Saturday, April 30, 2016

எங்கள் "வேண்டுதல் வேண்டாமை "

சோறு வேண்டும் எங்களுக்கு
சொர்க்கம் வேண்டாம் - வீண்
வார்த்தைகளைச் சொல்லியெம்மை
ஏய்க்க வேண்டாம்

ஆடை வேண்டும் எங்களுக்கு
"அணிகள்" வேண்டாம்
மேடையேறி பொய் உதிர்த்து
"நடிக்க" வேண்டாம்

வீடு வேண்டும் எங்களுக்கு
"கோட்டை" வேண்டாம் - எம்மை
மன்னரெனச் சொல்லி நீங்கள்
சுருட்ட வேண்டாம்

வாழ்வு வேண்டும் எங்களுக்கு
"ஆறுதல்" வேண்டாம் - எல்லாம்
ஆண்டவனின் லீலை என்று
"அளக்க" வேண்டாம்

அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகள்!!!!!!!!!!

Friday, April 29, 2016

தவறாது மே 16 இல் இந்தத் "தலை "களைத்.....

சமாதான காலங்களில்
சாய்வு நாற்காலிகளில்
சௌகரியமாய் அமர்ந்தபடி

" இந்து " என்றால்
திருடன் என
ஏதோ ஒரு மொழியில் இருப்பதாய்
வியாக்கியானம் செய்து கொண்டு

தேர்தல் காலங்களில்
புரோகிதர் புடைசூழ
பிரசாதம் பெற்றுக் கொண்டபடி

மருமகள்களையும்
மனைவியையும்
கோவில் கோவிலாய்ப்
போகவைத்துக் கொண்டிருப்பவரையும்..

ஊழிக்காலம் போல்
ஊரே மழை வெள்ளத்தால்
சின்னாபின்னப்பட்டுக் கொண்டிருக்கையில்

எங்கிருக்கிறார்
என்ன செய்கிறார் என
அறியாதபடி இருந்துவிட்டு

தேர்தல் காலங்களில்
தாய்க்குத்தான் தெரியும்
என்ன செய்வதென்று
ஊர் ஊராய்
பிரச்சாரம் செய்து கொண்டிருப்பவரையும்

முக்கியமாய்
முதல்வர் வேட்பாளர்
என்னும் மதிப்புக் கூட அறியாது
மேடைகளில்
போகுமிடங்களில்
காமெடியனாகி
அரசியலை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கும்
அந்தச் "சிப்பாயையும் "

முதுகு கை கால்
பகுதிகளை விட
தலையில் குட்டுவதே
ஞாபகத்தில் இருக்கவைக்கும் என்பதால்

தவறாது
மே 16 இல்
இந்தத்  "தலை " களைத்
தோற்கடிப்பதம் மூலம்
 அதிர்ச்சி வைத்தியம்
கொஞ்சம்  கொடுத்து  வைப்போம்

தமிழக அரசியலை
மே 16 இல்
இனி வருங்காலமேனும் சிறக்க
நம்மாலானதை
கொஞ்சம்  செய்து வைப்போம்

அகில இந்தியத் திராவிட மச்சான்ஸ் முன்னேற்றக் கழகம்



இந்தப் படத்தைப் பார்த்ததும்  புரட்சித் தலைவரும்
புரட்சித் தலைவியும்  நின்ற பழைய
புகைப்படம் நினைவுக்கு  வந்தாலோ ..

அகில இந்தியத்  திராவிட  மச்சான்ஸ்
முன்னேற்றக் கழகம்
என்கிற பெயர் நினைவுக்கு வந்தாலோ ...
(.அ இ.தி .ம.மு. க  )

( நிச்சயம் இவருக்குக் கூடும் கூட்டத்தைப் பார்த்து
புரட்சித்ததலைவி அவர்கள் கட்சியின்
கொள்கைப் பரப்புச் செயலாளர்  பதவி
கொடுத்தாலும் கொடுக்கலாம்

அல்லது

கோபத்தில்கட்சியை விட்டு நீக்கினாலும் நீக்கலாம்
நீக்கினால் அ .இ.தி.ம.மு.க நிச்சயம்  )

உறவுகளில் அண்ணா, ,தம்பி, உடன்பிறப்பு
அம்மா , அண்ணி , எல்லாம் அரசியலில் வந்தாச்சு

அதைப் போல் ஏன்  மச்சான்ஸ்ஸு ம்
வரக்கூடாது என்கிற எண்ணம்
லேசாக உங்களுக்குள்  எட்டிப்பார்த்தாலோ..

அதற்குக்  கம்பெனி பொறுப்பல்ல...

( எத்தனைப் பதிவுகள்தான் சீரியஸாகவே எழுதுவது
 நண்பர்  அவர்கள் உண்மைகள் பாணியில்தான்
ஒன்று எழுதிப் பார்ப்போமே என   முயன்றது
சரியாய் வந்திருக்கிறதா ? நீங்கதான் சொல்லணும்  )


Thursday, April 28, 2016

தேர்தலில் விஷ ஊற்று

விஷ ஊற்றை அடைக்காது
தூர்வாரி
கிணற்றைச் சுத்தப்படுத்த நினைத்தல்
நிச்சயம் பேதமையே

ஜாதி மத இனப் பிரிவுகளுக்கு
அடிப்படையாய் இருப்பதும்
அவைகளை வளர்த்தெடுப்பதும்
தேர்தல் களமே

தேர்தலில்
விஸ்வரூபம் எடுக்கும் அதை
ஜாடிக்குள் அடைக்காது
பின் போரிட்டு நோதல்
நிச்சயம் அறிவீனமே

தலையோ
நெற்றியோ
கழுத்தோ
உடலில்
மதச் சின்னம் தாங்கி வருபவன்
உள்ளத்திலும் அதைத் தாங்கித்தான் வருவான்

குறைந்தபட்சம்
இவர்களையாவது மாற்ற முயல்வோம்

எண்ணத்தை
இறக்க முடியவில்லையெனில்
மதச் சின்னத்தையாவது
இறக்கி வைக்கப் பணிப்போம்

ஏனெனில் இவர்கள்
தன் மதத்தினரை
மதச் சின்னத்தால்
திருப்திப் படுத்திவிட்டு
மற்ற மதத்தவரை
எளிதாய் ஏமாற்றவே
"மதச் சார்பற்றவற்றவன் " என
வார்த்தை ஜாலம் காட்டுவார்கள்

நீங்கள் மதச் சார்ப்பற்றவர் எனில்
இவர்கள் விஷயத்தில்
எச்சரிக்கையாய் இருங்கள்

அவர் எந்த மதத்தினராயினும் சரி

போலி மதச்சார்பின்மை
மதச் சார்பினை விட
மிக மிக ஆபத்தானது

எண்ணங்களின்
அதீத வெளிப்பாடே  மதச் சின்னங்கள்

மதச் சின்னங்களே
நம் ஒற்றுமையை
சின்னாபின்னப்படுத்தும்
வலிமை  மிக்க முதல் காரணிகள்

இந்தத் தேர்தலிலேனும்
விஷ ஊற்றுக்களை
அடைக்க முயல்வோம்

பின் படிப்படியாய்
சமுதாயக் கிணற்றில்
தூர்வாரத் துணிவோம்

Wednesday, April 27, 2016

நம் சட்ட மன்றத் தேர்தல்...அசிங்கத்தை வேறெப்படிச் சொல்வது

அந்தக் காலங்களில் நாம் இருவருமே
மனிதர்களாய் இருந்தோம்
 மிக மகிழ்வாய் இருந்தோம்

எம் உயர்வு குறித்து
எப்போதும் சிந்தித்தபடி நீங்களும்

உங்கள் நல்வாழ்வு உயர்வு குறித்து
எப்போதும் வேண்டியபடி நாங்களும்

எங்களைச் சந்திப்பதில் உங்களுக்கிருந்த
மகிழ்வும் இன்பமும்
உண்மையாய் இருந்தது

உங்களைத் தரிசிப்பதில் எங்களுக்கிருந்த
ஆர்வமும் எழுச்சியும்
அளவு கடந்திருந்தது

அதனால்தான் இரவெல்லாம்
உங்கள் வரவுக்காக   நாங்கள்
தூங்காது விழித்துக் காத்திருந்தோம்

அதனால்தான் பகலிரவுக்
கணக்கின்றி  நீங்களும் சோராது
எங்களைச் சந்தித்து மகிழ்ந்தீர்கள்

இப்போது நாம் இருவருமே
மோசமான வியாபாரிகளாகி விட்டோம்

உம் நிலைப்புக் குறித்து
எப்போதும் சிந்தித்தபடி  நீங்களும்

எங்கள் அற்பத் தேவைகள் குறித்து
எப்போதும் நினைத்தபடி நாங்களும்

அதனால்
எங்களைச் சந்திப்பது
உங்களுக்கு இப்போது
அலுப்பாகவும் சலிப்பாகவும்

உங்களைச் சந்திப்பது
எங்களுக்கு  இப்போது
வெறுப்பாகவும் கோபமாகவும்

அதனால்தான்
இப்போதெல்லாம் உங்கள்
அழைப்பை எதிர்பார்த்து
அன்புடன் அல்லாது
 அண்டாக்களுடன் காத்திருக்கிறோம்

மாறிய
சூழலறிந்து நீங்களும்
வாஞ்சையுடன் அல்லாது
பணத்துடனும்  பொட்டலத்துடனும்
எம் வீட்டு வாசல் வருகிறீர்கள்

இருவரில் யார் மிக மோசம்
என்னும் போட்டி
தேர்தலெனும் பெயரிலே
நம்முள் தொடர்ந்து கொண்டிருக்கிறது...

மிகச் சரியாகச் சொன்னால்...

விபச்சாரி வீடு போய்
பழக்கப்பட்டவன்
பழக்க தோஷம் போகாது

முதலிரவில் மனைவியிடம்
நூறு ரூபாய்க் கொடுக்க

அவளும் பழக்க தோஷம் போகாது
ஐம்பது ரூபாயைத்
திருப்பிக் கொடுத்த கதையாக...

நம் அசிங்கத்தை வேறெப்படிச் சொல்வது...

Tuesday, April 26, 2016

தேர்தல் வாக்குறுதிகள்

ஆட்சியில் இருப்பவர்களோ இதுவரை
இல்லாதவர்களோ மக்கள் எதைச் சொன்னால்
மயங்குவார்கள் எனக் கவனித்து அதை
வாக்குறுதிகளாகச் சொல்லி கவர முயல்வது
அரசியல் கட்சிகளுக்குச் சகஜம்.

ஜெயித்த பின்  மக்கள் அதை
நினைவில் கொள்ளமாட்டார்கள் என்பது
அவர்களுக்கும் தெரியும்.அப்படி ஒருவேளை
ஞாபகம் வைத்துக் கேட்டால்
அதற்குச் சாமர்த்தியமாய் மிகச் சரியான
ஒரு பதிலும் சொல்ல அவர்களுக்குத் தெரியும்

1967 இல் எல்லா பத்திரிக்கையிலும்
குண்டடிபட்டுக் கட்டுப்போட்ட நிலையில்
புரட்சித் தலைவரின் படத்தைப் போட்டு
அதில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
ஒரு ரூபாய்க்கு  மூன்று படி அரிசி தருவோம்
என தி.மு க வாக்குறுதி கொடுத்து விளம்பரம்
கொடுத்திருந்தார்கள்

உண்மையில் அப்போது அரிசிப் பஞ்சம் நிலவிய காலம்

அந்த வாக்குறுதியும், புரட்சித் தலைவரின்
மீதிருந்த அனுதாபமும் தான் அதிக இடங்களில்
அப்போது தி. மு. க வெல்லக் காரணமாக இருந்தது
என்றால் அது மிகையில்லை

ஆனால் வென்று முடித்ததும் அவர்கள்
சொன்ன வாசகம் "அல்வா கொடுப்பது "
என்பதற்கு மிகச் சரியான உதாரணமாக இருந்தது

அந்த  "அல்வா  "வாசகம்.....

ரூபாய்க்கு மூன்று படி அரிசி இலட்சியம்
ஒரு படி நிச்சயம்
ரூபாய்க்கு மூன்று படி அரிசி எண்ணம்
ஒரு படி திண்ணம்

இப்படி வாசகத்தை மாற்றியதோடு அல்லாமல்
தமிழகத்தில் சில குறிப்பிட்ட இடங்களில்
போட்டுவிட்டு தேர்தல் வாக்குறுதியை
நிறைவேற்றி விட்டதாக பிரச்சாரமும்
செய்து விட்டார்கள். மக்களும் மறந்து விட்டார்கள்

எனவே மயானத் தீர்மானம்,
பிரசவ காலத் தீர்மானம் போல
இந்த தேர்தல் கால வாக்குறுதிகளும்
என்பதில் அரசியல் கட்சிகள் மிகத்
தெளிவாய்தான்  இருக்கின்றன

எனவே நாமும் இதை ஒரு பொருட்டாக
எடுத்துக் கொள்ளாது , மற்ற விஷயங்களில்
கட்சியையும்,வேட்பாளர்களையும்
தேர்வு செய்வதில் மிகக் கவனமாய் இருப்போம்

ஒரு நொடித் தவறில் ஐந்தாண்டு கால
அவஸ்தையைத் தவிர்ப்போம்

Monday, April 25, 2016

தேர்தல்--- இதையும் யோசித்து வைப்போம்

இன்னும் மிகச் சரியான முடிவுக்கு
வரமுடியாமல் வாக்காளர்கள் எல்லாம்
குழம்பிக் கிடக்கிறார்கள்

பிரச்சாரத்தின் உச்சக் கட்டத்தில்
புதிது புதிதாக   எதையாவதுச் சொல்லி
இன்னும் குழப்புவார்கள்

அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்

இந்தத் தேர்தலில் ஒருவேளை
தி.மு.க மெஜாரிட்டிப் பெற்று
ஆட்சி அமைக்குமானால் ஏதாவது
ஒரு காரணம் சொல்லிப் புரட்சித் தலைவி அவர்கள்
சட்டசபை செல்ல மாட்டார்கள்

ஒருவேளை அ.இ அ.தி.மு.க மெஜாரிட்டிப் பெற்று
ஆட்சி அமைக்குமாயின் ஏதாவது
ஒரு காரணம்சொல்லி கலைஞர்
அவர்களும் சட்டசபை செல்லமாட்டார்கள்

இவர்கள் இருவரில் யார் ஜெயித்து
ஆட்சி அமைத்தாலும் கேப்டன்
சட்டசபை செல்ல மாட்டார்

இதில் யாருக்கும் சந்தேகமில்லை

ஆகையால் முடிவு எப்படி இருக்கும்
எனத் தெரியாத பட்சத்திலும்

இவர்கள் மூவரும் ஆட்சிப் பொறுப்பு இல்லையெனில்
சட்டசபை செல்ல மாட்டார்கள் என்பது
சர்வ நிச்சயம்

எனவே  இந்த மூவரும் நம்மை, நம்
வாக்கினை உதாசீனப் படுத்த வாய்ப்புத் தராமல்
நாம் ஆரம்பத்திலேயே அவர்களை
உதாசீனப்படுத்திவிட்டால்
தோல்வியுறச் செய்துவிட்டால்.......

ஒரு கட்சி ஜெயித்துத்  தோற்றத் தலைவர்
மீண்டும் மறுதேர்தலில் நின்று ஜெயித்துவிட்டுப்
போகட்டும்

மற்றபடி தலைவர்கள் அல்லாத
இரண்டு எம்.எல் ஏக்களாவது தங்கள் தொகுதி சார்பாக
சட்டசபையில் இருக்க வாய்ப்புண்டு இல்லையா ?

அல்லது

ஆட்சிக் கட்டிலில் அமரவில்லையாயினும்
சட்டசபை சென்று ஜன நாயகக் கடமை ஆற்றுவேன்
ஓட்டளித்த தொகுதி மக்களை ஏமாளியாக்க மாட்டேன்
என்கிற வாக்குறுதியை இந்தப் பிரச்சாரக்
காலத்திலேயே தர  வேண்டும் என்பதை
கோரிக்கையாக  வைக்கலாமா ?

இதையும் கொஞ்சம் யோசித்து வைப்போமே ?

Friday, April 22, 2016

தேர்தல் டெம்லேட்ஸ்....

திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம்
பொய்யை உண்மை போலாக்கி பின்
உண்மையாக்கி விடமுடியும் என்கிற
கோயபெல்ஸ் தியரிப்படி...

அரசியலில் நிரந்த எதிரியும் இல்லை
நிரந்தர நண்பனும் இல்லை என்பதை
நம்ப வைத்த மாதிரி....

ஒரு கட்சி பிடிக்கவில்லை எனில்
அடுத்து வர வாய்ப்புள்ளக் கட்சிக்கு
ஓட்டுப் போடவேண்டும் இல்லையெனில்
நம் ஓட்டு பயனற்றதாகிப் போகும்
என்கிற தியரியை நம்ப வைக்க தொடர்ந்து
முயற்சிக்கிறார்கள்

உண்மை அப்படியில்லை

இப்போது இந்தத் தேர்தலில்
விஜயகாந்த அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட
கூடுதல் முக்கியத்துவமே அவர் அதிக இடங்களைப்
பெற வில்லையாயினும்

அதிக சதவீத ஓட்டுக்கள் பெற்றதால்தான்.

முன்னணியில் உள்ள கட்சிகள் இரண்டும்
தங்கள் பண பலத்தின் மூலம் இதுவரை
இவர் இல்லை நான் என்கிற ஒரு பொய்யான
ஒரு பிம்பத்தை உண்டாக்கி நம்மை
ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்

நிச்சயமாக இந்த முறை புதிதாக வாக்களிக்க உள்ள
இளைஞர்களிடம் இந்தப் பம்மாத்துப் பிரச்சாரம்
எடுபட வாய்ப்பில்லை எனவே நினைக்கிறேன்

எனவே

இந்தத் தேர்தலில் ஜெயிக்கும் ஜெயிக்காது என்கிற
எண்ணத்தைவிட்டு ஜெயிக்கவேண்டிய கட்சி
என்பதற்கு ஓட்டளிப்போம்

அது எத்தனை சிறியதாயினும்...

அதுவே அரசியலில் நல்லவர்கள்
நம்பிக்கை கொள்ளவும்
துணிந்து ஈடுபடவும் வைக்கும் என்பதை
தேர்தல் நாளில்
மறவாது மனதில் கொள்வோம்

Thursday, April 21, 2016

"அம்மாவுக்கும்" நமக்குமான இடைவெளி





 ( நண்பர்  அவர்கள் உணமைகள்  அவர்களுக்கு  நன்றி


சினிமாத் துறையில் உள்ள என் நண்பன் சொல்வான்

சினிமாவில் நடனமாடும் கதாநாயகனுக்கும்
குழு நடனக்காரர்களுக்குமான தூரம்
கற்பனை செய்ய  முடியாதது என்று

அவர்கள் மிக அருகில் ஆடுவது போல
நமக்குத் தெரிந்தாலும் அந்தக் குழுவினர்
அந்தக் கதாநாயகனுடன் பேசக் கூட முடியாது
என்பான்

அந்த வகையில் இப்போது நமது அம்மா
அவர்களுக்கும் இடையில் பொம்மைப்போல்
அசையாது அமர வைக்கப்பட்டிருக்கும்
வேட்பாளர்களுக்கும் அம்மாவுக்கும்
இடையிலான தூரம்...

அம்மாவுக்கும் நமக்குமான தூரம்...

மிக அருகில் போல் தெரிந்தாலும்
கிரகங்களுக்கிடையே உள்ள தூரம் போலத்தான்
என்பதில் யாருக்கும் சந்தேகமே இல்லை

சொர்க்க லோகம் போல் சிலுசிலுப்பாக்கப்பட்ட
மேடைக்கும்,பாலை போல் எரித்துக் கொல்லுகிற
மேடை முன் அமர வைக்கப் பட்டிருக்கும்
பொது மக்களுக்கும் ஆன  இடைவெளி...

என் நேரம் ,என் சௌகரியம் மட்டுமே
முக்கியம் அடுத்தடுத்து எத்தனை பேர்
செத்தாலும் கவலையில்லை என்னும்
மனப்பாங்கு...

கட்சியெனும் போதைக்கு அடிமையானவர்கள்
வேண்டுமானால் சகித்துக் கொள்வார்கள்

நிச்சயமாக சுய சிந்தனை உள்ளவர்கள்
ஒரு மாறுபட்ட முடிவை எடுக்கவே செய்வார்கள்


பார்ப்போம்..

( ஒருவேளை மே 16 க்குள் பதினாறு பேரை
வெய்யிலுக்குப் பலி கொடுத்தால்
வெற்றி நிச்சயம் என ஆஸ்தான ஜோதிடர்
சொல்லி இருந்தால், பத்திரிக்கைக் காரர்களைப் போல்
நாமும் இரண்டு நாலு என எண்ணிக்
கொண்டிருப்பதைத் தவிர
 எதுவும் செய்வதற்கில்லை )

Wednesday, April 20, 2016

தேர்தல் முடிவுகள்... மிகச் சுருக்கமாக

தேர்தல் முடிவுகள்
மிகச் சுருக்கமாக இப்படி இருக்கலாம்
என்பது என் எண்ணம்

நிச்சயமாக அ.இ அ தி.மு.க பூரண
மெஜாரிடி பெறாது

இரண்டாவது இடத்தில்  தி.மு.க. இருக்கும்

மூன்றாவது இடம் வரும்
மக்கள் நலக்கூட்டணி எவரை ஆதரிக்கிறோர்களோ
அவர்கள் ஆட்சி அமைப்பார்கள்

நிச்சயமாக, இருவரில் யாரையாவது ஒருவரை
ஆதரித்துத் தான் ஆகவேண்டும் என ஆகும்பட்சத்தில்
அ.இ.அ தி.மு.கவை ஒதுக்கி  தி.மு.க வையே
இவர்கள் ஆதரிப்பார்கள்

இப்படி ஒரு சூழல் வருவதே
தமிழகத்துக்கு நல்லது என்பது
என் விருப்பமும் கூட

முடிந்தால்
உங்கள் எண்ணத்தையும்
ஆசையையும் தங்கள் பக்கத்தில் செய்யுங்களேன்

மக்கள் மனங்களை பதிவர்களாகிய நாம்
ஓரளவு  பிரதிபலிக்கிறோமா என்பதற்கு
இது ஒரு உதாரணமாக இருந்து விட்டுப் போகட்டுமே 

Tuesday, April 19, 2016

தேர்தலில்...இப்படி நடந்தால் சந்தோஷம் தான்..

புலிவாலைப் பிடித்த நாயர் படுகிற அவஸ்தை
என்கிற சொற்றோடர் கூட நமது
புரட்சித் தலைவர் அவர்கள் ஒருமுறை
கோடிட்டுக் காட்டியதால் பிரபல்யமானது
என நினைக்கிறேன்

அந்த வகையில் 90 வயது கடந்தும்
அரசியல் போர்க்களத்தில் முன்னணியில்
இருக்க வேண்டிய நிலையில் கலைஞர்
அவர்களும்

நின்று பேசக் கூட முடியாத சாலை வழி
பயணம் செய்ய முடியாத நிலையில்
புரட்சித் தலைவி அவர்கள் படுகிற
அல்லல்களையும்

பேசக் கூட முடியாத நிலையில்
கேப்டன் அவர்கள் படுகிற
துயரையும் பார்க்க உணமையில்
மனது சங்கடமாகத்தான் உள்ளது

அவர்களாக முன்னிலையில்ருந்து
விலக மாட்டார்கள் என்பதால்

அந்த அந்தக் கட்சியில் அபிமானம்
உள்ளவர்கள் , தங்கள் தலைவர்கள்
மீது உணமையான அன்பும் பாசமும்
கொண்டிருந்தால்

இந்த மூவரை மட்டும் முதல்வர் பதவி
ஏற்காத வகையில்  தேர்தலில்
தோற்கச் செய்துவிட்டால்
நிச்சயம் தனிப்பட்ட முறையில்
அவர்களுக்கு நாம் மிகப் பெரிய நன்மை
செய்ததாகவே இருக்கும்

அப்படிச் செய்தால் கட்சித் தலைவர்
என்கிற முறையில்
அவர்களது அனுபவமும்,ஆற்றலும்
அவர்களுடைய அடுத்த நிலையில் உள்ள
தலைவர்கள் மூலம் இவர்கள்
உடல் ரீதியாகக் கஷ்டப்படாமல்
செயலாக்க முடியும் தானே / இல்லையா

(இவர்கள் மட்டுமில்லை
அறுபதைக் கடந்து உடல் ரீதியாக
இயலாமல் இருக்கிற எந்தக் கட்சி வேட்பாளர்களாக
இருந்தாலும் )

Wednesday, April 13, 2016

சித்திரை மகளே வாராய்

நற்குண மாந்தர் இந்த
மாநிலம் எங்கும் ஓங்கி
நற்செயல் பெருகி இந்தப்
பூமியே சொர்க்கம் ஆகும்
அற்புதம் நிகழ்த்த வந்த
அதிசய ஆண்டே வாராய்
துர்முக ஆண்டே வாராய்
தீந்தமிழ் ஆண்டே வாராய்

இத்தரை வாழும்  யாரும்
இனிவரும் காலம் யாவும்
எச்சிறு குறையு மின்றி
இனிதென வாழ வென்றே
புத்தொளிப் பரவும் காலை
பிறந்திடும் எழிலே வாராய்
சித்திரை மகளே வாராய்
செந்தமிழ் அழகே வாராய்

மனமது நிறைவு கொள்ள
வாழ்வதும் நிறைவு கொள்ளும்
மனமதில் இந்த உண்மை
நிலைத்திட வேண்டும் என்றே
ஜனகரின் மைந்தன் தந்த
மகிழ்வுறு நாளே வாராய்
புனர்வசு நாளே வாராய்
பைந்தமிழ் நாளே வாராய்

இட்டமாய்ச் செய்யும் எல்லாம்
இனிமையே நல்கும் என்று
திட்டமாய் சொல்லி மாந்தர்
தெளிந்திட வென்றே  கீதைத்
தந்தவன் தன்னை ஈந்த
திருமிகுத்  திதியே  வாராய்
அட்டமித் திதியே வாராய்
அருந்தமிழ்த் திதியே வாராய்

( துர்முக ஆண்டு, சித்திரை மாதம், புனர்பூஷ
நட்சத்திரத்தில்,அஸ்டமி திதியில் பிறக்கிறது
ஞாபகம் வைத்துக் கொள்ள அவசியப்படுவோர்
நினைவில் வைத்துக் கொள்வதற்காக )

Monday, April 11, 2016

படிப்படியாய்க் "குறைப்பதா "அல்லது "அளப்பதா "

மது விலக்குக் குறித்த
"அம்மாவின் " பேச்சு
எதன் அடிப்படையில் இருக்கச் சாத்தியம் ?

அவர்களின்
சுயச் செல்வாக்கின் மீது கொண்ட
அதீத நம்பிக்கையிலா ?

மக்களின்
சுய அறிவின் மீது கொண்ட
கேவலமான அபிப்பிராயத்திலா ?

இதில்
எதன் அடிப்படையில் இருக்கச் சாத்தியம் ?

இதுவரை
அதிகாரப் பதவியில் இல்லாதோர்
மதுவை ஒழிப்பதாகச்
சொல்வதைக் கூட
நம்பி வைக்கலாம்
கண்மூடித்தனமாக

அதிகாரப் பதவியில்
இருந்து இழந்தவர்கள்
சொல்வதைக் கூட
நம்பி வைக்கலாம்
பட்டுத் திருந்திருக்கலாம்
எனும்படியாகக் கூட

அசுர பலத்தோடு
ஐந்தாண்டு காலம்
ஆட்சியில் இருந்தும்

மனத்தால் கூட
எதிர்ப்பினை எண்ணப் பயந்த
மந்திரிகள் இருந்தும்

செய்ய எண்ணாததை
செய்ய முயலாததை..

"படிப்படியாய் "
இனிக் குறைப்பதாய்ச் சொல்வது
எந்த வகையில் சேர்த்தி ?

மதுவுக்கு எதிராகக்
குரல் கொடுப்போரை
கைது செய்தும்
தேசத் துரோகியென
குற்றம் சாட்டியும்

மதுவுக்கு ஆதரவான
மக்களுக்கு எதிரான
தங்கள் மனோவிகாரத்தை
பகிரங்கப் படுத்தியவர்கள்.....

மது விலக்குக் குறித்து
இன்று முழங்குவது
எதனால் சாத்தியமானது ?

அவர்களின்
சுயச் செல்வாக்கின் மீது கொண்ட
அதீத நம்பிக்கையினாலா ?

மக்களின்
சுய அறிவின் மீது கொண்ட
கேவலமான அபிப்பிராயத்தினாலா ?

நவயுகக் கவியிவன் என்றுனை உலகிது.....

கனவு வானில்
காலம் மறந்து
நீந்த முடிந்தால்

நினைவு அலையை
முற்றாய்க் கடந்துப்
பறக்க முடிந்தால்

வார்த்தைக் கான
பொருளினை வேறாய்க்
காட்டத் தெரிந்தால்

வார்த்தையை மீறி
உணர்வு தன்னைக்
கூட்டத் தெரிந்தால்

அறிவினைக் கடந்து
மனதுடன் நெருங்கி
இருக்கத் தெரிந்தால்

அறிவினை மடக்கி
மனதினுள் நுழையும்
நுட்பம் அறிந்தால்

சந்தச் சக்தி
அறிந்து தெளிந்து
மயங்கிடத் தெரிந்தால்

சந்த மணமது
குறையா வண்ணம்
வழங்கிடத் தெரிந்தால்

கவியது நதியென
உன்னுள் பெருகி
பரவி விரியாதோ ?

நவயுகக்  கவியிவன்
என்றுனை உலகிது
போற்றிப் புகழாதோ ?

Sunday, April 10, 2016

மாய இடைவெளி



தொடக்கமும் முடிவும் தெரியாது
போகிற போக்கும் புரியாது
தொடர் நாடகம் ஒன்று
தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது

உரையாடலில்
பேசுபவனே கேட்பவனாகவும்
கேட்பவனே பேசுபவனாகவும்
மாறிக்கொள்ளுதலைப் போலவே

இந்நாடகத்தில்
பார்வையாளர்களே நடிகர்களாகவும்
நடிகர்களே பார்வையாளர்களாகவும் மாறி மாறி
நாடகத்தை சுவா ரஸ்யப்படுத்திப்  போகிறார்கள்

ஆயினும்
நாடகம் ஒத்திகையற்றததாய் இருப்பதால்
திடுமெனத் தோன்றும்  திருப்பங்கள்
அதிர்ச்சியூட்டிப் போவதால்
பலர் நிலை குலைந்து போகிறார்கள்

இயக்குநர் யாரெனத் தெரிந்தால்
முடிவினை அறியக் கூடுமோ என
புலம்பத் துவங்குகிறார்கள்

புலம்பித் திரிபவர்களுக்கு ஆறுதலாய்
கைகளில் பேரேடுகளைச் சுமந்தபடி
பலர் அரங்கினுள் வலம் வருகிறார்கள்

இதுதான் மூலக் கதையென்றும்
இதுதான் இயக்குநர் வந்து போனதற்கான
உண்மை அத்தாட்சி யெனவும்
இனி அவரின் வருதலுக்கான
உறுதிமொழியெனவும்
அறுதியிட்டுக் கூறுகிறார்கள்

பலர் இதை ஒப்புக்கொண்டு
உடன்பட்டுப் போகிறார்கள்

சிலர் மட்டும் இன்னும் அதிகம்
குழம்பிப் போகிறார்கள்

"ஒரு நாடகத்திற்கு எப்படி
பல கதைகள் இருக்கக் கூடும்
பல இயக்குநர்கள் எப்படிச் சாத்தியம் "

இவர்கள் கேள்விக்கு பதிலேதும் இல்லை

ஒவ்வொருவருவரும்
தத்தம் கதைப்படித்தான்
நாடகம் தொடர்கிறது

முடிவு கூட இதன் படித்தான் என
சாதித்துத் திரிகிறார்கள்

இவர்களின் பிரச்சாரத்தில்
குழுக்கள் கூடிப்போகிறதே தவிர
குழப்பம் தீர்ந்தபாடில்லை

இந்தக் குழுக்களுக்களுக்கு
சிறிதும் தொடர்பே இல்லாது
ஒரு புதிய குழு உரக்கக் கூச்சலிடுகிறது

" இது நிகழ் கலை
இதை எழுதியவன் எவனும் இல்லை
இதை இயக்குபவன் எனவும் எவனும் இல்லை
நடிகன் இயக்குநர் எல்லாம் நாமே
நாடகத்தின் போக்கும் முடிவும் கூட
நம் கையில்தான் " என்கிறது

இது குழம்பித் திரிபவர்களை
இன்னும் குழப்பிப்  பைத்தியமாகிப் போகிறது

பசியெடுத்த
குதிரையின் உடலில்
ஓரடி நீட்டி
கட்ட்ப் பட்ட புல்லினைப் பிடிக்க
குதிரை நித்தம் ஓடி ஓய்கிறது

ஓடினாலும்
நின்றாலும்
அதன் வாய்க்கும் புல்லிற்குமான
இடைவெளி  மட்டும் குறையாது இருத்தல் போல

கேள்விக்கும் புதிருக்குமான
மாய இடைவெளி மட்டும்
குறையாது தொடர்ந்து கொண்டே இருக்கிறது

தொடக்கமும் முடிவும் தெரியாது
போகிற போக்கும் புரியாது
தொடர் நாடகம் மட்டும்
தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது

Saturday, April 9, 2016

"சைத்தான் என்பது மெய் ...

                  

"சைத்தான் என்பது பொய்
அப்படி எதுவும் இல்லை"
எனச்  சொல்பவனைத்  தொடராதே
அவன் அறியாது பேசுகிறான்

கரிய இருள் போர்த்தியபடி
குழிவிழுந்தக்  கண்களோடு
கோரைப் பற்களைக்  கடித்தபடி
கர்ஜித்து வரும் சைத்தான்
அழிந்துக்   காலம் பலவாகிவிட்டது

முன்பு போல அவன்
முட்டாள் சைத்தான் இல்லை
அவன் புத்திசாலி ஆகி
பலயுகங்களாகிவிட்டது

முன்பு போல
கோடாலி கொண்டு மரத்தை வெட்டி
அவன் நொந்து சாவதில்லை

மாறாக
வேரைப்  பிடுங்கி வெந்நீர் ஊற்றிவிட்டு
வேடிக்கைப் பார்க்கிறான்

நம்மை வீழ்த்தக் கூட
இப்போதெல்லாம் அவன்
தன் கோரைப் பற்களையும்
கூரிய நகங்களையும்
நம்புவதே இல்லை

நம் வீட்டுக் கூடத்தில்
தொலைக்காட்சிப் பெட்டியில் துவங்கி
உல்லாச உதவாக்கரை நண்பர்களாகத் தொடர்ந்து
நம்மைப்  பாதை தவறவிட்டு ஏமாளியாக்கி
முதலில் நம் நேரத்தை களவாடிக் கொள்கிறான்

பின்
வீண் கனவுகளில்
கற்பனைகளில் மூழ்கவிட்டு
நோக்கமற்று அலையவிட்டு

நாவுக்கும் மனதிற்கும்
குடலை பலியாக்கி

ஆசைக்கும் உணர்வுக்கும்
நம் மனத்தைப் பழிவாங்கி

நம் சக்தி முழுவதையும் உறிஞ்சிக் கொள்கிறான்

முடிவாக
உல்லாசங்களில் கேளிக்கைகளில்
தேவையற்ற ஆடம்பரங்களில்,
போலி கௌரவங்களில்
நம்மை முழுமையாக மூழ்கவிட்டு
நம் வளத்தையெல்லாம் அபகரித்துக் கொள்கிறான்

இப்படித்
தேரிழந்து
ஆயுதமிழந்து
சக்தியிழந்து
மண்பார்த்து நிற்கும்
 நிலையானப் பின்னே

சக்தியற்றவன் உடலில்
சட்டெனப் புகும் நோயினைப் போல்
நமக்குள் முழுமையாய் நிறைந்து கொள்கிறான்

நம்மிடம் இப்போது எதுவுமே இல்லை
ஆயினும்
தொடர்ந்து வாழ
எல்லாமும் வேண்டியதாயும் இருக்கிறது

இப்படியோர்
இடியாப்பச் சிக்கலில்
ஆப்பசைத்து மாட்டிய குரங்காக
செய்வதறியாது கைபிசைந்து நிற்கும்வரை

நமக்கு அன்னியன் போலிருந்த சைத்தான்
இப்போது நமக்குள்
நாமாகவே மாறி
நமக்கே புதிய வேதம் ஓதுகிறான்

" பணத்தைக்  கொண்டு
எதை வேண்டுமானாலும்
செய்ய முடியும்,வாங்க முடியும் என்கிற
இந்த கேடுகெட்ட உலகில்
பணம் சம்பாதிக்க
எந்த கேடு கெட்டதைச்   செய்தால்தான் என்ன ?"
என்கிறான்

சுயநலமாகவோ
தர்க்கரீதியாகவோ
யோசித்துப் பார்க்கையில்
உலக நடப்பினைக்  கூர்ந்துப்  பார்க்கையில் ...

அவன் சொல்வது
சரியாக மட்டும் படவில்லை
நிலை தவறிய நமக்குப்
புதிய கீதை போலவே படுகிறது

வேறு வழியின்றி
நம்மை அறியாது
நாமே சாத்தானாக உரு மாறத் துவங்குகிறோம்

எனவே
"சைத்தன் என்பது பொய்
அப்படி எதுவும் கிடையாது"
இப்படிச் சொல்பவனைத் தொடராதே
அவன் அறியாது பேசுகிறான்

Friday, April 8, 2016

நாட்டுமேல நமக்கெல்லாம் அக்கறையே இருக்குதுண்ணா....

பொறந்தநாள  மறந்துகூட
இருந்திடலாம் மச்சான்-தேர்தல்
நடக்கும்நாள மறந்துநாம
இருக்கலாமோ மச்சான் ?-குழந்த

பொறந்தநாள மறந்துகூட
இருந்திடலாம் மச்சான்-மே
பதினாற மறந்துநாம
இருக்கலாமோ மச்சான் ?-

வருஷமெல்லாம் விழுந்துவிழுந்து
படிச்சபுள்ள மச்சான்-பரிச்சை
நாளுபாத்து தூங்கிபுட்டா
வெளங்கிடுமா மச்சான் ?- அஞ்சு

வருஷமாக எதிர்பாத்து
இருந்தநாளை மச்சான்-லேசா
வெறும்நாளா நினைசுப்புட்டா
நஞ்சிடுவோம் மச்சான்

சீர்செனத்தி நூறுவகை
ஊரறிய வச்சாலும்-தாலி
கட்டினாத்தான் கல்யாணக்
கணக்காகும் மச்சான்

நாட்டுமேல நமக்கெல்லாம்
அக்கறையே இருக்குதுண்ணா-ஓட்டுப்
போட்டாத்தான் உண்மையாகும்
சரிதானா மச்சான் ?

Thursday, April 7, 2016

தலைவர்களைத் தோற்கடிப்போம்....

எக்கட்சித் தொண்டராயினும்
கட்சியைச்  ஜெயிக்க  வைப்போம்
கட்சித் தலைவர்களைத்
தோற்கடிப்போம்

முன்பெல்லாம்
பேருக்காவது
பொதுக் குழுக் கூடி
செயற்குழுக் கூடி
தலைவருக்கு அதிகாரமளிப்பதாக
ஒரு நாடகம் போடுவார்கள்

இந்தத் தேர்தலில்
ஒப்புக்கூட அது இல்லை

அப்படிச் செய்த
ஒரு சில கட்சியிலும்
தொண்டனின் கருத்துக்கு
நேர் எதிராகவே
அவர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்

நம் கருத்துக்கும்
இனியேனும்
மதிப்பிருக்க வேண்டுமெனில்
எக்கட்சித் தொண்டராயினும்

கட்சித் தலைவர்களைத்
தவறாதுத் தோற்கடிப்போம்

எந்தக் கட்சித் தொண்டராயினும்
கட்சியைச் ஜெயிக்கவைப்போம்
வாரிசுத் தலைவர்களைத்
தோற்கடிப்போம்

தியாகம்
அர்ப்பணிப்பு
விசுவாசம்
எல்லாம் செல்லாக் காசாகி

தலைவரின் வாரீசுகளும்
வாரீசென
அடையாளப்படுத்தப் பட்டவர்களே
தலைமுறை தலைமுறையாய்
தலைமைப் பொறுப்புக்கென
திணிக்கப் படுவதால்...

ஒரு சாமானியனின் குரல்
அரங்கேறும் சாத்தியம்
ஒரு சாமானியன்
தலைவனாகும் சாத்தியம்
அடியோடு ஒழிந்து தொலைவதால்

எந்தக் கட்சித் தொண்டராயினும்
வாரீசுத் தலைவர்களைத்
தவறாது தோற்கடிப்போம்

Wednesday, April 6, 2016

வேராகப் பதிவுலகு இருக்க..

சந்தமதும் சிந்தனையும்
சந்தனமும் குங்குமமாய்
ஒன்றையொன்று சார்ந்துநிற்கும் போது-கவிநூறு
பொங்கிவரத் தடையுண்டோ கூறு

தாளமதும் இராகமதும்
தண்ணீரும் குளுமையுமாய்
மாயக்கட்டுக் கொண்டிருக்கும் போது-கவிஆறு
மடையடங்கிக் கிடந்திடுமோ கூறு

இளமனதும் அனுபவமும்
இலைபோலக் கிளைபோல
பலமாகப் பிணைந்திருக்கும் போது-கவித்தேர்
நிலையடங்கிக் கிடந்திடுமோ கூறு

சீராட்டவும் பாராட்டவும்
தாயாக உறவாக
வேராகப் பதிவுலகு இருக்க-கவிச்சீர்
வழங்குவதில் குறைவருமோ கூறு

Tuesday, April 5, 2016

பருவம் தாண்டிப் பிறந்த காதல்

பருவம் தாண்டிப் பிறந்தக்  காதல்
பாடாய்ப் படுத்துதடி-வயது
வரம்பை  மீறி  மனதுக் குள்ளே
மோகம்  கூட்டுதடி

பார்க்கும் பொருளில் எல்லாம் இருந்து
பாவனைக் காட்டுதடி-என்னைச்
சேர்த்து அணைத்துச்   சொக்க வைத்துச்
சோதனை பண்ணுதடி

இரவில் எல்லாம் விழிக்க வைத்து
இம்சைப்  பண்ணுதடி -பட்டப்
பகலில் கூடக்  கனவில் லயித்து
கிறங்கச் சொல்லுதடி

கருவைக் கொடுத்து முதலில் என்னை
அருகில் அழைக்குதடி-பின்
உருவம் கொடுக்க அலைய விட்டு
வேதனைக் கூட்டுதடி

உறவுக் கூட்டம் நிறையக் கொடுத்து
உணர்வைக் கூட்டுதடி-அவர்கள்
உணர்வுப் பூர்வப்  பதிலைக் காட்டி
உயிரை உலுக்குதடி

 பதிவு எட்டு நூறினைத தாண்டியும்
 ஆர்வம் குறையலையே -நான்கு
நூறுப்  பதிவர் தொடர்ந்த  பின்னும்
தாகம் குறையலையே

பதிவுப் பெண்ணே உந்தன் மோகம்
அட்சய பாத்திரமே-அதற்கு
அடிமை ஆனோர் மீண்டு எழுந்திட
இல்லை சாத்தியமே

Monday, April 4, 2016

வார்த்தைகள் உயிர் பெறுவது..

வண்ணங்கள்
நம் கண்களுக்கு
குளிர்ச்சித்  தருபவைகள்தான்

மனதிற்கு
மகிழ்ச்சித்  தருபவைகள்தான்

ஆயினும்
வண்ணங்கள்
குளிர்ச்சிப்  பெறுவதும்
மகிழ்ச்சிப்  பெறுவதும்

ஓவியனின் தூரிகைத்
தன்னைத் தொட்டுத் தழுவுகையில்தான்

ஆயுதங்கள்
நம் உடமைகளுக்கு
பாதுகாப்புத்  தருபவைகள்தான்

மனதிற்குப்
பலம் தருபவைகள்தான்

ஆயினும்
ஆயுதங்கள்
பாதுகாப்புப் பெறுவதும்
பலம் பெறுவதும்

ஒரு வீரன்
அதைத் தாங்கி நிற்கையில்தான்

இல்லத்து உணவு
நம் நாவுக்கு
சுவைத்  தருபவைகள்தான்

உடலுக்கு
சக்தித்  தருபவைகள்தான்

ஆயினும்
அந்த உணவு
சுவைப்  பெறுவதும்
சக்திப்  பெறுவதும்
அன்னையவள் அன்பாய்ப் படைப்பதில்தான்

வார்த்தைகள்
நம் உணர்வுக்கு
உயிர் கொடுப்பவைகள்தான்

நம் நினைவுக்கு
உருக்  கொடுப்பவைகள்தான்

ஆயினும்
வார்த்தைகள்
உயிர் பெறுவதும்
உச்சம் தொடுவதும்
கவிஞனால் கையாளப்படுகையில்தான்

Saturday, April 2, 2016

மதுவை விரும்புவதே இராச விசுவாசம்

மதுவை விரும்புவதே...இங்கு.
இராச விசுவாசம் ...தினம்  
மதுவை அருந்துவதே..நல்ல
குடிமகன் அடையாளம்

மதுவை எதிர்ப்பவர்கள்...நிச்சயம்
இராசத் துரோகிகள்...இதை
அறியாது எதிர்க்காதீர்...வீணே
அவதிப் படாதீர்

ஆலைகள் எல்லாமே...தனியார்
உடமைகள் என்றாலும்...மதுச்
சாலைகள் எல்லாமே...அரசு
நிறுவனம் மறக்காதீர்

மக்களின் நலம்வேண்டி....அரசு
முனைந்து செயல்படுத்தும்....மதுத்
திட்டத்தை எதிர்க்காதீர்...அரசின்
கோபத்தைக் கிளறாதீர்

காலை ஆனாலும்...ஊரில்
சாவு ஆனாலும்
மாலை ஆனாலும்...மகிழும்
தருணம் ஆனாலும்

இரவு ஆனாலும்...எந்த
இன்னல் ஆனாலும்
சரக்கு அடிப்பதுவே...தமிழன்
சிறப்பெனச் செய்துவிட்டோம்

தமிழனை இந்நிலைக்கு...கொணர
அரசின் முதலீடு
தமிழனை இந்நிலைக்கு...கொணர
அரசின் பெரும்பாடு

ஏதும் அறியாது...மதுவை
எதிர்க்கத் துணியாதீர்
தேசத் துரோகியென...ஆகிச்
சிறையில் அடையாதீர்