Saturday, December 31, 2016

இன்றோடு.......

இன்றோடு.......
தளரட்டும் உடையட்டும் ஒழியட்டும்
தடையெனவே கிடந்தவைகள் எல்லாமே
நாளைமுதல்
வளரட்டும் படரட்டும் செழிக்கட்டும்
வாழ்விற்கு வளம்சேர்க்கும் எல்லாமே

இருளோடு
நகரட்டும் விலகட்டும் மறையட்டும்
சுமையெனவே துயர்தந்த எல்லாமே
ஒளியோடு
பரவட்டும் தொடரட்டும் பலம்பெறட்டும்
நல்லோர்க்கு நலம்சேர்க்கும் எல்லாமே

அடியோடு
உடையட்டும் நொறுங்கட்டும் சிதறட்டும்
பொய்மைக்குத் துணைப்போன எல்லாமே
அழகோடு
நிறையட்டும்  நிமிரட்டும் வலுக்கட்டும்
உண்மைக்கு வலுசேர்க்கும் எல்லாமே

நிலையாக
கிழியட்டும் எரியட்டும் அழியட்டும்
கீழ்மைக்குத் துதிபாடும் எல்லாமே
விளைவாக
வளரட்டும் உயரட்டும் நிலைக்கட்டும்
உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லாமே

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Thursday, December 29, 2016

அந்த மகத்தான தலைவிக்கு ......

இன்று எல்லாம்
சுகமாய்முடிந்தது
என மகிழ்வு கொள்ளாதீர்கள்

இன்று நடந்தது
ஒரு அழிவின் துவக்கம்

அணைகிற விளக்கின்
அதீத வெளிச்சம்

முடிகிற மூச்சுக்கு
முன் எழும்
ஒரு நீண்ட பெருமூச்சு

பெற்ற குழந்தையைப்
பலி கொடுத்து
வரம் பெற முயலும்
கொடூரப் பெற்றோராய்.

கண்களை விற்று
ஓவியம் பெறும்
கூறுகெட்ட இரசிகனாய்..

மக்களின் தொண்டனின்  மன நிலைக்கு
முற்றிலும் மாறாய்
நீங்கள் எடுத்த முடிவு...

"தனக்குள் வந்த நோய்
தன்னோடு போகட்டும்
அது கட்சிக்குள் பரவ  வேண்டாம் " என

இறுதி வரை இருந்த
அந்த மகத்தானத்  தலைவிக்கு
நீங்கள் செய்தத்   துரோகம்

துரோகங்கள் வெல்வது
அதிசயமே இல்லை
அதற்குச் சரித்திரச் சான்றுகள்
மிக மிக அதிகம்

ஆயினும்
அது நிலைத்ததில்லை என்பதற்கு
சரித்திரச் சான்றுகள்
இன்னும் மிக அதிகம்

எப்படியோ பதவியைத்
தக்க வைத்துக் கொண்டதாக
நீங்கள் நினைத்திருக்க

எங்களுக்கோ நீங்கள்
அதைப்   பலிபீடத்தில்
வைத்துவிட்டதாகவே தெரிகிறது

பார்ப்போம்....

Tuesday, December 27, 2016

பேய் அரசு செய்தால்தான்....

பேய் ஆட்சி  செய்தால்தான்
சாஸ்திரங்களைப்
பிணம் தின்னச் சாத்தியமா ?

நிஜம் அடக்கி
நிழல் ஆளினும்
நிச்சயம் அது சாத்தியமே

அதனால்தான்

முறையான  வாரிசைப்
பின் தள்ளி
உலகே வேடிக்கைப் பார்க்க
பெண் சடங்குகள் செய்ததும்

துரோகம் செய்தவர்கள் எல்லாம்
பிரேதம் சுற்றி நிற்க
இரத்த உறவுகள்
நெருங்கமுடியாது தவித்ததும்

ஊழல் பெருச்சாளியே
ஊழலுக்கான கண்காணிப்பு
ஆணையராய் இருக்கவும்

புறக்கடை வழி
அரியாசனம் ஏறுதல் கூட
சாத்தியம்  ஆவதும்

எரிக்கும் சூரியனை
கூடைக்குள் அடைக்கும்
கண்கட்டு வித்தையாய்

பெரும் மரணத்தின்
காரணத்தைக் கூட
மிக எளிதாய் மறைக்கவும்

..............................
.......................................

இப்படி இதுவரை
தமிழகம் கண்டிராத
எத்தனையோ அசிங்கங்கள்
மிக இயல்பாய் அரங்கேறவும்

ஊமை ஜனங்களாய்
சோற்றுப் பிண்டங்களாய்
குருட்டுப் பார்வையாளர்களாய்
தமிழகமே திகழவும்

இதற்கு மேல்
என்ன சொல்வது ?
எப்படிச் சொல்வது... ?

ஆம்
பேய் ஆட்சி  செய்தால்தான்
சாஸ்திரங்களைப்
பிணம் தின்னும் என்பதில்லை

நிஜம் அடக்கி
நிழல் ஆளினும்
நிச்சயம் அது சாத்தியமே

Monday, December 26, 2016

அப்பல்லோ மர்மங்கள்

சட்டென அப்பல்லோ மருத்துவனை குறித்த
மர்மங்களை எழுதுவதை விட முதலில்
ஒரு சிறு விளக்கம் சொல்லி அதை எழுதுவது
அதை மிகச் சரியாகப் புரிந்து கொள்ள உதவும்

நான் சிறு வயதில் நில உடமைச் சமூதாயத்தின்
முழுமையான எச்சமாய் இருந்த ஒரு கிராமத்தில்
வளர்ந்தவன்

ஜாதிவாரியாகத் தெருக்கள்,ஜாதி வாரியாகக்
கோவில்கள், சுடுகாடுகள்,திருவிழாக்கள்,
இனம் சார்ந்து மரியாதை,இவையெல்லாம்
நூற்றுக்கு நூறு மிகச் சரியாகக் கடைப்பிடித்து
வந்த ஊர் அது

அதன் காரணமாகவே மத நமபிக்கைகள்
மட்டுமல்ல, மதச் சடங்குகள் மட்டுமல்ல
மூட நம்பிக்கைகளும் அதிகம் விரவிக் கிடந்த
கிராமம் அது

ஊரின் நான்கு எல்லைகளிலும் தெய்வங்கள்
இருந்து  காப்பது மட்டுமல்ல, பேய்களும்
இருந்து பயமுறுத்திக் கொண்டிருந்த ஒரு
வித்தியாசமான ஊர் அது

எப்போதும் ஊரில் ஏதேனும் ஒரு தெருவில்
பேயோட்டும் உடுக்கைச் சப்தமும்
அது தொடர்பான கதைகளும் காற்றில்
கலந்து சிறுவர்களாய் இருந்த எங்களை
மட்டுமல்ல, பெண்களையும் ஒரு பய உணர்வுடன்
உலவும்படியே வைத்திருக்கும்

இந்தச் சூழலில் மாதம் ஒருமுறை வரும்
நடு இரவில் வரும் குடுகுடுப்பைக்காரர்களே இந்தப்
பதிவின் கதாநாயகர்கள்

ஏறக்குறைய பூம்பூம் மாட்டுக்காரன் சாயலில்
உடை அமைப்பு முதலானவைகள் இருந்தாலும்
அவன் மீசை, உருட்டும் விழி,நெற்றி குங்குமப்பட்டை
உடுக்கைச் சப்தம், இவைகளின் மொத்த உருவமாய்
இருக்கும் அவர்களை பட்டப் பகலில் பார்த்தால்
கூட பயந்து நடுங்கும்படியாக இருப்பார்கள்

காரணம் அவர்களது நடு இரவு மர்மங்கள்

அவர்கள் நட்ட நடுநிசில்தான் வருவார்கள்
நேராக சுடுகாட்டில் இருந்துதான் வருவார்கள்
அவர்கள் வருகையில் நேர் எதிராக வரக்கூடாது
அப்படி வந்தவர்கள் இரத்தம் கக்கிச்
செத்திருப்பதற்கான ஆதாரப்பூர்வமான நெடுங்கதைகளை
எல்லாம் திரும்பத் திரும்பக் கேட்டு
பயத்திலுறைந்து கிடக்கும் எப்போதும்
எங்கள் ஊர் ...

மாதம் ஒருமுறை அல்லது  இரண்டு மாதத்திற்கு
ஒருமுறை நட்ட நடு நிசியில் அவர்கள் உடுக்கைச்
சப்தமெழுப்பியபடி வரும் இரவினை
இப்போது நினைத்தாலும் என்போன்றோருக்கு
ஒருபய உணர்வு நெஞ்சில் மிக லேசாய் படரும்

இந்தச் சூழலில்
நான் சிறுவனாய் இருக்கையில், கனத்த இருளும்,
குளிரும், நிசப்தமும் விரவிக் கிடந்த ஒரு நாளில்

வீதியே அதிரும்படி உடுக்கைச் சப்தம் எழுப்பியபடி
 "நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது "
என ஒரு பொது வாக்கியத்தை சொல்லி
குடுகுடுப்பைக்காரன் வந்த ஒரு நள்ளிரவில்...

படுக்கையில் இருந்த எனது தாயார், மெல்ல
எழுந்து , விளக்கு ஏதும் போடாது ,அந்தப்
பெரிய வாசல் நிலைக்கதவை சப்தமெழுப்பாதபடி
மிக  லேசாய்த் திறந்து வாசலைப் பார்க்காதபடி
,மிகச் சரியாய் கவனிக்கும்படியாய்
காதின் அடிப்பகுதியை மட்டும் நிமிர்த்தியபடி
மிக லேசாய் உடல் நடுங்கியபடி  இருந்தச்
சூழலில்,

நான் இரு கண்களையும் இறுக்க மூடியபடி
அம்மாவின் இருகால்களையும் இறுக்க
அணைத்தபடி,மொத்த உடலும் நடுங்கும்படி
இருக்க

குடுக்குடுப்பைக்காரனின் அந்த குடுகுடுப்பை
ஒலியும்,அதைத் தொடர்ந்த அவனின் கணீரென்ற
குரலும் வீதியே அதிரும்படி எங்கள்
வீட்டுக்கு மிக அருகில் ஒலிக்கிறது

இதற்கு முன்பு வரை " நல்ல காலம் பொறக்குது
நல்ல காலம் பொறக்குது" எனச்
சொல்லிக் கொண்டு வந்த குடுகுடுப்பைக்காரன்
திடுதெப்பென்று "ஐய்யோன்னு போகுதே
ஐயோன்னு போகுதே..ஒரு பச்சைப்பாலகன் உசுரு
ஐயோன்னு போகுதேன்னு "வீதி அதிரக்
கத்துகிறான்

என் உடன் அந்தக் குரல் கேட்டு இன்னும்
நெருக்கமாய் அம்மாவைக் கட்டிக் கொள்கிறேன்
அம்மா இன்னும் இறுக்கமாய் என்னை
அணைத்துக் கொள்கிறாள்

என் உடல் நடுக்கத்தோடு அவள் உடலும்
சேர்ந்து நடுங்குகிறது

எத்தனை நேரம் அப்படி இருந்தோம் என்கிற
நினைவு இல்லை

குடுகுடுப்பைக்காரன் குடுகுடுப்பை ஒலியும்
குரலும் மெல்ல மெல்ல தூரம் சென்றுக்கரைய
பின் மெல்லக் கதவை மூடிவிட்டு
படுக்கையில் சாய்கிறோம்

பயத்தில் எனக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை
அம்மாவை இறுக அணைத்தபடி நான்
பயத்தை மறக்க முயற்சிக்கிறேன்

அம்மாவும் பேசவில்லை. ஆனால் அந்தப்
பாலகன் நானாக இருந்துவிடக் கூடாது
என்ற எண்ணமோ என்னவோ அம்மாவும்
என்னை இறுக அணைத்துக் கொள்கிறாள்

எப்போது விடிந்தது எனத் தெரியவில்லை

நான் விழித்து எழுந்து அம்மாவைத் தேடுகையில்
அம்மா வீட்டு வாசலில் யாருடனோ
பேசிக் கொண்டிருப்பது தெரிய, வேகமாக
வாசலுக்கு ஓடுகிறேன்

தெருவில் ஆங்காங்கே கும்பல் கும்பலாய்
நின்றபடி, நேற்றைய குடுகுடுப்பைக்காரன்
விஷயத்தை பயந்தபடி பேசிக் கொண்டிருக்கிறார்கள்

என் வீட்டிற்கு எதிர் வீட்டிலும் என் வயதொத்தவன்
இருந்த காரணத்தால் அந்த மாமியும்
என அம்மாவும் மிகச் சரியாக யார் வீட்டு
வாசலில் இருந்து அந்த "ஐயோன்னு போறானே"
என்பதைச் சொல்லி இருப்பான் என்கிற
ஆராய்ச்சியில் இருக்கிறார்கள்

இருவருக்கும் நம் வீடாக இருக்கக் கூடாது
என்கிற என்கிற எண்ணம் இருப்பது அவர்கள்
பேச்சில் தெரிகிறது

அம்மா என்னை அணைத்தபடி என் தலையை
கோதியபடி இருப்பதைப் போலவே
எதிர் வீட்டு மூர்த்தியின் தலையை
அவர்கள் அம்மா கோதியபடி இருக்கிறாள்

நேரமாக, நேரமாக, பேச்சு கொஞ்சம் இலகுவாக
எதிர்வீட்டு  மாமி சட்டென " அதுசரி
நேத்து நடந்ததெல்லாம் சரி. அந்த சமயம்
நம்ம தெரு நாய்களெல்லாம் எங்கே போனது
ஒரு நாய் குரைப்புச் சப்தமும் கேட்கவில்லையே"
என்கிறாள் ஆச்சரியமாக

அப்போதுதான் நினைவு வந்தவளாக என்
அம்மாவும் " அட ஆமா..நம்ம வீட்டுப் பக்கமே
எப்போதும் ஏழெட்டுத் திரியுமே அதுக்கெல்லாம்
என்ன ஆச்சு " என்கிறாள்

எனக்கும் அது ஆச்சரியமாகத்தான் இருந்தது

எங்கள்  பேச்சைக் கேட்டுக் கொண்டு அருகில்
இருந்த சுந்தர் மாமா சட்டெனத் திரும்பி

"உங்களுக்கு விஷயம் தெரியாதா ?
நடுச்சாமக் கோடாங்கி எல்லாரும் சுடுகாட்டில்
பூஜை செஞ்சு வரும்போது கையில் ஒரு
தாயத்து வெச்சிருப்பாங்க

அதை நாய்க்கு நேராக் காட்டினா போதும்
அது நாய் வாயைக் கட்டிடும் அவன் தெரு
தாண்டும் வரையில் வாயத் திறக்காது"
என்றார்

அப்போது அதைக் கேட்க எங்களுக்கு
இன்னமும் பயம் கூடிப் போனது

பின் வயது கூடக் கூட அப்படியெல்லாம்
நாய் வாயைக்கட்டுவது என்பது சாத்தியமே இல்லை
அது கட்டுக் கதை. நாம் குடுகுடுப்பைக்காரனையே
முழுக் கவனத்துடன் கவனிக்கிற நிலையில்
நாயின் குரைப்பைக் கவனித்திருக்க விட்டிருக்கும்
என்கிற முடிவுக்கு வந்தேன்

ஆனால் இப்போது அப்போலோவில்
நடந்த விஷயத்தைப் பார்க்கையில் எனக்கு
தாயத்தால் வாயை கட்டுதல் சாத்தியம் என்றே
படுகிறது

காரணம், எத்தனைப் பெரிய நிலையில்
இருக்கிறவர்கள் ஆனாலும் கூட இரண்டாம்
தளம் தாண்டி மூன்றாம தளம் போக முடியாமல்
போனது,....

மாதக் கணக்காகியும் முன்னாள்  முதல்வரின்
உடல் நலம்குறித்து எந்தச் செய்தியும்
யார் வாய் வழியும்கசியாதிருப்பது,....

தஞ்சை மாவட்டத்தில் இருந்து வந்த யாரோ
ஒரு கைதேர்ந்த குடுக்குடுப்பைக்காரன்
இரண்டம் தளத்தில் வைத்துவிட்டுப் போயிருக்கிற
தாயத்தால்தான் இருக்கும் என நிச்சயம் நம்புகிறேன்

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

( ஒரு ஜன நாயக நாட்டில், விஞ்ஞான வளர்ச்சியும்
மக்களின் விழிப்புணர்வும் உச்சத்தில் இருக்கிற
இந்த நூற்றாண்டிலும், ஒரு மக்களின் ஏகோபித்த
தலைவரின் மரணம் குறித்த மர்மத்தை விலக்க
முடியவில்லையெனில்,என்ன நடந்தது என்பதைத்
தெரிந்து கொள்ளமுடியவில்லையெனில்
விக்கிரமாத்தித்தன் கதைகளைப் போல நாமும்
இதுபோல அப்போலோ மர்மக் கதைகளை எழுதிக்
கொண்டிருக்கவேண்டியதுதான்.
வெட்கக் கேடு ஆனாலும் வேறு வழி ? )

Sunday, December 25, 2016

வாசித்துச் செல்பவருக்கு....

அன்பின் கனபரிமானம்
அளவின்றிக் கொடுப்பவருக்கும்
அதன் மதிப்பறிந்து
முழுமையாய்
அனுபவிப்பவருக்கும்தான் தெரியும்

இடையில் இருப்பவருக்கு
அது புரிய வாய்ப்பே இல்லை

நேர்மையின் அசுரபலம்
அது துயரே தரினும்
அதுதரும் ஆன்மபலம்
அதை முழுமையாய்
அறிந்தவருக்குத்தான் தெரியும்

பித்தலாட்டத்தில் லாபமடைபவர்
அதை உணர வாய்ப்பே இல்லை

உண்மையின் பெரும்சக்தி
அது அரிச்சந்திர வீழ்ச்சி தரினும்
அது தரும் பெரும் எழுச்சி
அதன் பரிபூரணம்
அறிந்தவருக்கே புரியும்

பொய்யில் செல்வந்தராவனுக்கு
அது  புரிய வாய்ப்பே இல்லை

கவித்துவத்தின் அருமை
அதைப் படைப்பவனுக்கும்
அதன் உட்பொருளறிந்து
அதை முழுமையாய்
இரசிப்பவருக்கும்தான் தெரியும்

வாசித்துச் செல்பவருக்கு
அது விளங்க வாய்ப்பே இல்லை

Saturday, December 24, 2016

" உங்களால் நான் உங்களுக்காக நான் " என முழங்கிய புரட்சித் தலைவியை

Image may contain: 4 people, people standing and text

" உங்களால் நான்
உங்களுக்காக நான் ".....
என முழங்கிய
புரட்சித் தலைவியை முன் இருத்தி

"உங்களால் நாங்கள்
எங்களுக்காக நீங்கள் "
என  மறைமுகமாய்
நீங்கள்ஆடிய கூட்டத்தின்
அலங்கோலங்கள்
வெட்டவெளிச்சமாகி வருகின்றன

உயிரிடன் இருக்கையில்
இருளில் எங்கேயோ
மறைந்து அதிகார வேட்டை
ஆடியிருந்த கூட்டம்...

அமரரானதும்
அவரைச் சுற்றி நின்று
கோரமுகம் காட்டியது
எங்களுக்கு ஒரு தெளிவைத் தருகிறது

நின்றவர்களுக்கும்
நிற்க உதவியவர்களுக்கும்
எங்கள் மனமார்ந்த நன்றி

"ஓநாய்களும் நரிகளும்
மறைந்து "பிழைத்தலே " சரி
அணில்போல,குருவிபோல
வெட்டவெளியில் உலவுமெனில்
அது நாடாயிருக்கச் சாத்தியமில்லை

மக்கள் நாங்கள்
இது விஷயத்தில்
மிகத் தெளிவாய் இருக்கிறோம்

பதவியைத் தக்கவைக்க
உடன் படம்  மாற்றுவோரே
நீங்கள்தான் தெளிவு கொள்ளவேண்டும்

பதவியில் இருந்தோர்
ஆதரித்த ஜா  அணி கண்ட
பெரும்தோல்வியையும்

தொண்டர்கள்  மக்கள்
ஆதரித்த ஜே அணிகண்ட
மாபெரும் வெற்றியையும்

ஒரு பாடமாய் பதவியிலிருப்போர்
கொள்ளவில்லை எனில்....

முடிவினைச் சொல்லவேண்டுமா என்ன ?

Friday, December 23, 2016

. மத்திய , மாநில அரசுகளே ஆணிவேர் அறுத்து ஆஸிட் ஊற்றும் செயலை....

நச்சுமரம் அழிக்க...

இலை உதிர்த்து
கிளைவெட்டி
அடிமரம் அறுத்து
பின் வேரறுக்க
முயல்வதைவிட

ஆணிவேரறுத்து
ஆஸிட்   ஊற்றி
வீழ்த்த முயல்வதுவே
உடனடிப்  பலன்தரும்

ஊழல் அரசியல்வாதிகளை...
துணைபோன அதிகாரிகளை

விசாரித்து
கைது செய்து
நீதிமன்றம் மூலம்
நடவடிக்கை எடுத்தலுக்கு முன் ..

அவர்களுக்குத் தெம்பளிக்கும்
பணபலத்தின்  பின்புலத்தின்
தொடர்பறுத்து
அசுரபலமறுத்துப் பின்
குசலம் விசாரித்தலே
கூடுதல் பலனளிக்கும்

அதுவே
ஊளையிடும் ஓநாய்களின்
உளுத்த வாயடைக்கும்

அதுவே
ஊழல்பெருச்சாளிகளின்
கொட்டமும் அடக்கும்

அதுவே
ஊமை ஜனங்களுக்கு
ஜன நாயகத்தின்பால்
நம்பிக்கையும் கொடுக்கும்

எனவே
மத்திய , மாநில அரசுகளே

இலை உதிர்த்து
கிளைவெட்டி
அடிமரம் அறுத்து
பின் வேரறுக்கும்
ஆமை   நிலை விடுத்து

ஆணிவேர் அறுத்து
ஆஸிட்  ஊற்றும்
உடனடிப்  பலன்தரும்
உறுதியாய்ப் பயன்தரும்
 வேங்கை நிலை  தொடர்வீர்

ஊழல் பெருச்சாலிகளின்
அட்டகாசத்தை
தமிழகம் விட்டு
இனியேனும்
விரட்டி  அடிப்பீர்

(அரசு என்பதனை
அசுரபலம்   மிக்கதாயினும்  தூண்டினால்
மட்டுமே செயல்படும்   அரசு  இயந்திரம்
எனப் பொருள் கொள்க  ) 

Thursday, December 22, 2016

ஊழலில் தலைசிறந்த "ராம மோகன ராவ்களையே "....

நாங்கள் தெளிவானவர்கள்

அதனால்தான்
சோத்துமூட்டை கட்டும்போதே
வெளிஎலிகள் தின்றுவிடாது பாதுகாக்க
அதனுள்
இரண்டு பெருச்சாலிகளைவைத்தே
கட்டிவிடுகிறோம்

நாங்கள் விவரமானவர்கள்

அதனால்தான்
மகளிர்விடுதிப் பெண்களை
வெளிக்காமுகர்களிடம் இருந்துப் பாதுகாக்க
விடுதிக்காவலர்களாய்
கற்பழிப்பிற்காக
தண்டனைப் பெற்றவரையே
காவல்வைத்துவிடுகிறோம்

நாங்கள் அறிவானவர்கள்

அதனால்தான்
பள்ளித் தலைமை ஆசிரியர்
ஓய்வுபெறுகையில்
ஆசிரியர்களுக்குள் போட்டிவராதிருக்க
அவருக்கு மிகவும் நெருக்கமான
அவர்குறித்து அதிகம் தெரிந்த
கடை நிலை ஊழியரையே
தலைமை ஆசிரியராக்கி விடுகிறோம்

நாங்கள் வெகுப் புத்திசாலிகள்

அதனால்தான்
ஊழல் ஒரு பிரச்சனை என
எண்ணம் கொள்ளாதிருக்க
வெளி ஊழல் அரசு ஊழலை
எப்போதும் முந்தாதிருக்க
 நிர்வாகத் தலைமைப் பொறுப்பில்
ஊழலில் தலைசிறந்த
"ராம மோகன ராவ்களையே "
தலைமைச் செயலாளராக்கிவிடுகிறோம்

நாங்கள் சிறந்த படைப்பாளிகள்

அதனால்தான்
எத்தனை மோசமான
நிகழ்வாயினும்
அதன் பாதிப்புகள் குறித்து
அலட்டிக் கொள்ளாது
தவறியும் கோபம் கொள்ளாது
அது குறித்து ஒரு கவிதையோ
முகநூல் பதிவோ கொடுத்துவிட்டு
அன்றாடக் கடமைகளில்
கவனத்தைத் திருப்பிவிடுகிறோம்

Wednesday, December 21, 2016

காசேதான் கடவுளப்பா- தலைமைச் செயலாளருக்கும் இது தெரியுமப்பா

இருக்கும் இடம் விட்டு
இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைதல் என்பது
கடவுள்  குறித்துச் சொன்னதாக
நேற்றுவரை நினைத்திருந்தேன்

இப்போது
உயர் அதிகார்களிடமும்
ஊழல் ஆசாமிகளிடம்
தேடத் தேடத்
தோண்டத் தோண்டப்
புதிய நோட்டுக்கள்
கிடைப்பதைக்  கேட்கக் கேட்க

கால் கடுக்க
நாள் முழுவதும்
தேடி ஓடியும்
திறந்திருக்கிற ஏ.டி,எம்மையும்
பணம் கொடுக்கும்  வங்கியையும்
காணுதல் என்பது
குதிரைக் கொம்பாகிப்
போனதைப் பார்க்கப் பார்க்க ....

இருக்கும் இடம் விட்டு
இல்லாத இடம் தேடி அலைவது என்பது
கடவுளுக்குச் சொன்னதாக
இப்போதெல்லாம் தோணுவதில்லை
மாறாக அது
காசுக்குச் சொன்னதாகவே படுகிறது எனக்கு

உங்களுக்கு ?

Sunday, December 18, 2016

சின்னம்மா அவர்கள் பொதுச் செயலாளராக....


சின்னம்மா அவர்கள் பொதுச் செயலாளராக
பதவி ஏற்பதால் அ. இ அ.தி.மு.க கட்சிக்கு
உண்டாகும் சாதக பாதக விஷயங்களை
அலசும் முன்பு ...

அண்ணா அவர்களின்
மறைவுக்குப் பின் நேர்ந்த அரசியல் சூழலை
ஆராய்ந்ததைப் போல..

http://yaathoramani.blogspot.in/2016/12/blog-post_13.html.http://

.htmlhttp://yaathoramani.blogspot.in/2016/12/2.html

புரட்சித்தலைவர்
அவர்களின் மறைவுக்குப்பின் ஏற்பட்ட
அரசியல் சூழலை ஆராய்வது இன்னும்
சரியாகப் புரிந்து கொள்ள உதவும்
என நினைக்கிறேன்

1967க்குப்பின் முதலமைச்சர் பதவி வகிக்கையில்
காலமான மூன்று முதலமைச்சர்களுக்கும்
உள்ள ஒற்றுமை, மூன்று முதலமைச்சர்களும்
அவர்கள் காலமான காலத்தில் சட்டமன்றத்தில்
முழு மெஜாரிட்டியுடனேயே பதவியில் இருந்தார்கள்

எனவே அவர்கள் காலமானதால் உடனடியாக
ஒரு ஆட்சி மாற்றத்திற்கான சூழல்
எப்போதும்( இப்போதும் போல ) ஏற்படவில்லை

ஆனால் கட்சியில்தான் அவர்கள் காலமானச் சூழலில்
அவர்கள் நினைத்தது போல் இல்லாமல்
மாறுபாடாக வேறு ஒருவர் தொடர்ந்து
தலைமைப் பதவி ஏற்கும்படியாய் அமைந்தது

அண்ணாவுக்குப் பின் அவர் சொல்லிக் கொண்டிருந்த
நாவலருக்குப் பதில் தன்
அரசியல் சாணக்கியத் தனத்தால்
கலைஞர் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார்

தன் சாதுர்யத்தால் இன்றுவரை தொடர்ந்து கொண்டும்
வருகிறார்

ஆனால் புரட்சித் தலைவர் விஷயத்தில்
அவர் அவர் மறைவுக்குப் பின் ஒரு பெரும்
குழப்பம் ஏற்பட்ட பின்பே ஒரு தெளிவும் கிடைத்தது

அதற்குக் காரணம் ஒருவகையில் புரட்சித் தலைவர்
என்று கூடச் சொல்லலாம்

புரட்சித் தலைவர் முதல்வராயிருக்கையில்
மத்திய அரசுடன் ஏதாவது மனக் கசப்பெனில்
அதை தான் பொது வெளியில் பேசாது
காளிமுத்து அவர்களை காங்கிரஸைத் தாக்கிப் பேசும்
ஒரு உசுப்பேத்தி விடுவார்

அவரும் அவர் பங்குக்கு அன்றையத் தினசரிகளில்
தலைப்புச் செய்தி பிடிக்கும்படியாக
ஒரு அருமையான வசனமாக  பேசி வைப்பார்

("கருவாடு மீனாகாது, கறந்த பால் மடிபுகாது "

முணியாண்டி விலாஸுக்குக் கூட அதிக
பிராஞ்ச் தமிழகத்தில்  உண்டு ஆனால் காங்கிரஸுக்கு.."

என்பன போன்ற வசனங்கள் எல்லாம் அப்போது
மிகப் பிரபலம் )

காங்கிரஸுடன் ஏற்படுகிற மனக் கசப்பை
காளிமுத்து அவர்களை வைத்துப் பேசவைத்து
அவ்வப்போது அதைச் சரிசெய்து கொண்டதைப் போல
தனக்குக் கட்சி நடவடிக்கைகளில் ஆர். எம் வீரப்பன்
அவர்கள் பாலும் புரட்சித்தலைவியின் பாலும்
ஏற்படும் அதிருப்தியை அவர்களில் ஒருவருக்கு
முக்கியத்துவம் கொடுத்தும் ஒருவரை ஒதுக்கியும்
என மாற்றி மாற்றி வைத்து அரசியல் சதுரங்கம்
ஆடுவார்

அதுவேஅவர் மறைந்து அவரது பூத உடல்
அன்று இராஜாஜி ஹாலில் மக்கள் அஞ்சலி
செலுத்த வைக்கப் பட்டபோது உலகமே
பார்க்கும்படியாய் வெட்டவெளிச்சமாக்கியது

அன்று ஆரம்பம் முதல் கடைசியில் வரை
புரட்சித் தலைவி அவர்கள் தலைவரின்
பூத உடலுக்கு அருகிலேயே சோகவடிவமாய்
இருந்ததும்

உலக மக்கள் அனைவரும் பார்க்கும்படியாய்
புரட்சித் தலையின் மீது இரக்கம் கொள்ளும்படியாய்
அது இருந்ததும்

அதற்கு ஈடு கொடுக்கும்வகையில்
ஜானகி அவர்களையும் புரட்சித் தலைவரின்
அருகில் இறுதி வரை இருக்கும்படியாகச் செய்ததும்

இராணுவ ஊர்தியில் புரட்சித் தலைவரின் உடல்
ஏற்றப்பட்டதும் புரட்சித் தலைவியும் அதில்
ஏறமுற்பட்டதும்..

அவர் கே.பி.ராமலிங்கம் அவர்களால் பிடித்துக்
புரட்சித் தலைவி கீழே தள்ளப்பட்டதும்...

அது அன்று தொலைக்காட்சி மூலம்
உலக மக்கள் அனைவராலும் நேரடிக் காட்சியாய்
பார்க்கப்பட்டதும்...

அது பெரும் அதிர்ச்சித் தரும் நிகழ்வாய்
மக்களுக்கு இருந்ததும்,அதன் காரணமாய்
புரட்சித் தலைவியின்பால் கூடுதல் இரக்கம்
மக்களுக்கு வந்ததும்...

அந்த நிகழ்வே பின்னால் அவர் கட்சித் தொண்டர்களையும்
பொது மக்களையும் ஈர்ப்பதற்கு ஒரு
மிகப் பெரும்காரணமாய் இருந்தது என்றால்
அது மிகையில்லை

ஆனால் இன்று...அதே போல

புரட்சித் தலைவி அவர்களின்
பூத உடல் அதே இராஜாஜி ஹாலில் மக்களின்
அஞ்சலிக்காக வைக்கப் பட்டிருக்கும்போது

சின்னம்மா அவர்களும்
புரட்சித் தலைவி இருக்கிறவரையில் ஊடகங்கள்
கண்ணில் பட்டுவிடாது,மறைமுக அரசியல் செய்து
கொண்டிருந்த, புரட்சித் தலைவி அவர்களால்தனக்கு
துரோகம் செய்கிறவர்கள் என அடையாளம்
காட்டப்பட்டவர்கள் எல்லாம் சுற்றி நின்றதும்..

ஒரு பெரும் அதிர்ச்சிசி தரும் நிகழ்வாய்
மக்களுக்கு இருந்ததும்,அதன் காரணமாய்
சின்னம்மா அவர்களின் பால் கூடுதல் வெறுப்பும்
வந்திருக்கிறது என்றால் அதுவும் மிகையில்லை

அன்று ஆர்.எம் வீரப்பன் அவர்கள் ஆட்சிப் பொறுப்பில்
இருந்த பலத்தில் ஜானகி அவர்களை முதல்வராக்கி
புரட்சித் தலைவியை அவர்களை ஒதுக்கிச் செய்ததெல்லாம்
சில காலங்களுக்குத் தான் செல்லுபடியானது

பின் ஆட்சிக் கலைக்கப்பட்டதும் மக்களைச்
சந்திக்க நேர்கையில்தான் மக்கள் யார்ப்பக்கம்
என்பது புரிந்தது

அந்த வகையில் இப்போது மெஜாரிட்டி
இருக்கும் நிலையில் ஆட்சிப் பொறுப்பில்
இருக்கும் நிலையில், சின்னம்மாவை
இடைத்தேர்தலில் நிற்கவைத்து முதல்வராக்குவதோ
கட்சியின் பொது குழுக் கூடி
பொதுச் செயலாளராக்குவதோ

சித்தப்பா அவர்களுக்கும் முக்கிய பொறுப்புக்
கொடுப்பதோ இப்போது மிக எளிதானப் பணிதான்

ஆனால் அதையும் தாண்டி மக்களைச்
சந்திக்க நேர்கையில்.....

மந்திரி முதல் மாவட்டச் செயலாளர்,
வட்டம் சதுரம் என பதவியில் இருக்கிற
கட்சித் தலைவர்களைத்
தாண்டித் தொண்டர்களைச் சந்திக்க நேருகையில்..

என்ன நடக்கும்....
..போஸ்டர்கள் மீது சாணம் வீச்சு


(நீளம் கருதி அடுத்த பதிவில் )

Friday, December 16, 2016

ஒரு இனிய அரிய வாய்ப்பு




வலைத்தள நண்பர்களுக்கு  இது ஒரு அரிய வாய்ப்பு
இணைய தளம்  குறித்து எளிமையாகவும்
தெளிவாகவும் அறிய இது ஒரு இனிய வாய்ப்பு

கலந்து கொண்டு  நிகழ்வைச்  சிறப்பிப்போம்  வாரீர்
கலந்து கொண்டு இன்னும் நம்மைக்
கூர்மைப்  படுத்திக்  கொள்வோம் வாரீர்

அனுமதி இலவசம்  ஆயினும்
முன் பதிவு அவசியம்

கூடுதல் விவரம் அறிய

http://valarumkavithai.blogspot.com/2016/12/blog-post_16.html


நேரடித் தொடர்பு  அவசியமாயின்  

பயிற்சி முகாம் ஒருங்கிணைப்பாளர்கள்  
சிலரது எண்கள்

நா.முத்துநிலவன்-9443193293

ராசி.பன்னீர்செல்வன்-7373002837

மு.கீதா-9659247363

மீரா.செல்வக்குமார்-8870394188

இரா.ஜெயலட்சுமி-9842179961

மது.கஸ்தூரிரெங்கன்-9842528585

க.மாலதி-9659584845

முனைவர் மகா.சுந்தர்-9442232678

பொன்.கருப்பையா-9442211096

பேரா.சக்திவேல்-7373000601

Thursday, December 15, 2016

கலைஞர் பாணியில் ...சின்னம்மா ( 2 )

அன்று அறிஞர் அண்ணா அவர்கள் மறைந்த
காலச் சூழலில் கலைஞருக்கு இருந்த
பாதகமான சூழல் எனில்...

இலக்கியம் சார்ந்து அவரின் படைப்புகள்
ஒரு சராசரி மனிதனை முகம் சுழிக்க
வைக்கும்படியாகவே இருந்தது

கான்ஸ்டெபில் கந்தசாமி,( மகள்  மீது
 ...... புத்தகம் கிடைத்தால் படிக்கவும் ...)

மறக்க முடியுமா (போதையில் தங்கையை
புணர வரும் அண்ணன் )

"வனவாசத்தில் " கண்ணதாசன் கலைஞர் குறித்து
எழுதி இருந்த குறிப்புகள்

சட்டசபையில் அனந்த நாயகி அம்மையாரை
மடக்கும் விதமாக "அனந்த நாயகிக்கு
அண்ணாவின் மூக்கருகில் என்ன வேலை
என்றது...

பின் "நாடாவை அவிழ்த்துப் பார்த்தால் " என
இரு பொருள்படும்படி ஒரு விஷயத்திற்கு
விளக்கம் அளித்தது.

இப்படி மிக நன்றாகத் துடுக்காகப் பேசுவதான
எண்ணத்தில் பொதுவெளியில் கொஞ்சம் கூடுதலாகப்
பேசி அண்ணா, நெடுஞ்செழியன் பேராசிரியர்,நாஞ்சிலார்
சி;பி சிற்றரசு இவர்கள் எல்லாம் ஒரு நிலை என்றால்
கலைஞர் அடுத்த நிலை என்கிற அபிப்பிராயம்
தோன்றும்படி இருந்தது,,,

( இதன் தொடர்ச்சியாய் முதல்வர் பதவியில்
இருக்கையில்ஊழல் பரவலாக உள்ளதாக
 இராஜாஜி அவர்கள்சொன்னதற்கு மறு மொழியாக
"மூதறிஞரின்ஆண்மையற்றப் பேச்சு "
எனச் சொன்னது அப்போதுஅதிக
விமர்சனத்துக்குள்ளானது.

இதற்கு கடுமையான தலையங்கத்தை
அன்றைய ஹிந்து நாளிதழ்
வெளியிட்டதாக ஞாபகம் )

இது எல்லாம் கட்சிக்கு வெளியே உள்ளவர்களின்
மன நிலையில் இருந்த குமைச்சல்
.
.கலைஞர் முதல்வர் தேர்வில் இருக்கிறார்
எனக் கேள்விப்படஅப்படி நடந்து விடக் கூடாது
எனக் கட்சிச்சாராத பொது ஜனம்
எண்ணும்படியாக இருந்த சூழல்

ஆனால் முதல் தேர்வுக்கு மக்கள் தேவையில்லையே
சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால்
போதும்தானே

அதற்கு அவருக்குச் சாதகமான அம்சங்கள்
அவருக்கு அன்று நிறையவே இருந்தது

முதல் சாதகம் அண்ணா இறக்கும் தருவாயில்
தி.மு கழகம் சட்டமன்றத்தில்
 முழு மெஜாரிட்டியுடன்இருந்தது
.
.(இப்போது அ.தி.மு.க வுக்கு இருப்பதைப் போலவே )

கலைஞர் அமைச்சரவையில் பொதுப்பணித் துறை
அமைச்சராகவும், கட்சியிலும்
முக்கியப் பொறுப்பில்  இ ருந்தது

அண்ணா, பேராசிரியர்,மற்றும் நாவலர் இவர்களை விட
கட்சிக்காரர்களிடம் நெருக்கமாகவும், இணக்கமாகவும்
எப்போதும் உடன் சந்திக்கும்படியான நிலையிலும்
இருந்தது

சினிமா தொடர்புடையவராக இருந்ததால்
மக்கள் செல்வாக்குள்ள புரட்சித் தலவர் மற்றும்
இலட்சிய நடிகர் இவர்கள் ஆதரிக்கும் படியாக
இருந்தது

அண்ணா இறந்த தருணத்தில் பொதுப்பணித்துறை
அமைச்சர் என்கிற கோதாவிலும், கூடுதல்பற்றுடைய
தம்பி என உணர்த்தும்விதமாக அண்ணா நினைவிடம்
அமைப்பதற்கான செயல்பட்ட வேகம்,,

அன்று வானொலியில் கல்லும் கரையும் விதமாக
ஆற்றிய கவித்துவமான இரங்கல் சொற்பொழிவு..

இவைகள் இவருக்கு முந்தியவர்களாகத் தெரிந்தவர்களை
கொஞ்சம் பின் நகர்த்தி வைத்தது என்றால
அது மிகையில்லை

மேலும் முன் பதிவில் சொன்னபடி
 மதியழகன் அவர்களைக் கடைசி நிமிடம்வரை
போட்டியாளர் போலவே இரகசியம் பாதுகாத்து
கடைசி நிமிடத்தில் தன்னை ஆதரிப்பவராகக் காட்டி
அனைவரையும் திகைக்கச் செய்த இராஜ தந்திரம்

பேராசிரியரை அன்றுமுதல் இன்றுவரை
இணையாகவே கொண்டு செல்லும் சாதுர்யம்

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்

அதனால்தான் அவர் முதல்வராகவும்
கட்சித்தலைவராகவும் பொறுப்பேற்கவும் முடிந்தது
தொடரவும் முடிந்தது

அதனால்தான் தான் பதவி ஏற்று அடுத்து வந்த
பொதுத் தேர்தலில் அவர் தலைமையிலான
தி.மு. கழகத்தை மீண்டும் அரியணை ஏற
வைக்க முடிந்தது

இன்றும் அதே மெஜாரிட்டி அ.தி.மு.க வுக்கு இருக்கிறது

(ஆனால் சட்டசபை அங்கத்தினராக சின்னமா இல்லை
ஆதலால் முதல்வர் என்கிற பேச்சுக்கே இப்போது
இடமில்லை )

அதே சமயம் சர்வவல்லமைப் படைத்த
பொதுச்செயலாளர் பதவிக்கு முயல்வது என்பது
அவருக்கு இப்போதுள்ள சூழ் நிலையில்
மிக மிக அவசியமானது

ஆனால் கட்சிக்கு எப்படி இருக்கும்  ?

(நீளம் கருதி அடுத்த பதிவில்  )

Tuesday, December 13, 2016

கலைஞர் பாணியில்......சின்னம்மா

அண்ணா அவர்கள் மறைந்து அடுத்த
சட்டசபைத் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய
காலச் சூழல்

ஏற்கெனவே அண்ணா அவர்களால் எனக்குப் பின்
நாவலர் நெடுஞ்செழியன் எனப் பகிங்கிரமாகவே
அறிவிக்கப்பட்டிருந்த நிலைமை

ஆயினும் கூட சட்டசபை உறுப்பினர்கள் மற்றும்
கட்சித் தொண்டர்கள் மத்தியில் நாவலரை விட
கலைஞருக்கு நெருக்கமும் செல்வாக்கும்
இருக்கும் நிலைமை

சட்டமன்றத் தலைவர் தேர்வில் நெடுஞ்செழியன்
கலைஞர் மற்றும் மதியழகன் ஆகிய மூவரும்
போட்டியிடப் போவதாக பரவலானத் தகவல்

பரபரப்பாக இருக்கிறது தமிழகம்

நாவலர் பெயர் முதலாவதாக முன்மொழியப்பட
பின்  எதிர்பார்த்தபடி கலைஞர் அவர்களது
பெயரும் முன் மொழியப்பட அடுத்து மதியழகன்
பெயரும் முன்மொழியப்படும் ,

அந்த மும்முனைப்
போட்டியில் தான் எளிதாக வெல்ல முடியும்
என நாவலர் அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கும்
வேளையில்,

எதிர்பாராத விதமாக

மதியழகன் அவர்கள் போட்டியிடாது கலைஞர்
அவர்கள் பெயரை முன்மொழியப் புரட்சித் தலைவரும்
கலைஞரை ஆதரிக்க யாரும் எதிர்பாராத வகையில்
கலைஞர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்

பின் நெடுஞ்செழியன் அவர்கள் விலகியதும்
தொடர்ந்து அவர் இடம் காலியாகவே இருப்பதாக
சொல்லிச் சொல்லிச் அவரைச் சேர்ந்ததும் ,
போட்டியிடத் தக்க செல்வாக்கு மிக்கத்
தலைவராக இருந்த மதியழகன் அவர்களை
கட்சித் தொடர்பில் இருந்து விலகி இருக்கும்படியான
சபா நாயகர் ஆக்கியதும், இவையெல்லாம்
கலைஞரின் சாணக்கியத் தனத்திற்கு எடுத்துக் காட்டு

(கட்டுரையின் நோக்கம் அது குறித்து இல்லாத
காரணத்தால்,அது குறித்து விரிவாக எழுத வில்லை )

அன்று கலைஞர் அவர்களின் செல்வாக்கு
சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும்
கட்சித் தொண்டர்களிடம் இருந்த அளவு
பொதுமக்களிடமில்லை

பொதுமக்களின் எண்ணத்தில் அண்ணாவுக்குப் பின்
நெடுஞ்செழியன், பேராசிரியர் அவர்களுக்குப் பின் தான்
கலைஞர் என்கிற வரிசையே இருந்தது

கலைஞர் முதல்வர் ஆனதும் பொது மக்களிடம்
தனது இம்மேஜை இவர்களையும் மீறி முன்னெடுத்துச்
செல்லவேண்டிய கட்டாயம்

அப்போதுதான்  அரசின் சேம நலத் திட்டங்களை
மக்களிடம் கொண்டு செல்வது என்கிற நோக்கில்
மக்கள் தொடர்பு அதிகாரிகள் 59 பேர் நியமிக்கப்பட்டது
(அந்தப் பதவியில் உள் நுழைந்தவர்தான்
சசிகலா நடராஜன் அவர்கள் )

அப்போது கலைஞர் அவர்களின் புகைப்படம்
மிக அதிகமாக இருக்கும்படியாக
அதிக அரசு விளம்பரங்கள் வெளியிடப்பட்டன

( மிகக் குறிப்பாக சமூக நலத் துறை சார்பில்
வெளியிடப்பட்ட நாம் இருவர் நமக்கு இருவர்
என்கிற விளம்பரம் கலைஞர் அவர்களின்
உருவம் தாங்க அதிகம் வெளியிடப்பட்ட ஞாபகம்

அப்போது பழைய காங்கிரஸில் முன்னணிப்
பேச்சாளராக இருந்த தீப்பொறி ஆறுமுகம் அவர்கள்
"இந்தப் படத்தைப் பார்த்து விளம்பரத்தைப்
படிக்கிற பெண்களையெல்லாம்
இது கேவலப்படுத்துவதாக்இருக்கிறது.
காரணம் கலைஞர் அந்தப் பெண்களைப்
பார்த்து நாம் இருவர் நமக்கு இருவர் எனக்
கேவலப்படுத்துவதுப் போல இருக்கிறது என
பேசிய ஞாபகம் இன்னமும் என் போன்றோரிடம் உள்ளது )

இத்தனை ஆண்டு காலம் கழித்து...

சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியில்
பதவியில் இருப்பவர்களிடம்
(எல்லோரும் பின்புலத்தில்சின்னம்மா அவர்களிடன்
 ஆதரவுடன் அல்லது அவரைப் பகைக்காது
பதவியைப் பெற்றவர்கள் என்பதால்)
சின்னம்மா அவர்களின் செல்வாக்கு உள்ளது
வெகு ஜன மக்களிடம் இல்லை
கலைஞருக்கு  அப்போதிருந்த
நிலைமையைப் போலவே

ஆனாலும் அன்று கலைஞருக்கு இருந்த
சில எதிர்மறையான விஷயங்களைக் காட்டிலும்
அதிகமாக பல நேர்மறையான விஷயங்கள்
இருந்ததைப் போல இன்று சின்னம்மாவுக்கு இல்லை

மாறாக சில நேர்மறையான விஷயங்களை விட
பல எதிர்மறையான விஷயங்களே அதிகம் உள்ளது

(பதிவின் நீளம் கருதி,
அது என்ன கலைஞரின் பாணி  என்பது
   அடுத்த பதிவில் )

தொடரும்

Monday, December 12, 2016

புரட்சித் தலைவி ...சசிகலா அம்மையார்... கட்சித் தொண்டர்கள் மற்றும் மக்கள்

புரட்சித் தலைவர் மறைந்து அ இ அ தி. மு கவில்
ஒரு மாபெரும் வெற்றிடம் தோன்றிய காலச் சூழல்

இப்போது சட்ட மன்ற உறுப்பினர்கள்
பெரும்பாலானோர்  சசிகலா அம்மையார்  அவர்களை
ஆதரிப்பதைப் போல அன்று ஜானகி அம்மையாரை
ஆதரித்த நேரம்

பின் கட்சி இரு கூறாய்ப் பிரிந்து சின்னம் முடக்கப்பட
 வேறு வேறு தொகுதிகளில்
சேவல் மற்றும் புறா ஆகிய சுயேட்சை சின்னங்களில்
புரட்சித் தலைவி அவர்களும் ஜானகி அம்மையார்
அவர்களும்தனித்தனியே போட்டியிட்ட நேரம்

அப்போது தமிழகத்தில் இருவரில் நிஜமான வாரிசு
யார்தான் என்கிற குழப்பம் தலைவர்கள் மத்தியில்
மட்டுமல்ல, கட்சி உறுப்பினர்கள் மத்தியில்
மட்டுமல்ல,மக்களிடையே கூட இருந்த நேரம்

சென்னையில் இருந்து ஒரு பிரபல
பத்திரிக்கை ஆசிரியர் தன்னுடைய நிருபரை
ஜானகி அம்மையார் மற்றும்
மற்றும் புரட்சித்  தலைவி அவர்கள் போட்டியிடும்
தொகுதிகளுக்கு நேரடியாகச் சென்று மக்கள்
கருத்தை அறிந்து அறிக்கைத் தருமாறு பணிக்கிறார்

அந்த நிருபரும் நகர் பகுதியைச் சாராது
கிராமப் பகுதியில் விசாரித்தால்தான் சரியாக
இருக்கும் எனக் கருதி ஆண்டிப்பட்டித் தொகுதியைச்
சார்ந்த வருசநாடு பகுதியில் மக்கள் கருத்தைக்
கேட்டு பதிவு செய்து வருகிறார்

அந்தச் சமயம் அந்த ஊரில் ஒரு வயதான
அண்ணா தி.மு.க பெண்மணியிடம்
"புரட்சித் தலைவரின் துணைவியாரும்
புரட்சி தலைவியும் இந்த ஊரில் நேரடியாகப்
 போட்டியிட்டால் ,இந்த  இருவரில்
உங்கள் ஆதரவு யாருக்கு " என வழக்கமான
கேள்வியைக் கேட்டு வைக்க

அந்தப் பெண்மணி சட்டென யாரும் எதிர்பாராத
ஒரு வித்தியாசமான பதிலைச் சொல்கிறார்

"தலைவர் அந்த அம்மாவை வீட்டுக்குள்தானே
வைத்திருந்தார். இந்த அம்மாவைத்தானே அரசியலுக்கு
என அறிமுகம் செய்துவைத்தார்

வீட்டுக்கென இருந்த அம்மா இப்ப ஏன்
நாட்டுக்கு வருது.அது தப்பு. என் ஒட்டு
நாட்டுக்குன்னு புரட்சித் தலைவர் அறிமுகம் செய்த
ஜெயலலிதா அவர்களுக்குத் தான் எனது ஆதரவு "
என்கிறார்

இந்த சுதந்திரம் வந்ததைக் கூட பல வருடம்
கழித்துத் தெரிந்து கொண்ட ஒரு பகுதியான
ஒரு உள்காட்டுக் கிராமத்தில்,

புரட்சித் தலைவரின் மானசீகச் செய்தியாக
புரிந்து வைத்திருந்த விதம்
அந்த நிருபரை மட்டுமல்ல அவரை அனுப்பி வைத்த
பத்திரிக்கை ஆசிரியருக்கும் மிகுந்த
ஆச்சரியத்தை அளித்தது

பின் அதை அந்தப் பத்திரிக்கையில் மக்கள்
கருத்தாக இதைப் பதிவு செய்திருந்தார்

பின்னர் உண்மையில் தமிழகத்தின் கருத்தாக அந்த
உள்காட்டுப் பகுதியைச் சார்ந்த வயதான
பெண்மணியின் கருத்தே வெளிப்பட்டது

அதே சூழல்தான் இன்றும். புரட்சித்தலைவி
அவர்கள் மிகக் கடினமான காலக்கட்டங்களில்
தான் முற்றிலும் நம்பத் தக்க நபராக
வைத்திருந்தது இன்றைய முதல்வர்
.ஓ.பன்னீர்செல்வம் அவர்களைத்தான்

உயிர்த் தோழியாக, உற்ற தோழியாக
வைத்திருந்த சசிகலா அம்மையார் அவர்களை
கட்சியை விட்டு நீக்கிய பின் பின்னர்
தன் இல்லத்தில் சேர்த்துக் கொண்டாரே ஒழிய

அவருக்கோ அன்று அவரது பூத உடலை
சுற்றிக் காத்து நின்றிருந்த அவரின் உறவினர்
யாருக்குமோ கட்சியில் எந்தப் பதவியும் கடைசிவரைத்
தரவில்லை என்பது அனைவரும் அறிந்ததே

அப்போதைப் போலவே ஏற்கென்வே புரட்சித்
தலைவியால் பதவி பெற்றவர்கள் பதவியைத்
தக்கவைத்துக் கொள்ளும் விதமாக அன்றைய
பதவியாளர்களைப்போல இன்று முடிவு எடுக்கலாம்

ஆனால் நிச்சயம் மீண்டும் மக்களைச் சந்திக்க
நேர்கையில் அவர்கள் மோசமான முடிவினைத் தான்
சந்திக்க வேண்டியிருக்கும்

ஏனெனில் மக்களுக்கும், கட்சியின் அடிமட்டத்
தொண்டர்களுக்கும் புரட்சித் தலைவியின்
மானசீகச் செய்தி ....

அன்று புரட்சித் தலைவரின் மானசீகச் செய்தியாக
பதிவு செய்யப்பட்டிருந்ததைப் போலவே

இப்போதும் திட்டவட்டமாய் பதிந்து உள்ளது

இதை வருங்காலம் நிச்சயம் உறுதி செய்யும்

Sunday, December 11, 2016

வாணி...வா நீ

நாவும் மனமும் இனிக்க
நவின்று மகிழ்ந்துச் சுகிக்க
ஊரும் நாடும் என்னை
உச்சி மோந்து இரசிக்க
பேரும் புகழும் நிழலாய்
விடாது என்னைத் தொடர
நூறு கவிகள் நாளும்
பாட வேணும் நானும்

நாளும் கண்டு இரசித்த
அழகுக் கோலம் எல்லாம்
நாளும் உணர்ந்துத் திளைத்த
நல்ல உணர்வு எல்லாம்
நீளும் எனது கவியில்
இயல்பாய் இணையும் வண்ணம்
நாளும் கவிகள் நூறு
நவில வேண்டும் நானே

கற்றுத் தேர்ந்தோர் உறவில்
கிடைத்தக் கேள்வி ஞானம்
குட்டுப் பட்டு நாளும்
கற்ற உண்மை ஞானம்
முற்றும் விடுதல் இன்றி
முழுமை பெற்ற தாக
நித்தம் நூறு கவிதை
படைக்க வேண்டும் நானே

வெள்ள நீரைப் போல
விரைந்து பெருகும் வண்ணம்
உள்ளம் தன்னில் கவிதை
பொங்கிப் பெருகும் வண்ணம்
வெள்ளைப் பூவில் அமர்ந்து
வீணை மீட்டும் வாணி !
எந்த னுள்ளும் அமர்ந்து
அருளைப் பொழிய வா நீ !

Saturday, December 10, 2016

கவியாகிப் போகிறது உணர்வு...

குவளை நீரில்
பால் கலக்க
மெல்ல மெல்ல
நிறம் மாறிப் போகிறது நீர்
பாலாகிப் போகிறது நீர்

இருளில்
ஒளிகலக்க
மெல்ல மெல்ல
ஒளியாகிப் போகிறது இருள்
பகலாகிப் போகிறது இரவு

மண்ணுக்குள்
விதை கலக்க
மெல்ல மெல்ல
நிலை மாறிப் போகிறது விதை
பயிராகிப் போகிறது விதை

உணர்வுக்குள்
சிந்தனை கலக்க
மெல்ல மெல்ல
கனமாகிப் போகிறது உணர்வு
கவியாகிப் போகிறது உணர்வு

Friday, December 9, 2016

கூடுதல் கவனமாய் ...

கனத்தச் சொற்களைக் கையாள்வதில்
கவனமாய்  இருக்க வேண்டியிருக்கிறது

வாதாடுகையில்
கோபமாய் இருக்கையில் மட்டுமின்றி
கவிதை புனைகையிலும்
கவனமாகவே இருக்க வேண்டியிருக்கிறது

கனத்தச் சொற்கள்
வாதத்தின் போக்கை
கோபத்தின் காரணத்தை
மடை மாற்றிவிடுதலைப்போலவே

கவிதையிலும் கன த்தச் சொற்கள்
தன் மீது கூடுதல் கவனம் ஈர்த்து
கவிதையின் உள்ளார்ந்த பொருளை
உணரவிடாதுச் செய்து போவதால்...

படைப்பின் நோக்கத்தைப்
பாழாக்கிப் போவதால்..

கனத்தச் சொற்கள் விஷயத்தில்
கொஞ்சம் கூடுதல்
கவனமாகவே இருக்க வேண்டி இருக்கிறது

சமையலில்
கூடுதலாகிப் போன
உப்போ காரமோ
தன் இருப்பைக் காட்டி
சமையலின் தரத்தைக்
குறைத்து விடுவதைப் போலவும்

அணிவகுப்பில்
தன்னை பிரதானப்படுத்த எண்ணி
விரைந்துச் செயல்படுபவன்
அணியின் கம்பீரத்தை
அசிங்கப்படுத்தி விடுவதைப் போலவும்

கவிதையும்
பாழாகிவிடாதிருக்க அவசியம்
கனத்தச் சொற்கள் விஷயத்தில்
படைப்பாளிகள் எப்போதும்
கூடுதல் கவனமாகவே இருக்கவேண்டி இருக்கிறது

Thursday, December 8, 2016

2000/500 ரூபாய் நோட்டின் அவலம்

ஒருமுறை ஊழல் குறித்து மூதறிஞர்
இராஜாஜி அவர்கள் சொன்னதாக ஒரு
கட்டுரைப் படித்த ஞாபகம்
அது இந்த அர்த்தத்தில் இருக்கும்

அரசு எந்த ஒரு திட்டத்தை நிறைவேற்றினாலும்
அதற்கு அரசு நிர்வாகத்தில் பல அடுக்குகளின்
துணையுடன்தான் நிறைவேற்ற முடிகிறது
அவ்வாறு பல அடுக்குகளைத்தாண்டி பயனாளிகளைச்
சேருகையில் அதன் பலன் மிகக் குறுகிப் போகிறது

உதாரணமாக ஒரு பெரிய ஐஸ் கட்டியை பத்துபேர்
கைமாற்றிக் கொடுக்கையில் கடைசியாக உள்ள
நபருக்கு அது போய்ச் சேருகையில் பாதிக்கும்
குறைவான அளவில்தான் போய்ச்சேருகிறது

வெளிச்சூட்டுக்கு ஐஸ் கட்டிக் குறைவதைத்
தவிர்க்க இயலாது. அப்படிக் குறைவதும்
கொஞ்சமாகத்தான் இருக்கும்

ஆனால் கை மாற்றிக் கொடுக்கையில் அவரவர்
கைச்சூட்டுக்குக் குறைவதுதான் ரொம்ப அதிகம்
ஏனெனில் அவர்கள் கைச் சூடு ரொம்ப
அதிகம் என்றார்

அந்த அளவில் எந்த திட்டத்தையும் செயலாற்றும்
அதிகாரிகள் எல்லாம் ஊழல் பேர்வழிகளாக இருந்தால்
நிச்சயமாக நாம் செயல்படுத்தும் திட்டம்
எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்
என்பதற்கு இந்த ரூபாய் நோட்டு விவகாரம்
ஒரு நல்ல உதாரணம்

சமீப நாட்களாக மக்கள் எல்லாம் ஏடிஎம் மையங்களில்
வங்கி வாசல்களில் காத்துக் காத்து நோக

அவர்கள் பணத்தைப்பெறவே ஏதோ அரசிடம்
இனாம் பணம் வாங்க
நிற்பதைப்போல்அவதிப்பட....

கோடிக்கோடியாய் புதிய நோட்டுக்கள்
பெரும் செல்வந்தர்களிடம் இருந்து சிக்குவது
எப்படி என்பதுதான் இப்போது உள்ளப் பெரிய பிரச்சனை

நோட்டில் உள்ள எண்களை வைத்து நிச்சயம்
மத்திய வங்கியிலிருந்து எந்த வங்கிக்கு அனுப்பப்பட்டது
என்பதை மிக எளிதாக் கண்டுப்பிடிக்கவும்
உடன் நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு அதிகம்
உள்ள சூழலில்..

வெறுமனே வங்கி அதிகாரிகள் கைது எனச் சால்ஜாப்புச்
சொல்லாமல் அரசின் மிகப் பெரும் திட்டத்தை
செல்லாக்காசாக்குகிற இதுபோன்ற அவலம்
தொடராமல்இருக்கவேண்டுமானால்
உடன் இது போன்றுப்பிடிபடும் வங்கி அதிகார்களை
குண்டர் சட்டம் போல  ஒரு கடுமையான
சட்டப்பிரிவின் கீழ் ஜாமீனில்  வெளிவர
முடியாதபடி கைது செய்ய வேண்டும்

மிக கடுமையான நடவடிக்கை இருக்கும் என்கிற
அச்சம் இல்லையெனில் இந்த அவலம் நிச்சயம்
தொடரத்தான் செய்யும் என்பதோடு அல்லாமல்

இதற்கு அரசு சம்பந்தப்பட்ட்டவர்களின் தொடர்பு
இருக்குமோ என் மக்கள் சந்தேகப் படவும் வாய்ப்புண்டு

அப்படி அவர்கள் சந்தேகப்பட்டால்
அந்தச் சந்தேகத்தை தவறு என நினைக்க முடியாமல்
போகக் கூடும்

அரசு இதை கவனிக்குமா அல்லது கொம்பை விட்டு
வாலைப்பிடித்தலையும் கோமாளிகள் போல
பிரச்சனை உள்ள இடம் விட்டு வேறு எங்கு எங்கோ
இப்போது போல தேடி அலையுமா ?

இதே நிலை தொடருமாய் ஐம்பது என்ன
ஐநூறு நாள் ஆனாலும் இந்தப் பிரச்சனை இப்படித்தான்
தொடரும்

ஊதுகிற சங்கை  ஊதிவிட்டோம்

பார்ப்போம்...

Tuesday, December 6, 2016

உன் பெயர் டிஸம்பரா ? இல்லையினி பீடை தானா ?

"தை "க்கு முன் வரும்
மார்கழி மாதம்
பீடை என்பது போல்

ஜனவரிக்கு முன் வரும்
டிஸம்பரே
 நீயும் பீடை தானா  ?

உனக்கும் தமிழகத்திற்கும்
அப்படியென்ன ஒரு தீராப்பகை ?

தமிழ்த் தலைவர்களின் மீது
அப்படியொருக் கொலைவெறி ?

சுனாமியென வந்து
கடற்கரை மக்களை
கொத்துக் கொத்தாய்
கொன்று போட்டுப் போவதும்...

புயல் சூறாவளியென
பொங்கி எழுந்து
மீண்டு எழமுடியாதபடி
சேதம் விளைவிவித்துப் போவதும்...

டிஸம்பரே
உனக்கும் தமிழகத்திற்கும்
அப்படியென்ன தீராப்பகை ?

மூதறிஞர் என நாங்கள்
கொண்டாடிய இராஜியை

பகுத்தறிவுப் பகலவயாய்
ஒளிர்ந்த எங்கள் பெரியாரை..

ஏழைப் பங்காளனாய்த் திகழந்த
எங்கள் புரட்சித்தலைவனை

அனைவருக்கும் அன்னையாய் உயர்ந்த
எங்கள் புரட்சித்தலைவியை

அரசியல் சாணக்கியனாய் ஒளிர்ந்த
எங்கள் அன்பு சோ .இராமசாமியை

கள்வனைப் போல்
ஒளிந்திருந்து உன் மாதத்தில்
காவு கேட்கும் கொடுமை ஏன் ?

டிஸம்பரே
உனக்கு தமிழினத் தலைவர்கள் மீது
அப்படியென்ன ஒரு கொலைவெறி ?

ஒன்றைப் புரிந்து கொள்
உன்னால் இவர்களது
உயிரைத்தான் கவர இயலும்

சிகரம் தொட்ட
இவர்களது புகழை
இம்மியும் குறைக்க இயலாது

மாறாக இனியும் உன்
கொடும்செயல்கள்
இதுபோல்  தொடருமாயின்...

மார்கழியைப் பீடையென்று
மங்களங்கள் ஒழித்தது போல்
உன்பெயரை இனி
"பீடை மாதம் "என மாற்றி
உன்  செறுக்கை ஒழித்திடுவோம்

டிஸம்பரே
உன் பெயர் டிஸம்பரா ?
இல்லையினி பீடை தானா ?
இனி உன் செயல்கள்  மூலம்
இதை நீயே முடிவு செய்து கொள்

Monday, December 5, 2016

சென்று வா எங்கள் அன்புச் சகோதரி

மகம் ஜெகம் ஆளும் என்னும்  
ஆன்றோரின் வாக்கினுக்கு
ஒரு நிரூபனமாய் விளங்கிய
அற்புதமே அதிசயமே

படுத்துக் கொண்டே
ஜெயிப்பது என்கிற சொற்றோடர்
ஒரு வறட்டுவாக்கியமாய் இருந்ததை
நிஜமாக்கிக் காட்டிய
தமிழகத்து ஜான்ஸியே

நீ கொண்ட உச்சங்கள் எதுவும்
தங்கத் தட்டில் வைத்து
உனக்குப்
பரிசாகக் கொடுக்கப்பட்டதில்லை

பெண்ணாக இந்த உச்சம்தொட
நீ பட்டத் துயரங்கள்
இவ்வுலகில் எப்பெண்ணும்
இதுவரைப் பட்டதில்லை

உன் மீது இருந்த துரும்பினை
தூண் என்றார்கள்
உன் மீது விழுந்த அணுகுண்டை
மலர்ச் செண்டு என்றார்கள்

இரண்டடையும்
துச்செமென மதித்துக்
கடந்து சென்ற
தங்கத் தலைவியே

புராண நிகழ்வுகளின் எச்சமாய்
ஒரு சட்டசபை
கௌரவர் சபையாய்
தன் கொடூர முகம்காட்டி
கொக்கரித்தபோது
சினந்து புலியாய் நீ
சீறிவந்தக் காட்சி....

சனாதன ஆசாமிகள்
பிற்படுத்தப்பட்டவன் என்பதாலேயே
திறமையானவனை
ஒதுக்கிவைத்ததைப் போலவே

போலிப் பகுத்தறிவு ஆசாமிகள்
முற்படுத்தப்பட்டவள் என்பதாலேயே உன்னை
ஒதுக்க முயன்றபோது
நெருப்பில் பூத்த மலராய் நீ
வென்று நின்ற காட்சி...

காலப்பெட்டக்கத்தில்
ஜொலிக்கின்ற வைரங்கள்
வைடூரியங்கள்
சரித்திரப்புத்தகங்களில்
தங்க முத்திரைக் கொண்டு
தகதகக்கும் பக்கங்கள்

விழிமூடுகையில்
மனம் கொள்ளும் வைராக்கியங்கள்
உடலோடு போவதில்லை
ஆன்மாவோடு தொடர்ந்து
அடுத்த ஜென்மமெடுக்கும் என்பதை
நாங்கள் சொல்லி நீ
அறிய வேண்டிய நிலையிலில்லை

கோடிக் கோடியாய்
மதம் கடந்து இனம்கடந்து
மக்கள் செய்யும் பிரார்த்தனைகள்
நிச்சயம் வீணானதில்லை

அதனை மறுக்கும் அதிகாரம்
நியதிப்படி இயங்கும் இறைவனுக்கும்
இல்லையென்பதை
இயற்கையும் மறுப்பதில்லை

பதினேழாம் நூற்றாண்டில்
ராணி மங்கம்மாவாக

பதினெட்டாம் நூற்றாண்டில்
வேலு நாச்சியாராக

பத்தொன்பதாம் நூற்றாண்டில்
தில்லையாடி மணியம்மையாக

அவதரித்த நீயே

இந்த நூற்றாண்டில்
புரட்சித் தலைவியாய்
அவதரித்திருக்கிறாய் என்பதில்
எங்களுக்கு எள்ளளவும்
சந்தேகமில்லை

தமிழக அடித்தட்டு மக்களின்
வாழ்வை உன்னதமாக்குவதிலேயே
உண்மைமகிழ்ச்சிக் கொண்ட
அன்னையே

உன் வாழ்வை அர்ப்பணித்த
அம்மாவே

உன்னால் நிச்சயம்
சொர்க்கத்தில் வீணே ஓய்வெடுக்க இயலாது

மறுபிறப்பெடுத்து
தமிழகத்திலேயே
நிச்சயம் அவதரிப்பாய்
என்பதிலும் எங்களுக்கு
எள்ளளவும் சந்தேகமில்லை

அதுவரை
எங்கள் தலைமுறை
உன் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும்

பிறவிப்பெருங்கடனை
உன்னதமாய் முடித்த
எங்கள் அன்புச் சகோதரியே

மனம் நிறைந்த சோகத்துடனும்
நீர் நிறைந்த கண்களுடனும்
உனக்குப் பிரியா விடை தருகிறோம்

சென்று வா எங்கள்
அன்புச் சகோதரி

Sunday, December 4, 2016

இயற்கையதன் சுகம்யாவும் யாவருக்கும் வசமாகும்

மலரோடு உறவாடி
மகிழ்வோடு வலம்போகும்
நிலவோடு உறவாட
நினைவெல்லாம் பூமணக்கும்

கரையோடு தினம்கூடி
களிப்போடு சதிராடும்
அலையோடு நினைவோட
நுரைபொங்கும் மனமெங்கும்

மலையரசன் உடல்தழுவி
மதிமயங்கித் தரைநழுவும்
குளிரருவி நிலையுணர
மனமாகும் குற்றாலம்

தண்மலரைக் கூடிமனக்
களிப்போடு உலாப் போகும்
வண்டினத்தின் சுகமறிய
மனம்கொள்ளும் ரீங்காரம்

இயற்கையுடன் இணைந்துவிடும்
இளம்மனது வாய்த்துவிட்டால்
இயற்கையதன் சுகம்யாவும்
யாவருக்கும் வசமாகும்

Saturday, December 3, 2016

பெரும் புயல் போற்றுதும்....பெரும் புயல் போற்றுதும்...

முன்பெல்லாம்
மழைக்காலங்களில் தவறாது
மழை பொழிந்தது
அதனால்
புயல் மழை என்பது
வில்லனைப் போலத் தெரிந்தது
தந்தியைப் போல
பயமுறுத்துவதாய் இருந்தது

இப்போதெல்லாம்
மழைக்காலத்தில் தவறியும்
மழை பொழிவதில்லை
அதனால்
புயல்மழை ஒன்றே
வரம் போலப் படுகிறது
இப்படிச் சிறப்புக்
கவிதையும் பெறுகிறது

என்ன செய்வது
முன்பு
மாமழைப் போற்றுதும்
மாமழைப் போற்றுதும்
எனக் கவி புனைந்த நாம்

இனி
பெரும் புயல் போற்றுதும்
பெரும் புயல் போற்றுதும்
எனப்பாடி மகிழ்வோம்

சூழலைக் கெடுத்தேனும்
சுகம் காணத் துடிக்கும் நமக்கு
வேறு ஏது வழி ?
இது தானே கதி

சுகப்பிரசவ சுகம்வேண்டி........

எதிர்பாராது
நாவில் தித்திப்பாய்
ஒரு வார்த்தை
நர்த்தனமாடி
இப்போதே
என்னை அரங்கேற்று என்கும்

சட்டென
உள்மனதில்
ஓர் உணர்வு
நிர்வானமாய் நின்று
உடனடியாய்
எனக்கு ஆடை அணிவி என்கும்

திடீரென
அடிமனதில்
ஒரு இராகம்
சுயம்புவாய்த் தோன்றி
மிகச் சரியாய்
எனக்கு வடிவு  கொடு என்கும்

சில நொடியில்
இமை இடுக்கில்
ஒரு நிகழ்வு
காட்சியாய் விரிந்து
அப்படியே
என்னைக் காட்சிப் படுத்து என்கும்

வார்த்தையா
உணர்வா
இராகமா
நிகழ்வா
எது சரிவரும்
நான் குழம்பித் தவிக்கையில்

உள்ளுணர்வு
"கண்டுகொள்ளாது விட்டுவிடு
வலுவுள்ளது ஜெயிக்கட்டும்"என்கும்

வழக்கம்போல்
சுமையும் வலியும்
தாங்கும் அளவைத் தாண்டினும்
இமைமூடித்
தாங்கிக்கொண்டிருக்கிறேன்
சுகப்பிரசவ சுகம்வேண்டி...

Thursday, December 1, 2016

வெல்லுதலுன் நோக்கமெனில் உள்ளமதில் இதைக்கொள்...

அழகைச் சொன்னதைவிட
அழகாகச் சொன்னதும்
புரிந்ததைச் சொன்னதைவிட
புரியச் சொன்னதும்
நல்லதைச் சொன்னதைவிட
நன்றாகச் சொன்னதும்
நிலை பெறும் உலகிது
நினைவினில் இது கொள்

உள்ளத்தைச் சொன்னதை விட
உள்ளதுபோல் சொன்னதும்
உண்மையைச் சொன்னதைவிட
உண்மைபோல் சொன்னதும்
பயனுறச் சொன்னதைவிட
நயமுறச் சொன்னதும்
வென்றிடும் உலகிது
நெஞ்சினில்    இதைக் கொள்

சொல்வதைப் பொருத்தன்றி
சொல்பவனைப் பொருத்தும்
நல்லதனைப் பொருத்தன்றி
வெல்வதனைப் பொருத்தும்
நிலைமாறும் நிறம்மாறும்
கலையறிந்த  உலகமிது
நிலைத்திட  நினைக்கினில்
நினைவினில்  இதைக்கொள்

மின்னுவதெல்லாம் பொன்னல்ல
என்கிற சொலவடை
மின்னுவதொன்றே  பொன்னென
முற்றாக  மாறி
காலம் வெகுவாகிவிட்டது
ஞாலம் குணம் மாறிவிட்டது
வெல்லுதலுன் நோக்கமெனில்
உள்ளமதில் இதைக்கொள்