Wednesday, May 30, 2018

பிரசவ சங்கல்பம்

தன்னைப் பாதிக்கிற
ஒவவொரு நிகழ்வும்
ஒவவொரு உணர்வும்
கருவாகி
அவனுள் வளர்ந்து
கவியாக வரும் வரை
கவிஞன் படும் பிரவச அவஸ்தை
அவன் மட்டுமே அறிந்தது

ஆயினும்
கருவானது கவியாகி
கால் கொண்டு நடக்கையில்
அது தரும் அவஸ்தை
அது கூட அவன் மட்டுமே அறிந்தது

இளைஞர்களை கொள்ளை கொண்ட
'இழந்த காதலை'
இயற்றிய அவனே
மறந்து போன நிலையில்...

கவிஞனின் மனைவி ஒரு நாள் கேட்டாள்
'யார் அந்த அழகு சுந்தரி
இப்பொது கூட விலகி கொள்கிறேன்
இடைஞ்சலாக இருக்க மாட்டேன்' என
கண் கசக்கிப் போனாள்
இந்தப் பிரச்சனை ஒயவே
ஆறு மாதங்கள் ஆகிப்போனது

'நண்பனின் நயவஞ்சகம்'
கவிதை வெளிவந்த பின்னே
கவிஞனின் நெருங்கிய நண்பன்
தொடர்பு எல்லையை விட்டு
தொலைந்தே போனான்

அதற்கான காரணம்
இதுவரை
கவிஞனுக்கு விளங்கவே இல்லை

'சம்பந்திகளின் தர்பார்'
கவிதைக்கு பின்னே
மாப்பிள்ளை முகம் கொடுதது பேசுவதே இல்லை

'தவறினை நேரடியாகச் சொல்லியிருக்கலாம்
கவிதையாக்கி
அசிங்கப் படுத்தியிருக்க வெண்டாம்' என
சொல்லி போன சம்பந்தி
கவிஞனின் வீட்டுப் பக்கம்
இன்று வரை வரவே இல்லை

முத்தைக் கொண்டு
கடற் பரப்பைக் கூட
அளந்து அறியக் கூடும்
படைப்பைக் கொண்டு
படைப்பாளியை அறியக் கூடுமோ?

கவிதைக்குள் கவிஞனைத் தேடினால்
கவிதைகள் நீர்த்துப் போகும்

கவிஞனுக்குள் கவிதையைத் தேடினால்
'தங்க முட்டை வாத்தே' மிஞ்சும்

ஆனாலும் என்ன.....
கவிஞனை பாதிக்கும்
நிகழ்வுகளும் உணர்வுகளும்
தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன
கவிதைகள் பிறந்து கொண்டுதான் இருக்கின்றன

Saturday, May 26, 2018

கால எல்லைகளை கடக்கத் தெரிந்தால்...

கால எல்லைகளை
கடக்கத் தெரிந்தால்
இணக்கமாய் மனத்துள்
நினைக்க முடிந்தால்
புரியாத புதிர்கள்
புரிந்து போகுமோ ?
குழப்பிய நிகழ்வுகள்
சீராகிப் போகுமோ ?

கவிஞராக இல்லாது
வணிகராக இருந்தவர்
ஒருசிறு அதிர்வினில்
பெருங்கவிஞர் ஆவது
எங்ஙனம் சாத்தியம் ?

முத்தான கவிதை
என்பது கூட
நிச்சயமாய் சாத்தியம்
"முத்தைத்தரு பத்தித் திரு நகை.."
எங்ஙனம் சாத்தியம்  ?

முருகனடியாரின்
கதைகேட்டு நானும்
குழம்பித் தவித்ததுண்டு
நம்பாது கதையென்று
நாளும் நினைத்ததுண்டு

ஒரு நாள்..
கைபேசி மாற்றாது
"சிம்"மதனை மட்டுமே
சில நேரம் மாற்றிவிட
அலைபேசியின் உள்ளடக்கம்
அடியோடு மாறிவிட
புதிருக்குத் தெரிந்தது புதிய வழி
எனக்குள் புகுந்தது புதிய ஒளி

உடல் உருவம் மாற்றாது
அங்ஙனமே இருக்கவிட்டு
அறிவுதனை மட்டுமே
அடியோடு மாற்றுகிற
அதிசயங்கள் ஏதேனும்
நடந்திருக்கச் சாத்தியமா ?
பட்டினத்தாரும் அதுபோல
மாறியிருக்கச் சாத்தியமா ?

Friday, May 25, 2018

அமைதியில் நிலைப்போம்..

மன அமைதியை இரசிப்போம்
மன அமைதியில் இலயிப்போம்
மன அமைதியில் நிலைப்போம்

மன அமைதியே பேரானந்தத்தின்  ஊற்று
மன அமைதியே கலைகளுக்கு ஆசான்
மன அமைதியே சக்திக்கு ஆதார மையம்

பரந்து விரிந்த புல்வெளி
பனிபடந்த மலைச் சிகரம்
சலசலத்து ஓடும் சிற்றோடை
ஆரவாரமற்ற தெய்வ சன்னதி
மழலையின் மயக்கும் சிரிப்பு ...

இன்ன பிற  எல்லாம்
அமைதியின்
உற்பத்திச் சாலைகள் இல்லை

அமைதியின்
 சுகம்காட்டும்
அற்புத ஆதாரமையங்கள்

ஆதாரமையங்கள்  வழி
நம் மன இரசிப்பைத் துவங்குவோம்

மனம் அமைதியை இரசித்தல்
 வெறும் துவக்கமேஎன அறிந்தபடி...

மனம் அமைதியில் இலயித்தல்
ஒரு  தொடர்ச்சியேஎன உணர்ந்தபடி..

மனம் அமைதியில் நிலைத்தேலே
 முதிர்ச்சி எனத்  தெளிந்தபடி ....

Thursday, May 24, 2018

ஆலையில்லா ஊரில்...

அவசரத்தில் போகிறப்  போக்கில்
எதிர்ப்படும் நண்பனை
விசாரித்துப்போகும்
 "மினிச் சுகத்தை "
"டுவீட்டுகளிலும்

அவசியமாகத்  தவிர்க்க முடியாதுக்
காத்திருக்கும் தருணங்களில்
சந்தித்த நண்பனுடன்
உரையாடும்
 "தனிச் சுகத்தை "
"முக நூலிலும் "

விடுமுறை நாட்களில்
ஊர்க்கோடிப்  பாலத்தில் அமர்ந்து
சாவகாசமாகப் பேசும்
 "அற்புதச் சுகத்தை"
"பதிவுப் பக்கங்களிலும் "

அனுபவித்தபடி என்னை நான்
ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்

என்ன செய்வது
கடமைச் சுமை அழுத்தக்
கூன் விழுந்த மனத்துடன்
கட்டிடக்  காட்டுக்குள்
அன்றாடம் அலைந்து திரிந்துத்   ...
தன்  சுயம் தொலைப்பவன் ...

முழு நிலவின் அழகையும்
மனதைக் குளிர்விக்கும்
அந்தப் பனிப் பொழிவையும்

குளிரூட்டப்பட்ட திரையரங்குகளில்
மெய் நிகர்க்  காட்சிகளைக் கண்டு  தானே
" மெய்மறக்க  " முடியும் 

Wednesday, May 23, 2018

நம் இணைய தளத்தின் பெருமையை....

எந்த ஒரு கட்சியின்  தலைவனாயினும்
எந்த ஒரு இயக்கத்தின் தலைவனாயினும்
தான் முன்னெடுத்துச் செல்லும்  போராட்டத்திற்கு
முன்  நிற்கவும்  வேண்டும்

 வெற்றியோ தோல்வியோ அதன் முழு
நிகழ்வுகளுக்கும் பொறுப்பு ஏற்கவும்  வேண்டும்

மாறாக கொள்ளு  என்றால் வாயை த் திறந்து
கடிவாளம் என்றால்  வாயை மூடும்
கெட்டிக்கார குதிரை போல

வெற்றி என்றால் தோளை நிமிர்த்துவதும்
தோல்வி என்றால் ஓடி ஒளிவதும் நிச்சயம்
நல்ல தலைவனுக்கு   அழகில்லை

அதிலும் குறிப்பாக தங்கள் உணர்ச்சிகரமான
பேச்சில்  மயங்கி  தன்  சுக துக்கங்களை  மறந்து
களத்தில் நின்று பேராடுபவர்கள் பாதிக்கப்படுகையில்
நிச்சயம் கூடுதல் பொறுப்பெடுக்கவே வேண்டும்

அரசும் மக்களின் அதிருப்தி தலைகாட்டும் போதே
அதுதொடர்பாக கவனம் கொள்ளாது அலட்சிய
மனோபாவம் கொள்வதும் ,பிரச்சனைகள் குறித்து
கவனம் செலுத்தாது  அதைத் தலைமை தாங்கித்
தொடர் பவர்களை வேறு வேறு  வண்ணங்கள் பூசி
கொச்சைப்படுத்த முயல்வது நிச்சயம்  உச்சக்கட்ட
அநாகரிகம்

இதில் மூன்றாவதாக இணைய தள போராளிகள்
தொலைக்காட்சி விவாத விற்பன்னர்கள் வேறு

எரிகிற கொள்ளியில் எங்கோ
 சுகமாய் இருந்து  கொண்டு எண்ணெய் வார்த்தபடி ..

தம் எழுத்தும் பேச்சும் பிரச்சனைகளை இன்னும்
அதிகரிக்கச் செய்யுமே தவிர
நிச்சயம் குறைக்கப்போவதில்லை
எனத்  தெளிவாகத் தெரிந்தும்  விதம் விதமாய்
எழுதியபடி பேசியபடி ... பகிர்ந்தபடி

முன்பும் எப்போதும் பிரச்சனைகளும்  போராட்டங்களும்
அரசின் அலட்சியப்போக்கும் இல்லாமல் இல்லை
இருந்தது

பற்றிய நெருப்பை அணையவிடாதும்  தொடர்ந்து
பரவ விடும் காற்றினைப்போல ஊடகங்கள்
இப்போதைப்  போல அப்போது இல்லை

எந்த ஒரு பிரச்சனைக்கும் தன்னுடைய கருத்தை
உலகமே எதிர்பார்த்திருக்கிற அதீத மனோ நிலையில்
அன்றைய தனி மனிதர்களும் இல்லை

முன்னிருவர் திரும்ப முடியாத அளவு  வெகு தூரம்
மோசமான நிலைக்கு வந்து விட்டனர்
அதன் விளைவுகளை அவர்கள் நிச்சயம் அறுவடை
செய்வர் .பட்டுத் திருந்தட்டும் அவர்கள்

அதைப்  போல்  தொலைக்காட்சி மற்றும்
செய்தித் தாள்களின் மீதான நமபகத் தன்மையும்
படிப்படியாய்க் குறைய ...

நம் இணையத்  தொடர்பில் வெளியாகும்
செய்திகளைத்தான் நம்பத்  தக்கதாக
மக்கள் கொள்ளும்படியான சூழல்  இன்று உள்ளது

எனவே பலம் கூடக்  கூட  பொறுப்புகளும்
கூடவேண்டும் இல்லையேல் பலம் கூடிப்
பயனில்லை என உணர்ந்து...

உணர்வுப் பூர்வமான விஷயங்களில்  மேலும் உணர்வைத்   தூண்டும்படியான பகிர்வுகளைத்
தவிர்த்து

,அறிவுப்பூர்வமான அவசியமான பதிவுகளை  மட்டும்
பதிவோம், பகிர்வோம்  என உறுதி பூணுவோமாக

நம் இணைய தளத்தின்   பெருமையை அருமையை
இன்னும் உயர்த்த உறுதி கொள்வோமாக 


Tuesday, May 22, 2018

தேடல்

என் முன்னே என் பின்னே    
லட்சம் லட்சமாய்
கோடி கோடியாய்
எல்லோரும் ஒடிக் கொண்டிருக்கிறார்கள்
என்னைப் போலவே

"நாமெல்லாம் எங்கே போகிறோம்" என்றேன்
என்னை ஒத்தவரிடம்

"நம் முன்னால் செல்பவர்கள் எல்லாம்
தெளிவானவர்கள்
அனைத்தும் தெரிந்தவர்கள்
அவர்கள் பாதையில்தான் நாம் போகிறோம்" என்றார்

"நம் பின்னால் வருபவர் கூட நம்மைப் பற்றி
அப்படி எண்ணலாம் தானே
அப்படியானால் அது தவறல்லவா" என்றேன்
அவர் முறைத்த படி ஓடத் துவங்கினார்

"நம் பயணத்தின் முடிவில் என்ன இருக்கும்" என்றேன்
பக்கத்தில் ஒருவரிடம்

"தக தகக்கும் தங்க வாயில் கொண்ட சொர்க்கம் இருக்கும்
நம்மை வரவேற்க்க ஆண்டவன் அங்கே இருப்பார்" என்றார்

"இதனைப் பார்த்துத் திரும்பியவர் எவரேனும் உண்டா
இல்லை உறுதி செய்யத்தான் யாரேனும் உண்டா" என்றேன்


நீ நாத்திகம் பேசுகிறாய்
நீ எதனயும் அடையவும் மாட்டாய்
நீ எவனையும் அடைய விடவும் மாட்டாய்" என சபித்துப் போனான்

நான் சலிப்பின்றி அடுத்தவரிடம் கேட்டேன்
"நாம் எதற்காக ஓடுகிறோம்"
அவன் சொன்னான்

"நம் கால்கள் ஓடத்தான் படைக்கப் பட்டிருக்கின்றன
நாம் ஓடத்தான் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறோம்
என்வேதான் ஓடுகிறோம்"

நான் சொன்னேன்
"நிற்கவும் நடக்கவும்
ஓய்வாக அமரவும்
நாம் பயிற்றுவிக்கப் பட்டிருந்தால்
நம் கால்கள் அதற்காகத்தான் படைக்கப்பட்டது
எனக் கொள்ளலாமா?

"நீ பேசுவது விதண்ட வாதம்
இதற்கான பதிலை நிற்பவனிடமோ அல்லது
ஓய்வாக அமர்ந்திருபவனிடம் கூட கேட்கலாம்தானே"
என்றான் வெறுப்புடன்

ஓடுதலை விடுத்து
ஓரமாய் ஒதுங்கி
ஓய்வாக அமர்ந்திருப்பவரைப் பார்த்துக் கேட்டேன்

"இவர்கள் எல்லாம் ஏன் ஓடுகிறார்கள்
நீங்கள் எல்லாம் ஏன் ஓய்வாக இருக்கிறீர்கள்"

அவர் சிரித்தபடி கேட்டார்
"கேள்வி உன்னுடயதா
அல்லது உன்னிடம் கேட்கப்பட்டதா" என்றார்

"கேள்வி என்னுடையதுதான்" என்றேன் அடக்கமாய்

"அப்படியானால் சரி
அறிந்ததையெல்லாம் ஆழப் புதை
கண்களையும் காதுகளையும் கவனமாய் மூடு
உள்ளே மிக உள்ளே தொடர்ந்து போ
உற்றுப் பார்-கேள்வி கேள் -
உனக்கே எல்லாம் தெரியும்" என்றார்

"நீங்களெல்லாம் விடைத் தெரிந்தவர்களா" என்றேன்

அவர் பலமாகச் சிரித்துச் சொன்னார்
"சும்மா இருப்பவர்களிடம் மட்டும் இல்லை
ஓடுகிறவர்களில் கூட விடை தெரிந்தவர்கள் இருக்கக்கூடும்

ஆனாலும் என்ன
பெரும்பாலோர் விடைத் தேடி அலைபவர்கள்

இன்னும் பெரும்பாலோர்
விடை தெரிந்தவர்கள் போல் நடிப்பவர்கள்" என்றார்

நான்
தொடர்ந்து ஓடவும் இல்லை
ஓய்ந்து அமரவும் இல்லை
நின்றபடியே இருக்கிறேன்

எல்லாம் புரிந்தது போலவும் இருக்கிறது
எதுவுமே புரியாதது போலவும் இருக்கிற்து
முன்னைப் போலவே....

Monday, May 21, 2018

நாளைப் பிடித்தல்

 லாகவமாய்ப்  பிடிக்கும்
 சூட்சுமம் அறிந்தவர்களிடம்
 பயிற்சிப் பெற்று                                   
முதல் நாள் இரவில்               
ஒத்திகையும் பார்த்து                           
மிகக் கவனமாய் ...                   
கண்கொத்திப் பாம்பாய் 
விடியலுக்காகக் காத்திருக்க.       

 சோம்பல் இடுக்கில்                 
சுவாரஸ்யப் புதர்களில்
அதன்  தன்மை மாறாது              
 மெல்ல மெல்ல நழுவி                     
மறைந்துத் தொலைகிறது
விடிந்த இந்த நாளும்         
எப்போதும் போலவே

சற்றும் மனம் தளரா
விக்கிரமாதித்தனாய்
இன்று இரவும்
ஒத்திகையைத் தொடர்கிறேன்

 நாளையேனும்
முழுப்பொழுதையும்
என் பிடிக்குள் அடக்கவேண்டும் எனும்
அசைக்கமுடியா உறுதியுடன்
எல்லோரையும் போலவே