Saturday, January 28, 2017

ஒரு வரிதான் ஆயினும் இதுவல்லவோ திருவரி...

நாவின்
மேற்புறம் பார்த்தே
உடலின் நோய்க்கூறுகளைக்
கணித்துவிடுகிறார்
திறமையான மருத்துவர்

குழந்தையின்
அழுகுரலின் தன்மையறிந்தே
குழந்தையின் தேவையைப்
புரிந்துகொள்கிறாள்
பாசம் மிக்க தாய்

நுனி நூலின்
தரம் அறிந்ததுமே
துணியின் தரத்தை
மதித்து விடுகிறார்
கைதேர்ந்த வியாபாரி

இளைஞனின்
பார்வை படியுமிடம் அறிந்தே
அவன் கண்ணியத்தை
அளந்து விடுகிறாள்
புத்திசாலிப் பெண்

படைப்பின்
வார்த்தைகளைக் கொண்டே
படைப்பாளியின் உள்மனத்தைச்
கணித்து விடுகிறான்
பண்பட்ட வாசகன்

"உள்ளத்தில் உண்மை ஒளி
உண்டாகின் அது
வாக்கினில் உண்டாம் "
இது ஒரு வரிதான் ஆயினும்
படைப்பாளிக்கு
இதுவல்லவோ திருவரி

7 comments:

  1. அனைத்தும் உண்மை ரசித்தேன் கவிஞரே
    த.ம.2

    ReplyDelete
  2. அருமைங்க அய்யா.

    ReplyDelete
  3. "உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாகின் அது வாக்கினில் உண்டாம்" இது ஒரு வரிதான் ஆயினும் படைப்பாளிக்கு இதுவல்லவோ திருவரி.//

    திறமையான மருத்துவர், பாசம் மிக்க தாய், கைதேர்ந்த வியாபாரி, புத்திசாலிப் பெண், பண்பட்ட வாசகன் என பல உதாரணங்களைச் சொல்லி திருவரியை இறுதியாகக் கொண்டுவந்து நிறைவு செய்துள்ளது அழகாக உள்ளது. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. இன்றைய வரிகள் - உங்களுக்கு மகுடம் போல...

    வாழ்த்துகள் ஐயா...

    ReplyDelete
  5. பாரதியின் ஒற்றை வரியின் நீடசியாய் , இந்த அழகிய கவிதை.
    அருமை

    ReplyDelete
  6. சிறப்பான பகிர்வு...

    நன்றி.

    ReplyDelete