Saturday, July 29, 2017

முயற்சியும் வெற்றியும்

அந்தச் சிறு குன்றின் முன்
எதையோ உற்றுப் பார்த்தபடி
நான்கு சிறுவர்கள்
வெகு நேரம் நின்று கொண்டிருந்தார்கள்

நானும் பொறுமை இழந்து
வெகு நேரம் கழித்து
"என்ன பார்க்கிறீர்கள் " என்றேன்

"இங்கிருந்தால் எதிரொலி கேட்கும்
என நண்பர்கள் சொன்னார்கள்
நாங்களும் வெகு நேரம் நிற்கிறோம்
எந்த ஒலியும் கேட்கவில்லை "
என்றார்கள் சலிப்புடன்

"நீங்கள் ஒலி எதுவும் எழுப்பினீர்களா ? "என்றேன்

"இல்லை ஏன் ஒலி எழுப்பினால்தான் கேட்குமா ?"
என ஆச்சரியத்துடன் கேட்டார்கள்

நான் சிரித்துக் கொண்டேன்
எதிரொலி குறித்துச் சொன்னவர்கள்
குரல் கொடுக்கச் சொல்லித் தராதது
ஆச்சரியமாக இருந்தது

"குரல் கொடுத்தால்தான் கேட்கும்
அதுவும் நீங்கள் எதைச் சொல்கிறீர்களோ
எப்படிச் சொல்கிறீர்களோ அப்படித்தான் கேட்கும்
சப்தத்தை திருப்பிவிடத் தெரியுமே ஒழிய
அதற்கென தனியாக குரலில்லை " என்றேன்

அவர்கள் முதலில்
வினோதமான சப்தங்களை எழுப்பினார்கள்
அது திரும்பச் சொல்லச் சொல்ல
புதிது புதிதான நல்ல வார்த்தைகளை
சொல்லத் துவங்கினார்கள்

ஏதோ அறியாத ஒரு அரிய புதிரை
அறிந்த மகிழ்ச்சி அவர்கள் முகத்தில் தெரிந்தது
இனி அவர்கள் வெறுமனே நின்று
எதிரொலியை எதிர்பார்க்கமாட்டார்கள் என அறிய
மகிழ்ச்சியாய் இருந்தது

நான் என் வழியில் நடக்கத் துவங்கினேன்

Thursday, July 27, 2017

எங்கள் அப்துல் "கலாமே '


தமிழில்
இருக் "கலாம் "
வந்திருக் "கலாம் "
போயிருக் "கலாம் "
செய்திருக் "கலாம் "
முடித்திருக் "கலாம் "
நினைத்திருக் "கலாம் "

இப்படி நூறு வார்த்தைகள் உண்டு
ஆயினும்
இவைகள் அனைத்தும்
தெளிவற்றவை
உறுதியற்றவை
நேர்மறைத் தன்மையற்றவை

ஆயினும்
தமிழுக்கு
தமிழனுக்கு
இந்தியனுக்கு

உறுதியை உறுதி செய்வதாய்
நேர்மறைத்தன்மை ஊட்டுவதாய்
இளைஞர்கள் நரம்புகளை முறுக்கேற்றுவதாய்
ஒளிகூட்டுவதாய்
வழிகாட்டுவதாய்

ஒரே ஒரு "கலாமாய் " வந்தவரே
அப்துல் "கலாமாய் " ஒளிர்ந்தவரே

இந்த நூற்றாண்டில்
இந்தியனின்  உன்னத உயர்வுக்கு
காரணமாய இருந்தவரே
தொடர்ந்து இருப்பவரே

இன்னும் சிலகாலம்
இருந்து வழிகாட்டியாய்
இருந்திருக் "கலாம் "என
இந்தியரெல்லாம்
கண்ணீர்விடவைத்து....

அந்தப் பொறாமைப் பிடித்த காலன்
தன் கோரமுகத்தை
அழிக்கும் புத்தியை
உங்கள் விசயத்திலும்
காட்டிவிட்டானே  "பாவி "

அந்தக் காலனை
முன்னே வரவைத்து
காலால் எட்டி உதைத்து
காலம் வென்றவர்கள் பட்டியலில்
முண்டாசுக் கவிஞர் வரிசையில்
எங்கள் அப்துல் "கலாமே '
நீங்களும் சேர்ந்துவிட்ட இரகசியம்
அறிய மாட்டான் அந்த அப் "பாவி "

விழித்து இருக்க
வருவதே கனவென
புதிய வேதம் சொன்னவரே

நீங்கள் ஒளிகூட்டிக் கொடுத்த
தீபமதைக் கையிலேந்தி
புதிய உலகை நிச்சயம் படைப்போம்

இறுதி மூச்சு வரை
ஓயாது உழைத்த பெருந்தகையே

இனியேனும் சிறிது  ஓய்வெடுப்பீர்

நீங்கள் காட்டிய வழியில்
வீறு போடத் துடித்திருக்கும்
இளைஞர் படைதனைக் கண்டு

இனியேனும் இரசித்து மகிழ்ந்து
சொர்க்கத்தில் சிறிது ஓய்வெடுப்பீர் 

Tuesday, July 25, 2017

காற்று வாங்கப் போனால் ....

காற்று வாங்கப் போனால்
கவிதை வாங்கி வரலாம்-இந்தக்
கூற்று மெத்த நிஜமே-இதை
உணர்ந்து தெளிந்தால் நலமே

இல்லந் தன்னில் அனலாய்
எரித்துக்  கொல்லும் தனிமை-தனித்துச்
செல்லும் போது நெஞ்சில்-தானே
பெருக்கித்  தருமே இனிமை

வீட்டுச் சுவற்றில் எங்கும்
ஒட்டி வைத்தச் செய்தி-நமக்கு
நாட்டு நடப்பைச் சொல்லும்-அதனால்
கருவும் தானே சுரக்கும்

மெல்ல விரியும் கதிர்கள்
மலர்ந்து சிரிக்கும் மலர்கள்-காணும்
உள்ளம் நிறைத்துப் போக-கவிதை
ஊற்று பெருகும் தானே

உள்ளம் அதனில்  உடலில்
உடனே  சக்திக்  கூட்டும்  -எளிய
நல்லப்  பயிற்சி என்றால் --அது
நடக்கும் பயிற்சித் தானே

  எனவே நாளும்----

"காற்று வாங்கப் போனேன்
கவிதை வாங்கி வந்தேன் " -இந்தக்
கூற்றை நினைவில் கொண்டே    -நாமும்
காற்று  வாங்கப் போவோம்  

Friday, July 21, 2017

உனக்கும் வருமடி "வளர்மதி "ஆப்பு...

அண்ணே!
ஒரு சின்ன டவுட் அண்ணே
சமூகத்தைக் கெடுப்பது என்றால்
சமூக  அமைதியைக் கெடுப்பது
என்றால் என்ன அண்ணே ?

தம்பி
சமூகத்துக்கு எது எது
தேவையற்றதோ
எதை எதைச் செய்தால்
அது
இன்னும் நாசமாகுமோ
அதையெல்லாம் செய்வது
சமூகத்தைக் கெடுப்பது

என்ன செய்தாலும்
பொறுத்துக் கொண்டு
ஸ்மரணையற்றுக் கிடக்கும்
சமூகத்தைத் தட்டியெழுப்ப முயன்றால்
அது சமூக அமைதியைக் கெடுப்பது

சமூகத்தைக் கெடுக்க
உறுதுணையாய் இருந்தால்
சம்பள உயர்வு இரண்டு பங்கு
நிச்சயம் உண்டு

மாறாக
அதற்கு எதிராக
ஏதேனும் பிரச்சனை செய்தால்
தண்டனை என்பது
நிச்சயம் உண்டு

அண்ணே
அப்ப இந்த ஜன நாயகம்
மக்கள் உரிமை
அப்படி இப்படிச் சொல்றதெல்லாம்
என்ன அண்ணே

போடா மண்டு
எந்த ஊரில் இருந்துகிட்டு
என்ன என்னவோ எல்லாம்
உளறிக்கிட்டு

உன் வீட்டுக்கிட்டயே
கடையைத் திறந்தாச்சு
போய் ஒரு ஆஃப் அடிச்சிட்டு
பேசாமத் தூங்கு

இல்லாட்டி
உனக்கும் வருமடி
"வளர்மதி "ஆப்பு

Thursday, July 20, 2017

கமல் சார்....

கமல் சார்
இப்பத்தான் தெரிஞ்சது
நீங்க ஒரு பெண்ணை
அவ விருப்பத்துக்கு மாறா
கடத்திட்டுப் போய்
கொடைக்கானலிலே
மறைச்சு வச்சது

அதுக்கு ஆதாரம் தேடி
இப்பத்தான்
அந்தக் குகைக்கு
விசாரணைக் குழு போயிருக்கு

(இதில் தப்புவது கஸ்டம்
ஏன்னா அந்தக் குகைக்குப் பேரே
இப்ப குணா குகைதான் எப்புடீ )

அப்புறம் நீங்க
பரமக்குடி பார்ப்பானாமே
அது கூட
இப்பத்தான் தெரிஞ்சது

(இதிலும் தப்புவது மிக மிக கஸ்டம்
நீங்க படிச்ச ஸ்கூலில் இருந்து
ஆதாரத்தைத் திரட்டிட்டோம் )

ஏன்னா
திராவிடம் ஆரிய மாயையில
சிக்கிடப் பூடாது இல்ல

இன்னும்
நிறைய ஆதாரம் இருக்கு
அவசியமானா அப்ப  அப்ப
வெளியிடுவோம்

தெளிவாய்ச் சொல்லிடறோம்
நாங்க சினிமா எடுக்க
உங்கப் பக்கம் வரலை

நாங்க என்னவோ அரசியல்ல
படம் காட்டித் திரிவோம்
அதுக்கு நீங்க வராதீங்க

அதுதான் இருவருக்கும் நல்லது
புரியுதா ?
 

Tuesday, July 18, 2017

தமிழனுக்கே உரியது என உலக அங்கீகாரம் பெறுவோம்...

பணம் பத்தும் செய்யும்
இது பழைய மொழி
பதினொன்று செய்வது
"அன்பே வா "காலம்
எதையும் செய்யும் என்பது
"சசியின்" காலம்
இப்படிச் சொல்லிப் பெருமை கொள்வோம்
-----------
பணத்தைக் கொண்டு
எதையும் செய்யலாம் எனச்
சமூகச் சூழல் ஆன பின்பு

எதையும் செய்து
பணம் சம்பாதிக்கலாம் என்பது
இன்றைய தர்மம்
இப்படிப் பேசிச் சமாதானம் கொள்வோம்
--------------

பணம் பாதாளம் வரை
பாயும் எனில்
பக்கம் இருக்கிற
மாநிலச்சிறைக்குள்
பாய்வதில் என்ன ஆச்சரியம் ?
இப்படிக் கேட்டு எதிரியை மடக்குவோம்
---------------

விலையில்லா பொருட்கள் கொடுத்து
நம் வாயடைத்து
அரசுப்பணிகள்
அனைத்திற்கும்
விலை வைத்தது ராஜ தந்திரம்
இப்படிச் சொல்லிப் பெருமை கொள்வோம்
----------------

தர்மம் நியாயம்
நீதி சட்டம் அனைத்தையும்
சந்தைப்படுத்தியது
அரசியல் சாகசம்
இப்படிச் சொல்லிப் பெருமிதம் கொள்வோம்
--------------------
மறக்காது
சாக்கடை அரசியலும்
அதனைச் சகிக்கும் மனப்பாங்கும்
தமிழனுக்கே உரியது என
உலக அங்கீகாரம் பெறுவோம்
மீசையை முறுக்கிக்  கர்வமும் கொள்வோம்

Monday, July 17, 2017

ஒரு நீர்க்குமிழியே கூட....

பிரிவுத் துயரை
அனுபவித்து அறிய
பிரிய வேண்டியதுதான்
கட்டாயம் என்பதில்லை

அவ்வப்போது
கடந்து செல்ல நேரும்
புகைவண்டி நிலையமே கூடப்
போதுமானதாய் இருக்கிறது

வலியின் வலுவினை
நோய்வாய்ப்பட்டே
அறிய வேண்டியதுதான்
அவசியம் என்பதில்லை

அவ்வப்போது
ஆறுதல் சொல்லச் சென்றுவரும்
மருத்துவமனையே கூடப்
அதனை உணர்த்திவிடுகிறது

வாழ்வின் முடிவினைப்
புரிந்து கொள்ள
இறந்துதான் ஆகவேண்டும்
என  அவசியமில்லை

அவ்வப்போது
தவிர்க்க இயலாது சென்றுவரும்
சாவு வீடுகளே கூடப்
போதுமானதாய் இருக்கிறது

உலக வாழ்வின் நிலையாமை
குறித்துத் தெளிய
 நூறு  நூல்கள்
வேண்டும் என்பதில்லை

வண்ண்ங்களைப் பிரதிபலித்து
மயக்கித் தெறிக்கும்
 மிகச் சிறு நீர்க்குமிழியே  கூட
போதுமென்றாகிப் போகிறது