Thursday, March 5, 2020

சிம்மாசனத்தில் பிச்சைக்காரனாய்...

மக்கள் மனமறிய
ஒற்றர்படை தேவையில்லை
ஊடகங்கள் போதுமளவு இருக்கிறது

செய்தி கடத்த
புறாக்கள் தேவையில்லை
மின் அஞ்சல் விரல் நுனியில் இருக்கிறது

தூரம் கடக்க
தேர் வேண்டியதில்லை
தூரத்திற்கேற்ற வாகனம் இருக்கிறது

மனச் சொடக்கெடுக்க
நர்த்தகிகள் தேவையில்லை
ஆயிரம் தொலக்காட்சிகள் இருக்கிறது

இருள் நீக்க
தீவட்டிகள் தேவையில்லை
வண்ண விளக்குகள் பரந்து கிடக்கிறது

அதிகாரம்  காட்டச்
செங்கோல் கூடத் தேவையில்லை
வாக்குச் சீட்டு கைவசம் இருக்கிறது

யோசிக்க யோசிக்க
சக்கரவர்த்திகளை அனுபவித்ததை விட
ஆயிரம் வசதிகள் நமக்கிருக்கிறது

ஆயினும்

மனம் மட்டும் ஏன்
சத்திரத்துப்பிச்சைக்காரனாய்
என்றும்  எதற்கோ ஏங்கியே கிடக்கிறது ?

இருப்பதையெல்லாம்
ஒருபக்கம் ஒதுக்கிவிட்டு
பறப்பதை மட்டுமே பார்த்துத் தவிக்கிறது ?

காரணம் அறிந்தால்
திண்ணையில் கிடப்பினும்
மன்னவனாய்  மகிழ்வோடு இருக்கலாமோ ?

இல்லையெனில் நம்நிலை
 சிம்மாசனதிலமர்ந்தாலும்
புத்திகெட்ட ப் பிச்சைக்காரன் நிலைதானோ ?

7 comments:

  1. மனம் மட்டும் சத்திரத்துப் பிச்சைக்காரனாய்...

    நல்ல எடுத்துக் காட்டு.

    ReplyDelete
  2. கவிதை அருமை. பிற்ந்த நாள் வாழ்த்துகள் சார்.

    ReplyDelete
  3. அதீத எதிர்பார்ப்பும், ஆசையுமே.

    ReplyDelete
  4. சிம்மாசனப் பிச்சைக்காரன் நல்ல எடுத்துக்காட்டு

    ReplyDelete
  5. தேடிய பொருள் கையில் கிடைத்து விட்டால் அடுத்த பொருளுக்காய் தாவத் தொடங்கி விடும் மனித மனம்.

    ReplyDelete