Saturday, March 21, 2026

வள்ளுவன் சொன்ன ராஜரகசியம்.

 சொட்டு நீரைக் கூட வீணே

விட்டு விடாது-அதைத்
திட்டம் போட்டுச் சேர்க்கும் முறையை
அறிய முயல்வோம்

சட்டம் போட்டு அரசு இதனைச்
செய்ய விடாது-நாமே
இஷ்டத் தோடு இதனைச் செய்து
இன்னல் களைவோம்

ஒட்ட ஒட்டக்  கறந்த போதும்
கன்றுக் கெனவே-மடியில்
கஷ்டப் பட்டுப்  பாலை ஒதுக்கி
கொடுக்கும் பசுவென

வெட்டி வெட்டிக்  காடு தன்னை
அழிக்கும் போதிலும்-நாளும்
வெக்கை கூட்டிப்  பசுமைக் குடிலை
குலைத்தப் போதிலும்

பட்டம் பார்த்து மழைக் கொடுக்கத்
திணரும் இயற்கையை-இனியும்
கஷ்டப் படுத்திக் கறக்கும் செயலை
குறைக்கப் பழகுவோம்

கடவுள் வாழ்த்துப் பாடி முடித்த
வள்ளுவ னவனுமே-அடுத்து
மறந்தி டாது வானின் சிறப்பைச்
சொல்லிச் சென்றது

மறைவாய் நமக்குச் சொல்லிப் போன
ராஜ ரகசியம் -இதை
மறந்து  விட்டால் அழிவு நமக்குச்
சர்வ நிச்சயம்
(இன்று உலக தண்ணீர் தினம்)

4 comments:

  1. அருமை...உண்மை.   மூன்றாம் உலகப்போர் தண்ணீரால்தான் ஏற்படும் என்று முன்னர் சொல்லி இருந்தார்கள். 

    ஆனால் இப்போது நிலையைப் பார்க்கும்போது..! :(

    ReplyDelete
  2. உலக தண்ணீர் தினத்திற்கான சிறப்புப் பகிர்வு நிச்சயம் தேவையான ஒன்று. தண்ணீரின் அவசியம் புரிந்திருந்தும் அதனை வீணடிக்கும் மாந்தர்களை என்னவென்று சொல்ல!

    ReplyDelete
  3. ராஜ ரகசியத்தை மறந்து விட்டால் அழிவு நமக்கு தான் என்பதை தெரியாமல் வாழும் மக்களை என்ன சொல்வது.
    அருமையான பதிவு.

    ReplyDelete
  4. மழையின், மழை தரும் நீரின் அவசியம் உணராத அரசும் மக்களும் திணருவர்.
    மக்கள் மட்டுமல்ல - அனைத்து உயிர்களும். 🤷🤷

    அருமையான பதிவு. 🌹🌹

    ReplyDelete