Wednesday, July 22, 2020

குழந்தையும் உடலும்

தன் அசௌகரியம் காட்டச்
சிணுங்குகின்ற குழந்தையாய்
உடலும் தன் அசௌகரியம் காட்ட
மெல்லச் சிணுங்கியது

நான் கண்டு கொள்ளவில்லை.

கண்டுகொள்ளப்படாத கோபத்தில்
வீறிடும்  குழந்தையாய்
உடலும் தன் கோபத்தை
வலியாய்க் காட்டியது.

இப்போது முன்போல்
என்னால் கண்டு கொள்ளாதிருக்கமுடியவில்லை

குழந்தையின் தேவையை
உடன் கவனிக்கும் தாயாய்
நானும் உடல் கவனிக்கத் துவங்கினேன்

ஒரு நாள் என் பாட்டி ..
"அழும்போதுதான் கவனிப்பாய் என
குழ்ந்தை அறிந்துகொண்டால்
குழ்ந்தை பின் எதற்கெடுத்தாலும்
அழத் துவங்கும்
பின் அதுவே ஒரு நோயாகிப் போகும்
எனவே அதற்குச் செய்யவேண்டியதை
அது கேட்கும் முன் செய்யப் பழகு " என்றாள்

இதை உடலுக்கும் பொருத்திப் பார்த்தேன்
மிகச் சரியாய்ப் பொருந்தியது

இப்போதெல்லாம் உடல்
வருத்தும் வரை நான் காத்திருப்பதில்லை
அது வருத்தும் முன்பே
உடற்பயிற்சியால் அதனை வருத்தியெடுத்துவிடுகிறேன்

இப்போது அது
குழந்தை சிணுங்குவதற்குப் பதில்
சிரிப்பதைப் போலவே
வலிகாட்டுவதற்குப் பதில்
சுகம்காட்டிச் சிரிக்கிறது..


7 comments:

  1. ஒப்பீடும் பாட்டியின் அறிவுரையும் அருமை, எல்லோரும் கடைபிடித்தால் வருமுன் காக்கப்படுவோம்..

    ReplyDelete
  2. இன்றைய சூழலுக்கும் மட்டுமல்ல...
    என்றைய சூழலுக்கும் உகந்தது...

    ReplyDelete
  3. அவ்வளவு எளிதா என்ன உடல் சுகவீனம்

    ReplyDelete
  4. வருமுன் காப்போம்!

    //வறுத்தும்//

    வருத்தி என்றிருத்தல் நலம்.

    ReplyDelete
  5. உண்மைதான்
    வருமுன் காப்பதுதான் சிறந்தது

    ReplyDelete
  6. அழகான ஒப்பீடு! வரும் முன் காப்போம் எப்போதும் பொருந்திப் போகும் ஒன்று.

    துளசிதரன்

    கீதா

    ReplyDelete