Monday, August 24, 2015

புதுகை பதிவர் திருவிழா ( 2 )

பதிவர் ஒவ்வொருவரைக் குறித்தும் தொடர்ந்து
அவரது பதிவுகளைப் படிப்பதன் மூலம்
மிகத் தெளிவாகத் தெரிந்தும்
புரிந்தும் வைத்திருக்கிறோம்

எனவே அவர் குறித்து அவர் மீண்டும்
தன்னை விரிவாக அறிமுகம் செய்து கொள்வதை விட
அவர்தான் இவர் என பெயரையும் அவருடைய
வலைத்தள முகவரியையும்
அறிமுகம் செய்தாலே போதும்

சிலருடைய எழுத்துக்கு சிலர் மானசீக
இரசிகர்களாகவே இருக்கிறார்கள்
அவரை சந்தித்து உரையாடி மகிழவேண்டும் என்கிற
ஆவலோடு சந்திப்புக்கு வருகிறார்கள்

அப்படிபட்டவர்களுக்கு அந்தக் கூட்டத்தில்
அவர்தான் இவர் என்பது தெரியாததால்
தேடிக் கொண்டிருக்கவேண்டியதாய் இருக்கிறது
அவரை மேடையில் அறிமுகம் செய்துவிட்டால்
சந்திக்க விரும்புவர்கள் அவரை உடன் தொடர்பு
கொள்ள வசதியாக இருக்கும்

மற்றபடி பதிவர் தன் பதிவுகள் மற்றும்
பதிவராய் இருப்பதன் நோக்கம்
அதன் மூலம் தான் பெற்ற இன்பம்
மற்றும் நண்பர்கள் என விலாவாரியாகப் பேசத்தான்
வலைத்தளமே இருக்கிறதே

மீண்டும் அதையே சந்திப்பிலும் தொடர்தல்
"கூறியது கூறல் "என்பது மட்டுமல்லாது
பிற நிகழ்வுகளுக்கு குறிப்பாக புத்தக வெளியீடு
சிறப்பு விருந்தினரின் சிறப்புரை முதலான
நேரத்தை விழுங்கிவிடும் சாத்தியமும் உள்ளது

இரண்டாவது நிதிவிஷயம்

சிலர் நிதியைத் திரட்டுவது போல
எளிதான விஷயம் இல்லை என்பார்கள்

பலர் நிதி திரட்டுவதைப் போல
கடினமான விஷயம் இல்லை என்பார்கள்

என்னைப் பொறுத்தவரை இரண்டும் சரிதான் என்பேன்

நோக்கமும் நடத்துபவர்களும் இதற்கு முன்பு
நடந்த நிகழ்வின் தாக்கமும் மிகச் சரியாக
இருக்கும்பட்சத்தில் சிலர் சொல்வது சரி

மாறுபட்டிருப்பின் பலர் சொல்வதுதான் சரி

நாம் எப்போதும் சிலர் சொல்கிறபடித்தான்
மிகச் சிறப்பாக மூன்று பதிவர்கள் சந்திப்பையும்
நடத்தி முடித்திருக்கிறோம்

எனவே நம் போன்று வருடா வருடம் தொடர்ந்து
பதிவர் விழா நடத்துகிற நாம் நிதி விஷயம் குறித்து
ஒரு பொதுவான கருத்தை உருவாக்கிக்
கொண்டால் நல்லது

இந்த விசயத்தில் சென்னைப்பதிவர்கள் சில
மிகச் சிறந்த முன்னுதாரணங்களை ஏற்படுத்திச்
சென்றிருக்கிறார்கள்

உதாரணமாக நிதி வழங்குதல் என்பது கட்டாயமில்லை
விரும்புபவர்கள் தரலாம்

வரவையும் செலவையும் முறையாகப் பராமரித்து
அனைவருக்கும் தெரிவிப்பது

மீதத் தொகை ஏதும் இருப்பின் அடுத்த பதிவர் சந்திப்பு
நடத்த இருக்கிற மாவட்டத்திற்குத்
தந்து உற்சாகப்படுத்துவது

(அந்த வகையில் சென்னைப் பதிவர்கள்
மதுரை பதிவர் சந்திப்புக்கு
நிதி கொடுத்து உதவினார்கள்.மதுரைப் பதிவர்
சந்திப்புக்கு பொறுப்பேற்றவர்கள் இரண்டாவதைச்
சரியாகச் செய்யாததால் மூன்றாவதை இயல்பாகவே
செய்ய முடியாதவர்களாக இருக்கிறார்கள் )

இது நீங்களாக நிதி திரட்டுதல் தொடர்பாக
பதிவர்களுக்கு ஏதும் தனித்த சிறந்த கருத்து இருப்பின்
( நிச்சயம் இருக்கும் ) தெரிவித்தால் நிகழ்ச்சிப்
பொறுப்பாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் தானே

வாழ்த்துக்களுடன்..



10 comments:

  1. மாவட்ட வாரியாக தலைவர்களையும், பொருளாளர்களையும் நியமிக்கலாம். சங்க மாநாடு சமயம் என்றில்லாமல் ஒரு நிரந்தர வைப்பு நிதியை ஏற்படுத்தி அதை ஷேர் மார்க்கெட் போன்ற முதலீடுகளில் போட, வல்லுனர்களை வைத்து முயற்சி செய்து, அதை பல்வேறு நலத் திட்டங்களுக்கும், மாநாடு நடத்தவும் பயன் படுத்தலாம்.

    ReplyDelete
  2. பயனுள்ள யோசனைகள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. நிதி இன்றி எதுவுமே சாத்தியமில்லை என்பது உண்மையே ஐயா.
    ஆனால் பிரச்சினைகள் வருத்தங்கள் என்று வருமேயானால்,அது நிதியை மையமாக வைத்தே வரும்.
    தேவையான அளவிற்கு மட்டுமே நிதி திரட்டி, நிகழ்ச்சியை சிறப்பாக முடிப்பது என்பதே சிறந்தது என்று எண்ணுகின்றேன். அதிக நிதி சேருமானால், பிரச்சினைகளும், இலவச இணைப்பாக தொடரும்
    நன்றி ஐயா
    தம +1

    ReplyDelete
  4. மூத்த வலைப்பதிவர் என்ற முறையில் தாங்கள் தங்கள் அனுபவத்தோடு சொல்லும், வரப்போகும் வலைப்பதிவர் சந்திப்பு – திருவிழாவிற்கான யோசனைகள் யாவும் கடைபிடிக்கப்பட வேண்டியவைகளே. சென்ற முறை மதுரையில் நடந்த சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கான படங்களை தகவல்களோடு விரிவாக வெளியிடுவதாகச் சொன்னார்கள். ஏனோ வெளியிடவில்லை.

    ReplyDelete
  5. அய்யா நல்ல நல்ல் யோசனைகளைத் தாங்களும் சொல்லி, பின்னூட்டத்தில் நம் நண்பர்களையும் சொல்ல வைக்கிறீர்கள். மிக்க நன்றி. நல்லவற்றை எடுத்துக்கொண்டு செயல்படுத்திட அனைவரும் இரண்டாவது யோசனையையும் நடைமுறைப்படுத்தி உதவ வேண்டுகிறேன். நன்றி

    ReplyDelete
  6. பயனுள்ள யோசனை/

    ReplyDelete
  7. இந்த சிறப்பு விருந்தினரின் சிறப்புரையை முற்றிலும் தவிர்க்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து.

    ReplyDelete
  8. அன்பு நண்பர் G.M.B அவர்களின் கருத்து நன்று!

    ReplyDelete
  9. சிறந்த பகிர்வு
    விழா இனிதே இடம்பெற வாழ்த்துகள்

    புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
    இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
    http://www.ypvnpubs.com/

    ReplyDelete