Sunday, February 20, 2022

'அப்பாவியாய் அது "

 காசு வாங்கியவனெல்லாம்

நமக்குத் தான் போட்டிருப்பானா

எனும் சந்தேகத்தில்

காசு கொடுத்தவனும்....


உடன் இருப்பவன்தான் ஆயினும்

கட்சிக்காரன்தான் ஆயினும்

காசு கொடுக்காததால்

மாற்றிப் போட்டிருப்பானோ

எனும் கவலையில்

காசு கொடுக்காதவனும்....


காசு வாங்கியும்

மாற்றிப் போட்டதை

கண்டு பிடித்துவிடுவார்களோ

எனும் பயத்தில் காசு வாங்கியவனும்...


எல்லோரும் வாங்கியிருக்க

கொள்கை மண்ணாங்கட்டியென

நாம்தான் வாங்காது

ஏமாந்துவிட்டோமோ எனும்

குழப்பத்தில் வாங்காதவனும்..


எப்படியோ தேர்தல் நாடகத்தை

எவ்வித அசம்பாவிதமும் இல்லாது

நடத்துமுடித்த திருப்தியில்

மன உறுத்தல் இருப்பினும்

ஜனநாயகத்தை காத்த திருப்தியில்

தேர்தல் ஆணையமும்...


இருக்க......


இறுக்கமாய் கடந்து கொண்டிருக்கிறது

இருநாள் பொழுது...


இம்முறையும்

பணநாயகத்திற்குத் தான் சோரம் போக நேர்ந்ததை

எண்ணி எண்ணி


வெந்து....


நொந்து  கடந்து கொண்டிருக்கிறது

"அப்பாவியாய் அது " 

4 comments:

  1. நான் இரு கட்சியிடமும் வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.

    ReplyDelete
  2. சிறப்பான சிந்தனை.

    தேர்தல் கொள்ளைகள் - என்று முடியுமோ....

    ReplyDelete
  3. யார் வந்தாலும், என்ன செய்தாலும் திருத்த மாட்டேன் என்ற பிடிவாதத்தில் அரசியல்.

    ReplyDelete