Monday, March 21, 2011

மனமூடை

எப்போதுமே
பயன்படுத்தமுடியாத அளவு
பயன்படுத்தப்பட்ட
பொருட்கள் அடங்கிய….
இதற்குமேலும்
அழுக்கடையமுடியாத அளவு
அழுக்கடைந்துபோன
மூட்டையைச் சுமந்தபடி….
புதர்முடிக்குள்
புதைந்துபோன முகத்தோடு
நிகழ்காலம் அல்லாத
ஏதோ ஒரு காலத்தில் சஞ்சரித்தபடி
எப்போதும் அவன்
எங்கள் தெருவில் திரிவான்.

அந்த மூடை
சிலசமயம் அவன்மடியில்
குழந்தையைப் போல கிடந்து சிரிக்கும்
சிலசமயம் சிம்மாசனமாகி
அவனைத் திமிர்பிடித்தவன்போலக் காட்டும்
சிலசமயம் தலையணையாய் மாறி
அவன் தூங்கத் தாலாட்டும்
ஆனாலும் பலசமயம்
அவனுள் பொக்கிஷம்போல் பொதிந்துகிடந்து
லேசாக முகம் காட்டும்.
இப்படி
எத்தனை அவதாரம் அது எடுத்தபோதும்
உடல்தாங்கும் உயிர்போல
எப்போதும் அது
அவனுள் ஒரு அங்கமாகவே வாழும்


அவனை அடிக்கடி பார்க்கிற உரிமையில்
அல்லது
உணவு கொடுத்த பரிச்சயத்தில்
எவரேனும் எதிர்பாராது
அவனை நெருங்க நேர்ந்தால்கூட
உடல்படபடக்க
நம்பிக்கை இழந்தவனாய்
அந்த மூடையைப் பொக்கிஷம் போல்
அவனுள் புதைத்துக்கொள்வான்

அவனுள் நேரும் ஒரு மறுபிறப்போ
அவனைத் தழுவும் மரணமோ அன்றி
அவனுக்கும் மூடைக்குமான பந்தம்
அறுந்து போகாது….

அந்த மூடையை அறுத்து எறிந்தால்
அவன் சரியாகக் கூடும்
அல்லது
அவன் சரியானால் கூட அந்த மூடை
அவனைவிட்டுச் சாகுமென
அவ்வப்போது ஒரு எண்ணம் என்னுள் ஓடும்

கோட்டியாய்....
தெருவெங்கும் வலம்வரும் அவன்
என்றேனும் ஒரு நாள்
துருவாசனைப் போல்
உருமாற்றம் கொள்வான்
ஜடாமுடிகள் காற்றில் பறக்க
விழிகள் இரண்டும் நெற்றியில் ஏற
ருத்தர தாண்டவம் ஆடத்துவங்குவான்
அந்த அழுக்கு மூடையை உயரப்பிடித்தபிடி
போவோர் வருவோரை உற்று நோக்கி-
இதுதான் இதுதான் – என உறக்கக் கத்துவான்

அந்த ஆனந்தக் கூத்தின் உச்சத்தில்
அவன் நெற்றிக்கண் வெடித்துத் திறப்பதுபோலவும்
அனைவர்க்குள்ளும் இருக்கும்
அந்த அழுக்கு மூடை
அவிழ்ந்துவிரிந்து அம்மணமாவது போலவும்
என்னுள் பயம் விரைந்துபரவ
உடல் லேசாக நடுங்கத் துவங்கும்
என்னையும் அறியாது எனது கைகள்
என் நெஞ்சை மறைக்க முயன்று தோற்கும்.

16 comments:

  1. மூட்டை என்பதுதான் மூடை என்று பதிவாகி இருக்கிறதா,மனநோயாளிகளின் செயல்களுக்கு பொருள் காண முயன்றால், கற்பனைகள் சிறகடிக்கலாம்.

    ReplyDelete
  2. துருவாசனைப் போல்
    உருமாற்றம் கொள்வான்/
    அவனது செயல்கள்
    கவிதையாய் உருமாற்றமடைந்தது போல்.

    ReplyDelete
  3. //அந்த மூடையை அறுத்து எறிந்தால்
    அவன் சரியாகக் கூடும்
    அல்லது
    அவன் சரியானால் கூட அந்த மூடை
    அவனைவிட்டுச் சாகுமென
    அவ்வப்போது ஒரு எண்ணம் என்னுள் ஓடும்//

    மனிதர்கள் பலவிதம் அதில் இவன் ஒரு விதம்....

    ReplyDelete
  4. எல்லோர் மனசுக்குள்ளும் இப்படியொரு மூடையை சுமந்துகொண்டுதான் இருக்கோம் போலிருக்கு.. இறக்கத்தெரியாமலும், பிடிக்காமலும் :-)

    ReplyDelete
  5. சுமந்து கொண்டிருப்பது இன்னதெனத் தெரியாதவர்களுக்கும் தெரிந்தவர்களுக்குமிடயிலான பாலம் இந்தக் கவிதை.

    ReplyDelete
  6. அவன் வெளியே சுமப்பதை விட பல மடங்கு பெரிய மூட்டைகளை நம்மில் பலர் உள்ளே சுமக்கிறோம்.

    எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் மனநோயாளிகளே.

    உலகுக்குப்புலப்படுவது ஒரு சிலர் மட்டுமே.

    அவ்வாறு புலப்படாத பலரும் தங்களின் மூட்டைகளை ஸ்விஸ் வங்கியின் பாதுகாப்புப்பெட்டகத்தில் வைத்திருக்கலாம் என்று எனக்குத்தோன்றுகிறது.

    அழுக்கு மூட்டையேயானாலும் அதை வைத்து அருமையானதொரு கவிதை படைக்க உங்களால் மட்டுமே முடிகிறது.

    மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. நெஞ்சில் வலி ஏற்படுத்துகிற கவிதை.. எளிமையான தமிழ்...அருமையான வரிகள்...
    பகிர்வுக்கு நன்றி தோழரே..

    ReplyDelete
  8. எல்லோருமே அவரவர் மன அழுக்கு மூட்டைகளை
    வெளியில் கொட்டவும் முடியாமல் பாரமும் சுமக்க இயலாமல்
    பொக்கிஷமாகத்தான் அமுக்கிக் கொண்டிருக்கிறோம்

    ReplyDelete
  9. அது ஏன் மன நிலை பிறழ்ந்தவர்கள் அநேகம் பேர் பெரிய பெரிய அழுக்கு மூட்டைகளை விடாது சுமக்கிறார்கள் ?
    மன நிலை பிறழ்ந்தாலும் சொத்து சேர்க்கும் எண்ணம் மனிதனை விட்டு நீங்காது போலும்

    ReplyDelete
  10. அந்த மூடைக்குள் அவனது வாழ்க்கை,ஆசாபாசங்கள்,எதிர்பார்ப்புக்கள் எல்லாமே இருந்திருக்குமோ !

    ReplyDelete
  11. //புதர்முடிக்குள்
    புதைந்துபோன முகத்தோடு//
    தாடி வச்ச ஆளா சார்! பொதியாய் சுமக்கிறோம்.. நன்றாக இருந்தது. ;-)

    ReplyDelete
  12. கவிதையும் கவிதைக்கான கருப்பொருளும் கையாண்ட விதமும் பாராட்டிற்குரியவை...

    ReplyDelete
  13. ரமணி சார்...

    யப்பா....

    பதிவில் சொற்பிரவாகம் வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடுகிறது...

    அழுக்கு மூடை மனநிலையை பற்றி அழகாய் சொற்களால் வடித்தெடுத்து விட்டீர்கள்...

    நான் எல்லாம் இது போல் எழுத முடியாது... அட்லீஸ்ட் படிக்கறேன்...

    ReplyDelete
  14. நாமும் அந்த அழுக்கு மூட்டை போலத்தான் இருக்கிறோமோ?

    ReplyDelete
  15. நல்லாயிருக்கு சார்

    ReplyDelete
  16. அன்பின் ரமணீ

    வலைச்சர அறிமுகம் மூலமாக இங்கு வந்தேன்

    அழுக்கு மூட்டை - மன மூடை - கவிதை நன்று - இயல்பான நடை - அவனைப் பற்றியும் மூட்டையினைப் பற்ரியும் பேசும் கவிதை இறுதியில் முத்தாய்ப்பாக முடிவினைப் பேசுகிறது - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete