Tuesday, November 11, 2014

நான் என்னைக் கடப்பதிலேயே

நான் சீராக ஓடிக் கொண்டிருக்கிறேன்

என் முன் கடந்து செல்பவனின்
முகத்தில் வெற்றிப்  புன்னகை
இதழ்களில் ஒரு அலட்சியச்  சுழிப்பு

நான் எப்போதும் போல் ஓடிக் கொண்டிருக்கிறேன்

என்னிலிருந்து பின் தங்கத் துவங்குபவன்
முகத்தினில் கவலை ரேகைகள்
விழிகளில் தெறிக்கும் பொறாமைப் பொறி

நான் என் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறேன்

உடன் வருபவன் அதிசமாய்க் கேட்கிறான்
" அவனது அலட்சியப் புன்னகையும்
இவனது பொறாமைப் பார்வையும்
உன்னைப் பாதிக்கவில்லையா "

"பாதிக்க வாய்ப்பே இல்லை
அவர்களின் இலக்கு நானானதால்
அவர்கள் குழப்பமடைகிறார்கள்
எனக்கு நான் மட்டுமே இலக்கு என்பதால்
எனக்கு எவ்வித குழப்பமுமில்லை "என்கிறேன்

கேட்டவன் குழப்பமடைகிறான்

சீரான வேகத்தில்
 நான் என்னைக் கடப்பதிலேயே
மிகக் கவனமாய்
தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறேன் 

20 comments:

  1. அருமை ஐயா வாழ்க்கையை கடந்து போவதற்க்கும்,,,,,

    ReplyDelete
  2. இலக்கு வாழ்வில் பிரதானம்

    ReplyDelete
  3. எனக்கு நான் மட்டுமே இலக்கு என்பதால்
    எனக்கு எவ்வித குழப்பமுமில்லை,,,,,,
    கிட்டத்தட்ட நானும் இப்படி ஓடுகிறேனோ என்று எண்ணகிறேன்.
    இது கவலையற்ற ஓட்டம்.
    அருமை.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  4. நமக்கு நாம்தான் போட்டி.என்னை நான்தான் வெல்ல வேண்டும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அருமை! சிறப்பான தத்துவம்! இதை எல்லோரும் உணர்ந்தால் வாழ்வு இனிக்கும்!

    ReplyDelete
  6. இக்கவிதையைப் பார்த்ததும் Men may come men may go but I go on forever என்ற ஆங்கிலக்கவிதை எனக்கு நினைவிற்கு வந்தது. நல்ல கவிதை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  7. நாம் நம்மைக் கடப்பது கஷ்டம் தான்.
    ஆனால் சில நேரங்களில்
    அதிஷ்டமே அதுபாட்டுக்கு அழைத்துச் செல்வதும்...
    சில நேரங்களில் எங்கோ விட்டுவிட்டும் செல்கிறது இரமணி ஐயா.

    தவிர நம்மைத் துரத்துவதற்கு யாரும் இல்லை என்ற எண்ணமே நல்ல இலக்கினை அடையச் செய்யும் என்பதை அழகாக உணர்த்தியது உங்களின் கவிதை.
    அருமை இரமணி ஐயா.

    ReplyDelete

  8. அருமை. நம் இலக்கு நமக்கு. ஒப்பீடு தேவையில்லை. எனது இந்தக் கவிதையை படித்துப் பாருங்கள்
    http://sivakumarankavithaikal.blogspot.com/2010/11/blog-post_28.html

    ReplyDelete
  9. குறிக்கோள் கோல் சொல்வோர் அடைய முடியா ஒன்று. நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்.உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்.

    ReplyDelete
  10. பாராட்ட வார்த்தைகள் இல்லை. அருமையான கவிதை!

    ReplyDelete

  11. "சீரான வேகத்தில்
    நான் என்னைக் கடப்பதிலேயே
    மிகக் கவனமாய்
    தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறேன்" என்ற
    கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
    சிறந்த வழிகாட்டல் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete

  12. "சீரான வேகத்தில்
    நான் என்னைக் கடப்பதிலேயே
    மிகக் கவனமாய்
    தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறேன்" என்ற
    கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
    சிறந்த வழிகாட்டல் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  13. விளக்கம் மிகவும் அருமை! கவிதையில் சொல்லியுள்ள விதம் உமக்கே உரிய பாணி!

    ReplyDelete
  14. சரியான வழிகாட்டுகிறது கவிதை!!

    ReplyDelete
  15. "பாதிக்க வாய்ப்பே இல்லை
    அவர்களின் இலக்கு நானானதால்
    அவர்கள் குழப்பமடைகிறார்கள்
    எனக்கு நான் மட்டுமே இலக்கு என்பதால்
    எனக்கு எவ்வித குழப்பமுமில்லை "என்கிறேன்//

    மிகச் சரியான வார்த்தைகள்! நமக்கு நம் இலக்கு மட்டுமே! அருமை!

    ReplyDelete