Friday, March 30, 2012

பாம்பின் கால்


 மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தும்
படைப்பின்
ஆன்மா புரிந்த அளவு
அதன் அர்த்தங்கள் புரியவே இல்லை

படைப்பின்
ஒவ்வொரு வரியிலும் துடிக்கும்
விழியற்றவனின்
புதிய இடத்துப் பயணப் பதட்டமும்....

கருவானதை
விழுங்கவும் உமிழவும் முடியாது தவிக்கும்
திரு நீல கண்ட மயக்கமும்

ஒட்டுமொத்த படைப்பிலும் ஊடாடும்
இறுதி மூச்சுக்காரனின்
பிடிதேடும்  அவலமும்...

என்னுள்ளும்
பதட்டத்தையும்
தவிப்பையும்
அவலத்தையும்
பரவ விட்டுப் போகிறது

படைப்பின் ஆன்மாவைப் புரிந்து கொண்டவனுக்கு
அர்த்தங்கள் அவசியமா என்ன ?

Saturday, March 24, 2012

யானையைப் பிடித்து ஒரு பானைக்குள் அடைக்கும்...

அலமேலுகளும் அம்புஜங்களும்
மாமியாகிப் போனார்கள்
மாமியாராகியும் போனார்கள்
வனஜாக்களும் கிரிஜாக்களும்
நாற்பதைக் கடந்து போனார்கள்
பலர் போயும் போனார்கள்

இப்போது ஜொலிப்பதெல்லாம்
த ன்ஷிகாவும்  தமன்னாவும் தான்

கால மாற்றத்தில் கலாச்சார மாற்றத்தில்
பெயர்களும் மாறிப் போவதை
எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது

அது சரி
ஆயினும்
பச்சேரிகள் எல்லாம் அம்பேத்கார் நகர்களாகவும்
அக்ரகாரங்கள் எல்லாம் பாரதியார் வீதிகளாகவும்
வணிக வீதிகள் எல்லாம் காமராஜ் சாலைகளாகவும்
மாறித் தொலைக்க வேண்டிய அவசியம்தான் எ ன்ன?
கொஞ்சம் மாறி மாறித் தான்
மாறித் தொலைத்தால் என்ன?

சுதந்திர வேள்வியில்
தான், தன் குடும்ப சுகம் எதிர்காலம் அனைத்தையும்
ஆகுதியாய் அர்ப்பணித்தவர்களை
ஒரு ஜாதிக் கூண்டினுள் அடைத்தல்
அவர்கள் தியாகத்தை
மீண்டும் சிறையினுள் அடைத்தல் போலில்லையா ?
அவர்கள் மேன்மையை
 நாளும் தீயிட்டுக் கொளுத்துதல் போலில்லையா?

இனியேனும்
வானுயர அவர்கள் திருவுருவச் சிலையெழுப்பி
ஆளுயர மாலை அணிவித்து மரியாதை செய்யும்
போலிச் சடங்குகளைத் தவிர்போமா?

இனியேனும்
வானளவு விரியும் அவர்கள் புகழை தியாகத்தை
ஜாதி குடுவைக்குள் அடைக்கும் அற்பச் செயலை
அடியோடு அழித்துத் தொலைப்போமா?

Wednesday, March 21, 2012

மதிப்புக் கூட்டல்

யாரையும் அளவுக்கதிகமாகப் புகழ்வதற்கு
அதிகம் சங்கடப்படவேண்டாம்
சங்கோஜப் படவும் வேண்டாம்
அதில் நமக்கும் லாபமிருக்கிறது

மிக மிக மோசமானவரை
ஓரளவு நல்லவர் எனச் சொல்லுங்கள்
ஓரளவு நல்லவரை
மிக மிக நல்லவர் எனச் சொல்லுங்கள்
நல்லவரை உத்தமர் எனச் சொல்லுங்கள்
அதற்கும் மேலே என்றால்
மனிதரில் மாணிக்கம் எனச் சொல்லுங்கள்
அதில் நமக்கும் பயனிருக்கிறது

நல்ல மனிதராக வாழ்ந்து சென்றவரை
நல்ல மனிதர் என மட்டும்
சொல்லிக் கொண்டிருந்தால்
நாமென்ன என்கிற கேள்வி எழும்
அது நம் நிலையை
மிக மோசமான தாக்கிவிடும்
அவரை மகாத்மா எனச் சொல்லிவிட்டால்
அவரையும் புகழந்தது போல் இருக்கும்
நமக்கும் பிரச்சனையில்லை
நாம் எவ்வளவு மோசமாக இருந்தாலும்
நல்ல ஆத்மாக்கள் ஆகிவிடுவோம்

என்வே
என்றும் எப்போதும் எவரையும்
அளவுக்கதிமாகப் புகழ்வதற்கு
சற்றும் சங்கோஜப்படாதீர்கள்
அந்தப் புகழ்ச்சிக்குள்
 நமக்கும் பெரிய பங்கு இருக்கிறது

Monday, March 19, 2012

காலங்காலமாய் கல்யாணியின் வாரீசுகள் ..

அப்பா ஜாதக்கட்டை எடுத்தவுடனேயே
புலம்பத் துவங்கினாள் கல்யாணி
"அம்மா என்னைப் புரிஞ்சுக்கோம்மா
எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்
நான் படிக்கனும் அப்பாகிட்டே சொல் " என்றாள்

" உன் அப்பன் யாரு பேச்சை
என்னைக்குக் கேட்டார்
 இது நாள் வரைஉன் அப்பாவை நீ
புரிந்து கொண்ட லெட்சணம் இதுதானா ?"
மன்ம் வெதும்பிச் சொன்னாள் அம்மா

கல்யாணி சோர்ந்து போகாது
அப்பாவைக் கெஞ்சினாள்

"கல்யாணி முதலில் என்னை நீ புரிஞ்சுக்கோ
அடுத்த வருடம் நான் ஓய்வு பெறனும்
அதற்குள்ளே உன் திருமணம் முடிக்கணும்
புரிஞ்சுதா ? " என்றார் கண்டிப்புடன் அப்பா

குடும்ப நிலவரம் புரியாது
சக்திக்கு மீறிய இடமாகக் கொண்டுவந்தார்
கமிஷனுக்கு ஆசைப்பட்ட புரோக்கர் மாமா

ஸ்வீட் கொடுத்து
எதிரில் அமர்ந்து வெட்கப் பட்டு
சீர் செனத்தி பேசிமுடித்தாலும்
"பெண்ணையும் பையனையும்
கொஞ்சம் தனியாக பேசவிடுங்கள்
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளட்டும் "
என்றார் முற்போக்கு மதராஸ் மாமா

புழக்கடையில் ஐந்து நிமிட நெளிசளுக்குப் பின்
"உனக்கு சினிமா பிடிக்குமா ?யார் படம் பிடிக்கும் ?"
என்றான் மாப்பிள்ளை

"பார்த்திபன் எனச் சொன்னால்
ஒரு மாதிரி நினைப்பாரோ என நினைத்து
"ரஜினி " எனச் சொன்னாள் கல்யாணி

ஆரம்பத்திலேயே குழப்பவேண்டாம் என நினைத்து
" எனக்கும்தான் "எனச் சிரித்தார் மாப்பிள்ளை

" கோழிக் குழம்பு சமைக்கத் தெரியுமா
எனக்கு அது ரொம்பப் பிடிக்கும் " என்றான்

தெரியும் என்பது போலவும்
தெரியாது என்பதுபோலவும்
குழப்பமாகத் தலையாட்டி வைத்தாள் கல்யாணி

தனக்குத் தேவையான பதிலை எடுத்துக் கொண்டு
பூரித்துப் போனார் மாப்பிள்ளை

இப்படியாக ஒருவரை ஒருவர்
 மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள
 மிகச் சிறப்பாகத் திருமணம் நடந்து முடிந்தது

மன்ம் புரிந்து கொள்ளும் முன்பு
உடல்கள் புரிந்து கொண்டதால்
அடுத்து அடுத்து குழந்தை பிறக்க
அதை வளர்ப்பதற்கான போட்டியில்இருவரும்
இறக்கைக் கட்டிப் பறக்க
ஒருவரைஒருவர்
புரிந்து கொள்வதற்கான அவகாசமின்றியே
காலமும் இறக்கை கட்டிப் பறந்தது

அப்பா ஜாதகக் கட்டை எடுத்ததும்
"அம்மா என்னை புரிஞ்சுக் கோம்மா
எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்
நான் படிக்கணும் " என்றாள்
கல்யாணியின் மூத்த மகள் நித்யா

இருபது வருடங்களுக்கு முன்பு
அம்மா தனக்குச் சொன்ன பதிலையே
சொல்லவேண்டியிருப்பதை எண்ணி
குலுங்கிக் குலுங்கி அழத் துவங்கினாள் கல்யாணி

 அம்மா இதுவரை இப்படி அழுது பார்க்காத நித்யா
 ஏனோ அதிகம் குழம்பிப் போனாள்
இருபது வருடங்கள் கழித்து  தானும்  இப்படி
அழ வேண்டி இருக்கும் என்பதை அறியாது

Tuesday, March 13, 2012

மீ ண்டும் ஜான் அப்துல் நாராயணன்

தெய்வமே
(தப்பு தப்பு மன்னியுங்கள் )
தெய்வங்களே
(ஐய்யையோ இதுவும் தப்பாய்த் தெரிகிறதே )
இங்கே உங்கள் ஏஜெண்டுகள்
எல்லோரையும் குழப்பி வைத்திருக்கிறார்கள்
நீங்கள் ஒருவரா ?
இல்லை மூவரா ?
மூவரும் நண்பர்களா ?
இல்லை எங்களுக்குள் இருக்கும்
ஜென்ம விரோதங்கள் போல்
நீங்களும் பகை கொண்டிருக்கிறீர்களா ?
பொதுப்பெயரில் அழைத்தால்
யாரேனும் செவிசாய்ப்பீர்களா ?
இல்லை குறிப்பாக எனக்கில்லை என
மூவரும் கைவிட்டுவிடுவீர்களா ?

ஐய்யோ ஆரம்பமே குழப்பமாய் இருக்கிறதே

பரிசுத்த ஆவியே !அல்லாவே ! ஆதிமூலமே !
இப்படி அழைத்தால் சரியா ?
உங்களை பிரார்த்தித்து
உங்களைத் தொழுது
உங்கள் திருப்பாதம் பணிந்து
ஒரே ஒரு கோரிக்கை வைக்கிறேன்வோ
தயவு செய்து இன்னொரு முறை
இங்கு அவதரிக்கச் சாத்தியமா ?

பண்டை ஆயுதங்கள்
பலனற்றுப் போனதைப் போலவே
தங்களது மார்க்கங்களும்
போதனைகளும் நல்லுரைகளும்
மார்க்குக்கான பள்ளிக் கூட
மனப் பாடப் பகுதி போல்
மாறிப்போய் வெகு நாட்களாகிவிட்டன

இல்லையென்பவர்களுக்கும்
இருக்கிறதென்பவர்களுக்குமான
வாதப் பிரதிவாதங்களைவிட
இருக்கிறதென்பவர்களுக்குள் வரும் பிணக்கு
உக்கிரமாகி ஒரு யுத்தமாகும் முன்
மூவரில் யாரேனும் ஒருவர்
மீண்டும் ஒருமுறை
அவதரித்து வரவோ அல்லது
தூதுவர்களை அனுப்பிவைக்கவோ சாத்தியமா ?

கடவுள் ஒருவரே எனபதில்
எங்களுக்குள் பிரச்சனையில்லை
அது எங்களவர் மட்டுமே என
அவரவர்கள் சாதிக்கத் துவங்குகிற பிரச்சனை
எங்களிடையில்  ஒரு மதில் சுவரையே
எழுப்பிக் கொண்டிருக்கிறது

மூவரும் ஒன்றுதான் எனச்
ஸ்தாபித்துச் செல்ல
ஒரே ஒருமுறை அவதரித்து வரச்  சாத்தியமா  ?
இந்த பாழாய்ப் போகும் உலகை
காத்து மீண்டும் ரட்சிக்கச் சாத்தியமா ?

அடுத்தவர்கள் மதத்  தலங்களை
வெறும் கட்டிடங்களாயப் பார்க்கும்
மனோபாவங்களை மாற்றிவிடச் சாத்தியமா ?

வீபூதி தரித்து
பைபிளைத் தாங்கி
மசூதிக்குச் செல்லும்
ஜான் அப்துல் நாராயணன்களை
 இங்கு உருவாக்கித் தரச  சாத்தியமா ?


Saturday, March 10, 2012

கொலைவெறி

குடல் எரிய உடல் கருக
குடிகெடுக்கும் குடியை ஊரெங்கும்
எளிதாய் பரப்பிவைத்து
தலைக் கவசத்தை கட்டாயமாக்கி
மக்கள் தலையை மட்டும் காப்பதில்
அரசு அக்க்றை புல்லரிக்க வைக்கிறது

மின்வினியோகத்தை முடமாக்கி
மின்கட்டணத்தையும் இரட்டிப்பாக்கி
அனைவரையும் அவதிக்குள்ளாக்கிவிட்டு
இலவச மிக்சியும் கிரைண்டரும் கொடுக்கும்
அரசின் வள்ளல்குணம்
மெய்சிலிர்க்கச் செய்கிறது

பஸ் கட்டண உயர்வையும்
விலைவாசி உயர்வையும்
பிணச்சுமையாக மேலேற்றிவிட்டு
விலையில்லா அரிசி கொடுத்து
ஏழைகளின் துயர் சுமை குறைக்க எண்ணும்
அரசின் பெருந்தனமை
ஆச்சரியப்படவைக்கிறது

பசுமாட்டின்முன் பக்க உரிமையை விட்டுக் கொடுத்து
பின் பக்க உரிமையை மட்டும் வைத்துக்கொள்ளும்
சாமர்த்திய கொடையாளிபோல்
தொலைக்காட்சியை இலவசமாய்க் கொடுத்து
கேபிள்உரிமைகளை
தன் குடும்பத்திற்குள் வைத்துக்கொள்ளும்
சாணக்கியத்தனம் நினைத்து நினைத்து
மனம் பெருமையில்
திக்குமுக்காடிப் போகிறது

இதையெல்லாம் விட
வைக்கோல் கன்றுக்குக் குட்டியைக்
காட்டிக் காட்டியே
ஒட்டப் பால கறக்கும்
கெட்டிக்கார கற வைக்காரன்போல்
எத்தனை முறை ஏமாற்றியபோதும்
வகை வகையாய் ஏமாற்றிய போதும்
அடுத்தமுறை அதிகமாக ஏமாற
ஆவலாய்க் காத்திருக்கும்
நம் அருமை ஜனங்களின்
முட்டாள்தனத்தை நினைக்கையில்
மட்டும் ஏனோ மனம்
வித்தியாசமாய்
கொலைவெறி கொள்கிறது


Wednesday, March 7, 2012

பரிணாமம் அல்லது யதார்த்தம்


நீங்களாக எதையும் கொடுத்ததில்லை
பொறுத்துப் பொறுத்துப் பார்த்தும் பலனின்றி
நாங்கள் தான் எடுத்துக் கொள்கிறோம்

எடை குறைந்தும்
கூடுதல் விலைகொடுத்தும்
காய்ந்த சொத்தை காய்கறிகளை
சந்தையிலிருந்து வாங்கி வந்து
எங்களை அவஸ்தைக்குள்ளாக்கினீர்கள்

வேறு வழியின்றி இப்போது
நாங்களே சந்தை செல்ல
ஆரம்பித்து விட்டோம்

நாலு முறை அலைய சங்கடப்பட்டு
வரிசையில் நிற்பது சுயகௌரவக் கேடென்று
ரேசன் கடையைத் தவிர்த்தீர்கள்

நாங்கள்தான் இப்போது போய்க்கொண்டுள்ளோம்

அதிகக் கூட்டம் எனச் சொல்லியே
மின் கட்டணம் செலுத்தாது நாள் கடத்தி கடத்தி
கடைசி தேதி வர
"ஆபீஸில் அதிக வேலை நீயே கட்டிவிடு "என்றீர்கள்

இந்தக் கடைசி நேர அவஸ்தை எதற்கென்று
இப்பொது நாங்களே  கட்டிவருகிறோம்

விற்கிற விலைவாசியில் ஒரு வரவு
அரைக்கிணறு தாண்டத்தான் சரியாகிறது என
நீங்கள் புலம்பத் துவங்கினீர்கள்

நாங்களும் பணிக்குச் செல்லத் துவங்கிவிட்டோம்

இப்பொது நாட்டுப் பிரச்சனையை தீர்க்க
சட்ட மன்றம் அனுப்பினால்
 நாக்கைத் துருத்தி சண்டையிடுவதிலும்
ஆபாசப் படம் பார்ப்பதிலும்
அதிக அக்கறை கொள்கிறீர்கள்

எங்களுக்குரிய பங்கை நீங்களாகக் கொடுத்து
எங்களை அனுமதிப்பீர்கள் என எதிர்பார்த்து
இது நாள் வரை காத்திருந்து
 இதிலும் அதிகம் ஏமாந்து போனோம்

இதையும் நாங்களாக எடுத்துக்கொண்டாதால் உண்டு
நீங்களாக நிச்சயம் தரப் போவதில்லை என்பதில்
இப்போது நாங்கள் உறுதியாயிருக்கிறோம்

உங்களுக்கு ஒரு பெருமையெனில் முன் நிற்பதும்
வசதியெனில் மட்டுமே விட்டுக் கொடுப்பதுவும்
சிறுமையெனில் விலகி நிற்பதுவும்
உங்கள் பரம்பரைக் குணம்தானே

பிரசவம் எனச் சொன்னால்
நெஞ்சு நிமிர்த்தி மருத்துவமனை வரும்
எந்த ஆண் மகனும்
அபார்ஷனுக்கும் கருக்கலைப்பிற்கும்
மருத்துவமனை வருவதில்லை எனபதும்
பெண்களாகத் தானே போய் வருகிறோம் என்பதுவும்
உலகறிந்த விஷயம் தானே ?