Friday, January 18, 2019

கவிநூறு நம்வசமே

மலரோடு உறவாடி
மகிழ்வோடு வலம்போகும்
நிலவோடு உறவாட
நினைவெல்லாம் பூமணக்கும்

கரையோடு தினம்கூடி
களிப்போடு சதிராடும்
அலையோடு நினைவோட
நுரைபொங்கும் மனமெங்கும்

மலையரசன் உடல்தழுவி
மதிமயங்கித் தரைநழுவும்
குளிரருவி நிலையுணர
மனமாகும் குற்றாலம்

தண்மலரைக் கூடிமனக்
களிப்போடு உலாபோகும்
வண்டினத்தின் சுகமறிய
மனம்கொள்ளும் ரீங்காரம்

இயற்கையுடன் இணைந்துவிடும்
இளம்மனது வாய்த்துவிட்டால்
இயற்கையதன் சுகம்யாவும்
யாவருக்கும் இலவசமே

கணந்தோறும் மகிழ்வோடு
சூழலிலே மயங்கவிழும்
மனமதுவும் கொண்டுவிட்டால்
கவிநூறு நம்வசமே

9 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Just Super Sir/-
    இன்று போல் என்றும் இளய மனம் கொண்டிருக்கக் கடவீர்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

      Delete
  3. அருமையான ஆக்கம். பாராட்டுகள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. செயற்கை இல்லாவிடில்
    எல்லாம் இயற்கையே
    செயற்கைக்கு செலவு செய்ய
    கையில் காசு வேண்டும்
    அது இயற்கையை
    மாசு படுத்தும்
    இயற்கையோ இலவசமாய் அளவில்லாது
    வழங்கி மனிதர்கள் உண்டாக்கிய அனைத்து
    மாசுகளை நீக்கும்
    இயற்கையோடு இணைந்த வாழ்க்கையே
    இன்பம் தரும் வாழ்க்கை.

    ReplyDelete
  5. ​வரிகள் வசமாய் வந்திருக்கின்றன.

    ReplyDelete