Thursday, December 5, 2013

என்னை நானே அறிய விடு

நண்பகலையும் நடு நிசியாய் காட்டும்
அடர்ந்த காட்டினுள்
திசைத் தெரியா  வெளிதனில்
என்னை விட்டுப் போ

நான் சிறு பிள்ளையில்லை
திசை காட்டும் கருவியின்
வரைபடங்களின் துணையும்
எனக்குப் போதும்
உன் விரல் பிடித்து நடந்துவர
எனக்கு இஷ்டமில்லை

இப்போதெல்லாம் எனக்கு
பாதுகாப்பான பயணங்கள் உடன்பாடில்லை
வேகத்தால் வரும் விளைவுகள் குறித்து நான்
விழுந்தே தெரிந்து கொள்கிறேன்

உடலெங்கும் உன்னைபோல் எனக்கும்
காயம்பட்டு தழும்பாகட்டும்
விவேகத்திற்குப் பின் வேகம் வர
சந்தர்ப்பமே இல்லை

விழாதிருக்க எப்போதும் விரும்பாதே
விழுந்தாலும் எழப் பழகு என மட்டும் ஆசிர்வதி

எத்தகைய சுவையான பழமாயினும்
உரித்துக் கொடுத்தவை யெல்லாம்
கசக்கவே செய்கின்றன

என்னைப் புரிந்து கொள்
என்னைப் பசி அறியவிடு

குறியீடுகளின் படிமங்களின் தோல்கள்
கடினமானவையே
என்னைக் கடித்து உண்ணவிடு
என் பற்களும் நகங்களும்
சிறிதேனும் பலம் பெறட்டும்

என்னை இனியேனும்
அலைய விடு
தேட விடு
அறியவிடு

பூசாரியாய் புத்த பிட்சுவாய்
வாழ்வைத் தொடராது
ஒரு சித்தனாய்
ஒரு புத்தனாய்
என்னை மலரவிடு
என்னை நானே அறிய விடு

30 comments:

  1. /// என்னைப் புரிந்து கொள்
    என்னைப் பசி அறியவிடு ///

    இது போல் சிந்திக்க வேண்டிய வரிகள் பல... வாழ்த்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  2. விழுந்தாலும் எழப் பழகுவது நன்று. குறியீடுகள், படிமங்கள் எல்லாம் எனக்குப் புரிவதேயில்லை!

    ReplyDelete
  3. வேகத்தால் வரும் விளைவுகள் குறித்து நான்
    விழுந்தே தெரிந்து கொள்கிறேன்

    ReplyDelete
  4. சிறைகளின்றி என்னை சுதந்திரமாய் விடு உலகை அனுபவிக்க.!....
    கடினம் தான். நேற்று பேரனும் இந்த மனநிலையில் தான் இருந்தார்.
    கட்டுப்பாடுகள் இல்லை. ஆயினும் விடு என்னை என்றே இருந்தார்.
    புரியவில்லை ஏனென்று.
    காற்றுப் போல...
    .ஓரு மனோவியலாளரை அணுகினால் அறியலாம்.
    உங்கள் சிந்தனை நன்று...
    இனிய வாழ்த்து.
    மின்னஞ்சல் அனுப்பினேன்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  5. //விழாதிருக்க எப்போதும் விரும்பாதே
    விழுந்தாலும் எழப் பழகு என மட்டும் ஆசிர்வதி//

    தன்னம்பிக்கையளிக்கும் அருமையான ஆக்கம். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. ஆஹா...அருமை... விடியத் துடிக்கும் வீரிய சூரியனின் சுடர்க் கதிர்களாய் ...... சுடுகிறது கவிதை......அருமையான வரிகள்...!

    ReplyDelete
  7. மீள் பதிவென்றாலும் தூள் பதிவு!

    ReplyDelete
  8. #என்னை இனியேனும்
    அலைய விடு
    தேட விடு
    அறியவிடு#
    இதை யாரிடம் கேட்க முடியும் ?நாமாய்தான்தேடி அலைந்து அறிந்து கொள்ளவேண்டும் ...நமக்காக யாரும் ,எந்த சக்தியும் இதற்கு உதவ முடியாது ...இது என் அனுபவம் !
    த .ம 6

    ReplyDelete
  9. விழாதிரு என எப்போதும் விரும்பாதே
    விழுந்தாலும் எழப் பழகு என மட்டும் ஆசிர்வதி

    ஆசீர்வதிக்கப்பட்ட கவிதை வரிக்ள்..!

    ReplyDelete
  10. அடிக்கடி பொடிவைத்து எழுதுகிறீர்கள். ஆன்மிகம் அழைக்கிறதோ?

    ReplyDelete
  11. சிறப்பான சிந்தனை !.வாழ்த்துக்கள் ஐயா .

    ReplyDelete
  12. நாமே நம்மை அறிவதற்கு
    அடுத்தவரிடம் கேட்பானேன்....

    யோசிக்கிறேன் இரமணி ஐயா.

    ReplyDelete
  13. போனால் போகட்டும் போடா என்ற கவிஞர் கண்ணதாசனின் மனப்பக்குவத்தில் தங்களது மன வரிகள். கையில் பணம் இல்லாவிட்டால் சித்தர் ஞானம் பிறந்து விடும்.

    ReplyDelete
  14. ///விழுந்தாலும் எழப் பழகு என மட்டும் ஆசிர்வதி//
    ஏற்கனவே சித்தர் ஞானம் பிறந்துவிட்டதன் பாதிப்புதான் இக்ககவிதை என எண்ணுகின்றேன்.அருமை ஐயா நன்றி
    த.ம.11

    ReplyDelete
  15. இன்றைய தலைமுறையின் மன ஓட்டத்தை படம் பிடிக்கும் கவிதை. யோசித்தால் அவர்களை விட்டுத் தான் பிடிக்கலாமென தோன்றுகிறது.

    ReplyDelete
  16. எத்தகைய சுவையான பழமாயினும்
    உரித்துக் கொடுத்தவை யெல்லாம்
    கசக்கவே செய்கின்றன

    பதிவு முழுவதும் தெளிந்த சிந்தனையின்
    வெளிப்பாடே! வாழ்து இரமணி!

    ReplyDelete
  17. என்னைப் புரிந்து கொள்
    என்னைப் பசி அறியவிடு...

    அழகான பாட்டு... தேடல் மிகு வரிகள்...

    ReplyDelete
  18. //என்னை இனியேனும்
    அலைய விடு
    தேட விடு
    அறியவிடு//
    ரொம்பவும் சிந்திக்க வைத்துவிட்டது, உங்களின் இந்தக் கவிதை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. தன்னம்பிக்கை, சிந்தனை, வாழ்வின் அனுபவம் இவைபோன்றவை தானாக அனுபவித்துத்தான் பெறவேண்டும். முயற்ச்சிக்கு வழிவிடாது சிறகுகளை உடைத்து பாதுகாப்பு என்ற பெயரில் சிறைக்குள் அடைக்கும் வாழ்க்கையைத்தான் பெற்றோர்கள் செய்கின்றார்கள். இதுபோல் வேறு ஒரு பதிவும் உங்கள் பக்கம் படித்தது போல் ஞாபகம் இருக்கிறது . இருந்தாலும் எத்தனை முறை படித்தாலும் புதுவித அனுபவத்தைத்தான் உங்கள் கவிதைகள் உணர்த்துகின்றன

    ReplyDelete
  20. சிறப்பான வரிகள்... த.ம..15

    ReplyDelete
  21. /
    /விழாதிருக்க எப்போதும் விரும்பாதே
    விழுந்தாலும் எழப் பழகு என மட்டும் ஆசிர்வதி/எல்லா வரிகளும் பிடித்திருந்தாலும் மிகவும் பிடித்தது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. என்னைப் புரிந்து கொள் - வரி பிற வரிகளுக்கு முரணாக அமைகிறதோ?

    ReplyDelete
  23. வணக்கம்
    ஐயா

    என்னை இனியேனும் -அலைய விடு
    தேட விடு- அறியவிடு

    உண்மைதான் ஐயா. தேடல் உள்ள உயிர்களுக்கு தினம் பசியிருக்கும்
    அருமை வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  24. தன்னம்பிக்கையளிக்கும் கவிதை.

    ReplyDelete
  25. //என்னை நானே அறிய விடு// ஆஹா!

    ReplyDelete
  26. அத்தனையும் அருமையான வரிகள் அய்யா...

    ReplyDelete