Friday, March 11, 2011

நேர்மை ஒளி

அரசுப்பணியில் உயர்பதவியில்
தேர்தெடுக்கப்பட்டிருக்கும்
தன் மைந்தனை அழைத்துக்கொண்டு
என் ஆசி பெற வந்திருந்தார்
என் நெருங்கிய உறவினர் ஒருவர்

அரசின் உயர்பதவியில் இருந்த
பிழைக்கத் தெரிந்த என் உறவினர் ஒருவரும்
நல்ல வசதி வாய்ப்புகளோடு
அடுத்த தெருவில்தான் இருந்தார்

"அவரிடம் முதலில் ஆசி பெற்றுவிட்டாயா" என
ஏனோ அவசர அவசரமாய்க் கேட்டாள் என் மனைவி
வந்திருந்த உறவினர் பதட்டப்படவில்லை
"தகவல் மட்டும் சொல்லிவிட்டேன் "என்பதோடு
தன் பேச்சை முடித்துக்கொண்டார்

பின் நான் இப்படிச் சொல்லலானேன்
"ஒவ்வொரு இந்துவும் தன்வாழ் நாளில் ஒருமுறையேனும்
காசி ராமேஸ்வரம் போய்வர எண்ணுவான்
ஒவ்வொரு முஸ்லிமும் தன் வாழ் நாளில் ஒருமுறையேனும்
மெக்கா மெதினா சென்றுவர எண்ணுவான்
ஒவ்வொரு கிறிஸ்தவனும் தன் வாழ் நாளில் ஒரு முறையேனும்
வாடிகனை பெத்தலகேமை தரிசித்து வர எண்ணுவான்
இவர்கள் எல்லாம் வாழ்வில் ஒரே ஒருமுறை
அவ்வூர் சென்று வந்தாலே புண்ணியம்  என
நம்பிக்கை கொள்ளும்போது
அங்கேயே காலமெல்லாம் வாழ்வோருக்கு
எவ்வளவு புண்ணியமிருக்கும்"எனச் சொல்லி
அவர்கள் முகத்தை ஏறெடுத்துப் பார்த்தேன்
அவர்கள் முகத்தில் எவ்வித சலனமும் இல்லை

பின் நானே தொடர்ந்து பேசினேன்
"ஊரின் பெருமையை உணர்ந்து
அவர்கள் அங்கு வாழ்ந்து வந்தால்
அவர்களுக்கும் அந்த ஊர் புண்ணியம் சேர்த்துத் தரும்
இல்லையெனில் எல்லா ஊரையும் போல
அந்த ஊரும் மிகச் சாதாரணமான ஊரே

அரசு உயர்பதவியும் அதுபோலத்தான்
மக்களுக்கு சேவை செய்ய
ஆண்டவன் கொடுத்த வாய்ப்பாக
இதனைக் கருதி பணியாற்றினால்
நீ தான தருமங்கள் ஏதும்
தனியாகச் செய்ய வேண்டியதில்லை
உன் பணியே உனக்குபுண்ணியம் சேர்த்துத் தரும்
இல்லையெனில்
கண்ட கண்ட பிழைப்பைப் போல
அதுவும் ஒரு பிழைப்பு அவ்வளவுதான் " என்றேன்

தாக சாந்திக்கு மோர் குவளையுடன் வந்த மனைவி
தொடர்ந்து இப்படிப் பேசினாள்
"வசதி வாய்ப்புப் பெருக்கத்தில்
மனதை செலுத்த வேண்டாம்
அங்ககீனமானவர்களுக்குத்தான்
ஊன்றுகோள்கள்  அவசியத் தேவை
ஆரோக்கியமானவனுக்கு அது
தேவையற்ற சுமை " என்றாள்

இப்போது என் உறவினரின் முகம்
கொஞ்சம் பிரகாசமாகத் தெரிந்தது
"இதற்காகத்தான் அங்கு விட்டு இங்கு
ஆசி பெற வந்தேன் " எனச் சொல்லி
என் கைகளை இறுகப் பற்றிக்கொண்டான்

உறவினரின் மகன் முகத்திலும்
கொஞ்சம்  தெளிவு தெரியத் துவங்கியது

இருண்டு கிடக்கிற சிற்றறைக்குள்
ஒரு அகல்விளக்கை ஏற்றிய திருப்தி
எங்கள் இருவருக்குள்ளும்
கொஞ்சம் கொஞ்சமாய்
விரிந்து பரவத் துவங்கியது

32 comments:

  1. தங்களின் இந்தக் கவிதை மிகவும் அருமை ஐயா.
    //மக்களுக்கு சேவை செய்ய
    ஆண்டவன் கொடுத்த வாய்ப்பாக
    இதனைக் கருதி பணியாற்றினால்
    நீ தான தருமங்கள் ஏதும்
    தனியாகச் செய்ய வேண்டியதில்லை
    உன் பணியே உனக்குபுண்ணியம் சேர்த்துத் தரும்//

    நல்ல வரிகள். புதிதாகப் அரசுப் பணியில் சேரும் அனைவரும் பின்பற்றினால், நம் நாடு எப்படி இருக்கும். நல்லதொரு சிந்தனையைத் தூண்டும் படைப்பு. வாழ்த்துக்கள் - பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. அரசுப் பணி ஒரு சேவைப் பணி என்பதை சொல்லில் வடித்தமைக்கு நன்றி. அற்புதமாக உள்ளது. ;-))

    ReplyDelete
  3. நல்ல பதிவு.
    நன்கு பணியாற்றினால் மக்கள் நினைத்துக்கொண்டிருப்பார்கள்.
    இல்லையேல் எப்போது போவான் என்று காத்துக் கொண்டிருப்பார்கள்.

    ReplyDelete
  4. அரசுப் பணி மூலம் சேவையும் செய்யமுடியும் என்பதை அழகாய் சொல்லி உள்ளீர்கள். நன்றாக உள்ளது உங்கள் வரிகள்.

    ReplyDelete
  5. வெகு சிறப்பு. சேவை மனப்பான்மையே முக்கியம். செய்யும் தொழிலே தெய்வம் என்பதை விளக்கமாகக் கூறியுள்ளீர்கள்.

    ஏற்றிய அகல்விளக்கு இன்னும் நிறைய விளக்குகளை ஏற்றட்டும்!

    ReplyDelete
  6. நேர்மையின் ஒளி யாதோவின் மூலம்
    எங்கும் பிரகாசிக்கட்டும்

    ReplyDelete
  7. நீங்கள் கூறவந்த கருத்து எல்லோர் மனசிலும் படியவேண்டும். முக்கியமாக அரசுப் பணியில் இருப்பவர்கள் பின்பற்றி நடக்க வேண்டும். சமுதாய மாற்றத்துக்கு முன்னோடியாக அவர்கள் விளங்க வேண்டும். வலையின் மூலமும் எழுத்தின் மூலமும் நல்ல விஷயங்கள் வெளிப்பட வேண்டும். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. இருண்டு கிடக்கிற சிற்றறைக்குள்
    ஒரு அகல்விளக்கை ஏற்றிய திருப்தி
    எங்கள் இருவருக்குள்ளும்
    கொஞ்சம் கொஞ்சமாய்
    விரிந்து பரவத் துவங்கியது


    .......அன்பு உள்ளங்கள் என்றும் வாழ்க!

    ReplyDelete
  9. //ஊரின் பெருமையை உணர்ந்து
    அவர்கள் அங்கு வாழ்ந்து வந்தால்
    அவர்களுக்கும் அந்த ஊர் புண்ணியம் சேர்த்துத் தரும்
    இல்லையெனில் எல்லா ஊரையும் போல
    அந்த ஊரும் மிகச் சாதாரணமான ஊரே//

    அசத்தல் வரிகள்..

    ReplyDelete
  10. "வசதி வாய்ப்புப் பெருக்கத்தில்
    மனதை செலுத்த வேண்டாம்....

    மிகவும் நல்ல கருத்து.

    ReplyDelete
  11. அர‌சுப்ப‌ணி என்ப‌த‌ற்கு இன்றைக்கு வெளியில் என்ன‌ பெய‌ர் என்ப‌தை சொல்ல‌த்தேவை இல்லை.அத‌னால் இது போன்ற‌ க‌ட்டுரைக‌ள் மிக‌ முக்கிய‌ம். இல்லையென்றால் அது சேவை என்ப‌து ந‌ம‌க்கும் ம‌ற‌ந்துவிடும் அவ‌ர்க‌ளுக்கும் ம‌ற‌ந்துவிடும்.

    ReplyDelete
  12. அரசுப் பணி ஒரு சேவைப் பணி என்பதைக் கவிதையில் வடித்தமைக்கு நன்றி...

    ReplyDelete
  13. அரசுப்பணி ஒரு சேவைப்பணி என்பதை அந்தப்பணியில் உள்ளவர்கள் உணர்ந்தால் நல்லது.

    ReplyDelete
  14. இப்போதெல்லாம் அரசு அலுவலகம் பக்கம் செல்லவே பயமாக இருக்கிறது.நாயாய் அலைய விடுகிறார்கள்.
    உங்கள் அறிவுரையும் , அதை ஏற்றுக் கொண்ட அவர்களின் மனமும் பாராட்டத் தக்கவை.

    ReplyDelete
  15. இருண்டு கிடக்கிற சிற்றறைக்குள்
    ஒரு அகல்விளக்கை ஏற்றிய திருப்தி
    எங்கள் இருவருக்குள்ளும்
    கொஞ்சம் கொஞ்சமாய்
    விரிந்து பரவத் துவங்கியது//
    சூப்பர் வரிகள். லஞ்சம் வாங்காமல் இருந்தாலே போதுமே!

    ReplyDelete
  16. அரசுப் பணி சேவைப் பணிதான். அருமையாக விளக்கி இருக்கீங்க

    ReplyDelete
  17. //வசதி வாய்ப்புப் பெருக்கத்தில்
    மனதை செலுத்த வேண்டாம்
    அங்ககீனமானவர்களுக்குத்தான்
    ஊன்றுகோள்கள் அவசியத் தேவை
    ஆரோக்கியமானவனுக்கு அது
    தேவையற்ற சுமை "//

    நன்று, தொடரவும், நன்றி.

    ReplyDelete
  18. நல்ல பதிவு. நேர்மையின் அவசியத்தை உணர்த்தும் கவிதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. //அரசு உயர்பதவியும் அதுபோலத்தான்
    மக்களுக்கு சேவை செய்ய
    ஆண்டவன் கொடுத்த வாய்ப்பாக
    இதனைக் கருதி பணியாற்றினால்
    நீ தான தருமங்கள் ஏதும்
    தனியாகச் செய்ய வேண்டியதில்லை
    உன் பணியே உனக்குபுண்ணியம் சேர்த்துத் தரும்
    இல்லையெனில்
    கண்ட கண்ட பிழைப்பைப் போல
    அதுவும் ஒரு பிழைப்பு அவ்வளவுதான் //



    இந்த வரிகள் சிலிர்க்க வைத்த வரிகள்.

    ReplyDelete
  20. ஆனால் அரசு பணியில் நன்றாக, சிறப்பாக செயல்படும் ஒருவருக்கு சக ஊழியர்களாலே அதிகமான சிரமங்கள் எதிர்படுகிறதே. எப்படி இதை எதிர் கொள்வது. சில வேளைகளில் ரொம்பவும் விரக்தியடைய வேண்டியதாயிருக்கிறது.

    ReplyDelete
  21. வாழ்வின் ஒளியாம்-வேலை
    வாய்ப்பு வாய்த்தவர்க்கு
    வழங்கிய வாழ்த்ததனில் ஒளித்த
    வளம் நிறைந்த வார்த்தைகளால்
    வளரும் அவன் பணி மட்டுமல்ல
    வளர்த்த நெஞ்சங்களும்
    நிறைந்த தன்மை-நேரே
    ஒளிக்கின்றது உங்கள் கவிதனில்

    ReplyDelete
  22. //அரசு உயர்பதவியும் அதுபோலத்தான்
    மக்களுக்கு சேவை செய்ய
    ஆண்டவன் கொடுத்த வாய்ப்பாக
    இதனைக் கருதி பணியாற்றினால்
    நீ தான தருமங்கள் ஏதும்
    தனியாகச் செய்ய வேண்டியதில்லை//

    ...ஹ்ம்ம்.. அருமையான வரிகள்.. என் தந்தை இப்படி தான் கருதினார்கள்.. :-)

    ReplyDelete
  23. இருண்டு கிடக்கிற சிற்றறைக்குள்
    ஒரு அகல்விளக்கை ஏற்றிய திருப்தி/
    பதிவைப் படித்த எங்களுக்கும்
    தீபத்தைத் தரிசித்த திருப்தி.

    ReplyDelete
  24. ஃஃஃஃஉன் பணியே உனக்குபுண்ணியம் சேர்த்துத் தரும்ஃஃஃஃ

    நியமான உண்மைங்க... எப்போதும் எல்லோரும் நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும்...

    ReplyDelete
  25. இந்த நாளில் மிகவும் தேவையான கருத்து!

    ReplyDelete
  26. நல்ல கரத்துடனான அசத்தல் கவிதை..

    ReplyDelete
  27. //இருண்டு கிடக்கிற சிற்றறைக்குள்
    ஒரு அகல்விளக்கை ஏற்றிய திருப்தி
    எங்கள் இருவருக்குள்ளும்
    கொஞ்சம் கொஞ்சமாய்
    விரிந்து பரவத் துவங்கியது//

    இதை விட பெரிய ஆசி வேறென்ன இருக்க போகுது....

    ReplyDelete
  28. அவர்கள் ஆசி பெற வந்த இடம், தகுந்த இடமே...

    ReplyDelete
  29. //வசதி வாய்ப்புப் பெருக்கத்தில்
    மனதை செலுத்த வேண்டாம்
    அங்ககீனமானவர்களுக்குத்தான்
    ஊன்றுகோள்கள் அவசியத் தேவை
    ஆரோக்கியமானவனுக்கு அது
    தேவையற்ற சுமை " என்றாள்//

    உங்க வீட்டம்மா'வும் அழகா தத்துவம் பெசுராங்களே.....!!!
    ம்ம்ம் கம்பன் வீட்டு தறியும் அழகா பேசுதப்பா.....
    வாழ்த்துகள் குரு...உங்களுக்கும் உங்க வீட்டம்மாவுக்கும்....

    ReplyDelete
  30. முன்பு மனச்சாட்சிக்கு பயந்த மனிதர்கள் இருந்தனர், இப்போது மனச்சாட்சிக்கு பயந்தால் சிரிக்கிறார்கள்..
    வருத்தமாய் இருக்கிறது..

    ReplyDelete
  31. நேர்மையான பதிவு கவிதை !

    ReplyDelete
  32. அலுவலகப் பணிகளிலேயே அனைத்து சேவைகளும் அடக்கமென வலியுறுத்தும் அழகான சொல்லோவியம்

    ReplyDelete