Thursday, August 6, 2015

ஏணியாக எப்போதுமிருந்து..

பிழைக்கத் தெரிந்தவர்கள் எல்லாம்
கெட்டிக்காரர்களாகத்தான் இருக்கிறார்கள்
நியாயஸ்தர்கள் நாம் தான்
குழம்பிப் போய் இருக்கிறோம்

கண்ணைத் திறந்து பார்க்கச் சொல்லி
கருணைகாட்டச் சொல்லி நாமெல்லாம்
கண்ணை மூடி வேண்டிக்கொண்டிருக்கையில்

சன்னதிக்குள் ஒரு கயவன்
காம லீலைகள் புரிந்து கொண்டிருக்கிறான்

அம்பாள்கண் திறந்து பார்க்கமாட்டாள் என்பதில்
அவன் தெளிவாய் இருக்கிறான்
நாம்தான் குழம்பிப்போய்த் தவிக்கிறோம்

கோவில்கள் கொடியோரின் கூடாரம்
என்கிற அதிரடி வசனங்களால்
நம்மை மெய்சிலிர்க்கச் செய்து
ஆட்சியைப்பிடித்தவர்களின்
வாரீசுகள் எல்லாம்

கோவில் கோவிலாய் போய்
குடும்பத்தோடு நேர்த்திக்கடன்
செலுத்திக் கொண்டிருக்க

நாம் தான் குழம்பிக் கிடக்கிறோம்
அவர்கள் ஊருக்கெது நமக்கெது என்பதில்
எப்போதும் தெளிவாய் இருக்கிறார்கள்

இரண்டு எல்லைகளில்
இருப்பவர்கள் எல்லாம்
பிழைக்கத் தெரிந்தவர்களாய் இருக்க

இடையில் இருக்கும் நாமதான்
குழப்பத்தில் இருக்கிறோம்

இவர்களுக்கெல்லாம்
ஏணியாக எப்போதுமிருந்து
எதை எதையோ இழக்கிறோம்

7 comments:

  1. அம்பாள்கண் திறந்து பார்க்கமாட்டாள் என்பதில்
    அவன் தெளிவாய் இருக்கிறான்
    நாம்தான் குழம்பிப்போய்த் தவிக்கிறோம்
    அருமை மிகவும் அருமை கவிஞரே...
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  2. அது அவர்கள் பிழைப்பு! நாம் நம் வேலையைப் பார்ப்போம்!

    ReplyDelete
  3. இரண்டு எல்லைகளில்
    இருப்பவர்கள் எல்லாம்
    பிழைக்கத் தெரிந்தவர்களாய் இருக்க

    இடையில் இருக்கும் நாமதான்
    குழப்பத்தில் இருக்கிறோம்

    உண்மை உண்மை
    அருமையாய் சொன்னீர் ஐயா
    நன்றி
    தம +1

    ReplyDelete
  4. '' ஏணியாக எப்போதுமிருந்து "

    " அவர்கள் ஊருக்கெது நமக்கெது என்பதில்
    எப்போதும் தெளிவாய் இருக்கிறார்கள் "


    நம்மை யாரும் அப்படி இருக்க சொன்னார்களா ???

    அவனவன் தொழிலை அவனவன் திறம்பட செய்கிறான், மாண்புமிகு பொதுஜனம் மட்டும், தன தொழில் மறந்து சிந்தனையை அடகு வைத்ததால் வந்த வினை. தின்ற மண்ணுக்கு சோகை !!!

    ReplyDelete
  5. அவர்களுக்கு ஏணியாய் நாம் ஏன் இருக்கவேண்டும்

    ReplyDelete