Saturday, November 26, 2011

எல்லோரும் கவிஞர்களே (2)


சீர்மிகு கவிகள் செய்ய
சிந்தனை அதிகம் வேண்டாம்
கூர்மதி அதுவும் வேண்டாம்
குழப்பமும் சிறிதும் வேண்டாம்
யாரெது சொன்ன போதும்
அசந்து நீ போக வேண்டாம்
நேர்வழி அதற்கு உண்டு
புரிந்திடச் சொல்வேன் கேளாய்

உயிரது இல்லா தேகம்
பிணமென பெயரைப் பூணும்
அரிசியே இல்லா நெல்லோ
பதரென இழிசொல் காணும்
குயிலதன் குரலில் தேனாய்
குழைந்திடும் இனிமை போல
கவிதனை சிறக்கச் செய்ய
கருவதே உயிர்போல் வேண்டும்

மலரதன் வனப்பு காணும்
வடிவினில் என்ற போதும்
மலரதன் சிறப்பு என்றும்
மணமதைச் சார்ந்தே நிற்கும்
நயம்மிகு கவிதை வேண்டின்
கருவுடன் படிப்போர் சிந்தை
கவர்ந்திடும் வகையில் சந்தம்
நச்சென அமைதல் வேண்டும்

தவழ்ந்திடும் குழந்தை மெல்ல
நடந்திட முயல்தல் போல
அயர்வது இன்றி நாளும்
தொடர்ந்துநீ முயன்றால் போதும்
நயமுடன் உரைக்கும் எல்லாம்
நவயுக கவிதை ஆகும்
வலம்வரும் உலகம் உன்னை
உயர்கவி என்றே நாளும்


( மரபுக் கவிதை புனைய அனைவருக்கும்
வழிகாட்டியாக விளங்கும்
புலவர் சா.  இராமானுசம் அவர்களுக்கு
இப்படைப்பை சமர்ப்பிப்பதில்
பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன் )

Friday, November 25, 2011

முயற்சியும் வெற்றியும்

அந்தச் சிறு குன்றின் முன்
எதையோ உற்றுப் பார்த்தபடி
நான்கு சிறுவர்கள்
வெகு நேரம் நின்று கொண்டிருந்தார்கள்

நானும் பொறுமை இழந்து
வெகு நேரம் கழித்து
"என்ன பார்க்கிறீர்கள் " என்றேன்

"இங்கிருந்தால் எதிரொலி கேட்கும்
என நண்பர்கள் சொன்னார்கள்
நாங்களும் வெகு நேரம் நிற்கிறோம்
எந்த ஒலியும் கேட்கவில்லை "
என்றார்கள் சலிப்புடன்

"நீங்கள் ஒலி எதுவும் எழுப்பினீர்களா ? "என்றேன்

"இல்லை ஏன் ஒலி எழுப்பினால்தான் கேட்குமா ?"
என ஆச்சரியத்துடன் கேட்டார்கள்

நான் சிரித்துக் கொண்டேன்
எதிரொலி குறித்துச் சொன்னவர்கள்
குரல் கொடுக்கச் சொல்லித் தராதது
ஆச்சரியமாக இருந்தது

"குரல் கொடுத்தால்தான் கேட்கும்
அதுவும் நீங்கள் எதைச் சொல்கிறீர்களோ
எப்படிச் சொல்கிறீர்களோ அப்படித்தான் கேட்கும்
சப்தத்தை திருப்பிவிடத் தெரியுமே ஒழிய
அதற்கென தனியாக குரலில்லை " என்றேன்

அவர்கள் முதலில்
வினோதமான சப்தங்களை எழுப்பினார்கள்
அது திரும்பச் சொல்லச் சொல்ல
புதிது புதிதான நல்ல வார்த்தைகளை
சொல்லத் துவங்கினார்கள்

ஏதோ அறியாத ஒரு அரிய புதிரை
அறிந்த மகிழ்ச்சி அவர்கள் முகத்தில் தெரிந்தது
இனி அவர்கள் வெறுமனே நின்று
எதிரொலியை எதிர்பார்க்கமாட்டார்கள் என அறிய
மகிழ்ச்சியாய் இருந்தது

நான் என் வழியில் நடக்கத் துவங்கினேன்

Tuesday, November 22, 2011

அதிருப்தி


ஒரு உணர்வாகவோ
ஒரு நிகழ்வாகவோ
ஒரு சொல்லாகவோ
என்னை அசைத்துப் போகிறது
ஒரு சிறு அதிர்வு

அதுவரை எங்கோ புதைந்து கிடந்த
அனுபவக் கனல்
மிக இயல்பாக அதனுடன்
தன்னை இணைத்துக் கொண்டு
எரிக்கத் துவங்குகிறது

அதிர்வுடன்
அனுபவக் கனல் இணைய
உணர்வு அதை ஊதிப் பெரிதாக்க
உள்ளமெங்கும் ஒளியும் உஷ்ணமும்
என்னை உலுக்கிப் போடுகிறது

என்னுள்
சிதறிக் கிடந்த வார்த்தைச் சுள்ளிகள்
தானாக அதனுடன் இணைய
சிறு பொறி வேள்வித் தீயாக
விஸ்வரூபம் எடுக்கிறது

என்னால்
எனச் சொல்லிக் கொள்ள ஏதுமில்லை
சிதறிக் கிடப்பவைகளை
சேகரித்து தருபவனாக  மட்டுமே இருப்பதால்
பெருமைப்பட ஏதுமில்லை

ஆயினும் வழக்கம்போல
"அடுத்த முறையேனும்
நல்ல படைப்பைத் தர முயற்சி செய் "என
முகம்சுளித்து வெறுப்பேற்றிப் போகிறது
திருப்தியடையாத கவிமனது

Saturday, November 19, 2011

கவித்துவம்

"ஒவ்வொரு முறையும்
இலக்கணப்படி எல்லாம் சரி
செய்யுள் செய்யத் தெரிந்திருக்கிறாய்
கவிதை படைக்கப் பழகு என்கிறாரே
கவிதைக்கும் செய்யுளுக்கும்
அப்படியென்ன வித்தியாசம் "
ஆசிரியர் மேலிருந்த கோபம்
முகத்தில் கொப்பளிக்ககக் கேட்டான் நண்பன்

"கட்டிடம் என்பதற்கும்
வீடு என்பதற்கும் உள்ள
சிறு வித்தியாசம் போலிருக்குமோ ? "என்றேன்

"சமாளிக்காதே சரியாகச் சொல் "என்றான்

வீட்டினுள்ளே நண்பனின் அப்பா
"கன்னுக்குட்டி சின்னக் குட்டி தாத்தா பார்
அழகான பொம்மை பார் " என
என்ன என்னவோ சொலலிப்
பேரனைக் கொஞ்சிப் பார்த்தார்
அது அழுகையை நிறுத்தவே இ ல்லை
சப்தத்தை கூட்டிக் கொண்டே போனது

சிரித்துக் கொண்டே வந்த நண்பனின் தாயார்
குழந்தையை மடியில் கிடத்தி
"சுச்சு சுச்சு கிச்சு கிச்சு "என என்னன்னவோ
வினோதமான சப்தங்களை எழுப்பிக் கொஞ்ச
குழந்தை அழுகையை நிறுத்தி சிரிக்கத் துவங்கியது

நானும் பரவசமாகிப் போனேன்

அர்த்தம் பொதிந்த தாத்தாவின் வார்த்தைகளில்
இல்லாத ஏதோ ஒன்று
பாட்டியின் சப்தத்தில் இருந்தது
குழந்தைக்கும் புரிந்தது எனக்கும் புரிந்தது
நண்பன் முகத்தைப் பார்த்தேன்
அவன் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை

Thursday, November 17, 2011

ஜென் சித்தப்பு


"எட்டு எட்டா உலக வாழ்வைப் பிரிச்சுக்கோ "
கத்திக்கொண்டிருந்த ரேடியோவின்
கழுத்தைத் திருகி நிறுத்தினான சித்தப்பு

"எட்டு எட்டெல்லாம் ரொம்ப நெருக்கம்
இருபது இருபதாய்ப் பிரிப்பதே ரொம்பச் சரி " என்றார்
எப்போதும் தாடி மீசையுடன்
யோசித்தபடி இருப்பதாலோ
இப்படி ஏடா கூடமாகப் பேசுவதாலோ
"ஜென் "னென்றே கிண்டலடிக்கப் படும்
என் ஒன்றுவிட்ட சித்தப்பா

"எப்படி "என்றேன் வியந்தபடி

"முதல் இருபதில் பயிற்சி
இரண்டாம் இருபதில் முயற்சி
மூன்றாம் இருபதில் வளர்ச்சி
நாலாம் இருபதில் முதிர்ச்சி
இப்படி இருக்கப் பழகினால்
வாழ்வில் என்றுமே மகிழ்ச்சி " என்றார்

"ஆஹா எளிதாய் இருக்கிறதே "என்றேன்

"இல்லையில்லை
கேட்கத்தான் எளிதாய் இருக்கும்
எதுவும் நம் கையில் இருக்காது
முதல் இருபதை சூழல் தீர்மானிக்கும்
இரண்டாம் இருபதை சோம்பல் நிர்மானிக்கும்
மூன்றாம் இருபதை காமம் கெடுக்கும்
நாலாம் இருபதை ஆசை தடுக்கும் "என்றார்

"அதை சரி செய்ய
என்ன செய்யலாம் "என்றேன்

"முதல் இருபதில் நிதானமும்
இரண்டாம் இருபதில் வேகமும்
மூன்றாம் இருபதில் சம நிலையும்
நாலாம் இருபதில் சவ நிலையும் பழகினால்
உனக்கது ஒருவேளை உதவலாம் "என்றார்

கொஞ்சம் புரிந்த மாதிரி இருந்தது

"இதை அடைய என்ன பயிற்சி செய்யலாம்
எப்படி முயற்சி எடுக்கலாம் "என்றேன்

"உடல் இருக்குமிடத்திலேயே மனத்தையும்
மனம் இருக்கும் இடத்திலேயே உடலையையும்
வைக்கப் பழகினால் போதும்
வேறெதுவும் வேண்டவே வேண்டாம் "என்றார்

 "இதற்கும் ஜென் தியரிக்கும்
ஏதேனும் சம்பந்தம் உண்டா? "என்றேன்

நான் உளறுவதாக நினைத்தாரோ
கிண்டலடிப்பதாக நினைத்தாரோ தெரியவில்லை
அவர் பதிலேதும் சொல்லவில்லை
"எனக்கு இப்போது பசிக்கிறது
சாப்பிடுவோமா ? "என்றார் சிரித்தபடி

Tuesday, November 15, 2011

நேரு மாமாவும் காந்தித் தாத்தாவும்......


குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிற
நமது முன்னாள் பாரதப் பிரதமர் ஜவஹர்லால்
நேரு அவர்களின் பிறந்த தின நாளை முன்னிட்டு
நமது பதிவர் சைலஜா அவர்கள் துவக்கி வைத்த
தொடர் பதிவைத் தொடர்ந்து எழுதும் தொடர் பதிவிது

எந்தத் தலைவர் தனது பிறந்த நாளை தன்னுடைய
பிறந்த நாளாகக் கொள்ளாமல் பிறருக்கு
அர்ப்பணிக்கிறார்களோ அவர்களது பிறந்த நாளே
கோலாகலத்துடன் மக்கள் விரும்பும்
பிறந்த நாளாகக் கொண்டாடப் படுகிறது
அந்த வகையில் ஆசிரியர் தினமும் குழந்தைகள்
தினத்தையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்

குறிப்பாக நான் பல ஆரம்பப் பள்ளி
ஆசிரியர்களைக்கவனித்திருக்கிறேன்.
அவர்கள் எவ்வளவு வயதானாலும்   அதிக
வயதானவர்கள் போல்
காட்சி அளிக்காமல் இளமையுடனே
காட்சி அளிப்பார்கள்அதற்கான உண்மையான
காரணம் அவர்கள் அதிக நேரம்
குழந்தைகளுடன் இருப்பதே என் நினைக்கிறேன்
மகாத்மா காந்தி அவர்கள் கூட மாமா வயதிலேயே
தாத்தா வாக அழைக்கப் பட்டதும் பண்டிட்நேரு
அவர்கள்தாத்தாவான வயதிலே கூட
ஏன் இன்றுவரையில் கூடமாமா வாக
அழைக்கப் படக் காரணம் அவர்கள்
அதிகமாக குழந்தைகளை விரும்பியதும்
குழந்தைகளுடன் மனதளவில் அதிகநெருக்கமாக
இருப்பதை விரும்பியதும் கூட
காரணமாயிருக்கலாம் என நினைக்கிறேன்

ஏனெனில் குழந்தைகள் உலகம் ஒரு அற்புத உலகம்
அதனுள் கற்கள் மாணிக்கக் கற்களாகவும்
 கல்லும் மண்ணும்கல்யாண சமையல்
சாதமாகவும்  இயல்பாக மாறிப்போகும்
பூவுலகு வரும் தெய்வங்கள் பெருவாரியான
சமயங்களில்அவர்களுடனேயே அமர்ந்து
விளையாடத் துவங்கிவிடுகிறார்கள்
அங்கு எல்லாமே நம்பிக்கையே
நம்பிக்கையின்மை என்பது இல்லாத
ஒரே பிரதேசம் இது ஒன்றுதான்
ஒரே ஒரு குறை அந்தச் சமவெளிக்குச்
செல்லும் பாதைமிகக் குறுகியது.
உங்கள் கிரீடங்களையும்முகமூடிகளையும்
அவிழ்த்து வைத்து குழந்தைகளாக
 தவழ்ந்து போகத் தெரிந்தால்மட்டுமே நீங்கள்
அந்த சொர்க்கபுரியின் வஸந்தத்தை
அனுபவிக்க இயலும்.இல்லையெனில் உங்களுக்கு
அதுவும் ஒரு வெறும் பிதற்றல் உலகு போலவே படும்

பதிவின் நீளம் கூடிப் போனதால் கவிதை குறித்து
யோசிக்கவே இயலவில்லை

புதிர்:தகுதியடையத் தேவையான மூன்று
 முக்கிய குணங்கள்
தகுதி அடைந்தபின் நிச்சயம் உயரிய பதவி கிடைக்கும்
அப்போது இருக்க மூன்று முக்கிய குணங்கள்

குறிப்பிட்டு யாரையும் தொடர் பதிவுக்கு அழைக்கவில்லை
என் பதிவைத் தொடர்பவர்கள் யாரேனும் இஷ்டப்பட்டு
தொடர்வீர்கள் ஆயின் மிக்க மகிழ்ச்சி கொள்வேன்

Sunday, November 13, 2011

இவர்கள் அவர்கள் தலைவர்கள்

அவர்கள் மீது இவர்கள் எப்போதும்
முழுக் கவனமாய் இருக்கும்படி
தலைவர்கள் இவர்களை
தூண்டியபடி இருக்கிறார்கள்

எப்போது தினமும் எழுகிறார்கள் ?
அவர்களது உணவுப் பட்டியல் என்ன?
எவரிடம் பயிற்சி பெறுகிறார்கள் ?
எந்த மைதானத்தில் பயிற்சி பெறுகிறார்கள் ?
அவர்களை ஊக்குவிப்போர் யார் யார் ?

இப்படி அவர்களது பலங்களை மட்டுமல்ல
பலவீனங்களைக் கூட
மிக நீளமாய் பட்டியலிட்டு வைக்கவும்
நாள்தோறும் பயிற்சி அளிக்கிறார்கள்

காலம் நேரம் மறந்து
தனது கடமைகளையும் மறந்து
இப்படி அவர்களுக்காக இவர்கள்
செலவழிக்கிற நேரங்களில்
ஆறில் ஒரு பங்கை மட்டும்
இவர்கள் இவர்களுக்காக மட்டுமே
செலவழிக்கத் துவங்கினால்
இவர்கள்தான் நிச்சயம் வெற்றியாளர்கள்

அந்த ஒரு விஷயம் மட்டும்
 இவர்கள் புரிந்து கொள்ளாதபடி
 தலைவர்கள் மிகக் கவனமாய் செயல்படுகிறார்கள்

எப்போதும் போல
தலைவர்கள் தலைவர்களாகவும்
அவர்கள் அவர்களாகவும்
இவர்கள் இவர்களாகவும்
தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்
தலைமுறை தலைமுறையாகவே

Friday, November 11, 2011

நம்பிக்கை


சிறுவயதில் ஏதோ ஒரு உபன்யாசத்தில் கேட்ட கதை
கேட்ட இடம் வயது சொன்னவர் என எதுவுமே
சுத்தமாகஎன் நினைவினில் இல்லை.
ஆயினும் கதை மட்டும் எப்படியோ
என்னைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டுவிட்டது
அதுவும் என்னை விடவில்லை
எனக்கும் அதை விட இஷ்டமில்லை
இன்றும் கடலுக்கடியில் பழைய இலங்கை
இருப்பதாகவும்அதை விபீஷணன்
ஆண்டு கொண்டிருப்பதாகவும் வருஷத்தில்
ஒரு குறிப்பிட்ட நாளில் ந்ள்ளிரவில் அரக்கர்கள்
 புடை சூழஇராமேஸ்வரம் வந்து ராமர் பாதம்
 தரிசித்துப்போவதாகவும்அந்த உபன்யாஸ்கர் மிக
அழகாக விளக்கினார்

அப்படி ஒரு சமயம் அவர்கள் ராமேஸ்வரம் வந்து
திரும்பிக் கொண்டிருக்கையில்அதை பார்த்துக்
கொண்டிருந்தகிராமவாசி ஒருவன் எங்குதான்
போகிறார்கள்எனப் பார்த்துவிடுவோம் என்கிற
ஆர்வ மிகுதியால்அரக்கர்கள் சுமந்து வந்த பெரிய
பூக் குடைக்குள்ஏறி ஒளிந்து கொள்கிறான்
என்ன நடக்கிறது எங்கு போகிறார்கள்
எப்படிப் போகிறார்கள் என்பது எதுவும்
அவனுக்குத் தெரியவில்லை.இரவெல்லாம்
கடலோசை மட்டும்கேட்டுக் கொண்டே இருக்கிறது.
அப்படியே அசந்து தூங்கியும் போகிறான்

விடிந்து கூடைக்குள் இருந்து வெளியேறிப்
பார்த்தால் மிகப் பெரியதங்கத்தாலேயான ஆன
அரண்மனைக்குள் அவன் இருப்பது தெரிகிறது
அதன் பிரமாண்டம் அதன் வசீகரம் இவற்றில் மயங்கி
 வாய்பிளந்து
நின்று கொண்டிருந்தவனை காவல் புரிந்து
கொண்டிருந்த அரக்கர்கள்பார்த்துவிடுகிறார்கள்.
நரன் இங்கு வர சந்தர்ப்பம் இல்லையே
எப்படி வந்தான் எனத் தீவீரமாக விசாரிக்க
அவன் நடந்ததையெல்லாம்விரிவாகச் சொல்லி
அழ அவனை நேராக விபீஷன
மகாராஜாவிடம்கொண்டுபோய் சேர்க்கிறார்கள்

அவன் வந்த முழு விவரத்தையும் கேட்டறிந்த
விபீஷண மகராஜா"சரி ஏதோ ஆர்வ மிகுதியால்
இந்த மனிதன் எப்படியோ நம் நகருக்கு
வந்து விட்டான்.நம் நாடு வந்தவன் நமக்கு
விருந்தாளி போலத்தான்அவனுக்கு நம் நாடு
முழுவதையும் சுற்றிக் காண்பியுங்கள்
ஒருவாரம் முடிந்து அவனை நாமே
அனுப்பிவைக்கலாம் "என்றார்

ஒருவாரம் அவனுக்கு ராஜாங்க விருந்து
 உபச்சாரம் தடபுடலாக நடந்தது
அரண்மனை ,அசோக வனம் என என்ன என்ன
 பார்க்க முடியுமோஅதையெல்லாம்அவன் ஆசை
 தீரும் மட்டும் சுற்றிக் காட்டினார்கள்.
தொட்டிக்குள் மீனை நாம்வெளியில் இருந்து
பார்ப்பதுபோல் இவர்கள் வெட்டவெளியில் இருக்க
இவர்களைச் சுற்றி கடலிருப்பதைப் பார்க்க
மலைத்துப் போனான்என்ன புண்ணியம் செய்தோம்
எனத் தெரியவில்லையே எனஎண்ணி எண்ணி
மிகவும் குதூகலம் கொண்டான்அந்த கிராமவாசி.
இப்படியே ஒருவாரம் மிக மகிழ்ச்சியுடம் முடிந்ததும்
அரக்கர்கள் மீண்டும் அடுத்த உத்தரவுக்காக
மகராஜாவிடம் கொண்டு நிறுத்தினார்கள்

"மகிழ்சியா " என விசாரித்த விபீஷண மகாராஜா
முதுகில்சுமக்கும் அளவுபொன்னும்
பொருளும் கொடுத்துஅரண்மனை வாயில் வரை
வந்து "சென்று வா " எனஅனுப்பிவைத்தான்.
அதுவரை மகிழ்சியில்திக்கு முக்காடிக்கொண்டிருந்த
கிராமத்தானுக்கு மேலேகடல் இருப்பதும்
தான் கடலுக்கு அடியில் இருப்பதுவும்
அப்போதுதான் லேசாகப் புரியத் துவங்கியது

" மகாராஜா மன்னிக்க வேண்டும் தங்களுக்கு
தெரியாது இல்லைநான் சாதாரண மானிடன்.
இந்தப் பெரும் கடலை எப்படிக் கடந்து
கரை சேர இயலும் யாரையாவது துணைக்கு
அனுப்பினால்புண்ணியமாய்ப் போகும் "என்றான்

" ஓ அதை மறந்து போனேனோ " எனச் சொல்லி
அருகில்இருந்த அமைச்சரை அழைத்து
ஏதோ காதில் கிசு கிசுக்க
அவர் உள்ளே சென்று எதையோ எடுத்துவந்து
விபீஷணன் கையில் விபீஷண மகாராஜா அதை
அந்தக் கிராமத்தானின்கையில் மறைத்து மடக்கி
 "இதற்குள் ஒரு உயரிய பொருள் இருக்கிறது
அதை கரை சேரும் வரை திறக்காமல் போனால்
கடல் உனக்குவழிவிட்டுக் கொண்டே போகும்
எக்காரணம் கொண்டும் இடையினில்
திறக்கவேண்டாம் " என அறிவுறுத்தி
அனுப்பி வைத்தார்

கிராமத்தானுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை
அவன் நடக்க கடல்அவனுக்கு மிக அழகாக
அகலமான பாதை அமைத்துக் கொடுத்தது
இருபுறமும் கடலும் நடுவில் பாதையுமாக
நடக்க நடக்க அவனுக்கு
பெருமிதம் பிடிபடவில்லை.

பாதிக்கடல் கடக்கையில் அவனுக்கு கையில்
அப்படி என்னதான்உயரிய பொருள் இருக்கக் கூடும்
 என்கிற ஆவல்பெருத்துக் கொண்டே போனது.
உள்ளங்கையில் நடுவில்மிகச் சிறிதாக்
இருந்து கொண்டு இந்தக் கடலையே நகர்த்தி
வழி விடச் செய்யும் அந்த அதியப் பொருளை
அவசியம்பார்த்துதான ஆகவேண்டும் என்கிற
ஆசை வெறியாகக் கிளம்ப ஒரு வெறிபிடித்தவன்
 போல் அவன் உள்ளங்கையை விரிக்கிறான்

உள்ளங்கையில் "ஸ்ரீ ராமஜெயம்" என எழுதப்பட்ட
ஓலை மட்டு மே உள்ளது வேறேதும் இல்லை

அவன் ஏமாற்றமடைந்தவன் போலாகி
 "சே.இவ்வளவுதானா .." எனச்
சொல்லி முடிக்கவும் கடல் அவனை அப்படியே
அள்ளிக் கொண்டு உள்ளே கொண்டு போகவும்
சரியாக இருந்தது

இதைச் சொல்லி முடித்த உபன்யாசகர் "நீங்கள்
பெரியவர்கள் ஆகி அனைத்து விஷயங்களையும்
நீங்களே புரிந்து  கொள்கிற வரையில் பெரியவர்கள்
சொல்வதனை வேதவாக்காகக் கொள்ளுங்கள்
இல்லையேல் இந்தக் கிராமத்தான் கதைதான் "
எனச் சொல்லி முடித்தார்

மிகச் சிறுவயதில் இந்தக் கதையை கேட்டபோது
பெரியவர்கள் சொல்கிற எதையும் நம்பிச் செய்தால்
 நிச்சயம் நல்லது என்கிற நம்பிக்கைஎன்னுள்
 ஊறிப் போனதால் தைரியமாக எதையும் செய்யும்
துணிச்சல் எனக்கு இருந்தது

அறிவா அல்லது ஆணவமா என மிகச் சரியாகச்
சொல்லத் தெரியவில்லைகல்லூரி நாட்களில்
இக்கதையில் லாஜிக்கே இல்லாதது போலப் பட்டது
அந்த கிராமத்தான்தான் கடலோடு போய்விட்டானே
 பின்னே இந்தக் கதையை யார் அந்த உபன்யாசகருக்கு
 சொல்லி இருப்பார்கள்என நினைத்து
கேலியாகச் சிரித்திருக்கிறேன்

இப்போது யோசித்துப் பார்க்கையில்  இந்தக் கதை
தரும் ஒரு கண்மூடித்தனமான நம்பிக்கையை
சிறுவர்களுக்கு அறிவும் லாஜிக்கும்தருமா
என்கிற எண்ணம்தான் தோன்றுகிறது

நீங்கள் என்ன நினைக்கிறிர்கள் ?



Thursday, November 10, 2011

அந்த அந்த நொடி..


வினு சக்கரவர்த்தி போன்ற ஆஜானுபாவமான
 உடற்கட்டும்பெரிய மீசையும் கிரீடமும்
கையில் கதாயுதமும் கொண்டு
மூன்று கதவுகளும் இறுக்கமாகப் பூட்டி இருந்தும்
 உள்ளேவந்ததை வைத்தே எனக்கு புரிந்து போயிற்று
இவர் "எமதர்மன்தான் " என்று

ஆமை புகுந்த வீடு அமீனா புகுந்த வீடு
எமன் புகுந்தவீடும்உருப்பட்டதாக சரித்திரம் இல்லை
.இருந்தாலும் மரியாதை நிமித்தமாக
"வாருங்கள் வாருங்கள்
நான் ரெடி போவோமா ?"என்றேன்

எமர் (ன் )என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்

"எத்தனை யுகங்களோ எவர் எவர் உயிரையோ
எடுத்திருக்கிறேன்இதுவரை யாரும் உன்போல
 நான் ரெடி போவோமா எனச் சொன்னதில்லை
உனக்கு சாவென்றால் பிடித்தமா இல்லை
வாழ்வு வெறுத்துப் போயிற்றா "

"இல்லை இல்லை நீங்களும் மூன்று தபால்
 போட்டுவிட்டீர்கள்நான் தான் பதில் போடமுடியவில்லை.
ஆனாலும் மனத்தளவில் ரெடியாகிவிட்டேன்
அதுதான் தங்கள் வரவு அதிர்ச்சி அளிக்கவில்லை "என்றேன்

"நீர் எழுத்தாளர் எனத் தெரியும் அதுதான்
பொடிவைத்துப் பேசுகிறீர்நான் கோடிவீட்டுக்
 குப்புசாமியைத்தான் கொண்டுபோக வந்திருக்கிறேன்
உம்மைக் கொண்டுபோக இல்லை
என்வே பதற்றப் படாமல் அமரும்
உன்னிடம் எமக்கு ஒரு கேள்விக்கு பதில் வேணும்
ஒளிக்காமலும் பயப்படாமலும் பதில் சொல்லும் " என்றார்

நான் சாகப் போவதில்லை எனத் தெரிந்ததும்
எப்படித்தான்தைரியம் வந்தது எனத் தெரியவில்லை
சோஃபாவில் நன்றாக
சொகுசாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டேன்.
வெட்டாத கத்திக்கும்உயிரெடுக்காத எமனுக்கும்
 எதற்குப் பயப் படவேணும்

பின் எமரே தொடர்ந்தார் "இந்திரலோகத்தில்
எல்லோரும்என்னைஏகமாகப் பேசுகிறார்கள்.
சாவின் கடைசி நிமிடங்களில் யாரையும்பேசவிடாது
 அவர்களைக் கொன்றுவிடுகிறேனாம்
.இதனால் அவர்கள் வாழ்ந்த வாழ்வில்
அறிந்து கொண்டதைபுரிந்து கொண்டதை
சொல்ல முடியாமலே போகிறதாம்
அதனால்தான் பூமியில்பஞ்சமா பாதகங்கள்
பெருத்துப் போனதாகச் சொல்லுகிறார்கள்
எனக்கு அது உடன் பாடில்லை
நீ என்ன சொல்கிறாய் "என்றார்

"அவர்கள் சொல்வதுபோல் கொஞ்சம்
பரீட்சித்துப் பார்க்கலாமே " என்றேன்

"அதைச் செய்யாமல் உன்னிடம் வருவேனா.
ஒருவனிடம் கனவில் தோன்றிஅடுத்தவாரம்
 உன் உயிர் எடுக்கப் போகிறேன் எனச் சொன்னேன்
அதுவரை யோக்கியனாக இருந்தவன்
அந்த ஒருவாரத்தில் ஆடித் தீர்த்துவிட்டான்
முப்பது வருடம் செய்யாத பாவங்களை
ஒரு வாரத்தில் முடித்துவிட்டான்
சரி. அடுத்தவனிடம் சொல்லிப் பார்த்தேன்.
அவன் அந்த ஒரு வாரமும்
செத்த பிணமாகத்தான் உலவிக் கொண்டிருந்தான்.
சரி அதுதான் போகட்டும் என
கடைசி நிமிடங்களில் ஒருவனுக்கு தகவல் சொல்லி
அரை மணி நேரம்கெடு கொடுத்தும் பார்த்தேன்
முழு நேரத்தையும் 'பினாத்தியே "தீர்த்துவிட்டான்
இதுவரை எவனுக்கும் தான் வாழ்வில்
 புரிந்து கொண்டதை அடுத்தவருக்குச்
சொல்லிச் செல்லவேண்டும் என்கிற எண்ணம்
 சுத்தமாக இல்லை " என்றான்

எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை

"அதுதான் இப்போது அடுத்த முயற்சியாக
 உன்னிடம் வந்துள்ளேன்உன்னை இப்போது
 கொண்டு போகப் போவதில்லை
உன்னை கொண்டுபோகப் போகும் நாளையும்
 சொல்லப் போவதில்லை
என்வே பயப்படாமல் சொல்லு . நீ இப்போது
சாகப் போகிற நொடியாக இருந்தால்
வாழ்வை அர்த்தப் படுத்துவதாக ஒரு செய்தி
சொல்லும்படியாகச் சொல்
எனச் சொன்னால் என்ன சொல்லுவாய் " என்றான்

இது நான் வாழ்க்கையில் சந்தித்த கேள்விகளிலேயே
கடினமான கேள்வியாகவும்
புதிரான கேள்வியாகவும் பட்டது.
சிறுவயது முதல் இன்றுவரை நடந்த அனைத்து
 நிகழ்வுகளையும் ஒவ்வொன்றாக
அசைபோட்டுப் பார்த்தேன்
நல்ல கல்லூரியில் இடம் பிடிக்க
பள்ளியில் மெனக்கெட்டது
வேலைக்கான தயாரிப்புக் கூடமாக
கல்லூரியை க் கருதியது
நல்ல இல்லறம் அமையவே
வே லை எனக் கொண்டது
குழந்தைகளின் எதிர்காலம் கருதியே
பகலிரவாய் உழைத்தது ....
யோசிக்க யோசிக்க மர்மம் விலகுவது போலப் பட்டது
இத்தனை ஆண்டு காலம் உயிரோடுதான்
இருந்திருக்கிறேனே ஒழிய
அந்த அந்த காலங்களில் வாழவே இல்லை
என்கிற உண்மை புரிய வெட்கிப் போனேன்

" ஞாழிகை ஆகிறது ஏதும் உன்னால்
 சொல்ல முடியுமா ' என்றான்

" முடியும் ஒரு வாக்கியமாகச் சொல்லவா
 விவரித்துச் சொல்லவா " என்றேன்

"விவரித்தல் வேண்டியதில்லை
 நான் புரிந்து கொள்வேன் இரத்தினச் சுருக்கமாய் சொல் "

"நேற்றும் இல்லை நாளையும் இல்லை
அந்த அந்த நொடியில்
வாழுதலே வாழ்க்கை " என்றேன்

எமன் முகத்தில் பரவசம் படரத்துவங்கியது

"சபாஷ் சபாஷ் "எனக் கூச்சலிட்டபடி என் முதுகில்
 ஓங்கி ஒரு தட்டு தட்டிவிட்டு
மறைந்து போனான் நான் நடு நடுங்கிப் போனேன்

வலி பொறுக்காது நான் லேசாக உடல் அசைக்க
 உடல் பாரமாகத் தெரிந்தது
கண்களை கஷ்டப்பட்டு திறக்க என்னைச் சுற்றி
ஒரு பெரும் கூட்டமே நின்று கொண்டிருந்தது

"அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டார்
இனி பயமில்லை ..  இன்னும் என்ன என்னவோ
சொல்லிக் கொண்டிருந்தார் குடும்ப டாக்டர்


Tuesday, November 8, 2011

விசித்திர பூமி


பஞ்சுப் பொதிபோல் பிய்ந்து கிடந்த
மேகத்தைக் கிழித்துக் கொண்டு
விமானம் தரை இறங்கத் துவங்கியது

பச்சைப் பசேலெனத் தெரிந்த பூமியைப் பார்த்ததும்
என்னையும் அறியாது ஆனந்தத்தில்
"வாவ்" எனக் கூச்சலிட்டுவிட்டேன்

அருகில் இருந்தவர் என்னை
ஒரு மாதிரியாகப் பார்த்தார்
"கழுகுப் பார்வையில் இப்போதுதான்
கேரளத்தின் அழகைப் பார்க்கிறீர்களா " என்றார்

ஒப்புக்கொண்டு தலையாட்டி வைத்தேன்
அவரே தொடர்ந்தார்
"எங்கள் தேசத்திற்கு மற்றுமொரு
காரணப் பெயர் உண்டு தெரியுமா ?"என்றார்

என் மௌனத்தைத் தொடர்ந்து அவரே தொடர்ந்தார்
"தெய்வத்தின் சொந்த தேசம்
அதுதான் இத்தனை அழகு " என்றவர்
"உங்கள் தேசத்திற்கு இப்படி ஏதும்
 காரணப் பெயர் உண்டா ?
இடத்தைப் பொருத்து ,மனிதர்கள் பொருத்து
புராணங்கள் குறித்து ..."
அவர் அடுக்கிக் கொண்டே போனார்

எதைச் சொல்வது ? எப்படிச் சொல்வது ?

எல்லா நகரங்களுக்கு வெளியில்
தந்தை பெரியாரின் சிலைகளும்
ஊருக்குள் நூறு கோவில்களும்

கலாசாரம் பண்பாடு குறித்து
அழகாகப் பேசும் தலைவர்களுக்கு
குறைந்த பட்சம் மூன்று மனைவிகளும்

ஊருக்கு மூன்று பள்ளிகளும்
முப்பது "பார் "களும்

இனமே அடியோடு அழிந்துகொண்டிருக்க
மானாட மயிலாட பார்க்கும் அவலமும்

பகுத்தறிவு வாதம் பேசிக் கொண்டே
குடும்பத்தை பரிகார பூஜைக்கு அனுப்பி வைப்பதுவும்

எண்ண எண்ண எண்ணிக்கை
கூடிக்கொண்டே போனது

அதற்குள் விமானம ஓடு தளத்தில்
ஓடத் துவங்கியதால்
விமானத்துள் பரபரப்பு படரத் துவங்கியது

அவர் விடாது "என்ன பதிலைக்காணோம் " என்றார்

அவசரமாக இறங்கத் தயாராகிற
 பாவனை செய்து கொண்டு
"விசித்திர பூமி " என்றேன்

நல்லவேளை அவர் விளக்கம் கேட்கவில்லை

Saturday, November 5, 2011

தொடர் ஓட்டம்

எப்போது  பள்ளி ஆண்டு விழா
போட்டிகளைக் காண வந்தாலும்
தொடர் ஓட்டம் நடக்கும் போட்டியையே
காணவிழைவார் அப்பா
குறிப்பாக குச்சியைக் கைமாற்றி ஓடும்
அந்த " ரிலே " ஓட்டம்

அவரது அதீத ஆர்வத்தில்
ஏதோ காரணம் இருப்பதைப் புரிந்து
ஒருமுறை விளக்கம் கேட்டேன்

"இது எல்லா போட்டியையும் போல அல்ல
இந்த நால்வரும் சரியாக ஓட வேண்டும்
ஒருவர் பின் தங்கினாலும்   தோல்விதான்
குறிப்பாக அந்தக் குச்சி வீழாது ஓட வேண்டும்" என்றார்

'இதில் ரசிப்பதற்கு என்ன இருக்கிறது
எல்லா போட்டிகளையும் போல
இதற்கும் சில விதிகள் " என்றேன்

 "நானும் முதலில் அப்படித்தான் நினைத்தேன்
உன் தாத்தாதான்  எனக்கு விளக்கினார்
அந்தக் குச்சி என்பது
பாரம்பரிய குடும்பப் பெருமைக்கும்
செல்வச் சிறப்பிற்குமான ஒரு குறியீடு
நான் விரைவாக ஓடி
உன்னிடன் சேர்ப்பது போலவே
உன் வாரிசுகளிடமும் நீ சேர்க்கவேண்டும்
ஒருவன் தடுமாறினாலும் அதனைச் சீராக்க
நான்கு தலை முறை ஆகிவிடும் " என்றார்

நான் புரியாது விழித்தேன்
அவரே தொடர்ந்தார்

"இப்படியும் சொல்லலாம்
செல்வச் செழிப்பில்  வாழ்ந்தாலும்
முறையாக வளர்க்காத  உழைப்பாளியின்  மகன்
சோம்பேறி ஆகிப் போவான்
சோம்பேறிக்குப் பிறந்த பையன்
கடனாளி ஆகிப்போவான்
கடனாளிக்குப் பிறந்த மகன்
கடுமையான உழைப்பால்தான்
சராசரி நிலைக்கு வருவான்
சராசரியின் மகன்
கடினமான உழைப்பினால்தான்
மீண்டும் பழைய நிலையை  அடையக் கூடும்
அதற்கு முன்னூறு வருட்ங்கள் ஆகிப்போகும் " என்றார்

அப்போது சரியாகப் புரியவில்லை ஆயினும்
கால ஓட்டத்தில் புரியத் துவங்கியது

 நான் மிகச் சரியாக ஓடிய பெருமிதத்தோடு
இப்போது தொடர் ஓட்டம் பார்க்க
என் புதல்வனை அழைத்துப் போகிறேன்

Friday, November 4, 2011

பார்க்கத் தெரிந்தால்....

அந்த முக்கியப் பிரமுகர் கடந்து செல்வதற்காக
எங்கள் வண்டியை ஓரம் கட்டினார் காவலர்
நாங்கள் எரிச்சலுடன் காத்திருந்தோம்

அந்தச் சிவப்பு சுழல் விளக்கு பொருத்திய வண்டி
அதற்கான நூற்றுக்கும் அதிகமான
இணைப்பு வண்டிகளுடன் கடந்து செல்ல
அரை மணி நேரத்துக்கு மேலாகிவிட்டது

போக்குவரத்தும் ஸ்தம்பித்துப் போய்விட்டது

போரடிக்காது இருப்பதற்காகவோ அல்லது
நிஜமான சந்தேகத்திலோ
நண்பன் இப்படிக் கேட்டான்
"சமூக வாழ்வில் இத்தனை உயரம் தொட்டு
நம்மை வியப்பிலாழ்த்தும் இவர்கள்
தனி மனித வாழ்வில் ஏன்
சராசரிக்கும் கீழாகக் கிடக்கிறார்கள்
சமூகத்தையே சீர்திருத்து இவர்களுக்கு
தன் குடும்பத்தை சரியாக்கத் தெரியாதா ?"என்றான்

எல்லோரும் அமைதியாக என் முகத்தைப் பார்த்தார்கள்

"இதோ உனக்கான பதில் நடு ரோட்டிலேயே நிற்கிறது "என்றேன்

"புரியவில்லை "என்றனர் கோரஸாக

"இதோ சில நிமிடங்களில்
சீர்கெட்டுப் போன இந்த போக்குவரத்தை
சீர் செய்யும் காவலருக்கு
கார் ஓட்டத் தெரியுமா என்பது கூட சந்தேகமே
ஆயினும்
மற்றவர்கள் முறையாக பயணம் செல்ல
மிகச் சரியாக வழிகாட்டத் தெரியும்
அவருடைய முழுத் திறனையும் அதில் ரசிப்போம்
அவருக்கும்  நம்மைப் போல் கார் ஓட்டத் தெரிந்து
என்ன ஆகிவிடப் போகிறது "என்றேன்

அவர்களுக்கு என் பதில் புரிந்ததாகத் தெரியவில்லை

 போக்குவரத்து சீராகி இருந்தது


Wednesday, November 2, 2011

முட்டைத் தியரி


"கம்யூனிஸ்டுகளுக்கு
ஜன நாயகத்தில் நம்பிக்கை இல்லை
அவர்கள் நம்புவது
தொழிலாளி வர்க்க யதேச்சதிகாரம்தான்
பின் அடிக்கடி அவர்கள் ஏன்
ஜன நாயகம் காப்போம் என
முஷ்டியைத் தூக்குகிறார்கள் "

எனக்கு வெகு நாட்களாக இருந்த குழப்பத்தை
என் நண்பனிடம் விரித்து வைத்தேன்

"உனக்கு விளங்கும்படியாகவே சொல்கிறேன்"
பீடிகையோடு துவங்கினான்

"முட்டையின் மஞ்சள் கரு அவர்கள்
வெள்ளைக் கரு பிற கட்சிகள்
முட்டையின் ஓடுதான் ஜன நாயகம்
அவர்கள் வெள்ளைக்கருவை உண்டு
வளர்கிற வரையில்
அவர்களுக்கு ஓடு வேண்டும்
அதைக் காப்பதில் கவனமாய் இருப்பார்கள்
வளர்ந்தபின் அவ்ர்களே அதை
உடைத்து நொறுக்கிவிடுவார்கள் " என்றான்

கொஞ்சம் புரிந்தது போல் இருந்தது
"அப்படியானால் முட்டைக்கும் முதலாளிகளுக்கும்
சம்பந்தமே இல்லையா" என்றேன்

 "நிச்சயம்உள்ளது நிறையவும் உள்ளது
முட்டை உற்பத்தியாளர்களும்
வினியோகஸ்தர்களும்
நுகர்வோரும் அவர்கள்தான் "என்றான்

"சத்தியமாகப் புரியவில்லை "என்றேன்

"அதுதான் நல்லது
உனக்கு எனக்கு மட்டும் இல்லை பலபேருக்கும்
அதனால்தான் ஜனநாயகமுட்டையை
ஊழலில் அவித்து சிலர் மட்டும்
சுகமாய் தின்று கொழுக்க முடிகிறது
புரிந்துபோனால் தான்
முட்டையை கவனிப்பதை விடுத்து
கோழிகளை கவனிக்கத் துவங்கிவிடுவோமே " என்றான்

நிஜமாகவே ஒன்றும் புரியவில்லை