Wednesday, March 30, 2016

கவிக்கு அதுதான் உயிர்ச்சேர்க்கும்..

உப்பும் உரப்பும்
சரியா இருந்தாலும்
சத்தும் இருக்கணும் தம்பி-உடம்புக்கு
அதுதான் உரம் சேர்க்கும் தம்பி

நிறமும் அழகும்
நிறைஞ்சு இருந்தாலும்
மணமும் அவசியம் தம்பி-பூவை
அதுதான் சிறப்பாக்கும் தம்பி

தாளமும் இராகமும்
ஒத்து இருந்தாலும்
பாவமும் சேரணும் தம்பி-பாட்டை
அதுதான் அமுதாக்கும் தம்பி

எடுப்பும் தொடுப்பும்
இதமா இருந்தாலும்
முடிப்பதும்  அமையணும்  தம்பி-எதையும்
அதுதான்  நிறைவாக்கும் தம்பி 

எதுகையும் மோனையும்
அழகா இணைஞ்சாலும்
கருவும் அவசியம் தம்பி-கவிக்கு
அதுதான் உயிர்ச்சேர்க்கும் தம்பி

Monday, March 28, 2016

தலைவர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்..

தலைவர்களைத்
தொந்தரவு செய்யாதீர்கள்

அவர்கள்
நமக்காகத்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்

கொள்கைப்படி
இணைவது எனில்
முரண்பட வாய்ப்புண்டு என்பதால்

கொள்கைகளை ஓரம் வைத்து விட்டுத்தான்
நமக்காகத்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்

அவர்களைத் தொந்திரவு செய்யாதீர்கள்

மிகக் குறைந்த செயல்திட்டம் எனில்
பதவி பிடிப்பதுதான்

அதற்கும் மிகக் குறைவாக
செயல்திட்டம் வகுத்துச் சேர
வாய்ப்பே இல்லை
அது கூட நமக்காகத்தான்

அவர்களைப் புரிந்து கொள்ளுங்கள்

திருமணம்  அனைவரும் அறியச் செய்யலாம்
சீர் செனத்தி எல்லாம்
தனியாகப் பேசினால்தான் சரியாய் வரும்
மாறிச் செய்தல் மரபில்லை

பேசி முடியட்டும்
திருமணம் நம் முன்னால்தானே
கொஞ்சம் பொறுமையாய் இருங்கள்

இன உணர்வு
மத உணர்வு
மொழி உணர்வு
ஜாதி உணர்வு
பண உணர்வு
அனைத்தும் நமக்குண்டு என்பதுவும்

இந்தத் தேர்தலில்
எதைத் தூக்கி
எதை அமுக்கினால்
எல்லாம்  சரியாய் வரும் என்பது
அவர்களுக்கு நன்றாகத் தெரியும்

நாம் அவசரப் படாமல் இருப்போம்

கூட்டணி முடிவானபின்
ஒரே மேடையில்
ஒருவர் கையை ஒருவர் பிடித்து
உயரத்  தூக்கி
கொள்கைப் பிரகடனம் செய்வார்கள்

அது நமக்கும்
உடன்பாடாகத்தான் தெரியும்
அல்லது
தெரியவைப்பார்கள்

மதுக் கடையை
மூடச் சொல்லிக்  கோரும்
எந்தக் கட்சியும்
தொண்டர்களை குடிக்காதே எனத்
தொந்தரவு செய்வதில்லை அல்லவா

அது நமக்கு உடன்பாடுதானே

அப்படித்தான்

அவர்கள் கூட்டணித் தர்மத்தை
கொள்கை கோட்பாட்டை
நமக்கு உடன்பாடாக மட்டுமல்ல
நாம் இரசிக்கும்படியாகவே
மிக அருமையாகச் சொல்வார்கள்

எனவே தலைவர்களை
இப்போது
தொந்தரவு செய்யாதீர்கள்

அவர்கள் நமக்காகத்தான்
பேசிக் கொண்டிருப்பதாக
நடித்துக் கொண்டிருக்கிறார்கள்

நாமும் அவர்களை
நம்புவது போலவே
 நடித்துக் கொண்டிருப்போம்  

Sunday, March 27, 2016

கவிதையைப் போலவும்...

"இப்படி
விழுந்து விழுந்து ரசிப்பதற்கும்
தொடர்ந்து விடாது ரசிப்பதற்கும்
இதில் அப்படி என்னதான் இருக்கு ? "
என விலகி நின்றும்
விலகியும்  போயினர் சிலர்

"இதில் இறங்க விருப்பமில்லை
தேவையுமில்லை "என
அதனால் விரிந்த முன்பரப்பில்
அமர்ந்து எழுந்து
மனம் ஒட்டாதே  போயினர்  பலர்

"இதனில்
முழுதும் நனைந்திடாது
பட்டும்படாமலும் ரசிப்பதே சுகம் "என
கால் மட்டும் நனைத்துப்
உற்சாகம் கொண்டு  நகர்ந்தனர் சிலர்

"இதனுள்
வீழ்ந்துக் கிடப்பதும்
நீந்திக் களிப்பதும்தான் பேரானந்தம் "என
செயற்கை அணிகலன்கள்
அனைத்தையும் அகற்றி
மூழ்கிச் சுகித்தனர் வெகு சிலர்

"இந்த
விரிந்து பரந்த
பிரமாண்டம்தான் எத்தனைப் பேரின்பம் "என
வியந்தும் விக்கித்தும்
தனைமறந்தும் சூழல் மறந்தும்
தவசியாய்க் கிடந்தனர் வெகு வெகு சிலர்

தன்னிலை மாறாது
எப்போதும்போல்
அதுவாகவே அது இருப்பினும்
எல்லோரின் நினைப்புக்கும்
ஏற்றதாகவும் இருந்தது
விரிந்து பரந்துக் கிடந்த அந்த நீலக்கடல்

கவிதையைப் போலவும்... 

Friday, March 25, 2016

ஓட்டுக்குத் துட்டு

ஓட்டுக்குத் துட்டு
துட்டுக்கு ஓட்டு
நாட்டுக்குக்கும் வீட்டுக்கும் கேடு-நம்ம
வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு

வேரறுத்து வென்னீ
ஊத்திவிட்ட மரமா
ஊருலகு ஆகவேணாம் மச்சான்-காரணமா
நாமளுமே ஆகவேணாம் மச்சான்

ஆண்டப்ப கோடி
அடிச்சவன் எல்லாம்
மீண்டுமதைச் செய்யவே தாரான்-நம்மை
முட்டாளா நினைச்சே தாரான்

புதுசா தேர்தலில்
புகுர்ரவன் கூட
விதைப்பதா நினைச்சே தாரான்-நாளய
விளைச்சல  நினைச்சே தாரான்

கொம்பின விட்டு
வாலினைப் பிடிச்சா
நொந்துதான் போகணும் மச்சான்-நாளும்
வெந்துதான் சாகணும் மச்சான்

காசெடெத்து  எவனும்
வாசப்படி வந்தா
பூசபோட ரெடியாகு மச்சான்-நானும்
புகுந்து ரெண்டு போடறேனே மச்சான்

Tuesday, March 22, 2016

கணியனும் கணினியும்....

அப்துல் காதருக்கும்
அமாவாசைக்கும்
முதல் எழுத்துச் சம்பந்தமன்றி
வேறேதும் சம்பந்தமில்லை என்பது
எனக்கும் உடன்பாடுதான்

ஆயினும்
கணியன் பூங்குன்றனாருக்கும்
கணினிக்கும்
முதல் இரண்டெழுத்து மட்டுமே சம்பந்தம்
என ஏனோ ஏற்றுக் கொள்ளமுடியவில்லை

ஏனெனில்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
எனக் கவிதையாக
கணியன்
அன்று சொல்லிப் போனதை

கணினி தானே
மிக எளிதாய்
இன்று சாத்தியமாக்கிப் போகிறது ?


ஆத்திக நாத்திக வாதம்.

சுவையது குறித்தும்
சுகமது  குறித்தும்
காராசாரமாக
விவாதித்துக் கொண்டிருந்தார்கள்
"அவர்கள் "

வாயிலிருந்த
மைசூர் பாகின்
சுவையில்
அது தந்த சுகத்தில்
மெய்மறந்துக் கிடந்தேன் நான்

விவாதம் விட்டு நான்
ஒதுங்கி இருந்த  எரிச்சலில்
"இரசனை கெட்ட ஜென்மமா நீ
உனக்கு சுகம் குறித்தும்
சுவை குறித்தும்
கருத்தே கிடையாதா " என்றனர்
எரிச்சலுடன்

நான் சிரித்தப்படிச் சொன்னேன்
"சுவையும் சுகமும்
விவாதப் பொருளாகப் படவில்லை"
எனச் சொல்லி
மற்றொரு விள்ளலை
எடுத்து வாயில் போட்டுக் கொண்டு
மெல்ல இமை மூடத் துவங்கினேன்

அவர்கள் விழிகளில்
கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்தது.

Monday, March 21, 2016

வள்ளுவன் சொன்ன ராஜ ரகசியம்

சொட்டு நீரைக் கூட வீணே
விட்டு விடாது-அதைத்
திட்டம் போட்டுச் சேர்க்கும் முறையை
அறிய முயல்வோம்

சட்டம் போட்டு அரசு இதனைச்
செய்ய விடாது-நாமே
இஷ்டத் தோடு இதனைச் செய்து
இன்னல் களைவோம்

ஒட்ட ஒட்டக்  கறந்த போதும்
கன்றுக் கெனவே-மடியில்
கஷ்டப் பட்டுப்  பாலை ஒதுக்கி
கொடுக்கும் பசுவென

வெட்டி வெட்டிக்  காடு தன்னை
அழிக்கும் போதிலும்-நாளும்
வெக்கை கூட்டிப்  பசுமைக் குடிலை
குலைத்தப் போதிலும்

பட்டம் பார்த்து மழைக் கொடுக்கத்
திணரும் இயற்கையை-இனியும்
கஷ்டப் படுத்திக் கறக்கும் செயலை
குறைக்கப் பழகுவோம்

கடவுள் வாழ்த்துப் பாடி முடித்த
வள்ளுவ னவனுமே-அடுத்து
மறந்தி டாது வானின் சிறப்பைச்
சொல்லிச் சென்றது

மறைவாய் நமக்குச் சொல்லிப் போன
ராஜ ரகசியம் -இதை
மறந்து  விட்டால் அழிவு நமக்குச்
சர்வ நிச்சயம்


தெறி"க்கும் புதுக்கவிதைத் துணையுடன்....

இமையது மூடியே
இரசித்திடும் வகையில்
இதமாய்ப் பதமாய்

இருசெவி வழியினில்
இதயம் தொடவென
முயன்று தோற்ற தாலே...

தலையினைச் சுற்றி
மூக்கினைத் தொடுதல்
அலுப்பைத் தந்ததாலே

சுண்டைக்காய்  கால்பணம்
சுமை கூலி முழுப் பணம்
ஆன கதையைப் போல

கருவின் அழகினை
இலக்கண ஒப்பனை
மறைத்துத் தொலைப்பதாலே

சந்தச் சந்தன
குளுமையும் மணமும்

சிந்தனைக் குருதியின்
வேகமும் வெப்பமும்

நேரெதிர் முனையென
என்றும் இணைய
இயலாப் பொருளென

கண்டு கொண்டதாலே
உணர்ந்து தெளிந்ததாலே

அதிரடிப் படையென
உடனடி இலக்கினை
அடைந்திடும் நோக்கினிலே

விழிவழி நுழைந்து
அறிவினை அடைந்திடும்
புதுமொழி கண்டோம் நாமே

சலிக்கும்
மரபினை விடுத்து
புதுவழி கண்டோம் இனிதே

"தெறி"க்கும்
புதுக்கவிதைத்  துணையுடன்
புது யுகம் செய்வோம்  இனியே 

Sunday, March 20, 2016

பாவப்பட்ட அவன்


உட்புறம் தாளிட்டுக்
கதவருகில் அமர்ந்தபடி
யாரேனும் வரமாட்டார்களாவென
வெகு நேரம் காத்திருந்து
மனச் சோர்வு கொள்கிறான்

இழுத்து அடைக்கப்பட்ட
ஜன்னலருகில் அமர்ந்தபடி
அறையினைக் கொதிகலனாக்கும்
வெக்கையில் புழுக்கத்தில் தன்மீதே
கழிவிரக்கம் கொள்கிறான்

தனிமைத் துயர்
குரல்வளை நெறிக்க
யாரேனும் அழைக்கமாட்டார்களாவென
தொலைபேசிக்கு அருகமர்ந்து
மனம் சலித்துப் போகிறான்

யாராவது சிரித்தால்
சிரிக்கலாமென்று ஆவலோடும்
யாராவது பேசினால்
பேசலாமென்று ஆர்வத்தோடும்
காலமெல்லாம் காத்துக்கிடந்தே
கவலை மிகக் கொள்கிறான்

விளைச்சலைப் பெற
முதலில் விதைத்தலும்
வேண்டியதைப் பெற
முதலில் கொடுத்தலும்
காரியம் வெற்றிபெற
முதலில் துவக்குதலும்
அவசியமென்பதை அறியாமலேயே...
துவக்க வேண்டியது
தான்தானென்பது புரியாமலேயே...

எதனையோ
எவரையோ
எதிர்பார்த்தபடியே

இன்றும் அவன் எப்போதும்போல்
காத்திருந்து காத்திருந்து
வெந்து நொந்துச் சாகிறான்
பாவப்பட்ட அவன்...

Saturday, March 19, 2016

சமூக நீதியும் சமூக அமைதியும்.....

பட்டப் பகல்
வெட்டவெளி
சுற்றிலும் ஜனத் திரள்

மிக இயல்பாய்
பேசியபடி வரும்
அந்த அழகுத் தம்பதிகள் போலவே

மிக இயல்பாய்
எவ்வித பதட்டமுமின்றி
அந்தக் கொலைகாரர்களும் வருகிறார்கள்.

செய்யத் தக்கதை
செய்வதைப் போலவே..

எவ்வித குற்ற உணர்வோ
பதட்டமோ இன்றி...

மிக இயல்பாய்
இருவரையும் வெட்டிச் சாய்க்கிறார்கள்

ஒரு படப்பிடிப்பை
பார்க்கிற பார்வையில்
பார்த்தபடி நகர்கிறது
திருவாளர் பொது ஜனம்.

டீக்குடித்துத் திரும்புதல் போல்
மிக இயல்பாய்
திரும்பிப் போகின்றன
அந்தக் கொலைவெறி மிருகங்கள்

பொது வெளி
பாதுகாப்பு அற்றுப் போனதை..

மக்களின் சமூக அக்கறை
அழிந்துத் தொலைந்ததை..

மிருகங்கள் அச்சமின்றி
உலவுகிற சூழலை...

மனித நேயம்
கருகிக் தொலைந்ததை..

எல்லாம்
.
உரக்கச் சொல்வதற்குள்
உறுத்தச் சொல்வதற்குள்

யாரை யாரானாலும்
எதற்கு எதற்கானாலும்
இது சகிக்க இயலாதது
என்பதை நிலை நாட்டும்முன்....

எந்தக் கொலையும்
வெட்கக்கேடானது
காட்டுமிராண்டித்தனமானது
அடியோடு அழித்தொழிக்கவேண்டியது என

அனைவரும் உணர்ந்து தெளியும் முன்
தங்கள் வெறுப்பைப்பதிவு செய்யும் முன்

மெல்லத் திசை மாறுகிறது
அந்தப் படுபாதக நிகழ்வு..

வழக்கம் போல

சமூக நீதியும்
சமூக அமைதியும்
சமூகத்திற்கு இரு கண்கள் என்பதுவும்

சட்ட ஒழுங்கின் சீர் கேடும்
பொது ஜனத்தின்
எருமைமாட்டுத்தனமும் 

மிகச் சரியாய்..

உணர்ந்து கொள்ளப்படாமலேயே
வலியுறுத்தப் படாமலேயே
பதிவு செய்யப்படாமலேயே....
.

Thursday, March 17, 2016

அழுது கொண்டிருப்பதற்குப் பதில் .......

 புரியாது எனப்  புலம்பித் திரிந்ததைவிட
புரிந்து கொள்ள முயன்றது
கொஞ்சம் புரியத்தான் வைத்தது

கிடைக்காது எனச்  சோம்பித் திரிந்ததைவிட
தேட முயன்றதில்
கொஞ்சம் கிடைக்கத்தான் செய்தது

முடியாது என முடங்கிக் கிடந்ததைவிட
அடைய முயன்றது
கொஞ்சம் முடித்துத்தான் கொடுத்தது

மாறாது என மறுகித் திரிந்ததை விட
மாற்ற முயன்றது
கொஞ்சம் மாற்றம்தான் காட்டியது

இல்லையென  என அவநம்பிக்கைகொண்டதை விட
நமபத் துவங்கியதில்
கொஞ்சம் உண்டெனத்தான் புரிந்தது

பொய்த்து எரிக்கும் வானத்தைப் பார்த்து
அழுது கொண்டிருந்ததை விட

நாளைய மழையை எதிர்பார்த்து
உழுது வைத்தது
கொஞ்சம் பலன் தரத்தான் செய்தது

Wednesday, March 16, 2016

இறுக்க நெருக்கம் யாருடன் இருக்கும் ?

இரவுக்கும் இருளுக்கும்
இருக்கும் நெருக்கம் இறுக்கமா ?-இல்லை
இரவுக்கும் உறவுக்கும்
இருக்கும் நெருக்கம் இறுக்கமா ?

நிலவுக்கும் இரவுக்கும்
இருக்கும் நெருக்கம் இறுக்கமா ? -இல்லை
நிலவுக்கும் மலருக்கும்
இருக்கும் நெருக்கம் இறுக்கமா ?

மனதிற்கும் நினைவிற்கும்
இருக்கும் நெருக்கம் இறுக்கமா ?-இல்லை
மனதிற்கும் கனவிற்கும்
இருக்கும் நெருக்கம் இறுக்கமா ?

சொல்லுக்கும் எழுத்துக்கும்
இருக்கும் நெருக்கம் இறுக்கமா ?-இல்லை
சொல்லுக்கும் பொருளுக்கும்
இருக்கும் நெருக்கம் இறுக்கமா ?

கவிதைக்கும் உணர்வுக்கும்
இருக்கும் நெருக்கம் இறுக்கமா ?-இல்லை
கவிதைக்கும் கவிஞர்க்கும்
இருக்கும் நெருக்கம் இறுக்கமா ?

சொர்க்கமது ஆனாலும் கூட----

பிடிச் சோறு ஆனாலும் கூட -அது
மிகப்பழசே ஆனாலும் கூட -நீ
பிழிந்துஇட  உண்ணுகிற சுகமே -அது
தேவலோக அமுதுக்குச் சமமே

எட்டுவகைக்  காய்கறிகள் கூட -உடன்
எறாநண்டும்  சேர்த்திருந்தும்  கூட-சோத்தை
தொட்டெடுக்க மறுக்குதடி மனமே-இந்தக்
கூத்துஇங்கு தொடருதடி தினமே

ஒருமொழியே ஆனாலும் கூட-அது
வசைமொழியே ஆனாலும் கூட-அது
திருமொழியாய்த் தெரியுதடி எனக்கு-உன்னைப்
பிரிந்துஇங்கு தவிக்கின்ற எனக்கு

நாகரீக உடையணிந்த மாந்தர்-தினம்
நுனிநாக்கில் கதைத்தாலும் கூட-அது
சோகமேற்றிப் போகுதடி எனக்கு -உன்னை
எண்ணிதினம் துடிக்கிற எனக்கு

குச்சிவீடு என்றாலும் கூட-வசதி
மிகக்குறைவு  என்றாலும் கூட-கண்ணே
நிச்சயசமாய் சொர்க்கமது தானே-அதுவே
கடல்தாண்டப் புரியுதடித் தேனே

கண்ணைவித்து ஓவியத்தை வாங்கி -மனம்
களிக்கின்ற கிறுக்கனவன்  போல-இங்கு
உன்னைவிட்டு வசதிசேர்க்க நானும்-இளமை
வாழ்வதனைத் தொலைக்கிறேண்டி நாளும்

சொர்க்கமது  ஆனாலும் கூட - அது
நம்மூரைப் போலாகா தென்று- கவிஞன்
சொல்லியது சத்தியமாய் நிஜமே-இதனை
அங்கிருப்போர் அறிந்துகொண்டால் நலமே


(குடும்பத்திற்காக ,குடும்பம் பிரிந்து
அயல் நாட்டில்  அல்லறும்  நண்பர்களுக்கு
இக்கவிதை என் எளிய  சமர்ப்பணம் ) 

Monday, March 14, 2016

ஒரு ஜென் கதை

ஒரு ஜென் கதை

அந்த நெடுஞ்சாலைச் சந்திப்பில் ஒரு சிறிய கடை
 வைத்தபடி ஒரு ஜென் குரு இருந்தார்

அவர் ஜென் குரு என அறிந்ததால் அவரிடம்
வாழ்வியல் பாடங்களை உடன் இருந்து
அறியலாம் என ஒரு அறிஞரும் அவருடனிருந்தார்

ஒரு நாள் அந்த வழி வந்த ஒரு வழிப்போக்கன்
ஜென் குருவிடம் "ஐயா நான் வெளியூர்.
பஞ்சம் பிழைக்கவென்று ஒரு நல்ல ஊரைத் தேடிப்
பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன்

தங்களைப் பார்க்க கொஞ்சம் விஷயமானவர் போல்
தெரிகிறது .அதனால் கேட்கிறேன்
அதோ அங்கு தெரிகிற ஊர் நல்ல ஊரா ?
அந்த ஊர் மக்கள் நல்ல மக்களா ?
நான் அங்கு சென்றால் நிம்மதியாகச் சில காலம்
இருக்கலாமா ? " எனக் கேட்கிறார்.

அவர் உற்றுப் பார்த்த ஜென் குரு "
ஐயா தாங்கள் எந்த ஊரில் இருந்து வருகிறீர்கள்
அந்த ஊர் மக்கள் எப்படிப்பட்டவர்கள்
அதைச் சொன்னால் நான் உங்களுக்கு
இந்த ஊர் சரிப்பட்டு வருமா எனச் சரியாகச்
சொல்லிவிடுவேன் " என்கிறார்

அதைக் கேட்ட அந்த வழிப்போக்கன் "ஐயா
அதை ஏன் கேட்கிறீர்கள் .நான் இருந்த ஊரைப் போல
மோசமான ஊரையோ மோசமான மனிதர்களையோ
உலகில் எங்கும் பார்க்க முடியாது
அடுத்தவன் வாழ்வதை பொறுக்காத
பொறாமைக்காரர்கள்
அதுதான் கிளம்பிவிட்டேன் " என்கிறார்

அதைக் கேட்ட ஜென் குரு " நீங்கள்
சொன்னது நல்லாதாய்ப் போயிற்று. ஏனெனில்
உங்கள் ஊரைப் போலத்தான் இந்த ஊரும்,
இந்த ஊர் மக்களும்.
அடுத்தவன் வாழப் பொறுக்காதவர்கள்
எனவே இந்த ஊர் வேண்டாம் " என்கிறார்

அதைக் கேட்ட வழிப்போக்கனும் " நல்லது ஐயா
வேறு ஊர் பார்க்கிறேன் எனத்
தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

அவர் சென்ற சில மணி நேரத்தில் அதைப் போன்றே
வந்த வேறொரு வழிப்போக்கன்
 அதைப் போன்றே தான் பஞ்சம் பிழைக்க
புதிய ஊர் தேடிப் போவதைச் சொல்லி தூரமாகத்
தெரிகிற ஊர் நல்ல ஊரா அந்த ஊர் மக்கள்
நல்ல மக்களா எனக் கேட்கிறார்

முதல் வழிப்போக்கன் கேட்டதைப் போலவே
ஜென் குருவும் அவரது பழைய ஊர் மக்கள்
குறித்தும் ஊர் குறித்தும் கேட்கிறார்

அதற்கு அந்த வழிப்போக்கன் " ஐயா என் ஊர் மக்கள்
மிகவும் நல்லவர்கள். உதவும் குணமுடையவர்கள்
ஊரில் மழை இன்றி பஞ்சம் வந்து விட்டது
அதனால் பஞ்சம் பிழைக்க வேறு ஊர் தேடுகிறேன்
நிச்சயம் சில மாதங்களில் எங்கள்  ஊர்
 திரும்பி விடுவேன்

அதுவரை இருக்கத்தான் இந்த ஊரைப்
பற்றிக் கேட்கிறேன்" என்கிறான்

அதைக் கேட்ட ஜென் குரு " அப்படியா ரொம்ப நல்லது
உன் ஊரைப் போலத்தான் இந்த ஊர் மக்களும்
மிக மிக நல்லவர்கள்.உதவும் குணமுடையவர்கள்
தாராளமாக இந்த ஊருக்குப் போகலாம் " என்கிறார்

பாதசாரியும் குருவை வணங்கி தன் பயணம்
தொடர குருவுடன் இருந்த அறிஞர் குழம்பிப் போகிறார்

ஒரே ஊர் எப்படி இரு தன்மை உடையதாய் இருக்கும்
குரு ஏன் ஒருவருக்கு அப்படியும் ஒரு வருக்கு இப்படியும்
சொல்கிறார் எனக் குழம்பி குருவிடமே
விளக்கம் கேட்கிறார்

ஜென் குரு சிரித்தபடி சுருக்கமாக " ஊருக்கெனத் தென
தனிக் குணமில்லை நாம் எப்படி இருக்கிறோமோ
அப்படித்தான் ஊரும் இருக்கும்

முன்னவன் ஊரின் மோசமான பகுதியை மட்டும்
அறிந்திருக்கிறான்.பின்னவன் ஊரின் நல்ல பகுதியை
அறிந்திருக்கிறான்.
ஊரும் அப்படித்தான் இருந்திருக்கும்
இவர்கள் போகிற ஊரும் அவர்களுக்கு அப்படித்தான்
இருக்கும் " என்கிறார்.

அறிஞரும் ஒரு வாழ்வியல் பாடம்
மிக எளிமையாகப் புரிந்ததில் மகிழ்ந்து
குரு நாதரைப் பார்த்து மெல்லப் புன்னகைத்தார்

 பின் குறிப்பு  :

 இது எல்லோருக்கும் தெரிந்த கதைதான்
ஆனாலும்  இந்தக் கட்சிச் சரியில்லை என்று
அந்தக்  கட்சிக்கும் அந்தக் கட்சி சரியில்லையென்று
இந்தக் கட்சிக்கும்.....

 இந்தச் சங்கம் சரியில்லையென்று  அந்தச்
 சங்கத்திற்கும்   அந்தச் சங்கம் சரியில்லையென்று
இந்தச் சங்கம்   மாற நினைக்கிறவர்களுக்கு
எதற்கும்  ஒரு படிப்பினையாக  இருக்கட்டுமே
என்றுதான் இது  ...

Sunday, March 13, 2016

தினம் நன்மை தடையின்றித் தொடர.....

மாடிமனை கோடியெனத்
தேடியோடிச் சேர்த்ததெல்லாம்
மனதுக்குள் என்னமாற்றம் செய்யும் ? -அது
இன்னுமின்னும் எனக்கேட்டே கொல்லும்

பகலிரவாய் நூறுபெண்ணை
வகைவகையாய் அனுபவித்தும்
சுகம்போதும் எனமனமா சொல்லும் ?அது
அடுத்தொன்றைத் தேடித்தான் செல்லும்

நடுக்கமுடல் எடுத்தபின்னும்
நரைதிரையும் நிறைந்தபின்னும்
இருந்ததெல்லாம் போதுமென்றா எண்ணும் ?-மனது
இருக்கநூறு காரணங்கள் சொல்லும்

மொத்தமாகக்  கற்றுவிட்ட
வித்தைகளும் தத்துவமும்
சித்தமதில்  என்னவினை செய்யும் ?-அது
கூடுதலாய் குழப்பத்தான் செய்யும்

குட்டியிலே சங்கிலியில்
வளர்ந்தவுடன்  சணல்கயிற்றில்
கட்டிவைத்தால் யானையது  அடங்கும்-மாறிச்
செய்துவைத்தால் சங்கடந்தான் மிஞ்சும்

மனமதனை அடக்கிவைத்து
அறிவதனை வளர்தெடுத்தால்
தினம்நன்மை தடையின்றித் தொடரும்-மாறின்
சங்கடமே தொடர்கதைபோல் வளரும்

மதமென்ற ஓரமைப்பை
முன்னோர்கள்  ஆக்கிவைத்த
மகத்துவத்தை  மனமுணர்ந்தால்  போதும் -முன்னே
சொன்னதெல்லாம் மிக எளிதாய் விளங்கும்  

Friday, March 11, 2016

கவிதைப் பெண்ணும் காதல் நண்பியும்

காக்க வைத்து தவிக்க விட்டுப்
பார்த்து ரசிப்பதில்-பின்பு
சேர்த்து  நிறையக் கொடுத்து நம்மைக்
கிறங்க வைப்பதில்

தூக்கம் கெடுத்து விழித்து நம்மை
நினைக்க வைப்பதில்-எதிர்
பார்ப்பு இல்லா நேரம் நம்முள்
தானாய் நிறைவதில்

கைக்கு எட்டும் தூரம் இருந்தும்
எட்டித்  திரிவதில்-கண்கள்
பார்க்க இயலா இடம் இருந்தும்
தெளிவாய்த் தெரிவதில்

ஈர்க்க வைத்துப் பித்தன் போல
அலைய வைப்பதில்-தானே
தேர்ந்த நல்ல அடிமைப் போலப்
பணிந்து நிற்பதில்

பார்க்கும் எதையும் தன்னைப் போல
தெரியச் செய்வதில்-நாம்
பார்க்கும் போது  மட்டும்  தன்னை
மறைக்க முயல்வதில்

கூர்மை யாக எண்ணிப் பார்க்க
கவிதைப் பெண்ணுமே -நாம்
தேர்ந் தெடுத்த    நண்பி(மனைவி ) தன்னை
நினைவில்   நிறுத்துமே

Thursday, March 10, 2016

பாழுங்கிணற்றில் வீசுதல் கூட.....

குடிகாரர்களும்
கொள்ளைக்காரர்களும்
ஆணவக் காரர்களும்

நம் வீட்டு வாசலில்
விதம் விதமாய்
வேஷமிட்டப்படி
விதம் விதமாய்க்
கோஷமிட்டப்படி

நாம்
கையிலேந்தி இருக்கும்
கூர்மிகு வாளினைக் கோரியபடி..

பாதுகாப்பாய்
வைத்துக் கொள்வதாய்
வாக்குறுதி கொடுத்தபடி.

 தனக்கென இல்லை
நம்மைக் காக்கத்தான் என
சத்தியம் செய்தபடி...

முன் அனுபவங்கள்
கொடுத்த மிரட்சியில்
நாம் அவர்களைக் கடந்துப் பார்க்க

 கைகளற்றவன் மீதமர்ந்த
கால்களற்றவனும்

காது கேளாதவன்
வழிகாட்டக் கண்களற்றவனும்...

ஒருவர் தயவில் ஒருவர்
நம் இல்லம் நோக்கி
நகர்ந்து வர....

குழம்பத் துவங்குகிறோம் நாம்
கனக்கத் துவங்குகிறது
அந்தக் கூரிய வாள்

தகுதியற்றவர்களிடம்
கொடுத்து நோவதை விட
கொடுத்துச் சாவதை விட..

கூரிய வாளின்
சக்தி அறிந்திருந்தும்
அதன் பலன் புரிந்திருந்தும்

பாழுங்கிணற்றில் வீசுதல் கூட
சரிதானோ எனப்படுகிறது
"அது  "முட்டாள்த்தனம் என அறிந்திருந்தும்....

Wednesday, March 9, 2016

ஜன நாயகப் போர்வையில்

ஏழை விவசாயிகள்
பெற்றக் கடனுக்கு
வட்டி  வசூல் ஜப்திக் கெடுபிடி

பெரு முதலைகள் பெற்றக்
கடன் தொகையை வெளியிடக் கூட
சட்டத்தில் ஆயிரம்  கெடுபிடி

இல்லாதக் கொடுமையால்
அவமானத் தலைக் குனிவால்
குடிசைகளில் நாளும்  தற்கொலைகள்

நாணயப் பிசகதனை
சொல்லியும் எழுதியும்
மாளிகைகளில் நீளும்  சுக சகஜங்கள்

ட்ராக்டர் கடன் தொகை
கட்டாத விவசாயிக்கு            
போலீஸ் தடியடி

தொள்ளாயிரம் கோடி
கட்டாதவன் தப்பிக்க
மறைவாய்ப் பச்சைக் கொடி

அள்ளிக் கொடுத்தது
" அவன் காலம்"என்பான் இவன்
ஆதாரங்கள் காட்டி

தப்ப விட்டது
"இவன்  காலம் " என்பான் அவன்
ஆக்ரோஷம் கூட்டி

இருவரும் வேஷதாரிகள்
செல்வருக்கு "பல்லக்குத் தூக்கிகள்"
 இனியேனும் புரிஞ்சுக்கோ தம்பி

"ஜன நாயகப்  " போர்வைக்குள்
"பண நாயகம் " போடும் ஆட்டத்தை
இப்போதேனும்  புரிஞ்சுக்கோ  தம்பி

மாபெரும் கவிதைப் போட்டி



விவரங்களுக்கு ...
http://ootru1.blogspot.in/2016/03/blog-post.htmlhttp://ootru1.blogspot.in/2016/03/blog-post.html

Tuesday, March 8, 2016

காலம் கடக்க நினைப்பது

எதைப் பறக்க வைப்பது
எதை  இறக்கி வைப்பது
காற்றுக்கு அது தெரியும்
பறக்க நினைப்பதுதான்
காற்றைப் புரிந்து  கொள்ளவேண்டும்

 எதனைமுளைக்கச் செய்வது
 எதனை மக்கச் செய்வது
மண்ணுக்கு அது தெரியும்
முளைக்க முயல்வதுதான்
தன்னுள் உயிர் கொள்ள வேண்டும்

எதனை   மிதக்கச் செய்வது
எதனை  மூழ்கச் செய்வது
நீருக்கு அது தெரியும்
மிதக்க நினைப்பதுதான்
தன்னை தகவமைத்துக் கொள்ளவேண்டும்

எதனை அணைத்து எரிப்பது
எதனை எரிக்காதுக்  கடப்பது
நெருப்புக்கு அது தெரியும்
நிலைக்க நினைப்பதுதான்
தன்னை திடப்படுத்திக் கொள்ளவேண்டும்

எதனைக் கடத்தி  ரசிப்பது
எதனை அழித்துச் சிரிப்பது
காலத்திற்கு அதுதெரியும்
காலம் கடக்க நினைப்பதுதான்
தன்னைத்  தகுதிப்படுத்திக்  கொள்ளவேண்டும்

Monday, March 7, 2016

நம்மைக் கூர்ப்படுத்திக் கொள்ளும் நாள்

சமை யலறையிலும்
படுக்கையறையிலும்
சுதந்திரம்  கொடுப்பது போல் கொடுத்து
சுகம் அனுபவிக்கத் தெரிந்தவர்கள்
சமூக வாழ்விலும் கொடுத்து
அந்தச் சுகத்தை
என்று அறியப்போகிறார்கள் ?

பெண் சுதந்திரம் என்பது
கணவன் மனைவிக்குக் கொடுப்பதல்ல
ஒரு தகப்பன் தன் மகளுக்குக் கொடுப்பதுபோல் எனும்
பெரியாரின் வார்த்தைக்கான முழுமையானபொருள்
இந்த சமூகத்திற்கு என்று புரிந்துதொலைக்கப் போகிறது ?

அழகிய வயதுப் பெண்
உடல் முழுதும் நகையணிந்து
நள்ளிரவில் சுதந்திரமாக நடமாடக் கூடிய
சூழல் உள்ள நாடே ராமராஜ்ஜியம் என்கிற
காந்தியின் கனவு என்று நிஜமாகித் தொலைக்கும் ?

மொத்தத்தில்
அன்னியரிடமிருந்து கூட
சுதந்திரம் பெற்றிவிட்ட நமக்கு
இந்தச் சமூகத்திடம் இருந்து
என்று அது கிடைக்கப் போகிறது ?

அதுவரை இந்த மகளிர் தினம் என்பது
நிச்சயம் கொண்டாட்டத்திற்கான நாள் இல்லை
நம்மைக் கூர்ப் படுத்திக் கொள்ளும் நாள் எனபதில்
அனைவரும் உறுதியாய் இருப்போம்

ஒரு நீண்ட நெடிய போராட்டத்திற்கு
நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் நாள் என்பதில்
நிச்சயம் கவனமாக இருப்போம்

பரிணாமம் அல்லது யதார்த்தம்

நீங்களாக எதையும் கொடுத்ததில்லை
பொறுத்துப் பொறுத்துப் பார்த்துப்  பலனின்றி
நாங்கள் தான் எடுத்துக் கொள்கிறோம்

எடை குறைந்தும்
கூடுதல் விலைகொடுத்தும்
காய்ந்த சொத்தை காய்கறிகளைச்
சந்தையிலிருந்து வாங்கி வந்து
எங்களை அவஸ்தைக்குள்ளாக்கினீர்கள்

வேறு வழியின்றி இப்போது
நாங்களே சந்தை செல்ல
ஆரம்பித்து விட்டோம்

நாலு முறை அலையச்  சங்கடப்பட்டு
வரிசையில் நிற்பது
சுயகௌரவக் கேடென்று
ரேசன் கடையைத் தவிர்த்தீர்கள்

நாங்கள்தான் இப்போது போய்க்கொண்டுள்ளோம்

அதிகக் கூட்டம் எனச் சொல்லியே
மின் கட்டணம் செலுத்தாது நாள் கடத்தி கடத்தி
கடைசி தேதி வர
"ஆபீஸில் அதிக வேலை நீயே கட்டிவிடு "என்றீர்கள்

இந்தக் கடைசி நேர அவஸ்தை எதற்கென்று
இப்பொது நாங்களே  கட்டிவருகிறோம்

விற்கிற விலைவாசியில் ஒரு வரவு
அரைக்கிணறு தாண்டத்தான் சரியாகிறது என
நீங்கள் புலம்பத் துவங்கினீர்கள்

நாங்களும் பணிக்குச் செல்லத் துவங்கிவிட்டோம்

இப்பொது நாட்டுப் பிரச்சனையைத்  தீர்க்க
சட்ட மன்றம் அனுப்பினால்
 நாக்கைத் துருத்தி சண்டையிடுவதிலும்
ஆபாசப் படம் பார்ப்பதிலும்
அதிக அக்கறை கொள்கிறீர்கள்

எங்களுக்குரிய பங்கை நீங்களாகக் கொடுத்து
எங்களை அனுமதிப்பீர்கள் என எதிர்பார்த்து
 ஒவ்வொரு  கூட்டத் தொடரையும்
ஆவலாகப் பார்த்திருந்தோம்
 இதிலும் அதிகம் ஏமாந்து போனோம்

இதையும் நாங்களாக
எடுத்துக்கொண்டாதால் உண்டு
நீங்களாக நிச்சயம் தரப் போவதில்லை என்பதில்
இப்போது நாங்கள் உறுதியாயிருக்கிறோம்

உங்களுக்கு ஒரு பெருமையெனில்
முன் நிற்பதும்
வசதியெனில் மட்டுமே
விட்டுக் கொடுப்பதுவும்
(சாலை மறியலில் முன்  வரிசை  )
சிறுமையெனில் விலகி நிற்பதுவும்
உங்கள் பரம்பரைக் குணம்தானே

பிரசவம் எனச் சொன்னால்
நெஞ்சு நிமிர்த்தி மருத்துவமனை வரும்
எந்த ஆண் மகனும்
அபார்ஷனுக்கும் கருக்கலைப்பிற்கும்
மருத்துவமனை வருவதில்லை எனபதும்
பெண்களாகத் தானே
போய் வருகிறோம் என்பதுவும்
உலகறிந்த விஷயம் தானே ?

Saturday, March 5, 2016

பண்டித விளையாட்டா படைப்பு ?


. "இப்போதெல்லாம் ஏன் அதிகம் எழுதுவதில்லை ?
கற்பனை வறண்டு போனதா ?
சமூக அக்கறை குறைந்து போனதா ?"
போகிற போக்கில்
கேள்வியை விதைத்துப் போகிறான் நண்பன்.
அவனுக்கு எப்படிப் புரியச் சொல்வது ?

கொத்துகிறத்  தூரத்தில்
சீறுகிற நாகமாய்
நித்தம் எதிர்கொள்ளும்
அவலங்களும் அசிங்கங்களும்
கணந்தோறும் காயப்படுத்தும்
சிறுமைகளும் துரோகங்களும்
என்னை எப்போதும்
சுடும் நெருப்பில் நிறுத்திப்போக
அதன் தாங்கவொண்ணா பாதிப்பில்
ஒரு பாம்பாட்டியின் லாவகத்தோடு
அவைகளைச் சொற்களுக்குள் அடைக்க முயல
அவைகள் அடங்காது சீறிக் கொத்த
ஒவ்வொரு கணமும்
நான் நொந்து வீழ்வதும்
ஒவ்வொரு நாளும்
வேதனையில் சாவதும்
எப்படிச் சொன்னால் அவனுக்குப் புரியும் ?

திடுமெனச்
சீறிக் கிளம்பும் காட்டாற்று வெள்ளம்போல்
உணர்வுகள் பொங்கிப் பெருக
நிலை தடுமாறிப் போக
தலையணைக்குள் மெத்தையினைத்
திணிக்கமுயலும் முட்டாள்போல்
உண்ர்வுகளை வார்த்தைக்குள்
திணிக்க முயன்று தோற்கிறக்  கணங்களை
வார்த்தைகள் கிழிந்து சிரிக்கிற அவலங்களை
எப்படி அவனுக்கு விளக்கித் தொலைப்பது ?

கைதேர்ந்த விளையாட்டுக்காரன்
கலைத்துப் போட்ட சீட்டுகள்போல்
வார்த்தைகளைப் பிரித்துப் போட்டுக் காட்டும்
பண்டித விளையாட்டா படைப்பு ?

இனியும் தங்க முடியாதென
வெளியேறத் துடிக்கும் உயிர்க்கருவும்
இனியும் தாங்க இயலாதென
உந்தித் தள்ளுகிற உள்ளுணர்வும்
இணைவாகச் சேரும் காலத்தையும் கணத்தையும்
எது நிர்ணயம் செய்யக்கூடும்?

பல சமயங்களில்
கறுத்துக் கனத்த கருமேகங்களை
ஒன்று சேர்த்த பெருங்காற்றே
அதனைக் கலைத்துவிட்டுப் போவதும்

எங்கோ தலைதெறிக்கப் போகும்
ஒரு சிறு வெண்மேகம்
சாறல் உதிர்த்துப் போவதும்

விரதங்களும் வேண்டுதல்களும்
வேண்டிய மட்டும் செய்துமுடித்து
இணைகிற இணைப்பு வீணாகிப்போக
வேண்டா வெறுப்பாகப் புணரும் நாளின்
கரு தங்கிச் சிரிப்பதையும்

எப்படி எனப் புரிந்து  சொல்வது  ?
எப்படி அவனுக்குப் புரியச் சொல்வது  ?

Thursday, March 3, 2016

வாழும் வகையறிந்து....

அந்த அழகிய ஏரியில்
உல்லாசப் படகில்
எல்லோரும் பயணித்துக் கொண்டிருந்தார்கள்

அதில்
நீச்சல் அறிந்தவர்களும் இருந்தார்கள்
அறியாதவர்களும் இருந்தார்கள்

அறிந்தவர்கள் எல்லாம்
ஏரி நீரின் குளுமையை
கரையோர மலர்களை
படகு செலுத்துவோனின் லாவகத்தை
ரசித்து மகிழ்ந்து
உல்லாசமாய்ப்  பயணித்துக்கொண்டிருக்க ...

அறியாதவர்கள் எல்லாம்
ஏரியின் ஆழத்தை
படகின் வேகத்தை
இதற்கு முன் நடந்த விபத்தை
எண்ணி எண்ணிப்  பயந்து
படகுக்குள்  ஒடுங்கிக் கிடந்தார்கள்

படகில் பயணம் செல்வதற்கு
நீச்சல் தெரிந்திருக்கவேண்டியது
நிச்சயம் அவசியமில்லைதான்

உல்லாசமாக
இரசித்துப்
பயணம் செய்வதற்கு
அது அவசியம் தெரிந்திருக்கவேண்டும்

Wednesday, March 2, 2016

சராசரித்தனத்தின் சிறப்பு

சராசரிப் படைப்பாளியாய் இருப்பது
சௌகரியமாகத்தான் இருக்கிறது

இரு துருவங்களுக்கு
இடைப்பட்ட நாடுகளைப்போல

தலைவனுக்கும்  பொதுஜனத்திற்கும்
இடைப்பட்ட தொண்டனைப்போல

தனித்துவமாயும் இல்லாது
ஜனரஞ்சகமாயும் இல்லாது

நடுத்தரப் படைப்பாளியாய் இருப்பது
நல்லதுபோலத்தான் படுகிறது

சராசரி என்பதால்
சீண்டி விட்டுச்  சுகம் காண அலையும்
அறிவு ஜீவிகளின் மனோவிகாரப்
பிடுங்கலும் இல்லை

தனக்கு மேலிருக்கும் எதையும்
உயர்ந்ததாய் எண்ணி மயங்கி
வெகுஜனம் தரும் அர்த்தமற்ற  மரியாதைத்
தொல்லையும்  இல்லை

இலக்கியக் காவலர்களென
பத்துப் பதினைந்து பேர்
ஊரணிப்  பள்ளத்து நீராய்
ஒரு சிறு கூட்டம் கூட்டி
அரிய விடுமுறை நாளைக்
கெடுப்பதும் இல்லை  

 உண்மை  ஆர்வமோ
அடிப்படை அறிவோ  இல்லையெனினும்
 தொடர்பு கொள்ள முயலும்  வெகுஜனம்
அபூர்வமாய்க் கிடைக்கும்
இனிய தனிமைச் சுகத்தைத்
தகர்ப்பதும் இல்லை

ஜோல்னா குர்தா
வித்தியாசமாய் தாடி மீசை
புரியாத வழக்கு மொழி
குழுச்  சேர்க்கும் பிரயத்தனம்
இப்படிக் கூடுதல் சுமைகளைச் சுமக்கும்
அவசியமும் இல்லை

வாசகரின் மாறும் மனோ நிலை
பத்திரிக்கைகளின் மசாலாப் போங்கு
மேடை ஓரம் ஒளிபடரும் இடம்
வீழ்ந்து விடாது நிற்க ஓரிடம்
இவைகளை அறிய ஓடும்
நித்ய மராத்தான் ஓட்டமும்  இல்லை

மொத்தத்தில்
சராசரி படைப்பாளியாய் இருப்பது
சௌகரியமானதாக மட்டும் இல்லை
பலவகை யில் கூடுதல்
சந்தோஷமளிப்பதாகத்தான் இருக்கிறது

கேப்டன் விஜயகாந்த் என்ன முடிவு செய்யலாம் ? (2 )

lhttp://yaathoramani.blogspot.in/2016/03/blog-post.html
மேலே  உள்ள முந்தைய பதிவில் முடித்தபடி
கேப்டன் விஜயகாந்த அவர்களுக்கு
இரண்டு வழிகள் தான் மீதம் உள்ளது

முதல் வழி.. தனித்துப் போட்டியிடுவது..

இதற்கு முன்பு தனித்து போட்டியிட்ட போது
இருந்த சூழல் நிச்சயமாக இப்போது இல்லை

அப்போதுஅவர் மேல இருந்த கதாநாயக அந்தஸ்துக்
கொஞ்சம் குறைந்துள்ளது
அவர் குறித்த வாட்ஸ் அப் மற்றும் முக நூல்களில்
அவர் குறித்தான பதிவுகளிலேயே தெரிந்து
கொள்ளலாம்

எனவே தனியாகப் போட்டியிடுவார் எனில்
நிச்சயம் இதற்கு முன்பு தனித்துப் போட்டியிட்டுப்
பெற்ற சதவீதத்தை விடக் குறைவாகத்தான்
வாக்குகள் பெறுவார். அது நிச்சயம் அவருடைய
அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குரியாதாகவே
ஆக்கிச் செல்லும்

எனவே தனித்துப் போட்டியிடுவது அவ்வளவு
உசிதமானது இல்லை

கடைசியாக உள்ள ஒரு வழி
பாரதீய ஜனதாக் கட்சியுடன் இணைந்துப்
போட்டியிடுவதுதான்

இதில் அவருக்கான பாதக அம்சம்
மதவாதக் கட்சியுடன் இணைந்துவிட்டார்
என எல்லோரும் கூச்சலிடுவார்கள்
அது ஒன்றுதான்

அதுவும் இப்போது செல்லுபடியாகாது

காரணம் இங்குள்ள அனைத்துப் பிரதான
கட்சிகளுமே ஒவ்வொரு காலகட்டத்தில்
அந்தக் கட்சியுடன் சேர்ந்தே
போட்டியிட்டுள்ளார்கள்

சாதகமான விஷயம்...

முதலில் பாதுகாப்பு.

ஆளுங்கட்சியின் அதீத அதிகார துஸ்பிரயோகம்
ஏதுமிருப்பின் அதனைத்  
தாங்கும் சக்தி தி.மு.க வுக்கு உண்டு

நால்வர் அணியினை அதிகம் சீண்டி
அதனை முன்னணிக்கு கொண்டுவரும் தவறினை
நிச்சயம் அதிமுக செய்யாது.

நிச்சயமாக வேண்டுமென்றே தேமுதிக வை
பிரதான எதிரிபோல் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தும்
முயற்சியிலேயே ஆளுங்கட்சி  ஈடுபடும்

அதனால் ஏற்படும் விளைவுகளைச்
சந்திக்க மத்தியில் ஆளும் ஒரு கட்சியின்
துணையிருப்பின் அது ஒரு
பாதுகாப்பாகத்தான் இருக்கும்

மிகச் சிலத் தொகுதியிலேயே இந்தக் கூட்டணி
வெல்ல முடியும் ஆயினும் அந்த வெற்றி
மத்திய ஆளுங்கட்சியின் கூட்டணி என்கிற வகையில்
கூடுதல் முக்கியத்துவம் பெறும்

அவசியமெனில் அடுத்து  வரும் ராஜ்யசபா
தேர்வினில் தனது கட்சிக்காக ஒன்று அல்லது
இரண்டு இடங்களைப் பெற்று கட்சியின்
எல்லையை விர்வுப்படுத்த முடியும்.

தி.மு.க மற்றும் காங்கிரஸ்ஸுடன் சேருவதன் மூலம்
கிடைக்கும் வேறு வகையான ஆதாயங்கள்
நிச்சயம் பி.ஜே.பி.யுடன் சேருவதன் மூலமும்
குறைவின்றியே கிடைக்கும்

எனவே... இன்றைய சூழலில்..
தே.மு தி..கவுக்கு பி.ஜே பி யுடன் கூட்டணி
வைத்தல் ஒன்றே நிச்சயம் புத்திசாலித்தனமான
முடிவாக இருக்கும்.

இதன் படி தே.மு..தி க. இப்படி முடிவெடுப்பது
அந்தக் கட்சிக்கு நல்லது.சரி

மக்கள் எப்படி முடிவெடுப்பது அவர்களுக்கு
நல்லது..அது....

அடுத்த கட்டுரையில்

Tuesday, March 1, 2016

கேப்டன் விஜயகாந்த் என்ன முடிவு எடுக்கலாம் ?

கர்மவீரர் சொன்னதைப் போல
இரு கழகங்களும் அனைத்து விதத்திலும்
ஒரே குட்டையில் ஊறிய
மட்டைகள்தான் என்பதில் யாருக்கும்
எந்தவித சந்தேகமும் இல்லை.

ஒன்றுக்கு மாற்றாக ஒன்று இருக்கும்படியும்
ஒருவருக்கு மீதான வெறுப்பை மற்றொருவர்
பயன்படுத்திக் கொள்ளும்படியாகவே
தங்களைத் தகவமைத்துக் கொள்வதும்,
இரு கழகங்களின் பலம் .

விஜயகாந்த அவர்களுக்கு அரசியல் ரீதியாகவும்
தனிப்பட்ட முறையிலும் கெடுதல்கள் செய்ததில்
இரு கழகங்களுமே ஒன்றுக்கு ஒன்று
சளைத்ததில்லை.

தொடர்ந்து எதிர்க்கட்சியாக செயல்பட
விடாதது முதல் எதிர்கட்சித் தலைவர்
 பதவியைப் பறித்தது வரை
தொடர்ந்து  அதிமுக  கெடுதிகள்செய்தது என்றால்

திருமண மண்டபத்தை இடித்தது முதல்
தொடர்ந்து செய்த அரசியல் கெடுபிடிகளால்
அதிமுக பக்கம் ஒதுங்கச் செய்ததில்
திமுகவுக்கும் பெரும் பங்குண்டு

எனவே இரு கழகங்களில் எந்தப் பக்கமும்
சாய்வதற்கு நிச்சயம சாத்தியமே இல்லை

அடுத்து இருப்பது மக்கள் நலக் கூட்டணி.

தேர்தலில் சதவீத கணக்கு செல்லுபடியாகும்
இந்தக் காலக் கட்டத்தில் தனித்து நின்றால்
தங்கள் சதவீதக் கணக்கு அம்பலமாகிவிடும்
என்னும் எண்ணத்திலும் ....

இரு கழகங்களின்
மீதான வெறுப்பு ஓட்டுகளைக் கவரலாம்
என்கிற ஆசையிலும்  ...

விளைந்த கூட்டணியாக
ஒருபுறமும் இருக்கும் இக்கூட்டணி
வெல்வதற்கான வாய்ப்புகளை விட
ஓட்டுக்களைப் பிரிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்

அப்படியும் ஒருவேளை தப்பித் தவறி
சில குறிப்பிட்ட இடங்களைப் பெற்றுவிட்டாலும்
அவர்களுக்குள் கூட்டணித் தலைவரை
தேர்ந்தெடுக்க நேரும் பட்சத்தில்
நிச்சயம் சிதறித்தான் போவார்கள்

காரணம் முதல்வர்  வேட்பாளரைச்
சொல்லவேண்டியதில்லைஎன்பது மிகச் சரிதான்
ஆனாலும் இன்று அனைத்துக் கட்சிகளும்
அதனால் லாபமோ நஷ்டமோ தங்கள்
முதல்வர் வேட்பாளரை முன்னிருத்துகையில்
அது குறித்து ஒரு முடிவெடுக்கமுடியாமல் இருப்பதே
அதற்கு அத்தாட்சி.

மேலும் அரசியலில்   அவரவர்
கொள்கைகளில் அதிகப் பிடிப்புள்ள
தலைவர்களுடன்..

நமது கேப்டன் அவர்களின். கட்சியை
இணைத்துப் பார்க்க
நமக்கே மனம் ஒப்பவில்லை என்பதுவும்    நிஜம்

அடுத்து இருக்கிற வாய்ப்பு...

தனித்து நின்று மீண்டும் தன் பலம் காட்டும் வாய்ப்பு

அல்லது

பி.ஜெ. பி.கூட்டணியில் சேரும் வாய்ப்பு

(அலசல் தொடரும் )