Tuesday, April 25, 2017

ஒரு கவிக்கருவைச் சிதைத்தபடி....

கலங்கிய நீரில்
விழுந்து
மெல்ல மெல்ல
முகம் இழக்கும் நாணயமாய்

விழித்ததும்
நினைவிலிருந்து
மெல்ல மெல்லக் கரையும்
ஒரு நல்ல கனவாய்

சாலைப் பேரிரைச்சலில்
கலந்துக் கலைந்து
மெல்ல மெல்ல உயிர்த்தொலைக்கும்
ஒரு நல்ல இசையாய்

பெருந்திரளின்
அழுத்தத்தில்
மெல்ல மெல்ல ஒதுங்கும்
தர்மமாய், நியாயமாய்

யதார்த்தத்தின்
அதீத நெருக்கடியில்
மெல்ல மெல்லக் கலைகிறது
கனவுகளும் கற்பனைகளும்

அதன் காரணமாய்
உருவாக இருந்த
ஒரு கவிக்கருவை
மெல்ல மெல்லச்
சிதைத்தபடியும், கலைத்தபடியும்

10 comments:

  1. நல்ல பகிர்வு.. பல சமயங்களில் எழுத நினைப்பவை மறந்து போவது எனக்கு அடிக்கடி நடப்பது - இங்கே சொல்வது போல் கவிதை அல்ல கட்டுரை...

    ReplyDelete
  2. ஒரு கவிக்கரு உருவாவதற்குள், அது உடனடியாக மறந்தும் மறைந்தும்போக எத்தனை எத்தனை இடைஞ்சல்கள் .... பெண்கருக்கள் போலவே இருக்கும் போலிருக்குது இந்தக் கவிக்கரு என்பதும்.

    எனினும் அருமையான ஆக்கம். பாராட்டுகள்.

    ReplyDelete
  3. எழுத நினைத்தை எழுத நினைத்து தொடங்கி எழுதி முடிக்க்ம்போது நினைத்தது எதுவும் அதில் இல்லாமல் போவதை பிறகுதான் உணர முடிகிறது

    ReplyDelete
  4. மறதியே... கவிதையாய்..... அருமை

    ReplyDelete
  5. அனுபவங்களோடு ஒத்துப் போகிறது.

    ReplyDelete
  6. சாலைப் பேரிரைச்சலில்
    கலந்துக் கலைந்து
    மெல்ல மெல்ல உயிர்த்தொலைக்கும்
    ஒரு நல்ல இசையாய்//


    அருமை

    ReplyDelete
  7. இதெல்லாம் வயதான பிறகே தெரிகிறது

    ReplyDelete
  8. ஒவ்வொரு பத்தியும் அருமை.

    ReplyDelete