Monday, January 31, 2022

ஆள் அரவமற்ற நெடுஞ்சாலை..

 என்னுடல்

என் மனம்

என் சுகம்

இதைக் கடந்து


சமயலறை

படுக்கையறை

வாசல்படி

இதைக் கடந்து


என் ஜாதி

என் மதம்

என் இனம் கடந்து


எனது தெரு

எனது ஊர்

என் நாடு கடந்து


என்பணி

என் சகா

என் வர்க்கம் கடந்து..


இப்படி


எல்லாவற்றியும் கடந்து கடந்து

அனைத்தையும்

மிகச் சரியாகக்

கடந்துவிட்டதாக எண்ணி

மகிழ்ந்து நிமிர்கையில் 

எதிரே


"உன்னத வாழ்வுக்கான பாதை

இங்குதான் துவங்குகிறது "

என்கிற அறிவுப்புப்புடன்

நீண்டு செல்கிறது

ஆளரவமற்ற

ஒரு நெடுஞ்சாலை


குழம்பிபோய்

கடந்துவந்த பாதையைப் பார்க்க

காலம், சக்தி ,செல்வம்

அனைத்தையும்

ஏய்த்துப் பிடுங்கிய

எக்களிப்பில்

எகத்தாளமாய் சிரிக்கிறது அது

Saturday, January 29, 2022

பதிலறியா கேள்வி..

 வித்யா கர்வம் தந்த மிடுக்கில்

அவர் கண்களில் தெரியும்
மேதமைத்தனம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்
அதற்காகவே நானும் கவிஞனாகத் துடித்தேன்

ஆயினும் "எப்படி" எனத்தான் தெரியவில்லை

அவர் அறிந்தோ அறியாமலோ
அவரது காலகள் தரையில் இருந்தபோது
"கவிஞனாவது எப்படி " என்றேன்

"படி நிறையப் படி
எவ்வளவு முடியுமோ அவ்வளவு
எவ்வப்போது முடியுமோ அப்போதெல்லாம் "என்றார்

நான் படிக்கத் துவங்கினேன்

எழுத்து புரிந்தது
எழுதுவோனின் எண்ணம் புரிந்தது
சில போது ஆடையிடும் அவசியமும்
சிலபோது அம்மணமாய் விடும் ரகசியமும்

ஆனாலும் கூட எப்படி எனப் புரிந்த எனக்கு
"எதனை" என்கிற புதுக் குழப்பம் வந்தது

இப்போது அவர் தளர்ந்திருந்தார்
நான் வாலிபனாய் வளர்ந்திருந்தேன்

"கண்ணில் படும் அனைத்தையும் பார்
எல்லோரையும் போலல்லாது வித்தியாசமாய்
இதுவரை யாரும் பார்த்திராத கோணத்தில்
இனி யாரும் பார்க்க முடியாத கோணத்தில் " என்றார்

நான் பார்க்கத் துவங்கினேன்

பார்க்கத் தெரிந்தது
பார்வையைச் சார்ந்தே பொருளிருப்பதும்
பார்வைபடாத பகுதிகளே அதிகம் இருப்பதும்
உள் இமையை திறக்கும்  உன்னத ரகசியமும்

ஆனாலும் கூட எதனைஎனப் புரிந்த எனக்கு
"ஏன் " என்கிற பெரிய குழ்ப்பம் வந்தது

இப்போது அவர் பழுத்தவராய் இருந்தார்
நான் தளரத் துவங்கியிருந்தேன்

முன்னிரண்டு கேள்விகளுக்கு
சட்டெனப் பதில் சொன்னவர்
இப்போது ஏனோ மௌனம் சாதித்தார்
பின் மெல்லிய குரலில்
"இதுவரை எனக்குத் தெரியவில்லை
உனக்கு ஒருவேளைதெரியக் கூடுமாயின்
அடுத்தவனுக்கு அவசியம் சொல் " என்றார்

இப்போது பதிலறியா கேள்வி என்னிடத்தில்
நான் அலைந்து கொண்டிருக்கிறேன்

Friday, January 28, 2022

எறும்பூற...

 கூகுள் மேப்பில் என் பக்கப் பார்வை ஒரு கோடியைத் தாண்டி...


"முயலாமைக் கதையில் "

ஆமை ஜெயித்தல்தான் சிறப்பு
முயல் ஜெயித்தால்
அது நிச்சயம் அதிசயமே
யானை நடந்து
மண் தரையில் தடம் பதிவதுண்டு
கற்களில் பதிந்ததாக பழமொழியில்லை
எறும்பு ஊறத்தான் கற்கள் தேயும்

பணி நாட்களில் யுத்தத்தை
ஒரு நாளும் சந்திக்காது
ஓய்வுபெற்று வந்த
இராணுவ வீரர்கள்   கூட
தினமும் பயிற்சி செய்யாது
பணியில் நிலைத்திருக்க
சத்தியமாய் சாத்தியமே இல்லை

பறந்துபோய்
சிகரம் இறங்கினால்
அது சமதளம் போலத்தானே 

முட்டி தேய பகலிரவாய்
நடந்தேறிப் பார்த்தால்தான்
சிகரமே சிகரமாய்த் தெரியும்
நமக்கும் அதன் அருமை புரியும்

தொடர் முயற்சியில் வென்ற
பல முட்டாள்கள் கூட
உலகினில் உண்டு
மெத்தனத்தில் ஜெயித்த
பேரறிஞர்  எவரும் நிச்சயம் இல்லை

தெளிவாய்  இதை அறிவோம்
தொடர்ந்து நாளும் முயல்வோம்
அரியவை எதையும்
முயன்றே  அடைந்து உயர்வோம்

Thursday, January 27, 2022

வந்தே மாதரம்..இப்போது..

 என்ன ஒரு மாற்றம்!  


ஒரு காலத்தில் ஆங்கிலேயர்கள் இதே *வந்தே மாதரம்* குரல் எழுப்பியதற்காக எங்களை கைது செய்தனர்.. அடித்தனர், சுட்டுக் கொன்றனர்...  


இன்று, இது லண்டனில் பாடப்படுகிறது... 




இனி இது போன்ற சிறந்த நாட்களை நாம் எதிர்பார்ப்போம்.. 


                                                                                                                    வந்தே மாதரம்!                                                *ராயல் ஸ்கொயர் லண்டன் 

Wednesday, January 26, 2022

உயர்ந்த மனிதர்..

  இன்று ஜனவரி 27



தமிழ் எழுத்தாளர்/திரைப்பட இயக்குனர் 

கோமல் சுவாமிநாதன் 

பிறந்த நாள்.


பிறப்பு:ஜனவரி 27, 1935

இறப்பு:அக்டோபர், 1995


        தமிழின் முக்கியமான முற்போக்கு நாடக ஆசிரியராகக் கருதப்படுபவர்.

       முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார்.

       திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதினார். 

       இவரது எழுத்தில் கே.பாலச்சந்தரால் இயக்கப்பெற்ற தண்ணீர் தண்ணீர் முக்கியமான திரைப்படம் ஆகும்.

        கோமல் சுவாமிநாதன் 1935ல் காரைக்குடியில் பிறந்தார். 

        இவரது பெற்றோர் ஆடுதுறைக்கு அருகே கோமல் என்னும் ஊரைச் சேர்ந்தவர்கள். 

       1957 ல் நாடக ஆசையால் பெற்றோருடனேயே ஊரைவிட்டு வந்து சென்னையில்

 எஸ். வி. சகஸ்ரநாமத்தின் நாடக்குழுவில் சேர்ந்தார்.

       நாடகமே சிந்தனை, நல்ல சமூகமே லட்சியம்’ என்று வாழ்ந்தவர் கோமல் சுவாமிநாதன். 

        திரைப்பட இயக்குநர், நாடகவியலாளர், சமூகச் செயல்பாட்டாளர், பத்திரிகை யாளர் எனப் பன்முக ஆளுமை கொண்ட அவரது அனுபவத்தின் கைவண்ணம் அவரத வசனங்களில் தெறிக்கும்.

        1957 முதல் இறுதி வரை சென்னையில் வாழ்ந்தார். வாழ்க்கையின் கடைசியில் கோமல் முதுகெலும்புப் புற்றுநோயால் அவதிப்பட்டார்.

        ஆனால் கடைசிக்காலத்தில் அவர் இமயமலைக்குச் சென்றுவரவேண்டும் என்று விரும்பினார். அவரது குடும்பம் சம்மதிக்கவில்லை. உடலை வதைக்கும் கொடும் வலியுடன் கோமல் இமயத்துக்குக் கிளம்பிச்சென்றார். பத்ரிநாத்துக்கும் கேதார்நாத்துக்கும் கைலாயத்துக்குமாக நாற்பதுக்கும் மேல் கிலோமீட்டர்களை அவர் நடத்தே கடந்தார். அந்தப்பயணம் பற்றி அவர் சுபமங்களாவில் எழுதினார். 


       இவரது படைப்புகள்:

சன்னதித் தெரு, 1971,

நவாப் நாற்காலி, 1971 (சி வி ராஜேந்திரன் இயக்கத்தில் படமாகியது),

மந்திரி குமாரி, 1972,

பட்டணம் பறிபோகிறது, 1972,

வாழ்வின் வாசல், 1973,

பெருமாளே சாட்சி, 1974 (தமிழில் குமார விஜயம் என்ற பெயரிலும் மலையாளத்தில் பாலாழி மதனம் என்ற பெயரிலும் படமாகியது),

ஜீஸஸ் வருவார், 1974,

யுத்த காண்டம், 1974 (அதே பெயரில் இவரால் இயக்கப்பட்டுப் படமாகியது),

ராஜ பரம்பரை, 1975 (பாலூட்டி வளர்த்த கிளி என்ற பெயரில் பி. மாதவன் இயக்கத்தில் படமாகியது. இளையராஜா இசையமைத்த இரண்டாவது படம்),

அஞ்சு புலி ஒரு பெண், 1976,

கோடு இல்லாக் கோலங்கள், 1977 (இவரால் முதலில் "இலக்கணம் மீறிய கவிதைகள்" என வழங்கப் பெற்றது),

ஆட்சி மாற்றம், 1977,

சுல்தான் ஏகாதசி, 1978,

சொர்க்க பூமி, 1979 (அனல் காற்று என்ற பெயரில் இவரால் இயக்கப்பட்டுப் படமாகியது),

செக்கு மாடுகள், 1980 (சாதிக்கொரு நீதி என்ற பெயரில் படமாகியது),

தண்ணீர் தண்ணீர், 1980 (அதே பெயரில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் படமாகியது),

ஒரு இந்தியக் கனவு, 1982 (அதே பெயரில் இவரால் இயக்கப்பட்டுப் படமாகியது),

அசோகவனம், 1983 (அதே பெயரில் சின்னத்திரை நெடுந்தொடராகியது),

நள்ளிரவில் பெற்றோம், 1984,

இருட்டிலே தேடாதீங்க, 1985, (அதே பெயரில் சின்னத்திரை நெடுந்தொடராகியது),

கறுப்பு வியாழக்கிழமை, 1988,

நாற்காலி, 1989, (அதே பெயரில் சின்னத்திரை நெடுந்தொடராகியது),

கிராம ராஜ்யம், 1989,

மனிதன் என்னும் தீவு, 1989,

அன்புக்குப் பஞ்சமில்லை, 1992,


           இவர் பணியாற்றிய மற்ற படைப்புகள்:


புதிய பாதை, (எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ்)

மின்னல் கோலம், (எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ்)

தில்லை நாயகம், (எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ்)

டாக்டருக்கு மருந்து,

கல்யாண சூப்பர் மார்க்கெட், (எம்.என். நம்பியாரின் நாடகக் குழு )

டெல்லி மாமியார் ,(மேஜர் சுந்தரராஜனின் நாடகக் குழு) (பின்னாளில் "கற்பகம் வந்தாச்சு" என்ற பெயரில் படமாகியது),

அவன் பார்த்துப்பான், (மேஜர் சுந்தரராஜனின் நாடகக் குழு)

அப்பாவி, (மேஜர் சுந்தரராஜனின் நாடகக் குழு)

கிள்ளியூர் கனகம், (மனோரமாவின் நாடகக் குழு)

என் வீடு, என் கணவன், என் குழந்தை (மனோரமாவின் நாடகக் குழு) (அதே பெயரில் சின்னத்திரை நெடுந்தொடராகியது)


        தமிழ் நாடக உலகின் முத்திரை படைப்பாளி கோமல் சுவாமிநாதன் 1995 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்  மரணம் அடைந்தார்.

( நிஜநாடக இயக்கத்தின் செயலாளராக நான் இருந்த நேரத்தில் கோமல் அவர்களுடன் கொஞ்சம் தனிப்பட்டு நெருங்கிப் பழகும் வாய்ப்பிருந்தது..அந்த உரிமையில் உண்மையில் தண்ணீர் தண்ணீர் சினிமாவுக்கு சிறந்த திரைக்கதை என தேர்ந்தெடுக்கப் பட்டது தங்களுக்கு உடன்பாடா என்றேன்..அவர் நாசூக்காக பதிலை தவிர்த்துச் சிரித்தார்..பின் உங்கள் கருத்தென்ன என்றார்.நாடகத்தில் தண்ணீர் பிரச்சனையே கடைசி வரை மையக் கருவாக இருந்தது..சினிமாவில் அது சரிதா பிரச்சனையாக திசை மாறிவிட்டது என்றேன்..லேசாக ஒப்புக் கொள்வதுபோலவும் தலையாட்டி விட்டு உரிமையை கொடுத்துவிட்டோம் அதற்குப் பின் அது குறித்து விமர்சிப்பது சரியல்ல என்றார்..தூய வெள்ளை ஆடை உடுத்தி இருந்த அந்த உயர்ந்த மனிதர் அந்தப் பதிலுக்குப்பின் இன்னும் உயர்ந்து தெரிந்தார்..)

Seed card..

 In this invitation card dated 26th January from the Ministry of Defense, Government of India, there is a sentence written in small letters at the bottom, sow this card to grow Amla plant.


What..?  If we plant this card, then Amla tree will grow .. ???  Yes, that's right ...!  India has done amazing things that are hard to imagine, not only at the collective level.


The invitation card for the Republic Day Parade is made of Seed Paper.  This paper is also called Plantable.  This is a biodegradable eco paper in botanical and technical language.  A paper whose elements are naturally absorbed into the elements of the earth.  There is nothing left.  What could be better and more exemplary than this for the preservation of the environment!


This invitation card for the Republic Day parade is buried in a thin layer of moist clay, carefully watered between a little water and sunlight.  As soon as this leaflet will be distributed, sprouts will sprout from this invitation card ... which will make you grow up and increase your health ... I am proud to be a citizen of such a developing country ...


In the nectar festival of freedom, we will bury all our disputes and controversies in the soil of patriotism, pour water of honesty on it and feed the sun of hard work, then the tree of love will grow in us too.


 Jai Bharat ...

 Jai Hind... 🇮🇳


Monday, January 24, 2022

பாடல் விளக்கத்துடன்..

 


(பதிவு பெருசுன்னு கடந்து போனால் அமிர்தத்தை கண்டு கொள்ளாமல் போகிறீர்கள் எனத்தான் சொல்ல வேண்டும்)


கி.பி. 1480-ல் அவர் ஒன்பது கோடிகளுக்கு அதிபதி. 


சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் அவர் ஒன்பது கோடி சொத்துள்ள மிகப் பெரிய பணக்காரரின் மகன். 


கடைசியில் 80 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது கி.பி. 1560-ல் அவர் ஒரு ஓட்டாண்டி.


 நம்ப முடிகிறதா? கணக்குப் போட்டுப் பார்த்தால் இன்று பல லட்சம் கோடிகளுக்கு அதிபதியாக அவர் குலம் வாழ்ந்திருக்கும். 


ஆனால் இன்று பணமில்லை. மங்காத புகழ் இருக்கி றது. இதெல்லாம் இறைவன் திரு விளையாட்டு. 


செல்வம் செல்வம் என்று செருக்குடன் வாழ்ந்த அவரைவிட்டு லட்சுமியானவள் "செல்வோம்... செல்வோம்...' என்று போய்விட்டாள். 


ஆனால் அத்தனை பணமும் போனபின்புதான் அவருக்கு ஞானம் பிறந்தது. 


கையில் ஒரு காசுகூட இல்லாத நிலையில்தான் அவர் மகாலட்சுமியை அழைத்தார். 


அதுவும் எப்படி? அற்புத மான ஸ்ரீராகத்தில் அழைத்தார். சிலர் அப்பாடலை மத்யமாவதி ராகத்திலும் பாடுவர். 


அந்தப் பாடலைப் பாடும்போதே கண்களில் நீர் பெருகும்; மனம் மகிழ்ச்சியில் பொங்கிடும்; நெஞ்சில் ஆனந்தம் தாண்டவமாடும்; மெய் சிலிர்க்கும். 


"பாக்யாத லக்ஷ்மி பாரம்மா- நம்மம்ம நீ சௌ

பாக்யாத லக்ஷ்மி பாரம்மா....'


மகாலட்சுமியை அவர் அழைக்கும் அழகே அழகு. 


"சலங்கை கட்டிய கால்களினால் மெதுவாக அடியெடுத்து வைத்து, அந்த இனிமையான சலங்கை ஒலியால், உன்னை தஞ்சமடைந்து பூஜை செய்யும் பக்தர்களுக்கு தயிரிலிருந்து வரும் நறுமணமான வெண்ணெயைப்போல் வருவாய் தாயே' என்று கெஞ்சுகிறார் அந்த மகான். 


அவருடைய இயற்பெயர் ஸ்ரீனிவாச நாயக். 


அவர் வசித்த ஊரின் நாட்டாண்மையாகத் திகழ்ந்தார் அவர். மக்கள் அவரை செல்வத்தின் பொருட்டு நவகோடி நாராயணசெட்டி என்றும் அழைத்தார்கள்.


அவ்வளவு பெரிய தனவந்தரான அவர் ஒரு கருமி. எச்சில் கையால்கூட காக்கையை விரட்ட மாட்டார் என்பது அவருடைய விஷயத்தில் நிஜம். 


ஸ்ரீனிவாச நாயக்கிற்கு பதினெட்டு வயதாகும்போது திருமணம் நடந்தது. மனைவியின் பெயர் சரஸ்வதி. 


அவள் இவருக்கு நேர் எதிரானவள். தான- தர்மம் என்றால் கொள்ளைப் பிரியம். கடவுள் பக்தி மிகுந்தவள்.


அவர் வாழ்ந்த ஊரில் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் பாண்டுரங்கனாகக் காட்சியளித்தான்.


 பெரிய கோவில். மக்கள் "பாண்டுரங்கா... பாண்டுரங்கா' என்று பக்திப் பரவசத்தில் நாள்தோறும், வீதி தோறும் பஜனைப் பாடல்களைப் பாடிக் கொண்டே போவார்கள். 


ஆனால் ஸ்ரீனிவாச நாயக் கண்டுகொள்ளவே மாட்டார். 


பார்த்தான் பாண்டுரங்கன். ஒரு முதிய ஏழை அந்தணன் உருவில், ஏழு வயதுச் சிறுவனோடு, ஸ்ரீனிவாச நாயக்கின் கடைமுன் வந்து நின்றான் இறைவன். 


""ஐயா... தர்மப் பிரபுவே...''


ஸ்ரீனிவாச நாயக் அந்தப் பிராமணனை திரும்பிக்கூட பார்க்கவில்லை. விடுவானா இறைவன்?


""ஐயா... தர்மப் பிரபுவே... சுவாமி...''


""டேய்! யாருடா நீ?'' அதட்டினார் ஸ்ரீனிவாசன். 


""ஐயா... நான் ஓர் ஏழைப் பிராமணன். இவன் என்னுடைய ஒரே மகன். ஏழு வயதாகிறது. உபநயனம் செய்ய வேண்டும். நீங்கள் உதவி செய்தால் இவனுக்கு பூணூல் போடலாம்.... பிரபு... ஏதாவது கொஞ்சம் பணம் கொடுங்கள்.... சாமி...'' 


""போ... போ... வேறு எங்காவது போய் பிச்சை எடு. என்னிடம் பணமே இல்லை...'' விரட்டினார் ஸ்ரீனிவாச நாயக். எவ்வளவு கெஞ்சிக் கேட்டும் நாயக்கின் மனம் இளகவில்லை. ஆனால் பகவான் அவரை விடுவதாயில்லை.


தினந்தோறும் வந்து, நமக்கு படியளப் பவனே அவரிடம் பிச்சை கேட்டான். நாயக்கும் அலுக்காமல் விரட்டினார். 


ஒருநாள், ""உங்களிடம் யாசகம் வாங் காமல் போகமாட்டேன் பிரபு...'' என்று சொல்லி, இறைவன் நாயக்கின் கடை வாசலிலேயே உட்கார்ந்து விட்டான்.


"இது ஏதடா வம்பாப் போச்சே...' என்று அலுத்துக்கொண்ட ஸ்ரீனிவாச நாயக், கல்லாப் பெட்டியிலிருந்து ஒரு செல்லாக் காசை எடுத்து அந்தணன் மேல் தூக்கி எறிந்தார். ""இந்தா, இதை எடுத்துப் போ. இனிமேல் கடைப்பக்கம் வராதே...'' 


அந்தக் காசைப் பார்த்துவிட்டு, ""பிரபு... இது தேய்ந்து போயிருக்கிறதே... எதற்கும் பிரயோஜனமில்லை. வேறு நல்ல காசு கொடுங்களேன்...'' என்றான் இறைவன். 


ஸ்ரீனிவாச நாயக் யோசித்தார்.


""நல்ல காசா? ஏதாவது பொருள் கொண்டு வந்து என் கடையில் அடமானம் வை... நல்ல காசு தருகிறேன்'' என்றார்.


அந்தணன் அந்தச் சிறுவனை அழைத்துக் கொண்டு நேராக ஸ்ரீனிவாச நாயக்கின் வீட்டிற்குச் சென்றான். 


அங்கே- வெள்ளிக் கிழமையாதலால் துளசி பூஜையை முடித்துவிட்டு ஸ்ரீனிவாச நாயக்கின் மனைவி சரஸ்வதி ஊஞ்சலில் வந்து உட்கார்ந்தாள்.


""பவதி... பிக்ஷாம் தேஹி...''


ஓடோடிச் சென்று வாசலில் பார்த்தாள். பார்த்ததும் காலில் விழுந்து கும்பிட்டாள்.


""என்ன வேண்டும் சுவாமி?''


""அம்மா... நான் ஓர் ஏழை. வயதாகி விட்டது. இவன் என் பையன். இவனுக்கு பூணூல் போட வேண்டும். கையில் பணமில்லை. 


ஒரு கஞ்சனைக் கேட்டேன். அவன் மிகப் பெரிய பணக்காரன். ஆனால் சல்லிக்காசுகூட தரமாட்டேன் என்று என்னை அடிக்காத குறையாகத் துரத்திவிட்டான். அம்மா... 


உன்னைப் பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருக்கிறாய். ஏதாவது உபகாரம் பண்ணம்மா...''


"பணம் நம்மிடம் கிடையாது. அப்படியே இருந்து, தர்மம் செய்தேன் என்று தெரிந்தால் புருஷன் அடித்தே கொன்றுவிடுவான். இவருக்கு நாம் எப்படி உதவுவது?' என்று யோசித்த சரஸ்வதி முடிவில் தன்னுடைய பரிதாபமான நிலையை விளக்கினாள்.


""அட... நீ என்னம்மா... புருஷன் உனக்குக் கொடுத்ததை தர்மம் செய்தால்தானே ஆபத்து? திருமணத்தின்போது உன் பெற்றோர் போட்ட நகைகள் உன்னுடையதுதானே? 


அதைக் கொடுத்தால் அவர் என்ன செய்ய முடியும்?'' என்று அவளை உசுப்பேற்றினான் பிராமணன்.


"அட... உண்மைதானே? நம் வீட்டில் ஏராளமான நகைகளைப் போட்டார்களே எனக்கு? அவை அத்தனையும் என்னுடையவை தானே... அதில் ஒன்றை தர்மம் செய்தால் என்ன?'


சட்டென்று தன்னுடைய வைர மூக்குத்தியைக் கழட்டி அந்த பிராமணனிடம் கொடுத்து விட்டாள் சரஸ்வதி. 


அவளை மனதார வாழ்த்தி விட்டு, அந்தச் சிறுவனுடன் நேரே ஸ்ரீனிவாச நாயக்கின் அடகுக் கடைக்கே வந்தான் அந்த பிராமணன்.


ஸ்ரீனிவாச நாயக்கிற்கோ, மறுபடியும் தொந்தரவு ஆரம்பித்து விட்டதோ என்று தோன்றியது.


""இந்தாரும். இந்த மூக்குத்தியை எடுத்துக் கொண்டு ஏதாவது பணம் கொடும்'' என்று மிரட்டினான் பிராமணன்.


கையில் மூக்குத்தியை வாங்கி பரீட்சித்துப் பார்த்து, "இதை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே..' என்று யோசித்தார் நாயக்.


சிறிது நேரம் கழித்து, ""ஓய் பிராமணரே... இந்த மூக்குத்தி இங்கேயே இருக்கட்டும். இப்போது என்னிடம் காசு இல்லை. நாளை வந்து பணம் வாங்கிக்கொள்...'' என்றார்.


அதை ஒப்புக்கொண்ட அந்தணன் போய்விட்டான்.


உடனே ஸ்ரீனிவாச நாயக் தன் கடையைப் பூட்டிவிட்டு நேரே வீட்டிற்குப் போனார்.


மனைவியைப் பார்த்தபோது அவள் முகத்தில் மூக்குத்தியைக் காணவில்லை.


""சரஸ்வதி... மூக்குத்தி எங்கே? இன்று வெள்ளிக்கிழமை. முகம் மூளியாய் இருக்கலாமா? போய் மூக்குத்தி போட்டுக் கொண்டுவா...''


சரஸ்வதி வெலவெலத்துப் போனாள். "ஐயய்யோ... இப்போது என்ன செய்வது? அந்தப் பிராமணனுக்கு தானம் கொடுத்தேன் என்றால் கொன்று விடுவாரே?' 


கடைசியில் சரஸ்வதி ஒரு முடிவுக்கு வந்தாள். "இந்தத் துஷ்டனிடம் மூர்க்கத்தனமாக அடிபடு வதைவிட சாவதேமேல்...' என்ற முடிவோடு, ஒரு பாத்திரத்தில் விஷத்தைக் கலந்து கையில் வைத்துக்கொண்டு துளசி மாடத்தை வலம் வந்தாள். 


""தாயே துளசி... நான் உன்னிடம் வந்து விடுகிறேனம்மா'' என்று சொல்லி விஷத்தைக் குடிக்க முற்படுகையில்-


விஷப் பாத்திரத்தில் ஏதோ விழும் ஓசை கேட்டது. சரஸ்வதி உள்ளே கைவிட்டுப் பார்த்த போது அவளின் மூக்குத்தி இருந்தது. அவளை ஆனந்தமும், வியப்பும் அணைத்துக் கொண்டது. "என்னைக் காப்பாற்றிவிட்டாய் தாயே' என்று கண்களில் நீர் பெருக விழுந்து கும்பிட்டாள்... பிறகு, கணவனிடம் ஓடோடிச் சென்று, ""இந்தாருங்கள் மூக்குத்தி...'' என்று கொடுத்தாள். 


ஸ்ரீனிவாச நாயக்கிற்கு ஒன்றும் புரியவில்லை. மூக்குத்தியை எடுத்துக்கொண்டு பித்துப் பிடித்தவர்போல மீண்டும் தனது அடகுக் கடைக் குச் சென்றார். கல்லாப் பெட்டியைத் திறந்து, உள்ளே பத்திரமாக வைத்திருந்த மூக்குத்தியைத் தேடினார். 


அங்கே அது இல்லை. கடை முழுவதும் தேடினார். மூக்குத்தி கிடைக்கவில்லை. நாளை அந்த பிராமணன் வந்து, "எனக்கு பணம் வேண்டாம்... என்னுடைய நகையைக் கொடுங் கள்...' என்று கேட்டால் என்ன செய்வது? 


மனைவியினுடைய மூக்குத்தியையா அவனுக்குக் கொடுப்பது? பிரமை பிடித்தது அவனுக்கு. கூடவே பயமும் வந்தது.


மறுநாள் காலை! 


கடை திறந்த சில வினாடிகளிலேயே அந்தக் கிழவன் சிறுவனோடு வந்து விட்டான்.


""ஐயா... பிரபுவே.. நான் கொடுத்த நகைக்கு பணம் தருவதாகச் சொன்னீர்களே. இன்றும் பணம் இல்லாவிட்டால் பரவாயில்லை. என்னுடைய நகையைக் கொடுங்கள். வேறு கடையில் அடமானம் வைத்துக் கொள்கிறேன்...'' என்றான்.


ஸ்ரீனிவாச நாயக்கின் நிலை பரிதாபமானது. செருக்குடன் வாழ்ந்தவர் கிழவனிடம் கெஞ்சி னார்.


 ""ஐயா... மன்னித்து விடுங்கள். வெளியிலிருந்து கொஞ்சம் பணம் வரவேண்டியிருக்கிறது. வந்தவுடன் தருகிறேன். முடிந்தால் மாலை வாருங்களேன். கண்டிப்பாக பணம் தருகிறேன்.''


""சரி... சரி... சாயங்காலமும் என்னை ஏமாற்றி விடாதே. நான் வருவேன்...''


கிழவன் போனபின்பு, தன் கடையில் பணிபுரியும் ஒரு வேலையாளை அனுப்பி, அந்தக் கிழவன் எங்கே போகிறான் என்று கண்காணிக்கச் சொன்னார். 


அந்தக் கிழவனைப் பின்தொடர்ந்து சென்ற வேலையாள் சிறிது நேரம் கழித்து பதை பதைப்புடன் கடைக்கு ஓடி வந்தான்.


""என்னடா... ஏன் இப்படி பயந்தாங்கொள்ளி மாதிரி ஓடி வருகிறாய்? கிழவன் உன்னை அடையாளம் தெரிந்துகொண்டு மிரட்டினானா?''


""சுவாமி... என்னை மன்னித்துவிடுங்கள்... கிழவர் இரண்டு மூன்று தெருக்கள் தாண்டி, பாண்டுரங்கன் கோவிலுக்குச் சென்றார்.... 


நேரே கர்ப்பக் கிரகத்துக்குள் புகுந்தார்... பின்னர் மறைந்து விட்டார்...''


ஸ்ரீனிவாச நாயக் திடுக்கிட்டார். என்ன இது? கடைக்கு வந்த முதியவர் யார்? என்ன அதிசயம் இது.! 


கடையைப் பூட்டிக் கொண்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் நடந்த சம்பவத்தைச் சொன்னார். அவளும் மூக்குத்தியை அந்தக் கிழவருக்கு தானம் தந்ததையும், அவர் வாழ்த்தி விட்டுப் போனதையும் சொன்னாள்.


ஸ்ரீனிவாச நாயக்கிற்கு புரிந்துவிட்டது. கடவுளே தன்னை பரீட்சித்து விட்டதை உணர்ந்தார். 


அப்போது ஓர் அசரீரி பூஜை அறையிலிருந்து கேட்டது. 


"இத்தனை செல்வங்களை வைத்துக்கொண்டு தான தருமம் செய்யாமல் வாழ்கிறாயே? உனக்கு எப்படி நற்கதி கிடைக்கும்?


 போ... உன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் தானம் செய்துவிட்டு புண்ணியம் தேடிக் கொள். 


இனி உன் பெயர் ஸ்ரீனிவாச நாயக் இல்லை. இந்த ஊரின் பெயரான புரந்தரகட என்கிற பெயரால் இனி உன் பெயர் புரந்தரதாசன்.


 பகவானைப் பாடு. நீ நாரதருடைய அம்சம். ஸ்ரீ கிருஷ்ண தேவராயருடைய குல குருவான ஸ்ரீ வியாசராயரை தஞ்சமடைவாயாக. அவர் உனக்கு குரு உபதேசம் செய்வார்....' 


 புரந்தரதாசன்ஸ்ரீ னிவாச நாயக் தன்னுடைய அனைத்து சொத்துகளையும் ஏழை எளிய மக்களுக்கு தானம் செய்தார். 


ஒரு நொடியில் ஒன்பது கோடி ரூபாய் போயிற்று. ஓட்டாண்டியானார். 


தன் மனைவி, மக்களோடு இறைவன் நாமங்களைப் பாடியவாறே ஹம்பி சென்று ஸ்ரீ வியாசராயரை சரணடைந்தார். 


அவர் ஸ்ரீநிவாச நாயக்கின் பிறப் பின் ரகசியத்தைச் சொல்லி அவருக்கு குரு உபதேசம் செய்தார். 


கால்நடையாகவே பாரத தேசத்தை மூன்று முறை வலம் வந்தார் புரந்தரதாசர்.


 சுமார் நான்கு லட்சம் பாடல்களை இறைவன்மீது பாடினார்.


 நம்முடைய திருவையாறு சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு, சிறுவயதில் அவருடைய அன்னை புரந்தரதாசரின் பதங்களையே சொல்லி க்கொடுத்தார். 


ஸ்வர வரிசை என்று சொல்லப்படுகிற "ஸ, ரி, க, ம, ப, த, நீ..' என்கிற ஆரோகண அவரோகணங்களை சங்கீத உலகிற் குத் தந்த பிதாமகர் புரந்தரதாசரே. 


அவருடைய பதங்கள் இன்றும் நம் நாட்டுக் கச்சேரிகளில் பாடப்படுகின்றன. 


அப்படிப்பட்ட மகான் புரந்தர தாசர் கி.பி. 1584-ல் இறைவனோடு இரண்டறக் கலந்தார்...


நன்றி கும்பகோணம் குழு


Baskar Sathya

சில நேரம் ஊசி விழும் சப்தம் பேரிடியாய்...

 ஊசி விழும் சத்தம் கேட்குமா ? 

 சில நேரம் கேட்கும்.


1)ஃபீல்ட் மார்ஷல் மானேக் ஷா ஒரு முறை அகமதாபாத்தில் ஆங்கிலத்தில் பேச துவங்கினார். "குஜராத்தியில் பேசுங்கள்... நீங்கள் குஜராத்தியில் பேசினால் தான் கேட்போம்." என்று கூச்சலிட்டனர் மக்கள். 


 பேச்சை நிறுத்தி விட்டு தீர்க்கமாக மக்களைச் சுற்றிப் பார்த்தவாறே பதிலளித்தார் ஷா: "நண்பர்களே, என் நீண்ட பணிக்காலத்தில், பல போர்கள் புரிந்திருக்கிறேன். 


ராணுவத்தில் உள்ள ஸீக் ரெஜிமெண்ட் வீரர்களிடம் இருந்து பஞ்சாபி மொழியை கற்றிருக்கிறேன்; மராத்தி மொழியை, மராத்தா ரெஜிமெண்ட்டிடம்; மெட்ராஸ் ஸாப்பர்களிடம் தமிழ்; பெங்காலி ஸாப்பர்களிடம் பெங்காலி மொழி; ஏன் ? கூர்க்கா ரெஜிமேன்ட்டிடம் இருந்து நேப்பாளி மொழியைக் கூட கற்றிருக்கிறேன்.


துரதிஷ்டவசமாக,குஜராத்தில் இருந்து ஒரு வீரர் கூட இல்லை, எனக்கு குஜராத்தி மொழி கற்றுத்தர." என்றார்.


தொடர்ந்த நிசப்தத்தில்  ஊசி விழும் சப்தத்தை கேட்டிருக்க முடியும்.


2) ஃபிரான்ஸ் நாட்டுக்கு விமானம் மூலம் வந்திறங்கிய 83 வயது அமெரிக்கர் ராபர்ட் வொய்ட்டிங், கஸ்டம்ஸ் அதிகாரியிடம் தன் பாஸ்போர்ட்டை துழாவி எடுத்துக்காட்ட சற்று நேரம் எடுத்துக்கொண்டார். 


இதுதான் ஃபிரான்ஸ் நாட்டுக்கு முதல் முறையாக வருகிறீர்களா.." என்று 

நக்கலாக கேட்டார் அதிகாரி. 


இல்லை முன்பு வந்திருக்கிறேன்.


அப்படியானால், உங்கள் பாஸ்போர்ட்டை தயாராக எடுத்துவைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும், உங்களுக்கு." என்றார்.


நான் கடைசியாக வந்த பொழுது, எனக்கு பாஸ்போர்ட் காட்டவேண்டிய அவசியம் ஏற்படவில்லை."


சான்ஸே இல்லை.அமெரிக்கர்கள் இங்கு வந்திறங்கும் பொழுது தங்கள் பாஸ்போர்ட்டுகளை காட்டவேண்டும் என்பது எப்பொழுதுமே உள்ள விதி." உறுமினார் அதிகாரி!


சில வினாடிகள் தீர்க்கமாய் அந்த அதிகாரியைப் பார்த்தவாறே, 

அமெரிக்கர் சொன்னார்:


இரண்டாம் உலகப் போரின் போது, உங்கள் நாட்டை விடுவிக்க 1944ஆம் ஆண்டு,  ஜூன் 6ம் தேதி, அதிகாலை 04:40 மணிக்கு ஒமஹா கடற்கரையில் நான் வந்திறங்கிய பொழுது,... என் பாஸ்போர்ட்டை காண்பிக்க, ஒரு ஃப்ரெஞ்சுக்காரர் கூட அங்கில்லை." என்றார்.


தொடர்ந்த நிசப்தத்தில்,ஊசி விழும் சப்தத்தை கேட்டிருக்க முடியும்.


3) இந்திய விடுதலைக்குப் பிறகு பிரதமராய் தீர்மானிக்கப்பட்டிருந்த நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவத் தளபதியைத் தேர்ந்தெடுக்க, ராணுவ உயரதிகாரிகளைக் கூட்டிப் பேசினார்.: 


நமக்கு ராணுவத்தை நிர்வகித்து அனுபவம் இல்லாததால், ஒரு ஆங்கிலேய ராணுவ வீரரையே நம் படைத் தளபதியாக நியமிக்கலாம் என்று நினைக்கிறேன்."


பிரிட்டிஷாரிடம் சேவகம் செய்தே பழக்கப்பட்டிருந்த கூடியிருந்தோர் அனைவரும் ஒத்துக்கொண்டு தலையசைத்தனர். 


ஆனால், நாத்து சிங் ரதோர் எனும் 

ஒரு ராணுவ உயரதிகாரி தனக்கு 

பேச சந்தர்ப்பம் கேட்டார். 


சுயமாய் சிந்திக்கும் இந்தப் போக்கை

கண்டு துணுக்குற்றாலும், 

நேரு பேச அனுமதி அளித்தார்.


சார் நமக்கு நாட்டை ஆளவும்கூட அனுபவம் கிடையாது. நாம் ஏன் ஒரு பிரிட்டிஷ்காரரை, இந்தியப் பிரதம மந்திரியாக நியமிக்கக் கூடாது. ?"


தொடர்ந்த நிசப்தத்தில் ஊசி விழும் சப்தத்தை கேட்டிருக்க முடியும்.!


அரூபமான இத்தாக்குதலில் இருந்து 

சற்று நேரத்தில் சுதாரித்துக் கொண்டு 

நேரு கேட்டார்: 


முதல் ராணுவத் தளபதியாக நீ, ஆகிறாயா?"


இல்லை சார். நம்மிடம் மிகுந்த திறமை வாய்ந்த லெஃப்டினெண்ட் ஜெனரல் கரியப்பா இருக்கிறார்.அவர் இப்பதவிக்கு மிகவும் தகுதியானவர்."


இப்படித்தான் கரியப்பா அவர்கள் நம் முதல் ராணுவத் தளபதியானது வரலாறு!


ஊசிவிழும் சப்தமும் சில நேரம் கேட்கும்.!  


 படித்தது.பிடித்தது..

Sunday, January 23, 2022

வித்தானவர்களை நினைவு கூர்வோம்..

 இன்று ஜனவரி 24


இந்தியாவின் முதல் பெண் அதிகாரி 

சி.பி. முத்தம்மா 

பிறந்த தினம்.

 (24.1.1924).


    இந்தியாவின் உயர் அதிகாரிகளாக ஆவதற்கு ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும்.

    ஆனால் அவற்றில் வெற்றி பெற்றாலும் பெண்கள் அதில் சேர முடியாத நிலை இருந்தது.

   அதை முதலில் உடைத்து வெற்றி பெற்ற பெண் சி. பி. முத்தம்மா கர்நாடகத்தில் பிறந்தவர்.

   அவர் சென்னையில் உள்ள பெண்கள் கிருத்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். சென்னை பிரெசிடென்ஸி கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டப்படிப்பை முடித்தார். கல்லூரிகளில் மூன்றுமுறை தங்கப்பதக்கம் பெற்ற மாணவி.

   இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரியாக 1949ல் 

சி.பி. முத்தம்மா பணியில் சேர்ந்தார்.

   அந்த காலத்தில் வெளியுறவுத் துறையில் உள்ள பெண் அதிகாரி திருமணம் செய்ய வேண்டும் என்றால் அரசின் அனுமதியைப் பெற வேண்டும், திருமணம் வேலையைத் தடுக்கிறது என அரசு கருதினால் அவர் ராஜினாமா செய்துவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான பல விதிகள் இருந்தன.

   அவற்றை எதிர்த்து முத்தம்மா உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.

   வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணய்யர் தனது தீர்ப்பில் “வெளியுறவுத் துறையில் காணப்படும் 8(2)ஆம் விதி பெண்களுக்கெதிரான பாகுபாட்டை வெளிப்படையாகக் காட்டுகிறது என்று கூறினார்.

    மேற்காணும் பாலியல் பாகுபாடு நிறைந்த விதிகள் நீக்கப்பட்டதாக வெளியுறவுத் துறையின் சார்பில் பிரமாணப் பத்திரம் அளிக்கப்பட்டதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

  முத்தம்மாவின் தகுதி பதவி உயர்வுக்கு ஏற்றதாக இருக்கிறதென அறிவித்த அரசு அவரை நெதர்லாந்துக்கான இந்தியத் தூதராக நியமித்தது.

    இந்த வழக்குக்குப் பிறகு ஆணாதிக்க விதிகள் உடனே மாற்றப்பட்டன. 

   இதனால் முத்தம்மா பதவி உயர்வுகளைப் பெற்றார்.

   வெளிநாட்டு தூதர், ஹைகமிஷனர் பதவிகளில் அமர்ந்த முதல் இந்தியப் பெண் ஆனார்.


Saturday, January 22, 2022

படித்து விட்டு...?

 


நீங்கள் பிஜேபிக்கு வோட்டு போடுங்க ; இல்லை 60வருடம் ஏமாற்றி பிழைக்கும் திமுகவுக்கு வோட்டு போடுங்க. அது உங்கள் இஷ்டம் - ஆனா பிஜேபி மோடி ஆதரவாளராக நான் கேட்டு கொள்வது :


1.பிரதமர் காப்பீட்டு திட்டம்( Pradhan Mantri Suraksha Bima Yojana)


வருடம் 12ரூபாய் மட்டுமே உங்கள் வங்கிகணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும். இதனால் எதிர்பாராத விபத்துகளுக்கு 2லட்சம் வரை உங்களுக்கு காப்பீடு கிடைக்கும்.  அதிகம் பயணம் செய்யும் அனைவரும் இதை கட்டாயம் எடுத்து கொள்ளுங்கள். 


2015 புள்ளிவிவரம் கூறும் தகவல்படி - வருடத்திற்கு சுமார் 2,75,000நபர்கள் விபத்துகளில் பெரிய காயங்களுடன் உயிர் தப்புகிறார்கள். இந்தியாவில் ஒவ்வொரு நிமிடமும் 400பேர் சாலை விபத்தால் உயிர் இழக்கிறார்கள். உடனே இதை அரசு தான் காரணம் என்று வழக்கம் போல குறை சொல்வதே புத்தியாக இல்லாமல் கொஞ்சம் பிரச்சனையும் எதார்த்தம் புரிந்து காப்பீட்டை எடுத்து கொள்ளுங்கள்.


(தயவு செய்து உடனே கார்ப்பரேட் எதிர்ப்பு!!! - ஒருதனுக்கு 12 ரூபாய் அப்போ 10கோடி மக்கள் , 100கோடி மக்கள் என்று கிறுக்கன் போல கணக்கு போடாதீர். உலக நாடுகள் அனைத்திலும் இது தான் காப்பீட்டு நடைமுறை. எல்லோருமே உங்களை ஏமாற்றுவது போல ஒரு வியாதி பிடித்திவிட்டது தமிழகத்தில். நீங்கள் சிந்திக்க வேண்டியது: வருடம் 12 ரூபாய் கொடுத்தேனா - 2லட்சம் காப்பீடு - இது உனக்கு லாபமா? இல்லையா? என்று மட்டும் யோசி. அதையும் அரசே கட்டலாமே என்று ஆரம்பித்துவிடாதே.)

------------------------------------------

2.ஓய்வுஊதிய திட்டம் (Atal Pension Yojana)


60 வயது தாண்டி ஒரு தடுமாற்றம் இல்லாத வாழ்வை கிடைக்க மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட ஓய்வூதியம் தேவை. அரசு ஊழியர்கள் ஓய்வுக்கு பின் நிம்மதியாக வாழ வழிசெய்யும் ஓய்வூதியம் என்பது அரசு கொடுப்பது அல்ல - அவர்கள் வருமானத்தில் பிடித்தம் செய்து அவர்களுக்காக உருவாக்கபட்ட பாதுகாப்பு அது.


அது போல அனைவரும் கிடைக்க வழிவகை செய்யும் இந்த திட்டத்தில் கட்டாயம் காய்கறி, மீன் வியாபாரம் செய்யும் சிறு குறு வியாபரிகள் முதல் அனைத்து  - தொழிலாளர்கள் வரை அனைவர் கட்டாயம் செய்ய வேண்டியது நம் கடமை.  மாதம் 168ரூபாய் சேமிப்பில் - ஓய்வு காலத்தில் உங்களுக்கு மாதம் 4000கிடைக்கும் என்றால் அது பாதுகாப்பான திட்டம் தானே. 

-----------------------------------------


3.இறப்பு காப்பீட்டு (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana)


குடும்பத்தில் தலைவராக ஆண் / பெண் யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போங்க - ஆனா எதிர்பாராத மரணம் உங்கள் வீட்டை நட்டாத்தில் நிறுத்திட கூடாது. நல்ல பொறுப்பான குடும்ப தலைவனுக்கு அழகு எது? " குடும்பம் பொருளாதார நிலைதன்மையுடன்(economic stability) இருக்க வேண்டும் - அது குடும்ப தலைவன் இருந்தாலும் இல்லை என்றாலும்". 


அதாவது நீ ஒருவேளை எதிர்பாராமல் இறந்த பின் குடும்பம் பொருளாதார பாதுகாப்பு இல்லாமல் நிற்கும் என்றால் நீ சரியான பொறுப்பான தலைவன் இல்லை. எனவே அப்படி சூழல் வரும் என்றால் ஒரு குறிப்பிட்ட உதவி குடும்பத்திற்கு சேரும் வண்ணம் ஒரு பாதுகாப்பினை உருவாக்கி கொள்.


successfull life அப்டி சொல்றதுக்கு அர்த்தமே  economical balancing mechanism என்று பொருளாதார நிபுணர்கள் கூறுவார். சின்ன சேமிப்பு அதை செய்யும் என்றால் அதை எடுத்து கொள்வதில் என்ன தவறு இருக்கு? 


எல்லாவற்றிற்கும் அரசே செய்ய முடியுமா? 


வருடம் 330 ரூபாய் - எதிர்பாராத மரணம் என்றால் வீட்டுக்கு 2லட்சம் சென்று சேரும். ஒரு படத்திற்கு ஒரு டிக்கெட் செலவு கூட கிடையாது இது.

------------------------------------------------------


4.பிரதம மந்திரி வங்கி கணக்கு (Pradhan Mantri Jan Dhan Yojana)


மேல இதுமே எனக்கு முடியாது ?


சரி அனைவரும் இந்த கணக்கை உருவாக்கி அதில் சம்பளம் வரவு வையுங்கள். பெரிய உதவி அல்ல 1 லட்சம்  வரை ஒரு உதவி கிடைக்கும் எதிர்பாராத விபத்துக்கு. மேலே எதுவும் செய்ய முடியவில்லை என்றால் இதையாது செய்யுங்கள்.


இந்த வங்கி கணக்குக்கு எந்த மினிமம் பேலன்ஸ் தேவை இல்லை. வெறும் கணக்கை ஒழுங்க பயன்படுத்துங்க என்று மட்டும் தான் மோடி கூறுகிறார்.


இந்த மேலே நான் கூறிய நான்கு திட்டமும் பணக்கார வர்க்கத்துக்கோ - நடுத்தர வர்க்கத்துக்கோ அல்ல. அமைப்புசாரா   வேலையாட்கள் என்று கூறப்படும்- கட்டட வேலை முதல் காய்கறி வேலை செய்பவர்கள் வரை அனைவரும் என்பதால் உருவாக்கபட்ட நலத்திட்டம். 


இதை சென்று மக்களிடம் சேர்க்க வேண்டியது படித்தவர்கள் கடமை - இதை ஒத்துழைக்க வேண்டியது மக்கள் கடமை. 


---------------------------------------------------------


நடுத்தர வர்க்கத்தினர் செய்ய வேண்டியது என்ன??? ஒழுங்கா நல்ல முதலீட்டு சிந்தனையை வளர்த்து கொள்ளுங்கள்.


1.Kisan Vikas Patra :


அது என்ன????? அரசு ஊழியர்கள் மற்றும் கொஞ்சம் வருமானம் சேமிக்கும் அளவுக்கு  வருமானம் உள்ளவர் முதலீடு என்ன??? நிலம் , தங்கம்.


நிலம் வாங்கி போடுவேன் - இல்லை தங்கம் வாங்கி போடுவேன் என்று இருப்பது நல்ல முதலீடு கிடையாது. தங்கம் இனியும் நல்ல முதலீடு கிடையாது அதை முதலில் தயவு கூர்ந்து புரிந்து கொள்ளுங்கள். தங்கம் நகை வாங்கி சேர்ப்பதே ஒரு வியாதி, அதை முதலில் விட்டு ஒழியுங்கள். 


இதை கொஞ்சமாது புரிந்து கொள்ளுங்கள்:


10கிராம் தங்கம் விலை வைத்து ஒரு சின்ன கணக்கு யோசிக்கவும்:


1985ல் 10கிராம் தங்கம் விலை - 2130 ருபாய் 

1990ல் 10கிராம் தங்கம் விலை - 3200 ருபாய் 


அதாவது 1985ல் போட்ட முதலீடு 1990ல் ஏறக்குறைய 50% அதிக ரிட்டன் தருகிறது. ஆக நல்ல முதலீடு.


2000ல் தங்கம் விலை - 4400 ருபாய்  (1990-2000 பத்து வருடத்தில் 37% கூடியுள்ளது. ரிட்டன் 37% என்பது நல்ல முதலீடு தான்)

2010ல் தங்கம் விலை - 18,500 ருபாய் (2000-2010 இந்த பத்து வருடத்தில்தான் 320% கூடியுள்ளது. ரிட்டன் 320% என்பது மிக மிக நல்ல முதலீடு.) ஆனால் 


2015ல் தங்கம் விலை - 22,500 ருபாய் (அடுத்த 5  வருடத்தில்தான் 21% கூடியுள்ளது. ரிட்டன் 21% என்பது தங்கத்தை பொறுத்தவரை ரெம்ப நல்ல ரிட்டன் கிடையாது. செய்கூலி , சேதாரம் அது இது என்று பார்த்தால் ஒன்னும் பெரிய லாபமான முதலீட்டாளர்களுக்கு கிடையாது.)


சரி கடந்த கடைசி 5வருடத்தில்????? கொஞ்சம் நீங்களே யோசிக்கவும் அந்த முதலீடு நஷ்டம் தான். 


2011ல் தங்கம் விலை - 28,667 ருபாய் ; இன்று 2017ல் 29408ரூபாய் - ஆக மொத்தம் இந்த 7 வருடத்தில் வெறும் 2.58%தான் ரிட்டன்???? ஆனால் அதில் செய்கூலி சேதாரம் இதுலாம் கொஞ்சம் யோசிக்கவும்... இதுவா நல்ல முதலீடு? நஷ்டம் என்று கண்கூட தெரியவில்லையா ???? இனியும் தங்கம் விலை எப்படியே தான் நீடிக்கும்.


அதற்கு பதிலாக வருடம் 8.7% உத்திரவாதம் தர அரசின் Kisan Vikas Patra முதலீடு செய்யலாமே ????? நல்ல முதலீடு பாதுகாப்பானது தானே. அரசு உத்திரவாதமும் கொடுக்க இதில் ஏன் முதலீடு செய்வது இல்லை மக்கள் அதிகம்? மீச்சுவல் பண்ட ,அரசு பத்திரங்கள் பல நல்ல முதலீடுகள் உண்டு- நல்ல ரிட்டன் கிடைக்கும் முதலீடு செய்யும் பக்குவத்திற்கு வாருங்கள். இன்னும் பழைய காலம் போல தங்கம் , நிலம் என்று இருக்க வேண்டாம்.


நீண்டகால முதலீடாக தொழில் துறைகளில் ஏதாவது கம்பெனி சேர் வாங்கி போடுங்க. அது 15% வரை ரிட்டன் கொடுத்தால் கூட போதும். ரிஸ்க் ????


ரிஸ்க் என்று பார்த்தால் அனைத்திலுமே உண்டு. எனவே உங்களுக்கு தகுந்த முதலீட்டை தேர்வு செய்யும் பொது கொஞ்சமாது நிலம் , தங்கம் தாண்டி வேறு நல்ல முதலீடுகளை தேடவும். முதலீடு அரசுக்கும் , தொழில் துறைக்கும் உதவியாக இருக்க வேண்டும் தவிர முடங்க கூடாது. அது முதலீட்டாளர்கள் உங்களுக்கும் நல்லது- நாட்டுக்கும் நல்லது.

------------------------------------------------


இறுதியாக : 


10வயது கீழ் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு வருடம் 1000 ரூபாய் முதல் 1லட்சம் வரை Sukanya Samriddhi Scheme திட்டத்தில் முதலீடு செய்யுங்கள் என்கிறார் மோடி- அது அந்த பெண் குழந்தைக்கு  9.20% வருடம் ரிட்டன் கிடைக்க அரசு வழி செய்துள்ளது, உறுதியும் அளிக்கிறது. அவள் கல்வி , வேலைவாய்ப்பு , எதிர்காலம் உறுதிபடுத்தபடும். ஒருநாளும் யாருக்கும் அவள் பாரமாக ஆவது இல்லை இந்த விதம் சரியான திட்டமிடல் இருந்தால்.


அரசு ஒரு system கொண்டு வருவது உங்கள் நல்லதுக்கு தான். எப்போ நாம ஒரு குடிமகனாக குறை சொல்ல தகுதி வரும் என்றால் - நாம் அரசின் சரியான முயற்சிக்கு ஆதரவு கொடுக்கும் போது தான். 


எந்நேரமும் எதையாது அரசு இலவசமா கொடுக்கும் நாம வாங்கிகணும் என்ற ஒருவித மன நோய் எப்படியோ நாம் பழகி கொண்டோம் அதை திருத்தவும். இந்தியாவில் அரசுக்கும் மக்களுக்கும் உள்ள தொடர்பு என்றால் அரசு ஏதாவது கொடுக்கும் - மக்கள் வாங்கிக்கணும். ஏன் என்றால் வோட்டு போடுகிறார்கள்!!!!


இன்னொரு முக்கியமான விஷயம்:


தயவு கூர்ந்து புதிய போராளிகளை நம்பாதீர் - எல்லாமே நாசம் என்று தான் அவனுக பேசி திரிவானுக. நல்லதே அவனுகளுக்கு கண்ணில் படாது. அவனுக நோக்கம் மக்களுக்கும் அரசுக்கு பகையை தூண்டிவிடுவது மட்டுமே. 


உங்களுக்கு ஒன்று தெரியுமோ ?????


12ருபாய் எடுத்ததுக்கு- வங்கி மீது வழக்கு போட்டு 8000ரூபாய் வாங்கியது பெருமையாக சொல்லி திரியும் இந்த போராளிகள் - அந்த 12ரூபாய் மூலம் அவனுக்கு 2லட்சம் காப்பீடு அரசு தரும் என்ற நல்ல விஷயத்தை ஏன் மறைக்கிறான் ????? சொல்லாமல் எடுப்பது தவறு தான் அதுக்காக அவன் காரணம் சொல்லியும் காசு செலவு பண்ணி இவன் ஏன் நீதிமன்றம் செல்ல வேண்டும்????? அது தான் நவீன போராளிகள்.


இதுலாம் நல்ல மனிதன் எவனாது செய்வானா???? 


போராளி என்று திரிபவன் 90% பிரிவினைவாதிகள் ; இவனுகளை தூண்டிவிட்டு வருடம் முழுவதும் அரசியல் ஆதாயம் பார்ப்பது நம்ம திமுக. அதுக்கு பக்க துணையாக நிற்பது திக. அது இல்லாமலா 60வருடம் மேல் பல ஆயிரல் கோடி எல்லாம் ஊழல் செய்யும் திமுக இன்னும் ஆட்சியை பிடிக்க முடிகிறது? 


இன்றைய திமுக எண்ணம்  எளியது : அதிமுக ஜெயாவுக்கு பின் வீழ்ச்சி உறுதி - மாற்று என்று பார்த்தால் வேறு 64,000பூத் கமிட்டி போட்டு தேர்தலை சந்திக்க திராணி பிஜேபி உண்டு. அதை இப்போவே முழுசா அழிச்சுட்டா கனிமொழி பேரன் வரை திமுக ஆட்சி நீடிக்கும் என்பது தான் இவர்கள் திட்டம். அதுக்கு வசதியா இந்த போராளிகள். போராளிக்கு பின்னல் நிற்கும் கூட்டம் எல்லாமே நம்ம திக , திமுக அனுப்பி வைக்கும் கூட்டம். இதனால் வேறு கட்சி வளராது என்பது அவன் திட்டம்.


நான் கேட்பது பிஜேபிக்கு வோட்டு போடுங்க போடாதிங்க - அது அல்ல விஷயம் ; அரசியலை தாண்டி மோடி கூறும் அறிவுரைகளை கொஞ்சமாது கேளுங்க. தமிழகத்திற்கு இப்போதைக்கு எந்த தொழில்துறையும் வரமாட்டான். காரணம் அரசு அல்ல - போராளிகள். எப்போ பாரு கார்ப்பரேட் எதிர்ப்பு அரசு எதிர்ப்பு நேரு இருந்ததால் தான் கேரளாவில் எவனும் தொழில் தொடங்க மாட்டான். இப்போ தமிழகமும் அந்த நிலைக்கு செல்கிறது. 


நல்லதை பேசு ; நல்லதை பின்தொடரு ; நாலு நல்ல விஷயம் தினமும் தெரிந்து கொள்; நல்ல விஷயத்தை பரப்பு. அப்போதான் நல்லது நடக்கும். 

எப்போ பாரு நாடு நாசம் , ஊர் நாசம் என்று எதையாது பரப்பிகிட்டே இருப்பது "நானும் போராளி" என்ற ஒரு வியாதி.


மோடி அடிகடி வருத்தம் தெரிவிப்பது "மக்கள் முதலீட்டு முறை - காப்பீட்டு முறை இவைகளில் நல்ல வழிகாட்டப்பட்ட வேண்டும்" என்று. அதன் நியாயமானா நல்ல எண்ணத்தை புரிந்து கொள்ளுங்கள். அதுக்கு மேல உங்க உங்க இஷ்டம்.

Wednesday, January 19, 2022

....னால்..

 தன்னுள் அடைக்கலமான

ஜீவத் துளியினை

உயிரெனக் காக்கும்

தாயென மாறிப் போனால்....


கூட்டில் உயிரைவைத்து

குஞ்சுகளுக்கென

பலகாதம் கடக்கும்

பறவையென மாறிப்போனால்...


இன்னும் இன்னும் என

மிக மிக நெருங்கி

ஓருடலாகத் துடிக்கும்

காதலர்கள் ஆகிப் போனால்..


விட்டு விலகி

விடுதலையாகி

தாமரை இலைத் துளிநீர்

தன்மையடைந்து போனால்..


வேஷம் முற்றும் கலைத்து

ஜனத்திரளில்

இயல்பாய் கலக்கும்

மன்னனாகிப் போனால்..


தானே யாவும்

தானே பிரம்மன் என்னும்

தன்னம்பிக்கை மிக்க

தனியனாகிப் போனால்...


மொத்தத்தில்

தன்னிலை விடுத்து

கூடுவிட்டு கூடுபாயும்

வித்தையறிந்து போனால்..


காணும் யாவும்

கருவாகிப் போகவும்

எழுதும் எல்லாம்

கவியாகிப் போகவும்

நிச்சயம் சாத்தியம் தானே ?

Monday, January 17, 2022

காலச் சூழல்..

 காலச் சூழல்

தலை கீழ் மாற்றம் கொண்டுள்ளது
ஆயினும்
எமது தேர்வுகளில் விருப்பங்களில்
எவ்வித மாற்றமுமில்லை

கலப்படத்தால்
முன்பு
அரிசியில் கல்லைப் பொறுக்குவது
மிக எளிதாயிருந்தது

இப்போது
கல்லில் அரிசி பொறுக்குவதே
மிக எளிதாயிருக்கிறது

ஆயினும் எம் தேவை
அரிசி என்பதில்
எவ்வித மாற்றமுமில்லை

நல்லவைகளில்
முன்பு
தீயவைகளை ஒதுக்குவது
மிக எளிதாய் இருந்தது

இப்போது
தீயவைகளில் நல்லதை எடுப்பதே
மிக எளிதாய் இருக்கிறது

ஆயினும் எம் தேவை
நல்லவையே என்பதில்
எவ்விதக் குழப்பமுமில்லை

ஆம்
எம் விருப்பங்களில் தேர்வுகளில்
எவ்வித மாற்றமுமில்லை என்பதால்

காலச் சூழல்
எப்படித்தான் மாறினும்
எம்முள் எவ்வித மாற்றமுமில்லை


Sunday, January 16, 2022

தவப்புதல்வனே...

 


சாணக்கியத் தனமே

அரசாள  அச்சாணி
எனும் போலி நம்பிக்கையை
மக்கள் மன்றத்தில் சிலர்
பரப்பிக் கொண்டிருந்த காலத்தில்.

இல்லையில்லை
மக்கள் நல மனத்தாலும்
மனிதாபிமானத்தால் கூட
அது சாத்தியம் என
நிரூபித்துக் காட்டியவனே..

கலை கலைக்காகவே
எனும் பழமை வாத வழியில்
பலர் பயணப்பட்டு
விருதுகளும் கேடயங்களும்
பெற்றுக் கொண்டிருந்த காலத்தில்

கலை மக்களுக்காகவே
எனும் கொள்கை வழியில்
திடமாய் இருந்து
ஏழை எளிய மக்களின்
உள்ளம் கவர்ந்த உயர்ந்தவனே

வாழ்ந்தவர்  கோடி
மறைந்தவர் கோடி
மக்களின் மனதில்
நிறைந்தவர் யார் எனும்
கேள்வியை நீயே எழுப்பி

மறைந்து ஆண்டுகள்
நாற்பதை நெருங்கியும்
மக்கள் மனங்களில்
மறையாது நிலைத்து
அது "நான் தான் "என நிரூபிப்பவனே

உன்னை நினைத்திருப்பதே
எங்கள் நலம் எங்கள் பலம்

உன் பிறந்த நாளில்
உன் நினைவுகளில் மூழ்குவதையே
தவமாகக் கொள்கிறோம்
இன்றுபோல் என்றென்றும்
வாழ்க நீ வாழ்க நீ
தமிழகத்தின் தவப்புதல்வனே

மனிதர்கள். ஜாக்கிரதை..

 இந்த காட்சி பார்க்கும் அனைவரின் மனதையும் பதறவைக்கும் . இந்தக் கொடூரமான காணொளியை உடனே மற்ற பக்கங்ளுக்கும் பகிர்ந்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல முயலுங்கள். தெரு நாய்களை அறவே ஒழிக்க வேண்டும் ஒரு தெருவில் பயணித்தால் குறைந்தது 50 நாய்களாவது இருக்கிறது ஒருசில நேரம் நாமே இரவு நேரங்களில் நடந்து சென்றாலும் நமக்கும் இந்த நிலை தான் ஏற்படும்(பங்களாக்களுக்குள் பாதுகாப்பாக அமர்ந்து கொண்டு  தெருநாய்களுக்கு வக்காலத்து வாங்குவோருக்கு இந்த அவலம் நேர வாய்ப்பில்லை) முக நூலில் காணொளியை நேரடியாகப் பதிவிட்டால் வன்முறை காணொளி என பிளாக் செய்ய வாய்ப்புண்டு..


ஆகையால் இந்த விஷயத்தை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் தயங்காமல் சேர் செய்யுங்கள் நன்றி

Saturday, January 15, 2022

வாழ்த்தி மகிழ்வோம்..

 


பிறந்தநாள் வாழ்த்து சொல்லுவோம் நாம், நம் மக்களின் சரித்திரத்தை மாற்றியமைத்த ஒரு பிறந்தநாள் வாழ்த்து சொல்வோம்.


ஜனவரி 15: முல்லைப்பெரியாறு அணையை கட்டிய பென்னிக் குக் பிறந்த தினம்.


ஜான் பென்னி குக் எனும் அற்புத மனிதர் பிறந்த நாள். எத்தியோப்பியாவில் ஆங்கிலேய அரசுக்கு பணி செய்துவிட்டு பொதுப்பணி துறை பொறியியல் வல்லுனராக மதுரையில் பணியாற்றினார். பசியும், வறுமையும் தென்பகுதி மக்களை வாட்டுவதை கண்டார். பலபேர் கொள்ளையடிப்பில் ஈடுபடுவதையும் கண்டார். வெறுமனே வைகை நதியை மட்டும் நம்பி வானம் பார்த்த பூமியாக இருந்த இவற்றை எப்படி பசுமையாக்குவது என யோசித்தார்.


அப்பொழுது தான் அவர் கண்களில்  முல்லைப்பெரியார் நதிபட்டது. மேற்கு நோக்கி பாய்ந்து அரபிக்கடலில் வீணாக கலக்கும் அந்நதியை திசை திருப்பி கிழக்கு நோக்கி பாயவிட்டால் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை முதலிய பகுதிகளை பசுமை போர்த்திய பூமியாக மாற்றிவிடலாம் என உணர்ந்து  களத்தில் இறங்கினார் பென்னி குக். ஏற்கனவே ராமநாதபுரம் ராஜா தன்னுடைய தளபதி முத்து அருளப்ப பிள்ளையிடம் கேட்டு முடியாது என்று

ஒதுக்கப்பட்ட யோசனை அது.


பென்னிகுக் மனம் தளராமல் திட்டம் தீட்டினார். ஜான் ரைவ் என்கிற பொறியியல் வல்லுனருடன் விவாதித்தார். அறுபத்தி இரண்டு லட்சம் அணை கட்ட செலவாகும் என்று அறிக்கை தயாரித்து ஆங்கிலேய அரசிடம் கொடுத்தார்.


இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் இந்தப்பகுதி முழுக்க செழிப்படையும் திட்டம் நிறைவேறினால் உலகத்திலேயே மிக அழகான மகிழ்ச்சி தரும் சுற்றுலா மையமாக இது மாறும் சாத்தியமும் உள்ளது. இதுவே என் கனவு என்று அறிக்கையில் குறிக்கிற அளவுக்கு அவர் மனதெல்லாம் இந்த திட்டம் பொங்கிக்கொண்டு இருந்தது. பல லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறும், வரி வசூல் செய்யலாம் என அவர் சொன்னதும் அனுமதி கொடுத்தது அரசு.


பணிகள் தொடங்கி வேகவேகமாக நடந்து பாதி பணிகள் முடிந்த பொழுது  காட்டாற்று வெள்ளம் எல்லாவற்றையும் அடித்துக்கொண்டு போயிற்று. ஆனால், பென்னி குக்கின் நம்பிக்கையை அது அசைக்கவில்லை. அரசிடம் உதவி கேட்டார். அரசு மறுத்தது.


கப்பலேறி ஊருக்கு போனார். இருக்கிற சொத்துக்களை எல்லாமும் விற்றார். மனைவியின் நகைகள், வீடு எல்லாமும் விற்கப்பட்டது. எந்த அளவுக்கு வறுமை அவரை ஆட்க்கொண்டது என்றால், எப்படி தமிழர்களுக்கு தாலியோ அதுபோல ஆங்கிலேயர்களுக்கு அவர்கள் படுக்கும் கட்டில்... அதையே விற்று செலவுச் செய்கிற அளவுக்கு எதுவுமே இல்லாத நிலைக்கு வந்தார். ஆனாலும் முல்லைப்பெரியாறு அணையை கட்டினார். தொன்னூறு அடி நீளமுள்ள தேக்கு மரங்களை வெட்டிப்போட்டு ரோப்வேக்களை அமைத்தார். பல நூறு பேரின் இறப்பு, காலரா, மலேரியா என்று எத்தனையோ சிக்கல்கள் துரத்திய பொழுதும் மனம்தளராமல் செயல்பட்டார். எட்டு வருட உழைப்பில் உருவானது முல்லை பெரியாறு அணை.  பென்னி குக்கின் நிலை அப்பொழுது எப்படி இருந்திருக்கும் என சொல்லவேண்டாம் 


அவரே சொல்கிற வரிகள் இவை.


இந்த உலகத்தில் இருக்கப்போவது ஒரே முறை, எனக்கு செய்ய கிடைத்த நல்ல

செயலை நான் அலட்சியப்படுத்தவோ, தள்ளிப்போடவோ கூடாது! என்றார்.


2.23 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பை இன்றைக்கு காத்து நிற்கும் முல்லைப்பெரியாறு அணையை கட்டிய அவருக்கு சிலை வைத்து தெய்வமாகவே வழிபடுகின்றனர் அப்பகுதி மக்கள். எத்தனையோ பிள்ளைகள் இங்கிலாந்தில் பிறந்த அவரின் பெயர் தாங்கி அப்பகுதிகளில் வளர்கிறார்கள். அறுபத்தைந்து லட்சம் மக்களின் குடிநீர் தேவை தீர்த்த வள்ளல் அல்லவா அவர்.


தன் சொத்துக்கள் அனைத்தையும் பொது சேவைக்கு பயன்படுத்திய அந்த வள்ளலுக்கு நாமும் பிறந்தநாள் வாழ்த்து சொல்வோம்.இதைத் தொடர்ந்து பகிர்ந்து அனைவரும் அறியச் செய்யலாமே..

Friday, January 14, 2022

பொங்கல் நல்வாழ்த்துகள்.

 


வயலில் உழுதுகொண்டிருந்தார் அந்த விவசாயி.

காளைக்கு கஷ்டம் தெரியக் கூடாதென்பதற்காக

அதனுடன் பேசிக்கொண்டே உழுதார்.


மாடு நீ.. முன்னால போற. மனுஷன் நான்.. பின்னால வர்றேன். பாத்தியா..! இதான் என் தலையெழுத்து. விவாசயத் தொழில்ல நீதான் முன்னாடி. நான் பின்னாடிதான்.

முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு சொன்னார்.


அடடா.. இந்த மனித ஜாதிதான் எவ்வளவு மேலானது

என்று நினைத்து சிலிர்த்துப் போனது காளை.


விவசாயி தொடர்ந்தார்.

நீயும் நானும் இந்த விவசாயத்தில் கூட்டாளி.


அதனால வர்ற விளைச்சல்ல உனக்கு பாதி எனக்கு பாதி.


காளைக்கு தலைச் சுற்றியது. எவ்வளவு நேர்மை..!

பாதிக்குப் பாதி பங்கு தர யாருக்கு மனசுவரும்..!


பாதிப் பாதின்னா எப்படி பங்கு வைக்கலாம்? நீ முன்னால போறதால முன்னால கிடைக்குறது உனக்கு. பின்னால கிடைக்குறது எனக்கு. சரியா? என்றார் விவசாயி.


முன்னால வர்றது எல்லாமே எனக்கா..!

பெருமிதமாய் பார்த்தது காளை.


விதை விதைத்து

நாற்று நட்டு சில காலத்தில் பச்சைப் பசேலென்று மாறியிருந்தது வயல்.

மாட்டுக்கு வாயெல்லாம் எச்சில்.

விவசாயியை பார்த்தது.


முதல்ல வந்த இதெல்லாம் உனக்கு.

இதுல அப்புறமா ஒன்னு வரும்.

அதுமட்டும் எனக்கு.

சரியென்று தலையாட்டியது காளை.


கொஞ்சநாட்களில் நெற்கதிர்கள் குதிரை வால் போல

விளைந்து தரை பார்த்துக் கிடந்தன.


அறுவடை நாள் வந்தது.

முதலில் வந்த வைக்கோல் காளைக்கு.

பின்னர் வந்த நெல் விவசாயிக்கு.


மாடு கோர்ட்டுக்கா போக முடியும்..?

பாகப் பிரிவினையில் அநீதியுள்ளதென்று பரிதாபமாய் பார்த்தது காளை.

கவலைப்படாதே! நெல்லிலும் பங்கு தர்றேன்.

அதிலும் நமக்கு பாதிப் பாதி.

சோகத்துடன் தலையாட்டியது காளை.


நெல்லை உலர வைத்து

அரைத்துப் புடைத்ததும்

உமியும் தவிடும் முன்னால் வந்தது.

அது காளைக்கு.

பின்னால் வந்த முத்து முத்தான அரிசி முழுமையும் மனிதனுக்கு.

இந்த பங்கீட்டிலும் நியாயமில்லை யென்று கண்ணீர் விட்டது காளை.


அழுவாதே. இந்த அரிசியிலும் உனக்கு பாதி எனக்கு பாதி.

.. சரியா? என்றார்

விவசாயி.


அதற்கும் சரியென்று தலையாட்டிய அந்த வாயில்லா ஜீவன்,

அரிசியை நோக்கிச் சென்றது.


பொறு.,,,,அரிசியை சோறாக்கி, அதில் முதலில் வருவது உனக்குதான்.

அடுத்து வருவதுதான் எனக்கு.

சோகத்துடன் தலையாட்டியது காளை.


அரிசியை சோறாக்கி வடித்தபோது

முதலில் வந்த சோற்றுக்கஞ்சி காளைக்கு.

அடுத்து வந்த சோறு மனிதனுக்கு.

காளை முரண்டு பிடித்தது.


இந்த முறை,

முன்னால மனிதனுக்கு

பின்னால மாட்டுக்கு என்று ஒப்பந்தத்தை மாற்றும்படி கெஞ்சியழுதது.


சரியென்று ஏற்றுக்கொண்ட விவசாயி அப்படியே செய்தார்.

பொங்கல் திருவிழா வந்தது.


முதலில் வந்த பொங்கல் மனிதனுக்கு.

அடுத்துவந்த பொங்கல் மாட்டுப்பொங்கல்.. அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள். பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!


படித்தேன்.பகிர்ந்தேன்👍👍

Thursday, January 13, 2022

நல்வாழ்த்துகள்..

 

 அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..

Tuesday, January 11, 2022

கொடி காத்த.......

 இன்று ஜனவரி 11


கொடி காத்த குமரன் நினைவு நாள்.


பிறப்பு:அக்டோபர் 4,1904

மறைவு:ஜனவரி 11,1932


   1904 ஆம் ஆண்டு குமாரசாமி பிறந்தார்.

    இவரின் குடும்பம் ஏழை நெசவாளி குடும்பம். 

     இதனால் குமரனால் 10 வயது வரை தான் கல்வி கற்க முடிந்தது.

     குடும்ப சுமை காரணமாக 10 வயதிலேயே வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டியிருந்தது.

    குமரன் நெசவு செய்து நெய்த துணிகளை வாரம் ஒருமுறை ஈரோடு கொண்டு சென்று ஜவுளி கடை உரிமையாளரிடம் கொடுத்து விட்டு அதற்கு உண்டான கூலியும் , அடுத்து நெய்வதற்கு நூலும் வாங்கி வருவார்.

    1921ஆம் ஆண்டு

திருப்பூரில் இயங்கிய திருப்பூர் தேசபந்து வாலிபர் சங்கத்தில் உறுப்பினராகி தேசப்பணிகளில் ஈடுபட ஆரம்பித்தார் குமரன்.

    இந்நிலையில் தீபாவளி நெருங்கியது. அப்போதெல்லாம் பட்டாசு அந்நியப் பொருள்.

   தேசபந்து வாலிபர் சங்கத்தின் திட்டத்தின் படி குமரன் காலையில் பட்டாசு கடை மறியல் , மாலையில் கள்ளுக்கடை மறியல் என்று செயல்பட்டார்.

   1932ல் காங்கிரஸ் இயக்கம் தடை செய்யப்பட்டது.

   காந்தியடிகள் கைது செய்யப்பட்டிருந்தார்.

   பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் தடை செய்யப்பட்டிருந்தன. 

   சட்ட மறுப்பு இயக்கம் அதனைச் சார்ந்த மறியல் போன்றவைகள் கடுமையான அடக்குமுறைக்கு ஆளாகின.

    பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் அடக்குமுறை தலை விரித்தாடியது. 

   ஆங்கிலேய அரசு அடக்குமுறையை ஏவிவிடவும், அதனை எதிர்த்து மக்களின் போராட்டமும் மேலும் மேலும் வலுவடைந்தது. 

   எல்லா இடங்களைப் போலவே திருப்பூரிலும் காங்கிரஸ் கமிட்டி கலைக்கப்பட்டது, 

   காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் பூட்டி சீலிடப்பட்டது. 

   இந்த தடைகளையெல்லாம் 

மீறி திருப்பூரில் 10-1-1932ல் ஓர் ஊர்வலம் நடத்த முடிவாகியது. 

   தேசபந்து வாலிபர் சங்கத்தினர் முன்னிலையில் இருந்து ஏற்பாடுகளைச் செய்தனர். 

   அந்த ஊர்வலத்துக்கு அவ்வூர் செல்வந்தரும் மிகப் பிரபலமாயிருந்தவரு

மான ஈஸ்வர கவுண்டர் தலைமை ஏற்பது என முடிவாகியது.

    ஊர்வலத்துக்கு முதல் நாள் மக்களிடம் செல்வாக்குள்ள பி.டி.ஆஷர், அவர் மனைவி பத்மாவதி ஆஷர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

   தலைமை வகிப்பதாக தீர்மானிக்கப்பட்டிருந்த ஈஸ்வர கவுண்டர் வரவில்லை.  ஊர்வலத்துக்கு வர அவர் மறுத்து விட்டார்.

   இந்தச் சூழ்நிலையில் தியாகி பி.எஸ்.சுந்தரம் ஊர்வலத்துக்கு தலைமை தாங்கினார். 

   அவரது தலைமையில் குமாரசாமி, இராமன் நாயர், விசுவநாத ஐயர், நாச்சிமுத்து கவுண்டர், சுப்பராயன், நாச்சிமுத்து செட்டியார், பொங்காளி முதலியார், அப்புக்குட்டி எனும் மாணவன், நாராயணன் ஆகியோர் ஊர்வலத்தில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    ஊர்வலம் திருப்பூர் வீதிகளில் தேசபக்த முழக்கங்களோடு சென்று கொண்டிருந்தது. 

    வீரர்கள் இரண்டு இரண்டு பேராக அணிவகுத்துச் சென்றனர். 

   ஊர்வலம் மெல்ல மெல்ல நகர்ந்து போலீஸ் நிலையத்தை நெருங்கியது.

   அப்போது போலீஸ் நிலையத்திலிருந்து இரு உயர் அதிகாரிகள் உட்பட சுமார் முப்பது நாற்பது போலீஸ்காரர்கள் கைகளில் தடியுடன் ஊர்வலத்தில் வந்தவர்கள் மீது பாய்ந்தனர்.

   ஊர்வலத்தில் வந்த தொண்டர்களைப் போல பல மடங்கு அதிகமான போலீசார் அந்த சிறு ஊர்வலத்தில் வந்தவர்களைக் கண் மண் தெரியாமல் அடித்துப் புடைத்தனர். 

   அவர்கள் கைகள் சோர்ந்து ஓயும் வரை அடித்தனர்.

   மண்டைகள் உடைந்தன. கை கால்கள் முறிந்தன. 

   தொண்டர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்து உயிர் பிரியும் நிலையிலும், 

மகாத்மா காந்திக்கு ஜே, 

பாரத மாதாக்கு ஜே என்று முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர்.

   குமாரசாமியின் தலையில் விழுந்த அடியால் மண்டை பிளந்தது. ரத்தம் பீரிட்டு எழுந்து கொட்டியது

   நினைவு இழந்து தரையில் வீழ்ந்து கிடந்த குமாரசாமியைத் தன் பூட்ஸ் கால்களால் போலீசார் உதைத்தனர். சிலர் அவன் உடல் மீது ஏறி மிதித்தனர்.

  அவன் கை கெட்டியாகப் பிடித்திருந்த கொடிக் கம்பை ஒரு போலீஸ்காரர் சிரமத்துடன் பிடித்து இழுத்து வீசி தரையில் எறிந்தார். 

  குமாரசாமியும், ராமன் நாயரும் ரத்தமும் நிணமுமாக தரையோடு தரையாக வீழ்ந்து கிடந்தனர். 

   மண்டையில் அடிபட்ட பி.எஸ்.சுந்தரத்துக்கு காட்சிகள் மட்டும் கண்ணுக்குத் தெரிந்தனவே தவிர காதில் எந்த ஒலியும் கேட்கவில்லை. போலீசார் அடித்த அடியில் அவரது கேட்கும் சக்தி முழுமையாகப் போய்விட்டது தெரிந்தது. அவரது உடலில் கை, கால்கள், இடுப்பு, விலா ஆகியவிடங்களில் மொத்தம் பதினான்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. இந்த நிகழ்ச்சியின் விளைவாக தியாகி பி.எஸ்.சுந்தரம் தன் வாழ்நாள் முழுவதும் உடல் ஊனமுற்றவராக, செவிடராக இருக்க நேர்ந்த கொடுமையும் நடந்தது.

   அடிபட்டு வீழ்ந்த சிலரை மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றனர்.

    மற்றவர்களை அவர்களது உற்றார் உறவினர் எடுத்துச் சென்று விட்டனர்.

   இவ்வளவு அடிபட்ட காந்தியத் தொண்டர்கள் போலீஸ் மீது கல் எறிந்து தாக்கியதாகவும், குழப்பம் விளைவித்ததாகவும், அதனால் போலீஸ் தடியடி நடத்தியதாகவும் வழக்கு பதிவாகியது. 

   சுந்தரம், குமாரசாமி, ராமன் நாயர் ஆகியோர் உடல்களைத் தூக்கி சாமான்களை வீசுவது போல ஒரு வண்டியில் வீசினார்கள். 

   மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட குமரன் மறுநாள் 11.1.1932 அன்று உயிர் நீத்தார்.

  அவரது உடல் அவரது குடும்பத்தினரிடம் தரப்படவில்லை.

   அந்த வீரத் திருமகனின் உடல் ஒரு துணியால் கட்டப்பட்டு மூங்கிலால் தூக்கப்பட்ட ஒரு தூளியில் கிடத்தப்பட்டு தூக்கிச் சென்று அடக்கம் செய்யப்பட்டது. 

   போலீசார் செய்த ரகசிய சவ அடக்கத்தினால்,அது எந்த இடம் என்று தெரிந்து கொள்ள முடியாமல் போனது. 

   ஒரு வீர தேசபக்த இளைஞனின் உடல், அவன் பிறந்த நாட்டில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அடக்கம் செய்யப்பட்டது.

   இத்தகைய வீரர்களின் உழைப்பால் கிடைத்தது தான் இந்த சுதந்திரம்.

   திருப்பூர் குமரன் பற்றி நாமக்கல்லார் பாடியது:


"மனமுவந்து உயிர் கொடுத்த

மானமுள்ள வீரர்கள்

மட்டிலாத துன்பமுற்று

நட்டுவைத்த கொடியிது

தனமிழந்து கனமிழந்து

தாழ்ந்து போக நேரினும்

தாயின் மானம் ஆன இந்த

கொடியை என்றும் தாங்குவோம்."


    திருப்பூர் குமரன் நினைவைப் போற்றுவோம்.


Monday, January 10, 2022

உங்கள் நெஞ்சையும் தொடும்..

 நெஞ்சம் தொட்ட ஒரு பதிவு...


காலையில் எழுந்து எப்பொழுதும் போல அலுவலகம் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தான்  சேகர்.


அவனுடைய மனைவி இன்றும் கணவருக்கு பிடித்த உணவைத் தயார் செய்யனும் என்பதற்காக மிக வேகமாக சமைத்து கொண்டிருந்தாள்..


ஆனால், தினமும் செல்லும் நேரத்தை விட சற்று முன்பாகவே புறப்பட்டான் சேகர்.


இதைப் பார்த்த மனைவி "ஏன் இவ்வளவு சீக்கிரமாக கிளம்புகிறீர்கள்?" 

என்று வினவினாள்...


அலுவலகத்தில் கொஞ்சம் வேலை இருப்பதாக சொல்லிக் கொண்டே கிளம்பினான்...


"நேற்றே சொல்லி இருந்தால் இன்னும் கொஞ்சம் சீக்கிரம் சமைத்திருப்பேனே..

கொஞ்சம் பொறுங்கள் சமையல் முடியப் போகிறது" என்றாள் மனைவி...


"எல்லாவற்றையும் உன்னிடம் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டுமா..? எனக்கு

ஆயிரம் பிரச்னை இருக்கிறது.


"ஒருநாள் சாப்பிடாது போனால் ஒன்றும் செத்து விட மாட்டேன்.  நீ போய் நன்றாகச் சாப்பிடு..!" என்று

சொல்லி விட்டு விருட்டென்று வாகனத்தை எடுத்துச் சென்றான்...


மனைவி ஏதும் சொல்லாமல் உள்ளே சென்று, சமையலை முடித்து இறக்கி வைத்து விட்டுத் தானும் சாப்பிடாமல் துணிகளைத்  துவைக்கச் சென்று விட்டாள்...!


"சேகர்" ஒரு தபால் அலுவலகத்தில் வேலை செய்கிறான்.

அவன் மனைவி ஒரு ஹவுஸ் வைஃப்.


இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்...


வீட்டில் பெற்றோர்கள் சம்மதம் கிடைக்க வில்லை. அதனால்

பெற்றோரிடம் சண்டை போட்டு விட்டு, தனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து வாங்கிக் கொண்டு தனியாக வந்து விட்டான்..!


இருவருக்கும் திருமண ஆகி 20 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.

இது பெரிய மன உளைச்சல் ஆகவே இருந்தது சேகருக்கு.


அலுவலகம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டு இருந்தான் சேகர்.


அலுவலகத்தில் சில வேலைகளை தவறாகச் செய்ததால் மேலதிகாரி சேகரை எல்லோர் முன்னும் ரொம்பத் திட்டி விட்டார்..! அதனை

நினைத்த படியே வீடு வந்து சேர்ந்தான்...


மனைவி ஆவலோடு தான் சமைத்த உணவை எடுத்து வந்து பரிமாறத் துவங்கினாள். 

இவனும் சாப்பிட உட்கார்ந்தான்..


சாப்பிட ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே தட்டை எடுத்துத் தூக்கி சுவர் மீது அடித்தான்..!


அவள் அப்படியே உறைந்து போய் நின்றாள்..!


"உணவில் காரம் எவ்வளவு போட்டு இருக்கிறாய்..

உனக்கு சமைக்க தெரியாதா?" என்று

கத்திப் பேசத் தொடங்கினான்...


உணவு அவ்வளவா காரம் இல்லை. 

ஆனால், அவன் அலுவலகத்தில் நடந்ததை நினைத்து கொண்டே சாப்பிடவும் தான் அது அவ்வளவு காரம் ஆகிவிட்டது..


"உன்னால் ஒரு காரியம் ஒழுங்காகச் செய்யவில்லை. எல்லாம் என் விதி...


உன்னோடு வாழ வேண்டும் என்பதற்காக என் உறவுகளை எல்லாம் தூக்கி எறிந்தேன்!


உன்னால் ஒரு குழந்தை பெற்று எடுக்கும் பாக்கியம் கூட இல்லை.

உன்னைத் திருமணம் செய்து கொள்ளாமலே இருந்திருக்கலாம்.


என் பெற்றோர் பேச்சை அப்பொழுதே கேட்டு இருக்கலாம்.

உன்னால் தான் என் வாழ்க்கை இப்படி இருளாக மாறி விட்டது.


அலுவலகத்திலும் இவ்வளவு ஆண்டு வேலை செய்து உனக்குத் தானே கொட்டுகிறேன். என்ன செய்வது?

காதலித்து விட்டேன் அல்லவா..!


இன்னும் நிறைய சம்பாதித்து கொட்டுகிறேன்..

நன்றாக கொட்டிக்கொள்" என அடுக்கிக் கொண்டே போனான்...


அறை கதவை வேகமாக மூடி விட்டு உள்ளே சென்று விட்டான்...!


மனைவி கண் கலங்கிய படி 'தானும் எல்லோரையும் விட்டு விட்டுத் தானே வந்தேன்' என மனதில் நினைத்துக் கொண்டே கண்ணீர் தரையில் விழுந்த படி வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருந்தாள்.


மனைவியும் சாப்பிடாமல், அப்படியே தரையில் படுத்து உறங்கி விட்டாள்..!


மறுநாள் காலையில் எழுந்து மறுபடி அவளது பணியை செய்ய ஆரம்பித்தாள்...


சேகர் எதுவும் பேசாமல் செய்து வைத்த சாப்பாட்டையும் எடுத்துக் கொள்ளாமல் விருட்டென்று கிளம்பி போய் விட்டான்..!


அலுவலகம் சேர்ந்த பிறகு தனது பணியை ஆரம்பித்தான்...


அப்பொழுது ஒரு வயதான முதியவர் தலையில் ஒரு பழக் கூடையைச் சுமந்த படி, வியர்வை சொட்ட சொட்ட வந்தார் (மதிய நேரம் உச்சி வெயில் வேறு) பழக் கூடையை இறக்கி வைத்து விட்டு அலுவலகத்தின் உள்ளே வந்தார்...!


தனது சட்டை பையில் இருந்த பணத்தை எடுத்து மேசையில் வைத்தார் (பணம் அவரது வேர்வையில் நனைந்து இருந்தது)...


இதைக் கண்ட சேகருக்கு ஒரே ஆச்சரியம்..!


இவ்வளவு வயதான காலத்தில் யாருக்காக இப்படி உழைக்கிறார் என்று? 


அதை மனதில் நினைத்துக் கொண்டே "உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் ஐயா?"

என்று அவரிடம் வினவினான்...


அந்த முதியவர் கடந்த மாதம் பணம் அனுப்பிய ரசீதை காண்பித்து,


"இதே முகவரிக்கு பணம் அனுப்ப வேண்டும்" என்று சொல்லிவிட்டு, அதோடு ஒரு கடிதத்தையும் கொடுத்தார்...


அந்த ரசீதைக் கண்ட சேகருக்கு ஒரே அதிர்ச்சி...!

(அது ஒரு முதியோர் இல்லத்தின் முகவரி)


சேகருக்கு இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது..!


'இது எதற்காக, ஏன் அனுப்புகிறீர்கள்?' என்று கேட்க வேண்டும் என்கிற ஆவல் அவனை பிடித்து கொண்டது...


தயங்கிய படியே,

"ஐயா இதைக் கேட்க கூடாது தான். இருந்தாலும் என் மனம் கேட்க வேண்டும் என்று துடிக்கிறது. உங்களிடம் ஒன்று கேட்கலாமா..?" என்று குரல் தாழ்த்திய

படி கேட்டான்...


அவரும் "சொல்லுங்கள் தம்பி" என்றார்.


"நீங்கள் யாருக்கு பணம் அனுப்புகிறீர்கள்..! எதற்காக...! உங்கள் மனைவிக்காகவா...?" என்றான்...


அந்த முதியவர் ஆச்சரியமாக சேகரை பார்த்தார்..!


சேகருக்கு ஒன்றுமே புரியவில்லை,

'தவறாக கேட்டு விட்டோமோ..?' என்று நெஞ்சம் படபடத்தது..!


"நான் இருக்கும் போது என் மனைவியை அப்படி விட்டு விடுவேனா.. தம்பி?" என்று சற்று கம்பீரமாக அந்த முதியவர் சொன்னார்.


சேகர் அமைதியாக அவர் சொல்வதைக் கேட்க ஆரம்பித்தான்...


முதியவர் சொல்ல ஆரம்பித்தார்...

"நான் இந்த முதியோர் இல்லத்திற்கு கடந்த 10 ஆண்டுகளாக பணம் அனுப்புகிறேன்,


இன்று வரை யாரும் இந்த கேள்வியை கேட்டதில்லை.

முதல் முறையாக நீங்கள் கேட்டது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது!"


என்று சற்று உற்சாகமாக சொல்ல ஆரம்பித்தார்...


"எனக்கு திருமணம் ஆகி 40 ஆண்டுகள் ஆகின்றன. என் மனைவி என்கூட த் தான் இருக்கின்றாள். எங்களுக்குக் குழந்தைகள் இல்லை."


"என் மனைவிக்கு வாய் பேச முடியாது!!

எங்கள் திருமணம் ஒரு சுவாரசியமான நிகழ்வு தம்பி" என்று கூறியவர்


கொஞ்சம் தண்ணீர் கேட்டார் சேகரிடம்...

மிக விரைவாக ஓடி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான் சேகர்...


சேகர் நாற்காலியின் நுனியில் அமர்த்த படி, "உங்களின் திருமணம் எப்படி நடந்தது? உங்கள்

மனைவியை உங்களுக்கு எப்படித் தெரியும்? அதையும்

சொல்லுங்கள் ஐயா..!

எனக்கு ஆவலாக இருக்கிறது" என்று முதியவர் தண்ணீர் குடித்து முடிப்பதற்குள் சொல்லி முடித்தான்...


முதியவர் சற்று சிரித்த படி மேலே சிந்திய நீரை துண்டினால் துடைத்த படி மீண்டும் சொல்ல ஆரம்பித்தார்..!


"என் மனைவியை சிறு வயதிலேயே தெரியும். எங்கள்

வீட்டின் அருகில் தான் குடும்பமாய் இருந்தார்கள்.


அவர் வீட்டில் இவள் ஒரே மகள் தான். அவளுக்கு 10 வயதாக இருந்த பொழுது அவளுடைய தந்தையோடு வெளியே சென்று விட்டு வீடு திரும்பும் வழியில் வாகனம் மோதி அவர் தந்தை இறந்து விட்டார்!!


தன் கண் முன்னே தந்தை இறந்து போனதைக் கண்ட அவளுக்குப் பேச்சு வராமல் போய் விட்டது...


அதன் பிறகு அவளுடைய தாய் பல வீட்டு வேலைகளை செய்து அவளை வளர்த்தார்,

இவளும் வளர்ந்து பெரியவளாகி விட்டாள்...


அவளுடைய குறையை பார்த்த யாருக்கும் அவளின் அன்பு தெரியவில்லை...


அவளுக்கு எல்லோரும் தன்னிடம் பேச வேண்டும் என்கிற ஆசை இருக்கும் ஆனால் யாரும் பேசத்தான் மாட்டார்கள்..!


அவளின் தந்தையின் மரணத்திற்கு பிறகு உறவுகள் எல்லாம் அவரவர் வேலையை பார்க்கச் சென்று விட்டனர்...


திருமண வயது வந்தது. ஆனால் வாய் பேச

முடியாத காரணத்தால் அவளைத் திருமணம் செய்ய யாரும் முன் வரவில்லை...


பிறகு எங்கள் பெற்றோர்கள் பேசி இருவருக்கும் திருமணம் நடந்தது...


காலங்கள் கடந்தது....

எங்களைப் பெற்றவர்கள் எல்லாம் இறந்து விட்டார்கள்..!


எங்களுக்கும் வயது ஆகி விட்டது. 

ஆனால், என் மனைவி ஒரு குழந்தை மாதிரி தம்பி!" என்று சொன்னவர் குரலில் ஒரு தடுமாற்றம்...


(கையில் வைத்து இருந்த துண்டை எடுத்து கண்களை லேசாகத் துடைத்தார்)


(சேகரின் உள்ளத்தில் ஏதோ ஒன்று குத்த ஆரம்பித்தது)


தன்னை நிதானித்து கொண்டு மீண்டும் சொல்ல ஆரம்பித்தார்..


"அவளுக்கு உலகமே நான் மட்டும் தான், என்னைத் தவிர அவளுக்கு வேறு யாரையும் தெரியாது...


ஒரு முறை நான் உடல் நலம் பாதிக்கப் பட்டு படுத்த படுக்கையாக இருந்தேன்..


வேலைக்கு செல்லாமல் கையில் பணம் வேறு இல்லை.


அப்பொழுது மருந்து வாங்க வேண்டும் என்பதற்காக, அவள் அம்மா நினைவாக வைத்து இருந்த ஒரு தங்கக் குண்டு மணியை எனக்காக கடையில் விற்று விட்டாள்!!


பிறகு அந்த பணத்தைக் கொண்டு மருத்துவரிடம் சென்று, 'என் கணவனை எப்படியாவது காப்பாற்றுங்கள்' என்று வாய் பேச முடியாத நிலையிலும், செய்கையாக காண்பித்து மருத்துவரிடம் கெஞ்சி புழுவாக துடித்து போய் விட்டாள்..!


என்று சொன்னவர் கண்கள் இரண்டும் சிவந்து போய் விட்டது....


பிறகு நான் குணமாகி என் வேலையை செய்ய ஆரம்பித்தேன்"


என்று தன்னை திடப்படுத்திக் கொண்டு மீண்டும் தொடர்ந்தார்...


"அப்பொழுது தான் எனக்கு ஒரு சிந்தனை வந்தது...


ஒருவேளை, எனக்கு முன்பு அவள் இறந்து விட்டாள் பரவாயில்லை;

கடைசி வரை அவளை பார்த்து கொண்ட மன நிறைவு இருக்கும்...


ஆனால், அவளுக்கு முன்பே எனக்கு இறப்பு வந்தால், என் மனைவியின் நிலை என்னாகும் என்று..?


அதற்குதான் இந்த பணம். ஒவ்வொரு மாதமும் ஒரு தொகையை அனுப்பி விடுவேன்..


அதில் பாதி அந்த முதியோர் இல்லத்தில் கணவன் இல்லாமல் இருக்கும் மற்றவர்களுக்கும், மீதி பாதி தொகையை என் மனைவிக்காகவும் சேர்த்து வைத்து கொண்டு வருகிறேன்..!


அந்த பணத்தோடு ஒரு கடிதம் கொடுத்தேன் அல்லவா..! அதை திறந்து படித்து பாருங்கள் தம்பி..."

என்றார்.


சேகர் நெஞ்சில் ஒரு உறுத்தல்...


கைகள் நடுங்கிய படி கடிதத்தை பிரித்து பார்த்தான்...! அவன்

கண்கள் இரண்டும் கலங்கிய படி இருந்தது..!


அதில்,


"நானும், என் மனைவியும் நலமாக உள்ளோம்... இந்த

மாதம் என்னால் இயன்ற தொகை அனுப்பி உள்ளேன்.


அடுத்த மாதம் இதே போல் கடிதமும், பணமும் வரவில்லை என்றால்.. நான் இறந்து போய் இருப்பேன்...


நீங்கள் வந்து என் மனைவியை அழைத்து சென்று பத்திரமாக குழந்தை போல் கடைசி வரை பார்த்துக் கொள்ளுங்கள்...

இதுவே என் கடைசி ஆசை.."


..........


இதைப் படித்த சேகருக்கு நெஞ்சில் பாரம் கூடியது கை, கால் நடுங்க ஆரம்பித்தது..


கலங்கிய கண்களோடு அந்த முதியவரைப் பார்த்தான்...


"சரி தம்பி, எனக்கு நேரம் ஆகி விட்டது; அதை அனுப்பி விடுங்கள்... எனக்கு ஒரே ஒரு உதவி செய்ய வேண்டும்" என்றார் அந்த முதியவர்.


"என்ன செய்ய வேண்டும் ஐயா?"

என ஆவலோடு கேட்டான்.


"வெளியில் நான் வியாபாரம் செய்யும் பழக்கூடை இருக்கிறது, அந்த பழக்கூடையை கொஞ்சம் தூக்கி விட முடியுமா?" என்றார்...


நெஞ்சில் ஒரு பெரிய பாரத்தோடு அவன் அமர்ந்து இருந்த அலுவலக கூண்டை விட்டு வெளியே வந்தான்..


வெளியே வந்து பார்த்த சேகருக்கு பெரிய அதிர்ச்சி....!


அந்த முதியவருக்கு இடது கை இல்லை...!


இவ்வளவு நேரம் அவருக்கு கை இல்லாததை சேகர் கவனிக்கவே இல்லை..


அவ்வளவு ஆர்வமாக அவர் சொன்னதை மட்டும் தான் பார்த்து கொண்டு இருந்தான்


கண்கள் கலங்கிய படி அந்த கூடையை தூக்கி அவர் தலையின் மீது வைத்தான்...


அது கொஞ்சம் சுமை அதிகமாகவே இருந்தது.


"மனைவி மீது இவ்வளவு அன்பு வைத்து இருக்கிறீர்கள்..


உங்களுக்கு ஒரு குழந்தையும், கொஞ்சம் சொத்தும் இருந்து இருந்தால் இன்னும் எவ்வளவு நன்றாக இருந்து இருக்கும்?


நீங்கள் உங்கள் மனைவிக்காக இவ்வளவு கஷ்டப்படத் தேவையில்லையே!!" என்று குரலில் ஒரு நடுக்கத்தோடு சொன்னான்...


இதை கேட்ட முதியவர் சற்று சத்தமாய் சிரித்தார்...


"ஆ...ஆ...ஆ... என் மனைவி நம்பி வந்தது என்னைத் தான்...! சொத்தையோ அல்லது பிள்ளையையோ அல்ல.


அவளுக்காக சுமக்கின்ற இந்த சுமையும் ஒரு சுகமே...!"

என்று சொல்லிக் கொண்டே உச்சி வெயிலில் உற்சாகமாக பழக்கூடையை தலையில் வைத்த படி ஒரு கையால் பிடித்து 

கொண்டு நடக்க ஆரம்பித்தார் அந்த முதியவர்...


சேகரின் கண்களில் கலங்கி நின்ற நீர்....!

பெருந்துளியாய்...!

தரையில் விழுந்தது...!


தரையில் விழுந்தது கண்ணீர் துளி மட்டும் அல்ல...!


அவனின் சுபாவமும்...!


*வறுமையில் கணவனை நேசிக்கும் பெண்ணும்*

*முதுமையில் மனைவியை நேசிக்கும் ஆணும் தான்* 


*உலகின் ஆகச் சிறந்த காதல் ஜோடிகள்...*


கொண்டு செல்ல ஒன்றும் இல்லை இவ்வுலகில்..  கொடுத்துச் செல்வோம்


உண்மையான அன்பை......🙏

Sunday, January 9, 2022

Saturday, January 8, 2022

இருப்புக் கணக்கில் மட்டும் இருக்கிறோம்..

 முன்பெல்லாம்

எங்களைத் தூரம் பிரித்திருந்தது
எங்களுக்கும் அதனால்
சந்திப்பின் அருமை புரிந்திருந்தது

முன்பெல்லாம்
தொடர்புச் சாதனங்கள்
எமக்கு எட்டாத உயரத்திலிருந்தன
நாங்களும் அதனால்
சாதனங்களை அதிகம் சாராதிருுந்தோம்

முன்பெல்லாம்
எல்லோரும் சமதளத்தில்
இருப்பதாக உணர்ந்திருந்தோம்
நாங்களும் அதனால்
பரஸ்பர புரிதலில் இருந்தோம்

முன்பெல்லாம்
வசதிக்கான சாதனங்கள்
எங்கள் இடத்தை அடைக்கவில்லை
நாங்களெல்லாம் அதனால்
மிக நெருக்கமாகவே இருந்தோம்

எதனை நினைக்கையிலும்
முன்பெல்லாம் என்கிற நினைவு..

இழந்ததையெல்லாம் மனதில்
சுமை ஏற்றிப் போக

இப்போதெல்லாம் நாங்கள்
மனதால் அன்றைய சுகந்த நினைவுகளைச் சுகித்தபடி  

 உடலால் இன்றைய இருப்புக் கணக்கில் மட்டும்
விடுபடாது இருப்பதுபோலவே  இருக்கிறோம்

Friday, January 7, 2022

ஒதுக்கீடு அரசியல்..

 அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி பிரிவினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு அறிக்கை செல்லும் எனவும், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு பற்றிய அறிவிப்பாணையும் செல்லும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், 10 சதவீதம் இடஒதுக்கீட்டை பெறுவதற்கான தகுதி வரையறை குறித்து மார்ச் 3வது வாரத்தில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மத்திய அரசிற்கு நன்றி தெரிவிக்க மனமில்லாத ஸ்டாலின், ஏதோ தனது கட்சியும் தானும் மேற்கொண்ட பெரிய முயற்சியால் தான் உச்சநீதிமன்றம் மூலமாக இது சாத்தியமானது போல் தன்னையும் தன் கட்சியையும் பாராட்டி கொள்கிறார். இதிலும் பொருளாதார ரீதியில் 10 ஒதுக்கீடு உறுதியை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. அனைத்து பிரிவினருக்கும் பொதுவான முதல்வர் என்ற பெருமைக்கு அவர் சொந்தக்காரராக ஆக முடியாது, 


இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை தயாரித்த அம்பேத்கார் அவர்களே இந்தியாவில் தாழ்த்த பட்ட வகுப்பை சேர்ந்த ஒரு நபர் இந்தியாவின் உயர்ந்த பதவி பெற்று விட்டால் தாழ்த்த பட்டவர்களுக்கான சலுகைகளை விடுவித்து விடலாம் என்ற கூறி உள்ளார் ஆனால் இதை யாரும் கண்டு கொள்வதே இல்லை.  நம் நாட்டில் உள்ள ஒதுக்கீட்டு முறையில் குறைபாடுகள் உண்டு. இட ஒதுக்கீட்டினால் பயனடைந்தவர்கள் குடும்பமே மீண்டும் மீண்டும் பயனடைய கூடிய நிலை உள்ளது. இது தடுக்கப்பட வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு தலைமுறைக்கு மட்டுமே இட ஒதுக்கீடு என்ற நிலை வரவேண்டும். அப்பொழுது தான் அந்த பிரிவில் உள்ள எல்லோரும் பயனடைவர். இல்லை என்றால் பிற்படுத்தபட்ட பிரிவிலும் ஒரு சிலர் மட்டுமே முன்னேற்றம் அடைவர். ஒடுக்கப்பட்டவர்களுக்காக பாடுபடுவதாக சொல்லுபவர்கள் கூட இவர்கள் முன்னேறுவதை விரும்புவதில்லை....(படித்ததும் பகிரத் தோணியது..)

Thursday, January 6, 2022

நல்ல வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்வோம்

நாளை நம் தமிழக அரசு ...

தொற்று பரவலைத் தடுக்கும் நோக்குடனும்

நோய் பரவல் குறித்த விழிப்புணர்வை 

நமக்கு ஏற்படுத்தும் எண்ணத்துடனும்

பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளதை

நாம் அனைவரும் அறிவோம்


இந்த பொதுமுடக்கத்தின் நோக்கத்தை

தெளிவாக அறிந்த  நம்மில் பலர் வீட்டை விட்டு

வெளியேறாமல் இருந்தாலும்......


அறியாமையின் காரணமாகவோ

அலட்சியத்தின் காரணமாகவோ.

பலர் இந்த பொது முடக்கத்தின் நோக்கத்தை

சிதைக்கும் வகையில் வெளியே தேவையின்றி 

அலைவதை காவலர்களின் துண கொண்டுதான்

கட்டுப்படுத்த வேண்டியுள்ளது.


இதற்காக காவலர்கள் அதிகாலை முதல்

மாலை வரை சாலைச் சந்திப்புகளில் நின்று

சிரமப்படுவதை நாம் இதற்கு முந்தைய

பொதுமுடக்கத்தின் போதே அறிந்திருப்போம்


இது போன்ற சமயங்களில் இவர்கள் யாருக்காகவோ வேலைபார்க்கிறார்கள் என எண்ணம் கொள்ளாது நமக்காக

நமது நலனுக்காக அவதியுறும் அவர்களுக்கு

உற்சாகம் தரும்படியாக அவர்களுக்கு ஏற்படும்

சிறு அசௌகரியங்களை நாம் நினைத்தால்

சரி செய்யலாம் ( அதனை அவர்கள்

எதிர்பார்பபதில்லை என்கிற போதிலும் )


நம் பகுதியில்  நம் வீட்டருகே பணியாற்ற வருகிற

காவலருக்கு அவர்கள் கேட்காமலேயே

இருக்கை கொடுத்து உதவலாம்.


பொது முடக்கத்தின் காரணமாக கடைகள்

ஏதும் இருக்க வாய்ப்பில்லை என்பதால்...


குடி தண்ணீர் பாட்டில்களை. கொடுத்து உதவலாம்


முடியுமானால் பதினொரு மணி அளவில்

பிஸ்கெட் அல்லது வேறு நல்ல ஸ்னேக்ஸை

கொடுத்து மகிழலாம்...


நமக்காக அல்லும் பகலும் உழைக்கும்

மக்கள் நலப் பணியாளர்களுக்கு இதுபோன்ற

சூழல்களில் சிறு சிறு கைமாறுகளைச் செய்வதன்  மூலம்

நமது நேசத்தையும் அவர்கள் பால்

நாம் கொண்டுள்ள நன்றியுணர்வையும்

வெளிப்படுத்தலாம்..


அதன் காரணமாகவே அவர்கள் பணி குறித்த

சிறப்பினை எண்ணி எண்ணி

அவர்களே பெருமிதம் கொள்ளச் செய்யலாம்


ஏற்கெனவே சொன்னபடி இதையெல்லாம்

அவர்கள் எதிர்பார்ப்பதில்லை என்றபோதும்

நம் திருப்திக்காகவேணும்....


( இது போன்ற சமயங்களில்  எம் பகுதியில் இதைச்

செய்ததன் மூலம் நானும் எம் தோழர்களும் கொண்ட திருப்தியை

அனைவரும் அடையவேண்டும் என்னும்

நோக்கத்தோடு...அரிமா.வெங்கடசுப்ரமணியன் )


(இதனை தமிழகத்தில் அனைத்துப் பகுதியில்

உள்ளோரும் அறிந்து கடைபிடிக்கும்படிக்கும்படியாக

தங்கள் பக்கங்களில் பகிர்வது கூட ஒரு சேவைதான்)  

வரம் வேண்டா தவமாய்..

 என்மூலம் வந்ததெல்லாம்

என்னால்தான் வந்ததெனும்
எண்ணமில்லை என்பதனால்-என்
எண்ணத்தில் வறட்சியில்லை

போற்றுதலைத் தூற்றுதலை
ஓர்கணக்கில் வைப்பதனால்
வாட்டமுற வழியுமில்லை-சிந்தனைத்
தேக்கமுற வாய்ப்புமில்லை

தேடியோடி அலைதலையே
நாடிமனம் திரிவதனால்
பாடுபொருள் பஞ்சமில்லை-வார்த்தைத்
தேடுகிற துயருமில்லை

உணர்வோடு கருவினையும்
இணக்கமாக இணைப்பதினால்
இலக்கணமும் பகைப்பதில்லை-என்னைக்
கலங்கவிட்டு ரசிப்பதில்லை

வழிகாட்டும் ஒளிவிளக்காய்
எழுத்திருக்க நினைப்பதனால்
அணிதேடி அலைவதில்லை-அணிகளும்
எனைப்பகையாய்  நினைப்பதில்லை

 வரம்வேண்டா தவமாக
தினமெழுத முயல்வதனால்
நிறைவுக்கும் குறைவில்லை-கலைவாணி
அருளுக்கும் குறைவில்லை

Tuesday, January 4, 2022

முதுமை அறிவோம்..

 !! 💖இரண்டாம் குழந்தை பருவம் 💖!! 


வயது கூடக் கூட நம் பெற்றோர்  குழந்தைகளாகி விடுவார்கள். 


முதுமை இன்னொரு குழந்தைப் பருவம். 


சொன்னது மறக்கும். சொன்னதையே திரும்பச்சொல்ல வைக்கும்.


நிறையப் பேச வைக்கும்.

பேசாமல் அடம் பிடிக்கவும் வைக்கும்.


உணவின் மீது பிரியம்/அதீத வெறுப்பு இரண்டும் வரும்.


நோய் கூடும்.

நோய் கூடியதை போலக் காட்டத் தோன்றும்.

நோய் வந்ததை மறைக்கக் கூடத் தோன்றும்.


கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் இந்த முதிர்ந்த குழந்தைகளை.


உங்களை வளர்த்தோரை நீங்கள் வளர்க்க இது ஒரு கிடைக்காத வாய்ப்பு.


அமர்ந்து பழங்கதைகள் பேசுங்கள். பிடித்தவற்றைத் தேடிச் செய்யுங்கள். வாங்கிக் கொடுங்கள்.


நானிருக்கிறேன் என்ற பாதுகாப்பு உணர்வைக் கொடுங்கள். 


எதிர்காலம் அல்லது இறுதிக் காலம் குறித்த பயம் வர விடாதீர்கள்.


எக்காரணம் கொண்டும் யாரிடத்திலும் அவர்களை விட்டுக் கொடுக்காதீர்கள்.


எங்கும் விட்டு விடாதீர்கள்.


எது எப்படியோ இந்தத் தாய் தகப்பன் வழியே தானே நாம் வந்தோம்.


அந்த நன்றி மறவாமை வேண்டும்.


பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் முதிர்ந்த குழந்தைகளை.


காலங்கடந்த பச்சாதாபத்திலும், கண்ணீரிலும் எந்தப் பயனுமில்லை.


காலத்தின் கட்டாயம்


எனக்கு பிடித்தவை

உங்களுக்கும் பிடிக்கும்


இந்த வரிகள் என்னைப் பெற்ற தாய் தந்தை இருவரும் மனம் குளிர அவர்களின்👴👵 


👣பாதங்களில் சமர்ப்பிக்கப்படுகிறது🙇‍♂️(படித்ததில் பிடித்தது..)

Sunday, January 2, 2022

கவிஞனாக சுருக்கு வழி

 விளமதும் மாவும் தேமா

வகையென அமையும் வண்ணம்
இலக்கணக் கவிதை ஒன்று
இலகுவாய்ப் புரியு மாறு
இயற்றிட நானும் நாளும்
பலமுறை முயன்றுப் பார்த்தேன்
பயனிலை தோற்றே வீழ்ந்தேன்

தினம்தினம் இதுபோல் நானும்
தவித்திடும் நிலையைக் கண்டு
மனக்குறைப் போக்கும் வண்ணம்
மகிழ்வது கொள்ளும் வண்ணம்
எனதுயிர் நண்பன் ஓர்நாள்
ஒருவழி எனக்குச் சொன்னான்
வினவிடக் கேட்டு நானே
வியப்பினில் உச்சம் போனேன்

"கரையது உயர்ந்து நன்றாய்
இருபுறம் இருக்க நீரும்
சிறையது பட்டாற் போல
அடங்கியே நடத்தல் போல
வரையரை ஒன்றை நீயும்
வகுத்தபின் வார்த்தை தன்னை
சிறையிட நினைத்தால் போதும்
சிலநொடி கவிக்குப் போதும்

"இதந்தரு மனையின் நீங்கி"
எனவளர் கவிதை தன்னை
சுதந்திரத் தாபம் கூட்டும்
சுடர்கவி பாடல் தன்னை
நிதமொரு முறையே நீயே
நயம்பட படித்தால் போதும்
மதகதைக் கடக்கும் நீராய்
கவியது பாயும் " என்றான்

தினம்தினம் காலை மாலை
திருத்தமாய் பாடல் தன்னை
மனனமே செய்தல் போல
மகிழ்வுடன் சொல்லச் சொல்ல
தனத்தனத் தான தான
எனுமொலி இயல்பாய் என்னுள்
இணக்கமாய் இணைந்து கொள்ள
உடன்கவி பிறக்க லாச்சு

இங்கணம் இப்போ தெல்லாம்
எப்பொருள் குறித்தும் பாட
சங்கடம் கொள்வ தில்லை
சந்தமே முதன்மை யென்னும்
சங்கதி அறிந்த தாலே
சஞ்சல மேதும் இல்லை
இம்முறை முயன்றால் நாளும்
இன்கவி பெறலாம் யாரும்

Saturday, January 1, 2022

தொடர்ந்து எழுதும் பதிவர்களுக்காக..

 


சமபந்திதான் ஆயினும்
ருசியான சத்தான சாத்வீகமான
உணவுதான் ஆயினும்..
சரிசமமாகப் பறி,மாறப்பட்டதே ஆயினும்

அள்ளியபடி பல கைகளும்
துழாவியபடி சில கைகளும்
இருக்கக் காரணம்
நிச்சயம் கைகளில்லை

மாறாக
பசித்த வயிறும்
ஏற்கெனவே
அஜீரணத்தில் அவதியுறும் வயிறும் என்பது
பறிமாறுபவனுக்குப் புரியும்..

எனவே
பறிமாறுபவன் தொடர்ந்து
பறிமாறுவதில் மட்டுமே
கவனம் கொள்கிறான்

நியாயமானதுதான் ஆயினும்
நடுநிலையில் பயன்கருதி எளிமையாகச்
சொல்லப்பட்டதுதான் ஆயினும்

இரசித்துச் பலரும்
கண்டும் காணாதபடிச் சிலரும் 
இருக்கக் காரணம்
நிச்சயம் படைப்பில்லை

மாறாக
பரிசீலித்தேற்கும் மனநிலையும்
ஏற்கெனவே
கொள்கைகளால் நிரம்பிய மனமும் என்பது
படைப்பாளிக்கும் தெரியும்

எனவே
படைப்பாளி தொடர்ந்து
படைப்பதில் மட்டுமே
கவனம் கொள்கிறான்

பதிவுலகில் தொடர்ந்து எழுதும்
நமதருமைப் பதிவர்கள்  போலவே....