Wednesday, August 17, 2016

ஐயனார் சாமியும் கண்காணிப்புக் கேமராவும்....

சிறு வயதில்
வாரம் இருமுறை
எங்கள் ஐயனார்சாமியைப்
பார்க்கவில்லையில்லை யெனில்
என் மனம் ஒப்பாது

ஊருக்கு
வெகு வெகுத் தொலைவில்
குதிரையில்
மிக மிக உயரத்தில்
அமர்ந்தபடி
ஊரையே
பார்த்துக் கொண்டிருப்பார்
காத்துக் கொண்டிருப்பார்
எங்கள் ஐயனார்சாமி,,

ஊரின்
ஒவ்வொரு வழித்தடமும்
அவர் பார்வையில் இருக்கும்
ஊரின்
எந்த ஒரு சிறு நிகழ்வும்
அவர் ஆசி வழங்கவே துவங்கும்

குற்றப் பயத்தாலோ
தீவீர நோயாலோ
வருடத்துக்கு இருவர்
இரத்தம் கக்கிச் சாகப்
படையல் கூடிப் போகும்
ஐயனாரின் பலம் கூடிப்போகும்
குற்றங்களும் குறைந்துப் போகும்


இப்போது ஊர்
கிழக்கு மேற்காய்
மிக விரிந்துப் போகக்
கட்டிடங்களும்
மிக உயர்ந்துப் போகத்
தன் இருப்பிடம் தெரியாதும்
தன் நெடியப் பார்வையற்றும் போனார்
எங்கள் ஐயனார்சாமி

நோய்க்கு மருத்துவரும்
காவலுக்குக் காவல் நிலையமும் வர
படையல்கள் குறையக்
கொஞ்சம் விலகவும்
பார்வையைக் குறைக்கவும்
துவங்கினார்
எங்கள் ஐயனார்சாமி

சமீபத்தில் இரண்டுமுறை
அவர் உண்டியலே
உடைத்துத் திருடப்பட
கண்காணிப்புக் கேமரா
பொருத்தப்படத்
"தனக்கே காவலா " என
நொந்து போனதன் அடையாளமாய்
மெல்ல மெல்ல
விரிவுபடத் துவங்கினார்
எங்கள் ஐயனார்சாமி

ஜபர்தஸ்தாய்
சாரட்டில் பார்த்த ஜமீந்தாரை
நடக்கப் பார்த்து
நொந்தக் கதையாய்
மேகம் தொட்டு நின்ற
எங்கள் ஐயனார்சாமியை
இடுக்கில் பார்ப்பதற்கு
எனக்கும்
மனம் ஒப்பவில்லை

வலுக்கட்டாயமாய்
அவரைப்பார்ப்பதைத்
தவிர்க்கத் துவங்கினேன் நான்

எங்கள்
ஐயனார்சாமிக்கும்
மனம் ஒப்பாதே
இருந்திருக்க வேண்டும்

இல்லையெனில்
எத்தனையோ
புயல் மழையைத்
தூசியாய்த் தள்ளியவர்
நேற்றையச் சிறுத்தூறலுக்கு ...

என்ன சொல்வது ?
எப்படிச் சொல்வது ?

20 comments:

  1. மலையே சாய்ந்து விட்டதா?

    ReplyDelete
  2. எழுத எங்கிருந்தும் பொருள் கிடைப்பது தான் உங்கள் பார்வையின் விசேஷம்.

    ReplyDelete
  3. கடைசியில் சிலையைக்கூட விட்டுவைக்வில்லைப்போலும்?

    ReplyDelete
  4. ஊருக்கு காவல் தெய்வமாய் இருந்தவருக்கே, காவலாய் கண்காணிப்பு கேமரா, அவரால் பொறுக்க முடியாமல் சாய்ந்து விட்டாரோ ?

    ReplyDelete
  5. பாவம் ஐயனார் சாமி! இப்படி தற்கொலை செய்துகொள்ளவேண்டியதாய் போயிற்றே!

    ReplyDelete
  6. அய்யனார் சாமிக்கு இறப்பு உண்டா

    ReplyDelete
  7. ஸ்ரீராம். //

    தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  8. கரந்தை ஜெயக்குமார் said...
    காலத்தின் கோலம்//

    மிகச் சரியான புரிந்துகொள்ளலுடன்
    கூடிய பின்னூட்டம் மகிழ்வளிக்கிறது
    தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  9. ஜீவி said...//
    எழுத எங்கிருந்தும் பொருள் கிடைப்பது தான் உங்கள் பார்வையின் விசேஷம்.//

    தங்கள் பாராட்டுத் தைரியமளிக்கிறது
    தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  10. தனிமரம் //

    தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  11. வெங்கட் நாகராஜ் //

    தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  12. S.P.SENTHIL KUMAR said...//
    அருமை//

    தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  13. Asokan Kuppusamy said...//
    ஊருக்கு காவல் தெய்வமாய் இருந்தவருக்கே, காவலாய் கண்காணிப்பு கேமரா, அவரால் பொறுக்க முடியாமல் சாய்ந்து விட்டாரோ ?மிகச் சரியான புரிந்துகொள்ளலுடன்
    கூடிய பின்னூட்டம் மகிழ்வளிக்கிறது
    தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி



    ReplyDelete
  14. ‘தளிர்’ சுரேஷ் said...
    பாவம் ஐயனார் சாமி! இப்படி தற்கொலை செய்துகொள்ளவேண்டியதாய் போயிற்றே!//

    சரியான புரிந்துகொள்ளலுடன்
    கூடிய பின்னூட்டம் மகிழ்வளிக்கிறது
    தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
    பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  15. G.M Balasubramaniam said...
    அய்யனார் சாமிக்கு இறப்பு உண்டா//

    ஐயனார் சாவாரா
    அவர் குறித்த நமபிக்கை செத்ததனால்
    தான் இங்க்கு வேண்டாம் என முடிவு
    செய்து விட்டார்.அவ்வளவே

    ReplyDelete
  16. வாவ்! சாமீ...என்ன ஒரு கோணம்! என்ன ஒரு பார்வை!!!! அருமை....அருமை...வார்த்தைகள் இல்லை.. வாசித்து வாயடைத்துப் போனோம்

    ReplyDelete
  17. சமீபத்தில் இரண்டுமுறை
    அவர் உண்டியலே
    உடைத்துத் திருடப்பட
    கண்காணிப்புக் கேமரா
    பொருத்தப்படத்
    "தனக்கே காவலா " என
    நொந்து போனதன் அடையாளமாய்
    மெல்ல மெல்ல
    விரிவுபடத் துவங்கினார்
    எங்கள் ஐயனார்சாமி// மிகவும் ரசித்தோம்...

    ReplyDelete