Wednesday, September 25, 2013

சினிமா -ஒரு மாய மோகினி- (2)

ஒரு மாறுதலாக புராண நாடகங்களுக்குப் பதிலாக
சமூக நாடகம் போடுகிறோம் என்கிற
மன நிலையைத் தாண்டி ஏதோ  ஒருபெரும் புரட்சி
செய்யப்போகிறோம் என்கிற மனோபாவம்
எங்களில் சிலருக்கு இருந்ததால்....

நிச்சயம் இதற்கு ஊரில் அதிக எதிர்ப்பும்
எதிர்பார்ப்பும் இருக்கும் எனக் கருதியதால்...

எங்கள் நோக்கத்திற்கு உடன்பட்டவர்களைத் தவிர
வேறு  யாரையும் கூட்டத்தில் கலந்து கொள்ள
அனுமதிப்பதில்லை என் முடிவு செய்து
முதல் கூட்டத்தை ஒரு ரகசியக் கூட்டம் போலவே
ஏற்பாடு செய்திருந்தோம்.

முதல் கூட்டமே மிகவும் வித்தியாசமாக இருந்தது

பள்ளி செல்லாத மைக் செட் வைத்திருந்த மணி,

சைக்கிளிலில் பால் வியாபாரம் செய்து கொண்டு
இடையிடையே மேடையில் ரிகார்ட் டான்ஸ்
ஆடிக்கொண்டு மேடை அனுபவம் பெற்றிருந்த
மணிக்கு உறவினனான கந்தன்,

கவிதையும் கதையும் எழுதிக் கொண்டு
அது பத்திரிக்கையில் வராது போக
கையெழுத்துப் பிரதி நடத்திக் கொண்டிருந்த
என் போன்ற இலக்கிய ஆர்வலர்கள் சிலர்.
,
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் சிலர்
,
முற்போக்கு முகாமைச் சேர்ந்த சில தோழர்கள் என

அந்த முதல் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
அனைவருமே மன நிலையிலும்,
சிந்திக்கும் நிலையிலும் முற்றிலும்
மாறுபட்டவர்களாயிருந்தோம்.

ஜாதிப் பெயரிலேயே தெருப்பெயரினையும்
ஜாதிப் பெயரைச் சொல்லியே ஒருவரை ஒருவர்
அழைத்துக் கொள்ளும் பழக்கம் இருந்த அந்த ஊரில்
ஜாதி கடந்து மதம் கடந்து ஒரு பொது நோக்கத்திற்காக
ஒன்றுபட்ட கூட்டமாக இந்தக் கூட்டம்
இருந்த போதிலும்இதில் கலந்து கொண்ட
 ஒவ்வொருவருக்கும் இந்த நாடகத்தின் மூலம்
 நிறைவேற்றிக் கொள்ளவென
ஒவ்வொரு விதமான அபிலாஷைகளும்
நோக்கங்களும்  இருந்தது என்பது
முதல் கூட்டத்திலேயே தெளிவாகத் தெரிந்தது

தனிமனித சிந்தனையை கூட்டாக
 ஒரு செயல்வடிவம்கொடுக்க முயல்கையில்
 ஏற்படும் இடர்பாடுகள் குறித்தும்
மிகச் சரியாகக் கையாளப்படவில்லையெனில்
நம் நோக்கத்திற்கு முற்றிலும் மாறுபாடானதாக
அது எப்படி மாறிவிடும் என்பதையும்
அனுபவப் பூர்வமாக உணர என்போன்றோருக்கு
அந்த முதல் கூட்டமும் அதைத் தொடர்ந்த
 நிகழ்வுகளும் பாலபாடமாக அமைந்தது என்றால்
அது மிகையில்லை

(தொடரும் )

Friday, September 20, 2013

சினிமா- ஒரு மாய மோகினி

எப்படி எனக்கு சினிமாவின் மீது அப்படியொரு மோகம்
வந்தது என இப்போது நினைத்துப் பார்த்தாலும்
அனுமானிக்க முடியவில்லை

எங்களூரின் நான் சிறுவனாய் இருக்கையில் அதிகம்
நாடகம் நடக்கும்.குறிப்பாக வள்ளி திருமணமும்
ஹரிச்சந்தரா நாடகமும்.தெரிந்த கதைதான்
என்றாலும் கூட எங்களூர் "பெருசுகள் "
ஒவ்வொரு முறையும் எந்த ஊரில் எந்த நடிகர்
எந்தக் கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்வார்களோ
அவர்களைத் தேர்ந்தெடுத்து எங்களூரில் நடிக்கச்
செய்வார்கள்

அவர்களுக்கு ஓத்திகை கிடையாது
என்பதால் ஒவ்வொரு கதாப்பாத்திரத்து நடிகரும்
பாத்திரத்தை மீறித் தான் தான் ஜெயிக்கவேண்டும்
எனச் செய்கிற ஜெகதலப் பிரதாபங்கள் நாடகத்தை
உச்சக் கட்டத்திற்குக் கொண்டு செல்லும்.

பல சமயங்களில்  வள்ளி திருமணத்தில்  வள்ளிக்கும்
முருகனுக்குமான  இறுதி தர்க்கம் முடிவடையாது
வள்ளிமாலை வாங்காது போன நிகழ்வுகளும்
அதன் தொடர்சியாய் "பெருசுகள் " அப்படி
மாலை வாங்காமல் போனால் ஊருக்கு
ஆகாமல் போகும்என்று கெஞ்சிக் கூத்தாடி
மேடை பின்புறம் கூட மாலை வாங்கவைத்த
நிகழ்வுகள் இப்போது  கூடஎன்னுள் நிழற்படமாய்
ஓடிக் கொண்டுதான்  இருக்கிறது

அந்த சமயத்தில் "புதுமையும் புரட்சியுமே " எங்கள்
மூச்சு என்கிற நினைப்பில் படித்துக் கொண்டிருந்த
சிலரும்படித்து வேலை கிடைக்காமல்
அலைந்து கொண்டிருந்த சிலரும் நண்பர்களாய்
 இருந்தோம்

.எங்களுகெல்லாம் இந்தப் பெருசுகள்  இப்படியே
விட்டால் நூறு வருஷம் கூட வள்ளி திருமணத்தையும்
ஹரிச்சந்தரா மயான காண்டத்தையும் போட்டுக்
கொண்டுதான் இருப்பார்கள். இதற்கு மாற்றாக நாம்
உடனடியாக இன்றைய சமுகப் பிரச்சனைகளை
உள்ளடக்கியதாக சமூக நாடகம் ஒன்று போட்டு
இந்தப் பெருசுகளையும் சமூகத்தையும் உடனடியாக
மாற்றியாக வேண்டும் என முடிவெடுத்தோம்

என்ன காரணத்திலோ பெருசுகளுடன் மன விரோதம்
கொண்ட ஒலி பெருக்கி வைத்திருந்த மணி அண்ணனும்
ஒலி ஒளி அமைப்பும் இலவசமாய் தான்
செய்து தருவதாக ஒப்புக் கொள்ள உடனடியாக
ஒரு கூட்டம் போட்டு ஏபிஎம் நாடக் குழு என
ஒலிபெருக்கி அமைப்பாளரின்
பெயரிலேயே ஒரு நாடகக் குழுவை ஆரம்பித்தோம்

(தொடரும் )

Sunday, September 15, 2013

ஊருக் குள்ளே நல்ல "பாரு"

பாருக் குள்ளே நல்ல நாடு
நம்ம நாடு என்று
வீறு கொண்டு இருந்தோம் அன்று-பகை
வென்று மகிழ்ந்தோம் அன்று

ஊருக் குள்ளே நல்ல "பாரு"
எந்த "பாரு " என்று
தேடி யலைந்துத் திரிகிறோம் இன்று-மதியைக்
தோண்டிப் புதைக்கிறோம் இன்று

பன்னரும் உபநிட நூலெங்கள் நூலென
பெருமிதம் கொண்டோம் அன்று
பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடென-நெஞ்சம்
பூரித்து நின்றோம் அன்று

விண்ணகம் முட்டும் விலையில் கல்வியை
உயரே கொண்டு வைத்து
வன்முறை வளர்ந்திட நாடது கேடுற-நாமே
வழிகள் வகுக்கிறோம் இன்று

இன்னறு கங்கை எங்கள் ஆறென
உரிமை கொண்டோம் அன்று
மன்னும் இமயம் எல்லைக் கோடென-உள்ளம்
மகிழ்ந்து திரிந்தோம் அன்று

அண்டை மாநில உறவு கூட
ஜென்மப் பகைபோல் மாற
வன்மம் வளர்த்து வன்முறை வளர்த்து-கூண்டில்
ஒடுங்கித் தவிக்கிறோம் இன்று

உலகை மாற்றி ஊரை மாற்றி
நம்மை மாற்ற எண்ணும்
தலையச் சுற்றி மூக்கைத் தொடுகிற-வீண்
வேலை இனியும் வேண்டாம்

அவலம் மாற நம்மை மாற்ற
முதலில் முயற்சி செய்வோம்
உலகம் தானே தொடர்ந்து மாறும்-என்ற
உறுதி மனதில் கொள்வோம்

Saturday, September 14, 2013

கவிதைக்குச் செய்யும் தொண்டு

பாட்டுக் கூட பேச்சைப் போல
சுலுவா இருக்கணும் மாமா-அதைக்
கேட்கும் போதே மனசுத் தானா
துள்ளிக் குதிக்கணும் மாமா

நாக்கைப் போட்டுத் தாக்கும் வார்த்தை
ஏதும் தவறியும் மாமா-உன்
பாட்டில் மூக்கை நுழைக்க விடாது
கவனம் கொள்ளணும் ஆமா

நாத்தைத் தடவிப் போகும் தென்றல்
காத்தைப் போலவும் மாமா -ஓடும்
ஆத்து நீரில் மிதந்து போகும்
பூவைப் போலவும் மாமா

ஆத்தா தூக்க பொங்கிச் சிரிக்கும்
பாப்பா போலவும் மாமா-உன்
பாட்டு என்றும் இயல்பா  இருக்கணும்
சொல்லிப் புட்டேன் ஆமா

எதுகை மோனை தேடி அலையும்
நிலமை உனக்குமே வந்தா-பாட்டில்
புதுசா சொல்ல விஷயம் தேடி
அலையும் கஷ்டமும் வந்தா

பொசுக்குனு எழுதும் ஆசைய விட்டு
வெளியே வந்துடு மாமா -அதுகூட
கவிதைத் தாயவ மகிழ நாம
செய்கிற தொண்டுதான் மாமா

Friday, September 13, 2013

ரம்பை அவளே வந்து நின்னாலும்...

போற போக்கில பாக்கும் போதே
போத ஏறுதே-அவளை
நின்னு பாத்தா என்ன ஆகும்
மனசு பதறுதே
தூர நின்னு பாக்கும் போதே
மூச்சு வாங்குதே -ஆனா
ஆற அமரப் பாக்கத் தானே
மனசு ஏங்குதே

ராசா கால வில்லு அம்பு
அவளின் கண்ணிலே -அது
நேரா என்னை ஈட்டிப் போலக்
குத்தித் தள்ளுதே
ரோசாப் பூவின் வாசம் அவளின்
செவத்த உடம்பிலே -என்னை
லூசுப் போல சுத்த வைச்சு
தினமும் கொல்லுதே

ஆத்து ஓரம் நேத்து அவளைப்
பாத்த போதிலே-அழகா
பூத்துச் சிரிக்கும் குண்டு மல்லிப்
பூவைப் போலவே
பார்த்துச் சிரிச்ச சிரிப்பு ஒன்று
எனக்குப் போதுமே -அதுவே
சேர்த்து எனக்கு நூறு சேதி
சொல்லிப் போகுமே

கோடிக் கோடி ரூவா எனக்குச்
சேர்த்துத் தந்தாலும்-என்னைத்
தேடி அந்த ரம்பை அவளே
வந்து நின்னாலும்
வேறு பொண்ணை இந்த மனசு
நினைச்சுப் பாக்காதே-அந்த
தேவி யோடு வாழா திந்த
கட்டை வேகாதே

Wednesday, September 11, 2013

பாட்டுக்கொருவனின் பாதம் பணிவோம்

நல்லதோர் வீணையாய் அவனிருந்தான்
அதனால்தானே மடமை இருளில்
ஆழ்ந்திருந்த மக்களை தட்டி எழுப்பி
பூபாளம் இசைத்து விடியலைக் காட்ட முடிந்தது

சுடர்மிகும் அறிவுடன் அவனிருந்தான்
அதனால்தானே அடிமைச் சிறுமதிச் சுகத்தில்
சீரழிந்து பார்வையற்றுக் கிடந்த தம் மக்களுக்கு
ஒளியாகி விழிப்பூட்டி நல்வழி காட்ட முடிந்தது

எமக்குத் தொழிலே கவிதை யென்றிருந்தான்
அதனால்தானே பண்டிதர்களின் நாவினில்
அடைபட்டுத் தவித்த அருந்தமிழை விடுவித்து
கவிதையை அனைவருக்குமான தாக்க முடிந்தது

ஊருக்குழைத்தலே தன் கடமையென்றிருந்தான்
அதனால்தானே சமூகச் சீர்கேட்டைச் சீரழிக்கும்
கூர்வாளாய்ப்  புரட்சிக் கவிகள் படைத்து
சமதர்மச் சமூதாயத்திற்கு அடித்தளமிட முடிந்தது

இருக்கும்வரை இமைப்பொழுதும் சோராதிருந்தான்
அதனால்தானே இளம்வயதில்
 காலனவன் அழைத்தபோதும்
காலத்தை வென்றவனாய் காவிய மானவனாய்
பாட்டுக்கொருவனாய் இன்றளவும்
 பரிமளிக்க முடிகிறது

Tuesday, September 10, 2013

காக்கை உறவு

கடிகார முட்கள் கூட
தவறான நேரத்தைக் காட்டி விடக்கூடும்
அந்தக் காக்கைகள் மட்டும்
நேரம் தவறி  வந்ததே இல்லை

"அந்தச் சனியன்கள் மிகச் சரியாக வந்துவிடும்
உலை வைக்கணும் " என
கோபப்படுவது போல் பேசினாலும்
காக்கைகளின் மேல் பாட்டிக்கு
வாஞ்சை அதிகம்

முதல் நாள் சாப்பாடு மிஞ்சிய நாட்களில்
எங்களுக்காக சமைக்காவிட்டாலும் கூட
"பிடிச்சபிடி " என காக்கைக்கென
தனியாக உலைவைப்பாள் பாட்டி

பாட்டி மரித்துப்போன அந்த நாளில்
வந்திருந்த காக்கைகளுக்கு
உணவிட முடியவில்லை
அவைகளும்  செய்தியறிந்து வந்ததுபோல
எப்போதும் போலக் கூச்சலிடாது
வெகு நேரம் மரத்தின் மேல்
அமர்ந்திருந்து போயின

சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்து
பாட்டியின் நினைவாக
நாங்களும் காக்கைக்கு உணவு கொடுக்க
எத்தனை முறை முயன்றபோதும்
அந்தக் காக்கைகள் மட்டும் ஏனோ
வீட்டுப் பக்கம் வரவே இல்லை
அன்று அதற்கான காரணமும் புரியவில்லை

சம்பிரதாயத்திற்கும் அன்னியோன்யத்திற்குமுள்ள
சிறு மாறுபாடு எனக்குப் புரிகிற இந்த நாளில்
கடனெனச் செய்தலுக்கும் படைப்பதற்குமுள்ள
பெரும் வேறுபாடு பறவைகளுக்கும் புரியும் எனப்
புரிந்து கொள்கிற இந்த வேளையில்

கான்கிரீட் காடுகளில் காலத்தின் கட்டுப்பாட்டில்
கையாளாகாதவர்களுள் ஒருவனாய்  நான்...
மனிதன் மீது நம்பிக்கை முற்றாக இழந்து
கண்காணாது நிம்மதியாய் எங்கோ அவைகள்.

Sunday, September 8, 2013

விளையாட்டுக் களமும் வாழ்க்கைக் களமும்

வலிமையின்
நுணுக்கத்தின்
தெளிவின்
விகிதாச் சாரங்களே
களத்தில் எவரின் நிலையையும்
முடிவு செய்து ப் போகிறது

மூன்றின் கருணை நிழல்களும்
தன்மீது படியாத வரையில்
பரப்பிரம்மப்  பார்வையாளனாய்
இருக்கையில் விழிப்பவனே

 வலிமையின் ஆதிக்கத்தில்
நுணுக்கமும் தெளிவும் அடங்கிக் கிடக்க
இளைஞனாய் விளையாடுபவனாய்
களத்தில் மிளிர்பவனே

நுணுக்கத்தின் ஆதிக்கத்தில்
வலிமையும் தெளிவும் சாய்ந்து கொள்ள
நடுவயதினனாய் பயிற்சியாளனாய்க்
களத்தில் தொடர்பவனே...

தெளிவின் ஆதிக்கத்தில்
வலிமையும் நுணுக்கமும் ஒடுங்கிவிட
முதியவனாய் நடுவராய்
களத்தில் நிற்பவனே...

மூன்றின் வீரியமும்
முற்றாக குறைந்துவிட
முதிர்ச்சியுற்ற  பார்வையாளனாய்
இருக்கையில் அடங்கிவிடுகிறான்

ஆம்.....
வலிமையின்
நுணுக்கத்தின்
தெளிவின்
விகிதாச்சாரங்கள்தான்
ஒருவரின் நிலைப்பாட்டை
நிச்சயம் செய்து போகிறது
விளையாட்டுக் களத்தில் மட்டுமல்ல
வாழ்க்கைக் களத்தினிலும் கூட

Saturday, September 7, 2013

இலைமறை காய்

ஊட்டிவிடப்பட்ட அமுதினும்
உண்ணும்படி விடப்பட்ட
வெறும் சோற்றின் சுவைதான்
கொஞ்சம் தூக்கலாயிருக்கிறது

வழித்துணையாய் வருதலைவிட
வழிசொல்லி விலகுபவரே
பயணப்பாதையினைத் தெளிவாகச்
சொன்னதுபோலப் படுகிறது

அருமையாக விளக்கப்பட்ட
சுவையான அனுபவத்தினும்
உள்அனுபவமதை கீறிவிடும்  உரையே
அதிக சுகானுபவம்தந்து போகிறது

புரியும்படி மிகத் தெளிவாய்ச்
சொல்லப்பட்டப் படைப்பினும்
விளங்கிக் கொள்ளும்படி விடப்பட்டதே
நிறையச் சொல்லிப்போகிறது

Thursday, September 5, 2013

செயல் வெற்றிக்கு இலகுவான சூத்திரம்

ஒரு செயல் துவங்கப்படும் முன்னரே
அதிலடங்கியுள்ள சிக்கல்களை
பிரதானப்படுத்தி  உன்னை
செயலிழக்கச் செய்பவரா அவர் ?

அவரை உன்னை விட்டு
ஆயிரம்அடி தள்ளி வை
அவர் எத்தனைப் பெரிய அறிஞராயினும்...

ஆலோசனைகள் என்றால் முன்வரிசையிலும்
செயல்படுதல் எனில்
கண்பார்வை விட்டு கடந்து நிற்பவரா அவர் ?

அவரை உன்னை விட்டு
ஐநூறுஅடி விலகி வை
அவர் எந்த அளவு செல்வாக்குள்ளவராயினும்...

நிகழ்வுகளின் போது காணாது போய்
எல்லாம் முடிந்த பின்
தெளிவாக விமர்சிப்பவரா அவர் ?

அவரை உன்னை விட்டு
நூறடி ஒதுங்கி வை
அவர் எத்தனை பெரிய பதவியுடையவராயினும்..

தன்னை முன்னிலைப் படுத்தாத
எந்த நிகழ்வினையும்
சீர்குலைத்து சுகம் காண நினைப்பவரா ?

அவரை உன்னை விட்டு
கண் காணாது ஒதுக்கி வை
அவர் எத்தனை அளவு திறனுடையவராயினும்...

ஆரோக்கியமான உடலுக்கு
சத்தான உணவு வகைகள் அவசியம் என்பது சரியே
ஆயினும் அதற்கு முன்
தீங்குசெய் கிருமிகள் அகற்றுதலே மிக மிகச் சரி

Wednesday, September 4, 2013

அர்த்த உயிரும் வார்த்தைப் பிணமும்

மனப்பேய்க்கு வாக்கப்பட்ட பகுத்தறிவு
கைபிசைந்தபடி தலைகுனிந்தபடி
நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்ற
வாசகங்களைப் படித்தபடி
பேயின் விரல்பிடித்தபடி
"பாருக்குள் "தயங்கித் தயங்கி நுழையும்

உடலுக்கு வாக்கப்பட்ட மனஉணர்வுகள்
தெம்பிருந்தும் ஆசையிருந்தும்
பெட்டிக்குள் அடங்கிய நாகமாய்
இற்றுப்போன உடலுக்கடங்கியபடி
தன்னைத்தானே கழுவிலேற்றியபடி
உடலுக்குத் தக்கபடி
கூனிக் குறுகித் தள்ளாடி நடக்கும்

வார்த்தைக்கு வாக்குப்பட்ட அர்த்தங்கள்
வார்த்தையை மீறிய வலுவிருந்தும்
வார்த்தைகளின் பலவீனமறிந்தும்
ஜாடியில் அடைபட்ட பூதமாய்
ஊமையன் கண்ட பெருங்கனவாய்
தன்னைத் தானே சுருக்கியபடி
கவிதைக்குள் தன்னை ஒடுக்கியபடி
அடுக்கிய பிணத்துள்  அடங்கித் தவிக்கும்

Tuesday, September 3, 2013

ஆழக் கடலும் பதிவர் சந்திப்பும்

களிப்பின் உற்பத்திச் சாலையாய்
விரிந்து பரந்து
ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது
அந்த அற்புதக் கடல்

இயலாமையாலும் நேரமின்மையாலும்
எட்டி நின்று அதன் அழகை
ரசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு
ஒரு அற்புத ஓவியமாய்...

தன் அலங்காரம் கலைந்துவிடுமென்று
கரையோரம் அமர்ந்திருந்து அந்தச் சூழலை
உள்வாங்கிக் கொண்டிருந்தோருக்கு
ஒரு அதிசயப் பொருளாய்...

இரசித்தலும் அனுபவித்தலும்
இணைத்துக் கொள்வதில்தான் என
உணர்ந்து தன்னுள் இறங்கியவர்களுக்கு
ஒரு கற்பக விருட்ஷமாய்....

நம்பிக்கையின் ஆழம் பொருத்து
அருள் தரும் ஆண்டவானாய்
அவரவர் மன நிலைக்குத் தக்க
தன்னை உருமாற்றிக் கொண்டிருக்கிறது
அந்த அற்புத அதிசயக் கடல்
நம் பதிவர் சந்திப்பைப் போலவும் ....