Saturday, January 4, 2014

அது "வாகிப் போகும் அவன்

காலத்திற்கான குறியீடு
தானே என்னும் கர்வத்தில்
கொஞ்சம் முன்பின்னாக
அந்த மணிகாட்டி நடக்க
எரிச்சலில் நிறுத்திவைத்தேன் அதை

காலம் சிரித்தபடி எப்போதும்போல்
நகர்ந்து கொண்டிருக்க
ஒரு நொடியில்
பயனற்றதாகிப் போனது
அந்தக் குறிகாட்டி

மன உணர்வுகளின்
உன்னத வெளிப்பாடு
என்மூலம் மட்டுமே
நிச்சயம் சாத்தியம் என
எகத்தாளமிட்டது கவிதை

ஒரு பார்வையற்றவனின்
உன்னத இசையில்
பெருங்கூட்டமே கண்கலங்கி நிற்க
 கர்வம் தொலைத்த கவிதைச் சொன்னது
" நான் அற்பச் சுமைதாங்கி மட்டுமே"

பதவியும் வசதியும்
தந்த கர்வத்தில்
எல்லாம் நானே என
எல்லாம் எனக்குள் என
எகிறிக் குதித்தான் அவன்

கவனியாதிருந்தும்
சீராயிருந்த மூச்சுக்காற்று
சட்டென சுழிமாறிப் போக
உடல்விட்டு திசை மாறிப்போக
ஒரு நொடியில்"அது "வாகிப் போனான் அவன்

குறியீடுகள் சுமைதாங்கிகள்
அளவீடுகளின் எல்லையினை
குழப்பமின்றி  அறிந்தவன்
வாழத்தெரிந்தவானாகிப்போக
அதை அறியாதவனே  அற்பனாகிப்போகிறான்

25 comments:

  1. 'ஆடிய ஆட்டம் என்ன...'

    ReplyDelete
  2. பெயர் ,உறவு ,வாங்கிய பட்டங்கள் எல்லாம் போய் ஒரே வார்த்தை 'பிணம் '!.
    த.ம 3

    ReplyDelete
  3. இது ஏதும் தெரியாமல் கையில் கடிகாரம் கட்டிக்கொண்டதால் காலத்தையே கட்டிக்கொண்டதாக நினைக்கும் மனிதரை என்னவென்று சொல்வது.?

    ReplyDelete
  4. எல்லோரும் ஒருநாள் அது வாகிபோவது மட்டும்
    உலகறிய வேண்டிய உண்மை !
    த ம 5

    ReplyDelete
  5. காலம் சிரித்தபடி எப்போதும்போல்
    நகர்ந்து கொண்டிருக்க
    ஒரு நொடியில்
    பயனற்றதாகிப் போனது
    அந்தக் குறிகாட்டி

    வாழ்க்கையின் தத்துவம் சொல்லும் நிதர்சன கவிதை

    ReplyDelete
  6. தலைப்பே அருமையான கவிதை.. அருமை ஐயா..

    ReplyDelete
  7. அருமை ஐயா அத்தனையும் நிதர்சனம்
    நன்றி தொடர வாழ்த்துக்கள் .....!

    இது நான் எழுதியது முடிந்தால் பாருங்கள் ஐயா.

    http://kaviyakavi.blogspot.ca/2013/02/blog-post_2105.html

    ReplyDelete
  8. வணக்கம்
    ஐயா.
    சிறப்பான கருத்தை கவிதை வடிவில் சொல்லிய விதம் அருமை மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்.
    த.ம8வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. //அளவீடுகளின் எல்லையினை
    குழப்பமின்றி அறிந்தவன்
    வாழத்தெரிந்தவானாகிப்போக
    அதை அறியாதவனே அற்பனாகிப்போகிறான்//
    அருமை
    ஐயா
    அருமை
    த.ம9

    ReplyDelete
  10. வாழ்வின் சாரம் சொல்லிசெல்லும் கவிதை.இந்த மனிதக்கூட்டத்துக்குள்,அல்லது வாழ்வின் சங்கமத்துக்குள் நானும் ஒருவன் என்பது மாறி என்னைச்சுற்றியே எல்லாம் என்கிற நினைவு வருகிற போது இப்படியாய் நிகழ்ந்து போகிற ஆபத்து நடந்து விடுகிறதுதான்.

    ReplyDelete
  11. உணர வேண்டிய உண்மை...

    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  12. வாழத்தெரிந்தவானாகிப்போக
    அதை அறியாதவனே அற்பனாகிப்போகிறான்//

    அருமை.

    ReplyDelete
  13. அருமையான கவிதை. நிலை இல்லா வாழ்க்கை எனத் தெரிந்தும் தானே எல்லாம் என நினைப்பவர்களுக்கு நல்ல அறிவுரை....

    த.ம. +1

    ReplyDelete
  14. மிக உன்னதமான கவிதை "அது"வாகிப் போனதைப் பற்றி! ஆம் இந்த வாழ்க்கை ஒரு நாள் மண்ணோடு மண்ணாகிப் போகும் எனத் தெரிந்தும் மனிதன் இருக்கும் சில நாட்களிலும் அகந்தையில் என்ன ஆட்டம் ஆடுகின்றான்!! அருமையான பொருள் பொதிந்த கவிதை....

    ReplyDelete

  15. வணக்கம்!

    தமிழ்மணம் 13

    வாழும் வழியை வடித்த வரிகளால்
    சூழும் இனிமை சுரந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  16. எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டியது. அருமையான கவிதை. அர்த்தங்கள் பொதிந்த கவிதை.

    ReplyDelete
  17. நிலையில்லா வாழ்விலே நிற்கும் அகந்தை
    தலைசாயும் போழ்துவரை தான்!


    அருமையான கவிதை!
    உணர்த்தும் உட்பொருள் மிகச்சிறப்பு ஐயா!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. அவன் அவனாக இருக்கும் வரைதான் அவனுக்கு மரியாதை! அவன் அதுவாகிப் போனால் ஏது மரியாதை என்பதனை உங்கள் பாணியில் உருவகமாகச் சொன்ன அழகான கவிதை!

    ReplyDelete
  19. //ஒரு நொடியில்"அது "வாகிப் போனான் அவன்//

    அடடா, அதற்குள் இவன் ஆடிய ஆட்டங்கள் ..... எத்தனை எத்தனை ?????

    நன்கு யோசிக்க வைக்கும் பதிவு.

    ReplyDelete
  20. "அது "வாகிப் போகும் அவன்" என
    அழகாகச் சொன்னீர்கள்
    சிறந்த கருத்துப் பகிர்வு

    ReplyDelete
  21. அருமையான படைப்பு! காற்று இருக்கும் வரை ஆட்டம்! அடங்கியபின் ஆட்டமெல்லாம் ஓட்டம்! அருமை! நன்றி ஐயா!

    ReplyDelete
  22. 'சுமைதாங்கி கவிதை' - அற்புதமான சொல்லாடல்.
    ஜிஎம்பி அவர்களின் கமெண்ட் ரசித்தேன்.

    ReplyDelete