Tuesday, September 19, 2017

"வரம் கொடுத்தவன் தலையிலேயே

"வரம் கொடுத்தவன்
தலையிலேயே
கைவைக்க முயற்சித்த
அசுரன் கதையில்
எனக்கு நம்பிக்கையில்லை"
என்றார் அந்த முதியவர்

"எனக்கும் அப்படித்தான்
அரக்கனே ஆயினும் கூட
அப்படிச் செய்ய மனம் வருமா ?"
என்றார் அடுத்தப் பெரியவர்

அடுத்திருந்தப் பெரியவர் மட்டும்
"எனக்கு நம்பிக்கை இருக்கிறது
முயற்சித்த இல்லை
கைவைத்த....."
என்றார் விரக்தியாய்

பெரியவர்கள் இருவரும்
ஒரு பத்தாம்பசலியைப்
பார்ப்பதுப் போல
அவரைப் பார்க்க...

அவர் இப்படிச் சொன்னார்
"வாரீசுகள் வசதியாய் இருந்தும்
இந்த வயோதிகர் இல்லத்தில்
இருக்கிற நாமெல்லாம் யாராம்?
அனுப்பி வைத்தவர்கள் எல்லாம் யாராம் ?"
என்றார் மெல்லச் சிரித்தபடி

சிறிது நேரம் யாரும்
பேசிக் கொள்ளவுமில்லை
ஒருவர் முகத்தை ஒருவர்
பார்த்துக் கொள்ளவுமில்லை

மெல்லக் கனத்த இருள்
சூழத் துவங்கியது
வெளியிலும்....

7 comments:

  1. மறக்க நினைத்தாலும் விடமாட்டேன் என்கிறாரே இந்தப் பெரியவர் என்று மற்ற இருவரும் நினைத்திருக்கக் கூடும்!

    ReplyDelete
  2. நான் அரசியல் பற்றியோ என முதலில் நினைத்து விட்டேன்....

    ReplyDelete
  3. நன்றாக இருக்கு நசுக்காகப் பேசும் கவிதை..

    ReplyDelete
  4. TM 3 படித்து முடிக்கையில் சுருக்கென்று குத்துவது போல இருந்தது

    ReplyDelete
  5. அருமை! பொட்டென்று ஓங்கிப் போடும் வரிகள்!

    ReplyDelete
  6. முகம் கிழிக்கும் உண்மை

    ReplyDelete
  7. எல்லோரும் பஸ்மாசுரன்களாக இல்லை என்பதும் ஒரு ஆறுதல்

    ReplyDelete