதி ஒன்று
மாறாது உள்ளது.
இயற்கையின் மாறாத  நியதி ஒன்று
நிச்சயமாய் உள்ளது.
விதியினைக் காப்பதே அவன் வேலை
.நியதியைக் காப்பதே அதன் வேலை
நம்மைக் காப்பது அவனுக்கான
 வேலையும் இல்லை
நம்மைக் காப்பது அதனுக்கான
 வேலையும் இல்லை
என்பதில் தெளிவாய் இருப்போம்
என்றென்றும் குழம்பாது  சிரிப்போம்


22 comments:

  1. //அவனை நிரூபிக்க
    அவன் என்றுமே
    முயற்சி செய்ததும் இல்லை
    இனி முயலப் போவதும் இல்லை//

    பெரிய ஞானிகளாகத் தன்னைக் காட்டிக்கொள்கிறவர்களிடம் இல்லாத தெளிவும் எளிமையும் உங்கள் வரிகளில்.

    இறைத்தன்மை என்பது குறித்த என் பார்வையும் இதுதான்.ஜெயதேவரின் அஷ்டபதியும் சிவவாக்கியரின் நட்டகல்லும் பேசுமோவும் நமக்கு ஒன்றுதான் ரமணி சார்.

    சிறப்பான பதிவு.தலைவணங்குகிறேன்.

    ReplyDelete
  2. அருமையான பதிவு.

    ReplyDelete
  3. .... எளிமையான நடையில், பெரிய விஷயத்தை சாதாரணமாக புரியும் படி சொல்லி இருக்கீங்க... குழப்பம் அல்ல, தெளிவான பதிவு. பாராட்டுக்கள்!

    ReplyDelete
  4. ரொம்பத் தெளிவா சொல்லி இருக்கீங்க சார்.

    ReplyDelete
  5. நல்லதொரு நியாயத்தை எடுத்துரைக்கும் பதிவு.

    ReplyDelete
  6. ஞானிகளாகத் தன்னைக் காட்டிக்கொள்கிறவர்களிடம் இல்லாத தெளிவும் எளிமையும் உங்கள் வரிகளில்......எளிமையான நடையில்,.அருமையான பதிவு.

    ReplyDelete
  7. கடவுளைப் படைத்ததும் மனிதன், கடவுளை மறுப்பதும் மனிதன். நம் குறைகளுக்கு இருப்பதொன்றின் மீதோ இல்லாத ஒன்றின் மீதோ குறைகள் கூறி தப்பித்துக்கொள்ளாமல் நமக்கு நாமே பொறுப்பு என்று குழப்பமில்லாமல் தெளிவித்து விட்டீர்கள். நன்றாயிருக்கிறது.

    ReplyDelete
  8. மிக தெளிவா அழகா எழுதி இருக்கிங்க.... வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. நடுநிலை.......
    ஹ்ம்ம்... இருக்குன்னு சொல்றவங்கதானே இருக்குங்கறதுக்கு விளக்கம் கொடுக்கனும்...
    உங்க எண்ணங்கள் குழம்பிக்கிறவங்கள சாந்தப்படுத்தும்.

    ReplyDelete
  10. அன்பாய் இருப்போம்.அன்பு இருப்பவர்களிடம் கடவுளின் தன்மை காண்போம்.
    கவிதை உண்மை சொல்கிறது !

    ReplyDelete
  11. நல்ல உருவாக்கம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. உன்னையே நீ அறிவாய்-
    அன்பே சிவம்

    கவிதைக்குள் இருக்கும் விதை வீரியம் மிக்கது.

    ReplyDelete
  13. நான் உங்களை வழி மொழிகிறேன். உங்களின் கருத்துதான் எனதும்

    அருமையான பதிவு

    ReplyDelete
  14. மிக அருமையான கருத்து செறிந்த கவிதை. குழம்பாமல் இருப்பதே சாலச்சிறந்தது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  15. அற்புதமான கருத்து....

    ReplyDelete
  16. உங்களின் இந்தப்பதிவு மென் திறன் கருதருங்குகளில் எடுத்துச்சொல்ல ஏதுவானதாய் இருக்கிறது. கடவுளைப்பற்றிய பயம் பலரைக் கெடுக்கிறது. சிலரை அந்த பயத்தைப் பயன் படுத்தி வாழ வழி வகுக்கிறது.
    உங்கள் பதிவினை படித்தால் ஒருவேளை பயம் தெளியலாம்.

    ReplyDelete
  17. தெளிவான பதிவு

    ReplyDelete
  18. அனைத்தையும் ஆட்டுவிப்பது அவன் -
    ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
    ஆசையென்னும் தொட்டிலிலே
    ஆடிவரும் மனமே!!

    ReplyDelete
  19. தெளிவா அழகா எழுதி இருக்கிங்க. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  20. கடவுளுக்கும் சரி.... கடவுள் மறுப்புக்கும் சரி... ஏஜெண்டுகள் தேவையில்லை!
    எங்களுக்குக் கிளைகள் கிடையாது என்றுதான் கடவுள்கள் எங்கும் எதிலும் வியாபித்து அறிவிக்கிறார்களோ என்னவோ இந்த போலிகளைக்கண்டு மக்கள் ஏமாற வேண்டாம் என்று!!

    ரொம்ப சிம்பிளா நீங்க அழகான விஷயங்களை சொல்லும் ஸ்டைலை ரொம்ப ரசிக்கிறேன் சார்....
    வெரி நைஸ் டு மீட் யூ!

    ReplyDelete
  21. செம கலக்கல்

    ReplyDelete