Saturday, May 11, 2013

வழிப்பயணமும் வாழ்க்கைப் பயணமும்

பயணத்தின் நோக்கம்
எதற்கோ எங்கோ
பயணப்படுபவர்களுக்கெல்லாம்
இலக்காக ஒரு ஊர் இருக்கத்தான் செய்கிறது

அவரவர் வசதிக்குத் தக்கபடி
வாகனங்களையும்
சக்திக்குத்  தக்கபடி
வேகத்தையும் முடிவு செய்தபடி
எல்லோரும் விரைந்து
பயணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்

எப்படித் தெளிவானவர்களாக இருப்பினும்
குறிப்பற்ற சந்திப்புச் சாலைகளில்
பயணிக்கும் திசையறியாத போது
கொஞ்சம் குழப்பம் நேரத்தான் செய்கிறது

எந்தகைய வாகனத்தவராயினும்
தூரம் தெரியாத வேளைகளில்
போய்ச் சேரும் நேரம் அறிய முடியாத போது
மனம்  கொஞ்சம் தளரத்தான் செய்கிறது

ஆயினும்
முன்னரே அந்தச் சாலைகளில்
பயணப்பட்டு அறிந்தவர்கள்
பயணிப்பவர்களுக்காக
அக்கறையோடு வைத்துச் சென்றிருக்கிற

தூரம் காட்டும் மைல்கற்களும்
சந்திப்புப் பெயர்ப்பலகைகளும்

பண்பட்ட கதைகள் போலவும்
கருத்துள்ள கவிதைகள் போலவும்

நம்பிக்கையூட்டுவது மட்டுமல்லாது
சரியான வழிகாட்டியும்தான் போகிறது

அதனைச் சரியாகப் புரிந்து
பயன்படுத்திப்  பயணிப்பவர்களின் பயணம்
எளிதானதாகவும்
சுகமானதாகவும்
சுவாரஸ்யமானதாகவும் மட்டுமல்ல
விரைவானதாகவும் அமைந்தும்தான்   போகிறது

22 comments:


  1. வணக்கம்!

    தமிழ்மணம் 2

    வழிப்பயணம்! வாழ்க்கைப் பயணம்! இன்ப
    மொழிப்பயணம் கண்டேன் முகிழ்த்து! - பழிப்பயணம்
    இன்றி வகுத்த வழிமணக்கும்! இல்லையெனில்
    குன்றிக் கிடக்கும் குலைந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  2. /// பயணிக்கும் திசையறியாத போது
    கொஞ்சம் குழப்பம் நேரத்தான் செய்கிறது ///

    தலைப்பிற்கு மிகவும் பொருந்தும்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. சாலைப் பயணத்துக்கு மட்டுமல்ல..
    வாழ்க்கைப் பயணத்திற்கும்
    வழிகாட்டிகள் ஆயிரம் உண்டு..
    சரியாகப் பயன்படுத்தினால்
    செல்லுமிடம் சரியாகவும் சுலபமாகவும்
    அமைந்துவிடும் என்றுரைக்கும்
    கவிதை...
    அருமை அருமை...

    ReplyDelete
  4. வாழ்க்கைப் பயணத்தில் சொந்தமும் நட்புமே சுகமாக்கி விடுகின்றன,அதே வழிப் பயணத்தில் புகையும் தூய்மையும் மனதையும் உடலையும் கெடுக்கிறது.

    ReplyDelete
  5. வாழ்க்கைப் பயணமானாலும், வழிப் பயணமானாலும் வழிகாட்டிகளை பின்பற்றினால் நலமே விளையும் என நயம்பட உரைத்தமைக்கு நன்றி

    ReplyDelete
  6. நிஜத்தின் நிழலிதைக் கண்டு மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் ஐயா !

    ReplyDelete
  7. வழி பயணத்தில் சரியான வழியைக் காட்டும் திசைக்காட்டி வேணும்

    வாழ்க்கை பயணத்திற்கும் முன்பு சிறப்பாக வழ்ந்தவர்களின் வழி காட்டுதலும் அவசியம் என்பதை கவிதை அழகாய் விளக்கி விட்டது.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. // ஆயினும்
    முன்னரே அந்தச் சாலைகளில்
    பயணப்பட்டு அறிந்தவர்கள்
    பயணிப்பவர்களுக்காக
    அக்கறையோடு வைத்துச் சென்றிருக்கிற

    தூரம் காட்டும் மைல்கற்களும்
    சந்திப்புப் பெயர்ப்பலகைகளும்

    பண்பட்ட கதைகள் போலவும்
    கருத்துள்ள கவிதைகள் போலவும்

    நம்பிக்கையூட்டுவது மட்டுமல்லாது
    சரியான வழிகாட்டியும்தான் போகிறது//

    - அருமையான கவிப்பூமாலை. கண்களுக்கும் கருத்துக்கும் விருந்து.

    ReplyDelete
  9. உண்மைதான். அருமை.

    ReplyDelete

  10. ”வழிப்பயணமும் வாழ்க்கைப் பயணமும்” மிகவும் அருமையான ஆக்கம். உண்மையாக வழிகாட்டிடும் சொற்கள்.

    //தூரம் காட்டும் மைல்கற்களும்
    சந்திப்புப் பெயர்ப்பலகைகளும்

    பண்பட்ட கதைகள் போலவும்
    கருத்துள்ள கவிதைகள் போலவும்

    நம்பிக்கையூட்டுவது மட்டுமல்லாது
    சரியான வழிகாட்டியும்தான் போகிறது

    அதனைச் சரியாகப் புரிந்து
    பயன்படுத்திப் பயணிப்பவர்களின் பயணம்
    எளிதானதாகவும்
    சுகமானதாகவும்
    சுவாரஸ்யமானதாகவும் மட்டுமல்ல
    விரைவானதாகவும் அமைந்தும்தான் போகிறது//

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள். ;)))))

    ReplyDelete
  11. பயணங்கள் நிறைய கற்றுத்தருகின்றன/

    ReplyDelete
  12. வாழ்க்கைப் பயணம் பலருக்கும் பாடம். உண்மையே.

    ReplyDelete
  13. நமக்கென்று ஏது பாதை . முன்னோர்கள போட்டு வைத்த பாதையில் நடக்கையில் இல்லாத தடுமாற்றம் பாதை மாறுகையில் இருக்கத் தான் செகிறது. சிந்திக்க வைக்கும் வரிகள். அருமை

    ReplyDelete
  14. அருமையான கவிதை இரமணி ஐயா.

    ReplyDelete
  15. வாழ்க்கையும் இப்படிதான் இல்லையா குரு...! அருமையாக சொல்லி விட்டீர்கள்...!

    ReplyDelete
  16. வெய்யிலிலும் மழையிலும் கைகாட்டி நிற்கும் அந்த வழிகாட்டிகளுக்கு கவிஞரின் நன்றி அறிவிப்பாய் ஒரு கவிதைமாலை! கவிஞரின் வெளியூர்ப் பயணம் தந்த கவிதை!


    ReplyDelete
  17. பயணத்திற்கும் வாழ்க்கைக்கும்தான் எவ்வளவு ஒற்றுமை.அழகாய் சொல்லிவிட்டீர்கள்

    ReplyDelete
  18. ''..தூரம் காட்டும் மைல்கற்களும்
    சந்திப்புப் பெயர்ப்பலகைகளும்

    பண்பட்ட கதைகள் போலவும்
    கருத்துள்ள கவிதைகள் போலவும்

    நம்பிக்கையூட்டுவது மட்டுமல்லாது
    சரியான வழிகாட்டியும்தான் போகிறது...''
    எனவே நாமுணர்ந்து பொறுப்புடன் நடக்க வேண்டும்.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  19. வாழ்க்கையை சில சமயம் வாழ்க்கை பயணம் என்றும் சொல்கிறோம். இரண்டுக்கும் இருக்கும் ஒற்றுமை வியக்க வைக்கிறது.
    நம் முன்னோர்கள் வாழ்ந்துகாட்டிய (வழிகாட்டி மரம் போல) பாதையில் சென்றால் வாழ்க்கைப் பயணம் என்றும் இனிமையே!

    ReplyDelete

  20. வழிப்பயணம் செய்தவர்கள் செல்லும் இலக்கு தெரியும். வாழ்க்கை பயணம் செய்தவர்கள் செல்லும் , சொல்லும் இலக்கு தெரியாதது. அந்தவழி சரியாக இருக்கலாம் எனும் நம்பிக்கையே துணை. அவரவர் வாழ்க்கைப் பயணம் அவரவர் வழியில். சிந்திக்க வைக்கும் பதிவு. பாராட்டுக்கள்.

    ReplyDelete