Wednesday, February 1, 2017

சின்னச் சின்ன அடிகள் வைத்து

சின்னச் சின்ன அடிகள் வைத்து
சிகரம்  ஏறுவோம்
சிந்தை தன்னில் குழப்ப மின்றி
தொடர்ந்து   ஏறுவோம்

ஞாலம் என்னும் பூதம் கூட
துகளால் ஆனது
மாயம் செய்யும் காலம் கூட
நொடியால் ஆனது

சீறும் அலைகள் கொண்ட கடலும்
துளியால் ஆனது-இங்கு
காணும் பெரிய  பொருட்கள் எல்லாம்
அணுவா  லானது

வெற்றி பெற்ற மனிதர் என்றால்
இதனை அறிந்தவர்
பொத்தி நாமும் தூங்கும் போது
விழித்து எழுந்தவர்

முயலும் தோற்று ஆமை வென்ற
கதையைச் சொல்வதே -இந்த
ரகசி யத்தை நாமும் நன்றாய்ப்
புரிந்து கொள்ளவே

வானை முட்டி திமிராய் நிற்கும்
மலையைக் கூடவே
காணத் தெரியா சிறிய வேர்கள்
எளிதாய் உடைக்குமே

தொடர்ந்து முயன்றால் இந்த உலகில்
எல்லாம் முடியுமே-இதை
உணர்ந்தால் போதும் என்றும் வாழ்வில்
வெற்றி தொடருமே

11 comments:

  1. முயலும் தோற்று ஆமை வென்ற கதையும் மாறிப்போனதே வின் வின் தான் வாழ்வின் லட்சியமாய் ஆகிப்போனதே

    ReplyDelete
  2. புதிய புதிய கருத்தைகூறி
    புதுமை செய்கிறீர்
    பதியும் வகையில் மனதில்ஏற
    பாவும் நெய்கிறீர்!

    ReplyDelete
  3. உணர்வதற்கும் ஒரு சமயம் வரும்... வர வேண்டும்...

    ReplyDelete
  4. //தொடர்ந்து முயன்றால் இந்த உலகில் எல்லாம் முடியுமே - இதை உணர்ந்தால் போதும் என்றும் வாழ்வில் வெற்றி தொடருமே//

    இந்த நிறைவு வரிகளை நிறைவாகச் சொல்ல எடுத்துக்கொண்ட மேற்கோள்கள் அனைத்துமே அருமையோ அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  5. அருமையான குழந்தைப் பாடல் - அதே சமயம் -தோல்வியினால் சூழப்பட்டு மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கும் ஏற்ற மருந்து! - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து

    ReplyDelete
  6. சிற்றுளி பெரும் மலையையும் உடைக்கும், என்ற தத்துவத்தை இங்கு நினைவில் கொண்டேன்.

    ReplyDelete