Monday, January 27, 2014

வேரைப் பிடுங்கி வெந்நீர் ஊற்றி.........

செல்வனாகவும்
செல்வாக்குள்ளவனாகவும்
எதிர்காலத்தில் விளங்கவேண்டுமெனில்
உலகத் தரம் வாய்ந்த பள்ளியில் சேர்த்தலே
மிகச் சரியாக இருக்கும் என
பால்ய வயதிலேயே தங்கள் மகனைக்
கதறக் கதற
உறைவிடப் பள்ளியில்
சேர்த்துத் திரும்பினர் பெற்றோர்
குழந்தை மனம் அறியாமலேயே

குறைவுஏதுமின்றியும்
மருத்துவக் கண்காணிப்புடனும்
இறுதிக் காலத்தில் இருக்கவேண்டுமெனில்
நட்சத்திர அந்தஸ்து வயோதிகர் இல்லமே
மிகச் சரியாக இருக்குமென
தள்ளாத வயதில் தங்கள் பெற்றோரை
வலுக்கட்டாயமாக
வயோதிகர் இல்லத்தில்
சேர்த்துத் திரும்பினான்
செல்வமும் செல்வாக்கும் கொண்ட பிள்ளை
பெற்றோர் மனம் புரியாமலே

முதலீட்டுகேற்ற
ஒரு நிலையான வருமானம்
சேவை என்னும் பெயரில்
நிச்சயம் வேண்டுமெனில்
உறைவிடப் பள்ளியும்
நட்சத்திர அந்தஸ்து வயோதிகர் இல்லமுமே
மிகச் சரியான தேர்வு என அறிந்து
கோடிக் கோடியாய்
கொட்டிக் கொண்டிருக்கின்றனர்
பிழைக்கத் தெரிந்த பெருமகனார்கள்
சமூகப் பண்பாட்டுச் செடியின்
வேரைப் பிடுங்கி வெந்நீர்
ஊற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை
அறிந்தும் அறியாதவன் போலவே 

30 comments:

  1. ''...சமூகப் பண்பாட்டுச் செடியின்
    வேரைப் பிடுங்கி வெந்நீர்
    ஊற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை
    அறிந்தும் அறியாதவன் போலவே ...''
    பெருமுச்சுத் தான் வருகிறது....
    என்னதான் செய்யமுடியும்!!!!!
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  2. பிழைக்கத் தெரிந்த பெருமகனார்களுக்கு திருப்தியான நிம்மதியுடன் வாழத் தெரிவதில்லை...

    ReplyDelete
  3. பிள்ளைங்க வெளிநாட்டிலும் ,பெற்றவங்க வயோதிகர் இல்லத்திலும் வசதியாக 'வாழ்ந்துக் 'கொண்டிருக்கிறார்கள் ...காலம் செய்த கோலமிது !
    த ம 3

    ReplyDelete
  4. நிஜமாவே பிள்ளைகள் இல்லாவிட்டாலோ! இல்ல பிள்ளைகளுக்கு பெற்றோரை பார்த்துக்க முடியாத சரியான காரணமிருப்பின் முதியோர் இல்லம் சேர்பித்தால் பரவாயீல. இதுப்போல வசதி வாய்ப்பு இருந்தும் பெத்தவங்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பிங்குறவங்களுக்கு தண்டனை தரனும்

    ReplyDelete
  5. காலத்தின் கோலம்! 'குடிக்கும் நீரை விலைகள் பேசி' என்று பாடினார் எம் ஜி ஆர்! குடிக்கும் நீரை விலைக்கு வாங்குவோம் என்று ஒரு காலத்தில் நினைத்திருப்போமா!

    ReplyDelete
  6. சரியாய் சொன்னீர்கள்! அருமையான படைப்பு! நன்றி!

    ReplyDelete
  7. பண்பாட்டுச் செடியின்
    வேரைப் பிடுங்கி வெந்நீர்
    ஊற்றிக் கொண்டிருக்கிறோம்...உண்மையான வரிகள் ஐயா.

    ReplyDelete
  8. சிறு வயதிலிருந்தே உறைவிடப் பள்ளி..பெற்றோர்-பிள்ளைகள் உறவே அர்த்தமில்லாமல் போய்விடுகிறதே ஐயா...
    முதியோர் இல்லம்...இது அதற்கு மேல்..
    சிறியவர்-பெரியவர் இரண்டு தரப்பிலும் தவறு இருக்கிறது ஐயா..என்ன செய்வது..நீங்கள் சொல்வது போல் பண்பாட்டுச் செடியின் வேரை அறுத்ததோடல்லாமல் வெந்நீர் வேற ஊற்றுகிறோம்....

    ReplyDelete
  9. எல்லாம் காலம் செய்த கோலம் கட்டாயத்தின் பேரில் அவசரமாக எல்லாம் திணிக்கப் படுகிறது. திண்டாட்டம் தான். யாரை யார் நோவது என்று கூட புரியாமல் வருவதை எதிர் கொள்ளடா கண்ணா என்று படவேண்டும் போல் தான் இருக்கிறது.
    பண்பாட்டுச் செடியின் வேரை அறுத்ததோடல்லாமல் வெந்நீர் வேற ஊற்றுகிறோம்.... எப்படி இப்படி எல்லாம் சிந்திகிறீர்கள் உங்களால் மட்டுமே முடியும்.
    அருமை வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
  10. அறிந்தும் அறியாதவர் போல செய்யப்படும் காரியங்களில் இதுவும் ஒன்று. வேதனைக்குரியது.

    ReplyDelete
  11. நாம் எதை விதைக்கிறோமோ குழந்தைகளின் மனதில் அதைத்தான் அறுவடை செய்கிறோம் .

    tha.ma 8

    ReplyDelete
  12. முதல் இரண்டு பாராக்களோடு நிறுத்தி இருக்கலாம் என்பது எனது கருத்து..இது எனது கருத்துதான் ஆனால் அதை உங்களிடம் திணிக்கவில்லை. மனதில் நினைத்ததை சொன்னேன்

    ReplyDelete
  13. இலவச சேவையை பணம் காய்க்கும் தொழிலாக மாற்றுவதும் வருத்தமான செயலே

    ReplyDelete
  14. Avargal Unmaigal //

    தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
    முதலில் எடைக்கு எடை எனத் தலைப்பிட்டு
    முதல் இரண்டு பத்திகளை மட்டும்தான்
    எழுதி இருந்தேன்
    ஏனோ அது மனதுக்கு நிறைவைத் தரவில்லை

    மக்கள் விரும்புவதனால் கொடுக்கிறேன் என
    இவர்களும் கிடைப்பதனால் பயன்படுத்திக் கொள்கிறேன்
    என அவர்களும் தொடர்கிற அவலத்தைச் சொன்னால்தான்
    பதிவு நிறைவடையும் எனத் தோன்றியதால்
    கடைசிப் பத்தியை எழுதினேன்

    மனம் திறந்த விமர்சனத்திற்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  15. அருமை!!!!!
    முதல் இரண்டு பத்தி - முற்பகல் செய்யின்; பிற்பகல் விளையும் .. மிக்க சிறப்பு !!!!!

    ReplyDelete
  16. வெந்நீர் தான் ஊற்றி வளர்த்து கொண்டிருக்கிறோம்...:((

    உண்மையான வரிகள்...

    ReplyDelete
  17. காலத்தின் கோலம்...இதுவே நடைமுறையாக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சமும் எழுகிறது. காலத்திற்கேற்ற கவிதைக்கு நன்றிகள் ரமணி சார்!

    ReplyDelete
  18. எனக்குள்ளும் இதுவே நடைமுறையாகி விடுமோ என்கிற பயம் தோன்றுகிறது
    .எல்லாம் காலத்தின் கோலம்.

    ReplyDelete
  19. ரமணி சார் நான் சொல்லவருவதை புரிந்து கொண்டு பதில் அளித்தற்கு நன்றி சில சமயங்களில் சில பதிவை படிக்கும் போது மனதில் எழும் கருத்தை சொல்ல நினைத்தாலும் சொல்ல இயலாமல் சென்றுவிடுவோம் காரணம் அவர்கள் தப்பாக எடுத்து கொள்வார்களோ என்று நினைப்பதால் ஆனால் உங்களிடம் சொல்ல தயக்கமில்லை காரணம் சொல்ல வருவதை புரிந்து பதில் அளிக்கும் திறமை உங்களிடம் இருப்பதால்

    ReplyDelete
  20. தவறான பாதையில் வேகமாய் பயணித்துக் கொண்டிருக்கிறது இன்றைய உலகம்.
    அருமையான கவி ஐயா
    நன்றி

    ReplyDelete
  21. தலைப்பே எல்லா வலியையும் சொல்லிவிடுகிறது குரு !

    ReplyDelete
  22. தலைப்பு சொன்ன கருத்து... அதைத்தான் பலரும் செய்து கொண்டிருக்கிறார்கள் எனும் போது மனதில் வலி......

    ReplyDelete
  23. மதுரைத் தமிழன் குறிப்பிட்டது போல முதல் இரண்டு பாராக்கள் மட்டுமே எனில் அது (மனதைத் தைக்கும்) கவிதை! இப்போது கட்டுரை வகையில் சேர்த்து விட்டது. ஆனாலும் காரம் குறையவில்லை!

    ReplyDelete
  24. நன்றாகவே சொன்னீர்கள்! எல்லாவற்றிற்கும் காரணம் சேர்ந்து வாழும் மனப்பான்மை இல்லாததுதான்.

    ReplyDelete
  25. இது காலம் செய்த கோலமடி என்பது போலதான். மிக அருமையான வரிகள்!

    பெற்றோர் எவ்வழி அவ்வழிதான் பிள்ளைகளும்! பெற்றோர்கள் நல்ல உதாரணமாக அமைந்தால் பிள்ளைகளும் அது போலத்தான் இருப்பார்கள்!! பெற்றோர்கள் குழந்தைகளின் மனதைப் பொருந்து அவர்களுக்கேற்றார்போல் அவர்களை வழி நடத்தினால், பிள்ளைகளும் பெற்றோர் மனதைப் புரிந்து கொள்வார்கள்! எந்த உறவாக இருந்தாலும் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பதை புகுத்தி விட்டால்...அந்த வாழ்வு எப்போதும் அன்பு நிறைந்தே இருக்கும்!

    நல்லதொரு பதிவு!!

    த.ம.

    ReplyDelete
  26. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று எடுத்துக்கொள்ளலாமா முதியோர் இல்லங்களை.? வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  27. உறைவிடப் பள்ளி
    வயோதிபர் இல்லம்
    இவற்றிற்கு
    கோடிக் கோடியாய்
    உதவும் உறவுகள் என
    நன்றாக விளக்கினீர்கள்...
    குமுகாயம் (சமூகம்) எப்ப மாறுமோ
    எனக்கும் தெரியவில்லையே!

    ReplyDelete
  28. வணக்கம்
    ஐயா.

    உண்மையின் வரிகள்..... வாழ்த்துக்கள் ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete