Thursday, May 4, 2017

கவிதையைப் போலவும்...

"இப்படி விழுந்து விழுந்து ரசிப்பதற்கும்
தொடர்ந்து விடாது ரசிப்பதற்கும்
இதில் அப்படி என்னதான் இருக்கு ? "
என விலகி நின்று பார்த்தே
விலகிப் போயினர் சிலர்

"அதில் இறங்க விருப்பமில்லை
தேவையுமில்லை "என
அதனால் விரிந்த முன்பரப்பில்
உருண்டு விளையாடி
மனம் களித்துப் போயினர் பலர்

"முழுதும் நனைந்திடாது
பட்டும் படாமலும் ரசிப்பதே சுகம் "என
உணவுக்கு  ஊறுகாயாய்
அளவோடு இணைந்துப் பின் விலகி
உற்சாகம் கொண்டனர் சிலர்

"அதனுள் வீழ்ந்துக் கிடப்பதும்
நீந்திக் களிப்பதும்தான் பேரானந்தம் "என
செயற்கை அணிகலன்கள்
அனைத்தையும் அகற்றி முற்றாக
மூழ்கிச் சுகித்தனர் வெகு சிலர்

"இந்த விரிந்து பரந்த
பிரமாண்டம்தான் எத்தனைப் பேரின்பம் "என
வியந்தும் விக்கித்தும்
தனைமறந்தும் சூழல் மறந்தும்
தவசியாய்க் கிடந்தனர் வெகு வெகு சிலர்

தன்னிலை மாறாது எப்போதும்போல்
அதுவாகவே அது இருப்பினும்
எல்லோரின் நினைப்புக்கும்
ஏற்றதாகவும் இருந்தது
விரிந்து பரந்துக் கிடந்த அந்த நீலக்கடல்

கவிதையைப் போலவும்... 

12 comments:

  1. எல்லோரின் நினைப்புக்கும் ஏற்றதாக உள்ள
    விரிந்து பரந்துக் கிடக்கும் அந்த நீலக்கடலை கவிதையுடன் ஒப்பிட்டுச்சொன்னது அழகாக உள்ளது. பாராட்டுகள்.

    ReplyDelete
  2. அற்புதம், ஆயினும் சிலருக்கும் மட்டுமே வாய்க்கின்றன கடல் குளியலும் கவிதை படைத்தலும்

    ReplyDelete
  3. எல்லோருக்கும் வாய்க்குமா கவிதைக் குளியல் :)

    ReplyDelete
  4. அருமை அய்யா
    தம

    ReplyDelete
  5. தமிழ்மணத்தில் இல்லையா என்ன ?

    ReplyDelete
  6. அருமை....வேறு என்ன சொல்ல..அற்புதமான குளியல்!!!

    ReplyDelete
  7. கடலும் கவிதையும் ஒன்றுதான். நல்ல கவிதையில் மூழ்கினால் கடலில் குளித்த பலன் கிடைக்கிறது. மோசமான கவிதையைப் படித்தால் உடனே கடலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளலாம் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  8. "முழுதும் நனைந்திடாது
    பட்டும் படாமலும் ரசிப்பதே சுகம் "என
    உணவுக்கு ஊறுகாயாய்
    அளவோடு இணைந்துப் பின் விலகி
    உற்சாகம் கொண்டனர் சிலர்

    அவர்கள் சுவையாக
    அளந்து சுவைக்கத் தெரிந்தவர்களோ!

    ReplyDelete
  9. பணி நிறைவுப்பணிகள் காரணமாக சில நாள்கள் வலைப்பக்கம் வர முடியவில்லை. பணி நிறைவு விழா தொடர்பான பதிவு இதோ, வாய்ப்பிருக்கும்போது வாசிக்க வருக. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாக சந்திப்போம் : http://drbjambulingam.blogspot.com/2017/05/blog-post_4.html
    உங்களின் கவிதை வாசிப்போரை ஈர்த்துவிடுகிறது. நன்றி.

    ReplyDelete
  10. அன்று ரசித்தது இன்றும்ரசிப்பதோடு சிந்திக்கவும் வைக்கிறது

    ReplyDelete