Saturday, November 12, 2016

நேரு மாமா பிறக்கும் முன்பும் ரோஜா இருந்தது

நேரு மாமா பிறக்கும் முன்பும்
ரோஜா இருந்தது  - அது
நூறு பூவில் தானும்  ஒன்று
என்றே   இருந்தது

நேரு மாமா மார்பில்  அதனைச்
சூடிக் கொண்டதும்-அதுவே
ரோஜா பூவின் ராஜா என்று
பெருமை கொண்டது

பஞ்சம் பசியும் பிணியும் உலகை
விட்டு விலகவும்  -எங்கும்
மிஞ்சும் போரை ஒழிக்க வென்று
உறுதிக் கொண்டதும்....

பஞ்ச சீலக் கொள்கை தன்னை
உலகு உய்யவே -தந்து
ஐந்து கண்டம்  புகழும் வண்ணம்
உயர்வு கொண்டதும் .....

முதலாய் இருத்தல்  மட்டும் பெருமை
என்று  இறாது  -அதிலே
தொடர்ந்து இருத்தல்  அதுவே பெருமை
என்று   உணர்ந்ததும் ......

ஐந்து ஆண்டுத் திட்டம் தந்து
பெருமை சேர்த்ததும் -நமது
இந்தி யாவும்  வளர்ந்து சிறக்க
வழியை வகுத்ததும் ......

நமது  வாழ்வு ஏற்றம் கொள்ள
வழியைத்  தந்தது - அதை 
உணர்ந்துப்   போற்றி நெஞ்சில் பதித்தல்
மகிழத்  தக்கது -

குழந்தை  நலமே நாட்டின் நலமாய்
மனதில் கொண்டதால்  -என்றும்
குழந்தைக் கூட்டம்   சுற்றி  இருக்க
விருப்பம் கொண்டதால்

குழந்தை  களுக்கே   உரிய தெனது
பிறந்த நாளது -என்று
உவந்து சொன்ன  நேரு மாமா
பிறந்த நாளதில்

அவர்தம்  பெருமை முழுதாய்  அறிந்து
மகிழ்ச்சி  கொள்ளுவோம்  -என்றும்
அவர்தம் கனவை  நிஜமென் றாக்க
உறுதி  கொள்ளுவோம்

6 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

ரோஜா போன்ற சில இனிய நினைவலைகளை இன்று வெளியிட்டு எல்லோருக்கும் நினைவூட்டியுள்ளது மிகச்சிறப்பான செயலாகும்.

G.M Balasubramaniam said...

நேருவைப் பற்றி நினைக்கும் போது ஏரோஎஞ்சின் தொழிற்சாலையில் அவருக்காக மெஷினில் அலுமினியத்தில் வடித்துக் கொடுத்த பஸ்ட் சிலை செய்தது பற்றிய நினைவும் கூடவே

திண்டுக்கல் தனபாலன் said...

என்றும் போற்றுதலுக்குரியவர் ஐயா...

கரந்தை ஜெயக்குமார் said...

நேருவின் நினைவினைப் போற்றுவோம்

”தளிர் சுரேஷ்” said...

அருமை சார்! வாழ்த்துக்கள்! நேரு பிறந்தநாளை குழந்தைகள் தினமாக எங்கள் நண்பர்கள் நீண்ட நாட்கள் கொண்டாடி வந்தோம். இப்போது அந்த குழுமம் இல்லை! உங்கள் பாடல் பழைய நினைவுகளை கிளறிவிட்டது.

Yarlpavanan said...

நேரு நினைவுகள்
ரோஐா மலரோடு
மீட்டது அருமை

Post a Comment