Wednesday, March 16, 2016

சொர்க்கமது ஆனாலும் கூட----

பிடிச் சோறு ஆனாலும் கூட -அது
மிகப்பழசே ஆனாலும் கூட -நீ
பிழிந்துஇட  உண்ணுகிற சுகமே -அது
தேவலோக அமுதுக்குச் சமமே

எட்டுவகைக்  காய்கறிகள் கூட -உடன்
எறாநண்டும்  சேர்த்திருந்தும்  கூட-சோத்தை
தொட்டெடுக்க மறுக்குதடி மனமே-இந்தக்
கூத்துஇங்கு தொடருதடி தினமே

ஒருமொழியே ஆனாலும் கூட-அது
வசைமொழியே ஆனாலும் கூட-அது
திருமொழியாய்த் தெரியுதடி எனக்கு-உன்னைப்
பிரிந்துஇங்கு தவிக்கின்ற எனக்கு

நாகரீக உடையணிந்த மாந்தர்-தினம்
நுனிநாக்கில் கதைத்தாலும் கூட-அது
சோகமேற்றிப் போகுதடி எனக்கு -உன்னை
எண்ணிதினம் துடிக்கிற எனக்கு

குச்சிவீடு என்றாலும் கூட-வசதி
மிகக்குறைவு  என்றாலும் கூட-கண்ணே
நிச்சயசமாய் சொர்க்கமது தானே-அதுவே
கடல்தாண்டப் புரியுதடித் தேனே

கண்ணைவித்து ஓவியத்தை வாங்கி -மனம்
களிக்கின்ற கிறுக்கனவன்  போல-இங்கு
உன்னைவிட்டு வசதிசேர்க்க நானும்-இளமை
வாழ்வதனைத் தொலைக்கிறேண்டி நாளும்

சொர்க்கமது  ஆனாலும் கூட - அது
நம்மூரைப் போலாகா தென்று- கவிஞன்
சொல்லியது சத்தியமாய் நிஜமே-இதனை
அங்கிருப்போர் அறிந்துகொண்டால் நலமே


(குடும்பத்திற்காக ,குடும்பம் பிரிந்து
அயல் நாட்டில்  அல்லறும்  நண்பர்களுக்கு
இக்கவிதை என் எளிய  சமர்ப்பணம் ) 

7 comments:

  1. தவிக்கும் மனதிற்கு ஆறுதல் தரும் வரிகள்...

    ReplyDelete
  2. //கண்ணைவித்து ஓவியத்தை வாங்கி -மனம்
    களிக்கின்ற கிறுக்கனவன் போல-இங்கு
    உன்னைவிட்டு வசதிசேர்க்க நானும்-இளமை
    வாழ்வதனைத் தொலைக்கிறேண்டி நாளும்//

    சம்பந்தப்பட்ட அனைவரையும் நன்கு யோசிக்க வைக்கும் வைர வரிகள் இவை !

    பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. அருமை. மனதில் இருக்கிறது சொர்க்கமும் நரகமும்!

    ReplyDelete
  4. வாழ்க்கையைப் பற்றிய உண்மையான படபிடிப்பு உங்கள் வரிகள்.

    ReplyDelete
  5. வெளிநாட்டில் வேலை பார்க்கும் நண்பர்களின் உள்ளத்தில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் கவிதை இது.
    த ம 4

    ReplyDelete
  6. அருமை! உண்மையான வரிகள்

    ReplyDelete
  7. உண்மையான வார்த்தைகள். கவிதை அருமை.

    ReplyDelete