Saturday, August 29, 2015

கவிஞனே நினைவில் கொள்ளவேண்டும்

அறியாமைச் சிறையில்
அகப்பட்டிருக்கும் வரையில்
தெளிவின்மையும் குழப்பமும்
தவிர்க்கமுடியாததென்று
அறிவுக்குத் தெரியும்
மனம்தான் புரிந்து கொள்ளவேண்டும்

உடற்கூட்டினுள்
ஒடுங்கிக் கிடக்கத் துவங்கின்
பிறப்பதுவும் இறப்பதுவும்
அனுபவித்தே ஆகவேண்டியதென்பது
ஆன்மாவுக்குத் தெரியும்
அறிவுதான் தெளிவு பெறவேண்டும்

நிற்காது சுழலும்
பூமியினின்று காணும் வரை
உதித்தலென மறைதலென
பொய்யாய் உணரப்படுவோமென்பது
பகலவனுக்குத் தெரியும்
பகுத்தறிவாளரே தெளிவு கொள்ளவேண்டும்

வார்த்தைகளை மட்டுமேநம்பி
பயணம் செய்கிற வரையில்
சிறப்புறவும் நிலைபெறவும்
நிச்சயமாய் வாய்ப்பில்லையென்பது
கவிதைக்கும் தெரியும்
கவிஞனே இதனை நினைவில் கொள்ளவேண்டும்

Thursday, August 27, 2015

தமிழகத்திலும் வியாபம் ?

சமீபத்தில் எனது உறவினர் ஒருவர்
ஏதோ ஒரு இடியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொண்டு
 அலைந்து திரிந்துஅவதிப்பட்டுக் கொண்டிருந்தார்
எனக் கேள்விப்பட்டேன்

என்ன ஏதென்று விசாரிக்கையில்
 வேலை வாங்கித் தருவதாக
ஒருவர்  பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி
அலைய விடுவதாகச் சொன்னார்கள்

தினமும் இதுபோன்றச் செய்திகள் பத்திரிக்கைகளில்
வருவதால் இது எனக்குப் பெரிய விஷயமாகப்
படவில்லை

ஆனாலும் நம்பிக் கொடுக்கத் தக்க நபராக அந்த
ஏமாற்றியவன் தெரியாததால் எப்படி அவரை நம்பி
பணத்தைக் கொடுத்தீர்கள் எனக் கேட்டபோதுதான்
அவர் ஒரு அதிர்ச்சித் தரும் செய்தியைச் சொன்னார்

ஒரு முன்னாள் மத்திய மந்திரியின் அரசு சார்ந்த
நேர்முக உதவியாளருக்கு தனிப்பட்ட எடுபிடியாக
இருந்த ஒருவர்இந்தபணம் கொடுத்து ஏமாந்தவருக்கு
நெடு நாள் பழக்கமாக இருந்திருக்கிறார்

அந்தப் பழக்கத்தில் ஒருநாள் அந்த ஏமாற்றுப் பேர்வழி
இந்த ஏமாந்தப் பேர்வழியிடம் தேர்வாணையத்திடம்
இருந்து அவர் பெயருக்கு வந்த வேலை
உத்திரவினைக் காட்டி

"நான் நான்காவது  பிரிவில் தட்டச்சருக்கு
பரிட்சை எழுதியது நிஜம்
ஆனால் பாஸாகவில்லை
.நேரடித் தேர்வுக்கும் போகவில்லை
அந்த அமைச்சரின் நேர்முக உதவியாளர் மூலம்
(தற்சமயம் அவர் ஓய்வு பெற்றுவிட்டார் )
கொஞ்சம் பணம் செலவழித்தேன்.
அவர் இந்த வேலைக்கு ஏற்பாடு செய்து
கொடுத்துவிட்டார் " எனச் சொல்லியுள்ளார்

அந்த உத்திரவு உண்மையாகத்தான்
இருப்பதனால் உடன் வேலையில் சேரவும் என
இந்த ஏமாந்தப் பேர்வழிச்
சொல்லியுள்ளார்

அவரும் சென்னையில் ஒரு அலுவலகத்தில்
பணியில் சேர்ந்து மூன்று நான்கு
மாதங்களாகப் பணியாற்றி வருகிறார்

விஷயம் இத்துடன் முடிந்திருந்தால் ஒன்றுமில்லை

அந்த ஏமாற்றுப் பேர்வழி இந்த ஏமாந்தப்
பேர்வழியிடம் "இதுபோல் உனக்குத் தெரிந்தவர்கள்
 யாரும் இருந்தால் சொல்
இவர் முலம் இப்படி எளிதாக அரசு
வேலை வாங்கிவிடலாம் "
என் ஆசை காட்டி வலைவிரித்திருக்கிறார்

வலைவிரித்த விதமும் விழுந்தவிதமும்
 வெகு சுவாரஸ்யம்

(தொடரும் )

Monday, August 24, 2015

புதுகை பதிவர் திருவிழா ( 2 )

பதிவர் ஒவ்வொருவரைக் குறித்தும் தொடர்ந்து
அவரது பதிவுகளைப் படிப்பதன் மூலம்
மிகத் தெளிவாகத் தெரிந்தும்
புரிந்தும் வைத்திருக்கிறோம்

எனவே அவர் குறித்து அவர் மீண்டும்
தன்னை விரிவாக அறிமுகம் செய்து கொள்வதை விட
அவர்தான் இவர் என பெயரையும் அவருடைய
வலைத்தள முகவரியையும்
அறிமுகம் செய்தாலே போதும்

சிலருடைய எழுத்துக்கு சிலர் மானசீக
இரசிகர்களாகவே இருக்கிறார்கள்
அவரை சந்தித்து உரையாடி மகிழவேண்டும் என்கிற
ஆவலோடு சந்திப்புக்கு வருகிறார்கள்

அப்படிபட்டவர்களுக்கு அந்தக் கூட்டத்தில்
அவர்தான் இவர் என்பது தெரியாததால்
தேடிக் கொண்டிருக்கவேண்டியதாய் இருக்கிறது
அவரை மேடையில் அறிமுகம் செய்துவிட்டால்
சந்திக்க விரும்புவர்கள் அவரை உடன் தொடர்பு
கொள்ள வசதியாக இருக்கும்

மற்றபடி பதிவர் தன் பதிவுகள் மற்றும்
பதிவராய் இருப்பதன் நோக்கம்
அதன் மூலம் தான் பெற்ற இன்பம்
மற்றும் நண்பர்கள் என விலாவாரியாகப் பேசத்தான்
வலைத்தளமே இருக்கிறதே

மீண்டும் அதையே சந்திப்பிலும் தொடர்தல்
"கூறியது கூறல் "என்பது மட்டுமல்லாது
பிற நிகழ்வுகளுக்கு குறிப்பாக புத்தக வெளியீடு
சிறப்பு விருந்தினரின் சிறப்புரை முதலான
நேரத்தை விழுங்கிவிடும் சாத்தியமும் உள்ளது

இரண்டாவது நிதிவிஷயம்

சிலர் நிதியைத் திரட்டுவது போல
எளிதான விஷயம் இல்லை என்பார்கள்

பலர் நிதி திரட்டுவதைப் போல
கடினமான விஷயம் இல்லை என்பார்கள்

என்னைப் பொறுத்தவரை இரண்டும் சரிதான் என்பேன்

நோக்கமும் நடத்துபவர்களும் இதற்கு முன்பு
நடந்த நிகழ்வின் தாக்கமும் மிகச் சரியாக
இருக்கும்பட்சத்தில் சிலர் சொல்வது சரி

மாறுபட்டிருப்பின் பலர் சொல்வதுதான் சரி

நாம் எப்போதும் சிலர் சொல்கிறபடித்தான்
மிகச் சிறப்பாக மூன்று பதிவர்கள் சந்திப்பையும்
நடத்தி முடித்திருக்கிறோம்

எனவே நம் போன்று வருடா வருடம் தொடர்ந்து
பதிவர் விழா நடத்துகிற நாம் நிதி விஷயம் குறித்து
ஒரு பொதுவான கருத்தை உருவாக்கிக்
கொண்டால் நல்லது

இந்த விசயத்தில் சென்னைப்பதிவர்கள் சில
மிகச் சிறந்த முன்னுதாரணங்களை ஏற்படுத்திச்
சென்றிருக்கிறார்கள்

உதாரணமாக நிதி வழங்குதல் என்பது கட்டாயமில்லை
விரும்புபவர்கள் தரலாம்

வரவையும் செலவையும் முறையாகப் பராமரித்து
அனைவருக்கும் தெரிவிப்பது

மீதத் தொகை ஏதும் இருப்பின் அடுத்த பதிவர் சந்திப்பு
நடத்த இருக்கிற மாவட்டத்திற்குத்
தந்து உற்சாகப்படுத்துவது

(அந்த வகையில் சென்னைப் பதிவர்கள்
மதுரை பதிவர் சந்திப்புக்கு
நிதி கொடுத்து உதவினார்கள்.மதுரைப் பதிவர்
சந்திப்புக்கு பொறுப்பேற்றவர்கள் இரண்டாவதைச்
சரியாகச் செய்யாததால் மூன்றாவதை இயல்பாகவே
செய்ய முடியாதவர்களாக இருக்கிறார்கள் )

இது நீங்களாக நிதி திரட்டுதல் தொடர்பாக
பதிவர்களுக்கு ஏதும் தனித்த சிறந்த கருத்து இருப்பின்
( நிச்சயம் இருக்கும் ) தெரிவித்தால் நிகழ்ச்சிப்
பொறுப்பாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் தானே

வாழ்த்துக்களுடன்..



Friday, August 21, 2015

புதுகை பதிவர் திருவிழா 2015 ( 1 )

ஒரு பேச்சாளர் மேடையேறி
மைக் பிடிக்கும் தன்னம்பிக்கையை வைத்தே
இவர் சிறந்த பேச்சாளரா இல்லையா என்பதை
பெரும்பாலும் அனுமானித்துவிடமுடியும்

அதைப்போலவே ஒரு பெரும் நிகழ்ச்சிக்கு
பொறுப்பேற்கிறவர் நிச்சயம் அவர் மிகச் சிறப்பாகச்
செய்து முடித்துவிடுவார் என்பதை அவர்
செய்கின்ற பூர்வாங்க ஏற்பாடுகளை வைத்தே
மிகச் சரியாக அனுமானித்துவிடமுடியும்

அந்த வகையில் முத்து நிலவன் ஐயா அவர்கள்
தலைமையில் புதுகை பதிவர் திருவிழா
ஏற்பாடுகளைச்செய்யத் துவங்கி இருக்கிற
புதுகை பதிவர்கள் பதிவர் சந்திப்பினை
மிகச் சிறப்பாகச் செய்து முடிக்க பல்வேறு
புதிய முயற்சியினை மேற்கொண்டுவருகிறார்கள்

இருந்தாலும் கூட பதிவர்கள் இதுவரை முடிந்த
பதிவர் சந்திப்பை விட இந்தச் சந்திப்பை
மிகச் சிறப்பான சந்திப்பாக்க ஏதேனும் ஆலோசனைகள்
இருப்பின் அதைத் தெரிவித்தால் நலமாக இருக்கும்
என்கிற எண்ணத்தில் இருக்கிறார்கள் என்பது
இன்று மதுரையில் அந்தத் துடிப்பு மிக்க பதிவர்கள்
சிலரைப் பார்த்துப் பேசுகையில் புரிந்தது

முதலாவதாக

எப்போதும் பதிவர் சந்திப்பில் மிகச் சரியாகவும்
முறையாகவும் விரைவாகவும் பதிவர்கள்
அனைவரையும் அறிமுகம் செய்வது
ஒரு சவாலான விசயமாகவே இருக்கிறது

என்னுடைய ஆலோசனையாக பதிவர்கள்
தங்களைக் குறித்து அவர்களே அறிமுகம் செய்யாது
மாவட்ட வாரியாக பதிவர்களை மேடையேற்றி
மாவட்டத்தின் சார்பாக யாரேனும் ஒருவர் வரிசையாக
அறிமுகம் செய்தால் சரியாக இருக்கும் என்பது
என்னுடைய கருத்து

ஏனெனில் எப்படித்தான் வலியுறுத்திச் சொல்லியும்
மிக நன்றாகப் பேசவும் தெரிந்த பதிவர்கள்
அவர்களையும் அறியாது கொஞ்சம் கூடுதல் நேரம்
எடுத்துக் கொண்டுவிடுகிறார்கள்

அது குறித்து பதிவர்கள் தங்கள் கருத்துக்களைப்
பதிவு செய்தால் அவர்களுக்கு உதவியாக இருக்கும்
என நினைக்கிறேன்

தொடர்புக்கு
bloggersmeet2015@gmail.com

(தொடரும் )

Wednesday, August 19, 2015

சிரிக்கும் நாளே திரு நாள்

நாலே நாளு நிகழ்வுக்ளுக்காக
நம் வாழ்நாள் எல்லாம்
உழைத்துக் களைக்கிறோம்
என்பதுதான் எத்தனை அவலமானது

இப்போது
எந்தப் பிரசவமும்
இயற்கையானதில்லை
எல்லாமே ஆயுதம்தான்
இதற்கு கால் ஆஸ்தி போகும்

இப்போது
பள்ளிக் கூடங்கள் எதுவும்
கல்விக் கூடங்கள் இல்லை
எல்லாமே கொள்ளைக் கூடங்கள்தான்
இதற்கொரு கால் ஆஸ்தி போகும்

இப்போது
எந்தத் திருமணமும்
மனவிழாவாக இல்லை
எல்லாமே ஜம்பம் காட்டும் பெருவிழாதான்
இதற்கென கால் ஆஸ்தி போகும்

இப்போது
எந்தச் சாவையும்
துக்க நாளென முடிப்பதில்லை
எல்லாமே சடங்கு சம்பிரதாயத் திருவிழாதான்
இதிலிமொரு கால் ஆஸ்தி போகும்

இதிலும் மீறி
மிஞ்சும் ஆஸ்தியை
ஆசையும் ஆடம்பரமும்
கொண்டாட்டங்களும்
துடைத்தெடுத்துப் போகும்

ஆரோக்கியம் விடுத்து
நோய்க்கெனச் செலவழித்தலைப் போல

வாழ்க்கையைக்
கொண்டாடுதலை விடுத்து
கொண்டாட்டங்களையே
வாழ்க்கையெனக் கொண்டதை
என்று மாற்றிக் கொள்ளப் போகிறோம் ?

நாற்றினை வாடவிட்டு
களைகளுக்கு நீர்ப்பாய்ச்சும்
மடமையை என்று ஒழிக்கப் போகிறோம் ?

சிரிக்கும் நாளெல்லாம்
நிச்சயம் திருநாள்தான் என்பதை
வருத்தத்தில் இருக்கும்
எந்தத் திரு நாளும்
நிச்சயம் வெறும் நாளே என்பதை
என்று உணரப் போகிறோம்  ?

Tuesday, August 18, 2015

ஐந்தில் இரண்டேனும் ......

"வயல்வெளி
நாற்றிடை வளர்
களையினைக் காணலும் களைதலும்
எளிதானதைப்போல் அல்லாது

முற்றியக்
கதிருடன் திகழ்
பதரினைக் காணலும் களைதலும்
அரிதாகுதே என் செய்வேன்"
என்றேன்

"மனத்திடை வளர்
கருவதன் குறையதை நிறையதை
காணுகிற அளவு

படைத்திட்ட
படைப்புடன் திகழ்
பதரதை களையதை குறையதை
காணல் அரிதாகிறது என்கிறாய்
அப்படித்தானே "என்றார் குரு

மௌனமாய்த் தலையாட்ட
குருவே தொடர்ந்தார்

" களத்தினில்
கதிரடித்துக் காற்றினில் வீச
பதர் பறக்கும் கதிர்மட்டுமே
உயர்ந்துக் குவியும்

காலக் காற்றினில்
படை ப்பதைத் தூற்ற
குப்பைகள் பறக்கும்
தக்கதே நிலைக்கும் "என்றார்

இப்போதெல்லாம்

போக்கும்வழியறிந்ததால்
 பதர் குறித்து
பதற்றமடைவதில்லை

களையும்  முறைதெரிந்ததால்
களைகுறித்தும்
கவலை கொள்வதில்லை

 நாளெல்லாம்

 கூடுதலாய் விதைப்பது குறித்தும்
அதிக விளைச்சல் குறித்துமே
அக்கறை கொள்கிறேன்

பழுதற்றதாய்
ஐந்தில் இரண்டேனும்
காலம் கடக்குமெனும்
அசையாத நம்பிக்கையோடு

Monday, August 17, 2015

அதிர்ஷ்டக்காற்று

கல்லூரி நாட்களில்
மூன்று மைல் தொலைவிலிருந்த கல்லூரிக்கு
மிதிவண்டியில்தான் செல்வேன் நிதமும்

சில சமயங்களில்
கல்லூரி செல்கையிலோ
திரும்ப வருகையிலோ
"தள்ளுக் காற்று" இருக்கும்

அப்போது
சக்தியும் குறைவாய்ச் செலவழியும்
தூரமும் விரைவில் கடப்பேன்

பலசமயங்களில்
கல்லூரி செல்கையிலோ
திரும்ப வருகையிலோ
"எதிர்க்காற்றே "அதிகம் இருக்கும்

அப்போதெல்லாம்
சக்தி விரையமும் அதிகம் இருக்கும்
தூரம் கடக்கவும் நேரம் பிடிக்கும்

ஆயினும்
எப்போதும் நான்
காற்றின் போக்கினைக் குறித்து
கவலைகொண்டதில்லை

எப்போதும்
அதற்கு ஏற்றார்ப்போல
என்னை தகவமைத்துக் கொள்வதிலேயே
அதிகக் கவனம் கொள்வேன்

அதிர்ஷ்டம் துரதிஷ்டம் குறித்து
கவலை கொள்ளாது
அன்றாடம் என் பயணத்தைத்
தொடர்வதைப் போலவே....

நாம் வெற்றி கொள்வோம் இனி வரும் தேர்தலிலேனும்

பதவிக்கான
தகுதி  இருந்தும்
பதவி  அடையாதவர்கள்
பிரச்சனைக் குரியவர்கள் இல்லை

அவர்கள்
சட்டெனச் சோர்ந்துபோய்
இலக்குவிட்டு  விலகிவிடுதலே
இங்குள்ள பிரச்சனை

பதவிக்குரிய
தகுதி இன்றி
பதவியடந்தவர்களாலும்
நிச்சயம் பிரச்சனை இல்லை

அவர்கள்
பதவியடைந்தும் தம்மை
தகுதிபடுத்திக் கொள்ளாததே
இங்குள்ள பெரும் பிரச்சனை

தகுதிக்குரியவர்கள்
பதவிபெறாததும்
பதவிபெற்றவர்கள்
தகுதியற்று இருப்பதும் கூட
இங்கு பிரச்சனையில்லை

பதவியின் பலமும்
தகுதி குறித்த   அறிவுமற்றவர்களே
பதவிக்குரியவர்களைத் 
தேர்வுசெய்பவர்களாக இருப்பதே
இங்குள்ள  பெரும் பிரச்சனை

இலைக்கும் கிளைக்கும்
நீரூற்றலை விடுத்து
இனியேனும்
வேருக்கு  நீரூற்றுவோம்

தலைமையையும் கட்சியையும்
விமர்சித்தலைவிடுத்து
இனியேனும்
வாக்காளர்களுக்கு விழிப்பூட்டுவோம்

தும்பைவிட்டு வாலைப்பிடித்து 
இதுவரை பட்டதெல்லாம்
போதும்  போதும்

கொம்புபிடித்து காளைகளை அடக்கி
நாம் வெற்றி கொள்வோம்
இனி வரும் தேர்தலிலேனும்
  

Saturday, August 15, 2015

பொறுப்பறியா சுதந்திரம்

கம்னியூச நாட்டிலிருந்து
ஒரு கொழுகொழுத்த நாயும்

நம்போன்ற
ஜனநாயக நாட்டிலிருந்து
எலும்பும் தோலுமாய் ஒரு நாயும்

எல்லைக் கோட்டில் அதிருப்தியுடன்
சந்தித்துக் கொள்கின்றன

"எங்கள் நாட்டில்
உணவுக்குப் பஞ்சமில்லை
ஆனால் குலைக்கத் தான் முடிவதில்லை "
என்றது கொழுத்தது

"எங்கள் நாட்டில்
எப்போது வேண்டுமானாலும்
எப்படி வேண்டுமானாலும் குலைக்கலாம்
சோத்துக்குத்தான் பாடாய்ப்படனும்"
என்றது மெலிந்தது

இரண்டும் ஒத்தமனதுடன்
இடம் மாறிக்கொள்ளச் சம்மதித்து
நாடு மாறிக் கொண்டன

பொறுப்பறியா சுதந்திரமும்
சுதந்திரமில்லா பொறுப்புக்களும்
மீண்டும் சலிப்படையத்தான் செய்யும்
என்பதை உணராமலேயே...

இதே காரணத்திற்காக
இவை இரண்டும் மீண்டும்
மாறித் தொலைக்க வேண்டி இருக்கும்
என்பதை அறியாமலேயே

Thursday, August 13, 2015

மீண்டும் மீண்டும்

மீண்டும் மீண்டும் சொல்லக்
கற்றுக் கொள்வோம்

பொய்யாயினும்
நம்ப முடியாததாயினும்
தர்க்கத்திற்கு எதிரானதாயினும்..

மீண்டும் மீண்டும்சொல்லப்பட்டவைகள்தான்
திமிரத் திமிரத் திணிக்கப்பட்டவைதான்
பாசியாய் மிகஅதிகமாய்ப்   படர்கின்றன
தலைமுறை தாண்டி நிலையாய்த் தொடர்கின்றன

பால் குடிக்கும் நாகம் மட்டுமல்ல
வெள்ளைச் சேலை மோகினி மட்டுமல்ல
சொர்க்கம் நரகம் மட்டுமல்ல
சடங்குகள் சம்பிரதாயங்கள் மட்டுமல்ல
ஜாதி மதம் மட்டுமல்ல

நாம் நம்பிக்கை கொண்டிருக்கிற
பகுத்தறிவுக்கு ஒப்பாதவை எல்லாம்
நமக்கு திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டவையே
நம்மீது திமிரத் திமிரத் திணிக்கப்பட்டவையே

எனவே
இவைகளுக்கு எதிரான
சாட்சியங்களை நிரூபணங்களை
ஒருமுறை சொல்லி ஓய்ந்துவிடாது

இனியேனும்
மீண்டும் மீண்டும்
சொல்லக் கற்றுக் கொள்வோம்

இனியேனும்
பொய் பித்தலாட்டங்களை எளிதாய்
வெல்லக் கற்றுக் கொள்வோம்

Monday, August 10, 2015

எத்தராட்டம் ஒழிக்க எளிய வழி

இல்லை யென்று சொல்பவனும் மூடனே-அவனை
மறுத்து வெல்ல நினைப்பவனும் மூடனே
உள்ளத் தாலே உணரலாகும் ஒன்றையே-தனது
அறிவு கொண்டு தேடுவோனும் மூடனே

சுழித்து ஓடும் ஆறதனின் குளுமையை-கரையில்
நின்று கொண்டு உணர்ந்திடவும் கூடுமோ ?
குளித்து குளிரின் நடுங்குவோனின் நிலையதை-கரையில்
ஒதுங்கி நின்றோன் நடிப்பென்றால் விளங்குமா ?

எரிக்கும் பசியில் துடிப்பவனின் அவஸ்தையை-உண்டு
நெளிந்துக் கிடப்போன் உணர்ந்திடவும் கூடுமோ ?
பசிக்க வென்று ஓடுபவனின் நிலையதை-பசியில்
துடித்து நிற்போன் புரிந்திடவும் கூடுமோ ?

உண்டு என்று சொல்லியிங்குப் பிழைக்கவும்-தெய்வம்
இல்லை யென்றுச் சொல்லிநன்குச் செழிக்கவும்
உண்டு இங்கு மனிதரென்று அறிந்திடு-அவர்கள்
சொல்லும் மொழியை உளறரென்று ஒதுக்கிடு

உந்தன் உள்ளம் கொள்ளுகின்ற நிலையதே-என்றும்
உண்மை யென்று உணர்ந்துநீயும் செயல்படு
இந்த முடிவில் யாவருமே நின்றிடின்-இங்கு
ஏய்த்துப் பிழைக்கும் எத்தராட்டம் ஒழிந்திடும்

Sunday, August 9, 2015

முட்டுச் சந்து

 ஒவ்வொரு பண்டிகையின் போதும்
சட்டைக்கு அளவு கொடுக்கையில் 
"கொஞ்சம் வைத்துத் தை
வளர்கிற பிள்ளை " எனச் சொல்லி
கொஞ்சம் பெரிதாகவே தைத்துக் கொடுப்பாள் அம்மா
என்றைக்கோ...எவனோ..அதன் காரணமாய்
"தொள தொள மணி "என வைத்த பெயர்
இன்றுவரை தொடர்ந்துகொண்டுதான் உள்ளது

கல்லூரிக்குள் நுழையும் நாள் முதலே

வேலைக்கான தயாரிப்புப் பணியில்
முழுவதுமாக என்னை முடக்கி வைப்பார் அப்பா
கல்லுரிக் கலாட்டா
நண்பர்கள் உல்லாசம் என
நான் கதைவிடுவதெல்லாம் கூட
சினிமா பார்த்துக் கற்றுக் கொண்டதுதான் 

சம்பாத்தியம் தந்த தெம்பில்

கொஞ்சம் நான்
நடுத்தரம் மீறிய உல்லாசத்தில்
மிதக்க நினைத்தாலும்
ஏன் நடக்க நினைத்தாலும் கூட
பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து
உபன்யாசம் செய்து என்னை
ஓய்ந்து உட்காரச் செய்வாள் மனைவி.

நடுவயதில்

திமிறித் தாவிய தேவைகளை
அடக்கி ஒடுக்கிய மிதப்பில்
அல்லது அலுப்பில்
கொஞ்சம் ஓய்ந்து சாய எத்தெனிக்கையில்
பால் வைத்த நெற்பயிறாய்
பருவம் எய்தினின்று
என்னை பதறச் செய்வர் பிள்ளைகள்.
அதனால்
தொடரோட்டம் தொடர்ந்து தொடரும்.

அனைத்து கடமைகளையும்

செவ்வனே செய்து முடித்து
நிகழ்காலக் காற்றைக் கொஞ்சம்
சுவாசிக்க முயலுகையில்
செத்த நாக்கிற்கு கொஞ்சம்
சுவை காட்ட நினைக்கையில்
"பழைய நினைப்பா பேராண்டி.."என
பரிகாசம் செய்வான் நண்பன்.

எனக்கென்னவோ..இப்போதெல்லாம்...

கிழிந்த சாக்குப் பையில்
அடுக்கி வைக்கப்பட்ட அடுக்கு இலையை
எடுக்க முயலும் ஒவ்வொரு முறையும் 
"காய்ந்ததை இன்று எடு
பச்சையை நாளை எடுக்கலாம்" எனச் சொல்லி
கடைசி வரையில்
பச்சை இலையில் சாப்பிடாமலே போன
பாட்டியின் நினைவுதான்
அடிக்கடி வந்து தொலைக்கிறது.

என்ன செய்வது...

உடலிருக்கும் இடத்திலேயே மனதை வைப்பதும்
எப்போதும்
நிகழ்காலத்திலேயே நிலைத்து நிற்பதுமே
"வாழுதல்"என்பது கூட
எதிர்காலத்தின் நீட்சி
ஒரு முட்டுச்சந்தில்
முட்டி நிற்கையில்தான்
எல்லோருக்கும் போல  
எனக்கும் புரியத் துவங்குகிறது.

Friday, August 7, 2015

மரபும் வசனகவிதையும்

எதுகை எடக்கு செய்கிறதென்றோ
மோனை முகம் தூக்குறதென்றோ
நாங்கள் வசன கவிதையின்
வாசல் போய் நிற்கவில்லை

திடப்பொருளை நிறுத்தலும்
திரவத்தை முகத்தலுமே சரியாதல் போல

யுத்தக் களத்தில்
தூரமே
ஆயு தத்தை முடிவு செய்தல் போல

பயணத்தின்
தூரமே
வாகனத்தை முடிவு செய்தல் போல

கவிதையின்
சாரமே
அதன் வடிவத்தை முடிவு செய்து கொள்கிறது
 
இதமாக
பதமாக
மனம் தொட எனில்
மரபும்

சரியாக
நேடியாக
அறிவைச் சீண்ட எனில்
வசன கவிதையுமே
மிகச் சரியாகப் பொருந்துகிறது

கலந்துரையாடுவதற்கும்
தர்க்கம் செய்வதற்குமான
வேறுபாடு தெரிந்தவர்களுக்கு

இதற்கும் மேலான விளக்கம்
நிச்சயம் அதிகபிரசங்கித்தனம் தானே

Thursday, August 6, 2015

மரண பயம்.?

குற்றவாளிபோல் நான் இருக்க
என்னைச் சுற்றி
மகனும் மகளும் மருமகளும்

"நான் என்ன குறை வைக்கிறேன்னு
நீங்களே நேரடியா கேளுங்கோ
காலையில் ஆறு மணிக்கு
ஸ்ராங்கா ஒரு கப் காஃபி
வாக்கிங் போய் வந்ததும்
ஒரு கப் ஓட்ஸ் கஞ்சி
பதினொரு மணிக்கு
முளைகட்டிய பயறு ஏதாய்ச்ச்சும்
மதியம் காய்கறியோடு
அளவான சாப்பாடு
சாய்ந்திரம் ஏதாவது ஜூஸ்
ராத்திரி எண்ணையில்லாம
சப்பாத்தி நாண் இப்படி ஏதாவது
முடியுதோ முடியலையோ
நான் சரியாகத்தான் செய்து தந்தேன்
இப்போது ஒரு மாதமாய்  அவர் சரியாக
சாப்பிடரதும் இல்லை
முகம் கொடுத்து பேசரதும் இல்லை"
முந்தானையால் கண்ணீரைத்
துடைக்க முயன்று தோற்கிறாள் மருமகள்

" கோவில் போய்வர ஆட்டோ
ஆன்மீக டூர் போகணுமா
ஆறு மாதத்துக்கு ஒருமுறை
அதுக்கும் ஏற்பாடு பண்ணித்தாரேன்
என்னிடம் பணம் கேட்கச்
சங்கடப் படக்கூடாதுண்ணு ஏ.டி.எம் கார்டு
நானும் யோசிச்சு யோசிச்சு
முடிந்ததையெல்லாம் செய்யரேன்
அப்படியும் ஏன் இப்பவெல்லாம்
சரியா பேசமாட்டேங்கராருன்னு தெரியலை"
பல நாள் அடக்கிவைத்ததை
கொட்டி த்தீர்க்கிறான் ஆருயிர் மகன்

"மனதில் என்ன குறை இருந்தாலும்
சொல்லுப்பா
எதுன்னாலும் செய்யுறொம்
எங்களை சங்கடப் பட வைக்காதே அப்பா"
எனக் கையைப் பிடி த்துக் கொள்கிறாள்
பார்த்துப் போக வந்த மகள்

நான் என்னவெனச் சொல்வது ?
அவர்களுக்கு எப்படி புரிய வைப்பது?

ஆட்டுக்குத் தேவையான அனைத்தும் கொடுத்தும்
எதிரில் புலியை கட்டிவைத்த கதையாய்...

வீட்டுக்குள் கரு நாகம்படமெடுத்து நுழைந்ததை
கண்ணாரப் பார்த்தும்
இருப்பிடம் தெரியாது வீட்டுக்குள்
பயந்து திரிபவன் ..நிலையாய் 

நாற்பதாய் இருந்த நண்பர்களின் எண்ணிக்கை
நாள்பட நாள்பட நசிந்து கொண்டே போய்
ஒன்றாகிப் போனதும்
அந்த ஒருவனும் போன மாதம்
பொசுக்கென போனதும்..

அடுத்தது நான் தான் என
மனம் முற்றிலுமாய் ஏற்று
அரண்டு போய் இருப்பதையும்
காலனின் கரிய நிழல்
உயிரினில் உரசும் சப்தம்
இடியோசையாய் என்னுள்
சில நாட்களாகக் கேட்பதையும்..

எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது ?

எப்படி அவர்களை நோக வைப்பது ?

ஏணியாக எப்போதுமிருந்து..

பிழைக்கத் தெரிந்தவர்கள் எல்லாம்
கெட்டிக்காரர்களாகத்தான் இருக்கிறார்கள்
நியாயஸ்தர்கள் நாம் தான்
குழம்பிப் போய் இருக்கிறோம்

கண்ணைத் திறந்து பார்க்கச் சொல்லி
கருணைகாட்டச் சொல்லி நாமெல்லாம்
கண்ணை மூடி வேண்டிக்கொண்டிருக்கையில்

சன்னதிக்குள் ஒரு கயவன்
காம லீலைகள் புரிந்து கொண்டிருக்கிறான்

அம்பாள்கண் திறந்து பார்க்கமாட்டாள் என்பதில்
அவன் தெளிவாய் இருக்கிறான்
நாம்தான் குழம்பிப்போய்த் தவிக்கிறோம்

கோவில்கள் கொடியோரின் கூடாரம்
என்கிற அதிரடி வசனங்களால்
நம்மை மெய்சிலிர்க்கச் செய்து
ஆட்சியைப்பிடித்தவர்களின்
வாரீசுகள் எல்லாம்

கோவில் கோவிலாய் போய்
குடும்பத்தோடு நேர்த்திக்கடன்
செலுத்திக் கொண்டிருக்க

நாம் தான் குழம்பிக் கிடக்கிறோம்
அவர்கள் ஊருக்கெது நமக்கெது என்பதில்
எப்போதும் தெளிவாய் இருக்கிறார்கள்

இரண்டு எல்லைகளில்
இருப்பவர்கள் எல்லாம்
பிழைக்கத் தெரிந்தவர்களாய் இருக்க

இடையில் இருக்கும் நாமதான்
குழப்பத்தில் இருக்கிறோம்

இவர்களுக்கெல்லாம்
ஏணியாக எப்போதுமிருந்து
எதை எதையோ இழக்கிறோம்

Wednesday, August 5, 2015

நொடியில் யாரும் கவிஞராகக் கூடும்

விளம"தும் "மா "வும் தேமா
முறைப்படி அமையும் வண்ணம்
இலக்கணக் கவிதை ஒன்று
உடனடி யாக உன்னால்
இயற்றிடக் கூடு மாயின்
கவியென ஏற்பேன் " என்றான்
வலதுகை போன்றே நாளும்
என்னுடன் உலவும் நண்பன்

"இதந்தரு மனையி னீங்கி
இடர்மிகு சிறைப்பட் டாலும் "
முதல்வரி இதுவாய்க் கொண்டு
முத்தெனத் தொடரும் அந்தச்
சுதந்திரத் தேவிப் பாடல்
சந்தமென் நினைவில் ஊற
பதட்டமே சிறிது மின்றி
பகிர்ந்தேன் இந்தப் பாடல்

"சிந்தனை செய்ய வேணும்
சிலநொடி நேரம் வேண்டும் "
என்றுநான் சொல்வே னென்ற
நினைப்பினில் இருந்த நண்பன்
மந்திரம் சொல்லல் போல
நிமிடமாய்ச் சொல்லக் கேட்டு
வந்தெனைக் கட்டிக் கொண்டு
வாழ்த்தினைப் பகிர்ந்து கொண்டான்

எட்டயப் புரத்து வேந்தன்
இயற்றிய பாடல் தன்னை
நித்தமும் பயின்றால் சந்தம்
நிலையென நெஞ்சில் தங்கும்
பக்குவம் இதனை யாரும்
பழகினால் மட்டும் போதும்
நிச்சயம் நொடியில் யாரும்
கவிஞராய் மாறக்  கூடும்

Tuesday, August 4, 2015

எல்லாம் நமக்குள்ளே

ஒரு மொட்டை
மலரச் செய்வதற்கோ
மலர்ந்ததை
வாடச் செய்வதற்கோ
வாடியதை
கருகச் செய்வதற்கோ
கதிரவன் நித்தமும் உதிப்பதில்லை

அவன் தன்
கருணை ஒளியை
பாரபட்சம் ஏதுமின்றி
அனைவருக்கும் சமமாகவே
விரித்து வைத்துப் போகிறான்

அந்தக் கருணை ஒளி
வரமாவதும்
சாபமாவதும்
அவரவர் நிலைபொருத்தேயன்றி
அவன் பொருத்தல்ல

ஒரு செடியை
வளரச் செய்யவோ
வளர்ந்ததை
செழிக்கச் செய்யவோ
செழித்ததை
அழுகச் செய்யவோ
வான்மழை பரவிப் பெய்வதில்லை

அது தன்
அமுதக் கலசத்தை
பாரபட்சம் ஏதுமின்றி
அனைவருக்கும் சமமாகவே
அள்ளிக் கொடுத்துச் செல்கிறது

அந்த அமுதம்
அமுதமாவதும்
விஷமாவதும்
அதனதன் நிலைபொருத்தேயன்றி
மழை பொருத்தல்ல

உலகில் ஒருவனை
வாழ வைக்கவோ
வாழ்பவனை
உயரச் செய்யவோ
உயர்ந்தவனை
தாழச் செய்யவோ
தெய்வம் தன் அருளை வழங்குவதில்லை

"அது " தன்
பேரருளை
பாரபட்சம் ஏதுமின்றியே
அனைவருக்கும் சமமாகவே
பொழிந்து போகிறது

"அதன் " அருள்
பயன்பட்டுப் போவதும்
பயனற்றுப் போவதும்
அவனவன் திறன்பொருத்தேயன்றி
"அதன் "பொருத்தல்ல 

Monday, August 3, 2015

பொன் செய்யும் மருந்து...

ஒருஏக்கர் நிலத்தினிலே
வீடும் வேண்டாம்- தூக்கம்
வாராம இரவெல்லாம்
முழிக்கவும் வேண்டாம்

ஒழுகாத ஒருவீடு
இருந்தா போதும் -அதுல
கும்பகர்ணன் போலனித்தம்
அசந்தா போதும்

ஒருமூட சோத்துநெல்லு
வேணவே வேணாம்-வயிறு
பசிக்காம கொறிக்கிச்சுகிட்டு
 கிடக்கவும் வேண்டாம்

ஒருபொழுது சோறுதண்ணிக்
 கூடப் போதும்-தினமும்
பசியெடுத்து ருசித்து
தின்னா போதும் போதும்

பட்டுச்சொக்கா போட்டிக்கிட்டு
மினுக்கவும் வேண்டாம்-அதுக்கு
ஏத்தாப்பல செலவழித்துத்
தவிக்கவும் வேணாம்

கட்டுச்செட்டா ரெண்டுடுப்பு
இருந்தா போதும்-பார்ப்போர்
மதிக்குமாறு உடுத்தினாலே
போதும் போதும்

தலைவனாக தலைநிமிர்ந்து
 நடக்கவும் வேண்டாம் -அதைத்
தங்கவைக்க பித்தலாட்டம்
செய்யவும் வேண்டாம்

நிலைகுலையா மனிதனாக
உலவினால் போதும்-ஊரில்
தெரிஞ்சசனம் மதித்தாலே
போதும் போதும்

கவிஞனென்று ஊருலகே
போற்றவும் வேண்டாம்-தினமும்
அதுக்காக எதைஎதையோ
எழுதவும் வேண்டாம்

எளிமையுடன் நல்லதையே
எழுதினால் போதும்-அதுக்கு
கிடைக்கின்ற மதிப்பதுவே
போதும் போதும்

Sunday, August 2, 2015

கவிக்குக் காரணி

வாழ்வின் விளிம்பில்
மரணத்தின் சரிவில்

மெல்லிய நினைவும்
அடங்கும் மௌனமும்

ஏதுமின்மையெனும்
மாயக் கரைசலில்
கரைகிற நொடியில்

யார் யார் என் நினைவில்
தோன்றி மறையக் கூடும்
ஓய்ந்துச் சாய்ந்த நொடியில்
பட்டியலிட்டிப் பார்க்கிறேன்

பெற்று வளர்த்தவர்கள்
பேணிக் காத்தவர்கள்
பாதியாக ஆனவள்
என் மறுபதிப்பானவர்கள்
உயர்வுக்கு ஏணியானவர்கள்
தாழ்வுக்குக் காரணமானவர்கள்

அனைவருக்கும்
இடையிடையே
எப்படித் தவிர்க்க முயன்றபோதும்

நீரில் அமுக்க
விரைந்தெழும் தக்கையாய்

அவள் முகமே
முன்வந்துப் போகிறது

காரணமறியாது திகைக்கையில்
அவளே உரக்கச் சிரித்தபடிச் சொல்கிறாள்

"நீ மாறாது
என்றும் நீயாக இருக்க
கவியே காரணம் எனில்

அந்தக் கவிக்கு
காரணி
நான்தானே "என்கிறாள்
தன தாவணி முனையை  சுருட்டியபடி

பள்ளிப்பாடம் தவிர
எதுவுமே பேசியிராத

பள்ளி நாட்களுக்குப் பின்
கண்ணிலேயே படாத மீனலோட்சினி

ஏற்கவும் முடியாது
மறுக்கவும் முடியாது
தத்தளிக்கிற வேளையில்

எங்கோ ஏனோ
பள்ளி மணியோசை மட்டும்
தொடர்ந்து கேட்பதுபோல் படுகிறது 

பூந்தியாகும் லட்டுகள்

"ஸ்வீட் மாஸ்டர் பேசுகிறார்
என்னன்ன்னு கேளுங்கோ "என
அலைபேசியயைக் கொடுத்துப்போனாள் மனைவி

வாங்கிப் பேசினேன்

"அண்ணா ஒரு சின்னச் சங்கடம்
லட்டுக்கு ஆர்டர் கொடுத்திருந்தீர்கள் இல்லையோ
சின்ன ஆர்டர்ன்னு
அஸிஸ்டெண்டைப் பார்க்கச் சொல்லி இருந்தேன்
கொஞ்சம் பதம் விட்டுவிட்டான்
லட்டு இனி பிடிச்சா அதிகம் உதிரும்
மன்னிச்சுடுங்கோ
பூந்தியா பாக்கெட் செய்து கொடுத்திடறேனே " என்றார்

சரி இனி பேசிப் பயனில்லை எனப் புரிந்தது

"சரி அப்படியே செய்துடுங்கோ
இரண்டுக்கும் அப்படி என்ன வித்தியாசம் "என்றேன்
ஏதாவது சொல்லவேண்டுமே என்று

"ஒண்ணும் இல்லேண்ண
இரண்டுக்கும் சேர்மானம் செய்முறை எல்லாமே ஒன்றுதான்
சைஸ்தான் வித்தியாசம்
இது உருண்டை அது உதிரி " என்றார்

பல சமயம்
எப்படி முயன்றும்
ஒரு கட்டுக்குள் அடங்காது
வசனகவிதையாகிப் போன
சில மரபுக் கவிதைகளின் ஞாபகம்
ஏனோ எனக்கு உடன் வந்து போகுது

Saturday, August 1, 2015

இன்பம் கொள்ளும் சூட்சுமம்

எங்கும் ஜாலி எதிலும் ஜாலி
என்றும் ஜாலி ஜாலி-அதனால்
எங்கள் வழியில் என்றும் இல்லை-
கவலை அதற்குச் ஜோலி

விடிதல் வேண்டி வீணே நிற்கும்
எண்ணம் கடந்து விட்டோம் -அதனால்
முடியும் மட்டும் ஒளியைக் கூட்டி
இருளை நடுங்க வைத்தோம்

உணர வருவதே மகிழ்வு என்பதை
தெளிவாய்ப் புரிந்து கொண்டோம்-அதனால்
தினமும் வெளியில் தேடி அலையும்
அவலம் கடந்து விட்டோம்

பெறுதல் கொடுக்கும் இன்பம் சிறுமை
உணர்ந்து தெளிவு கொண்டோம்-அதனால்
கொடுக்க முடிந்த அளவு கொடுக்கும்
குணத்தைப் பெருக்கிக் கொண்டோம்

எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய்
என்று மகிழ்ந்த ஒருவன்-இங்கே
மெத்தச் செல்வம் கொண்டு வாழ்ந்த
மனிதன் இல்லை தோழா

இதனை மட்டும் மனதில் கொண்டால்
போதும் அன்புத் தோழா-உனக்கும்
நிதமும் மகிழ்ந்து வாழும் தெளிவு
உன்னுள் பரவும் தானா