Wednesday, October 4, 2017

ஜோதிடத்தை நம்புபவர்களுக்கும்/ நம்பாதவர்களுக்கும்/

எனக்குக்  கொஞ்சம் ஜோதிடம் தெரியும்
ஜாதகம் எழுதும் அளவுக்கு ஜோதிட
அறிவும் கொஞ்சம் உண்டு

கடந்த ஆண்டு ஏடு பார்ப்பவர்கள் குறித்து
தெரிந்து கொள்ளலாமே என
என் பகுதியில் இருந்த ஏடு ஜோசியரைப்
பார்க்கப் போனேன்

ஒரு வகையில் பரிசோதிக்கும் நோக்கத்தோடு
என்று கூடச் சொல்லலாம்

அவர்கள் வழக்கம்போல ஒவ்வொரு ஏடாக
எடுத்துப் போட்டு பெயருக்கு ஒரு குறிப்பினைக்
கேட்கக் கேட்க நானாக ஒரு வார்த்தையும்
கூடுதல் குறைவாகச் சொல்லிவிடாது
இல்லை/ஆம் என்பது போல மட்டும்
சொல்லி வந்தேன்

என் மூலம் அவர்கள் எதையாவது தெரிந்துகொண்டு
அதன் மூலம் மிகச் சரியாகச் சொல்லுகிறார்போல
ஆகிவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக
இருந்தேன்

மூன்று நான்கு கட்டுக்கள் முடிந்து அடுத்து
ஒரு கட்டு எடுத்தவர்,"

உங்கள் பெயர்
இரண்டு தெய்வங்கள் குறிக்கும் பெயரா ? "
என்றார்

அது அப்படித்தான் என்பதால் "ஆம்" என்றேன்

"ஒன்று வைணவம் சார்ந்து ஒன்று
சைவம் சார்ந்ததா?" என்றார்

அதுவும் அப்படித்தான் என்பதால்
"ஆம் " என்றேன்

அவ்வளவுதான். அதற்கு மேல் என்னிடம்
எதுவும் கேட்கவில்லை

மடமடவென என்பெயர் என் மனைவி பெயர்
என் தாயார் பெயர் என வரிசையாக
மிகச் சரியாக அந்த ஏட்டைப்பார்த்துச்
சொல்ல ஆரம்பித்து விட்டார்

நான் பிரமித்து விட்டேன்

இது எப்படிச் சாத்தியம் என இதுவரை
விளங்கவில்லை

இது கூடப் பரவாயில்லை

என் கட்டை விரல் ரேகையைப் பதிவு
செய்துவிட்டு "இரண்டு நாட்கள் கழித்து
வாருங்கள் உங்கள் ஜாதகம் கணித்துத்
தருகிறேன் " என்றார்

மிகச் சரியாக இரண்டு நாள் கழித்துச் செல்ல
என் ஜாதகக் கட்டம் பிறந்த தேதி அனைத்தையும்
மிகச் சரியாக கணித்து வைத்திருந்தார்

சுயமாக எழுவதானாலும், கம்பியூட்டர்
ஜாதகமாயினும் பிறந்த ஊர், வருடம்,
தேதி, நேரம்மிகச் சரியாகத் தெரியாமல்
மிகத் துல்லியமாய் லக்கின ஜாதகம்
எழுதச் சாத்தியமே இல்லை


இவர்கள் எப்படி ரேகையை வைத்தும்
ஏடைவைத்தும் மிகத் துல்லியமாகக்
கணிக்கிறார்கள்

இது இன்றுவரை எனக்கு மிகக்
குழப்பமான விஷயமாகவே இருக்கிறது

நம்புபவர்கள் அது குறித்தும்
நம்பாதவர்கள் அதில் உள்ள சூட்சுமங்கள்
குறித்தும் எழுதினால் மகிழ்வேன்

இத்துடன் உங்கள் பார்வைக்காக என்னுடைய
கம்பியூட்டர் ஜாதக நகலையும்
இவர்கள் கொடுத்த குறிப்பினையும்
இணைத்துள்ளேன்






20 comments:

  1. இது பற்றிய எனது அனுபவங்களை பிறகு வந்து சொல்லுகிறேன்.....நேரமில்லை இப்பொது

    ReplyDelete
  2. உங்கள் பகுதியில் இருக்கும் அந்த ஏடு ஜோசியரின் பெயர் என்ன? ஒரு சிலர் சரியாகவே கணிக்கிறார்கள். எங்க மாப்பிள்ளைக்கு அப்படித் தான் ஏடு பார்த்துட்டு எங்க பொண்ணோட பெயரை முதற்கொண்டு சொல்லி இப்படிப் பெயர் உள்ள பெண், இந்த ஜாதக அமைப்புனு போட்டுக் கொடுத்திருந்தார். அப்படியே நடந்தது. ஆனால் இதைக் கல்யாணம் ஆனதும் தான் அவங்க வீட்டிலே எங்களிடம் சொன்னாங்க. அவர் மும்பையில் இருக்கார். அவரை நாங்கள் இன்று வரை பார்த்ததில்லை. இன்னும் எங்கள் உறவினருக்குச் சொன்னதும் சரியாகவே இருந்திருக்கு! ஆனால் அதே வைத்தீசுவரன் கோயிலில் கொஞ்சம் கூடச் சரியில்லை! நம்பிக்கை தருவதில்லை.

    ReplyDelete
  3. கெளசிக அகத்திய சிவ வாக்கிய
    நாடி ஜோதிட அதிர்ஸ்டக்கல் நிலையம்
    பசும்பொன் நகர் //

    பலர் சரியாகவே சொல்கிறார்கள்
    கட்டை விரல் கொண்டு அப்படித்
    துல்லிதமாய் ஜாதகம் கணிக்க
    இயலுமா என்பதே என் ஆச்சரியம்

    ReplyDelete
  4. மதுரையிலா? பசும்பொன் நகர் எங்கே இருக்கு? நான் 40 வருஷத்துக்கு முந்தைய மதுரையைத் தான் அறிவேன். :( இப்போது மதுரையின் முகமே மாறி விட்டதே!

    ReplyDelete
  5. Avargal Unmaigal said...//
    இது பற்றிய எனது அனுபவங்களை பிறகு வந்து சொல்லுகிறேன்.....நேரமில்லை இப்பொது//

    அவர் சொல்லி இவர் சொல்லி
    என இல்லாமல் நானே நேரடியாகக்
    கண்டது என்பதால் இதை எழுதினேன்

    இதில நிச்சயம் ஏதோ சூது இல்லை
    சூட்சுமம் உள்ளது

    அறிந்த பதிவர்கள் இருக்கக் கூடும்
    அது குறித்து அறிந்து கொள்ளலாமே
    என்பதற்கே இந்தப் பதிவு

    ReplyDelete
  6. சந்தோசமா இருக்கும்போது ஜோதிடத்து மேல நம்பிக்கை வராது. ஆனா, கெட்டு போயிருக்கும்போது நம்பிக்கை வரும்

    ReplyDelete
  7. Geetha Sambasivam //

    73/1 பைபாஸ் ரோடு
    (பழங்காநத்தம்நடராஜ் தியேட்டர் அருகில்)
    இப்போது அவர்கள் அங்கு இருக்கிறார்களா
    எனத் தெரியவில்லை
    பெயர் தென்னவன் ராமசாமி

    ReplyDelete
  8. ராஜி //அப்படியும் சொல்ல முடியாது
    நான் மிக நன்றாக இருக்கும்போதே
    உண்மையறியும் ஆவலில்தான் போனேன்
    இன்று அந்த நோட்டுக் கிடைத்தது
    அதனால் இப்போது எழுதுகிறேன்

    ReplyDelete
  9. ஜாதகம் எழுத தெரிந்த உங்களுக்கே சந்தேகம் இருந்தால் நாங்களெல்லாம் என்ன சொல்வது ?
    த.ம.3

    ReplyDelete
  10. எனக்கு ஜாதகத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால் சில விஷயங்களில்(தாங்கள் குறிப்பிட்டிருந்தது போல்) எனக்கு ஆச்சர்யம் உண்டு. அனால் கேரளாவில் இருந்து வந்திருந்த ஒரு ஜோசியரிடம் பல வருடங்களுக்கு முன் ஒரு முறை நாங்கள் என் ஜாதகத்தை பார்த்த அனுபவம் உண்டு அவர் என் ஜாதகத்தை பார்க்கும் முன்னே சோலி உருட்டி பார்த்து என் எதிர்கால வாழ்க்கை நிகழ்வுகள் சிலவற்றை சொன்னார். அப்பொழுது நான் நம்பவில்லை. ஆனால் இப்பொழுது அவர் சொன்னது போல் தான் நடக்கிறது.

    ReplyDelete
  11. GOPALAKRISHNAN VENKATACHALAMOctober 4, 2017 at 9:38 PM

    very interesting experience and astrology is a true science like any other science and those who have learnt thoroughly can give indications like what you were told on your name family etc .but prediction of future be mentioned in a general way like whether my child will have good education and may reply yes only precise indications may not be possible by all and only experts can probably tell

    ReplyDelete
  12. நீங்கள் சொன்னத்தை பார்கும் போது வியப்பு வருகிறது அப்படியா எங்கே என்று விருப்பமிருந்தால் இடம் பகிருங்கள்

    ReplyDelete
  13. அவரவர் நம்பிக்கையைப் பொறுத்தே இது அமையும்.

    ReplyDelete
  14. இது முழுக்க முழுக்க தொழில் நுட்பமே. அஷ்டாவதானம், தசாவதானம் எனக் கேள்வி பட்டிருக்கிறோம் இல்லையா அதில் தேர்ந்த ஒருவர் இதை செய்ய முடியும்.

    ReplyDelete
  15. நாங்கள் இதுவரை ஏடெடுத்துப் பார்த்ததில்லை அது போல ஜாதகமும் ரொம்பப் பார்த்ததில்லை...நீங்கள் சொல்லியிருப்பது மிகவும் வியப்பான விஷயமே! நம்பிக்கை சார்ந்ததும் கூட இல்லையா...

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  16. கில்லர்ஜி ரமணி சகோவிற்குச் சந்தேகம் இல்லை. வியப்பு! அது எப்படி என்று தெரிந்து கொள்ளும் ஆவலே!

    கீதா

    ReplyDelete
  17. என் அனுபவத்டை சுருக்கமாக எழுதுகிறேன் முதலில் எனக்கு இந்த ஜாதகம் ஜோசியம் என்பதில் நம்பிக்கை இல்லை
    எனது இருபதாம் வயது துவக்கம் என்று நினைக்கிறேன் எந்தமக்கை வீட்டுக்குச் சென்றபோது அங்கு வந்திருந்த ஒருவர் எ ந்க பார்த்து என்சக்கு ஆயுள் மிகவும் குறைவு என்றும் இன்னும் ஆறு மாதமே அதிக்சம் என்றும் கூறினார் இது என்மனதை மிகவும் பாதித்தது என் தந்தை மறைந்து நானென்சிற்றன்னை ஆரது மகன் களை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நேரமெனது மறைவால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நினைத்து ஒரு ஆயுளின்ஷூரன்ஸ் பாலிசி ரூ. 10000,க்கு எடுத்தென் அக்காலத்தில் அது ஒரு பெரிய தொகை எனக்குப் பிறகும் அவர்கள் கஷ்டப்பட மாட்டார்கள் என்று. அப்போது இந்தக் கைரேகை சாஸ்திரம் chieros palmistry வாசித்தேன் ஓரளவு தேர்ச்சியும் பெற்றேன் மதம் ரூ25 ப்ரிமியம் கட்ட இயலாமல் 16 மாதங்களில் அந்த பாலிசி லாப்ஸ் ஆயிற்றுஎனக்கும் கைரேக பார்க்கத்தெரியும் என்று கூறி பலரும் எஞோசியம் குறித்து நம்பிக்கை தெரிவித்தனர் சிலர் மிகவும் நம்பினார்களவர்களில் ஒருவர் ஒரு பெரிய ஆக்சிடெண்ட்டி இடுப்புக்கு கீழே செயல் வராமல் போனார்கள் சில ஜெனரல் குணாம்சங்கள் பலருக்கும் பொருந்தும் அதுவே ஜோசியரின் வெற்றியை நிர்ணயிக்கும் நான் ஜாதகம் பார்த்து மணக்கவில்லை என் மகன்களுக்கும் பார்க்க வில்லை பெரும்பாலும் ஜோசியம் ஒரு ஆர்ட் சில நேரஙளில் பலிப்பது போல் தெரியும் உங்கள் அனுபவம் வித்தியாசமாக இருக்கிறது

    ReplyDelete
  18. எழுத்துப் பிழைகளுக்கு மன்னிக்கவும்

    ReplyDelete
  19. இது ஜோதிட நம்பிக்கை சம்பத்தப்பட்ட விஷயமில்லை எப்படி ரேகையை வைத்து ஜாதகம் எழுதமுடிகிறது என்பது குறித்தே

    ReplyDelete
  20. உண்மையான திறமைசாலிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் பகிர்வுக்கு பாராட்டுகள்

    ReplyDelete