Sunday, July 19, 2015

புலம்பி அலையும் பொது நலம்

உணவைத் தீர்மானிக்கும் அதிகாரம்
நாவுக்கும் நாசிக்கு போக
எகத்தாளம் போடுகிறது மனது

குடலும் உடலும் நாசமாவதறிந்து
குழம்பித் தவிக்கிறது அறிவு

வெற்றியைத் தீர்மானிக்கும் அதிகாரம்
இலவசத்திற்கும் லஞ்சத்திற்கும் போக
துள்ளிக் குதிக்குது பண நாயகம்

நேர்மையும் நியாயமும் புலம்புதல் கண்டு
நொந்துத் துடிக்குது ஜன நாயகம்

நீதியைத் தீர்மானிக்கும் அதிகாரம்
சாட்சிக்கும் சந்தர்ப்பத்திற்கும் போக
மீசை முறுக்குது சட்டம்

உண்மையும் நிஜமும்தோற்பது கண்டு
கதறித் திரியுது நியாயம்

மதிப்பைத் தீர்மானிக்கும் அதிகாரம்
பணத்திற்கும் பதவிக்கும் போக
எகிறிக் குதிக்குது அராஜகம்

எளிமையும் ஏழ்மையும்  ஒடுங்குவது கண்டு
தடுமாறி நிற்குது தர்மம்

வாழ்வைத் தீர்மானிக்கும் அதிகாரம்
வசதிக்கும் வன்முறைக்கும் போக
திமிரோடு வளருது சுய நலம்

மதிப்பும் மரியாதையும் அழிதலையறிந்து
புலம்பி அலையுது பொது நலம்

9 comments:

  1. ஒவ்வொரு அதிகாரமும் உண்மையே ஐயா...

    ReplyDelete
  2. அதிகாரங்கள் எங்கிலும் வரைமுறையற்று அராஜகம் செய்கின்றன ஐயா்்வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா!

    அதிகாரம் சர்வாதிகாரம் ஆகுதலால் வரும்
    துயரத்தை மிக அழகாகக் கூறினீர்கள்!

    அருமை! வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  4. வணக்கம்
    ஐயா.
    காலம் ....கஷ்டகாலம்... ஐயா.. சொல்லியது 100 வீதம் உண்மை.. த.ம 4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. எளிமையும் ஏழ்மையும் ஒடுங்குவது கண்டு
    தடுமாறி நிற்குது தர்மம்

    வாழ்வைத் தீர்மானிக்கும் அதிகாரம்
    வசதிக்கும் வன்முறைக்கும் போக
    திமிரோடு வளருது சுய நலம்// உண்மையை உரைக்கும் வரிகள்!

    ReplyDelete
  6. வணக்கம்,
    தங்களின் ஒவ்வொரு வார்த்தையும் அருமை,
    வாழ்த்துக்கள்.
    நன்றி.

    ReplyDelete
  7. அதிகாரங்களின் ஆட்சி அத்தனைக் காலம் நிலைத்திருக்குமா என்பது சந்தேகம்தான்! சிறப்பான வரிகள்! பாராட்டுக்கள்!

    ReplyDelete