Wednesday, October 31, 2012

வரம் வேண்டா தவம்

என்மூலம் வந்ததெல்லாம்
என்னால்தான் வந்ததெனும் 
எண்ணமில்லை என்பதனால்-என்
எண்ணத்தில் வறட்சியில்லை

போற்றுதலைத் தூற்றுதலை
ஓர்கணக்கில் வைப்பதனால்
வாட்டமுற வழியுமில்லை-சிந்தனைத்
தேக்கமுற வாய்ப்புமில்லை

தேடியோடி அலைதலையே
நாடிமனம் திரிவதனால்
பாடுபொருள் பஞ்சமில்லை-வார்த்தைத்
தேடுகிற துயருமில்லை

உணர்வோடு கருவினையும்
இணக்கமாக இணைப்பதினால்
இலக்கணமும் பகைப்பதில்லை-என்னைக்
கலங்கவிட்டு ரசிப்பதில்லை

வழிகாட்டும் ஒளிவிளக்காய்
எழுத்திருக்க நினைப்பதனால்
அணிதேடி அலைவதில்லை-அணியும்
என்னைவிட்டு  நகர்வதில்லை

வரம்வேண்டா தவமாக
தினமெழுத்தில் கரைவதனால்
நிறைவுக்கும் குறைவில்லை-கலைவாணி
அருளுக்கும் குறைவில்லை

Sunday, October 28, 2012

நாம் ஏன் பதிவர்களாய்த் தொடர்கிறோம் ?

கோழையை வென்று
வீரனெனப் பெயர் பெறுவதைவிட
வீரனிடம் தோற்றுக் கோழையெனப்
பெயர் பெறுவது சிறந்ததாகப் படுகிறது

கஞ்சன் தரும்
வள்ளல் பட்டத்தை விட
வள்ளல் தரும் கஞ்சன் பட்டம்
கொஞ்சம் உயர்ந்ததாகத்தான் படுகிறது

முட்டாளிடம் பெறும்
அறிஞன் பட்டத்தை விட
அறிஞன் தரும் முட்டாள் பட்டம்
கூடுதல் மகிழ்வளிக்கத்தான் செய்கிறது

நல்லவன் என
அயோக்கியன் தரும்.சான்றிதழை விட
அயோக்கியன் என நல்லவன் தரும் சான்று
கொஞ்சம் பெருமைகொள்ளத்தான் செய்கிறது

சராசரி வாசகன் தரும்
கவியரசுப் பட்டத்தை விட
பதிவர்கள் தரும் மொக்கைப் பட்டம்-=நமக்கு
அதிகப் பரவசம் தந்துதான் போகிறது
 

Friday, October 26, 2012

அந்தப்புரங்களில் கிரீடம் தவிர்த்தல்....

 எதிர்படும் பெரும்பாலோரின் தலைகளிலும்
அவரவர் தகுதிக்குத் தக்கபடி
தகரம் முதல் தங்கம் வரையிலான
நீண்டு உயர்ந்த கிரீடங்கள்

பிறர் செய்து தராது
அவரவர்களாக செய்து கொண்டதால்
அனைத்துக் கிரீடங்களும்
தலைக்குச் சிறிதும் பொருத்தமின்றி
மிகப் பெரியதாகவே ....

கண்களை மறைப்பதை தவிர்ப்பதற்காகவும்
கழுத்தில் விழுவதை தடுப்பதற்காகவும்
இரு கைகளாலும் கிரீடத்தை இறுகப் பற்றியபடி
வாழ்வின் சுமை குறைக்கும் சூத்திரம் தேடி
எல்லோரும் செக்குமாடாய்த் திரிகின்றனர்
சுமை அந்தக் கிரீடமே என அறியாமலேயே...

கிரீடத்தில் கொண்ட அதீத கவனத்தில்
இடுப்பு வேட்டி அவிழ்ந்ததும் தெரியாது
அடுத்தவர்களின் அம்மணம் கண்டு
முகம் சுழித்தபடி மிகச் சலித்தபடி
வாழ்வின் சுகம் தேடி 
எப்போதும் பந்தயக் குதிரையாய்  பறக்கின்றனர்
சுகம் என்பது கிரீடம் தவிர்தலே எனப் புரியாமலே

தர்பார் மண்டபங்களில் கிரீடம் தரித்தலும்
அந்தப் புரங்களில் கிரீடம் தவிர்தலுமே
சுமையின்றி சுகம்பெறும் ரகசியம் என்பதை
புரிந்த சிலர் மட்டுமே உலகில்
வாழத் தெரிந்தவர்களாய் இருக்கிறார்கள்
வாழ்வைப் புரிந்தவர்களாயும் இருக்கிறார்கள்

Thursday, October 25, 2012

பெண்ணே நீ புதிராகவே இரு

காலங்காலமாய்
இப்போதிருப்பதைப் போலவே
பெண்ணே நீ
எப்போதும்
புதிராகவே இரு
ஒப்பிட முடியாத
உன்னதமாகவே இரு

உணர்வின் வெளிப்பாடு ஒலியிலிருந்து
மொழியாகிய காலம் முதல்

எண்ணத்தின் விரிவு கனவாகி
கற்பனையாகிய நாள் முதல

உன்னை அடைதலே வெற்றியின்
அடையாளமெனக் கொண்ட கணம் முதல்

வாள்வீச்சு சாதிக்காததை சொல்வீச்சு
சாதிக்குமென்பதைக் கண்ட நொடி முதல்

முகமது நிலவென இதழது மலரென
கார்மேகம் குழலென சங்கதே கழுத்தென

இயற்கையில் துவங்கி

டெலிபோன் மணியென மெல்போர்ன் மலரென
ஃபிஃப்டி கேஜ் தாஜ்மகாலென நடமாடும் சாக்லேட் என

இன்று எதிர்படும் உன்னதங்களுடனெல்லாம்
 
சலியாது ஒப்பிட முயன்றும்
எதனுள்ளும் அடங்காது திமிறும்
உன்னதமே,எழிலே,அற்புதமே,ஆனந்தமே

எப்படி முயன்றபோதும்
ஏன்   விரும்புகிறாய்
எதற்காக வெறுக்கிறாய்
ஏன்  அரவணைக்கிராய்
எதற்காக  கழுத்தறுக்கிறாய்

 என   எவராலும்  எப்போதும்

புரிந்து கொள்ள இயலாத
ஆழ்கடல் அதிசயமே
பூவுலக ரகசியமே
சூட்சுமப் பெட்டகமே

நீ புரிந்து போனால்
வாழ்வின் சுவை குன்றிப் போகும்
உன்னை மிகச் சரியாக ஒப்பிட முடிந்தால்
எங்கள் கற்பனைகள் வறண்டு போகும்

எனவே
என்றும் போல
எப்போதும்போல
பெண்ணே நீ
புதிராகவே இரு
மனிதர்கள் எல்லாம் உன்னைப் புரிய முயன்று
வாழ்வை சுவாரஸ்யப்படுத்திக் போகிறோம்
தனித்துவமாகவே இரு
உன்னை ஒப்பிட முயன்று என்போல்
சராசரிகள் கூட கவிஞராகிக் போகிறோம்

Tuesday, October 23, 2012

மங்கையரைக் கௌரவிக்கும் திரு நாள்


மரத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும்
ஆணிவேர்தான் காரணம்
என்பதை விவசாயிக்கு விளக்க வேண்டியதில்லை

மாளிகையின் நிலைப்புக்கும் உறுதிக்கும்
அஸ்திவாரம்தான் முழுக்காரணம் என்பதை
எந்த பொறியாளருக்கும  
விளக்க வேண்டியதில்லை
இச்சமூகத்தின் வளச்சிக்கும் மேன்மைக்கும்
பெண்கள்தான் காரணம் என்பதை
இந்தியாவில் எவருக்கும் யாரும்
விளக்கவேண்டிய அவசியமே இல்லை

ஏனெனில் இதனை ஆதியிலேயே
 மிகத் தெளிவாக அறிந்திருந்தனால்தான்,

படைக்கும் பிரம்மனுக்குத் துணையாக
கலைக்கும் கல்விக்குமான கலைமகளை
துணையாக்கி மகிழ்ந்திருக்கிறான்

காக்கும் திருமாலுக்கு இணையாக
கருணையும் செல்வத்திற்குமான திருமகளை
துணைவியாக்கி குதூகலித்திருக்கிறான்

அழிக்கும் ருத்திரனுக்கு இணையாக
ஆக்ரோஷமும் சக்தி மிக்கவளுமான மலைமகளை
இணையாக்கி இன்பம் கொண்டிருக்கிறான்

கலைமகள் துணையற்று படைத்தலும்
திருமகள் கருணையற்று காத்தலும்
சக்தியின் அருளற்று அழித்தலும்
ஆகாத ஒன்று என அறிந்ததால்தான்
முப்பெரும் தேவியரை பிரதானப் படுத்தி
ஒன்பது இரவுகளை தேர்ந்தெடுத்து
 நவராத்திரியாக கொண்டாடியும்  மகிழ்ந்திருக்கிறான்
நாமும் தொடர்ந்து கொண்டாடி மகிழ்கிறோம்

அதைப் போன்றே  குழந்தையாய் முழுமையாக
அவளைச்  சார்ந்திருக்கும் நாளில்
அன்பின் மொத்த வடிவாக  அன்னையாக

கணவனாக அவளுக்கு இணையாக
சேர்ந்திருக்கும் நாளில் பின்னிருந்து இயக்கும்
 சக்தியாக தாரமாக

வயதாகி சக்தியிழந்து ஓய்ந்துச் சாய்கிற நாளில்
அனைத்துமாய்  தாங்கும் அன்புமிக்க மகளாக

 மண்ணகத்தில் மங்கையர் எல்லாம்
கண்கண்ட முப்பெரும் தேவியராய்த்
திகழ்வதாலேயே மங்கையரைக் கௌரவிக்கும்
நாளாகவே இந்த நவராத்திரித் திரு நாளைக் கொண்டாடி
 நாமும் மகிழ்கின்றோம்

அவர்களது தியாக உள்ளங்களை
இந் நாளில் சிறிதேனும்
 நாமும் கொள்ள முயல்வோம்

அவர்களோடு இணந்து இந்தச்
சீர்கெட்ட சமூகம் சிறக்க
 நாமும்  நம்மாலானதைச் செய்வோம்

Monday, October 22, 2012

பதினாறு வயது உளறல்கள் அல்லது ! விஞ்ஞானக் காதல்!

அவன் அவசரமாய் அல்லது
அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பினான்

"இப்போது வேதியல்  வகுப்பில்
உன்னைக் குறித்துத்தான்
பாடம் எடுக்கிறார்கள் "

" என்னைக் குறித்தா?
வேதியல்  வகுப்பிலா ?"
அவள் பதில் செய்தி அனுப்பினாள்

"ஆம்.
தான் எவ்வித மாறுதலையும் அடையாமல்
பக்கத்தில் இருக்கும் பொருளை
மாறுதலடைச் செய்யும் பொருளை
டீச்சர் கிரியா ஊக்கி என்கிறார்
நான் அது நீ என்கிறேன் சரியா ?
அவன் அழகாய்ப் பிதற்றினான்

"இங்கு கூட இயற்பியல்  வகுப்பில்
உன் எதிர்காலம் குறித்துத்தான்
பாடம் எடுக்கிறார்கள் " என்றாள்

"இயற்பியல் வகுப்பிலா ?என எதிர்காலம் குறித்தா "
அவன் அதிசமாய்க் கேட்டான்

அவள் இப்படி செய்தி அனுப்பினாள்
"எந்த ஒரு செயலுக்கும்
எதிர் விளைவுகள் உண்டு என்கிறார் சார்
இப்படி படிக்கிற நேரத்தில்
செய்தி அனுப்பிக் கொண்டிருந்தால்
 நாளை  நீ
நடு ரோட்டில்தானே நிற்கவேண்டும் ? "

அவன் பதில் செய்தி அனுப்பவில்லை

Saturday, October 20, 2012

படைப்பாளி (?)

உணவுக்கான மூலப் பொருட்களில்
சுவையையும் மணத்தையும்
இயற்கை மிக நேர்த்தியாகச்
சேர்த்து வைத்திருக்க
அதனை மிகச் சரியாகச் சேர்மானம்
செய்தலதை மட்டுமே செய்தவன்
சமையல் சக்கரவர்த்தியாகிப் போகிறான்

அடுப்படியில்
வெக்கையிலும் புழுக்கத்திலும்
வெந்தபடி நளபாகம் செய்தவன்
வெறுமனே இருக்க
அதனை பணிவாகத்
தருதலைச்  செய்வபவன் தான்
அன்பளிப்புப் பெற்றுப் போகிறான்

காட்டை மேட்டைத்
தன்  கடின உழைப்பால்
நிலமாக்கித் தோட்டமாக்கி
உலகுக்கு உயிரளிப்பவன்
வறுமையில் வெந்து சாக
இடையில் இருப்பவனே
கொள்ளை லாபம் கொள்கிறான்

குடும்பத்தின் ஒவ்வொரு அசைவிலும்
ஒவ்வொரு சிறு நிகழ்விலும் உயர்விலும்
தன்னை முற்றாக இணைத்துக் கொண்டவள்
துணைவியாய்  மட்டுமே
அங்கீகரிக்கப் பட்டிருக்க
பொருளீட்டிக் கொடுத்தலை மட்டுமே செய்தவன்
குடும்பத் தலைவனாகிப் போகிறான்

வார்த்தைகளுக்கான
அர்த்தங்களும் உணர்வுகளும்
மிக நேர்த்தியாய் ஏற்கெனவே
நிர்மானம் செய்யப்பட்டிருக்க
அதனைக் கோர்வையாய்
அடுக்கிக் கொடுத்தலை மட்டுமே செய்பவன்
"படைப்பாளி "யாகிப் போகிறான்

Thursday, October 18, 2012

புரியாப் புதிர்

புரிந்ததை
புரிந்து கொண்டபடி
புரியும் படியும்
சொல்லிப் போனேன்
இது சராசரிக்கும் கீழே என
முகம் சுழித்துப் போனார்கள்

புரியாததை
நான் புரிந்து கொண்டபடி
புரியும்படியே
சொல்லிப் போனேன்
இது பரவாயில்லை என்றார்கள்

புரியாததை
புரிந்து கொள்ளாமலேயே
புரியாதபடியே
சொல்லிப்போகிறேன்
அருமை என்கிறார்கள்

இதுவரை எனக்கு
இதில் எது சரியெனத் புரியவில்லை
உங்களுக்கு ஏதேனும் புரிகிறதா ?

Tuesday, October 16, 2012

"அது "

\உள்ளே
அறிந்தும் அறியாததுமாய்
வெளியே
புரிந்தும் புரியாததுமாய்
சந்தியா காலமாய்
மாயா ஜாலம் காட்டுகிறது
"அது "

விழியற்றோர் கைகள் எட்டும் மட்டும்
பார்வையுடையோர் தெரிகிற மட்டும்
பயணிக்க முடிந்தோர் எல்லை வரையிலும்
கற்பனையுடையோர் முடிந்த மட்டும்
அறிய முயன்ற போதும்
புரிந்து கொள்ள முயன்ற போதும்

அறிந்த புரிந்த
எல்லையைப் போலவே
அறியாத புரியாத எல்லையும்
அகன்று விரிந்து கொண்டே போகிறது

தொடர்ந்து
உள்ளே
அறிந்தும் அறியாததுமாய்
வெளியே
புரிந்தும் புரியாததுமாய்
சந்தியா காலமாய்
மாயஜாலம் காட்டிக்
குழம்பவிட்டுச் சிரிக்கிறது
"எது "வென
எவரும்
என்றும்
 அறிந்து கொள்ளவே  முடியாத
"அது " 
  

மீண்டும் மீண்டும்

மீண்டும் மீண்டும் சொல்லக்
கற்றுக் கொள்வோம்

பொய்யாயினும்
நம்ப முடியாததாயினும்
தர்க்கத்திற்கு எதிரானதாயினும்..

மீண்டும் மீண்டும்சொல்லப்பட்டவைகள்தான்
திமிரத் திமிரத் திணிக்கப்பட்டவைதான்
பாசியாய் மிக ஆழமாய் படர்கின்றன
தலைமுறை தாண்டி நிலையாய்த் தொடர்கின்றன

பால் குடிக்கும் நாகம் மட்டுமல்ல
வெள்ளைச் சேலை மோகினி மட்டுமல்ல
சொர்க்கம் நரகம் மட்டுமல்ல
சடங்குகள் சம்பிரதாயங்கள் மட்டுமல்ல
ஜாதி மதம் மட்டுமல்ல 

நாம் நம்பிக்கை கொண்டிருக்கிற
பகுத்தறிவுக்கு ஒப்பாதவை எல்லாம்
நமக்கு திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டவையே
நம்மீது திமிரத் திமிரத் திணிக்கப்பட்டவையே

எனவே
இவைகளுக்கு எதிரான
சாட்சியங்களை நிரூபணங்களை
ஒருமுறை சொல்லி ஓய்ந்துவிடாது

இனியேனும்
மீண்டும் மீண்டும்
சொல்லக் கற்றுக் கொள்வோம்
இனியேனும்
பொய் பித்தலாட்டங்களை எளிதாய்
வெல்லக் கற்றுக் கொள்வோம்

Saturday, October 13, 2012

கரண்டும் மூடும் இணைந்திருந்தா

அது இருந்தா இது இல்லே
இது இருந்தா அது இல்லே
இரண்டும் ஒன்றாய்ச் சேர்ந்து வந்தால்
இணைத்துப் பார்க்க நேரம் இல்லே

பசியில் துடிச்சா சோறு இல்லே
சோறு இருந்தா பசியே இல்லே
பசியும்  சோறும் சேர்ந்து இருந்தா
பிச்சுப் போட நேரம் இல்லே

குளிராய் இருந்தா போர்வை இல்லே
போர்வை இருந்தா குளிரே இல்லை
குளிரும் போர்வையும் சேர்ந்திருந்தா
புத்தி தூங்க விடுவ தில்லே

பணிவாய் இருந்தா பதவி இல்லே
பதவி வந்தா  பணிவு இல்லே
பணிவும் பதவியும் சேர்ந்து வந்தா
நேரம் நமக்கு நல்லா இல்லே

கரண்டு இருந்தா மூடு இல்லே
மூடு இருந்தா கரண்டு இல்லே
கரண்டும் மூடும் இணை ந்திருந்தா
எழுத நமக்கு நேரம் இல்லே

Wednesday, October 10, 2012

( நாத்திக ஆத்திக, ) பார்வை (2),

நாத்திகன் மீண்டும்......

"எனக்கே கேட்கச் சங்கடமாகத்தான் உள்ளது
பாற்கடலாம்
பாம்புப் படுக்கையாம்
சகலத்தையும் வெல்லும் சக்ராயுதமாம்
ஒருக்களித்துப் படுத்திருக்க
அருகில் பக்கத் துணையாய்
செல்வத்திற்கு அதிபதியாம்\
இவர்தான் காக்கும்கடவுளாம்
ஒன்றுக்கொன்று
ஏதாவது சம்பந்தமிருக்கிறதா
நீயே சொல் " என்றான்

ஆத்திகன் இப்படி ஆரம்பித்தான்

"உதவிடவென்றே
எப்போதும் எழுந்தோட ஏதுவாய்
தளர்ந்த நிலையில் இருப்பவனும்

அவசியமெனில்
தீமையினை அழித்தொழிக்கத்தக்க
வல்லமை மிக்கவனாய் இருப்பவனும்

மாறாக் கருணையையும்
குறையாத செல்வத்தையும்
எப்போதும் தன்னருகே
துணயாகக் கொண்டிருப்பவனும்தானே

என்றென்றும்  உதவிக்கென
நாம் அண்டத் தக்கவனாகவோ
நம்மைக் காக்கத் தக்கவனாகவோ
இருக்க முடியும்

நான் திருமாலை மட்டும் சொல்லவில்லை
காப்பவனுக்குரிய
தகுதியையும்  சொல்கிறேன் "என்றான்

Monday, October 8, 2012

ஆத்திக நாத்திகப் பார்வை

நாத்திகன் இப்படி ஆரம்பித்தான்

"தொப்புள் கொடியிலிருந்து
ஒரு தாமரைக்கொடியாம்
அதிலொரு தாமரைப் பூவாம்
அதில் நான்கு முகங்களுடனும்
மனைவியுடன்
கையில் வேதப்புத்தகங்களுடன் ஒருவராம்
அவர்தான் படைப்பவராம்

கேட்கவே கேலிக் கூத்தாயில்லை "

ஆத்திகன் பதட்டமடையவில்லை

"படைப்பவன் எப்போதும்
நாற்திசைகளிலும் நடப்பதை
அறியும் திறன் படைத்தவனாகவும்
முன்னோர்களின் பொக்கிஷங்களைக் கற்று
கைப்பிடிக்குள் கொண்டவனாகவும்
எப்போதும் பக்கத் துணையாக
கற்றலையும் நுண்ணறிவையும் கொண்டவானகவும்
இருந்தால்தானே
நல்ல படைப்புகளை தர ஏதுவாகும்

கூடுதலாக
மார்க்ஸுக்கு வாய்த்த ஒரு
ஏங்கெல்ஸ்  போல
மலர் கைகளில் வைத்துத் தாங்கக் கூடிய
செல்வந்தனும் கருணை மிக்கவனும்
படைப்பாளின் திறனறிந்தவனும் இருந்தால்
கூடுதல் சிறப்புதானே "  'என்றான்

"என்ன சொல்ல வருகிறாய்
எனக்கேதும் புரியவில்லை '
எரிச்லுற்றான் நாத்திகன்   

" எந்தக் கதைக்கான காரணத்தையும்
 எந்தக் குறியீடுகளுக்கான அர்த்தத்தையும்
புரிந்து கொள்ள முயன்றால்
இதுவும் புரியும்" என்றான் ஆத்திகன் 

 "அப்படியானால்
பிரம்மன் இருக்கிறான் என்கிறாயா
 பிரம்மன்தான் படைக்கிறான் என்கிறாயா "
ஆவேசப்பட்டான் அவன்

"இல்லையில்லை
அப்படிச் சொல்லவில்லை
படைப்பவன் பிரம்மன் போல்
திறன் பெற்றிருக்க வேண்டும் என்கிறேன்
படைப்பவன் எல்லாம்
 நிச்சயம் பிரம்மன் என்கிறேன் "
அமைதியாகச் சொன்னான் இவன்


( அச்சப்பட வேண்டாம் அடுத்தது திருமால் )

Sunday, October 7, 2012

ஒரு சிறு நிகழ்வு-தொண்டர்களின் செயல்பாடு

ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை
சாலையில் போட்டுவிட்டு ஒளிந்து கொண்டால்
ஒவ்வொரு கட்சித் தொண்டர்களும் எப்படி
நடந்து கொள்வார்கள்-ஒரு ஜாலி கற்பனை 

அ.இ.அதி.மு.க:

பிரச்சனையே இல்லை.சட்டென பாய்ந்து எடுத்து
பையில் வைத்துக் கொண்டு நடையைக் கட்டிவிடுவான்

தி.மு.க :

சட்டென அவசரப்பட்டு எடுத்துவிடமாட்டான்.
காலால் மறைத்து வைத்துக் கொண்டு
யாராவது பார்க்கிறார்களா என நோட்டம் விட்டு
பின் நைசாக எடுத்து பையில் போட்டுக் கொண்டு
கிளம்பி விடுவான்

காங்கிரஸ் :(தமிழ் நாடு மட்டும் )

பார்த்ததும் குனிந்து எடுத்து விடமாட்டான்
எடுத்துக்  கொடுக்க யாராவது வருகிறார்களா
என சாலையை நோட்டம் விட ஆரம்பித்துவிடுவான்

கம்யூனிஸ்ட்:

தானும் எடுக்கமாட்டான்
அடுத்தவரையும் எடுக்கவிடமாட்டான்

( ஒரு நிகழ்வில்கட்சித்  தொண்டரின்  பெயரை
முதலில்  சொல்லாமல்  மைமாக  நடித்து
 மட்டும் காட்டினேன்

எல்லோரும்  தொண்டர்களை
மிகச் சரியாக கணித்தார்கள்
ரசித்துப் பாராட்டவும் செய்தார்கள்

 மற்ற பிரதான கட்சித் தொண்டர்கள்  குறித்து
பதிவர்கள் ஜாலி  கற்பனையைத் தொடரலாமே)

Friday, October 5, 2012

கருப்புச் சட்டை கலைஞருக்கு....

.அரசியல் சாணக்கியரே
கருப்பில் துவங்கி
மஞ்சளுக்குப் போய்
மீண்டும் கருப்புக்கு வந்தது
அதிக மகிழ்வளிக்கிறது

மகளைப் புணர முயலும்
தந்தை குறித்த அருமையான
"கான்ஸ்டெபிள் கந்தசாமி "
காவியத்திலிருந்து
குறளோவியத்திற்கு வந்ததும்

குடிபோதையில் தங்கையைக்
கூடவரும் அண்ணன் குறித்த
"மறக்கமுடியாத "காப்பியத்திலிருந்து
தொல்காப்பியப் பூங்காவிற்கு வந்ததும்

"ராஜாஜியின் ஆண்மையற்ற பேச்சு "
"அனந்த நாயகிக்கு
அண்ணாவின் மூக்கருகில் என்ன வேலை "
"திராவிடத்தின் இருப்பிடம்" முதலான
காலத்தால் அழியாத
அநாகரீகமான பேச்சினை தொடராது
அரசியல் நாகரீகம் குறித்து
அதிகம் தொடர்ந்து பேசுவதும்
எங்களை மிகவும் கவருகிறது

இப்படி
இலக்கியம்.அரசியல் மேடைப்பேச்சு
அனைத்திலும் முற்றிலும் மாறி
பிராயச் சித்தம் செய்துவரும் தாங்கள்

குடும்பமாய் இருந்த கழகத்தை
குடும்பத்திற்குள் அடக்காது "விடுவிக்கும்
பிராயச் சித்தத்தை
என்று செய்யப்போகிறீர்கள் ?
குடும்பப பாசத்தை  விட
தொண்டர்களின் நேசமே  உயரந்ததென
உலகுக்கு என்று நிரூபிக்கப் போகிறீர்கள் ?

Wednesday, October 3, 2012

மர்ம இடைவெளி-2

நான் சிறுவனாய் இருந்தபோது
எந்த எக்ஸ்பிரஸ் பஸ்ஸாயினும்
எங்கள் கிராம வழி செல்லும் எல்லாம்
எங்களூரில் நின்றுதான் போகும்
நாங்கள் சௌகரியமாக இறங்கிக் கொள்வோம்

நான் இளைஞனான காலத்தில்
எக்ஸ்பிரஸ் பஸ்கள் எல்லாம்
புறவழிச் சாலைவழியே சென்றுவிடும்
நாங்களும் ஊருக்கு வெளியில் இறங்கி
ஊருக்கு வரப் பழகிக் கொண்டோம்

நான் நடுவயதைக் கடக்கையில்
நாற்கரச் சாலைகளூம்ம் ஐந்து கரச் சாலைகளும்
எங்கள் ஊருக்கு வெகு தொலைவில் செல்ல
இப்போது நாங்கள் அங்கே இறங்கி
அங்கிருந்து ஊர் வர
அடுத்த பஸ்ஸுக்கு காத்திருக்கிறோம்

வேகமும் நாகரீகமும் வளர வளர
அரசின் மக்களுக்கான நலத் திட்டங்கள் பெருகப்பெருக
எங்கள் கிராமத்திற்கும்
அந்தப் பிரதான சாலைக்குமான
இடைவெளி சிறிதும் குறையாது
ஏன் அதிகமாகிக்கொண்டே போகிறது என்பது மட்டும்
எனக்கு இதுவரை விளங்கவே இல்லை

Monday, October 1, 2012

கொள்கைகளுக்கு அஞ்சலி செய்வோம்

ஆண்டுக்காண்டு
வலிமை மிக்க ஆயுதங்களை
உற்பத்தி செய்யதலும்
அதன் பயன்படுத்துவதற்கு இசைவாக
நாட்டுக்கு நாடு
வன்மம் வளர்த்தலுமே
சரியானதாக இருக்கிற உலகுக்கு
நிராயுதபாணிப் போராட்டத்தைப் போதித்த
"அவரின்" போதனை எப்படிச் சரிவரும் ?

அன்னிய முதலீடுகளும்
பன்னாட்டு நிறுவனங்களுமே
நம் கால் வயிறுக்கு
கஞ்சி ஊற்றும் என
நம்பி செயலபட்டுக் கொண்டிருக்கும் நமக்கு
"அவரின்"கிராமப் பொருளாதாரமும்
சுயசார்புத் தத்துவங்களும்
எப்படிச் சரியானதாக இருக்கும் ?

நுகர்வுக் கலாச்சாரமே
பொருளாதார வளர்ச்சிக்குத் தூண்டும் எனவும்
உணர்வைத் திருப்திப்படுத்துதலே
வாழ்வின் உன்னத நோக்கம் என்பதில்
சந்தேகமின்றி இருக்கும் நமக்கு
"அவரின்" அமைதித் தேடலும்,புலனடக்கமும்
எப்படிப் பொருந்தி வரும் ?

பொய்யும் பித்தலாட்டமுன்றி
நம்பிக்கைத் துரோகமும் நயவஞ்சகமுமின்றி
ஒரு நாளைக் கடத்துதல்
அரிதென ஆகிப்போன இன்றையச் சூழலில்
அதுதான் வாழ்க்கை நெறியென
ஆகிப்போன நிலையில்
"அவரின் "சத்தியமேவ ஜெயதே
எப்படி உதவக் கூடியதாய் இருக்கும் ?

கரன்சியில் "அவரின் திருவுருவை அச்சிட்டு
கோடிக் கோடியாய் ஊழல் செய்யும் நமக்கு
அவரின் கொள்கைகளுக்கு அஞ்சலி செய்துவிட்டு
"அவர்""பிறந்ததைக் கொண்டாடுவதுதான்
ஆகக் கூடிய அருமையான வழி
அவ்வழி அயராது இன்றுபோல்
என்றும் தொடர்வோம்
இருபதில் வல்லரசாய் உயர
அயராது முயல்வோம்
 "
வாழ்க காந்தி மகான் "