Wednesday, May 30, 2018

பிரசவ சங்கல்பம்

தன்னைப் பாதிக்கிற
ஒவவொரு நிகழ்வும்
ஒவவொரு உணர்வும்
கருவாகி
அவனுள் வளர்ந்து
கவியாக வரும் வரை
கவிஞன் படும் பிரவச அவஸ்தை
அவன் மட்டுமே அறிந்தது

ஆயினும்
கருவானது கவியாகி
கால் கொண்டு நடக்கையில்
அது தரும் அவஸ்தை
அது கூட அவன் மட்டுமே அறிந்தது

இளைஞர்களை கொள்ளை கொண்ட
'இழந்த காதலை'
இயற்றிய அவனே
மறந்து போன நிலையில்...

கவிஞனின் மனைவி ஒரு நாள் கேட்டாள்
'யார் அந்த அழகு சுந்தரி
இப்பொது கூட விலகி கொள்கிறேன்
இடைஞ்சலாக இருக்க மாட்டேன்' என
கண் கசக்கிப் போனாள்
இந்தப் பிரச்சனை ஒயவே
ஆறு மாதங்கள் ஆகிப்போனது

'நண்பனின் நயவஞ்சகம்'
கவிதை வெளிவந்த பின்னே
கவிஞனின் நெருங்கிய நண்பன்
தொடர்பு எல்லையை விட்டு
தொலைந்தே போனான்

அதற்கான காரணம்
இதுவரை
கவிஞனுக்கு விளங்கவே இல்லை

'சம்பந்திகளின் தர்பார்'
கவிதைக்கு பின்னே
மாப்பிள்ளை முகம் கொடுதது பேசுவதே இல்லை

'தவறினை நேரடியாகச் சொல்லியிருக்கலாம்
கவிதையாக்கி
அசிங்கப் படுத்தியிருக்க வெண்டாம்' என
சொல்லி போன சம்பந்தி
கவிஞனின் வீட்டுப் பக்கம்
இன்று வரை வரவே இல்லை

முத்தைக் கொண்டு
கடற் பரப்பைக் கூட
அளந்து அறியக் கூடும்
படைப்பைக் கொண்டு
படைப்பாளியை அறியக் கூடுமோ?

கவிதைக்குள் கவிஞனைத் தேடினால்
கவிதைகள் நீர்த்துப் போகும்

கவிஞனுக்குள் கவிதையைத் தேடினால்
'தங்க முட்டை வாத்தே' மிஞ்சும்

ஆனாலும் என்ன.....
கவிஞனை பாதிக்கும்
நிகழ்வுகளும் உணர்வுகளும்
தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன
கவிதைகள் பிறந்து கொண்டுதான் இருக்கின்றன

Saturday, May 26, 2018

கால எல்லைகளை கடக்கத் தெரிந்தால்...

கால எல்லைகளை
கடக்கத் தெரிந்தால்
இணக்கமாய் மனத்துள்
நினைக்க முடிந்தால்
புரியாத புதிர்கள்
புரிந்து போகுமோ ?
குழப்பிய நிகழ்வுகள்
சீராகிப் போகுமோ ?

கவிஞராக இல்லாது
வணிகராக இருந்தவர்
ஒருசிறு அதிர்வினில்
பெருங்கவிஞர் ஆவது
எங்ஙனம் சாத்தியம் ?

முத்தான கவிதை
என்பது கூட
நிச்சயமாய் சாத்தியம்
"முத்தைத்தரு பத்தித் திரு நகை.."
எங்ஙனம் சாத்தியம்  ?

முருகனடியாரின்
கதைகேட்டு நானும்
குழம்பித் தவித்ததுண்டு
நம்பாது கதையென்று
நாளும் நினைத்ததுண்டு

ஒரு நாள்..
கைபேசி மாற்றாது
"சிம்"மதனை மட்டுமே
சில நேரம் மாற்றிவிட
அலைபேசியின் உள்ளடக்கம்
அடியோடு மாறிவிட
புதிருக்குத் தெரிந்தது புதிய வழி
எனக்குள் புகுந்தது புதிய ஒளி

உடல் உருவம் மாற்றாது
அங்ஙனமே இருக்கவிட்டு
அறிவுதனை மட்டுமே
அடியோடு மாற்றுகிற
அதிசயங்கள் ஏதேனும்
நடந்திருக்கச் சாத்தியமா ?
பட்டினத்தாரும் அதுபோல
மாறியிருக்கச் சாத்தியமா ?

Friday, May 25, 2018

அமைதியில் நிலைப்போம்..

மன அமைதியை இரசிப்போம்
மன அமைதியில் இலயிப்போம்
மன அமைதியில் நிலைப்போம்

மன அமைதியே பேரானந்தத்தின்  ஊற்று
மன அமைதியே கலைகளுக்கு ஆசான்
மன அமைதியே சக்திக்கு ஆதார மையம்

பரந்து விரிந்த புல்வெளி
பனிபடந்த மலைச் சிகரம்
சலசலத்து ஓடும் சிற்றோடை
ஆரவாரமற்ற தெய்வ சன்னதி
மழலையின் மயக்கும் சிரிப்பு ...

இன்ன பிற  எல்லாம்
அமைதியின்
உற்பத்திச் சாலைகள் இல்லை

அமைதியின்
 சுகம்காட்டும்
அற்புத ஆதாரமையங்கள்

ஆதாரமையங்கள்  வழி
நம் மன இரசிப்பைத் துவங்குவோம்

மனம் அமைதியை இரசித்தல்
 வெறும் துவக்கமேஎன அறிந்தபடி...

மனம் அமைதியில் இலயித்தல்
ஒரு  தொடர்ச்சியேஎன உணர்ந்தபடி..

மனம் அமைதியில் நிலைத்தேலே
 முதிர்ச்சி எனத்  தெளிந்தபடி ....

Thursday, May 24, 2018

ஆலையில்லா ஊரில்...

அவசரத்தில் போகிறப்  போக்கில்
எதிர்ப்படும் நண்பனை
விசாரித்துப்போகும்
 "மினிச் சுகத்தை "
"டுவீட்டுகளிலும்

அவசியமாகத்  தவிர்க்க முடியாதுக்
காத்திருக்கும் தருணங்களில்
சந்தித்த நண்பனுடன்
உரையாடும்
 "தனிச் சுகத்தை "
"முக நூலிலும் "

விடுமுறை நாட்களில்
ஊர்க்கோடிப்  பாலத்தில் அமர்ந்து
சாவகாசமாகப் பேசும்
 "அற்புதச் சுகத்தை"
"பதிவுப் பக்கங்களிலும் "

அனுபவித்தபடி என்னை நான்
ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்

என்ன செய்வது
கடமைச் சுமை அழுத்தக்
கூன் விழுந்த மனத்துடன்
கட்டிடக்  காட்டுக்குள்
அன்றாடம் அலைந்து திரிந்துத்   ...
தன்  சுயம் தொலைப்பவன் ...

முழு நிலவின் அழகையும்
மனதைக் குளிர்விக்கும்
அந்தப் பனிப் பொழிவையும்

குளிரூட்டப்பட்ட திரையரங்குகளில்
மெய் நிகர்க்  காட்சிகளைக் கண்டு  தானே
" மெய்மறக்க  " முடியும் 

Wednesday, May 23, 2018

நம் இணைய தளத்தின் பெருமையை....

எந்த ஒரு கட்சியின்  தலைவனாயினும்
எந்த ஒரு இயக்கத்தின் தலைவனாயினும்
தான் முன்னெடுத்துச் செல்லும்  போராட்டத்திற்கு
முன்  நிற்கவும்  வேண்டும்

 வெற்றியோ தோல்வியோ அதன் முழு
நிகழ்வுகளுக்கும் பொறுப்பு ஏற்கவும்  வேண்டும்

மாறாக கொள்ளு  என்றால் வாயை த் திறந்து
கடிவாளம் என்றால்  வாயை மூடும்
கெட்டிக்கார குதிரை போல

வெற்றி என்றால் தோளை நிமிர்த்துவதும்
தோல்வி என்றால் ஓடி ஒளிவதும் நிச்சயம்
நல்ல தலைவனுக்கு   அழகில்லை

அதிலும் குறிப்பாக தங்கள் உணர்ச்சிகரமான
பேச்சில்  மயங்கி  தன்  சுக துக்கங்களை  மறந்து
களத்தில் நின்று பேராடுபவர்கள் பாதிக்கப்படுகையில்
நிச்சயம் கூடுதல் பொறுப்பெடுக்கவே வேண்டும்

அரசும் மக்களின் அதிருப்தி தலைகாட்டும் போதே
அதுதொடர்பாக கவனம் கொள்ளாது அலட்சிய
மனோபாவம் கொள்வதும் ,பிரச்சனைகள் குறித்து
கவனம் செலுத்தாது  அதைத் தலைமை தாங்கித்
தொடர் பவர்களை வேறு வேறு  வண்ணங்கள் பூசி
கொச்சைப்படுத்த முயல்வது நிச்சயம்  உச்சக்கட்ட
அநாகரிகம்

இதில் மூன்றாவதாக இணைய தள போராளிகள்
தொலைக்காட்சி விவாத விற்பன்னர்கள் வேறு

எரிகிற கொள்ளியில் எங்கோ
 சுகமாய் இருந்து  கொண்டு எண்ணெய் வார்த்தபடி ..

தம் எழுத்தும் பேச்சும் பிரச்சனைகளை இன்னும்
அதிகரிக்கச் செய்யுமே தவிர
நிச்சயம் குறைக்கப்போவதில்லை
எனத்  தெளிவாகத் தெரிந்தும்  விதம் விதமாய்
எழுதியபடி பேசியபடி ... பகிர்ந்தபடி

முன்பும் எப்போதும் பிரச்சனைகளும்  போராட்டங்களும்
அரசின் அலட்சியப்போக்கும் இல்லாமல் இல்லை
இருந்தது

பற்றிய நெருப்பை அணையவிடாதும்  தொடர்ந்து
பரவ விடும் காற்றினைப்போல ஊடகங்கள்
இப்போதைப்  போல அப்போது இல்லை

எந்த ஒரு பிரச்சனைக்கும் தன்னுடைய கருத்தை
உலகமே எதிர்பார்த்திருக்கிற அதீத மனோ நிலையில்
அன்றைய தனி மனிதர்களும் இல்லை

முன்னிருவர் திரும்ப முடியாத அளவு  வெகு தூரம்
மோசமான நிலைக்கு வந்து விட்டனர்
அதன் விளைவுகளை அவர்கள் நிச்சயம் அறுவடை
செய்வர் .பட்டுத் திருந்தட்டும் அவர்கள்

அதைப்  போல்  தொலைக்காட்சி மற்றும்
செய்தித் தாள்களின் மீதான நமபகத் தன்மையும்
படிப்படியாய்க் குறைய ...

நம் இணையத்  தொடர்பில் வெளியாகும்
செய்திகளைத்தான் நம்பத்  தக்கதாக
மக்கள் கொள்ளும்படியான சூழல்  இன்று உள்ளது

எனவே பலம் கூடக்  கூட  பொறுப்புகளும்
கூடவேண்டும் இல்லையேல் பலம் கூடிப்
பயனில்லை என உணர்ந்து...

உணர்வுப் பூர்வமான விஷயங்களில்  மேலும் உணர்வைத்   தூண்டும்படியான பகிர்வுகளைத்
தவிர்த்து

,அறிவுப்பூர்வமான அவசியமான பதிவுகளை  மட்டும்
பதிவோம், பகிர்வோம்  என உறுதி பூணுவோமாக

நம் இணைய தளத்தின்   பெருமையை அருமையை
இன்னும் உயர்த்த உறுதி கொள்வோமாக 


Tuesday, May 22, 2018

தேடல்

என் முன்னே என் பின்னே    
லட்சம் லட்சமாய்
கோடி கோடியாய்
எல்லோரும் ஒடிக் கொண்டிருக்கிறார்கள்
என்னைப் போலவே

"நாமெல்லாம் எங்கே போகிறோம்" என்றேன்
என்னை ஒத்தவரிடம்

"நம் முன்னால் செல்பவர்கள் எல்லாம்
தெளிவானவர்கள்
அனைத்தும் தெரிந்தவர்கள்
அவர்கள் பாதையில்தான் நாம் போகிறோம்" என்றார்

"நம் பின்னால் வருபவர் கூட நம்மைப் பற்றி
அப்படி எண்ணலாம் தானே
அப்படியானால் அது தவறல்லவா" என்றேன்
அவர் முறைத்த படி ஓடத் துவங்கினார்

"நம் பயணத்தின் முடிவில் என்ன இருக்கும்" என்றேன்
பக்கத்தில் ஒருவரிடம்

"தக தகக்கும் தங்க வாயில் கொண்ட சொர்க்கம் இருக்கும்
நம்மை வரவேற்க்க ஆண்டவன் அங்கே இருப்பார்" என்றார்

"இதனைப் பார்த்துத் திரும்பியவர் எவரேனும் உண்டா
இல்லை உறுதி செய்யத்தான் யாரேனும் உண்டா" என்றேன்


நீ நாத்திகம் பேசுகிறாய்
நீ எதனயும் அடையவும் மாட்டாய்
நீ எவனையும் அடைய விடவும் மாட்டாய்" என சபித்துப் போனான்

நான் சலிப்பின்றி அடுத்தவரிடம் கேட்டேன்
"நாம் எதற்காக ஓடுகிறோம்"
அவன் சொன்னான்

"நம் கால்கள் ஓடத்தான் படைக்கப் பட்டிருக்கின்றன
நாம் ஓடத்தான் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறோம்
என்வேதான் ஓடுகிறோம்"

நான் சொன்னேன்
"நிற்கவும் நடக்கவும்
ஓய்வாக அமரவும்
நாம் பயிற்றுவிக்கப் பட்டிருந்தால்
நம் கால்கள் அதற்காகத்தான் படைக்கப்பட்டது
எனக் கொள்ளலாமா?

"நீ பேசுவது விதண்ட வாதம்
இதற்கான பதிலை நிற்பவனிடமோ அல்லது
ஓய்வாக அமர்ந்திருபவனிடம் கூட கேட்கலாம்தானே"
என்றான் வெறுப்புடன்

ஓடுதலை விடுத்து
ஓரமாய் ஒதுங்கி
ஓய்வாக அமர்ந்திருப்பவரைப் பார்த்துக் கேட்டேன்

"இவர்கள் எல்லாம் ஏன் ஓடுகிறார்கள்
நீங்கள் எல்லாம் ஏன் ஓய்வாக இருக்கிறீர்கள்"

அவர் சிரித்தபடி கேட்டார்
"கேள்வி உன்னுடயதா
அல்லது உன்னிடம் கேட்கப்பட்டதா" என்றார்

"கேள்வி என்னுடையதுதான்" என்றேன் அடக்கமாய்

"அப்படியானால் சரி
அறிந்ததையெல்லாம் ஆழப் புதை
கண்களையும் காதுகளையும் கவனமாய் மூடு
உள்ளே மிக உள்ளே தொடர்ந்து போ
உற்றுப் பார்-கேள்வி கேள் -
உனக்கே எல்லாம் தெரியும்" என்றார்

"நீங்களெல்லாம் விடைத் தெரிந்தவர்களா" என்றேன்

அவர் பலமாகச் சிரித்துச் சொன்னார்
"சும்மா இருப்பவர்களிடம் மட்டும் இல்லை
ஓடுகிறவர்களில் கூட விடை தெரிந்தவர்கள் இருக்கக்கூடும்

ஆனாலும் என்ன
பெரும்பாலோர் விடைத் தேடி அலைபவர்கள்

இன்னும் பெரும்பாலோர்
விடை தெரிந்தவர்கள் போல் நடிப்பவர்கள்" என்றார்

நான்
தொடர்ந்து ஓடவும் இல்லை
ஓய்ந்து அமரவும் இல்லை
நின்றபடியே இருக்கிறேன்

எல்லாம் புரிந்தது போலவும் இருக்கிறது
எதுவுமே புரியாதது போலவும் இருக்கிற்து
முன்னைப் போலவே....

Monday, May 21, 2018

நாளைப் பிடித்தல்

 லாகவமாய்ப்  பிடிக்கும்
 சூட்சுமம் அறிந்தவர்களிடம்
 பயிற்சிப் பெற்று                                   
முதல் நாள் இரவில்               
ஒத்திகையும் பார்த்து                           
மிகக் கவனமாய் ...                   
கண்கொத்திப் பாம்பாய் 
விடியலுக்காகக் காத்திருக்க.       

 சோம்பல் இடுக்கில்                 
சுவாரஸ்யப் புதர்களில்
அதன்  தன்மை மாறாது              
 மெல்ல மெல்ல நழுவி                     
மறைந்துத் தொலைகிறது
விடிந்த இந்த நாளும்         
எப்போதும் போலவே

சற்றும் மனம் தளரா
விக்கிரமாதித்தனாய்
இன்று இரவும்
ஒத்திகையைத் தொடர்கிறேன்

 நாளையேனும்
முழுப்பொழுதையும்
என் பிடிக்குள் அடக்கவேண்டும் எனும்
அசைக்கமுடியா உறுதியுடன்
எல்லோரையும் போலவே

Sunday, May 20, 2018

சுற்றுச் சுவர்

கரிய இருள்
கூடுதல் தூரம்
அறியாமை
வெறுப்பு மட்டுமல்ல

கூடுதல் வெளிச்சம்
அதிக நெருக்கம்
பரிபூரணமாய் அறிதல்
அதீத அன்பு கூட

புரிதலையும்
அன்னியோன்யத்தையும்
மிக எளிதாய்
அடியோடழித்துப் போகிறது

இப்போதெல்லாம்
போதுமான ஒளி
கண்ணுக்கெட்டியதூரம்
தேவையான அறிதல்
கைகுலுக்கும் நெருக்கத்தோடு
என்னை நிலை நிறுத்திக்கொள்கிறேன்

வெகு நாட்களாய் 
பட்டுப்போய்க் கிடந்தவைகள்   கூட
இப்போது  லேசாய்
மிக லேசாய்த்   துளிர்க்கத் துவங்குகின்றன

Saturday, May 19, 2018

காலம் கடக்க நினைப்பதுதான்....

எதைப் பறக்க வைப்பது
எதை  இறக்கி வைப்பது
காற்றுக்கு அது தெரியும்
பறக்க நினைப்பதுதான்
காற்றைப் புரிந்து  கொள்ளவேண்டும்

 எதனைமுளைக்கச் செய்வது
 எதனை மக்கச் செய்வது
மண்ணுக்கு அது தெரியும்
முளைக்க முயல்வதுதான்
தன்னுள் உயிர் கொள்ள வேண்டும்

எதனை   மிதக்கச் செய்வது
எதனை  மூழ்கச் செய்வது
நீருக்கு அது தெரியும்
மிதக்க நினைப்பதுதான்
தன்னை தகவமைத்துக் கொள்ளவேண்டும்

எதனை அணைத்து எரிப்பது
எதனை எரிக்காதுக்  கடப்பது
நெருப்புக்கு அது தெரியும்
நிலைக்க நினைப்பதுதான்
தன்னை திடப்படுத்திக் கொள்ளவேண்டும்

எதனைக் கடத்தி  ரசிப்பது
எதனை அழித்துச் சிரிப்பது
காலத்திற்கு அதுதெரியும்
காலம் கடக்க நினைப்பதுதான்
தன்னைத்  தகுதிப்படுத்திக்  கொள்ளவேண்டும்

Thursday, May 17, 2018

புலிவேஷம்

மனித மனங்களில் எல்லாம்
புதர் மண்டி
காடாகிப் போனதால்
ரொட்டிக்கான தொடர் போருக்கு
நிஜ உருவை விட
புலிவேசமே பொருத்தமாய் இருக்கிறது

பொறுக்கப் போகிற
பாவனை மறைத்து
வேட்டைக்குச் செல்வதுபோல்
முகமெங்கும் புலிவரிகளை
பூசிக் கொண்டேன் ஆயினும்
நிஜப் புலிகளின் நெருக்கத்தில்
மருங்கிய பார்வையை ஏனோ
மறைக்க முடிவதேயில்லை

பாவப்பட்ட  முட்டாள் ஜந்துக்கள்
புலியெனஏமாந்து ஒதுங்குவதில்
கிடைக்கும் சில சௌகரியங்களும்
தொலையும் சில அசௌகரியங்களும்
ஒப்பனையின் அவசியத்தை
உறுதிப்படுத்திப்போனாலும் கூட

ஒவ்வொரு முறை ஒப்பனையிடும்போதும்
நோவையும் நோயையும்  மறைக்கவென
விலைமகள் போடும்
மாலைவேளை ஒப்பனையை
ஒப்பிட்டு வேதனையுறும்  மனம் மட்டும் ஏனோ
அடுப்படிப் பூனையாய் ஒடுங்கிப்  போகிறது

ஆனாலும் என்ன
ரொட்டிக்கான போருக்கு
புலிவேசமே பொருத்தமாய் இருக்கிறது

Tuesday, May 15, 2018

பாவப்பட்ட அவன்

உட்புறம் தாளிட்டுக்
கதவருகில் அமர்ந்தபடி
யாரேனும் வரமாட்டார்களாவென
வெகு நேரம் காத்திருந்து
மனச் சோர்வு கொள்கிறான்

தானே இழுத்து அடைத்த
ஜன்னலருகில் அமர்ந்தபடி
அறையினைக் கொதிகலனாக்கும்
வெக்கையில் புழுக்கத்தில் தன்மீதே
கழிவிரக்கம் கொள்கிறான்

தனிமைத் துயர்
குரல்வளை நெறிக்க
யாரேனும் அழைக்கமாட்டார்களாவென
தொலைபேசிக்கு அருகமர்ந்து
மனம் சலித்துப் போகிறான்

யாராவது சிரித்தால்
சிரிக்கலாமென்று ஆவலோடும்
யாராவது பேசினால்
பேசலாமென்று ஆர்வத்தோடும்
காலமெல்லாம் காத்துக்கிடந்தே
கவலை மிகக் கொள்கிறான்

விளைச்சலைப் பெற
முதலில் விதைத்தலும்
வேண்டியதைப் பெற
முதலில் கொடுத்தலும்
காரியம் வெற்றிபெற
முதலில் துவக்குதலும்
அவசியமென்பதை அறியாமலேயே...
துவக்க வேண்டியது
தான்தானென்பது புரியாமலேயே...

எதனையோ எவரையோ எதிர்பார்த்தபடியே
இன்றும்  எப்போதும்போல்
காத்திருந்து காத்திருந்து
வெந்து நொந்துச் சாகிறான்
பாவப்பட்ட அவன்....

Saturday, May 12, 2018

neet is also good as neat

நீரை அடித்துக்கிளப்பி
அச்சுறுத்தும் அலையாக்கி
அலைதான் கடலென
 சாதிக்க முயல்கிறது
சுயநலப் பேய்க்காற்று

 அலைச்சீற்றம் கண்டு
அச்சம் கொண்டு
முத்தெடுக்கப் பயணிப்போரை
முடக்கிவிட முயல்கிறது
முட்டாள்ப் பேய்க்காற்று

கடலின் ஆழம் அறிந்தோர்
 அதன் சீலம் அறிந்தோர்
கிஞ்சிற்றும்
குழப்பம் கொள்ளவில்லை
ஒதுங்கிக் கரையில் நிற்கவில்லை

கடந்ததைத் தாண்டும் விதமாய்
சாதனையெனச் சொல்லும் விதமாய்
 கூடுதலாய் கடலினுள் பயணிக்கின்றனர்

பதினான்குக்கொருவர்
அதுவும் கூடுதல் பிடுங்கலின்றி
முத்தெடுத்தல் சாத்தியம் என்பது
அவர்களுக்குத்தெரியும்

கத்தியின்றி இரத்தமின்றி
சுதந்திரம் பெறுதல் மட்டுமின்றி
அல்லக்கைகளின் அட்டகாசங்களை
ஒழிக்கவும்  முடியும் என்பதற்கு
ஒரு நேரடிச் சாட்சியாய்....

ஆம் இனிநேர இருக்கும்
பெரும் மாறுதலுக்குக் கட்டியம் கூறும் விதமாய்

ஆம் இனி மாளிகைக்காரர்கள் மட்டுமின்றி
இனி மத்தியமரும்
முத்தெடுக்கும்  சாத்தியமென்பதை
நிரூபிக்கும் விதமாய்  

Friday, May 11, 2018

நிர்வாண ஞானம்

 "உனக்குத் தெரியாது
நான் சொல்கிறபடிச் செய் "என்றார் அப்பா

எரிச்சல் எரிச்சலாக வந்தாலும்
என் நன்மைக்குத்தானே எனச்
 சொன்னதை எல்லாம் தவறாது செய்தேன்

 " உனக்குத் தெரியாது
 நாங்கள் சொல்கிறபடிச் செய் "
என்றார்கள் ஆசிரியர்கள்

 கோபம் கொப்பளித்துக்கொண்டு வந்தாலும்
என் வளர்ச்சிக்குத்தானே என
சொன்னதை எல்லாம் தட்டாமல் செய்தேன்

 "உங்களுக்குத் தெரியாது
நான் சொல்கிறபடிச் செய்யுங்கள் "
என்றாள்  மனைவி

அனுபவத்தில் சில விஷயங்களில்
அவள் சொல்வதே சரியாய் இருந்தாலும்
 ஆண் எனும் மனோபாவத்தில்
விரும்பாத பாவனையில் செய்தேன்

"உங்களுக்குப் புரியாது
நான் சொல்கிறபடி மட்டும் செய்யுங்கள் "
என்றான் மகன்

புதிய தொழிற்நுட்பங்கள் புரியாததால்
வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாய்
அவன் சொன்னதை மட்டும் செய்து கொண்டு வந்தேன்

 "மக்குத்தாத்தா
 உனக்கு ஒன்னுமே தெரியலை
 இப்படிச்செய்யனும் "எனத்
தப்பும் தவறுமாய்  எது ஒன்றையும் செய்கிறாள் மழலை தாண்டும் பேத்தி.

முதன் முதலாய் தவற்றை ஒப்புக்கொண்டு
அவள் போங்கில் சரியாய்ச் செய்து போகிறேன்

 வாழ்வில் முதன் முதலாய்
"உனக்கு எதுவும் தெரியாது "என்கிற வார்த்தைக்குச்

சங்கடப்படாதபடி..
அதிகம் சந்தோசம் கொண்டபடி
அடிக்கடி சொல்லமாட்டாளா என எதிர்பார்த்தபடி


Wednesday, May 9, 2018

வேதாளம் சுமந்த விக்கிரமாதித்தனாய் ...

படைப்பாளிக்கு
இது வரமா இல்லை சாபம்தானா ?

முன்னிரவில் விசையுடன்
அடிமனத்திலேயே
மையம் கொண்ட  "அது "

வளர்ந்து நகராது
அல்லது
கரைந்து மறையாது

விசையுடன் அவனை  இம்சிக்க...

அதன்  போக்கை
கணிக்கத் தக்கவனாய் இராது
கவனிக்காத தக்கவானாய் மட்டுமே
இருக்க முடிவதால் ...

கனத்ததை விழுங்கிய
கருநாகமாய்
மெல்ல மெல்ல ஊர்கிறது
அவனது உறக்கத்தையும்  விழுங்கியபடி
இன்றைய இரவும் ..

துணைக்கு யாருமற்று
தானே பிரசவிக்க நேர்ந்த
ஒரு ஜீவனின் அவஸ்தையுடன்
உலாவத் துவங்குகிறான்
பேயாய் இந்த நடு இரவிலும்...

வேதாளம் சுமந்த விக்கிரமாதித்தனாய்
இது படைப்பாளிகளுக்கேயான
வரமா இல்லை சாபம்தானா எனும்
விடைதரா கேள்வியைச் சுமந்தபடியும் ...


Monday, May 7, 2018

என்னருமைத் தமிழ்த் தாயே...

தெரியாதவருக்குச்
சொல்வதைப் போல
எதையும் விளக்கிச் சொல்லிவிடாது
மிகவும் எச்சரிக்கையாய் ..

தெரிந்தவருக்கு
ஞாபகம்செய்வதைப் போலவே
எதையும் மிகவும் எளிமையாய்
மிகச் சுருக்கமாய்...

பாண்டியத்தைக்
காட்டும்படியாய்
எந்தப் பெரும் வார்த்தையையும்
தவறியும் பயன்படுத்தி விடாது

வசனகவிதைக்கும்
உரை நடைக்கும் இடையினில்
மிகச் சரியாய் புரியும் படியாய்
மிக மிக எளிமையாய்

மிகப் பெரும்பிரச்சனையும்
நாளும் விட்டு விடாது
தொட்டுப் போக முனைகிறேன்
சமூக அக்கறையின் காரணமாய்..

நித்தமும்
கரிக் கங்கினை வெறும் கையால்
இடம் மாற்றும்
அப்பத்தாவின் லாவகமாய்...

"போற்றுவோர்
போற்றாட்டும் புழுதி வாரி
தூற்றுவோர் தூற்றட்டும் "என்ற
மன நிலை மாறாமலே

பிரச்சனைகளை
நடு நிலைக் கண்ணோட்டத்தோடு
நாளும் அணுகுகின்ற
நல்லமனப் பாங்கினையும்
  
வார்த்தையோடு விளையாடும்
சூட்சுமமும் எனைவிட்டு
மாறாதுக்  காத்திடுவாய்
என்னருமைத் தமிழ்த் தாயே

Thursday, May 3, 2018

"வனத்தோடு வாழ்ந்தாலும்...

"வனத்தோடு வாழ்ந்தாலும்
இனத்தோடு வாழ் "

இதில் இனம் என்பது
உடலால் என்பதில்
விலங்குகளுக்குக் குழப்பமில்லை

நமக்குத்தான் ஆயிரம் குழப்பம்

ஆதி மனிதனுக்குக் குழுவே இனம்
அடுத்து அதன் தொடர்ச்சியாய் ஜாதி
அதன் அகண்ட வடிவாய் மொழி
அதன் எல்லை விரிய விரிய மதம்
அது இன்னும் இன்னும் விரிய நாடு

அதன் நிறைவான எல்லையாய்
மதிக்கத் தக்கதாய் மனிதம்

ஆயினும் இன்னும் நம்மை
நிறைவினில் சிறிது நேரம்  கூட நிற்கவிடாது
குறைந்த பட்சம் நாட்டுடன் கூட
நிலைபெற்று இருக்க விடாது

இனம் என்னும் சொல்லுக்கு
வேறு வேறு விளக்கம் அளித்து
நம்மை பின்னோக்கி நகர்த்துவோரை ...

இனியேனும்
நம் எல்லைக் கோட்டைவிட்டு
வெளியே நகர்த்தி வைப்போம்

நம் நிலை என்றும்
நாட்டிற்குக் கீழிறங்கிவிடாது
மேல் நோக்கியே நகரும் எனும்
உறுதியை நெஞ்சில் ஏற்போம்

Wednesday, May 2, 2018

தலைவர்கள் தேவைப்படுகிறார்கள்

தமிழகத்திற்கு இப்போது
மிக மிக அவசரமாய் அவசியமாய்த்
தலைவர்கள் தேவைப்படுகிறார்கள்

படிப்பு , சுய நலமின்மை ,
பொது நலன் பேணல் முதலான
குணங்கள் தேவையில்லை

ஊராட்சி வார்டில் நின்று
ஜெயிக்கும் செல்வாக்கு இல்லையெனிலும்
அது ஒரு பொருட்டில்லை

உணர்வுப் பூர்வமாய்
கேட்போரைக் கவரும்படியாய்
பேசமட்டும் தெரிந்திருக்கவேண்டும்

மிகக் குறிப்பாய்...

ஜாதி வைத்தோ மதம் வைத்தோ
மக்களைக் கூறு போடும் படியாய்...

எங்கோ எந்தக் கருங்காலியோ
செய்யும் சிறு பிரச்சனையாயின்
அதனைப் பெரிதாக்கும் படியாய்

பெரிதெனின் அதனை
பிரச்சனையாகச் சிந்திக்கவிடாது
ஜாதி மதத்தோடுக் கலந்து
இன்னும் மிகப் பெரும் பிரச்சனையாக்கும்படியாய்

அவசியம் பேசத்  தெரிந்திருக்க வேண்டும்

இப்போது
அதைச் செய்து கொண்டிருப்பவர்களின்
போலி அடையாளங்கள் உதிர்ந்து போனதால்

ஒரு பெருவாரியான மதத்தின் பெயரைத் தாங்கிய
வேற்று மதத்தினர் என்பது
அதிகம் பிரச்சாரமாகிப் போனதால்

அவர்களை நம்பி இனிப் பயனில்லை என்பதாலே
நாங்கள்
புதுத் தலைவர்களைத் தேடுகிறோம்

(பொது மதத்தினருக்கு
கூடுதல் வாய்ப்பளிக்கப்படும் என்பதைக்
கருத்தில் கொள்ள வேண்டுகிறோம் )

இவண்

தமிழகத்தை பதட்டத்திலேயே வைத்திருக்க
உறுதி கொண்டோர் கழகம்
(த.ப.வை.உ.கொ.க  )

Tuesday, May 1, 2018

பகைவரை முற்றாய் வெல்லப்போகிறோம் ?

நம் பகைவர்கள் நம்மை வெல்ல
முன்புபோல்
தம் படைப்பலம் பெருக்குவதில்லை
முன்புபோல்
தம் ஒற்றர்களையும் நம்புவதில்லை

மாறாக நம்முள்
நன்கு பேசத் தெரிந்த சிலரைத்
தங்கள் துணையாக்கிக் கொள்கிறார்கள்
அவர்கள் மூலம் நம்மை எப்போதும்
பதட்டத்திலேயே வைத்திருக்கச் செய்கிறார்கள்

பதட்டத்தில் எப்போதும் இருக்கும் நாம்
இயல்பாக நம் சுயம் இழக்கிறோம்
அதன் காரணமாகவே நம்
கடமைகளையும் மறக்கிறோம்

எங்கோ சில கயவர்கள்
செய்யும் அட்டூழிங்களை அவர்கள்
ஜாதிக்குள்ளும் மதத்திற்குளும்  அடக்கி
நம்மை கொந்தளிக்கச் செய்கிறார்கள்

போராட்டப் போதையில் நம்மை
எப்போதும் இருக்கவைத்து
நேர்மறையான பல விஷயங்களை
நம்மை பார்க்காதே செய்துவிடுகிறார்கள்

உடனிருந்து கொல்லும் நோயாய்
நம்முடனிருந்து நம்மை
நாளும் வீழ்த்தும் இவர்களை
என்று அடையாளம் காணப்போகிறோம் ?

நாம், நம் குடும்பம்,நம் நாடு எனும்
நமக்கான விஷயங்களில்
கவனம் கொள்ளப்போகிறோம் ?
பகைவரை முற்றாய் வெல்லப்போகிறோம் ?