Saturday, December 31, 2016

இன்றோடு.......

இன்றோடு.......
தளரட்டும் உடையட்டும் ஒழியட்டும்
தடையெனவே கிடந்தவைகள் எல்லாமே
நாளைமுதல்
வளரட்டும் படரட்டும் செழிக்கட்டும்
வாழ்விற்கு வளம்சேர்க்கும் எல்லாமே

இருளோடு
நகரட்டும் விலகட்டும் மறையட்டும்
சுமையெனவே துயர்தந்த எல்லாமே
ஒளியோடு
பரவட்டும் தொடரட்டும் பலம்பெறட்டும்
நல்லோர்க்கு நலம்சேர்க்கும் எல்லாமே

அடியோடு
உடையட்டும் நொறுங்கட்டும் சிதறட்டும்
பொய்மைக்குத் துணைப்போன எல்லாமே
அழகோடு
நிறையட்டும்  நிமிரட்டும் வலுக்கட்டும்
உண்மைக்கு வலுசேர்க்கும் எல்லாமே

நிலையாக
கிழியட்டும் எரியட்டும் அழியட்டும்
கீழ்மைக்குத் துதிபாடும் எல்லாமே
விளைவாக
வளரட்டும் உயரட்டும் நிலைக்கட்டும்
உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லாமே

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Thursday, December 29, 2016

அந்த மகத்தான தலைவிக்கு ......

இன்று எல்லாம்
சுகமாய்முடிந்தது
என மகிழ்வு கொள்ளாதீர்கள்

இன்று நடந்தது
ஒரு அழிவின் துவக்கம்

அணைகிற விளக்கின்
அதீத வெளிச்சம்

முடிகிற மூச்சுக்கு
முன் எழும்
ஒரு நீண்ட பெருமூச்சு

பெற்ற குழந்தையைப்
பலி கொடுத்து
வரம் பெற முயலும்
கொடூரப் பெற்றோராய்.

கண்களை விற்று
ஓவியம் பெறும்
கூறுகெட்ட இரசிகனாய்..

மக்களின் தொண்டனின்  மன நிலைக்கு
முற்றிலும் மாறாய்
நீங்கள் எடுத்த முடிவு...

"தனக்குள் வந்த நோய்
தன்னோடு போகட்டும்
அது கட்சிக்குள் பரவ  வேண்டாம் " என

இறுதி வரை இருந்த
அந்த மகத்தானத்  தலைவிக்கு
நீங்கள் செய்தத்   துரோகம்

துரோகங்கள் வெல்வது
அதிசயமே இல்லை
அதற்குச் சரித்திரச் சான்றுகள்
மிக மிக அதிகம்

ஆயினும்
அது நிலைத்ததில்லை என்பதற்கு
சரித்திரச் சான்றுகள்
இன்னும் மிக அதிகம்

எப்படியோ பதவியைத்
தக்க வைத்துக் கொண்டதாக
நீங்கள் நினைத்திருக்க

எங்களுக்கோ நீங்கள்
அதைப்   பலிபீடத்தில்
வைத்துவிட்டதாகவே தெரிகிறது

பார்ப்போம்....

Tuesday, December 27, 2016

பேய் அரசு செய்தால்தான்....

பேய் ஆட்சி  செய்தால்தான்
சாஸ்திரங்களைப்
பிணம் தின்னச் சாத்தியமா ?

நிஜம் அடக்கி
நிழல் ஆளினும்
நிச்சயம் அது சாத்தியமே

அதனால்தான்

முறையான  வாரிசைப்
பின் தள்ளி
உலகே வேடிக்கைப் பார்க்க
பெண் சடங்குகள் செய்ததும்

துரோகம் செய்தவர்கள் எல்லாம்
பிரேதம் சுற்றி நிற்க
இரத்த உறவுகள்
நெருங்கமுடியாது தவித்ததும்

ஊழல் பெருச்சாளியே
ஊழலுக்கான கண்காணிப்பு
ஆணையராய் இருக்கவும்

புறக்கடை வழி
அரியாசனம் ஏறுதல் கூட
சாத்தியம்  ஆவதும்

எரிக்கும் சூரியனை
கூடைக்குள் அடைக்கும்
கண்கட்டு வித்தையாய்

பெரும் மரணத்தின்
காரணத்தைக் கூட
மிக எளிதாய் மறைக்கவும்

..............................
.......................................

இப்படி இதுவரை
தமிழகம் கண்டிராத
எத்தனையோ அசிங்கங்கள்
மிக இயல்பாய் அரங்கேறவும்

ஊமை ஜனங்களாய்
சோற்றுப் பிண்டங்களாய்
குருட்டுப் பார்வையாளர்களாய்
தமிழகமே திகழவும்

இதற்கு மேல்
என்ன சொல்வது ?
எப்படிச் சொல்வது... ?

ஆம்
பேய் ஆட்சி  செய்தால்தான்
சாஸ்திரங்களைப்
பிணம் தின்னும் என்பதில்லை

நிஜம் அடக்கி
நிழல் ஆளினும்
நிச்சயம் அது சாத்தியமே

Monday, December 26, 2016

அப்பல்லோ மர்மங்கள்

சட்டென அப்பல்லோ மருத்துவனை குறித்த
மர்மங்களை எழுதுவதை விட முதலில்
ஒரு சிறு விளக்கம் சொல்லி அதை எழுதுவது
அதை மிகச் சரியாகப் புரிந்து கொள்ள உதவும்

நான் சிறு வயதில் நில உடமைச் சமூதாயத்தின்
முழுமையான எச்சமாய் இருந்த ஒரு கிராமத்தில்
வளர்ந்தவன்

ஜாதிவாரியாகத் தெருக்கள்,ஜாதி வாரியாகக்
கோவில்கள், சுடுகாடுகள்,திருவிழாக்கள்,
இனம் சார்ந்து மரியாதை,இவையெல்லாம்
நூற்றுக்கு நூறு மிகச் சரியாகக் கடைப்பிடித்து
வந்த ஊர் அது

அதன் காரணமாகவே மத நமபிக்கைகள்
மட்டுமல்ல, மதச் சடங்குகள் மட்டுமல்ல
மூட நம்பிக்கைகளும் அதிகம் விரவிக் கிடந்த
கிராமம் அது

ஊரின் நான்கு எல்லைகளிலும் தெய்வங்கள்
இருந்து  காப்பது மட்டுமல்ல, பேய்களும்
இருந்து பயமுறுத்திக் கொண்டிருந்த ஒரு
வித்தியாசமான ஊர் அது

எப்போதும் ஊரில் ஏதேனும் ஒரு தெருவில்
பேயோட்டும் உடுக்கைச் சப்தமும்
அது தொடர்பான கதைகளும் காற்றில்
கலந்து சிறுவர்களாய் இருந்த எங்களை
மட்டுமல்ல, பெண்களையும் ஒரு பய உணர்வுடன்
உலவும்படியே வைத்திருக்கும்

இந்தச் சூழலில் மாதம் ஒருமுறை வரும்
நடு இரவில் வரும் குடுகுடுப்பைக்காரர்களே இந்தப்
பதிவின் கதாநாயகர்கள்

ஏறக்குறைய பூம்பூம் மாட்டுக்காரன் சாயலில்
உடை அமைப்பு முதலானவைகள் இருந்தாலும்
அவன் மீசை, உருட்டும் விழி,நெற்றி குங்குமப்பட்டை
உடுக்கைச் சப்தம், இவைகளின் மொத்த உருவமாய்
இருக்கும் அவர்களை பட்டப் பகலில் பார்த்தால்
கூட பயந்து நடுங்கும்படியாக இருப்பார்கள்

காரணம் அவர்களது நடு இரவு மர்மங்கள்

அவர்கள் நட்ட நடுநிசில்தான் வருவார்கள்
நேராக சுடுகாட்டில் இருந்துதான் வருவார்கள்
அவர்கள் வருகையில் நேர் எதிராக வரக்கூடாது
அப்படி வந்தவர்கள் இரத்தம் கக்கிச்
செத்திருப்பதற்கான ஆதாரப்பூர்வமான நெடுங்கதைகளை
எல்லாம் திரும்பத் திரும்பக் கேட்டு
பயத்திலுறைந்து கிடக்கும் எப்போதும்
எங்கள் ஊர் ...

மாதம் ஒருமுறை அல்லது  இரண்டு மாதத்திற்கு
ஒருமுறை நட்ட நடு நிசியில் அவர்கள் உடுக்கைச்
சப்தமெழுப்பியபடி வரும் இரவினை
இப்போது நினைத்தாலும் என்போன்றோருக்கு
ஒருபய உணர்வு நெஞ்சில் மிக லேசாய் படரும்

இந்தச் சூழலில்
நான் சிறுவனாய் இருக்கையில், கனத்த இருளும்,
குளிரும், நிசப்தமும் விரவிக் கிடந்த ஒரு நாளில்

வீதியே அதிரும்படி உடுக்கைச் சப்தம் எழுப்பியபடி
 "நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது "
என ஒரு பொது வாக்கியத்தை சொல்லி
குடுகுடுப்பைக்காரன் வந்த ஒரு நள்ளிரவில்...

படுக்கையில் இருந்த எனது தாயார், மெல்ல
எழுந்து , விளக்கு ஏதும் போடாது ,அந்தப்
பெரிய வாசல் நிலைக்கதவை சப்தமெழுப்பாதபடி
மிக  லேசாய்த் திறந்து வாசலைப் பார்க்காதபடி
,மிகச் சரியாய் கவனிக்கும்படியாய்
காதின் அடிப்பகுதியை மட்டும் நிமிர்த்தியபடி
மிக லேசாய் உடல் நடுங்கியபடி  இருந்தச்
சூழலில்,

நான் இரு கண்களையும் இறுக்க மூடியபடி
அம்மாவின் இருகால்களையும் இறுக்க
அணைத்தபடி,மொத்த உடலும் நடுங்கும்படி
இருக்க

குடுக்குடுப்பைக்காரனின் அந்த குடுகுடுப்பை
ஒலியும்,அதைத் தொடர்ந்த அவனின் கணீரென்ற
குரலும் வீதியே அதிரும்படி எங்கள்
வீட்டுக்கு மிக அருகில் ஒலிக்கிறது

இதற்கு முன்பு வரை " நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது" எனச்
சொல்லிக் கொண்டு வந்த குடுகுடுப்பைக்காரன்
திடுதெப்பென்று "ஐய்யோன்னு போகுதே
ஐயோன்னு போகுதே..ஒரு பச்சைப்பாலகன் உசுரு
ஐயோன்னு போகுதேன்னு "வீதி அதிரக்
கத்துகிறான்

என் உடன் அந்தக் குரல் கேட்டு இன்னும்
நெருக்கமாய் அம்மாவைக் கட்டிக் கொள்கிறேன்
அம்மா இன்னும் இறுக்கமாய் என்னை
அணைத்துக் கொள்கிறாள்

என் உடல் நடுக்கத்தோடு அவள் உடலும்
சேர்ந்து நடுங்குகிறது

எத்தனை நேரம் அப்படி இருந்தோம் என்கிற
நினைவு இல்லை

குடுகுடுப்பைக்காரன் குடுகுடுப்பை ஒலியும்
குரலும் மெல்ல மெல்ல தூரம் சென்றுக்கரைய
பின் மெல்லக் கதவை மூடிவிட்டு
படுக்கையில் சாய்கிறோம்

பயத்தில் எனக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை
அம்மாவை இறுக அணைத்தபடி நான்
பயத்தை மறக்க முயற்சிக்கிறேன்

அம்மாவும் பேசவில்லை. ஆனால் அந்தப்
பாலகன் நானாக இருந்துவிடக் கூடாது
என்ற எண்ணமோ என்னவோ அம்மாவும்
என்னை இறுக அணைத்துக் கொள்கிறாள்

எப்போது விடிந்தது எனத் தெரியவில்லை

நான் விழித்து எழுந்து அம்மாவைத் தேடுகையில்
அம்மா வீட்டு வாசலில் யாருடனோ
பேசிக் கொண்டிருப்பது தெரிய, வேகமாக
வாசலுக்கு ஓடுகிறேன்

தெருவில் ஆங்காங்கே கும்பல் கும்பலாய்
நின்றபடி, நேற்றைய குடுகுடுப்பைக்காரன்
விஷயத்தை பயந்தபடி பேசிக் கொண்டிருக்கிறார்கள்

என் வீட்டிற்கு எதிர் வீட்டிலும் என் வயதொத்தவன்
இருந்த காரணத்தால் அந்த மாமியும்
என அம்மாவும் மிகச் சரியாக யார் வீட்டு
வாசலில் இருந்து அந்த "ஐயோன்னு போறானே"
என்பதைச் சொல்லி இருப்பான் என்கிற
ஆராய்ச்சியில் இருக்கிறார்கள்

இருவருக்கும் நம் வீடாக இருக்கக் கூடாது
என்கிற என்கிற எண்ணம் இருப்பது அவர்கள்
பேச்சில் தெரிகிறது

அம்மா என்னை அணைத்தபடி என் தலையை
கோதியபடி இருப்பதைப் போலவே
எதிர் வீட்டு மூர்த்தியின் தலையை
அவர்கள் அம்மா கோதியபடி இருக்கிறாள்

நேரமாக, நேரமாக, பேச்சு கொஞ்சம் இலகுவாக
எதிர்வீட்டு  மாமி சட்டென " அதுசரி
நேத்து நடந்ததெல்லாம் சரி. அந்த சமயம்
நம்ம தெரு நாய்களெல்லாம் எங்கே போனது
ஒரு நாய் குரைப்புச் சப்தமும் கேட்கவில்லையே"
என்கிறாள் ஆச்சரியமாக

அப்போதுதான் நினைவு வந்தவளாக என்
அம்மாவும் " அட ஆமா..நம்ம வீட்டுப் பக்கமே
எப்போதும் ஏழெட்டுத் திரியுமே அதுக்கெல்லாம்
என்ன ஆச்சு " என்கிறாள்

எனக்கும் அது ஆச்சரியமாகத்தான் இருந்தது

எங்கள்  பேச்சைக் கேட்டுக் கொண்டு அருகில்
இருந்த சுந்தர் மாமா சட்டெனத் திரும்பி

"உங்களுக்கு விஷயம் தெரியாதா ?
நடுச்சாமக் கோடாங்கி எல்லாரும் சுடுகாட்டில்
பூஜை செஞ்சு வரும்போது கையில் ஒரு
தாயத்து வெச்சிருப்பாங்க

அதை நாய்க்கு நேராக் காட்டினா போதும்
அது நாய் வாயைக் கட்டிடும் அவன் தெரு
தாண்டும் வரையில் வாயத் திறக்காது"
என்றார்

அப்போது அதைக் கேட்க எங்களுக்கு
இன்னமும் பயம் கூடிப் போனது

பின் வயது கூடக் கூட அப்படியெல்லாம்
நாய் வாயைக்கட்டுவது என்பது சாத்தியமே இல்லை
அது கட்டுக் கதை. நாம் குடுகுடுப்பைக்காரனையே
முழுக் கவனத்துடன் கவனிக்கிற நிலையில்
நாயின் குரைப்பைக் கவனித்திருக்க விட்டிருக்கும்
என்கிற முடிவுக்கு வந்தேன்

ஆனால் இப்போது அப்போலோவில்
நடந்த விஷயத்தைப் பார்க்கையில் எனக்கு
தாயத்தால் வாயை கட்டுதல் சாத்தியம் என்றே
படுகிறது

காரணம், எத்தனைப் பெரிய நிலையில்
இருக்கிறவர்கள் ஆனாலும் கூட இரண்டாம்
தளம் தாண்டி மூன்றாம தளம் போக முடியாமல்
போனது,....

மாதக் கணக்காகியும் முன்னாள்  முதல்வரின்
உடல் நலம்குறித்து எந்தச் செய்தியும்
யார் வாய் வழியும்கசியாதிருப்பது,....

தஞ்சை மாவட்டத்தில் இருந்து வந்த யாரோ
ஒரு கைதேர்ந்த குடுக்குடுப்பைக்காரன்
இரண்டம் தளத்தில் வைத்துவிட்டுப் போயிருக்கிற
தாயத்தால்தான் இருக்கும் என நிச்சயம் நம்புகிறேன்

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

( ஒரு ஜன நாயக நாட்டில், விஞ்ஞான வளர்ச்சியும்
மக்களின் விழிப்புணர்வும் உச்சத்தில் இருக்கிற
இந்த நூற்றாண்டிலும், ஒரு மக்களின் ஏகோபித்த
தலைவரின் மரணம் குறித்த மர்மத்தை விலக்க
முடியவில்லையெனில்,என்ன நடந்தது என்பதைத்
தெரிந்து கொள்ளமுடியவில்லையெனில்
விக்கிரமாத்தித்தன் கதைகளைப் போல நாமும்
இதுபோல அப்போலோ மர்மக் கதைகளை எழுதிக்
கொண்டிருக்கவேண்டியதுதான்.
வெட்கக் கேடு ஆனாலும் வேறு வழி ? )

Sunday, December 25, 2016

வாசித்துச் செல்பவருக்கு....

அன்பின் கனபரிமானம்
அளவின்றிக் கொடுப்பவருக்கும்
அதன் மதிப்பறிந்து
முழுமையாய்
அனுபவிப்பவருக்கும்தான் தெரியும்

இடையில் இருப்பவருக்கு
அது புரிய வாய்ப்பே இல்லை

நேர்மையின் அசுரபலம்
அது துயரே தரினும்
அதுதரும் ஆன்மபலம்
அதை முழுமையாய்
அறிந்தவருக்குத்தான் தெரியும்

பித்தலாட்டத்தில் லாபமடைபவர்
அதை உணர வாய்ப்பே இல்லை

உண்மையின் பெரும்சக்தி
அது அரிச்சந்திர வீழ்ச்சி தரினும்
அது தரும் பெரும் எழுச்சி
அதன் பரிபூரணம்
அறிந்தவருக்கே புரியும்

பொய்யில் செல்வந்தராவனுக்கு
அது  புரிய வாய்ப்பே இல்லை

கவித்துவத்தின் அருமை
அதைப் படைப்பவனுக்கும்
அதன் உட்பொருளறிந்து
அதை முழுமையாய்
இரசிப்பவருக்கும்தான் தெரியும்

வாசித்துச் செல்பவருக்கு
அது விளங்க வாய்ப்பே இல்லை

Saturday, December 24, 2016

" உங்களால் நான் உங்களுக்காக நான் " என முழங்கிய புரட்சித் தலைவியை

Image may contain: 4 people, people standing and text

" உங்களால் நான்
உங்களுக்காக நான் ".....
என முழங்கிய
புரட்சித் தலைவியை முன் இருத்தி

"உங்களால் நாங்கள்
எங்களுக்காக நீங்கள் "
என  மறைமுகமாய்
நீங்கள்ஆடிய கூட்டத்தின்
அலங்கோலங்கள்
வெட்டவெளிச்சமாகி வருகின்றன

உயிரிடன் இருக்கையில்
இருளில் எங்கேயோ
மறைந்து அதிகார வேட்டை
ஆடியிருந்த கூட்டம்...

அமரரானதும்
அவரைச் சுற்றி நின்று
கோரமுகம் காட்டியது
எங்களுக்கு ஒரு தெளிவைத் தருகிறது

நின்றவர்களுக்கும்
நிற்க உதவியவர்களுக்கும்
எங்கள் மனமார்ந்த நன்றி

"ஓநாய்களும் நரிகளும்
மறைந்து "பிழைத்தலே " சரி
அணில்போல,குருவிபோல
வெட்டவெளியில் உலவுமெனில்
அது நாடாயிருக்கச் சாத்தியமில்லை

மக்கள் நாங்கள்
இது விஷயத்தில்
மிகத் தெளிவாய் இருக்கிறோம்

பதவியைத் தக்கவைக்க
உடன் படம்  மாற்றுவோரே
நீங்கள்தான் தெளிவு கொள்ளவேண்டும்

பதவியில் இருந்தோர்
ஆதரித்த ஜா  அணி கண்ட
பெரும்தோல்வியையும்

தொண்டர்கள்  மக்கள்
ஆதரித்த ஜே அணிகண்ட
மாபெரும் வெற்றியையும்

ஒரு பாடமாய் பதவியிலிருப்போர்
கொள்ளவில்லை எனில்....

முடிவினைச் சொல்லவேண்டுமா என்ன ?

Friday, December 23, 2016

. மத்திய , மாநில அரசுகளே ஆணிவேர் அறுத்து ஆஸிட் ஊற்றும் செயலை....

நச்சுமரம் அழிக்க...

இலை உதிர்த்து
கிளைவெட்டி
அடிமரம் அறுத்து
பின் வேரறுக்க
முயல்வதைவிட

ஆணிவேரறுத்து
ஆஸிட்   ஊற்றி
வீழ்த்த முயல்வதுவே
உடனடிப்  பலன்தரும்

ஊழல் அரசியல்வாதிகளை...
துணைபோன அதிகாரிகளை

விசாரித்து
கைது செய்து
நீதிமன்றம் மூலம்
நடவடிக்கை எடுத்தலுக்கு முன் ..

அவர்களுக்குத் தெம்பளிக்கும்
பணபலத்தின்  பின்புலத்தின்
தொடர்பறுத்து
அசுரபலமறுத்துப் பின்
குசலம் விசாரித்தலே
கூடுதல் பலனளிக்கும்

அதுவே
ஊளையிடும் ஓநாய்களின்
உளுத்த வாயடைக்கும்

அதுவே
ஊழல்பெருச்சாளிகளின்
கொட்டமும் அடக்கும்

அதுவே
ஊமை ஜனங்களுக்கு
ஜன நாயகத்தின்பால்
நம்பிக்கையும் கொடுக்கும்

எனவே
மத்திய , மாநில அரசுகளே

இலை உதிர்த்து
கிளைவெட்டி
அடிமரம் அறுத்து
பின் வேரறுக்கும்
ஆமை   நிலை விடுத்து

ஆணிவேர் அறுத்து
ஆஸிட்  ஊற்றும்
உடனடிப்  பலன்தரும்
உறுதியாய்ப் பயன்தரும்
 வேங்கை நிலை  தொடர்வீர்

ஊழல் பெருச்சாலிகளின்
அட்டகாசத்தை
தமிழகம் விட்டு
இனியேனும்
விரட்டி  அடிப்பீர்

(அரசு என்பதனை
அசுரபலம்   மிக்கதாயினும்  தூண்டினால்
மட்டுமே செயல்படும்   அரசு  இயந்திரம்
எனப் பொருள் கொள்க  ) 

Thursday, December 22, 2016

ஊழலில் தலைசிறந்த "ராம மோகன ராவ்களையே "....

நாங்கள் தெளிவானவர்கள்

அதனால்தான்
சோத்துமூட்டை கட்டும்போதே
வெளிஎலிகள் தின்றுவிடாது பாதுகாக்க
அதனுள்
இரண்டு பெருச்சாலிகளைவைத்தே
கட்டிவிடுகிறோம்

நாங்கள் விவரமானவர்கள்

அதனால்தான்
மகளிர்விடுதிப் பெண்களை
வெளிக்காமுகர்களிடம் இருந்துப் பாதுகாக்க
விடுதிக்காவலர்களாய்
கற்பழிப்பிற்காக
தண்டனைப் பெற்றவரையே
காவல்வைத்துவிடுகிறோம்

நாங்கள் அறிவானவர்கள்

அதனால்தான்
பள்ளித் தலைமை ஆசிரியர்
ஓய்வுபெறுகையில்
ஆசிரியர்களுக்குள் போட்டிவராதிருக்க
அவருக்கு மிகவும் நெருக்கமான
அவர்குறித்து அதிகம் தெரிந்த
கடை நிலை ஊழியரையே
தலைமை ஆசிரியராக்கி விடுகிறோம்

நாங்கள் வெகுப் புத்திசாலிகள்

அதனால்தான்
ஊழல் ஒரு பிரச்சனை என
எண்ணம் கொள்ளாதிருக்க
வெளி ஊழல் அரசு ஊழலை
எப்போதும் முந்தாதிருக்க
 நிர்வாகத் தலைமைப் பொறுப்பில்
ஊழலில் தலைசிறந்த
"ராம மோகன ராவ்களையே "
தலைமைச் செயலாளராக்கிவிடுகிறோம்

நாங்கள் சிறந்த படைப்பாளிகள்

அதனால்தான்
எத்தனை மோசமான
நிகழ்வாயினும்
அதன் பாதிப்புகள் குறித்து
அலட்டிக் கொள்ளாது
தவறியும் கோபம் கொள்ளாது
அது குறித்து ஒரு கவிதையோ
முகநூல் பதிவோ கொடுத்துவிட்டு
அன்றாடக் கடமைகளில்
கவனத்தைத் திருப்பிவிடுகிறோம்

Wednesday, December 21, 2016

காசேதான் கடவுளப்பா- தலைமைச் செயலாளருக்கும் இது தெரியுமப்பா

இருக்கும் இடம் விட்டு
இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைதல் என்பது
கடவுள்  குறித்துச் சொன்னதாக
நேற்றுவரை நினைத்திருந்தேன்

இப்போது
உயர் அதிகார்களிடமும்
ஊழல் ஆசாமிகளிடம்
தேடத் தேடத்
தோண்டத் தோண்டப்
புதிய நோட்டுக்கள்
கிடைப்பதைக்  கேட்கக் கேட்க

கால் கடுக்க
நாள் முழுவதும்
தேடி ஓடியும்
திறந்திருக்கிற ஏ.டி,எம்மையும்
பணம் கொடுக்கும்  வங்கியையும்
காணுதல் என்பது
குதிரைக் கொம்பாகிப்
போனதைப் பார்க்கப் பார்க்க ....

இருக்கும் இடம் விட்டு
இல்லாத இடம் தேடி அலைவது என்பது
கடவுளுக்குச் சொன்னதாக
இப்போதெல்லாம் தோணுவதில்லை
மாறாக அது
காசுக்குச் சொன்னதாகவே படுகிறது எனக்கு

உங்களுக்கு ?

Sunday, December 18, 2016

சின்னம்மா அவர்கள் பொதுச் செயலாளராக....


சின்னம்மா அவர்கள் பொதுச் செயலாளராக
பதவி ஏற்பதால் அ. இ அ.தி.மு.க கட்சிக்கு
உண்டாகும் சாதக பாதக விஷயங்களை
அலசும் முன்பு ...

அண்ணா அவர்களின்
மறைவுக்குப் பின் நேர்ந்த அரசியல் சூழலை
ஆராய்ந்ததைப் போல..

http://yaathoramani.blogspot.in/2016/12/blog-post_13.html.http://

.htmlhttp://yaathoramani.blogspot.in/2016/12/2.html

புரட்சித்தலைவர்
அவர்களின் மறைவுக்குப்பின் ஏற்பட்ட
அரசியல் சூழலை ஆராய்வது இன்னும்
சரியாகப் புரிந்து கொள்ள உதவும்
என நினைக்கிறேன்

1967க்குப்பின் முதலமைச்சர் பதவி வகிக்கையில்
காலமான மூன்று முதலமைச்சர்களுக்கும்
உள்ள ஒற்றுமை, மூன்று முதலமைச்சர்களும்
அவர்கள் காலமான காலத்தில் சட்டமன்றத்தில்
முழு மெஜாரிட்டியுடனேயே பதவியில் இருந்தார்கள்

எனவே அவர்கள் காலமானதால் உடனடியாக
ஒரு ஆட்சி மாற்றத்திற்கான சூழல்
எப்போதும்( இப்போதும் போல ) ஏற்படவில்லை

ஆனால் கட்சியில்தான் அவர்கள் காலமானச் சூழலில்
அவர்கள் நினைத்தது போல் இல்லாமல்
மாறுபாடாக வேறு ஒருவர் தொடர்ந்து
தலைமைப் பதவி ஏற்கும்படியாய் அமைந்தது

அண்ணாவுக்குப் பின் அவர் சொல்லிக் கொண்டிருந்த
நாவலருக்குப் பதில் தன்
அரசியல் சாணக்கியத் தனத்தால்
கலைஞர் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார்

தன் சாதுர்யத்தால் இன்றுவரை தொடர்ந்து கொண்டும்
வருகிறார்

ஆனால் புரட்சித் தலைவர் விஷயத்தில்
அவர் அவர் மறைவுக்குப் பின் ஒரு பெரும்
குழப்பம் ஏற்பட்ட பின்பே ஒரு தெளிவும் கிடைத்தது

அதற்குக் காரணம் ஒருவகையில் புரட்சித் தலைவர்
என்று கூடச் சொல்லலாம்

புரட்சித் தலைவர் முதல்வராயிருக்கையில்
மத்திய அரசுடன் ஏதாவது மனக் கசப்பெனில்
அதை தான் பொது வெளியில் பேசாது
காளிமுத்து அவர்களை காங்கிரஸைத் தாக்கிப் பேசும்
ஒரு உசுப்பேத்தி விடுவார்

அவரும் அவர் பங்குக்கு அன்றையத் தினசரிகளில்
தலைப்புச் செய்தி பிடிக்கும்படியாக
ஒரு அருமையான வசனமாக  பேசி வைப்பார்

("கருவாடு மீனாகாது, கறந்த பால் மடிபுகாது "

முணியாண்டி விலாஸுக்குக் கூட அதிக
பிராஞ்ச் தமிழகத்தில்  உண்டு ஆனால் காங்கிரஸுக்கு.."

என்பன போன்ற வசனங்கள் எல்லாம் அப்போது
மிகப் பிரபலம் )

காங்கிரஸுடன் ஏற்படுகிற மனக் கசப்பை
காளிமுத்து அவர்களை வைத்துப் பேசவைத்து
அவ்வப்போது அதைச் சரிசெய்து கொண்டதைப் போல
தனக்குக் கட்சி நடவடிக்கைகளில் ஆர். எம் வீரப்பன்
அவர்கள் பாலும் புரட்சித்தலைவியின் பாலும்
ஏற்படும் அதிருப்தியை அவர்களில் ஒருவருக்கு
முக்கியத்துவம் கொடுத்தும் ஒருவரை ஒதுக்கியும்
என மாற்றி மாற்றி வைத்து அரசியல் சதுரங்கம்
ஆடுவார்

அதுவேஅவர் மறைந்து அவரது பூத உடல்
அன்று இராஜாஜி ஹாலில் மக்கள் அஞ்சலி
செலுத்த வைக்கப் பட்டபோது உலகமே
பார்க்கும்படியாய் வெட்டவெளிச்சமாக்கியது

அன்று ஆரம்பம் முதல் கடைசியில் வரை
புரட்சித் தலைவி அவர்கள் தலைவரின்
பூத உடலுக்கு அருகிலேயே சோகவடிவமாய்
இருந்ததும்

உலக மக்கள் அனைவரும் பார்க்கும்படியாய்
புரட்சித் தலையின் மீது இரக்கம் கொள்ளும்படியாய்
அது இருந்ததும்

அதற்கு ஈடு கொடுக்கும்வகையில்
ஜானகி அவர்களையும் புரட்சித் தலைவரின்
அருகில் இறுதி வரை இருக்கும்படியாகச் செய்ததும்

இராணுவ ஊர்தியில் புரட்சித் தலைவரின் உடல்
ஏற்றப்பட்டதும் புரட்சித் தலைவியும் அதில்
ஏறமுற்பட்டதும்..

அவர் கே.பி.ராமலிங்கம் அவர்களால் பிடித்துக்
புரட்சித் தலைவி கீழே தள்ளப்பட்டதும்...

அது அன்று தொலைக்காட்சி மூலம்
உலக மக்கள் அனைவராலும் நேரடிக் காட்சியாய்
பார்க்கப்பட்டதும்...

அது பெரும் அதிர்ச்சித் தரும் நிகழ்வாய்
மக்களுக்கு இருந்ததும்,அதன் காரணமாய்
புரட்சித் தலைவியின்பால் கூடுதல் இரக்கம்
மக்களுக்கு வந்ததும்...

அந்த நிகழ்வே பின்னால் அவர் கட்சித் தொண்டர்களையும்
பொது மக்களையும் ஈர்ப்பதற்கு ஒரு
மிகப் பெரும்காரணமாய் இருந்தது என்றால்
அது மிகையில்லை

ஆனால் இன்று...அதே போல

புரட்சித் தலைவி அவர்களின்
பூத உடல் அதே இராஜாஜி ஹாலில் மக்களின்
அஞ்சலிக்காக வைக்கப் பட்டிருக்கும்போது

சின்னம்மா அவர்களும்
புரட்சித் தலைவி இருக்கிறவரையில் ஊடகங்கள்
கண்ணில் பட்டுவிடாது,மறைமுக அரசியல் செய்து
கொண்டிருந்த, புரட்சித் தலைவி அவர்களால்தனக்கு
துரோகம் செய்கிறவர்கள் என அடையாளம்
காட்டப்பட்டவர்கள் எல்லாம் சுற்றி நின்றதும்..

ஒரு பெரும் அதிர்ச்சிசி தரும் நிகழ்வாய்
மக்களுக்கு இருந்ததும்,அதன் காரணமாய்
சின்னம்மா அவர்களின் பால் கூடுதல் வெறுப்பும்
வந்திருக்கிறது என்றால் அதுவும் மிகையில்லை

அன்று ஆர்.எம் வீரப்பன் அவர்கள் ஆட்சிப் பொறுப்பில்
இருந்த பலத்தில் ஜானகி அவர்களை முதல்வராக்கி
புரட்சித் தலைவியை அவர்களை ஒதுக்கிச் செய்ததெல்லாம்
சில காலங்களுக்குத் தான் செல்லுபடியானது

பின் ஆட்சிக் கலைக்கப்பட்டதும் மக்களைச்
சந்திக்க நேர்கையில்தான் மக்கள் யார்ப்பக்கம்
என்பது புரிந்தது

அந்த வகையில் இப்போது மெஜாரிட்டி
இருக்கும் நிலையில் ஆட்சிப் பொறுப்பில்
இருக்கும் நிலையில், சின்னம்மாவை
இடைத்தேர்தலில் நிற்கவைத்து முதல்வராக்குவதோ
கட்சியின் பொது குழுக் கூடி
பொதுச் செயலாளராக்குவதோ

சித்தப்பா அவர்களுக்கும் முக்கிய பொறுப்புக்
கொடுப்பதோ இப்போது மிக எளிதானப் பணிதான்

ஆனால் அதையும் தாண்டி மக்களைச்
சந்திக்க நேர்கையில்.....

மந்திரி முதல் மாவட்டச் செயலாளர்,
வட்டம் சதுரம் என பதவியில் இருக்கிற
கட்சித் தலைவர்களைத்
தாண்டித் தொண்டர்களைச் சந்திக்க நேருகையில்..

என்ன நடக்கும்....
..போஸ்டர்கள் மீது சாணம் வீச்சு


(நீளம் கருதி அடுத்த பதிவில் )

Friday, December 16, 2016

ஒரு இனிய அரிய வாய்ப்பு




வலைத்தள நண்பர்களுக்கு  இது ஒரு அரிய வாய்ப்பு
இணைய தளம்  குறித்து எளிமையாகவும்
தெளிவாகவும் அறிய இது ஒரு இனிய வாய்ப்பு

கலந்து கொண்டு  நிகழ்வைச்  சிறப்பிப்போம்  வாரீர்
கலந்து கொண்டு இன்னும் நம்மைக்
கூர்மைப்  படுத்திக்  கொள்வோம் வாரீர்

அனுமதி இலவசம்  ஆயினும்
முன் பதிவு அவசியம்

கூடுதல் விவரம் அறிய

http://valarumkavithai.blogspot.com/2016/12/blog-post_16.html


நேரடித் தொடர்பு  அவசியமாயின்  

பயிற்சி முகாம் ஒருங்கிணைப்பாளர்கள்  
சிலரது எண்கள்

நா.முத்துநிலவன்-9443193293

ராசி.பன்னீர்செல்வன்-7373002837

மு.கீதா-9659247363

மீரா.செல்வக்குமார்-8870394188

இரா.ஜெயலட்சுமி-9842179961

மது.கஸ்தூரிரெங்கன்-9842528585

க.மாலதி-9659584845

முனைவர் மகா.சுந்தர்-9442232678

பொன்.கருப்பையா-9442211096

பேரா.சக்திவேல்-7373000601

Thursday, December 15, 2016

கலைஞர் பாணியில் ...சின்னம்மா ( 2 )

அன்று அறிஞர் அண்ணா அவர்கள் மறைந்த
காலச் சூழலில் கலைஞருக்கு இருந்த
பாதகமான சூழல் எனில்...

இலக்கியம் சார்ந்து அவரின் படைப்புகள்
ஒரு சராசரி மனிதனை முகம் சுழிக்க
வைக்கும்படியாகவே இருந்தது

கான்ஸ்டெபில் கந்தசாமி,( மகள்  மீது
 ...... புத்தகம் கிடைத்தால் படிக்கவும் ...)

மறக்க முடியுமா (போதையில் தங்கையை
புணர வரும் அண்ணன் )

"வனவாசத்தில் " கண்ணதாசன் கலைஞர் குறித்து
எழுதி இருந்த குறிப்புகள்

சட்டசபையில் அனந்த நாயகி அம்மையாரை
மடக்கும் விதமாக "அனந்த நாயகிக்கு
அண்ணாவின் மூக்கருகில் என்ன வேலை
என்றது...

பின் "நாடாவை அவிழ்த்துப் பார்த்தால் " என
இரு பொருள்படும்படி ஒரு விஷயத்திற்கு
விளக்கம் அளித்தது.

இப்படி மிக நன்றாகத் துடுக்காகப் பேசுவதான
எண்ணத்தில் பொதுவெளியில் கொஞ்சம் கூடுதலாகப்
பேசி அண்ணா, நெடுஞ்செழியன் பேராசிரியர்,நாஞ்சிலார்
சி;பி சிற்றரசு இவர்கள் எல்லாம் ஒரு நிலை என்றால்
கலைஞர் அடுத்த நிலை என்கிற அபிப்பிராயம்
தோன்றும்படி இருந்தது,,,

( இதன் தொடர்ச்சியாய் முதல்வர் பதவியில்
இருக்கையில்ஊழல் பரவலாக உள்ளதாக
 இராஜாஜி அவர்கள்சொன்னதற்கு மறு மொழியாக
"மூதறிஞரின்ஆண்மையற்றப் பேச்சு "
எனச் சொன்னது அப்போதுஅதிக
விமர்சனத்துக்குள்ளானது.

இதற்கு கடுமையான தலையங்கத்தை
அன்றைய ஹிந்து நாளிதழ்
வெளியிட்டதாக ஞாபகம் )

இது எல்லாம் கட்சிக்கு வெளியே உள்ளவர்களின்
மன நிலையில் இருந்த குமைச்சல்
.
.கலைஞர் முதல்வர் தேர்வில் இருக்கிறார்
எனக் கேள்விப்படஅப்படி நடந்து விடக் கூடாது
எனக் கட்சிச்சாராத பொது ஜனம்
எண்ணும்படியாக இருந்த சூழல்

ஆனால் முதல் தேர்வுக்கு மக்கள் தேவையில்லையே
சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால்
போதும்தானே

அதற்கு அவருக்குச் சாதகமான அம்சங்கள்
அவருக்கு அன்று நிறையவே இருந்தது

முதல் சாதகம் அண்ணா இறக்கும் தருவாயில்
தி.மு கழகம் சட்டமன்றத்தில்
 முழு மெஜாரிட்டியுடன்இருந்தது
.
.(இப்போது அ.தி.மு.க வுக்கு இருப்பதைப் போலவே )

கலைஞர் அமைச்சரவையில் பொதுப்பணித் துறை
அமைச்சராகவும், கட்சியிலும்
முக்கியப் பொறுப்பில்  இ ருந்தது

அண்ணா, பேராசிரியர்,மற்றும் நாவலர் இவர்களை விட
கட்சிக்காரர்களிடம் நெருக்கமாகவும், இணக்கமாகவும்
எப்போதும் உடன் சந்திக்கும்படியான நிலையிலும்
இருந்தது

சினிமா தொடர்புடையவராக இருந்ததால்
மக்கள் செல்வாக்குள்ள புரட்சித் தலவர் மற்றும்
இலட்சிய நடிகர் இவர்கள் ஆதரிக்கும் படியாக
இருந்தது

அண்ணா இறந்த தருணத்தில் பொதுப்பணித்துறை
அமைச்சர் என்கிற கோதாவிலும், கூடுதல்பற்றுடைய
தம்பி என உணர்த்தும்விதமாக அண்ணா நினைவிடம்
அமைப்பதற்கான செயல்பட்ட வேகம்,,

அன்று வானொலியில் கல்லும் கரையும் விதமாக
ஆற்றிய கவித்துவமான இரங்கல் சொற்பொழிவு..

இவைகள் இவருக்கு முந்தியவர்களாகத் தெரிந்தவர்களை
கொஞ்சம் பின் நகர்த்தி வைத்தது என்றால
அது மிகையில்லை

மேலும் முன் பதிவில் சொன்னபடி
 மதியழகன் அவர்களைக் கடைசி நிமிடம்வரை
போட்டியாளர் போலவே இரகசியம் பாதுகாத்து
கடைசி நிமிடத்தில் தன்னை ஆதரிப்பவராகக் காட்டி
அனைவரையும் திகைக்கச் செய்த இராஜ தந்திரம்

பேராசிரியரை அன்றுமுதல் இன்றுவரை
இணையாகவே கொண்டு செல்லும் சாதுர்யம்

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்

அதனால்தான் அவர் முதல்வராகவும்
கட்சித்தலைவராகவும் பொறுப்பேற்கவும் முடிந்தது
தொடரவும் முடிந்தது

அதனால்தான் தான் பதவி ஏற்று அடுத்து வந்த
பொதுத் தேர்தலில் அவர் தலைமையிலான
தி.மு. கழகத்தை மீண்டும் அரியணை ஏற
வைக்க முடிந்தது

இன்றும் அதே மெஜாரிட்டி அ.தி.மு.க வுக்கு இருக்கிறது

(ஆனால் சட்டசபை அங்கத்தினராக சின்னமா இல்லை
ஆதலால் முதல்வர் என்கிற பேச்சுக்கே இப்போது
இடமில்லை )

அதே சமயம் சர்வவல்லமைப் படைத்த
பொதுச்செயலாளர் பதவிக்கு முயல்வது என்பது
அவருக்கு இப்போதுள்ள சூழ் நிலையில்
மிக மிக அவசியமானது

ஆனால் கட்சிக்கு எப்படி இருக்கும்  ?

(நீளம் கருதி அடுத்த பதிவில்  )

Tuesday, December 13, 2016

கலைஞர் பாணியில்......சின்னம்மா

அண்ணா அவர்கள் மறைந்து அடுத்த
சட்டசபைத் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய
காலச் சூழல்

ஏற்கெனவே அண்ணா அவர்களால் எனக்குப் பின்
நாவலர் நெடுஞ்செழியன் எனப் பகிங்கிரமாகவே
அறிவிக்கப்பட்டிருந்த நிலைமை

ஆயினும் கூட சட்டசபை உறுப்பினர்கள் மற்றும்
கட்சித் தொண்டர்கள் மத்தியில் நாவலரை விட
கலைஞருக்கு நெருக்கமும் செல்வாக்கும்
இருக்கும் நிலைமை

சட்டமன்றத் தலைவர் தேர்வில் நெடுஞ்செழியன்
கலைஞர் மற்றும் மதியழகன் ஆகிய மூவரும்
போட்டியிடப் போவதாக பரவலானத் தகவல்

பரபரப்பாக இருக்கிறது தமிழகம்

நாவலர் பெயர் முதலாவதாக முன்மொழியப்பட
பின்  எதிர்பார்த்தபடி கலைஞர் அவர்களது
பெயரும் முன் மொழியப்பட அடுத்து மதியழகன்
பெயரும் முன்மொழியப்படும் ,

அந்த மும்முனைப்
போட்டியில் தான் எளிதாக வெல்ல முடியும்
என நாவலர் அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கும்
வேளையில்,

எதிர்பாராத விதமாக

மதியழகன் அவர்கள் போட்டியிடாது கலைஞர்
அவர்கள் பெயரை முன்மொழியப் புரட்சித் தலைவரும்
கலைஞரை ஆதரிக்க யாரும் எதிர்பாராத வகையில்
கலைஞர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்

பின் நெடுஞ்செழியன் அவர்கள் விலகியதும்
தொடர்ந்து அவர் இடம் காலியாகவே இருப்பதாக
சொல்லிச் சொல்லிச் அவரைச் சேர்ந்ததும் ,
போட்டியிடத் தக்க செல்வாக்கு மிக்கத்
தலைவராக இருந்த மதியழகன் அவர்களை
கட்சித் தொடர்பில் இருந்து விலகி இருக்கும்படியான
சபா நாயகர் ஆக்கியதும், இவையெல்லாம்
கலைஞரின் சாணக்கியத் தனத்திற்கு எடுத்துக் காட்டு

(கட்டுரையின் நோக்கம் அது குறித்து இல்லாத
காரணத்தால்,அது குறித்து விரிவாக எழுத வில்லை )

அன்று கலைஞர் அவர்களின் செல்வாக்கு
சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும்
கட்சித் தொண்டர்களிடம் இருந்த அளவு
பொதுமக்களிடமில்லை

பொதுமக்களின் எண்ணத்தில் அண்ணாவுக்குப் பின்
நெடுஞ்செழியன், பேராசிரியர் அவர்களுக்குப் பின் தான்
கலைஞர் என்கிற வரிசையே இருந்தது

கலைஞர் முதல்வர் ஆனதும் பொது மக்களிடம்
தனது இம்மேஜை இவர்களையும் மீறி முன்னெடுத்துச்
செல்லவேண்டிய கட்டாயம்

அப்போதுதான்  அரசின் சேம நலத் திட்டங்களை
மக்களிடம் கொண்டு செல்வது என்கிற நோக்கில்
மக்கள் தொடர்பு அதிகாரிகள் 59 பேர் நியமிக்கப்பட்டது
(அந்தப் பதவியில் உள் நுழைந்தவர்தான்
சசிகலா நடராஜன் அவர்கள் )

அப்போது கலைஞர் அவர்களின் புகைப்படம்
மிக அதிகமாக இருக்கும்படியாக
அதிக அரசு விளம்பரங்கள் வெளியிடப்பட்டன

( மிகக் குறிப்பாக சமூக நலத் துறை சார்பில்
வெளியிடப்பட்ட நாம் இருவர் நமக்கு இருவர்
என்கிற விளம்பரம் கலைஞர் அவர்களின்
உருவம் தாங்க அதிகம் வெளியிடப்பட்ட ஞாபகம்

அப்போது பழைய காங்கிரஸில் முன்னணிப்
பேச்சாளராக இருந்த தீப்பொறி ஆறுமுகம் அவர்கள்
"இந்தப் படத்தைப் பார்த்து விளம்பரத்தைப்
படிக்கிற பெண்களையெல்லாம்
இது கேவலப்படுத்துவதாக்இருக்கிறது.
காரணம் கலைஞர் அந்தப் பெண்களைப்
பார்த்து நாம் இருவர் நமக்கு இருவர் எனக்
கேவலப்படுத்துவதுப் போல இருக்கிறது என
பேசிய ஞாபகம் இன்னமும் என் போன்றோரிடம் உள்ளது )

இத்தனை ஆண்டு காலம் கழித்து...

சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியில்
பதவியில் இருப்பவர்களிடம்
(எல்லோரும் பின்புலத்தில்சின்னம்மா அவர்களிடன்
 ஆதரவுடன் அல்லது அவரைப் பகைக்காது
பதவியைப் பெற்றவர்கள் என்பதால்)
சின்னம்மா அவர்களின் செல்வாக்கு உள்ளது
வெகு ஜன மக்களிடம் இல்லை
கலைஞருக்கு  அப்போதிருந்த
நிலைமையைப் போலவே

ஆனாலும் அன்று கலைஞருக்கு இருந்த
சில எதிர்மறையான விஷயங்களைக் காட்டிலும்
அதிகமாக பல நேர்மறையான விஷயங்கள்
இருந்ததைப் போல இன்று சின்னம்மாவுக்கு இல்லை

மாறாக சில நேர்மறையான விஷயங்களை விட
பல எதிர்மறையான விஷயங்களே அதிகம் உள்ளது

(பதிவின் நீளம் கருதி,
அது என்ன கலைஞரின் பாணி  என்பது
   அடுத்த பதிவில் )

தொடரும்

Monday, December 12, 2016

புரட்சித் தலைவி ...சசிகலா அம்மையார்... கட்சித் தொண்டர்கள் மற்றும் மக்கள்

புரட்சித் தலைவர் மறைந்து அ இ அ தி. மு கவில்
ஒரு மாபெரும் வெற்றிடம் தோன்றிய காலச் சூழல்

இப்போது சட்ட மன்ற உறுப்பினர்கள்
பெரும்பாலானோர்  சசிகலா அம்மையார்  அவர்களை
ஆதரிப்பதைப் போல அன்று ஜானகி அம்மையாரை
ஆதரித்த நேரம்

பின் கட்சி இரு கூறாய்ப் பிரிந்து சின்னம் முடக்கப்பட
 வேறு வேறு தொகுதிகளில்
சேவல் மற்றும் புறா ஆகிய சுயேட்சை சின்னங்களில்
புரட்சித் தலைவி அவர்களும் ஜானகி அம்மையார்
அவர்களும்தனித்தனியே போட்டியிட்ட நேரம்

அப்போது தமிழகத்தில் இருவரில் நிஜமான வாரிசு
யார்தான் என்கிற குழப்பம் தலைவர்கள் மத்தியில்
மட்டுமல்ல, கட்சி உறுப்பினர்கள் மத்தியில்
மட்டுமல்ல,மக்களிடையே கூட இருந்த நேரம்

சென்னையில் இருந்து ஒரு பிரபல
பத்திரிக்கை ஆசிரியர் தன்னுடைய நிருபரை
ஜானகி அம்மையார் மற்றும்
மற்றும் புரட்சித்  தலைவி அவர்கள் போட்டியிடும்
தொகுதிகளுக்கு நேரடியாகச் சென்று மக்கள்
கருத்தை அறிந்து அறிக்கைத் தருமாறு பணிக்கிறார்

அந்த நிருபரும் நகர் பகுதியைச் சாராது
கிராமப் பகுதியில் விசாரித்தால்தான் சரியாக
இருக்கும் எனக் கருதி ஆண்டிப்பட்டித் தொகுதியைச்
சார்ந்த வருசநாடு பகுதியில் மக்கள் கருத்தைக்
கேட்டு பதிவு செய்து வருகிறார்

அந்தச் சமயம் அந்த ஊரில் ஒரு வயதான
அண்ணா தி.மு.க பெண்மணியிடம்
"புரட்சித் தலைவரின் துணைவியாரும்
புரட்சி தலைவியும் இந்த ஊரில் நேரடியாகப்
 போட்டியிட்டால் ,இந்த  இருவரில்
உங்கள் ஆதரவு யாருக்கு " என வழக்கமான
கேள்வியைக் கேட்டு வைக்க

அந்தப் பெண்மணி சட்டென யாரும் எதிர்பாராத
ஒரு வித்தியாசமான பதிலைச் சொல்கிறார்

"தலைவர் அந்த அம்மாவை வீட்டுக்குள்தானே
வைத்திருந்தார். இந்த அம்மாவைத்தானே அரசியலுக்கு
என அறிமுகம் செய்துவைத்தார்

வீட்டுக்கென இருந்த அம்மா இப்ப ஏன்
நாட்டுக்கு வருது.அது தப்பு. என் ஒட்டு
நாட்டுக்குன்னு புரட்சித் தலைவர் அறிமுகம் செய்த
ஜெயலலிதா அவர்களுக்குத் தான் எனது ஆதரவு "
என்கிறார்

இந்த சுதந்திரம் வந்ததைக் கூட பல வருடம்
கழித்துத் தெரிந்து கொண்ட ஒரு பகுதியான
ஒரு உள்காட்டுக் கிராமத்தில்,

புரட்சித் தலைவரின் மானசீகச் செய்தியாக
புரிந்து வைத்திருந்த விதம்
அந்த நிருபரை மட்டுமல்ல அவரை அனுப்பி வைத்த
பத்திரிக்கை ஆசிரியருக்கும் மிகுந்த
ஆச்சரியத்தை அளித்தது

பின் அதை அந்தப் பத்திரிக்கையில் மக்கள்
கருத்தாக இதைப் பதிவு செய்திருந்தார்

பின்னர் உண்மையில் தமிழகத்தின் கருத்தாக அந்த
உள்காட்டுப் பகுதியைச் சார்ந்த வயதான
பெண்மணியின் கருத்தே வெளிப்பட்டது

அதே சூழல்தான் இன்றும். புரட்சித்தலைவி
அவர்கள் மிகக் கடினமான காலக்கட்டங்களில்
தான் முற்றிலும் நம்பத் தக்க நபராக
வைத்திருந்தது இன்றைய முதல்வர்
.ஓ.பன்னீர்செல்வம் அவர்களைத்தான்

உயிர்த் தோழியாக, உற்ற தோழியாக
வைத்திருந்த சசிகலா அம்மையார் அவர்களை
கட்சியை விட்டு நீக்கிய பின் பின்னர்
தன் இல்லத்தில் சேர்த்துக் கொண்டாரே ஒழிய

அவருக்கோ அன்று அவரது பூத உடலை
சுற்றிக் காத்து நின்றிருந்த அவரின் உறவினர்
யாருக்குமோ கட்சியில் எந்தப் பதவியும் கடைசிவரைத்
தரவில்லை என்பது அனைவரும் அறிந்ததே

அப்போதைப் போலவே ஏற்கென்வே புரட்சித்
தலைவியால் பதவி பெற்றவர்கள் பதவியைத்
தக்கவைத்துக் கொள்ளும் விதமாக அன்றைய
பதவியாளர்களைப்போல இன்று முடிவு எடுக்கலாம்

ஆனால் நிச்சயம் மீண்டும் மக்களைச் சந்திக்க
நேர்கையில் அவர்கள் மோசமான முடிவினைத் தான்
சந்திக்க வேண்டியிருக்கும்

ஏனெனில் மக்களுக்கும், கட்சியின் அடிமட்டத்
தொண்டர்களுக்கும் புரட்சித் தலைவியின்
மானசீகச் செய்தி ....

அன்று புரட்சித் தலைவரின் மானசீகச் செய்தியாக
பதிவு செய்யப்பட்டிருந்ததைப் போலவே

இப்போதும் திட்டவட்டமாய் பதிந்து உள்ளது

இதை வருங்காலம் நிச்சயம் உறுதி செய்யும்

Sunday, December 11, 2016

வாணி...வா நீ

நாவும் மனமும் இனிக்க
நவின்று மகிழ்ந்துச் சுகிக்க
ஊரும் நாடும் என்னை
உச்சி மோந்து இரசிக்க
பேரும் புகழும் நிழலாய்
விடாது என்னைத் தொடர
நூறு கவிகள் நாளும்
பாட வேணும் நானும்

நாளும் கண்டு இரசித்த
அழகுக் கோலம் எல்லாம்
நாளும் உணர்ந்துத் திளைத்த
நல்ல உணர்வு எல்லாம்
நீளும் எனது கவியில்
இயல்பாய் இணையும் வண்ணம்
நாளும் கவிகள் நூறு
நவில வேண்டும் நானே

கற்றுத் தேர்ந்தோர் உறவில்
கிடைத்தக் கேள்வி ஞானம்
குட்டுப் பட்டு நாளும்
கற்ற உண்மை ஞானம்
முற்றும் விடுதல் இன்றி
முழுமை பெற்ற தாக
நித்தம் நூறு கவிதை
படைக்க வேண்டும் நானே

வெள்ள நீரைப் போல
விரைந்து பெருகும் வண்ணம்
உள்ளம் தன்னில் கவிதை
பொங்கிப் பெருகும் வண்ணம்
வெள்ளைப் பூவில் அமர்ந்து
வீணை மீட்டும் வாணி !
எந்த னுள்ளும் அமர்ந்து
அருளைப் பொழிய வா நீ !

Saturday, December 10, 2016

கவியாகிப் போகிறது உணர்வு...

குவளை நீரில்
பால் கலக்க
மெல்ல மெல்ல
நிறம் மாறிப் போகிறது நீர்
பாலாகிப் போகிறது நீர்

இருளில்
ஒளிகலக்க
மெல்ல மெல்ல
ஒளியாகிப் போகிறது இருள்
பகலாகிப் போகிறது இரவு

மண்ணுக்குள்
விதை கலக்க
மெல்ல மெல்ல
நிலை மாறிப் போகிறது விதை
பயிராகிப் போகிறது விதை

உணர்வுக்குள்
சிந்தனை கலக்க
மெல்ல மெல்ல
கனமாகிப் போகிறது உணர்வு
கவியாகிப் போகிறது உணர்வு

Friday, December 9, 2016

கூடுதல் கவனமாய் ...

கனத்தச் சொற்களைக் கையாள்வதில்
கவனமாய்  இருக்க வேண்டியிருக்கிறது

வாதாடுகையில்
கோபமாய் இருக்கையில் மட்டுமின்றி
கவிதை புனைகையிலும்
கவனமாகவே இருக்க வேண்டியிருக்கிறது

கனத்தச் சொற்கள்
வாதத்தின் போக்கை
கோபத்தின் காரணத்தை
மடை மாற்றிவிடுதலைப்போலவே

கவிதையிலும் கன த்தச் சொற்கள்
தன் மீது கூடுதல் கவனம் ஈர்த்து
கவிதையின் உள்ளார்ந்த பொருளை
உணரவிடாதுச் செய்து போவதால்...

படைப்பின் நோக்கத்தைப்
பாழாக்கிப் போவதால்..

கனத்தச் சொற்கள் விஷயத்தில்
கொஞ்சம் கூடுதல்
கவனமாகவே இருக்க வேண்டி இருக்கிறது

சமையலில்
கூடுதலாகிப் போன
உப்போ காரமோ
தன் இருப்பைக் காட்டி
சமையலின் தரத்தைக்
குறைத்து விடுவதைப் போலவும்

அணிவகுப்பில்
தன்னை பிரதானப்படுத்த எண்ணி
விரைந்துச் செயல்படுபவன்
அணியின் கம்பீரத்தை
அசிங்கப்படுத்தி விடுவதைப் போலவும்

கவிதையும்
பாழாகிவிடாதிருக்க அவசியம்
கனத்தச் சொற்கள் விஷயத்தில்
படைப்பாளிகள் எப்போதும்
கூடுதல் கவனமாகவே இருக்கவேண்டி இருக்கிறது

Thursday, December 8, 2016

2000/500 ரூபாய் நோட்டின் அவலம்

ஒருமுறை ஊழல் குறித்து மூதறிஞர்
இராஜாஜி அவர்கள் சொன்னதாக ஒரு
கட்டுரைப் படித்த ஞாபகம்
அது இந்த அர்த்தத்தில் இருக்கும்

அரசு எந்த ஒரு திட்டத்தை நிறைவேற்றினாலும்
அதற்கு அரசு நிர்வாகத்தில் பல அடுக்குகளின்
துணையுடன்தான் நிறைவேற்ற முடிகிறது
அவ்வாறு பல அடுக்குகளைத்தாண்டி பயனாளிகளைச்
சேருகையில் அதன் பலன் மிகக் குறுகிப் போகிறது

உதாரணமாக ஒரு பெரிய ஐஸ் கட்டியை பத்துபேர்
கைமாற்றிக் கொடுக்கையில் கடைசியாக உள்ள
நபருக்கு அது போய்ச் சேருகையில் பாதிக்கும்
குறைவான அளவில்தான் போய்ச்சேருகிறது

வெளிச்சூட்டுக்கு ஐஸ் கட்டிக் குறைவதைத்
தவிர்க்க இயலாது. அப்படிக் குறைவதும்
கொஞ்சமாகத்தான் இருக்கும்

ஆனால் கை மாற்றிக் கொடுக்கையில் அவரவர்
கைச்சூட்டுக்குக் குறைவதுதான் ரொம்ப அதிகம்
ஏனெனில் அவர்கள் கைச் சூடு ரொம்ப
அதிகம் என்றார்

அந்த அளவில் எந்த திட்டத்தையும் செயலாற்றும்
அதிகாரிகள் எல்லாம் ஊழல் பேர்வழிகளாக இருந்தால்
நிச்சயமாக நாம் செயல்படுத்தும் திட்டம்
எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்
என்பதற்கு இந்த ரூபாய் நோட்டு விவகாரம்
ஒரு நல்ல உதாரணம்

சமீப நாட்களாக மக்கள் எல்லாம் ஏடிஎம் மையங்களில்
வங்கி வாசல்களில் காத்துக் காத்து நோக

அவர்கள் பணத்தைப்பெறவே ஏதோ அரசிடம்
இனாம் பணம் வாங்க
நிற்பதைப்போல்அவதிப்பட....

கோடிக்கோடியாய் புதிய நோட்டுக்கள்
பெரும் செல்வந்தர்களிடம் இருந்து சிக்குவது
எப்படி என்பதுதான் இப்போது உள்ளப் பெரிய பிரச்சனை

நோட்டில் உள்ள எண்களை வைத்து நிச்சயம்
மத்திய வங்கியிலிருந்து எந்த வங்கிக்கு அனுப்பப்பட்டது
என்பதை மிக எளிதாக் கண்டுப்பிடிக்கவும்
உடன் நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு அதிகம்
உள்ள சூழலில்..

வெறுமனே வங்கி அதிகாரிகள் கைது எனச் சால்ஜாப்புச்
சொல்லாமல் அரசின் மிகப் பெரும் திட்டத்தை
செல்லாக்காசாக்குகிற இதுபோன்ற அவலம்
தொடராமல்இருக்கவேண்டுமானால்
உடன் இது போன்றுப்பிடிபடும் வங்கி அதிகார்களை
குண்டர் சட்டம் போல  ஒரு கடுமையான
சட்டப்பிரிவின் கீழ் ஜாமீனில்  வெளிவர
முடியாதபடி கைது செய்ய வேண்டும்

மிக கடுமையான நடவடிக்கை இருக்கும் என்கிற
அச்சம் இல்லையெனில் இந்த அவலம் நிச்சயம்
தொடரத்தான் செய்யும் என்பதோடு அல்லாமல்

இதற்கு அரசு சம்பந்தப்பட்ட்டவர்களின் தொடர்பு
இருக்குமோ என் மக்கள் சந்தேகப் படவும் வாய்ப்புண்டு

அப்படி அவர்கள் சந்தேகப்பட்டால்
அந்தச் சந்தேகத்தை தவறு என நினைக்க முடியாமல்
போகக் கூடும்

அரசு இதை கவனிக்குமா அல்லது கொம்பை விட்டு
வாலைப்பிடித்தலையும் கோமாளிகள் போல
பிரச்சனை உள்ள இடம் விட்டு வேறு எங்கு எங்கோ
இப்போது போல தேடி அலையுமா ?

இதே நிலை தொடருமாய் ஐம்பது என்ன
ஐநூறு நாள் ஆனாலும் இந்தப் பிரச்சனை இப்படித்தான்
தொடரும்

ஊதுகிற சங்கை  ஊதிவிட்டோம்

பார்ப்போம்...

Tuesday, December 6, 2016

உன் பெயர் டிஸம்பரா ? இல்லையினி பீடை தானா ?

"தை "க்கு முன் வரும்
மார்கழி மாதம்
பீடை என்பது போல்

ஜனவரிக்கு முன் வரும்
டிஸம்பரே
 நீயும் பீடை தானா  ?

உனக்கும் தமிழகத்திற்கும்
அப்படியென்ன ஒரு தீராப்பகை ?

தமிழ்த் தலைவர்களின் மீது
அப்படியொருக் கொலைவெறி ?

சுனாமியென வந்து
கடற்கரை மக்களை
கொத்துக் கொத்தாய்
கொன்று போட்டுப் போவதும்...

புயல் சூறாவளியென
பொங்கி எழுந்து
மீண்டு எழமுடியாதபடி
சேதம் விளைவிவித்துப் போவதும்...

டிஸம்பரே
உனக்கும் தமிழகத்திற்கும்
அப்படியென்ன தீராப்பகை ?

மூதறிஞர் என நாங்கள்
கொண்டாடிய இராஜியை

பகுத்தறிவுப் பகலவயாய்
ஒளிர்ந்த எங்கள் பெரியாரை..

ஏழைப் பங்காளனாய்த் திகழந்த
எங்கள் புரட்சித்தலைவனை

அனைவருக்கும் அன்னையாய் உயர்ந்த
எங்கள் புரட்சித்தலைவியை

அரசியல் சாணக்கியனாய் ஒளிர்ந்த
எங்கள் அன்பு சோ .இராமசாமியை

கள்வனைப் போல்
ஒளிந்திருந்து உன் மாதத்தில்
காவு கேட்கும் கொடுமை ஏன் ?

டிஸம்பரே
உனக்கு தமிழினத் தலைவர்கள் மீது
அப்படியென்ன ஒரு கொலைவெறி ?

ஒன்றைப் புரிந்து கொள்
உன்னால் இவர்களது
உயிரைத்தான் கவர இயலும்

சிகரம் தொட்ட
இவர்களது புகழை
இம்மியும் குறைக்க இயலாது

மாறாக இனியும் உன்
கொடும்செயல்கள்
இதுபோல்  தொடருமாயின்...

மார்கழியைப் பீடையென்று
மங்களங்கள் ஒழித்தது போல்
உன்பெயரை இனி
"பீடை மாதம் "என மாற்றி
உன்  செறுக்கை ஒழித்திடுவோம்

டிஸம்பரே
உன் பெயர் டிஸம்பரா ?
இல்லையினி பீடை தானா ?
இனி உன் செயல்கள்  மூலம்
இதை நீயே முடிவு செய்து கொள்

Monday, December 5, 2016

சென்று வா எங்கள் அன்புச் சகோதரி

மகம் ஜெகம் ஆளும் என்னும்  
ஆன்றோரின் வாக்கினுக்கு
ஒரு நிரூபனமாய் விளங்கிய
அற்புதமே அதிசயமே

படுத்துக் கொண்டே
ஜெயிப்பது என்கிற சொற்றோடர்
ஒரு வறட்டுவாக்கியமாய் இருந்ததை
நிஜமாக்கிக் காட்டிய
தமிழகத்து ஜான்ஸியே

நீ கொண்ட உச்சங்கள் எதுவும்
தங்கத் தட்டில் வைத்து
உனக்குப்
பரிசாகக் கொடுக்கப்பட்டதில்லை

பெண்ணாக இந்த உச்சம்தொட
நீ பட்டத் துயரங்கள்
இவ்வுலகில் எப்பெண்ணும்
இதுவரைப் பட்டதில்லை

உன் மீது இருந்த துரும்பினை
தூண் என்றார்கள்
உன் மீது விழுந்த அணுகுண்டை
மலர்ச் செண்டு என்றார்கள்

இரண்டடையும்
துச்செமென மதித்துக்
கடந்து சென்ற
தங்கத் தலைவியே

புராண நிகழ்வுகளின் எச்சமாய்
ஒரு சட்டசபை
கௌரவர் சபையாய்
தன் கொடூர முகம்காட்டி
கொக்கரித்தபோது
சினந்து புலியாய் நீ
சீறிவந்தக் காட்சி....

சனாதன ஆசாமிகள்
பிற்படுத்தப்பட்டவன் என்பதாலேயே
திறமையானவனை
ஒதுக்கிவைத்ததைப் போலவே

போலிப் பகுத்தறிவு ஆசாமிகள்
முற்படுத்தப்பட்டவள் என்பதாலேயே உன்னை
ஒதுக்க முயன்றபோது
நெருப்பில் பூத்த மலராய் நீ
வென்று நின்ற காட்சி...

காலப்பெட்டக்கத்தில்
ஜொலிக்கின்ற வைரங்கள்
வைடூரியங்கள்
சரித்திரப்புத்தகங்களில்
தங்க முத்திரைக் கொண்டு
தகதகக்கும் பக்கங்கள்

விழிமூடுகையில்
மனம் கொள்ளும் வைராக்கியங்கள்
உடலோடு போவதில்லை
ஆன்மாவோடு தொடர்ந்து
அடுத்த ஜென்மமெடுக்கும் என்பதை
நாங்கள் சொல்லி நீ
அறிய வேண்டிய நிலையிலில்லை

கோடிக் கோடியாய்
மதம் கடந்து இனம்கடந்து
மக்கள் செய்யும் பிரார்த்தனைகள்
நிச்சயம் வீணானதில்லை

அதனை மறுக்கும் அதிகாரம்
நியதிப்படி இயங்கும் இறைவனுக்கும்
இல்லையென்பதை
இயற்கையும் மறுப்பதில்லை

பதினேழாம் நூற்றாண்டில்
ராணி மங்கம்மாவாக

பதினெட்டாம் நூற்றாண்டில்
வேலு நாச்சியாராக

பத்தொன்பதாம் நூற்றாண்டில்
தில்லையாடி மணியம்மையாக

அவதரித்த நீயே

இந்த நூற்றாண்டில்
புரட்சித் தலைவியாய்
அவதரித்திருக்கிறாய் என்பதில்
எங்களுக்கு எள்ளளவும்
சந்தேகமில்லை

தமிழக அடித்தட்டு மக்களின்
வாழ்வை உன்னதமாக்குவதிலேயே
உண்மைமகிழ்ச்சிக் கொண்ட
அன்னையே

உன் வாழ்வை அர்ப்பணித்த
அம்மாவே

உன்னால் நிச்சயம்
சொர்க்கத்தில் வீணே ஓய்வெடுக்க இயலாது

மறுபிறப்பெடுத்து
தமிழகத்திலேயே
நிச்சயம் அவதரிப்பாய்
என்பதிலும் எங்களுக்கு
எள்ளளவும் சந்தேகமில்லை

அதுவரை
எங்கள் தலைமுறை
உன் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும்

பிறவிப்பெருங்கடனை
உன்னதமாய் முடித்த
எங்கள் அன்புச் சகோதரியே

மனம் நிறைந்த சோகத்துடனும்
நீர் நிறைந்த கண்களுடனும்
உனக்குப் பிரியா விடை தருகிறோம்

சென்று வா எங்கள்
அன்புச் சகோதரி

Sunday, December 4, 2016

இயற்கையதன் சுகம்யாவும் யாவருக்கும் வசமாகும்

மலரோடு உறவாடி
மகிழ்வோடு வலம்போகும்
நிலவோடு உறவாட
நினைவெல்லாம் பூமணக்கும்

கரையோடு தினம்கூடி
களிப்போடு சதிராடும்
அலையோடு நினைவோட
நுரைபொங்கும் மனமெங்கும்

மலையரசன் உடல்தழுவி
மதிமயங்கித் தரைநழுவும்
குளிரருவி நிலையுணர
மனமாகும் குற்றாலம்

தண்மலரைக் கூடிமனக்
களிப்போடு உலாப் போகும்
வண்டினத்தின் சுகமறிய
மனம்கொள்ளும் ரீங்காரம்

இயற்கையுடன் இணைந்துவிடும்
இளம்மனது வாய்த்துவிட்டால்
இயற்கையதன் சுகம்யாவும்
யாவருக்கும் வசமாகும்

Saturday, December 3, 2016

பெரும் புயல் போற்றுதும்....பெரும் புயல் போற்றுதும்...

முன்பெல்லாம்
மழைக்காலங்களில் தவறாது
மழை பொழிந்தது
அதனால்
புயல் மழை என்பது
வில்லனைப் போலத் தெரிந்தது
தந்தியைப் போல
பயமுறுத்துவதாய் இருந்தது

இப்போதெல்லாம்
மழைக்காலத்தில் தவறியும்
மழை பொழிவதில்லை
அதனால்
புயல்மழை ஒன்றே
வரம் போலப் படுகிறது
இப்படிச் சிறப்புக்
கவிதையும் பெறுகிறது

என்ன செய்வது
முன்பு
மாமழைப் போற்றுதும்
மாமழைப் போற்றுதும்
எனக் கவி புனைந்த நாம்

இனி
பெரும் புயல் போற்றுதும்
பெரும் புயல் போற்றுதும்
எனப்பாடி மகிழ்வோம்

சூழலைக் கெடுத்தேனும்
சுகம் காணத் துடிக்கும் நமக்கு
வேறு ஏது வழி ?
இது தானே கதி

சுகப்பிரசவ சுகம்வேண்டி........

எதிர்பாராது
நாவில் தித்திப்பாய்
ஒரு வார்த்தை
நர்த்தனமாடி
இப்போதே
என்னை அரங்கேற்று என்கும்

சட்டென
உள்மனதில்
ஓர் உணர்வு
நிர்வானமாய் நின்று
உடனடியாய்
எனக்கு ஆடை அணிவி என்கும்

திடீரென
அடிமனதில்
ஒரு இராகம்
சுயம்புவாய்த் தோன்றி
மிகச் சரியாய்
எனக்கு வடிவு  கொடு என்கும்

சில நொடியில்
இமை இடுக்கில்
ஒரு நிகழ்வு
காட்சியாய் விரிந்து
அப்படியே
என்னைக் காட்சிப் படுத்து என்கும்

வார்த்தையா
உணர்வா
இராகமா
நிகழ்வா
எது சரிவரும்
நான் குழம்பித் தவிக்கையில்

உள்ளுணர்வு
"கண்டுகொள்ளாது விட்டுவிடு
வலுவுள்ளது ஜெயிக்கட்டும்"என்கும்

வழக்கம்போல்
சுமையும் வலியும்
தாங்கும் அளவைத் தாண்டினும்
இமைமூடித்
தாங்கிக்கொண்டிருக்கிறேன்
சுகப்பிரசவ சுகம்வேண்டி...

Thursday, December 1, 2016

வெல்லுதலுன் நோக்கமெனில் உள்ளமதில் இதைக்கொள்...

அழகைச் சொன்னதைவிட
அழகாகச் சொன்னதும்
புரிந்ததைச் சொன்னதைவிட
புரியச் சொன்னதும்
நல்லதைச் சொன்னதைவிட
நன்றாகச் சொன்னதும்
நிலை பெறும் உலகிது
நினைவினில் இது கொள்

உள்ளத்தைச் சொன்னதை விட
உள்ளதுபோல் சொன்னதும்
உண்மையைச் சொன்னதைவிட
உண்மைபோல் சொன்னதும்
பயனுறச் சொன்னதைவிட
நயமுறச் சொன்னதும்
வென்றிடும் உலகிது
நெஞ்சினில்    இதைக் கொள்

சொல்வதைப் பொருத்தன்றி
சொல்பவனைப் பொருத்தும்
நல்லதனைப் பொருத்தன்றி
வெல்வதனைப் பொருத்தும்
நிலைமாறும் நிறம்மாறும்
கலையறிந்த  உலகமிது
நிலைத்திட  நினைக்கினில்
நினைவினில்  இதைக்கொள்

மின்னுவதெல்லாம் பொன்னல்ல
என்கிற சொலவடை
மின்னுவதொன்றே  பொன்னென
முற்றாக  மாறி
காலம் வெகுவாகிவிட்டது
ஞாலம் குணம் மாறிவிட்டது
வெல்லுதலுன் நோக்கமெனில்
உள்ளமதில் இதைக்கொள் 


Wednesday, November 30, 2016

பின்னணி பாராது பின்னணி தொடரின்.....

முந்தைய காலங்களில்

முன்னணி இருந்தவர்
பின்னணிப் பார்க்கின்..

உழைப்பு இருக்கும்
தியாகம் இருக்கும்
நேர்மை இருக்கும்
வீரமும் இருக்கும்
விவேகமும் இருக்கும்

இன்றைய காலங்களில்

முன்னணி நிற்பவர்
பின்னணிப் பார்க்கின்

ஜாதி இருக்கும்
மதம் இருக்கும்
பொய்மை இருக்கும்
பணமும் இருக்கும்
பரம்பரையாயும் இருக்கும்

இனியும் வரும் காலங்களில்

முன்னணி செல்பவர்
பின்னணி பாராது
பின்னணி தொடரின்..

எந்நிலை ஆயினும்
மேலும் கொள்ளும்
 நம் நிலை  நிச்சயம்
கையறு நிலையே

உணர்ந்து தெளிந்தால்
மாறிடத் துணிந்தால்
நிச்சயம் மாறிடும்
நம்தலை விதியே 

Tuesday, November 29, 2016

மீன்பிடிப் போட்டி...

குளம் கலக்கும் குணம்
குளம் அழிக்கும் குணம்
மீன் பிடிக்க
நினைப்பவர்களுக்கே வரும்

குளம் ஆக்கும்  மனம்
குளம் காக்கும் குணம்
நீரின் அருமை
அறிந்தவர்களுக்கே தகும்

மீன் பிடிப் போட்டியில்
சேறும் சகதியும்
குளத்து நீரை
சாக்கடையாக்கியத் தினங்கள்

ஒரு கெட்டக்
கனவினைப் போல
மெல்லக் கடந்து போக

மெல்லத் தெளியத்
துவங்குது
எங்கள் ஊர்க்குளத்து நீர்

துவேஷமும் வெறுப்பும்
மெல்லப் படிய
சீராகிடும் மனம் போலும்  

Monday, November 28, 2016

காலம் கடக்கும் பேராசை...

காலங்கடக்கும் பேராசை
துளியும் எனக்கில்லை
அதன் காரணமாகவே
என்படைப்புகளுக்கும்
அந்தப் பேராசை துளியுமில்லை

பொசுக்கும் மணற்பரப்பில்
வெற்றுக் காலுடன்
தகித்து வருவோனுக்கு
கொஞ்சம் ஒதுங்க இடம்தரும்
ஒற்றைப் பனைமரமாய்...

நீண்டு விரிந்த நெடுஞ்சாலையில்
தன் எடை மீறிய சுமையுடன்
ஒடுங்கி வருவோனுக்கு
கொஞ்சம் நிமிர இடம் தரும்
ஒரு கற்சுமைதாங்கியாய்...

கொட்டும் பெருமழையில்
முற்றாக நனைந்து ஊறி
நடுங்கி வருவோனுக்கு
கொஞ்சம் ஒடுங்க இடம் தரும்
ஒரு பாழடைந்த கோவிலாய்..

தனிமை தரும் வெறுமையில்
சூழல் கூட்டும் கொடுமையில்
நசுங்கித் தவிப்போனுக்கு
கொஞ்சம் இளைப்பாற வழிசொல்வதே
இலக்கியம் எனக் கொண்டதால்...

என் படைப்புகளுக்கு
காலம் கடக்கும் ஆசை
துளியும் இல்லை
அதன் காரணமாகவே
எனக்கும் அந்தப் பேராசை
என்றும் எப்போதும்
வருவதே  இல்லை 

Sunday, November 27, 2016

தகவல்கள்... தகவல்கள்.. தகவல்கள்...தலைவலிகள் ..

அந்தப்புரச் சுகமும்
அரியணைச் சுகமும்
பங்கப்படாதிருக்க
அரசனுக்கு அன்று
தகவல்கள் அவசியமாக இருந்தது..

ஆம் தகவல்கள்
தேடிப்பெற வேண்டிய
தங்கமாயிருந்தது

அதனாலேயே
படைபலத்தை விட
ஒற்றர்பலம்
அதிகத் தேவையாக இருந்தது

அறிவின் பசியடக்க
வாய்ப்பின் வாசலறிய
பின்னடையாதிருக்க
அனைவருக்கும் பின் நாளில்
தகவல்கள் தேவையாயிருந்தது

ஆம் தகவல்கள்
தேடிப்பெற வேண்டியப்
பொக்கிஷங்களாக இருந்தது

அதனாலேயே
புத்திசாலித்தனத்தை விட
தகவல்களைச் சேகரித்தவன்
வெற்றியாளனாய் இருந்தான்

மன அமைதியும்
வாழ்வின் முன்னேற்றமும்
சாத்தியப்பட
அனைவருக்கும் இன்று
தகவல்கள் ஒருதடையாக இருக்கிறது

ஆம் தகவல்கள்
அதிகமாகி நாற்றமெடுத்த
குப்பையாய் வழிமறிக்கிறது

Saturday, November 26, 2016

ஊமையாய் ஒரு சமூகம் ....ஒரு உலகாண்ட சமூகம்

எந்த ஒரு
பெரும் தவறினையும்
தவறியும்
எவரும்
கண்டுபிடிக்கமுடியாதபடி
மிகச் சரியாகச்
செய்யத் தெரிந்தவர்கள்
கொள்ளும் தொடர் வெற்றியையும்

எந்த ஒரு
மிகச் சரியானதையும்
தவறியும்
எவரேனும்
கண்டுமகிழும்படி
மிகச் சரியாகச்
செய்யத் தெரியாதவர்கள்
காணும் தொடர் தோல்வியினையும்

நாள்தோறும்
கண்டு

மனம் புழுங்கி
வெந்து
வேதனைப்பட்டு
மெல்ல மெல்ல
நம்பிக்கை இழந்து
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது
ஊமையாய் ஒரு சமூகம்
ஒரு உலகாண்ட சமூகம்

அது ஒரு சுகலயம்...

மொட்டாகி
மெல்ல மெல்ல
விரிந்து
மணந்து
அழகூட்டும் மலரை.

பறித்து
மாலையாக்கிப் பார்க்க...
அது ஒரு அழகு

செடியின் அணைப்பிலேயே
துயிலப் பார்க்க
அது ஒரு அழகு

உறக்கத் தில்
எதனிலோ
மயங்கி
இரசித்துச் சிரிக்கும்
மலரனைய மழலையை

அணைத்து
முத்தமிட
அதுஒரு பெரும் சுகம்

எட்ட நின்று
அப்படியே இரசிக்க
அது ஒரு தனிச்சுகம்

குளிர் ஊற்றென
மெல்லச்சுரந்து
பரவி
நிறையும்
கவித்துவ உணர்வை

சொல்லில்
அடக்கிப் பார்க்க
அது ஒருஅருந்தவம்

அதனுள்
விழிமூடி ஒன்றிட
அது ஒரு சுகலயம்

Friday, November 25, 2016

"கவிதையைக் கேள்வி ஆக்கு "


"என்ன செய்வ திந்தக் கையை "
என்றேன்.
 
"என்ன செய்வ தென்றால்.."
என்றான் சாமி.
 
"கைக்கு வேலை
என்றி ருந்தால் பிரச்னை இல்லை.
மற்ற நேரம், நடக்கும் போதும்
நிற்கும் போதும் இந்தக் கைகள்
வெறுந்தோள் முனைத்தொங்கல்
தாங்காதஉறுத்தல்
வடிவத் தொல்லை "
என்றேன்.

"கையைக் காலாக் " கென்றான்

            .....................சி. மணி


"என்ன செய்வதிந்தக் கவிதையை  "
என்றேன்

"என்ன செய்வதென்றால்... "
என்றான் சாமி

"அர்த்தம் பொருத்தம் என்றிருந்தால்
பிரச்சனை இல்லை .
இல்லையேல்
படிக்கும் போதும்
நினைக்கும் போதும்
இந்தக் கவிதை ,
வெறும் சொல்லடுக்கு
வார்த்தைத் தொங்கல் .
தாங்காத உறுத்தல்
வடிவத்தொல்லை "என்றேன்

"கவிதையைக் கேள்வி ஆக்கு    "
என்றான்

Thursday, November 24, 2016

மோடிஜிக்கு கடைக்கோடியிலிருந்து...

என் நெருங்கிய நண்பன் வருடத்திற்கு
இரண்டுமுறையேனும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி
ஒரு கிடாவெட்டிற்கு ஏற்பாடு செய்து
உறவினர்கள் மற்றும் நண்பர்களையெல்லாம்
அழைத்து மிகப் பிரமாதமாக விருந்துக்கு
ஏற்பாடு செய்துவிடுவான்

சில கிடாவெட்டுக்குச் சொல்லும் காரணம்
எனக்கே பல சமயம் இது தேவையா எனத் தோன்றும்

இந்த வாரம் நடந்த கிடாவெட்டுக்குப் போயிருந்தபோது
இந்தக் கிடாவெட்டும் தேவையா எனத் தோன்றியதால்
"ஏன் இப்படி அனாவசியமாகச் செலவு செய்கிறாய் ?"
எனப் பொறுமைக் காக்காது கேட்டும் விட்டேன்

அவன் சொன்ன பதில் எனக்கு மிகவும்
ஆச்சரியமளிப்பதாக இருந்தது

"உண்மையில் நான் வேண்டுதலுக்காக
கிடா வெட்டுவதில்லை.கிடா வெட்டுவதற்காகத்தான்
வேண்டிக் கொள்கிறேன்

காரணம் நான் மிகச் சராசரிக் குடும்பத்தைச்
சேர்ந்தவன்தான் என் உறவும் நட்பு வட்டமும் கூட
இன்னமும் அப்படித்தான்.

நான் சில வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த
வியாபாரம் என் உழைப்பினாலும்,அதிர்ஷ்டத்தினாலும்
ஏதோ நல்லபடியாகப் போவதால் வீடு, கார் எனச்
செட்டிலாகிக் கொண்டிருக்கிறேன்

என்னால் முடிந்த அளவு தனிப்பட்ட முறையில்
பிறருக்கு வெளியே தெரியாமல்
உதவிக் கொண்டிருந்தாலும் கூட
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வட்டத்தில்
மிக லேசாக பொறாமையும் கொஞ்சம் விலகலும்
இருப்பதை உணர முடிகிறது

இதை இந்த விருந்து சரி செய்து விடுகிறது
நானும் என்னை மனத்தளவில் சரி செய்து கொள்ள
முடிகிறது " என்றான்

எனக்கு இவன் பதில் உண்மையாகவும்
நேர்மையாகவும் படுகிறது

இதையே மோடிஜி வேறுவகையாக யோசிக்கலாம்

இந்த 500/1000 செல்லாததாகிய விவகாரத்தில்
அதிகம் சங்கடப்படுவது கீழ்த்தட்டு மற்றும்
நடுத்தர மக்கள்தான்

உண்மையில் கறுப்புப்பணமக்கள் பாதிக்கப்
படுகிறார்களா இல்லையா என்பது கூட
இனி போகப் போகத்தான் தெரியும்

இந்த நிலையில் என் நண்பனைப் போல
மோடிஜியும் நம் போன்ற கீழ்த்தட்டு மற்றும்
நடுத்தர மக்களின் திருப்திக்காகவேணும்

கோடிக்கணக்கில் கடன் வாங்கிக் கட்டாதுத் திரிகிற
பலரின் பெயர்களை பகிங்கிரமாக வெளியிடுவதோடு
அதில் ஒரு சிலர் மீதாவது உடன் நடவடிக்கை
எடுப்பார் ஆயின்,

இந்தக் கிடாவெட்டு உறவினர் மத்தியில்
இவர் பணம் வந்தும் மாறாது இருக்கிறார் என்கிற
நம்பிக்கையைக் காப்பாற்றுவது மாதிரி,

பிரதமர் பொதுமக்கள் சார்ந்துதான் இருக்கிறார்
எதிர்க்கட்சிகள் சொல்வது போல
அந்தப் பகாசுரப் பணமுதலைகள் பக்கம்
இல்லை என்கிற எண்ணத்தையாவது
தோற்றுவிக்கும் அல்லவா

ஊதுகிற சங்கை நாமும் ஊதி வைப்போம்
காது எப்படி இருக்கிறது என்பது போகப் போகத்
தானாகத்தெரிந்துவிடும் தானே 

Tuesday, November 22, 2016

சூட்சுமம் வெளியில் இல்லை

புன்னகை முகத்தில் என்றும்
பொங்கியே ஜொலிக்கக் கூடின்
பொன்நகை ஜொலிப்பு கொஞ்சம்
மங்கிடத் தானே செய்யும் ?

நன்மனை வாய்க்கப் பெற்று
நலமுடன் வாழ்ந்து வந்தால்
அரண்மனை சுகங்கள் கூட
அலுப்பினைத் தானே கூட்டும் ?

இருப்பதைக் கொண்டு வாழும்
இலக்கணம் அறிந்து கொண்டால்
பறப்பதைப் பிடிக்கும் மோகம்
மறைந்திடத் தானே செய்யும் ?

ஆசையது போடும் ஆட்டம்
அடங்கிடக்  கூடும் ஆயின்
தேவையின் சுமைகள் கூட
குறைந்திடத் தானே வேண்டும் ?

சுகமதை நிலைக்கச் செய்யும்
சூட்சுமம் வெளியில் இல்லை
நிதமிதை உணர்ந்தால் வாழ்வே
சொர்க்கமாய் தானே ஆகும் ?

Monday, November 14, 2016

யாருமறிந்த பரம இரகசியம்

வருகிற 19 ஆம் நாள் இடைத்தேர்தல்
நடைபெற இருக்கிற மூன்று தொகுதிகளில்
அடியேன் வசிக்கிற திருப்பரங்குன்றம்
தொகுதியும் ஒன்று

கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற
செய்தியைக் கூட கேட்க முடியாது சுமார்
இருபத்திரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட
வாக்குவித்தியாசத்தில் வென்ற அ.இஅ.தி.மு.க
வேட்பாளர் எஸ் எம் சீனிவேல் அவர்கள்
மரணமடைந்ததால் ஏற்பட்டக் காலியிடத்திற்காக
நடைபெறுகிற இந்த இடைத்தேர்தலின் முடிவு
எப்படி இருக்கும் என பிற மாவட்டங்களில்
இருந்து எனது  நண்பர்கள் தொடர்ந்து
கேட்டுக் கொண்டிருப்பதால் இதை
எழுத வேண்டியுள்ளது

பொத்தாம் பொதுவாக எல்லோரும் இடைத்தேர்தல்
என்றால் அதிகார துஸ்பிரயோகம், மற்றும்
பணப்பலம் இவற்றால் ஆளும்கட்சி வெல்லும்
எனச் சொல்லித் திருப்திப்பட்டுக் கொண்டிருந்தாலும்
உண்மை அது மட்டும் இல்லை

வேட்பாளர்களைப் பொருத்த மட்டில்
நிஜப் போட்டியுள்ள அஇஅதிமுக மற்றும்
திமுக வேட்பாளர்களில்,

ஏற்கென்வே இந்தத் தொகுதியில்
வென்று தொகுதிக்கென எதுவும் செய்யவில்லை
என்கிற கருத்து அஇஅதிமுக வேட்பாளர் குறித்த
எதிர்மறையான  அபிப்பிராயம் உள்ள போதும்,

தி.மு.க  வேட்பாளரைப் பொறுத்தமட்டில் ,
மருத்துவராய் இருந்து தனது சொந்த டிரஸ்ட் மற்றும்
அரிமா சங்கம் முதலானவைகளில் தன்னை
இணைத்துக் கொண்டு ,தொடர்ந்து சேவைகள்
செய்து கொண்டிருக்கிறவர் என்ற போதும்,

, இளையவர் இனியவர்
அணுக எளிதானவர் என்கிற நேர்மைறையான
அபிப்பிராயம்  கொண்டவர்  என்ற போதும்

இந்தத் தொ குதியையே
பூர்வீகமாகக் கொண்டவர் என்ற போதும்,

இந்தத் தொகுதியில் அ.இ அ.தி.மு.க வேட்பாளரே
 அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்லும் வாய்ப்பு
இன்றைய நிலவரப்படி
உள்ளதெனில் அதற்கான முழுமையான காரணம்

பணபலம்,அதிகார துஸ்பிரயோகம் என மட்டும்
எனச் சொல்லிவிட முடியாது

மாறாக அ.இ.அ.தி.முக கட்சித் தலைவர்களின்
மிகச் சரியான தேர்தல் வியூகமும்,
அதற்கேற்றார்ப்போல கட்டுக் கோப்போடு
செயல்படும் தொண்டர்களின் செயல்பாடும் என்றால்
நிச்சயம்அது மிகை இல்லை

கட்சி கடந்து பொது வாக்காளர்களையும்  கவரக் கூடிய
ஆளுங்கட்சிக்கு இணையாக அனைத்து விதத்திலும்
ஈடு கொடுக்கக் கூடிய ஒரு வேட்பாளர் கிடைத்தும்
இந்தத் தொகுதியில் தி.மு.க அதிக வாக்குவித்தியாசத்தில்
தோல்வியத் தழுவுமாயின்,

அதற்கான காரணம் அவர்களாகத்தான்
இருக்கமுடியுமே தவிர,
வேறு ஜால்ஜாப்புகள்  எல்லாம்
நிச்சயம் சப்பைக்கட்டுகளே எனக் கொள்ளலாம்

பார்ப்போம்....

Saturday, November 12, 2016

நேரு மாமா பிறக்கும் முன்பும் ரோஜா இருந்தது

நேரு மாமா பிறக்கும் முன்பும்
ரோஜா இருந்தது  - அது
நூறு பூவில் தானும்  ஒன்று
என்றே   இருந்தது

நேரு மாமா மார்பில்  அதனைச்
சூடிக் கொண்டதும்-அதுவே
ரோஜா பூவின் ராஜா என்று
பெருமை கொண்டது

பஞ்சம் பசியும் பிணியும் உலகை
விட்டு விலகவும்  -எங்கும்
மிஞ்சும் போரை ஒழிக்க வென்று
உறுதிக் கொண்டதும்....

பஞ்ச சீலக் கொள்கை தன்னை
உலகு உய்யவே -தந்து
ஐந்து கண்டம்  புகழும் வண்ணம்
உயர்வு கொண்டதும் .....

முதலாய் இருத்தல்  மட்டும் பெருமை
என்று  இறாது  -அதிலே
தொடர்ந்து இருத்தல்  அதுவே பெருமை
என்று   உணர்ந்ததும் ......

ஐந்து ஆண்டுத் திட்டம் தந்து
பெருமை சேர்த்ததும் -நமது
இந்தி யாவும்  வளர்ந்து சிறக்க
வழியை வகுத்ததும் ......

நமது  வாழ்வு ஏற்றம் கொள்ள
வழியைத்  தந்தது - அதை 
உணர்ந்துப்   போற்றி நெஞ்சில் பதித்தல்
மகிழத்  தக்கது -

குழந்தை  நலமே நாட்டின் நலமாய்
மனதில் கொண்டதால்  -என்றும்
குழந்தைக் கூட்டம்   சுற்றி  இருக்க
விருப்பம் கொண்டதால்

குழந்தை  களுக்கே   உரிய தெனது
பிறந்த நாளது -என்று
உவந்து சொன்ன  நேரு மாமா
பிறந்த நாளதில்

அவர்தம்  பெருமை முழுதாய்  அறிந்து
மகிழ்ச்சி  கொள்ளுவோம்  -என்றும்
அவர்தம் கனவை  நிஜமென் றாக்க
உறுதி  கொள்ளுவோம்

Thursday, November 10, 2016

மவுலிவாக்க கட்டிட இடிப்பு பற்றி விசுவின் இதயக்குமுறல்

வஸந்த காலம் உன் வாசல் வர

உனக்கு பேசவும் எழுதவும் வர
கொடுத்துள்ள உரிமையின் எல்லையை
சோதிக்க முயலாதே
அந்த எல்லை
மிகச் சிறியது என உனக்கு
புரிந்தும் போகலாம்
அதனால் நீ நொந்தும் போகலாம்
எனவே அந்த வழி வேண்டாம் நமக்கு

உண்மையைத்தானே சொல்கிறேன் என
சிறுபிள்ளைத்தனமாய்
உளறித் தொலைக்காதே
நீ கைது செய்யவும் படலாம்
உன் வீடும் தாக்கப் படலாம்
ஊமையாய் இருக்கப் பழகு
காசு கொடுத்து கருமாந்திரம் நமக்கெதுக்கு

எழுதுபவன் வாசிப்பவன் எல்லாம்
சராசரியைத் தாண்டியவன் என
தப்புக் கணக்குப் போடாதே
நீ ஏமாந்துத் தொலைக்கலாம்
எழுத்தையே வெறுக்கலாம்
தெரிந்ததைப் பதுக்கப் பழகு
அதுதான் என்றும் சுகம் நமக்கு

மதம்" பிடித்தவனாயினும்
"மதம்" பிடிக்காதவனாயினும்
அவனவன் நிலையில்
"மதம் 'பிடித்தவனே
நியாயம் பேசி ஏமாறாதே
நிம்மதி இழந்துத் திரியாதே
சராசரியாய் இருக்கப் பழகு
சங்கடங்களை விலக்கப் பழகு

பயனற்றதை சுவாரஸ்யமாகச் சொல்லிப்போ
ஆடிக்காற்றுப் போல எதன் மீதும்
மிகச் சரியாகப் படாது புழுதிக் கிளப்பிப் போ
மகுடங்களும் மலர் மாலைகளும்
நிச்சயம் கிட்டும்
யானைவைத்து பிச்சை எடுப்பது போல்
அறிவைக் கொண்டு பிழைக்கப் பழகு
நிச்சயம் வஸந்த காலம்
உன் வாசல் கதவைத் தட்டும்

Friday, October 14, 2016

விடாது தொடரும் உங்கள் நினைவு நிச்சயம் எங்களைத் தூங்க விடாது

இந்தியர்கள் அனைவருக்கும்
ஆகஸ்ட் பதினைந்து ஒரு
விடியல் நாளெனில்

இளைஞர்கள் அனைவருக்கும்
அக்டோபர் பதினைந்தை ஒரு
எழுச்சி நாளாக்கிப் போனவரே

இந்தியாவின் கடைக் கோடியில்
ஒரு சாமானியனாய்ப் பிறந்து
இந்தியா முழுமைக்கும்
ஒரு ஆதர்ஷ நாயகானாய் உயர்ந்தவரே

அலங்காரமிக்க அதிகாரமிக்கப்
ஒரு பதவியை
முதன் முதலாய்
மக்களுக்கான பதவியாக்கியவரே

வல்லமையுள்ளோருக்கானது
என்றான  ஜனாதிபதி மாளிகையை
சாமானியர்களும்  மிக இயல்பாய்
நமக்கானது என உணரச் செய்தவரே

ஓயாத உழைப்பின் மூலம்
சாமானியனும்
உச்சத்தைத் தொட முடியும் என
நிரூபித்துக் காட்டியவரே

பதவியால் அல்ல
செய்வதற்கரிய செயல்களால்
தலைநகரையே ஒரு சிற்றூருக்கு
மாற்றிக் காட்டியவரே

உங்கள் பிறந்த நாள்
இளைஞர்களுக்கான
எழுச்சி நாள் மட்டுமல்ல

இந்தியர்கள் அனைவரும்
2020 என்னும் இலட்சியத்தை
எண்ணச் செய்யும் நாள்

இந் நாளை
நீங்கள் அவதரித்த நாளாக மட்டுமல்ல
உலகத் தலைமைக்கு
இந்தியாவைத்
தயார்ப்படுத்தும் நாளாகக் கொள்கிறோம்

விடாது தொடரும் உங்கள் நினைவு
நிச்சயம் எங்களைத் தூங்க விடாது

வாழ்த்துக்களுடன்....

Wednesday, October 12, 2016

வேறு எதை எதையோ நொந்தபடி....

கொத்தனாரை
தோட்ட வேலை செய்யவும்
தோட்டக்காரனை
வீடு கட்டவும்
விட்டக் கதையாய்

சர்வரை
சமையல் வேலை செய்யவும்
சமையல்காரரை
நின்று பரிமாற
வைத்தக் கதையாய்

அரசனை
ஆலோசனை வழங்கச் செய்தும்
மந்திரியை
பெரும் போருக்கு
அனுப்பும் முறையாய்

எல்லாவற்றையும்
மாற்றி மாற்றிச் செய்து
மாற்றம் இல்லையென
நொந்துச் சாகிறோம்

ஆப்பசைத்து
மாட்டிக் கொண்ட குரங்கு
நுனி அமர்ந்து
முன்னால் வெட்டிய முட்டாள்
கதைகளைச் சொல்லியபடி..

இவைகளிரண்டுமாய்
அனைத்து விஷயத்திலும்
நாம்தான் இருக்கிறோம் என்பதை
இயல்பாய் மறந்தபடி
 வேறு எதை எதையோ நொந்தபடி.

Tuesday, September 27, 2016

உங்களுக்கு நேரமிருக்க வாய்ப்பில்லை

உங்களுக்கு நினைவிருக்க
நிச்சயம் வாய்ப்பில்லை
ஏனெனில் அப்போதுதான்
தவழுதலை முடித்து
நீங்கள் சுயமாய்
நிற்கக் கற்றுக் கொண்டிருந்தீர்கள்

அன்றைய நாட்களில்
உங்கள் தாய்த்தந்தையரின்
மாலை நிகழ்வுகளில்
உங்களுடனான
மல்யுத்தம் நிச்சயம் இருந்தது

ஒவ்வொரு முறையும்
நீங்கள் உங்கள்
உச்சப் பட்ச
சக்தியினைத் திரட்டி
அவர்களை வீழ்த்த முயல..

ஒவ்வொரு முறையும்
அவர்கள் உங்களிடம்
உட்சப் பட்ச
சக்தியினைத் திரட்டி
வீழ்வதுப்  போல் நடிக்க...

நீ கைகொட்டி
முழுவாய்ப் பிளந்துச் சிரிக்க
அவர்கள் உங்கள் மகிழ்வினில்
உலகை மறந்து கிடந்ததும்
கவலை மறந்து களித்ததும்..

உங்களுக்கு நினைவிருக்க
நிச்ச்யம் வாய்ப்பில்லை
ஏனெனில் அப்போது
நீங்கள் ஏதுமறியாக்
குழந்தையாய் இருந்தீர்கள்

இப்போது உங்களுக்கு
நேரமிருக்க வாய்ப்பில்லை
ஏனெனில் இப்போது நீங்கள்
பதவியில் வசதிவாய்ப்பில்
உச்சத்தில் இருக்கிறீர்கள்

இன்றைய நாட்களில்
உங்கள் தாய் தந்தையரின்
அன்றாட நினைப்புகளில்
உங்களுடைய நினைவுகளே
அதிகம் ஆக்கிரமித்துக் கிடக்கிறது

அன்றாடம் ஏதுமில்லையாயினும்
எதையாவது மனம் திறந்து
பேசிவிட எத்தனிக்கையில்
"எதுவும் முக்கியமா ?" என
பேச்சினை முறிக்கையில்...

ஒவ்வொரு முறை நெருங்க  முயலுகையிலும்
அவசர வேலை இருப்பதாய்
செயலில் காட்டி
கையடக்கச் சனியனில்
முகம் புதைக்கையில்...

மனம் மிக நொந்தபடி
ஆயினும் மிக சந்தோஷமாய்
இருப்பதுப் போலப்போக்குக் காட்டி
இப்போதும் அவ்ர்கள்
நடித்துக் கொண்டிருக்கிறார்கள்

இப்போது இதை உணரும் மனமிருக்க
உங்களுக்கு நிச்சயம்  வாய்ப்பில்லை
ஏனெனில்
பதவியில் வசதி வாய்ப்பில் மட்டுமல்ல
நடிப்பில்   நீங்களும் 
இப்போது உச்சத்தில் இருக்கிறீர்கள்


(கண்ணீருடன்  கரு தந்த நண்பருக்கு
சமர்ப்பணம் )

Monday, September 26, 2016

வலைத்தள மேடை

இந்த மேடை எனக்குப்  
போதுமானதாகவே இருக்கிறது
பொருத்தமானதாகவே இருக்கிறது

மேடை சிறிதெனினும்
வெளிச்சம் குறைவெனினும்
படுதாக்களும்
பார்வையாளர்களும்
அதிகமில்லையெனினும்

எனக்கு  இந்த மேடை
மிகவும் பிடித்தமானதாகவே இருக்கிறது

ஆடை அலங்காரச்  சுமைகளின்றி
போலி முக வேஷங்களின்றி
எனது  குளியறையில் பாடுதல் போல்
எனது  தோட்டத்தில் ஆடுதல்  போல
இயல்பாகவே இருக்க  முடிவதாலே

எனக்கு  இந்த மேடை
மனம் கவர்ந்ததாகவே இருக்கிறது

நிழல்  உருவங்களாய் அல்லாது
பார்வையாளர்கள் பெரும்பாலோர்
பார்க்கும்படியாகவே இருப்பதாலே
பார்வையாளர்கள் அனைவரும்
என்னையும்   பார்க்கும்படியாக  இருப்பதாலே 

எனக்கு  இந்த மேடை
உத்வேகமளிப்பதாகவே  இருக்கிறது

கட்டுப்பாடுகளின்றி   என் இஷ்டம்போல்
மேடை ஏற முடிவதாலும்
பண்பட்ட பார்வையாளர்களின்
பாராட்டையோ விமர்சனத்தையோ
உடனுக்குடன் பெற்றுவிட முடிவதாலே

அதிக  உயரமும்வெளிச்சமும்
ஆரவார ரசிகர்களின் 
வான் முட்டும் சப்தமும் நிறைந்த
அந்த  அலங்கார மேடையினும்

அளவு சிறிதெனினும்
வெளிச்சம் குறைவெனினும்
பார்வையாளர்கள் கூட்டம்
அதிகமில்லையெனினும்

உயிரோட்டமுள்ள
இந்தச் சின்ன மேடையே

உயர்வானதாகவும்
உண்மையானதாகவும்
நிலையானதாகவும்
என்றென்றும் எனக்குள்
நம்பிக்கையூட்டிக் கொண்டிருக்கிறது
அதனால்
எனக்குள் நிலையாக
நங்கூரமிட்டுக்கொண்டும் இருக்கிறது

Thursday, September 22, 2016

நிழலின் சூட்சுமக் சமிக்ஞைகள்...

நான் என்பது
என்னைப் பொருத்து மட்டும் இல்லை
என்பதைத் தவிர

வேறு எதை எதையோ
அறிவுறுத்த முயலும்
நிழலில் சமிக்ஞைகள்
எனக்குப்  புரிந்ததில்லை எப்போதும்

நான் பிறக்கப் பிறந்து
என்னையேத் தொடர்ந்து
என்னுடனே மரிக்கும்
நிழலில் சமிக்ஞைகள்
ஏனோ புரிந்ததில்லை என்றென்றும்

நான் எப்போதும் போலிருப்பினும்
சிலபோது பின்னே
விஸ்வரூமெடுத்து
சிலபோது
முன்னே மிகச் சுருங்கி
பலசமயம்
கால் மிதிபடக் கிடந்து
இரவில்இருளில்
முற்றாய்ஒடுங்கி

என்னவோ சொல்ல நினைக்கும்
நிழலில் சமிக்ஞைகள்
புரிந்ததில்லை எஞ்ஞாளும்

ஈரக்காற்றின் சமிக்ஞை
வெளுக்கும் கிழக்கின் சமிக்ஞை
மலர்மொட்டின் சமிக்ஞை
குழந்தையின் சமிக்ஞை
ஊமையனின் சமிக்ஞை
நாணமுற்றவளின்  சமிக்ஞை
பிற மொழியாளரின் சமிக்ஞை
அனைத்தையும்
புரிந்து கொள்ளக் கூடும் என்னால்

இன்றுவரை
எனக்கான
எனக்கானது மட்டுமே ஆன
என்னை விட்டு நொடியும் விலகாத

என் நிழலின்
பிறச்  சூட்சுமச் சமிக்ஞைகளை மட்டும்
எப்படி முயன்றும்
ஏனோ புரிந்து கொள்ளமுடியவில்லை
இந்த நொடி மட்டும்

நான் என்பது
என்னைப் பொருத்து மட்டும் இல்லை
என்பதைத் தவிர...

Tuesday, September 20, 2016

தாயுள்ளம் கொண்ட முதிர்ந்த வாசகர்களே....

அதிக அனுபவச் சேர்க்கையும்
அதீத வாசிப்பின் தாக்கமும்
இயல்பாக வசப்படும் வார்த்தைகளின் நேசமும்
எதையும் எழுதிவிடலாம் என்னும்
நம்பிக்கை இருந்த போதினும்..

.எத்தனை உயர்ந்த வாகனமாயினும்
எவ்வளவு வேகப் பயணமாயினும்
இலக்கற்ற பயணம்
வெட்டி அலைச்சலே என
மனதினில் எண்ணம் கொண்டு

பொருளற்ற பேச்சில்
சந்தமும் அணிகளும்
அதிகமாய்க் கலந்திருந்தபோதும்
உளறலே என்ற
உறுதியினை அறிவில் கொண்டு

எத்தனைத் திறத்துடன்
செய்யப்பட்ட்டபோதும்
பயனற்ற செயல்கள்
விழலுக்கு இறைக்கும் நீரென்ற
கொள்கையினை  சிரமேற்கொண்டு

மிகச் சரியாகச்  சொன்னால்
கருவுறவே அல்லாது கொள்ளுகிற
உடல் சேர்க்கைக் கூட
காமக் களியாட்டமே என
வெறுத்தொதுக்கும் உறுதிகொண்டு

பிண்டத்தைப் பெற்று
தாயெனப் பெருமிதம் கொள்ளுதலை விட
மலடியாய் இருத்தலே மகத்தானது எனும்
மந்திரச் சொல்லினை
வேதமாய் மனதில் கொண்டு

எழுதாது இருந்து
எங்களையும் எழுத்தாளர்களாக
தலை நிமிர்ந்து உலவ விடும்
மனம் துணிந்து உளரவிடும் 
தாயுள்ளம் கொண்ட முதிர்ந்த வாசகர்களே
உங்களுக்கே  சரண் நாங்களே 

Monday, September 19, 2016

"வரம் கொடுத்தவன் தலையிலேயே.....

"வரம் கொடுத்தவன்
தலையிலேயே
கைவைக்க முயற்சித்த
அசுரன் கதையில்
எனக்கு நம்பிக்கையில்லை"
என்றார் அந்த முதியவர்

"எனக்கும் அப்படித்தான்
அரக்கனே ஆயினும் கூட
அப்படிச் செய்ய மனம் வருமா ?"
என்றார் அடுத்தப் பெரியவர்

அடுத்திருந்தப் பெரியவர் மட்டும்
"எனக்கு நம்பிக்கை இருக்கிறது
முயற்சித்த இல்லை
கைவைத்த....."
என்றார் விரக்தியாய்

பெரியவர்கள் இருவரும்
ஒரு பத்தாம்பசலியைப்
பார்ப்பதுப் போல
அவரைப் பார்க்க...

அவர் இப்படிச் சொன்னார்
"வாரீசுகள் வசதியாய் இருந்தும்
இந்த வயோதிகர் இல்லத்தில்
இருக்கிற நாமெல்லாம் யாராம்?
அனுப்பி வைத்தவர்கள் எல்லாம் யாராம் ?"
என்றார் மெல்லச் சிரித்தபடி

சிறிது நேரம் யாரும்
பேசிக் கொள்ளவுமில்லை
ஒருவர் முகத்தை ஒருவர்
பார்த்துக் கொள்ளவுமில்லை

மெல்லக் கனத்த இருள்
சூழத் துவங்கியது
வெளியிலும்....

Friday, September 16, 2016

ஆலயம் விட்டு ஆண்டவன் அவசரமாய் .....

ஆலயம் விட்டு
ஆண்டவன்
அவசரமாய் வெளியேறிக் கொண்டிருந்தான்

"எங்கே இவ்வளவு அவசரமாய்.."
என்றேன் அதிர்ச்சியுடன்

"ஆடம்பரமும், ஆரவாரமும்
மிக அதிகமாகிவிட்டது
சகிக்கவில்லை..அதுதான் "
என்றான்

"அப்படியாயின்
மீண்டும் காடு நோக்கி
அல்லது மலை நோக்கி அப்படித்தானே "
என்றேன்

"இல்லையில்லை
அங்கு அமைதி இருக்கும்
அன்பு கிடைக்காது
எனக்கு இரண்டும் வேண்டும் "
என்றான்.

நான் குழம்பி நின்றேன்

பின் காதோரம் இரகசியமாய்..

"ஓலைக் கூரையோ
ஓட்டு வீடோ
ஒட்டுக் குடித்தனமோ
விஸ்தீரணம் முக்கியமில்லை எனக்கு "என்றபடி
கூட்டத்தினில் மாயமாய்
மறைந்து போனான்

நானும் ஆலயம் விட்டு
அவசரமாய் வெளியேறினேன்

அவன் இல்லாத இடத்தில்
எனக்கும் இனி எப்போதும்
வேலையில்லை என்பதனாலும்..

அவன் வரவுக்காக
என்னையும் என்வீட்டையும்
சீர் செய்ய வேண்டும் என்பதற்காகவும்..

Thursday, September 15, 2016

நாளைநாம் களத்தில் நிற்போம் வாரீர்...

தனக்கென
ஒரு நிறமற்றுக் -கூடும்
நிலமதன்
நிறம்பெற்று..

தனக்கென
ஒரு சுவையற்றுச் -சேரும்
பொருளதன்
சுவைப்பெற்று..

தனக்கென
ஒரு திசையற்றுச் -சரிவு
இழுத்திடும்
திசைப்பெற்று

தனக்கென
ஒரு சுகமற்றுப் -பரவும்
வழிகளில்
சுகமீந்து

சீரும் சிறப்புமாய்
திகழ்ந்தக்  காவேரி-நாளும்
சீறிப் புலியாகப்
பாய்ந்தக்  காவேரி

தமக்கிது
உரியதென்று-வன்மம்
கூட்டுவோர்
நிலைக்கண்டு

தமக்குள்
அடக்கிடவே-முயல்வோர்
அடாவடிச்
செயல்கண்டு

தமதெல்லைத்
தாண்டுதலைப் -பொறாதுச்
சீறுவோர்
வெறிகண்டு

தனக்குள்
எரிகிறாள்-ஊழிக்
காலத்து
நெருப்பாக

கௌரவர்
சபையினில்-பாஞ்சாலி
நின்றிட்ட
நிலைபோல

எதிர்கட்சி
எல்லோரும்- ஊமையாய்ப்
பாண்டவர்
நிலைகொள்ள

ஆளூவோர்
எல்லோரும்-குருட்டுத்
திருதிராஷ்டிரன்
நெறிகொள்ள

தவியாய்த் தவிக்கிறாள்
நம்தாய்க் காவேரி-தன்னை
விடுவிக்கத் துடிக்கிறாள்
பூம்புகார்க் காவேரி

வீடெரிய
வெற்று வீதியினைக்
காத்தல்
காவலனின்
கடமை ஆமோ ?

அன்னையின்
கரமிழுக்கும்
காமுகனைப்
பொறுத்திடுதல்
கண்ணியம் ஆமோ ?

காவிரியின்
வழிமறிக்கும்
கயவர்களின்
செயல்பொருத்தல்
கட்டுப்பாடு ஆமோ ?

இனம் வாழ
ஜாதிகடந்து
மதம் கடந்து
கட்சிகடந்து
நாளைநாம்
களத்தில் நிற்போம் வாரீர்

பொறுப்பதில்
பூமியெனினும்
பொங்கிடின்
எரிமலையென
உலகிது
உணரச்  செய்வோம் வாரீர்

Wednesday, September 14, 2016

ஊரை எரிக்கும் நீர்

தீர்ப்பு வந்ததும்
நிறைந்த மனத்தோடு
அணையைத் திறக்காது
கனத்த மனத்தோடு
வெறுப்பைத் திறந்தததால்

இயற்கைக்கு முரணாய்
ஊரை எரித்துப் போகிறது
என்றும் எப்போதும்
இணைத்தே மகிழ்ந்த நீர்
அணைத்தே பழகிய நீர்

எங்கள் இயல்புக்கு மாறாய்
தீ ஒன்றே தீயை அணைக்குமோ
என்னும் விஷத்தினை
எம்முள் விதைத்தபடியும்
அதனைப் புயலாய் வளர்த்தபடியும்

விளைவது கண்டேனும்
இதயக் கனம் குறைப்பீர்
இந்தியாவின்
நலம் கருதி மட்டுமன்றி
உங்கள் நலன் கருதியேனும் 

Tuesday, September 13, 2016

வன்முறைகளுக்குத் தீர்வு




முன்பு திருடர்களும், கொள்ளைக்காரர்களும்,
கொலைக்காரர்களும்,வன்முறையாளர்களும்
பயந்துப் பயந்துத் தங்களை மறைத்தபடி
எதிர்பாராதவிதமாக,தங்கள் பித்தலாட்டச்
செயல்களை அரங்கேற்றிக் கொண்டிருந்தார்கள்

அவர்களிடம் தர்ம, நியாயப் பயமற்றுப் போயிரிந்தாலும் கூட
சட்டப் பயம் ,தண்டனை பயம் இருந்தது

இன்று தர்ம நியாயப் பயம், சட்டத் தண்டனைப் பயம்
முற்றிலும் அழிந்து போனதன் காரணமே
இத்தனை வன்முறைகளுக்குக் காரணம்

இது போன்ற போராட்டங்களை ஊக்குவிக்கிற
அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் மீது
நடவடிக்கை எனப் புகுந்தால்,
எல்லா அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும்
கூட்டுக் களவாணிகளாக இருப்பதால்
அரசியல் ரீதியாக அவர்களுக்குள் ஒரு
மறைமுக உடன்பாடு இருப்பதால்
இதற்குஒரு கமிஷன் எனப் போட்டு,விஷயத்தை
நீர்த்துப் போகவிட்டு, பின் ஏதுமற்றதாக
ஆக்கி விடுகிறார்கள்

அதற்குள் அந்த அந்தப் பகுதியில் வன்முறையை
அரங்கேற்றியவர்கள் ஒரு தாதா வாகி
அரசியல் செல்வாக்கும் பெற்றுவிடுகிறார்கள்

 எந்த மா நிலமாயினும் இதுதான் ஒரு
தொடர்கதை போலத் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது

இந்த நிலை தொடர்ந்து நீடிக்காது இருக்க
வேண்டுமாயின் உடன் அரசு ஒரு சட்டத்தை
நிறைவேற்றலாம்

முன்பு போல இப்போது வன்முறையை
பொது இடங்களில் நிகழ்த்திவிட்டு
யார் கண்ணிலும் படாது ஓடிவிடச் சாத்தியமில்லை

இந்த பெங்களூரு வன்முறையில் கூட
தான் தான் செய்கிறேன் என்பது தெரியும்படியாகவே
வண்டியை சேதப்படுத்துபவர், தீவைப்பவர்,
ஆடையைக் கலைகிறவர் என அனைவரின்
புகைப்படங்களும் காணொளிகளும்
பகிரப்பட்டுள்ளன

அரசு எந்த ஜால்சாப்பும் சொல்லாமல் உடன் அந்தத்
தனி நபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து
சிறையில் அடைப்பதுடன்,அவர் செய்த
சேதாரத்திற்கானத்தொகையை
அவரிடமே வசூலிக்கும்படியாக உடன்
ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தால்
இனி ஒரு அரசியல் கட்சியோ , அல்லது
ஒரு அமைப்போபோராட்டத்தைத்
தூண்டினாலும் கூட இதுபோன்ற
வன்முறைச் சம்பவங்களில் தனி நபர்கள் நிச்சயம்
ஈடுபடமாட்டார்கள்


ஒரு காணொளியை ஆதாரமாகக் கொண்டு
உடன் அந்த வன்முறை அரங்கேற்றும் நபரைக்
கைது செய்யும் அதிகாரத்தை காவல் துறைக்கு
அதிகாரம் வழங்கப் படுமாயின், ந்ச்சயமாக
இது போன்ற வன்முறைகள் இந்தியாவில் நடைபெற
சாத்தியமற்றுப் போகும்

(இப்போது எல்லோரிடமும் புகைப்படம் எடுக்கும்
அமைப்புடன் இருக்கும் கைபேசி இருப்பதால்
நூற்றுக்கு தொன்னூறு வன்முறை நிகழ்வுகள்
பதிவாகிவிட சாத்தியம் அதிகம்)

அரசு இதை பரிசீலிக்கும்படியாக நாம்
பொதுக் கருத்தை உருவாக்கலாமா ?

அதே சம்யம் பொது நல நோக்கமுடைய
அமைப்புகள் அல்லது சட்டவல்லுநர்கள்
இந்த காணொளிப் பதிவுகளை ஆதாரமாகக் கொடுத்து
உடன் அந்தத் தனி நபர்களை கைதுசெய்யும்படி
பொது நல  வழக்குகள் பதிவு செய்யலாமா ?

Monday, September 12, 2016

என்று ஆவன செய்யப்போகிறோம் ?



உடற்குறைபாடுடையார் இந்தியாவில்
இன்னமும் தங்கள் நியாயமான உரிமைகளுக்காக
அவசியம் பெற வேண்டிய சலுகைகளுக்காக
போராடியபடித்தான் இருக்கிறார்கள்

PV Sindhu, PV Sindhu silver medal, PV Sindhu final match, PV Sindhu photos, PV Sindhu women singles final, Sindhu vs Carolina, Sindhu medal, PV Sindhu India, Sindhu photos, Sindhu match highlights, Sindhu match photos, Rio 2016 Olympics, Rio Games, Sports photos, Sports

இந்தியாவில் பெண்கள் தங்களுக்கு
எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராக
என்ன செய்வதென்று அறியாது
திகைத்தபடியும்
சம உரிமைக்காக தொடந்து
போராடியபடியும்தான் வாழ்கிறார்கள்

ஆனாலும் கூட முழு உடற்தகுதிக்
கொண்டவர்களும்,அதிக வாய்ப்புகள் உள்ள
ஆண்களும் பெற்றுத் தராத ஒலிம்பிக்
பதக்கத்தை அவர்கள் இருவரும்தான் 
பெற்றுத் தந்து நம் இந்தியாவின் பெருமையை
உயர்த்திக் கொண்டுள்ளார்கள்

அரசும் மக்களும் அவர்கள்கள்பால்
என்று அக்கறையும்,பரிவும் கொண்டு
ஆவன செய்யப்போகிறோம் ?

Friday, September 9, 2016

கேயாஸ் (chaos)தியரி

விளையாட்டு
போட்டியாகி
போட்டி
வெறியாகி
வெறி
பகையாகி
பகை
கைகலப்பாகி
கைகலப்பு
ஆயுதத் தாக்குதலாகி
ஆயுதத் தாக்குதல்
நவீன ஆயுதத் தாக்குதலாகி...

ஆம்
வண்ணத்துப் பூச்சியின்
மெல்லிய சிறகசைப்பின் அதிர்வு
புயலாய் எதிர்வினையதுக் கொள்ளும்
எனச் சொல்லும்
,கேயாஸ் தியரியினை

மிகப் பூடகமாய்ச் சொல்லும்
(என்னுடையப்  பார்வையில்  )
எமது மதுரையைச் சார்ந்த
கல்லூரி மாணவர்கள் தயாரித்துள்ளக் காணொளி
என்னை மிகவும் கவர்ந்தது

பாருங்களேன்
உங்களையும் கவரக் கூடும்
https://youtu.be/lP3sxD2Af7g




Thursday, September 8, 2016

Railway smart card awareness

   மதுரையில் என் சகோதரர் (சாரதாகுமார் )
இயக்க எடுக்கப்பட்ட
விழிப்புணர்வுக் காணொளி இது

செய்தி சொல்வதுதான் முக்கியம் என்பது
இதுபோன்ற விழிப்புணர்வுப் படங்களின்
பிரதான நோக்கமாக இருந்தாலும் கூடக்
 கொஞ்சம் கலை உணர்வோடு
சொல்லப்படுகையில் அது இன்னமும்
சிறப்புப் பெறும்

அந்த வகையில் இந்தக் காணொளி
ஒரு நல்ல முயற்சி என்றாலும்

சிந்திய பொருளை அந்தப் பெண் எடுத்துக்
கொடுத்தபடிப் பேச்சினைத் தொடரும்படியாக
இருந்தாதிருந்தால்,

பயணியின் உடல் மொழியிலும்
பயணச் சீட்டு எடுக்கவேண்டுமே  என்கிற
ஒரு பதட்டம் பேசும்போதும் தொடர்ந்து
இருக்கும்படியாக இருந்திருந்தால்
இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்
என்பது என எண்ணம்

இதோ அந்தப் பயனுள்ளக் காணொளி ...



Tuesday, September 6, 2016

பிள்ளையார் சிலையை ஏன் திருடி வைக்கிறோம் ?

மன்னர் காலங்களில் சிற்பக் கூடங்கள்  ஏ 
அதிகம் இருக்கும்.அந்தச் சிற்பக் கூடம் ஒரு
தலைமைச் சிற்பியின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கும்

சிற்பத்திற்குகந்த கற்களைத்
தேர்ந்தெடுத்துச் சேர்த்தல்,

சிற்பக் கலைஞர்களுக்குப் பயிற்சியளித்தல் ,

வடிவமைத்தல்,முதலான அனைத்திற்கும்
அந்தத் தலைமைச் சிற்பியே முழுப் பொறுப்பேற்பார்

ஓரளவு பயிற்சிப் பெற்றப் பின்புதான புதிய
சிற்பிகள் சிலை வடிக்க அனுமதிக்கப்படுவார்கள் 
ஆயினும் புதிய்வர்கள் என்பதால் எப்படியும் புதிதாகச்
செய்கையில் சிறு சிறு தவறின் காரணமாக
சிலைகள் சேதமுறவோ,இறுதி கட்டத்தில்
சிறு சிறுத் தவறுகள் நேர்ந்து விடவோ வாய்ப்பது
நிச்சயம் அதிகம் உண்டு

அது போன்று தவறுகள் நேரும் போது 
பயன்ற்ற சிலைகள் அதிகம் சிற்பக் கூடத்தில்
சேர்ந்து விடவும் வாய்ப்புக்கள் அதிகம் உண்டு

மூளியான சிலைகள் சிற்பக் கூடத்தில் இருத்தல்
ஆகாது என்பதாலும், 

புதியவர்கள் அதனை உடனடியாக
பிள்ளையாராக மாற்றிவிட்டால் தவறுக்கான
தண்டனையில் இருந்து விலக்களிக்க
உத்திரவாதம் இருந்ததாலும், 

பிள்ளையாராக எந்தச்
சேதமுற்ற சிலையையும் மாற்றுதல் மிக மிக எளிது
என்பதாலும் 

புதிய சிற்பிகளுடன் தவறு நேர்ந்தவுடன்
உடனடியாக தலைமைச் சிற்பியின் கவனம்படும்முன்
அதனை பிள்ளையாராக உருமாற்றம் செய்து விடுவர்

எந்த ஒரு சிற்பியும் சிற்பிக்கான பயிற்சி முடித்ததும்
செய்கிற முதல் சிலை பிள்ளையாராக
இருக்கும் என்பதால்

எந்த ஒரு சேதமுற்ற சிலையையும் உடன்
பிள்ளையாராகச்செய்துவிடும் திறன்
அனைத்துப் புதிய சிற்பிகளுக்கு இருக்கும்

இப்படி அன்றாடம் சேருமின்ற பிள்ளையாரை 
வெளியேற்றுதலையே பிரதானப்
 பணியாகக் கொண்டால்சிற்பக் கூடத்தின்
பிரதான பணிகள் பாதிப்படையச் சாத்தியம் அதிகம்

எனவே அதனை மக்களாகவே எடுத்துச்
செல்லும் விதமாக

ஆலமரம் அரசமரம் பிணைந்த இடம்,
குளக்கரை,நேர்க்குத்து உள்ள இடங்கள்,
கோவில் அரசமரத்தடி
என பிள்ளையாருக்கான தேவையையும் 
அதிகம் இருக்கும்படியான நம்பிக்கையையும்
உருவாக்கி வைத்திருந்தார்கள்

அனுமதி பெற்றுக் கேட்டு எடுத்துச் செல்வது என்பது
இருக்குமாயின் அதற்கான  கால விரயம்,
 சம்ரதாயம்   அக்கறையின்மைக்குச்
சாத்தியம் என்பதால் கேட்காமலே
எடுத்துச் செல்லலாம்எனப் பிள்ளையாருக்கு மட்டும்
இந்தச் சலுகையைக் கொடுத்திருந்தார்கள்

காலப் போக்கில் கேட்காமல் எடுத்துச் செல்வதைத்
திருடுவது என்கிற அர்த்தமாக எடுத்துக் கொண்டு
அப்படி எடுத்துக் கொண்டு வைத்த பிள்ளையாருக்கு
திருடி வைத்த பிள்ளையார் என்றும் அதற்குத்தான்
அருளும் சக்தி மிக அதிகம் எனவும் (எல்லா
பிள்ளையாருக்கும் உண்டு என்றாலும் )
ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி வைத்ததால்தான்
நாம் அதன் தொடர்ச்சியாக இப்போதும் கூட
சன்னதிகளில் பிரதிஷ்டை செய்யப்படுகிற
பிள்ளையாரைத்  தவிர மற்ற இடங்களில் இன்னமும்
எங்கிருந்தோ பிள்ளையாரை கடத்தி வந்துத்தான்
(திருடித்தான் )வைத்துக் கொண்டிருக்கிறோம்

(சிறு வயதில் ஒரு பெரியவர் சொல்லக் கேட்டது
சுவாரஸ்யமாகவும், லாஜிக் சரியாகவும் இருந்ததால்
இப்போதுவரை என் நினைவில் இருந்ததால்
அதனை பதிவு செய்துள்ளேன் )

Sunday, September 4, 2016

கணபதி திருவடி



கணபதி திருவடி
அனுதினம் அடிபணி
துயரது இலையினி -தொடர் 
செழுமையே  உனக்கினி 

கஜமுகன் திருமுகம்
கண்டுகளி தினமினி
நிஜமென மருவிடும்-உனை  
வலம்வரும்  கனவினி

பரமனின் முதல்மகன்
அடியினை உடன்பணி
பயமது அடங்கிடும்-உடன்
தொடர்ந்திடும் ஜெயமினி

உமையவள் திருமகன்
புகழ்மொழி தினம்படி
நிலைபெறும் நிம்மதி-இனி
நிலைத்திடும் என்றறி

சரவணன் மனம் கவர்
கரிமுகன் பதம்பணி
குறையது இலையினி -முழு 
நிறைவுதான் எனத்தெளி


Friday, September 2, 2016

ரஜினி,இரஞ்சித்,கபாலி ( 9 )

                        காட்சி (7  ) தொடர்ச்சி

ரஜினி:
( தன் பெட்டியிலிருந்து ஃபைல் ஒன்றை
எடுக்கத் தாணு முயற்சிக்க அதைச் சட்டெனத்
தடுத்து.. )

தாணு சார்.. ஃபுல் டிடைல்ஸ் எனக்கு வேண்டாம்
அதையெல்லாம் நீங்க பாத்துக்கங்க
எனக்கு எப்படிச் செய்யலாம்கிறதை ரேண்டமா
சொன்னாப் போதும்....

தாணு
(ஃபைலை மூடி வைத்துவிட்டு...)

சார் சூட்டிங் ஆரம்பிச்ச உடனே காஸிப் மாதிரி
படம் குறித்த செய்திகளை நாமே நாம் நினைக்கிறபடி
தொடர்ந்து பி.ஆர். ஓக்கள் மூலம்
பத்திரிக்கைகளுக்குக் கசியவிட்டுத்
தொடர்ந்துப் படம் பத்தினச் செய்தி
லைவ்ல இருக்கிறமாதிரிச் செய்யறோம்

இசை வெளியீட்டு விழாவை இதுவரை யாரும்
செய்யாத மாதிரி பிரமாண்டமா வெளி நாட்டில
வைச்சே செய்யறோம்

இதுவெல்லாம் எல்லாம் செய்யற மாதிரிதான்

ஆனா அடுத்து படம் வெளியாக இருக்கிற
ஒரு மாசத்துல நாம இதுவரை யாரும் செய்யாத
சில வித்தியாசமான விஷயங்களை உங்க
சூப்பர் ஸ்டார் பிராண்ட் வேல்யூவை வைச்சு
நம்ம படத்தோட மார்க்கெட் வேல்யூவை
இதுவரைத் தமிழ்ப் படம் எதுவும் போகாத
உச்சத்துக்குக் கொண்டு போறோம்...

(தாணு உற்சாகமாகப் பேசப் பேசப் ரஜினியும்
ரஞ்சித்தும் மிக ஆவலாய் முன் சரிந்து
கவனிக்கத் துவங்குகிறார்கள்...)

சாருக்குத்தேத் தெரியுமே
முன்னையெல்லாம் படம் ரிலீஸ் ஆன உடனே
டிஸ்டிபூட்டருக்குப் போனப் போட்டு
படத்தைப் பத்தி மவுத் டாக்
எப்படி இருக்குன்னு கேப்போம்

நாம் என்னதான் லட்சம் லட்சமா செல்வழிச்சு
வீள்ம்பரம் செஞ்சாலும் வாய் வழியா பரவுற
வெளம்பரம் மாதிரி வராது

அதைமாதிரி இப்ப முக நூலும் வலத்தளமும்
ஆகிப்போச்சு.அதுல படஎதிர்பார்ப்பைப்  தூக்கியும்
தாக்கியும் நாமே சில பதிவுக்கு ஏற்பாடு பண்றோம்

கிராமத்து வைக்கப் படப்புல ஒரு ஓரம்
பத்த வைச்சா காத்தே மத்ததை பாத்துக்கிரும் மாதிரி
நம்ம துவக்கி வைச்சாப் போதும்
மத்ததை அதுல உள்ளவங்கப் பாத்துப்பாங்க

அடுத்து அஞ்சு ஆறு வெளி நாட்டுல ரசிகர்கள்
ஆரவாரமா எதிர்பார்த்துக்கிட்டு இருக்கிறாப்பல
ஏற்பாடு செஞ்சிருவோம்.பனியன்,விளமபரம்
அது இது எல்லாம் அந்த ஏஜென்ஸியே
பாத்திக்கிடுவாங்க

அதேமாதிரி, மெடிகல் டூரிஸம் போல
 வெளி ஸ்டேட்ல இருந்து பஸ்
,ஸ்டார் ஹோட்டல் பேக்கேஜோட
நம்ம படம் பார்க்க நாலஞ்சு பஸ் ஏற்பாடு பண்றோம்

முன்னயெல்லாம் லீவு நாளாப் பாத்து
படம் ரிலீஸ் பண்ணுவோம்
இப்ப நம்ம பட ரிலீஸுக்கே லீவு விடற மாதிரி
நமக்குத் தெரிஞ்சரெண்டு மூணு கம்பெனி
மூலமா ஏற்பாடு பண்றோம்

முன்பு படம் ரிலீஸுன்னா பலூன் பற்க்க விடுவோம்,
பெரிய பெரிய போஸ்டர் அடிப்போம்
இப்ப நம்ம பட விளம்பரத்தையே ஒரு விமானத்திலேயே
வரைஞ்சுப் பறக்க விடறோம்

இன்னும் இப்படி வித்தியாசமா ரெண்டு மூணூ இருக்கு

அதையெல்லாம் அந்த ஏஜென்ஸி மூலமே செஞ்சு
அந்த பட ரிலீஸ் வாரத்திலே எங்கேயும் நம்ம
படத்தைத் தவிர வேற பேச்சே இல்லாத மாதிரி செஞ்சு
என்ன விலைக் கொடுத்தாவது முதல் இரண்டு நாள்ல
படத்தைப் பார்த்தாகணும்கிற வெறியை உண்டாக்குறோம்

மிக முக்கியமா பட டிக்கெட் கூடுதலா விக்கிறது
தொடர்பா பிரச்சனை அரசின் மூலமா வராம இருக்க
இதுக்கு முன்ன பண்ணின மாதிரி
அரசுக்கு நெருக்கமானவங்க மூலமாகவே
ரிலீஸுக்கும் ஏற்பாடு பண்றோம்

(தொடர்ந்து பேசிய தாணு ,சற்று நிறுத்தி
 ரஜினி அவர்களின் கருத்தறிய முகம் பார்க்கிறார்)

ரஜினி
(மெல்ல புன்முறுவல் பூத்தபடி )
வெரி நைஸ் ..வெரி நைஸ்...
நான் எதிர்பார்த்தத்துக்கு மேலே
ரொம்ப அருமையா ஒர்க் பண்ணி இருக்கீங்க
தாணு சார்.. ரொம்ப தாங்க்ஸ்.ரொம்ப  தாங்க்ஸ்

(பின் இரஞ்சித் பக்கம் திரும்பி)

தாணு சார் நிச்சயம் அதிக எதிர்பார்ப்பை  ஏற்படுத்திடுவாரு
அப்படி எதிர்பார்ப்போட வர்றவங்க
 ஏமாறாம சந்தோஷமா ரசிக்கிறமாதிரி
படம் பிடிக்கிறமாதிரி
நாமதான் பண்ணனும் பண்ணீடலாமா ரஞ்சித்..

(எனச் சொல்லியபடி கைகுலுக்க ரஞ்சித்தை
நோக்கித்  தன் கையை நீட்டுகிறார்)

ரஞ்சித்
(ரஜ்னி அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டபடி
உறுதியளிக்கும் தொனியில்...)

செஞ்சிடலாம் சார்..நிச்சயமா செஞ்சிடலாம் சார்

(தொடரும் )

Wednesday, August 31, 2016

ரஜினி ,ரஞ்சித், கபாலி ( 8 )

                                      காட்சி  ( 7  )

(பண்ணை வீட்டை சுற்றி வந்த பின் டீ அருந்திவிட்டு
ஆசுவாசப்படுத்திக் கொண்டு புல் வெளியில்
போடப்பட்டிருந்த மர நாற்காலியில் அனைவரும்
அமரவும்...

(கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டவராகவே )

ரஜினி:
தாணு சார் நாமளும் படம் சக்ஸஸ் ஆகணும்னு
எவ்வளவோ  மூளையைக் கசக்கி
எவ்வளவோ செலவழிச்சு எவ்வளவோ கஷ்டப்பட்டு
ஒரு படம் பண்றோம்

அப்ப்டியும் எப்படியும் ஒரு சில படம் ஃபிளாப்
ஆகிப்போகுது. படம் ஃபிளாப் ஆகணுன்னு
யாரும் படம் பண்றதில்ல

(சற்று நிறுத்தி )ஆனா அந்த சமயத்தில
மீடியாவா ஆகட்டும், டிஸ்ட்ரிபூட்டர்களாகட்டும்
கொடுக்கிற ஆண்டி ரியாக்ஸன்
ரொம்ப் ரொம்ப ஓவர் நான் ரெண்டு படத்தில
ரொம்ப அப்செட் ஆகிட்டேன்

ஆகையால இந்த முறை எப்பவும் போல்
நாம படத்தை வியாபாரம் பண்ணப் போறதில்லை
எல்லாம் வித்தியாசமா.. வித்தியாசமா செய்யப்போறோம்

(எனச் சொல்லியபடி இருவர் முகத்தையும் பார்க்கிறார்
இருவரும் ஒன்றும் புரியாமல்..ஆனால் ஆவலுடன்
தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்ததும்
உற்சாகத்துடன் மீண்டும் தொடர்கிறார் )

ஆமா ..எப்படி ஒரு பொருளுக்கு அதுக்கான
பெறுமான விலையை விட  கூடுதலா விக்கணும்னா
அந்த பொருளுக்கு செயற்கையா ஒரு டிமாண்டை
உருவாக்கி நினைச்ச விலைக்கு
வியாபாரி விக்குறாரோ
அதே  ஃபார்முலாவை இந்தப் படத்துக்குப்
பயன்படுத்தறோம்

எவ்வளகெவ்வளவு படத்தோட கதை லீக் ஆகாம
டீஸரை மட்டும் பயன்படுத்தமுடியுமோ

எவ்வளவுகெவ்வளவு எல்லா வகையான
மீடியாக்களையும் பயன்படுத்த முடியுமோ

அவ்வளவு பயன்படுத்தி அளவுக்கதிகமான
எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி எப்பவும் போல
முதல் வார கலெக்ஸன்னு இல்லாம

படம் வெளிவருவதற்கு முன்னாலேயே
அட்வான்ஸா எவ்வளவு கலெக்ஸன்
பண்ணமுடியுமோ அவ்வளவு பண்றோம்

எவ்வளவு காசு கொடுத்துன்னாலும் முதல் நாள்
பார்க்கறது முதல் வாரத்தில பார்க்கிறது
ஒரு கௌரவம்னு நினைக்கிற மாதிரி
ஒரு செயறகையா ஒரு சூழலை உருவாக்கறோம்
இதுவரை நம்ம தமிழ் பட உலகில யாரும்
செய்யாத மாதிரி.. இனி செய்ய முடியாத மாதிரி
அதுக்கு என்ன செய்யலாம் சொல்லுங்க

(என மூச்சு விடாமல் பேசி சற்று மூச்சு
வாங்க..)

(.தாணு தன் கை வசம் வைத்திருந்த
ஒரு சூட்கேஸைத் திறந்து சில
ஃபைல்களை வெளியே எடுத்தபடி.....)

தாணு:
சார்  நீங்க முதல் நாள் சொல்றப்போதே எனக்கு
கொஞ்சம் புரிஞ்சது சார்..அதை வைச்சு
பாலிவுட்ல் படத்தை ப்ரொமோட் பண்றவங்களை
வச்சு, வாரம் வாரம் செய்ய வேண்டியது
மாதா மாதம் செய்ய வேண்டியது
படம் ரிலீஸுக்கு முதல் வாரம் செய்ய வேண்டியது
முதல் நாள் செய்யவேண்டியன்னு
ஒரு பக்கா பிளான் ரெடி பண்ணிட்டேன் சார்

கிராமத்துல சின்ன சம்சாரி
எல்லா செலவும் செஞ்சு
கதிர்  பால்வைக்கிற நேரத்தில ,மேலுரத்துக்கும்
இரண்டு பாய்ச்சலுக்கும்  காசு இல்லாம
படற  கஷ்டம் மாதிரி நம்ம தயாரிப்பாளருங்க
எல்லாம்  இருக்கிற காசையெல்லாம்
தயாரிப்புக்கே செலவழிச்சுட்டு பிரிண்ட்டுக்கும்
விளம்பரத்துக்கும் இல்லாம படுகிற பாடுதான்
இங்கே வாடிக்கையாகிப் போச்சுசார்

நாம இந்தப் படத்துக்கு அப்படி இல்ல சார்
பட ப்ரோமோஷனுக்கே தயாரிப்புச் செலவு அளவு
பண்றோம் சார்

நிறைய ஸ்பான்ஸர் கூட நம்மளோட   சேர்ந்து  
 செலவு செய்யவும் ரெடியா இருக்காங்க சார்

(எனச் சொல்லி ஒரு ஃபைலை  எடுத்து
மெல்ல இருவர் முன் விரிக்கிறார் )

(தொடரும் )