Friday, September 13, 2013

ரம்பை அவளே வந்து நின்னாலும்...

போற போக்கில பாக்கும் போதே
போத ஏறுதே-அவளை
நின்னு பாத்தா என்ன ஆகும்
மனசு பதறுதே
தூர நின்னு பாக்கும் போதே
மூச்சு வாங்குதே -ஆனா
ஆற அமரப் பாக்கத் தானே
மனசு ஏங்குதே

ராசா கால வில்லு அம்பு
அவளின் கண்ணிலே -அது
நேரா என்னை ஈட்டிப் போலக்
குத்தித் தள்ளுதே
ரோசாப் பூவின் வாசம் அவளின்
செவத்த உடம்பிலே -என்னை
லூசுப் போல சுத்த வைச்சு
தினமும் கொல்லுதே

ஆத்து ஓரம் நேத்து அவளைப்
பாத்த போதிலே-அழகா
பூத்துச் சிரிக்கும் குண்டு மல்லிப்
பூவைப் போலவே
பார்த்துச் சிரிச்ச சிரிப்பு ஒன்று
எனக்குப் போதுமே -அதுவே
சேர்த்து எனக்கு நூறு சேதி
சொல்லிப் போகுமே

கோடிக் கோடி ரூவா எனக்குச்
சேர்த்துத் தந்தாலும்-என்னைத்
தேடி அந்த ரம்பை அவளே
வந்து நின்னாலும்
வேறு பொண்ணை இந்த மனசு
நினைச்சுப் பாக்காதே-அந்த
தேவி யோடு வாழா திந்த
கட்டை வேகாதே

17 comments:

  1. வணக்கம்
    ஐயா

    ஆத்து ஓரம் நேத்து அவளைப்
    பாத்த போதிலே-அழகா
    பூத்துச் சிரிக்கும் குண்டு மல்லிப்
    பூவைப் போலவே
    பார்த்துச் சிரிச்ச சிரிப்பு ஒன்று
    எனக்குப் போதுமே -அதுவே
    சேர்த்து எனக்கு நூறு சேதி
    சொல்லிப் போகுமே

    நல்லஅற்புதம்மான வரிகள் வாழ்த்துக்கள் ஐயா
    காலத்திற்கு ஏற்றது போல் கவிதை அமைந்துள்ளது
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. ''...ராசா கால வில்லு அம்பு
    அவளின் கண்ணிலே -அது
    நேரா என்னை ஈட்டிப் போலக்
    குத்தித் தள்ளுதே
    ரோசாப் பூவின் வாசம் அவளின்
    செவத்த உடம்பிலே -என்னை
    லூசுப் போல சுத்த வைச்சு
    தினமும் கொல்லுதே....'''
    அருமை காதல் ரசம் சொட்டுகிறது.
    நன்று நன்று. பணி தொடர வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  3. நல்ல வரிகள்...

    வேறு பொண்ணை இந்த மனசு
    நினைச்சுப் பாக்காதே.......

    அழகான வரிகள்.

    ReplyDelete
  4. //அந்த தேவி யோடு வாழா திந்த கட்டை வேகாதே//

    ஐயோ பாவம் !

    தேவி கிடைக்கட்டும். சேர்ந்து வாழட்டும்.

    வாழ்த்துகள்.

    குதிரை வண்டியில் ஏறி ஜில்ஜில்ல்னு பயணம் செய்தது போன்ற உணர்வு ஏற்பட்டது, இந்தப் படைப்பைப்படிக்கும் போது.

    //ஆத்து ஓரம் நேத்து அவளைப் பாத்த போதிலே-அழகா பூத்துச் சிரிக்கும் குண்டு மல்லிப் பூவைப் போலவே பார்த்துச் சிரிச்ச சிரிப்பு ஒன்று எனக்குப் போதுமே -அதுவே சேர்த்து எனக்கு நூறு சேதி
    சொல்லிப் போகுமே//

    ஆஹா இந்த இடம், குதிரை வேகமாக ஓடும் போது, குதிரை ஓட்டிக்கு அருகில் அமர்ந்திருக்கும் நம் மீது, அந்தக் குதிரையின் வால் கவரி வீசுமே, அதுபோல ஓர் தனி இன்பம் [கிக்] தந்தது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. சபாஷ் சரியான போட்டி !தென்றல் சசிகலா கிராமிய மணத்தோடு எழுதிய கவிதைக்கு போட்டியாக உங்களின் கவிதையும் அருமை !
    ரம்பையைக் காட்டிலும் அழகாயிருக்கும் அந்த அழகியை எனக்கும் பார்க்கணும் போல இருக்கு ...கொஞ்சம் மனசு வைங்க ரமணிஜி!

    ReplyDelete
  6. கவிதை நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  7. ரமணி சார் ,

    மனைவியைப் பற்றி எழுதிய கவிதை அருமை.

    ReplyDelete
  8. சிறிய அழகிய
    சிற்றூரில்
    வயல் சூழ்ந்த
    நல் வெளியில்
    ஆற்றங்கரையோரத்திற்கே
    அழைத்துச் சென்று விட்டது
    தங்களின் கவிதை
    நன்றி

    ReplyDelete
  9. செமையாக ரசித்தேன் சார்... கிராமத்தையும், நகரத்தையும் கலக்கிக்கொடுத்த படைப்புபோல இருந்தது...

    ReplyDelete
  10. கவிதை நல்லாயிருக்கு சார்!
    ரசித்த வரி:
    //ராசா கால வில்லு அம்பு
    அவளின் கண்ணிலே//

    ReplyDelete
  11. மிகவும் ரசித்தேன்... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete

  12. மிகவும் ரசித்துப் படித்தேன், ஜாலிக்கு ஒரு கவிதை போதாது, பலகவிதைகள் எழுதுங்கள். எப்பவுமே ஜாலியாக இருக்கவும். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  13. கிராமிய கவிதை மணம் கமழ்கிறது..... படிக்கும்போதே மனதில் ஒரு துள்ளல்.....

    ரசித்தேன் ரமணி ஜி!

    ReplyDelete
  14. வேறு பொண்ணை இந்த மனசு
    நினைச்சுப் பாக்காதே.......
    >>
    நினைச்சுதான் பாருங்களேன்! அப்புறம் அம்மாவோட பூரிக்கட்டை அடி எப்படி இருக்கும்ன்னு தெரிஞ்சுக்குவீங்க!!

    ReplyDelete
  15. ஜாலியா எழுதிய கவிதையும் அருமை....:)

    த.ம. 6

    ReplyDelete
  16. சிறப்பான கவிதை!கிராமிய இசை துள்ளிவருகிறது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. காதலின் ஆழம்,கட்டுகோப்பான வாழ்கை, கண்ணியமான வார்த்தைகள் கிராமவாழ்வை அப்படியே கண்முன்னே நிறுத்திவிட்டீர்கள். ஒவ்வொரு வரிகளையும் ரசித்தேன்.

    ReplyDelete