Wednesday, January 28, 2015

வரமா சாபமா ?

அளவு பொருத்து
மருந்தாகவும்
விஷமாகவும்
மாற்றம் கொள்ளும் அமுதாய்

சூழல் பொருத்தே
வரமாகவும்
சாபமாகவும்
மாற்றம் கொள்கிறது தனிமையும்..

தன்னுள்
ஆழம்போகத் தெரிந்தவனுக்கு
அற்புத முத்தெடுத்துத் தரும்
அந்த அதி அற்புதத் தனிமையே

தன் உள்
குப்பையைக் கிளறுவோனுக்கு
நாற்றத்தையும் சிதைவினையும்
தானமாகத் தந்து போகிறது

கூட்டத்திலும்
தனித்தும் விழித்தும்
இருக்கத் தெரிந்தோனுக்கு
தலைமையையை பரிசளிக்கும் தனிமையே

தனிமையிலும்
பரபரக்கும் மனத்தோனுக்கு
பதட்டத்தையும் வெறுமையையும்
சொத்தாக்கிச் சிதைத்துப் போகிறது

நிறமற்று
நிலம் வீழும் மழை நீர்
நிலம் பொருத்து
நிறம்பெறும் தன்மை போல்

தனிமைக்கும்
தனித்த குணமில்லை
மனம் பொருத்தே
தன்முகம் காட்டிப் போகிறது

ஆம்
தனிமை
வரமும் இல்லை
சாபமும் இல்லை

ஆம்
தனிமை
வரமும்தான்
சாபமும் தான்

11 comments:

  1. அருமையாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
  2. வயதைப் பொறுத்து...
    நிறம்பெறும் தன்மை போல்...
    மாறலாம்...

    ReplyDelete
  3. தனிமையாக அமர்ந்து யோசிக்கும் எவரும் தங்கள் கவிதையை முழுமையாக ஏற்பர்.

    ReplyDelete
  4. தன் உள்
    குப்பையைக் கிளறுவோனுக்கு
    நாற்றத்தையும் சிதைவினையும்
    தானமாகத் தந்து போகிறது

    கூட்டத்திலும்
    தனித்தும் விழித்தும்
    இருக்கத் தெரிந்தோனுக்கு
    தலைமையையை பரிசளிக்கும் தனிமையே//

    மிக மிக அருமை சார்! தனிமையிலும் இனிமை காண முடியுமா என்றால் அது வரமாக இருக்கும் தருணங்களில் நிச்சயமாக காண முடியும். ஆனால் வயோதிகத் தனிமை? சாபமாகிப் போனதோ? அருமை அருமை ஆம் வரமும் தான் சாபமும் தான்...

    ReplyDelete
  5. அருமை.. நயமான வரிகள்..
    சிறப்பான கருத்துக்கள்!..

    ReplyDelete
  6. நன்றாகச் சொன்னீர்கள். தனிமை வரமும் சாபமுமே. ஒன்றைக் கவனிக்க வேண்டும். தனிமைப் படுத்தப் படுவது நிச்சயமாக வரமல்ல. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. வணக்கம்
    ஐயா.

    நன்றாக சொன்னீர்கள். நல்ல உவமை மிக்க வரிகள்... அதில் மழைநீர் பற்றி சொல்லிய விதம் சிறப்பு... பகிர்வுக்கு நன்றி த.ம7

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. சுய வலிமை இருக்கும் வரை தனிமை இனிமைதான் ,அடுத்தவரை சார்ந்து இருக்க வேண்டும் என்று வந்தால் தனிமையே கொடுமைதான் !
    த ம 10

    ReplyDelete
  9. ’தனிமை’யைப்பற்றிச் சொல்லியுள்ளது ’இனிமை’ :)

    ReplyDelete