Wednesday, August 31, 2011

கணபதி துதி


கணபதி திருவடி
அனுதினம் அடிபணி
துயரது இனிஇல்லை-இனி
இன்பமே எனஅறி

கஜமுகன் திருமுகம்
கண்டுகளி தினமினி
நிஜமென மருவிடும்-உடன்
வருகிற கனவினி

பரமனின் முதல்மகன்
அடியினை உடன்பணி
பயமது அடங்கிடும்-உடன்
தொடர்ந்திடும் ஜெயமினி

உமையவள் திருமகன்
புகழ்மொழி தினம்படி
நிலைபெறும் நிம்மதி-இனி
நிலைத்திடும் என்றறி

சரவணன் மனம் கவர்
கரிமுகன் பதம்பணி
குறையினி என்றுமில்லை-இனி
நிறைவுதான் எனத்தெளி

Sunday, August 28, 2011

நினைவுகூறல் கடமை அல்லவா

ஆடிப்பாடி எல்லோரும் கொண்டாடுவோம்
ஆனந்தமாய் இந்தநாளைக் கொண்டாடுவோம்
கூடிப்பாடி மகிழ்வுடனே கொண்டாடுவோம்-மாண்டிச்சோரி
பிறந்த நாளைத் திருநாளாய் கொண்டாடுவோம்

குழந்தை மனம் பஞ்சுபோல மென்மையானது-அதை
அறிவதுதான் அனைத்திலுமே முதன்மையானது-இதை
உலகறிய சொல்லிவைத்த அன்னையல்லவா-அவர்
அவதரித்த நாளுமிந்த நாள்தான் அல்லவா

பள்ளியது ம் இன்னுமொரு வீடுபோலவே-இதை
குழந்தைகள் உணருமாறு செய்தல்வேண்டுமே -என
எல்லோரும் அறியவைத்த அறிஞர் அல்லவா-அவர்
பிறந்திட்ட நாளுமிந்த நாள்தான் இல்லையா

திணிக்கின்ற பண்டமல்ல கல்வியென்பது-எளிதாய்
புரிந்துகொள்ள உதவுவதே பள்ளியென்பது-இதை
அனைவருக்கும் புரியவைத்த மேதையல்லவா-அவ்ர்
வந்துதித்த இந்நாளே நன்நாள் அல்லவா

இரண்டுமுதல் ஆறுவரை ஈர்க்கும் பருவமே-இதைத்
தெளிவாகத் திட்டமிட முயல்தல் வேண்டுமே -என்ற
சிறப்புமிக்க சேதிசொன்ன தெய்வ மல்லவா-அவரை
இந் நாளில் நினைவுகூறல் கடமை அல்லவா

(மரியா மாண்டிச் சோரி 31.08.1870)

Tuesday, August 23, 2011

வெட்டவெளிதன்னை மெய்யென்று உணரும் ...

சிலைகளுக்கும் பக்தனுக்கும்
இடையில்தான் பூசாரி நிற்கிறான்
ஆதிமூலத்திற்கும் பக்தனுக்கும் இடையில்
நிச்சயமாக அவன் இல்லை
எங்கெங்கோ எதை எதையோ
தேடி அலையும் பாவப்பட்ட பக்தன்
இதை அறிந்து கொண்டால்
பகுத்தறிவும் பெருகிப் போகும்
பூசாரிக்கும் தான் மனிதன் என்று
புரிந்தும் போகும்

சில வித்தைகளுக்கும் சீடனுக்கும்
இடையில்தான் "ஆனந்தாக்கள் "இருக்கிறார்கள்
பரம்பொருளுக்கும் சீடர்களுக்கும் இடையில்
சத்தியமாக இல்லவே இல்லை
அமைதி தேடும் அறிவு ஜீவிகள்
இதைத் தெளிவாகப் புரிந்துகொண்டால்
தேடும் அமைதி இலவசமாய் கிட்டும்
போலி பீடங்கள் தகர்ந்து நொறுங்க
"ஆனந்தர்களின்" வேஷங்களும்
முழுதாய் கலையும்

எவையெல்லாம் இல்லாது
நாமிருக்க முடியாதோ
அதுவாகவே நம்மைச் சுற்றி இருப்பவனை
அடியாள்ம் காட்ட ஒரு வழிகாட்டி தேடி
நாம்தான் நாளெல்லாம் அலைகிறோம்
போலிகள் காட்டும் வழியில்
நாயாய் அலைந்து சாகிறோம்

நம் நோக்கில் நாடுகளாய்
பூமியைப் பிரித்திருத்தலைப்போல்
அந்த ஆதி மூலம் தன்னை
பத்து பதினைந்தாய் பிரித்துக் கொண்டதில்லை
கதிரவன் போல் நிலவுபோல் காற்றுபோல்
எப்போதும் அவன் ஏகனாய்தான் இருக்கிறான்
எல்லோருக்குமாகத்தான் இருக்கிறான்

இந்த சிறிய உண்மை புரிந்து கொண்டால்
"வெட்டவெளிதன்னை மெய்யென்று உணரும் "
பக்குவம் நமக்கும் வந்துவிடும்
வித்தைகள் காட்டி ஏய்த்துப் பிழைக்கும்
எத்தர்கள் கூட்டமும் ஒழிந்துவிடும்

Sunday, August 21, 2011

இறுதிப் பா என்றாமோ ?

இணைவதற்கு உதவிடுமோ
இறுதிப்பா என்றாமோ
எனக்குள்ளே உயிர்துடிக்க
உதிரத்தால் எழுதுகிறேன்

பொழுதுபோன வேளையிலே
நெருஞ்சிமுள் காட்டினிலே
வழிதேடி அலைகின்றேன்
வழித்தடமாய் வாராயோ

சுட்டெரிக்கும் பாலையிலே
நீரின்றித் துடிக்கிறேன்
கொட்டுகிற மழையாக
குளிர்விக்க வாராயோ

புயல் சூழ்ந்த கடல் நடுவே
பரிதவிக்கும் படகானேன்
கரம்பிடித்துக்  கரைசேர்க்க
கண்ணாநீ வாராயோ

இனிப்பெல்லாம் கசப்பாக
முழுநிலவு நெருப்பாக
மதியிழந்து வாடுகிறேன்
மகராசா வாராயோ

ஊரெல்லாம் பகையாகி
நம்முறவை மெல்கிறது
ஊரதனின் வாயடைக்க
உடனடியாய் வாராயோ

மறைத்திடவும் தெரியாது
மறந்திடவும் தெரியாது
தரைப்பட்ட மீனாக
துடிதுடித்துச் சாகின்றேன்

ஒருதிங்கள் பொறுத்திருப்பேன்
உனக்காகத் தவமிருப்பேன்
வருகின்ற வழியெல்லாம்
விழிவைத்துக் காத்திருப்பேன்

எல்லையினில் நிற்பதனை
இனியேனும் புரிந்து நீ
துள்ளியோடி வாராயோ
துயரழிக்க வாராயோ

ஆனமட்டும் பொறுத்துவிட்டேன்
அடுத்தவழி நினைத்துவிட்டேன்
காலனவன் தொடும் முன்னே
காத்திடவே வாராயோ

Thursday, August 18, 2011

விட்டு விலகி விடுதலையாகி...

தொட்டு தொடர்ந்து தொடர்கதைகளாகி
வாழ்வென ஆகிப்போனவைகளையெல்லாம்
விட்டு விலகி விடுதலையாகிப் பார்க்கையில்..
சராசரிப் பார்வையில்
நேராகத் தெரிவனவெல்லாம்
சரியாகப் பார்க்கையில்
தலைகீழாகத்தான் தெரிகின்றன

உணவின்றி பல நாளும்
நீரின்றி சில நாளும்
உயிர் வாழக் கூடும் எனினும்
தொடர் சுவாசமின்றி
சில நொடிகள் கூட
உயிர் வாழுதல் இயலாதெனினும்

உணவுக்கெனவும் நீருக்கெனவும்
வாழும் நாளெல்லாம்
உழைத்தே சாகும் மனிதன்
சுவாசம் குறித்து சிறிதும்
கவனம் கொள்ளாது
விலங்கென வாழ்தலே
சரியெனக் கொள்ளுதலை
யோசித்துப் பார்க்கையில்...

அறத்தை மூலதனமாக்கி
பொருளீட்டலும்
அங்ஙனம் ஈட்டிய பொருள்கொண்டு
இன்பம் அனுபவித்தலே
அறவழி என வாழ்தலை விடுத்து

இன்பம் துய்த்தலும்
அதற்கென எங்ஙனமாயினும்
பொருளீட்டத் துடித்தலும்
அறமது குறுக்கிடுமாயின்
அதனை வெட்டிச் சாய்த்து
அரக்கனாய் வாழ்தலே
முறையெனத் தெளிவதைப்
நாளும் பார்க்கையில்..

இக்கணம் ஒன்றே சாசுவதம் எனத்
தெளிவாகத் தெரிந்திருந்தும்
நேற்றைய கவலைகளில்
நாளைய கனவுகளில்
வாழ் நாளையெல்லாம்
பாழாக்கித் தொலைத்துவிட்டு
"எண்ணங்களால் இமயத்தை
அசைத்து மகிழ்ந்து
செயலால் துரும்பசைக்காது"
வாய்ச் சொல் வீரர்களாய்
வாழ்ந்து வீழ்வோரை
கணந்தோரும் பார்க்கையில்...

காணுகின்ற அனைத்தையும்
பகுத்தறிவுக்கு உட்படுத்தி
பரிசீலித்துப் பார்க்கையில்
மனிதர்களின் பார்வையில்
வௌவால்கள் எல்லாம்
தலைகீழாய் தொங்குதல் போலே
வௌவால்களின் பார்வையில்
மனிதர்கள் எல்லாம்
தலை கீழாய் உலவுதல் போலே

நிலைமாறிப் பார்க்கையில்
நேராகவும் சரியாகவும்
தெரிவன எல்லாம்
தவறாகவும் தலைகீழாகவுமே
தோன்றிச் சிரிக்கிறது

முண்டாசுக் கவி வாக்கின்படி
"சிட்டுக்குருவியைப்போலே
விட்டு விடுதலையாகி .."
விலகி நின்று பார்த்தால்தான்
விளங்காதவை எல்லாம் தெளிவாக
விளங்கத் துவங்குமோ?
புரியாததை எல்லாம் குழப்பமின்றி
புரியத் துவங்குமோ ?

Monday, August 15, 2011

ஒரு சினிநொறுக்ஸ்

பத்மினி பிக்சர்ஸ் என்கிற பெயரில்
திரைபட இயக்குநர் பிஆர்.பந்துலு அவர்கள்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை வைத்து
மிகப் பிரமாதமான பிரமாண்டமான படங்கள் தயாரித்து இயக்கி உள்ளார்கள்
குறிப்பாக கப்பலோட்டிய தமிழன்.வீரபாண்டிய கட்டபொம்மன்
கர்ணன்முதலான படங்கள்
இவைகள்எல்லாம் காலத்தால்அழியாத மாபெரும் காவியங்கள்.
இவைகள் எல்லாம்பெயரும் புகழும் சேர்த்துக் கொடுத்த அளவு
அவருக்குப் பணம் சம்பாதித்துக் கொடுக்கவில்லை

அதே சமய்ம் ஏ.பி நாகராஜன் அவர்களும் நடிகர் திலகம்
அவர்களை வைத்து பல படங்கள் இயக்கி உள்ளார்
ஆயினும் அவைகள் எல்லாம் மிகப் பிரமாண்டமான
தயரிப்புகள் எனச் சொல்ல முடியாது என்வே
அவருக்கு பொருளாதர ரீதியில் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை

இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட நாளில் ஏ.பி.என் அவர்களின்
 நவராத்திரி படமும் பி.ஆர்.பந்துலு அவர்களின்
முரடன் முத்து படமும் வெளியாகிறது.அதுவரை நடிகர் திலகம்
அவர்களின் படங்கள் 99 வெளியாகி இருக்கின்றன
இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகி இருப்பதால்
எது 100வது படம் எனச் சொல்லவேண்டிய நிலையில்
நடிகர் திலகம் அவர்கள் இருக்கிறார்கள் .தமிழ் நாடே
நடிகர் திலகம் அவர்களின் முடிவுக்காகக் காத்திருக்கிறது

விமர்சனங்கள் மற்றும் 9 விதமான கதாபாத்திரங்களில்
நடிகர் திலகம் அவர்களின் நடிப்பு மற்றும் மக்கள் ஆதரவு என
அனைத்திலும் நவராத்திரியே முன்னணியில் இருந்ததால்
நவராத்திரியே 100 வது படம் என அறிவிக்கிறார்.

இது நடிகர் திலகம் அவர்களை வைத்து நஷ்டப்பட்டாலும்
பரவாயில்லை என செலவு அதிகம் செய்து சரித்திரப் படங்களாகவும்
புராணப் படங்களாகவும் எடுத்த பி.ஆர் பந்துலு அவர்களை
மிகவும் சங்கடப் படுத்திவிடுகிறது

அந்த வேதனையில் அதுவரை புரட்சித்தலைவரை வைத்து படமே
எடுக்காத பி.ஆர் பந்துலு அவர்கள் முதன் முதலாக
மிகப் பிரமாண்டமான படமாக ஒரு படம் எடுக்கிறார்
ஒரு வேகத்தில் எடுக்கும் படத்தில் எத்தனை சிறப்புகள்
செய்ய முடியுமோ அத்தனையும் செய்து அந்தப் படத்தை
தன் வாழ் நாள் சாதனைப் படமாகவே எடுக்கிறார்
அதுதான் ஆயிரத்தில் ஒருவன்.
அந்தப் படம் வசூலில் மிகப் பெரிய சாதனைப் படைத்து
இன்றுவரை எவர் க்ரீன் படமாகவே உள்ளது

பி.ஆர் பந்துலு மட்டும் அல்ல தமிழ் பட சாதனை இயக்கு நர்கள்
ஏ.பி. என் அவர்களும் ஸ்ரீதர் அவர்களும் கூட தங்களது
 சாதனை மற்றும்சோதனைப் படங்களால் வந்த
 பொருளாதரப் பின்னடைவை புரட்சிதலைவரை வைத்து
 படம் எடுத்துதான் சரிசெய்து கொண்டார்கள்
அந்தப் படங்கள் எதுவென தெரிந்தவர்கள் பின்னூட்டமிடலாமே !


சினி நொறுக்ஸ் தொடரும்

Wednesday, August 10, 2011

மரண பயம்.?

குற்றவாளிபோல் நான் இருக்க
என்னைச் சுற்றி
மகனும் மகளும் மருமகளும்

"நான் என்ன குறை வைக்கிறேன்னு
நீங்களே நேரடியா கேளுங்கோ

காலையில் ஆறு மணிக்கு
ஸ்ராங்கா ஒரு கப் காஃபி
வாக்கிங் போய் வந்ததும்
ஒரு கப் ஓட்ஸ் கஞ்சி
பதினொரு மணிக்கு
முளைகட்டிய பயறு ஏதாய்ச்ச்சும்
மதியம் காய்கறியோடு
அளவான சாப்பாடு
சாய்ந்திரம் ஏதாவது ஜூஸ்
ராத்திரி எண்ணையில்லாம
சப்பாத்தி நாண்
 இப்படி ஏதாவது
முடியுதோ முடியலையோ
நான் சரியாகத்தான் செய்து தந்தேன்
இப்போது ஒரு மாதமாய்  அவர் சரியாக
சாப்பிடரதும் இல்லை
முகம் கொடுத்து பேசரதும் இல்லை"
முந்தானையால் கண்ணீரைத்
துடைக்க முயன்று தோற்கிறாள் மருமகள்

" கோவில் போய்வர ஆட்டோ
ஆன்மீக டூர் போகணுமா
ஆறு மாதத்துக்கு ஒருமுறை
அதுக்கும் ஏற்பாடு பண்ணித்தாரேன்
என்னிடம் பணம் கேட்கச்
சங்கடப் படக்கூடாதுண்ணு ஏ.டி.எம் கார்டு
நானும் யோசிச்சு யோசிச்சு
முடிந்ததையெல்லாம் செய்யரேன்
அப்படியும் ஏன் இப்பவெல்லாம்
சரியா பேசமாட்டேங்கராருன்னு தெரியலை"
பல நாள் அடக்கிவைத்ததை
கொட்டி த்தீர்க்கிறான் ஆருயிர் மகன்

"மனதில் என்ன குறை இருந்தாலும்
சொல்லுப்பா
எதுன்னாலும் செய்யுறொம்
எங்களை சங்கடப் பட வைக்காதே அப்பா"
எனக் கையைப் பிடி த்துக் கொள்கிறாள்
பார்த்துப் போக வந்த மகள்

நான் என்னவெனச் சொல்வது ?
அவர்களுக்கு எப்படி புரிய வைப்பது?

ஆட்டுக்குத் தேவையான
அனைத்தும் கொடுத்தும்
எதிரில் புலியைக்
கட்டிவைத்த கதையாய்...

வீட்டுக்குள்
கரு நாகம்படமெடுத்து நுழைந்ததைக்
கண்ணாரப் பார்த்தும்
இருப்பிடம் தெரியாது வீட்டுக்குள்
பயந்து திரிபவன் ..நிலையாய் 

நாற்பதாய் இருந்த
நண்பர்களின் எண்ணிக்கை
நாள்பட நாள்பட நசிந்து கொண்டே போய்
ஒன்றாகிப் போனதும்...

அந்த ஒருவனும் போன மாதம்
பொசுக்கென போனதும்..

அடுத்தது நான் தான் என
மனம் முற்றிலுமாய் ஏற்று
அரண்டு போய் இருப்பதையும்..

காலனின் கரிய நிழல்
உயிரினில் உரசும் சப்தம்
இடியோசையாய் என்னுள்
சில நாட்களாகக் கேட்பதையும்..

எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது ?

எப்படி அவர்களை நோக வைப்பது ?

Monday, August 8, 2011

மீண்டும்....

கோ வில்களில் உற்சவ மூர்த்தி நகர்வலம் போயிருக்கிறார்
என்றால் சன்னதியை சாத்தி விடுவார்கள்
பூஜை தீப ஆராதனையெல்லாம் உற்சவ மூர்த்தி
சன்னதி திரும்பியவுடன்தான்

அதைப்போலவே
ஒருவார காலம் வலைச்சர ஆசிரியர் பணியில் இருந்ததால்
என் பதிவின் பக்கம் வரவே இயலவில்லை
எந்தப் பதிவர்களின் பதிவையும் பார்க்க இயலவில்லை
பின்னூட்டம் இடவும் முடியவில்லை.
அது மிகவும் மனச் சங்கடம் அளிப்பதாகத்தான் இருந்தது

ஆயினும்
என்னைப் பின்தொடர்பவர்கள் அனைவருக்கும் பல புதிய
பதிவர்களை அறிமுகம் செய்துவைத்ததும்
அதன் காரணமாக மிக நன்றாக பதிவுகள் இட்டும்
அதிக பின்னூட்டம் பெறாமல் இருந்த பல பதிவர்களின்
பதிவுகளில் அதிக பின்னூட்டங்களைப் பார்த்ததும்,
பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கூடியதைப்பார்த்ததும்
என்னுடைய மன வருத்தம் இருந்த இடம் தெரியாது மறைந்து போனது

பல புதிய் பதிவர்களுக்கு வலைச்சரம் குறித்துக் கூட தெரிந்திருக்கவில்லை.
அவர்கள் தெரிந்து கொண்டுஅவர்களையும் அதில் இணைத்துக் கொண்டு
 எனக்கும் வாழ்த்து தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பி இருந்தது
மிகவும் மகிழ்வளிப்பதாய் இருந்தது

வெகு காலம் பதிவிடாமல் இருந்த நல்ல பதிவருக்கு
நான் வலைச்ச்ரம் மூலம் வேண்டுகோள் விடுக்க
அவரும் உடன் தொடர்பு கொண்டவிதமும்
அவர் வரவை உற்சாகமாக வரவேற்று பல பதிவர்கள்
உடன் பின்னூட்டமிட்டு வாழ்த்தியதும் எனக்கே
பதிவுலகின் எல்லையற்ற தன்மையை அதன் பலத்தை
மீண்டும் ஒருமுறை உணரவைப்பதாய் இருந்தது

அதிக அளவில் பின்னூட்டமிட்டு கௌரவித்த அனைவருக்கும்
மீண்டும் ஒருமுறை நன்றி கூறி வழக்கம்போல் தொடர்ந்து
பதிவிடத் தயாராகிவிட்டேன் என இந்தப் பதிவின் மூலம்
தெரியப்படுத்திக்கொள்கிறேன்

தொடர்ந்து சந்திப்போம்...வாழ்த்துக்களுடன்...