Tuesday, May 31, 2016

கறிக்கடை வாசல் ஆடு

வாகனம் விட்டு இறங்கியதும்
சப்தமாய் கதறியபடி
வீட்டிக்குள் ஓடுபவர்கள்...

வாகனம் விட்டு இறங்கியதும்
வாசலில் அமர்ந்திருப்பவர்களிடம்
விசாரித்துவிட்டுப் பின்
சாவதானமாய் உள் நுழைபவர்கள்

அடுத்து ஆகவேண்டியதைக்
கவனிக்கும் முகத்தான்
ஆட்களை மௌனமாய் ஏவியபடி
அலைந்து கொண்டிருப்பவர்கள்
.......................................
..............................................

துக்கம் விசாரித்த பின்
அந்த வீட்டு வாசலில் அமர்ந்து
இவை அனைத்தையும்
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்

சாவுக்கும் எனக்கும் சம்பந்தம்
இல்லாதவனைப் போலவும்

சாவு வீட்டுக்கு மட்டும்
சம்பந்தப்பட்டவனைப் போலவும்...

எல்லாம் முடிந்துத்
திரும்பும் வழியில்
ஒரு கறிக்கடை வாசலில்
கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது

குடல் கேட்டபடியும்
சுவரொட்டிக் கேட்டபடியும்
மூளைக் கேட்டபடியும்....

அந்தக் கறிக் கடை வாசலில்
கட்டப்பட்டிருந்த ஆடு
இவை அனைத்தையும்
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது

கறிக்கும் தனக்கும் சம்பந்தம்
இல்லாததைப் போலவும்

கறிக்கடைக்கு மட்டும்தான்
சம்பந்தப்பட்டதைப் போலவும்...

Monday, May 30, 2016

நீயும் கவியில் மன்னர் தானே

வானக் கடலில் பறவை ஒன்று
சிறகை விரித்து நீந்தும்-அதைக்
காண மனதில் பொங்கும் மகிழ்வு
கவியாய் மாற ஏங்கும்

மௌன மொழியில் மலரை அணைத்து
நிலவு கதைகள் பேசும்-அந்தக்
காமக் கதைகள் கேட்க நெஞ்சில்
கவிதை புயலாய்ச் சீறும்

பருவ உணர்வில் முதிர்ந்த நாற்று
தலையைத் தாழ்த்தி நாணும்-அதை
அறிந்த எந்த இளமை நெஞ்சும்
புதிய சந்தம் தேடும்

மலையைத் தடவி  மகிழ்ந்த அருவி
மண்ணில் வெட்கி ஓடும்-அந்த
அழகை ரசிக்க  மனதில் கவிகள்
அருவி போலப்  பாயும்

கரையைத் தழுவி முத்தம் ஈந்து
அலைகள் மயங்கித் திரும்பும் -அதன்
நிலையை உணர்ந்தால் கவிதைப பூக்கள்
நெஞ்சில் தானே அரும்பும்

உலகில் காணும் காட்சி யாவும்
கவிதைக் கோலம் தானே -இதை
உணர்ந்து கொண்டால் போதும் நீயும் 
கவியில்  மன்னர் தானே

Sunday, May 29, 2016

சம நிலை மகாத்மியம்

சம நிலையது  தவறுகையில்தான்
 எல்லாம்
தாறுமாறாய்ப் போய்த் தொலைக்கிறது

யாருக்காக யாரை இழப்பதில்
என்கிற குழப்பத்தில்
இழக்கக் கூடாதவரை இழந்து
இழக்கவேண்டியவரை
இழுத்து அணைத்துக் கொள்வதில் ...

எதனை எதற்காக இழப்பது
என்கிற குழப்பத்தில்
இழக்கக் கூடாததை இழந்து
இழக்கவேண்டியதை
இழுத்துப் பிடித்துக் கொள்வதில்

போதையில்
 காமப்பசியில்
கோபத்தில்
பதவி மோகத்தில்
அதிகார ஆணவத்தில் 

சம நிலையது  தவறும் சாத்தியக் கூறுகள்
மிக மிக அதிகம் என்பதால்..

சம நிலை தவறுகையில்தான் எல்லாம்
தாறுமாறாகத்தான் போய்த்
தொலைக்கிறது என்பதால்

சம நிலை தவறச் செய்பவைகளைக்
தள்ளியே வைக்கப் பழகுவோம்

சம நிலைப்  பராமரிப்புக்  கூட
ஒர்வகையில்
சவ நிலை அனைய தவ நிலையென   
உணர்ந்துத்  தெளிந்து   உய்வோம்

Saturday, May 28, 2016

சூட்சுமக் கோடே லெட்சுமணக் கோடு

கஞ்சத்தனத்திற்கும்
சிக்கனத்திற்கும் இடையில்
தாராளத்திற்கும்
ஊதாரித்தனத்திற்கும் இடையில்

பழக்கத்திற்கும்
நட்புக்கும் இடையில்
நட்புக்கும்
காதலுக்கும் இடையில்

விளக்கதிற்கும்
விவாதத்திற்கும் இடையில்
விவாதத்திற்கும்
பகைமைக்கும் இடையில்

வேண்டுதலுக்கும்
கோரிக்கைக்கும் இடையில்
கோரிக்கைக்கும்
போராட்டத்திற்கும் இடையில்

பொறுமைக்கும்
சகிப்பினுக்கு இடையில்
சகிப்பினுக்கும்
வெறுப்பினுக்கும் இடையில்

எதிர்பார்ப்பிற்கும்
ஆசைக்கும் இடையில்
ஆசைக்கும்
வெறித்தனத்திற்கும் இடையில்

அனுபவ உரைக்கும்
அறவுரைக்கும் இடையில்
அறவுரைக்கும்
அறிவுரைக்கும் இடையில்
.....................................
...........................................
மொத்தத்தில்

சிவப்புக்கும்
பச்சைக்கும் இடையில்
மஞ்சளாய் எச்சரிக்கும்
ஒரு சூட்சுமக் கோடே
லெட்சுமணக் கோடு

அதைக்
காணத் தெரிந்தவனுக்கு
கண்டுத் தெளிந்தவனுக்கு
அதன் பலம் அறிந்தவனுக்கு
என்றும் இல்லை கேடு

Thursday, May 26, 2016

தேர்தல்--- யுத்தக் களமல்ல

பழிக்குப் பழி
இரத்தம் முண்டம்
அழிவு சீரழிவு
தொடரும் வன்மம்
இவைகளுக்குப் பின்
பெறுகிற வெற்றியினை
உயர்வாகக் கொள்ளுதல்
யுத்தத்  தர்மம்

இதில் தோற்பவர்கள்
அழிவது அல்லது
அழிக்கப்படுவது
ஒப்புக்கொள்ளப்பட்ட  நீதி

தேர்தல் களம்
யுத்தக்  களமல்ல
அது விளையாட்டு மைதானம்

பயிற்சி
முயற்சி
முறையான அணுகல்
மகிழ்ச்சி ஆரவாரம்
இவைகளோடுப்  பெறுகிற
வெற்றியினை
அடித்தளமாய்க் கொண்டது
தேர்தல் களம்

இதில் வெற்றிக்கொடி நட்டவர்கள்
தோற்பதுவும்
தோற்பவர்கள் தொடர்ந்து முயன்று
வெல்லுவதும்
அங்கீகரிக்கப்பட்ட நடைமுறை

விளையாட்டு மைதானத்தை
யுத்தக் களமாக் க விழையும்
சமூகக் காரணிகள் விஷயத்தில்
விழிப்போடுக்  கவனமாய்  இருப்போம்
 இந்தத் தேர்தலைப் போலவே

மேம்பட்டப் பார்வையாளர்களாய்
நாமும் இந்த  உன்னத
ஜனநாயக விளையாட்டில்
அதன் தரத்தை மேம்படுத்துவோம்
இந்தத் தேர்தலைப் போலவே  

Wednesday, May 25, 2016

அரசியல் நாகரீகம்

பச்சைத் தன்மை
துளியுமின்றி
பட்டுப்போய் நிற்கும் மரமாய்

அரசியல் நாகரீகத்திற்கும்
தமிழகத்திற்கும்
ஏழாம் பொருத்தமே
என்று இருந்த வேளையில்

வரிசை முக்கியமில்லை என
ஜனநாயகக் கடமையாற்ற
வந்தமர்ந்திருந்த
எதிர்கட்சித்தலைவரின்
பெருந்தன்மையும்

கவனத்திற்கு வராததால்
நேர்ந்த தவறென்றும்
ஒருங்கிணைந்து  பணியாற்றவே
விருப்பம் எனத் தெரிவித்த
முதல்வரின் விளக்கமும்

கொஞ்சம் நம்பிக்கையூட்டிப் போகிறது

பார்ப்போம்

Tuesday, May 24, 2016

இணைத்துக் கொள்வதில் உள்ள சுகம்

நான் விழிக்கும் முன்பே
கதிரவன் விழித்துத் தன் ஒளிக்கரங்களால்
உலகை அணைக்கத் துவங்கியிருந்தான்

தோட்டத்துப் பூக்களும்
மலர்ந்து சிரித்து மணம் பரப்பி
சூழலை ரம்மியமாக்கி கொண்டிருந்தன

சின்னஞ் சிறு பறவைகளும்
கூடுவிட்டுக் வெளிக் கிளம்பி
சந்தோஷக் குரலெழுப்பித் திரிந்தன

இவையெல்லாம்
அவைகளில் இயல்பு
இயற்கையின் நியதி என
எண்ணித் திரிந்தவரை
எனக்கும் அவைகளுக்குமான உறவு
அன்னியமாகத்தான் இருந்தது

கதிரவனின்
அதிகாலை விழிப்புக் கூட
என் தூக்கம் கலைத்து
என்னை விழிக்கச் செய்யத்தான்
என புரிந்தது முதல்

மலர்கள் சிரித்து மகிழ்ந்து
மணம் பரப்புதல் கூட
என்னைக் கவரத்தான்
என அறிந்தது முதல்

பறவைகளின்
சந்தோஷப் பாடலும்
உற்சாகப் பவனியும் கூட
எனக்குள் அதை விதைக்கத்தான் என
உணர்ந்து கொண்டது முதல்

"உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக " எனச் சொன்ன
கவிஞனின் உள்ளத்துணர்வு மட்டுமல்ல

விலகி நின்று ரசிப்பதை விட
இயைந்து போவதிலும
இணைத்துக் கொள்வதிலும் உள்ள
உண்மையான சுகம்
மெல்ல மெல்ல புரியத்தான் செய்கிறது

Sunday, May 22, 2016

எரிக்கும் பசி தேடச் செய்து விடும்

"எப்படி உன்னால்
தினமொருப்  படைப்பைத்
தர முடிகிறது

அதற்காக  விஷயம்
எப்படித் தினந்தோரும்
கிடைத்து விடுகிறது  "
ஆச்சரியப்படுகிறான் நண்பன்

"எப்படி உனக்கு
மூன்று நேரமும்
உண்ண முடிகிறது

அதற்கான உணவும்
எப்படித் தினமும்
கிடைத்து விடுகிறது"
என்கிறேன் சிரித்தபடி

"உணவு கிடைப்பது
பெரிய விஷயமில்லை
எரிக்கும் பசி எப்படியும்
தேடச் செய்து விடும்
தேடிக்  கொடுத்து  விடும் "  என்கிறான்

"அதே அதே 
பசியை மட்டும்
பராமரித்தால் போதும்  "என்கிறேன்
மிக்க மகிழ்வுடன்

கேள்வி எழுப்பியவனே
நல்ல பதிலையும்
கொடுத்த திருப்தியுடன்

அவன் முகத்திலும்
மகிழ்வும்  திருப்தியும்
படரத் துவங்குகிறது


   

வாழ்க "குடி" அரசு வாழ்க "குடி" மக்கள்

புரட்சித் தலைவியின்
மக்களால் நான் மக்களுக்காக நான்"
என்னும் பிரச்சாரத்தின் உறுதி
நம்மை உருக வைத்துவிட்டது

வாக்குக் காணிக்கைகளை
வரையின்றிச் செலுத்திவிட்டோம்

இப்போது
வாக்குறுதியை நிறைவேற்றும்
நிலையில் அவர்கள்
பெறும் நிலையில் நாம்

நிதிப்பெருக்கமின்றி
இது எப்படிச் சாத்தியம் ?

நம்மால் ஆன அரசை
நமக்கான அரசைத்
தவிக்க விடலாமா?

அரசுக்காக நாம்
நம்மாலானதைச்
செய்யவேண்டாமா ?

இனி
சாவு வீடுகளில்
சந்தோஷ தருணங்களில்
குடித்து மகிழ்வோர்
வார இறுதியிலும் முயல்வோம்

"வார இறுதிக்காரர் "
இனி தினம் குடிக்க முயல்வோம்

இப்படியே
கட்டிங் விடுத்து குவாட்டராய்
குவாட்டர் ஆஃப்பாய்
ஆஃப் ஃபுல்லாய்
கொஞ்சம் கொஞ்சமாய்
கூட்ட முயல்வோம்

நிதித் தேவை முடிந்ததும்
அரசும்
"படிப்படியாய்"
செய்ய வேண்டியதைச் செய்யும்

நாமும்
சக்தியுள்ளோர்
 "படிப்படியாய்"
சம நிலை அடைவோம்

சக்தியற்றோர்
"படிப்படியாய்  "
சவ நிலை அடைவோம் 

ஆம்
மே 23 முதல்

"மக்களால் நான்
மக்களுக்கான நான்" என்பதை
அவர்கள் செயல்படுத்தத் துவங்க

நாமும்
நம்மால் அரசு
அரசுக்காக நாம் " என்பதை
நிரூபிக்கத் துவங்குவோம்

வாழ்க "குடி" அரசு
வாழ்க "குடி" மக்கள்

Saturday, May 21, 2016

மயக்கும் கோடை மழை மாலை

மழை அழகு
கோடை மழை
பேரழகு
கோடை மழை மாலை
பெரும்பேரழகு

பார்ப்போருக்கு நனையாதபடி
ஆயினும் மிகச் சரியாய்
நனையும்படியான வாயிற்படியில்
பேத்தியும் நானும்..
அவள் பாட்டிக்குப் பயந்தபடி

நீண்ட வெள்ளி ஊசியாய்ப்  பொழியும்
மென் சாரலை
நெளித்து உடைத்துப் போகும்
குளிர்காற்று
எம் இருவரையும்  மெல்லச் சீண்டி
இரசித்துக் கடக்கிறது

நாங்களும் இமை இறுக்கிப்
பற்கள் கடித்துப்
பயந்தது போல்
நடுங்கிச் சிரிக்கிறோம்

சுவரோரம்
நனைந்து நடுங்கி நின்ற
சிட்டுக்குருவி
மெல்லப் பறக்க எத்தனிக்கிறது

நான் ஆறுதலாய்ச்  சப்தமாய்
"நாங்கள் சைவம் தான்
பயப்படாமல் இரு " என்கிறேன்
சிறுபிள்ளைத்தனமாய்

" அதுக்குத் தமிழ் தெரியுமா
லூஸ் தாத்தா " என
தலையில் அடித்துக் கொள்கிறாள் பேத்தி
பெரியமனிதத்தனமாய்

பேசியது புரிந்ததாலோ
தாங்க முடியாததாலோ
எங்களை நோக்கி மெல்ல நகருகிறது
மொத்தமாய் நனைந்த
அந்த அழகுக் குருவி

நாங்கள் சந்தோஷத்தில்
இன்னும் சப்தமாய்ச் சிரிக்கிறோம்

எங்களுக்குப் போட்டியாய்
மழையும்  வலுக்கத் துவங்குகிறது

நிச்சயமாக

மழை தான்
அழகு

கோடை மழை தான்
பேரழகு

கோடை மழை மாலை தான்
பெரும்பேரழகு

Thursday, May 19, 2016

தேர்தல்--ஒரு நுணுக்கப்பார்வை

செத்தவனுக்கு ஜாதகம் பார்ப்பதும்
தோற்றதற்குக் காரணம் பார்ப்பதும்
எந்தப் பலனையும் தரப்போவதில்லை என்பது
நிஜம்தான் ஆயினும் கூட.

சில சந்தேக மரணங்களுக்கு உடல் பரிசோதனை
பல சந்தேகங்களை தீர்க்கும் என்கிற வகையிலும்
அடுத்து அதுபோல் நேராமல் இருக்க வழிவகுக்கும்
என்கிற வகையிலும் இந்த தேர்தல் முடிவுகள்
குறித்து கொஞ்சம் நுணுக்கமாகப் பார்க்கையில்
ஒரு விஷயம் புரிந்தது

குழந்தைக்கு வான வேடிக்கை காட்டுவது போல்
காட்டி நைஸாக சங்கிலியை லவட்டுகிற
மாதிரி, பீ டீம் என மக்கள் நலக் கூட்டணியைச்
சொல்லி அது ஓட்டைப் பிரிப்பதற்காகவே
ஏற்படுத்தப்பட்டக் கூட்டணி என எல்லோரும்
பிரச்சாரம் செய்து கொண்டிருக்க , நாமும்
அனைவரும் நம்பிக் கொண்டிருக்க,

உண்மையாகவே  புதிதாகச் சேர்க்கப்பட்ட
வாக்காளர்கள் மத்தியில் அவர்களைக்
குழப்பும் நோக்கில், அந்த  வாக்காளர்களே
மிகச் சிறிய எண்ணிக்கையாயினும்
முடிவு மாறக்  காரணமாய் இருப்பார்கள்
என்கிற வகையில்

எல்லா கட்சிகளும் மோசம்
புதிய சிந்தனை புதிய பாதை
என்கிற சாக்கில் மிகச் சாதுர்யமாக
சீமான் அவர்களை வைத்து ஆளும் கட்சி
செய்த திருவிளையாடலே  திராவிட
முன்னேற்றக் கழகம் பெரும்பான்மை பெறாமல்
போனதற்குக் காரணம் என்றால் அது மிகையில்லை

ஏனெனில் புதிதாக இணைக்கப்பட்ட
இளம் வயதினர் நிச்சயமாக அ.இ.அ.தி.மு.க விற்கு
ஓட்டளிக்க வாய்ப்பே இல்லை

விஜயகாந்தும்.வை.கோ அவர்களும் மீம்சில்
பட்டபாடு அவர்கள் மீது அவர்களுக்கு
பூரண நம்பிக்கையில்லை என்பதையே
தெளிவாக்க காட்டியது

அதை விடுத்தால் அவர்களுக்கு
ஸ்டாலின் அவர்களே நம்பிக்கையூட்டக் கூடியவாராய்
இருந்தார் ( கலைஞர் நிச்சயம்  இல்லை
அன்புமணி அவர்கள் அந்த ஓட்டைக் கவரவே
நடை உடை பாவனைகளில் அதிகம் முயன்றாலும்
பா.மா.க மீது பூசப்பட்டிருக்கும் ஜாதிச் சாயம்
அவர்களை ஒட்ட விடவில்லை )

யாரும் மிகக் கவனம் கொள்ளாத அந்தப்
பகுதியை மிகக் கவனமாகக் கையாளும் விதமாக
ஆளும் கட்சி செய்த திருவிளையாடலே
நாம்தமிழர் கட்சியின் தனித்த போட்டி

அவர்கள் கணக்கு சரியாக வந்தது
என்பதற்கு கீழ்க்குறித்த தேர்தல் முடிவுகளே
அத்தாட்சி )

மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில்
திராவிட முன்னேற்றக் கழகம் வாய்ப்பிழந்த
கீழ்க்குறித்த தொகுதிகளில் நான் தமிழர் கட்சிப்
பெற்ற வாக்குகள் இருந்தாலே தி. மு. க
வென்றிருக்கும்

1 ) ஆவடி 2 )பெரம்பூர் 3 )விருகம்பக்கம்

4 )திருப்போரூர் 5)கிணத்துக்கடவு 6 )கரூர்

7 )காட்டுமன்னார் கோவில் 8 )பேராவூரணி

9 )கோவில்பட்டி 10 )ஒட்ட்டப்பிடாரம்

11 )தென்காசி  (காங் ) 12 )ராதாபுரம் 13 ) சிவகாசி

இன்னும் கொஞ்சம் கவனமாகக் கணித்தால்

13 )மதுரவாயல்  14 )மொடக்குறிச்சி

15 ) சிதம்பரம்

உண்மையாக பழம் தின்னவர் தமிழரின்
தன்மான வுணர்வினைத் தட்டி எழுப்புவதாக
நாடகம் போட்ட சீமான் தான்

கொட்டையைத் தின்னவர்கள் தான்
பாவம் மக்கள் நலக் கூட்டணியினர்

(அலசல் தொடரும் )

தேர்தல் அலசல்-- முடிவுக்குப் பின்

ஜெயித்தால் மக்கள் அரசியல்    
தெளிவு பெற்றுவிட்டார்கள்
தோற்றால் மதுவுக்கும் பணத்திற்கும்
அடிமையாகி விட்டார்கள் எனப் பேசுவது
ஒருவகையில் போதையில் பிதற்றுவதைப்
போலத்தான்

ஓட்டுப்போடாதவர்களுக்கு முதல்வராக
அவர்களது சர்வ அதிகாரப்போக்கு
மிகத் துரிதமாக செயல்படவேண்டிய நேரத்தில்
செயலின்மை,எதிர்காலம் குறித்த நீண்ட நோக்கில்
திட்டமிடாது ஓட்டுக்கான குறுகிய நோக்கில்
திட்டமிடுதல் செயல்படுதல்,அரசு நிர்வாகத்தில்
வெளிப்படைத்தன்மை இன்மை,
மது விற்பனைப் பெருக்கதின் மூலமே அரசை
நிர்வகிக்க முயல்வது போன்ற பல
காரணங்கள் இருந்தாலும்

இதையும் மீறி கலைஞருக்குப் பதில்
இவரே தேவலாம எனச் சொல்லும்படியாக
பெரும்பாலான மக்களுக்கு ஒரு எண்ணம்
இருப்பதே இந்தத் தேர்தலின் முடிவாக
எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது

ம. ந. கூட்டணி  சோதனை முயற்சியாக
மாற்று அரசியலுக்கு முயன்றது கூட
நல்ல முயற்சிதான்

ஆனாலும் கூட கூட்டணியின் ஒருங்கிணப்பாளராக
வை. கோ செயல்பட்டவிதம், முதல்வர் வேட்பாளரான்
விஜயகாந்த அவர்கள் நடந்து கொண்ட விதம்
மக்களுக்கு அந்த அணியின் மீது நம்பிக்கை
ஏற்படுத்தவில்லை என்பதையே
இந்தத் தேர்தல்  முடிவுகள்
திட்டவட்டமாகக் காட்டிவிட்டது

சீமான் தன் பலம் அறியாது
கொஞ்சம் ஓவராகக் கூவி விட்டார்

மருத்துவர் அன்புமணி அவர்களின் தேர்தல்
அறிக்கைகளும்  பிரச்சாரங்களும்
கொஞ்சம் கவனிக்கும்படியாக இருந்தது
என்றாலும் அவர் கட்சியின் மீது
விழுந்துள்ள ஜாதிப் பூச்சைக் கடக்க
இன்னும் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும்

நிச்சயமாக தி. மு. க பொறுப்பான
எதிர்க்கட்சியாகத் திகழும்

அதற்காகத்தானே மக்கள் இத்தனை
அதிக இடங்களைக் கொடுத்துள்ளார்கள்

வென்றவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்

Wednesday, May 18, 2016

தேர்தல்... கிழக்கில் ஒளி

"வரப்புயர "
எனச் சொல்லிப் பின்
அதன் காரணமாய்
நீர் உயரும்
நெல் உயரும்
குடி உயரும்
கோன் உயரும்
எனச் சொன்ன
ஔவையைப் போல்

"மது ஒழிய "
நிச்சயம்
அதன் காரணமாய்
மடி ஒழியும்
மடிமை ஒழியும்
மடமை ஒழியும்
மிடிமை ஒழியும்

அதற்காகவேனும்
அதற்காக மட்டுமேனும்

அடர்ந்த இருள்
இன்றோடு
விலகி ஒழியட்டும்

கிழக்கில் ஒளி
மெல்ல எழுந்துப்
படர்ந்து விரியட்டும்

( மடி--நோய்,,மடிமை ..சோம்பல்
மடமை  ..அறியாமை
மிடிமை...வறுமை
வார்த்தைகளுடன் சிநேகம்
கொள்ளும் நோக்குடனும் )

Tuesday, May 17, 2016

ஓட்டுக்காக வாக்களித்து ஒய்யாரமாய் பதவியேற்கும்.....

மெல்லப் பணிவாய் நுழைந்து
பின் மென்னியை பிடிக்கும்
சாகசப் பிசாஸை

குடல் கருக விட்டு
மெல்ல உடல் கருக வைக்கும்
மாய அரக்கனை

தவறென்ற மனச்சாட்சியை
மெல்ல மெல்ல நிறம்மாற்றும்
மாய மோகினியை

திரவமாய் உட்புகுந்து
நெருப்பாய் உருமாறும்
கொள்ளிவாய்ப் பிசாஸை

இலைஅகற்றி கிளைவெட்டி
"படிப்படியாச்" சாய்த்தலென்பது
கனவு விருந்து

வேரறுத்து வென்னீர் ஊற்றி
"உடன் "அடியோடழித்தலே
வீரிய மருந்து

நண்பனுக்காகத் துவங்கி
தனியாகக் குடிக்கும்
 "குடி " அடிமையாயினும்

ஓட்டுக்காக வாக்களித்து
ஒய்யாரமாய் பதவியேற்கும்
"எந்த " அரசாயினும்

மனதில் இதை ஏற்றலே
"உய்யும் " வழிமட்டுமல்ல
நிலைக்கும் வழியும் கூட

Monday, May 16, 2016

தேர்தல்...... ஒரு மொய்க்கணக்கு

இருபது பேருக்கு ஒருவர் என்கிற கணக்கில்
பணம் பட்டுவாடாவை
கட்சிதமாய்
ஒரு கட்சி செய்தது
உலகிற்கே தெரிந்தது

பாவம் தேர்தல் கமிஷன்

கொடுப்பவனும் பெறுபவனும்
கூட்டணி வைத்திருக்கையில்
அது என்ன செய்ய இயலும் ?

வடிவேலுவை மிஞ்சும் வகையில்
மீம்ஸுக்கு தீனி கொடுத்த
"கேப்டன்"
கடைசி ஒருவாரம்
நார்மலாய் இருந்தது
ஆச்சரியமளித்தது

இது முதலில் இருந்து
இருந்திருக்குமானால்
இன்னும் சில தொகுதிகள் கிடைக்க
வாய்ப்பிருந்திருக்கும்.

தொண்டன் நிதானமிழக்கலாம்
தலைவன் நிதானம் இழப்பின்
தோல்வி நிச்சயம்

உலக அரசியல் பேசும் வை. கோ
அதை அறிந்திராதது
ம. ந. கூ, யின் துரதிஷ்டம்

நல்லவேளை
விவசாயிகளைக் கவர
தலையில் பச்சைத் துண்டு கட்டியவர்

இளைஞர்களைக் கவர
பர்முடாஸ் போடாதது
நம் அதிர்ஷ்டம்

சிம்லாச் சூழலில் தானிருந்து
ஊட்டிச் சூழலில்
வேட்பாளர்களை வைத்து
பாலையில் மக்களை வைத்து
" தாய்க்குத் தான் தெரியும் "
என வசனம் பேசியது
உட்சபட்சக் கொடூரம்

அப்படியும்
பெரும்பாலோர்  வாக்களித்திருக்கும்
தன்மையது புரிந்துத்  தெளிய
ஒரு திறந்த மனம் வேண்டும்

இனியேனும்
உப்பரிகையிலிருந்து
வீதி அளத்தல் விட  வேண்டும்

தோழர்கள் இனியெனும்
பிறர் முதுகு தேடி
காத்திருக்கும் நேரத்தில்
கொஞ்சம்
நடைப்பயிற்சிப் போய்
கால்களுக்கு
வலுவேற்ற முயற்சிக்கலாம்

ஒரு வேட்டி காய
பத்து நிமிடம் எனில்
பத்து வேட்டி காய
நூறு நிமிடமென்னும்
சதவீதக் கணக்கை நம்பும்
முட்டாள்தனைத்தை இனியேனும்
விட்டுத் தொலைக்கலாம்

புத்திசாலித்தனான
கூடுதல் செலவிலான
விளம்பர யுக்திகளுக்கோ

அவர்கள்  மீது கொண்ட
அவர்கள்  சொன்ன
சலுகைகள் மீது கொண்ட
ஈர்ப்பினாலோ அவர் களுக்கு
அதிக ஆதரவென்பதில்லை

எல்லாம்
மனக் கசப்பில் மாறி விழுந்தவை
என்பதை மட்டும் மறவாதிருந்தால்
உதய சூரியனின்
வெற்றிப் பயணம் தொடரும்

இல்லையேல்
அடுத்ததுஅவர்களும்
"அஸ்தமனத்தைச் சந்திப்பதைத் தவிர
வேறு வழி இல்லை


(பெரிய கவர்களை பிரித்து
எண்ணி இருக்கிறேன். சிறு கவர்களை
இனி பிரிக்க உத்தேசம்
உங்கள் மொய்க்கணக்கையும் பதியலாமே
ஆவலுடன் எதிர்பார்த்து )

Sunday, May 15, 2016

தேர்தல்...டுவல்த் ஹவர்

நிகழ்காலச் சிறுதுளிக்கு
நெஞ்சமது மடங்குமெனில்
எதிர்காலம் பாலையாகும்
நிச்சயமாய் எனப்புரிந்து

ஜாதிமதச் சகதியிலே
சறுக்கிவிழ நேருமெனில்
நாதியற்றுப் போகும்நம்
சந்ததிகள் என்றறிந்து

காசுபண ஆசையிலே
கணம்மயங்க நேருமெனில்
ஏதுமற்றுப் போகும்நம்
எதிர்காலம் என்றுணர்ந்து

ஐந்துநொடி நேரத்திலே
அறிவிழக்க நேருமெனில்
ஐந்துவருட நரகமுண்டு
தப்பாது எனத்தெளிந்து

போரதற்குச் செல்லுகின்ற
மன்னவனின் தெளிவோடு
சாவடியை நோக்கிப்போ
சரியான முடிவோடு

வரலாறு ஆகவேணும்
மேமாதம் பதினாறு
தவறாது வாக்களித்துத்
தமிழகத்தைச் சீராக்கு

Saturday, May 14, 2016

தேர்தல் முடிவு- சார்பு அற்றக் கணிப்பு

செய்தி என்பதற்கு ஆங்கிலத்தில்
நியூஸ் ( NEWS ) என்பதை நான்கு திசைகளில்
நடக்கும் நிகழ்வுகளைத்
தொகுத்துத் தருவதுதான் என்பார்கள்.

இப்போது செய்தித்தாள்கள் எவையும்
அப்படிக் கிடைகிற செய்திகளைக் கிடைக்கிறபடி
அப்படியே தொகுத்துத் தருவதில்லை .
மாறாக தன் கருத்தை(VIEWS )
அதில் லேசாகத் திணித்து சரியாகத் தருவதுபோல்
பாவனைதான் செய்கிறார்கள்

அதைப் போலத்தான் தேர்தல் காலங்களில்
கருத்துக் கணிப்பு என்கிற பெயரில் தங்கள்
கருத்துத் திணிப்பைத்தான் செய்கிறார்களே ஒழிய
நிஜமான மக்கள் கருத்தைத் தொகுத்துத்
தருவதில்லை

இதற்கு தொலைக் காட்சி நிறுவனங்களும்
விதி விலக்கானவைகள் இல்லை

அவர்கள் பின்னால் தேர்தல் முடிவுகள்
தங்கள் கணிப்புக்கு மாறுபட்டு இருப்பின்
தப்பித்துக் கொள்ளும்படியாக, முடிவு
சொல்லாதவர்கள்,குழப்பத்தில் உள்ளவர்கள்,
இன்னும் முடிவு எடுக்கவில்லை என்பவர்கள்
எனும்படியாக அதில் குறிப்பிட்ட சதவீதத்தினரை
வேண்டுமென்றே சேர்த்து வைத்திருப்பார்கள்

நாளை அந்த சதவீதத்தை எந்த  ஜெயித்த
பக்கம் சேர்த்தாலும்  நிச்சயம்
அவர்கள் கணித்தது மிகச் சரி என்பதைப்
போல்தான் இருக்கும்

( கடைசியாக வந்த கருத்துக் கணிப்பில் கூட
இழுபறி எண்ணிக்கை   75 )

எனவே அவைகளை வைத்து நாம்
முடிவு எடுக்க வேண்டியதில்லை

எந்தத் கணிப்பையும் சாராது
எந்த மத ஜாதி அபிமானத்திலும் சாராது
மிகக் குறிப்பாக பணத்திற்கு விலைபோகாது
நம் மனம் கட்சிகளையும் , தலைவர்களையும்
கணித்தபடி வாக்களிப்போம்

நம் கணிப்பே மிகச் சரியானக்  கணிப்பாக
இருக்கும்

நிச்சயம் அந்தக் கட்சியே வெல்லும்
அதுவே ஆட்சி பீடமும் ஏறும்

வாழ்த்துக்களுடன்....

Wednesday, May 11, 2016

நூல் வெளியீட்டு விழா...

தொடர்ந்து  எழுதுவது காரணமா ,வயதா
எளிமையாக பு ரியும்படியாக எழுதுவதா
காரணம் எதுவெனத் தெரியவில்லை

ஆனாலும்கூட  வலைத்தளப் பதிவர்கள்
தங்கள் மதிப்புமிக்கப படைப்புகளை
நூலாக வெளியிடும்போது என்னுடைய
வாழ்த்துரையினையோ  ,அணிந்துரையினையோ
பெற்று வெளியிடுவது தொடர்கிறது

 அந்த வகையில்  இது ஆறாவது
அணிந்துரை என நினைக்கிறேன்

கவிஞர்  ரூபன் அவர்கள்  சிறந்த கவிஞர் ,
மனித நேயச் செம்மல் , ஊற்று இலக்கிய மன்ற
ஸ்தாபகர் பொறுப்பாளர் ,அவருடைய
"ஆயுதப் பூ " சிறுகதைத் தொகுப்பு
இலங்கையில் வருகிற மே  25 இல்
வெளியிடப்பட உள்ளது

அந்த அற்புதமான நூலுக்கு  நான் எழுதிய
வாழ்த்துரையை  இங்கு பதிவு செய்வதோடு
அந்த நூல் வெளியீட்டு  விழா    மிகச் சிறப்பாக
நடைபெறவும் ,நண்பர் ,கவிஞர் , ரூபன் அவர்களின்
இலக்கிய சேவையும்,எழுத்துப் பணியும்
சிகரம் தொடவும் , தொடர்ந்து சிகரத்திலேயே
நிலைக்கவும் மனமார்ந்த என் நல்வாழ்த்துக்களைப்
பதிவு செய்வதில்  மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்

வாழ்த்துக்களுடன்





ரூபன் என்பது காரணப் பெயர் என்பது 
வலையில் இவரது புகைப்படம் பார்த்து 
நான் எண்ணி இருந்தேன்

அவரது கவிதைகளையும் அதற்கான
 பாடு பொருளையும் வலையில்
படித்து இளகிய மனதுக்குச் சொந்தக்காரார் 
என்கிறமுடிவில்  இருந்தேன்

சுற்றுலாவாக மலேசியாவில் நேரடியாகச் 
சந்தித்த போதுதான்,அவர் அதிரூபன் எனவும்
எத்தனை விசால மனதுக்குச் சொந்தக்காரர்
எனவும் புரிந்து கொள்ளமுடிந்தது

பொருள் ஈட்டும் முகத்தான் இலங்கைவிட்டு
மலேசியாவில் பணி புரிந்து வந்தாலும் கூட
தமிழ்மொழியின் பாற்கொண்ட வற்றாத 
தாகத்தால் மோகத்தால்,சிறந்த கவிஞராய்த்  
தன்னை நிலை நிறுத்திக் கொண்டதோடு 
அல்லாது,உலக அளவில் தன் 
சொந்தப் பொறுப்பில், கவிதை போட்டிகள்
நடத்தி பரிசுகளும் சான்றிதழ்களும்  தொடர்ந்து
வழங்கி வருவதோடு, அதன் தொடர்ச்சியாய்
ஊற்று என்கிற ஒரு இலக்கிய மன்றத்தைத் 
துவக்கிஅதை இன்னும் சிறப்பாகச் 
செய்து வருவதும் தமிழ்கூறும் நல்லுலகம் 
என்றும் போற்றி மகிழக் தக்கது

கவிஞர் ரூபன் அவர்களின் படைப்புகள்  
புத்தகமாக வெளிவருவது மிக்க மகிழ்வளிக்கிறது

சிறப்பின் காரணமாக எல்லை கடந்த
ரூபனின் படைப்புகள், 
அந்தச் சிறப்பின் காரணமாகவே
காலமும் கடக்கும் என்பதை இங்கு பதிவு
செய்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்

வாழ்த்துக்களுடன்
தார்த்தக் கவி. யாதோரமணி

Tuesday, May 10, 2016

தேர்தல்---வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க எளிதான வழிமுறை

உள்ளதில்
நல்லதாக நான்கு ஐந்தைத்
தேர்ந்தெடுத்து வைத்து
பின் அவைகளில்
ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் முறை
ஜவுளிக்கும் நகைக்கும்தான்
சரிப்பட்டு வரும்

ஏனெனில்
கடையில் நம் பார்வைக்கு
வைக்கப்பட்டுள்ள எல்லாமே
நல்லவையே சிறந்தவையே

வேட்பாளர் தேர்வுக்கு
இந்த முறை சரிப்பட்டு வராது

வேட்பாளர்களில்
மிக மோசமானவரை முதலிலும்
அடுத்து மோசமானவரை அடுத்து எனவும்
வரிசையாக கழிக்கக்
கடைசியில் மிஞ்சும்
சுமார் மோசமானவரையே
நாம் தேர்ந்தெடுக்கவேண்டும்

ஏனெனில்
தேர்தலில் போட்டியிடுபவர்கள்
யாராகிலும் எந்த விதத்திலாவது
குறையுடனிருக்கவே
நிச்சயம் சாத்தியம்

ஏனெனில் ஜனநாயக அமைப்பு  அப்படி ?

இதில் நல்லவர்களைத்
தேர்வு செய்யும் வாய்ப்பை விட
சுமார் மோசமானவர்களைத் தேர்ந்தெடுக்கவே
நமக்கு வாய்ப்பு அதிகம்

ஏனெனில் நம் ஊரின் நிலைமை அப்படி

மே 16 இல்

இயன்றவரை வேட்பாளரைச் சரியாக நிறுத்து

தவறாது ஓட்டளித்து ஜனநாயகம் காப்போம்

தேர்தல்-----சில உண்மைகள்

 1 )ஆட்சியில் இருந்த கட்சிகள் மீதுதான் ஊழலும்
     ஊழல் குற்றச்சாட்டுகளும் இருக்கச் சாத்தியம்

   எனவே ஆட்சியில் இல்லாதவர்கள் புனிதமானவர்கள்
   எனக் கொள்ளச் சாத்தியம் இல்லை

2 ) எந்தக் கட்சியும் செலவழிக்க வசதி அற்றவரையோ
   தொகுதியில் குறைந்த எண்ணிக்கையில் உள்ள
   ஜாதிக்காரர்களையோ போட்டியில் நிறுத்துவதில்லை

   எனவே எந்தக் கட்சியும் ஜாதி மத உணர்வு அற்றது
   என எண்ண வேண்டியதில்லை

3 ) வீட்டிற்கு வெளியில் அரசு செய்ய வேண்டியது
   நிறைய இருக்க, அதற்குத்தான் அரசு என்பதே இருக்க
   வீட்டிற்குத் தேவையான இலவசங்கள்
   தருகிற சொல்கிற எந்தக் கட்சியும் மதிக்கத் தக்கதல்ல

   எனவே ஓட்டளிக்க அதை ஒரு காரணமாகக் கொள்ள
   வேண்டியதில்லை

4 ) மக்களின் எண்ணத்தையும்,தேவைகளையும் மிகச்
   சரியாக எந்தக் கட்சியும் பிரதிபலிக்காமல்
   போவதற்கான காரணமே
   குடும்ப அரசியிலும்,வாரீசு அரசியலுமே

   எனவே எந்தக் கட்சி ஆயினும்,
   குடும்ப உறுப்பினர் எனில்
   வாரீசுகள் எனில் தேர்ந்தெடுக்கத் தயங்குவோம்

5 ) ஏற்கென்வே வென்று தொகுதிக்கு நன்மை
    ஏதும் செய்யாதவர் மீண்டும் வென்று திருந்தி
    நனமைச் செய்யச் சாத்தியமே இல்லை

   எனவே அப்படிப்பட்டவர் எவருமிருப்பின் நிச்சயம்
   அவரைப் புறக்கணிப்போம்

6 ) ஜெயிக்க வாய்ப்பு இருக்கிற கட்சிக்கு
     ஓட்டளிக்க வேண்டும் இல்லையெனில்
     நம் ஓட்டு வீண் என்பதெல்லாம் பம்மாத்துப்
    பிரச்சாரம்

   அதற்காகத்தான் கருத்துக் கணிப்பு
   மாய்மாலம் எல்லாம்

   இந்தத் தேர்தலில் அதிகச் சதவீதம் பெறுகிறக் கட்சி
   நிச்சயம் அடுத்த முறை பிற கட்சிகளால்
   கவனிக்கவும் படும்

   மிகச் சரியாக தன் அரசியல் நடவடிக் கையைத்
  தொடருமாயின் நிச்சயம் அடுத்த முறை
  வெல்லவும் வாய்ப்பு இருக்கும்

   அரசியலே மோசம், போட்டி இடுபவர்கள் எல்லாம்
   மோசம் என ஓட்டளிக்காது இருந்து விட்டுப்
   பின்  வியாக்கியானங்கள் செய்பவர்கள்
  கொஞ்சம் அதிகம் படித்தவர்களும் நடுத்தர ,மற்றும்
   உயர்தர மக்களுமே.

   அந்த இருபது சதவீதம் நிச்சயம் முடிவைத்
   தலைகீழாக்கும் சாத்தியம் அதிகமே.
  அதற்கு டெல்லியே  நல்ல உதாரணம்

  மேலும் இம்முறை புதிய இளைஞர்களின்
 வாக்குகள் நிச்சயம் ஊழல் அரசியல் வாதிகளுக்கோ
.ஜாதி மத அரசியல் வாதிகளுக்கோ
  போக நிச்சயம் சாத்தியமில்லை

  கட்சி வாக்களர்களை மீறி, நடு நிலையாளர்களின்
 வாக்குகள் இந்தத் தேர்தலில் முடிவினைத்
  தீர்மானிக்கும்படியாக 100 % வாக்களிக்க முயல்வோம்

  நல்லதே நிச்சயம் நடக்கும்.

 நம்பிக்கையுடன் வாக்களிப்போம்

Monday, May 9, 2016

அரசியல் வாதிகள் மடையர்களா ?இல்லை நாம் தான் அப்படியா ?

அரசியல் வாதிகள் எல்லாம்
செவிடர்களா ?
இல்லை மடையர்களா ?

இல்லை நாம் தான் அப்படியா ?

"கல்வியில் கொள்ளையை ஒழியுங்கள்
கல்விக் கொள்கையை மாற்றுங்கள் "
என்றால்

கல்விக் கடன் தருகிறோம்
கல்விக் கடனைத் தள்ளுபடி செய்கிறோம் "
என்கிறார்கள்

வேலைக்கு உத்திரவாதம் தாருங்கள்
வேலை வாய்ப்பைப் பெருக்குங்கள்
என்றால்

வேலைபெறாதோருக்கு உதவித் தொகை
வேலையற்றோரின் கடன் தள்ளுபடி
என்கிறார்கள்

நீர் நிலைகளைப் பராமரியுங்கள்
நீ ஆதாரத்தைப் பெருக்குங்கள்
என்றால்

பத்து ரூபாய்க்குக் குடி நீர்
கடல் நீரிலிருந்து குடி நீர்
என்கிறார்கள்

சாலைகளைச் சீர்ப்படுத்துங்கள்
சாலைப் போக்குவரத்தை  மேம்படுத்துங்கள்
என்றால்

வாகனத்திற்கு மானியம்
பஸ் கட்டணச் சலுகை
என்கிறார்கள்

மது விலக்கை  அமல்படுத்துங்கள்
மதுக் கடைகளை மூடுங்கள்
என்றால்

பெண்களுக்கு நிவாரணம்
தாலிக்குத் தங்கம்
என்கிறார்கள்
......................................
................................................

நிஜமாகவே
நம் கோரிக்கைகள் அவர்கள்
காதுகளில் மாறித்தான்  விழுகிறதா
அல்லது
நம்மையெல்லாம் பார்க்க
மடையர்களாய்த் தெரிகிறதா ?

இனியும் ஏமாற மாட்டோம் என
நாம் சொல்லும் நாள்
மே 16

நமக்கான அரசை நாம்
தேர்ந்தெடுக்கும் நாள்
மே 16

மறக்காது வாக்களிப்போம் வாரீர் ! !
நம் பலத்தை நிரூபிப்போம் வாரீர் ! !

Sunday, May 8, 2016

பாடையில் பணம், செத்த வீட்டில் சுடுகாட்டில் பணம் பட்டுவாடா

ஒரு நல்ல பேச்சாளரை பேச்சாளராகவே
வைத்திருக்காதுத்
தலைவராகக் கொண்டாடியதால்தான்

கட்சியில் பிளவு எனச் சொல்லத்  தக்க அளவு
பெரும்போலோர் அவர் பின் வந்தும்
அவர்களைத் தங்கவைத்துக் கொள்ள இயலாது
இன்று மிகச் சிலருடன் கட்சி நடத்தும்
வை. கோ அவர்கள்


ஒருங்கிணைப்பாளர் என மக்கள் நலக் கூட்டணிச்
சொல்ல இப்போது தினம் அந்த வேலையையும்
ஒழுங்காகப் பார்க்காது.....

ஆயிரம் கோடி ஐநூறு கோடி பேரம்,
கண்டெய்னரில் கோடிக் கோடியாய்ப் பணம்
கலைஞரின் பூர்வீகத் தொழில்,
ரேசன் கடையில் பட்டுவாடா என

தினம் தினம் பேப்பரில் பெயர் வரவேண்டும்
என்பதற்காக ஒரு கமர்சியல் கதாசிரியரைப்போல
மூன்றாம்தரப் பேச்சாளரைப் போல
தினம் ஒரு கதை விட்டுக் கொண்டிருக்கிறார்

அவருக்கு உதவும் விதமாக
வித்தியாசமாக உங்களுக்கு ஏதும் ஐடியா
தோன்றினால் சொல்லலாம்

நிஜமாய் இருக்கவேண்டும் என அவசியமில்லை
பொய்யை நம்ப வைக்கவேண்டுமெனில் அதில்
கொஞ்சம் உண்மை இருக்கவேண்டுமென்பது போல
கொஞ்சம் " இருக்கலாமோ " என எண்ணும்படியாய்
ஒரு இடம் பொருள்  இருந்தால் போதும்

எனக்கொரு யோசனை தோன்றுகிறது

இன்னும் அனைவரும் அவரைக் கவனிக்க வேண்டுமெனில்
பாடையில் பணம், செத்த வீட்டில்
சுடுகாட்டில் பணம் பட்டுவாடா எனச் சொல்லலாம்

இரண்டு நாள் கழித்து
உண்மையில் செத்ததாகச் சொன்னவர்
சாகவே இல்லை, சுடுகாட்டில் இரண்டு நாளில்
எந்தப் பிணமும் எரிக்கப் படவில்லை
இதோ ஆதாரம் என போடோவைக் காட்டலாம்

அதன் மூலம் இன்னும் இரண்டு நாள்
மக்கள் அவரை நினைக்கும்படியாகச் செய்யலாம்

அவருக்காக  என் ஐடியா  எப்படி ?

Saturday, May 7, 2016

மே 16 இல் தமிழகத்தின் விடியலுக்கு.....

சமூக அக்கறைக் கொண்ட
சில அமைப்புகள் மட்டும்
குடிக்கெதிராய்ப்
போராடிக் கொண்டிருக்க

குடியால்
குடும்பமே
சீரழிவது குறித்துப்
பெண்கள் மட்டுமே
தவித்துக் கொண்டிருக்க

குடித்துப் பழகிய
பெருங் கூட்டத்தின்
பேரமைதி
 பயமுறுத்துவதாய் இருக்கிறது

கூடவே
 குடியின் தீமைகள்  குறித்து
தம் தொண்டர்களுக்கு
அறிவுறுத்தாத தலைமை "களின்
 "கெட்டிக்காரத்தனமும்.

"படிப்படியாய்  "என்பது
குடிகாரர்களுக்கு
இப்போது இல்லை என்ற
சந்தோசமளிக்கும்
சமிக்கையோ என்றும்

சலுகைகளும்
இலவசங்களும்
" துயரில் அழுதிடும்
பெண்களுக்குத் தருகிறக்
"குச்சிமிட்டாயாய் "
இருக்கலாமோ என்றும்

மிக லேசாய்
மனதில் ஒருஎண்ணம் பரவ
மனம் மிகப் படபடக்கிறது
என்ன செய்யப் போகிறோம் ?

மே 16 இல்
தமிழகத்தின்
விடியலுக்கு
வித்திடப் போகிறோமா ?

இல்லை
அஸ்தமனத்திற்குத்தான்
மீண்டும்
ஆரத்தி எடுக்கப் போகிறோமா?

Thursday, May 5, 2016

மடங்கிய விரல்களே நிஜம் காட்டுகிறது...

வெள்ளையன்
கொள்ளையன்
அவனை விரட்டினால்
பாலும் தேனும் ஓடும்
என்றார்கள்

இப்போது நீருக்கே
திண்டாடுகிறோம்

தொழிற்புரட்சிக்குப் பின்
உற்பத்திப் பெருக்கத்தில்
எல்லாருக்கும் எல்லாம்
எளிதாய்க் கிடைக்கும் என்றார்கள்

வேட்டியிலிருந்து
கோவணத்திற்கு வந்து விட்டோம்

பசுமைப் புரட்சியில்
விளைச்சல் பெருக்கத்தில்
தன்னிறைவு
அடைந்துவிட்டோம் என்றார்கள்

கருப்பை கெட்டதைப்போல்
நிலம் விஷமானதே மிச்சம்

வெண்மைப் புரட்சியில்
பால் உற்பத்தியில்
உலகில் நாம்தான்
முன்னணி என்றார்கள்

மாட்டுத் தீவனமே
குதிரைக் கொம்பாகிப் போனது

ஜனநாயகமே
சிறந்த அரசியல் நெறி
தேர்தலே அதற்கு
அச்சாணி என்றார்கள்

தேர்தலில் சர்வாதிகளையே
தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறோம்

பிள்ளையார்ப் பிடிக்க
குரங்கான கதையாய்
எல்லாமே மாறுபட
காரணம் எதுவாயிருக்கும் ?

சுட்டுவிரல் எதை எதையோ சுட்ட
மடங்கிய  மூன்று விரல்களே
நிஜம் காட்டுகிறது

Wednesday, May 4, 2016

அக்னி நட்சத்திரம் ?

"சித்திரைப் பின் ஏழு
வைகாசி முன் ஏழு
அக்னி நட்சத்திரம்

சூரிய பகவான்
அனலாய் தகிப்பான்
இதில் மாற்றம் இருக்காது  "
என்கிறான் ஆன்மீகவாதி

"விஞ்ஞானத்தின்படி
அக்னி நட்சத்திரம்
என ஏதும் இல்லை

அந்த நாட்களில்
கூடுதல் வெட்பம் இருக்கும்
இதில் மாற்றம் இருக்காது"
என்கிறான் பகுத்தறிவுவாதி

"ஆண்டவனின்
ஆணைக்குட்பட்டதே
பிரபஞ்ச இயக்கம்
அவன் வைத்ததே விதி"
என்கிறான் ஆன்மீகவாதி

"பிரபஞ்ச இயக்கம்
ஒரு விதியின் படியே
தொடர்கிறது
அந்த விதி ஆண்டவனில்லை"
என்கிறான பகுத்தறிவு வாதி

வாதங்கள்  முடியாது
காலம் காலமாய்த்
தொடர்ந்து கொண்டிருக்கிறது

அக்னி நட்சத்திரமும்
காலம் காலமாய்
விடாது தொடர்தலைப் போலவே

Tuesday, May 3, 2016

அவன் பிரம்மனாக மாறத் துவங்குகிறான்

மெல்லத்  தலைத் தூக்கும்
 தன் முனைப்பினை
முற்றிலும் களை ந்து
அவன் அவனை
மிகச் சரியாய் அறியும் விதமாய்...

மெல்லக்
கிளர்ந்து
முன் பின் நகர்ந்து
முற்றிலும் திரும்பி
கறையற்ற அந்த
ஆடியில் அவனை இரசிக்க

அவனுக்கு அவன்
இரசிக்கத் தக்க
அழகனாகவே  விரிகிறான்

"இந்தச்  சுய இரசிப்பில்
உயர்ந்தவனை விட
வீழ்ந்தவனே அதிகம்  "
என்னும்  ஒரு சிறு முனகல்
அவனுள்
மெல்லத் தலைக்காட்ட

உக்கிரமாய்
ஒரு  எதிர்க்குரல்

"நீ காவியத் தாயின்
இளைய மகன்
காதல் பெண்களின்
பெருந்தலைவன்
நீ நிரந்தரமானவன்
உனக்கு  என்றும் அழிவே இல்லை

 இதனை    நீயே உணராது
உலகினை
உணரவைத்தல்
எங்ஙனம்   சாத்தியம் ? "
என மிரட்ட

மொட்டவிழும்
வித்தியா கர்வம்
மெல்ல மெல்ல வளர்ந்துப் பெருகி
மனம் மொத்தமும்
ஆக்கிரமித்து  அவனை
மற்றொரு நிலைக்குக் கடத்திப் போகிறது

உருவற்றதாயினும்
காற்றின் இசைக்கு
பல உருவம் ஏந்தும் மேகமாய்..

சக்கையான
வார்த்தைகள்
அவன் உணர்வுகளின்
இசைக்கேற்ப
மெல்ல மெல்ல
உயிர்   கொள்ளத் துவங்க

"படைப்பதனால்  என் பேர் இறைவன் "
எனும்  அமுத வாக்கியம்
அவனே  அறியாது
அவனுள் கருவாகிச் சிரிக்கிறது 

அவன்   பிரம்மனாக மாறத் துவங்குகிறான்  
         

Monday, May 2, 2016

அழகுத்தமிழ் வார்த்தைகள்.....

அசைவற்றச்   சவத்துக்கு
இனியும்
மாலையாகி
வாடிச் சாக மனமில்லை
என முகம் சுழித்தது....

மயக்கும் மனம் கொண்ட
அந்த அழகிய மலர்கள்

வெற்று உருவுக்கு
இனியும்
மெருகூட்டி
என்தரம் இழக்க மனமில்லை
என ஒதுங்கத் துவங்கியது....

தன் அளவில்
தனித்துவம் கொண்ட வண்ணங்கள்

சுடும் பாலையில்
இனியும்
பொழிந்து
பயனற்றுப் போக மனமில்லை
எனக் கடக்க முயன்றது

கருவுற்றப் பெண்ணாய்
நீர்சுமந்த கருத்த மேகங்கள்

ஒடுங்கிய சட்டத்துள்
இனியும்
ஒடுங்கி
என் பலம் சுருக்க மனமில்லை
என வெறுப்பில் புலம்பியது...

ஒன்றுக்குப் பத்துப்
பொருள்கொண்ட  அழகுத்தமிழ் வார்த்தைகள்

Sunday, May 1, 2016

வாழ்த்துரை...



தாய்மையின் வாஞ்சையுடன்
சமூகத்தின் பால் கொண்ட அதீத அக்கறையுடன்
ஒவ்வொரு படைப்பையும் கொடுக்கும்
திருமதி. கௌரி சிவபாலன் அவர்களின்
எழுத்தின்  தீவிர இரசிகன் நான்.

இதுவரை நேரடியாகவோ குரல் வழியோ கூட
தொடர்பு கொண்டதில்லை என்றாலும் கூட
ஒரு நாள் மின் செய்தி வழி , அவர்கள்
தங்கள் படைப்புகளை நூல்வடிவாகக்
கொண்டு வரத் திட்டமிட்டிருப்பதாகவும்
அதற்கு ஒரு நான்கு வரி வரும்படியாக
ஒரு வாழ்த்துப்பா  வழங்க முடியுமா
எனக் கேட்டிருந்தார்கள்

மனதிற்குப் பிடித்து நான் தொடர்கிற அனைத்துப்
பதிவுகளையும் முழுவதுமாகப்  படித்து
அதில் உள்ள சிறப்புகளை மிகச் சரியாகக்
குறிப்பிட்டுப்  பின்னூட்டமிடுவதாலும்

சில சமயங்களில், இது இப்படி இருந்தால்
இன்னும் சிறப்பாக இருக்கும் என
உரிமை எடுத்துப் பின்னூட்டமிடுவதாலும்,

பதிவர்கள் சிலர் தங்கள் நூல் வெளியீட்டின் போது
என்னிடம் உரிமையுடன் வாழ்த்துரையோ,
முன்னுரையோ கோருவது உண்டு

அந்த வகையில் இது என்னுடைய ஐந்தாவது
வாழ்த்துரை என நினைக்கிறேன்

ஜெர்மெனியில் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு
திருமதி. கௌரி சிவபாலன்  அவர்களின் 
"முக்கோண முக்களிப்பு "என்னும் நூல்
 ஸ்ரீலங்காவில் வெளியிடப்படுவது
மிக்க மகிழ்வளிக்கிறது

திருமதி.கௌரி சிவபாலன் அவர்கள்
பதிவுலகிலும், எழுத்துலகிலும் தொடர்ந்து
தன் சிறப்பான பதிவுகளைக் கொடுத்து
சிகரத்திலேயே தொடர்ந்து நிலைக்க
எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைப்
பதிவு செய்வதில் மிக்க மகிழ்வு கொள்கிறேன்

என்னுடைய வாழ்த்துப் பா

"தாய்மை நிரம்பி வழியும்
  தூய விரிந்த மனமும்
  ஆய்ந்து அறிந்துத் தெளிந்த
  அன்னைத் தமிழின் திறனும்

  வரமாய்ப் பெற்று "வலையில் "
   மலையாய் நிலைத்த கௌரி
   அறம்போல் என்றும்   உந்தன்
   எழுத்தும்  நிலைக்கும். வாழி  !  "
   

வாழ்த்துக்களுடன்...


மே தினச் சிறப்புப் பட்டி மன்றம்



நமது பதிவர் கவிஞர் முத்து நிலவன் ஐயா
அவர்கள் கலந்து கொண்ட மே தினச்  சிறப்புப்
பட்டி மன்ற நிகழ்வினைக்
கலைஞர் தொலைக்காட்சியில் கண்டேன்

முத்து நிலவன் ஐயா  தன் பதிவில்
குறிப்பிட்டிருப்பதைப் போல தொழிலாளர் தினத்தை
கௌரவிக்கும்படியாக கலைஞர் தொலைக்காட்சி
சிறப்புப் பட்டி மன்றத்திற்கு ஏற்பாடு செய்திருப்பது
முதலில் பாராட்டப் படவேண்டிய விஷயம்.

மதுரைதான் பட்ட மன்றத்திற்குப் பூர்வீகம்
மதுரை அரசமரம் பிள்ளையார் கோவில்தான்
அதற்கான ஆஸ்தான இடம்.

குன்றக்குடி அடிகளார் அவர்கள்தான்
அப்போதெல்லாம் ஆஸ்தான நடுவர்
.
அந்தக் காலங்களில் தமிழகத்தின் மிகச் சிறந்த
பேச்சாளர்கள் எல்லாம் வருடம் ஒருமுறை
நடைபெறும் இங்கு நடைபெறும் பட்ட மன்ற
நிகழ்வில் கலந்து கொள்வதில் அதிக
ஆர்வம் காட்டுவார்கள்

அப்போதைய பட்டிமன்றத் தலைப்புகள் எல்லாம்
அதிகம் இலக்கியம் மற்றும் இலக்கியக்
கதாபாத்திரங்கள் சம்பத்தப்பட்டதாகவே
இருக்கும் என்பதால் பேச்சில் அதிகம் பண்டை
இலக்கிய சாராம்சங்களே இருக்கும்.

ஒருமுறை தமிழர் மரபில் தாலி கட்டும்
 பழக்கம் உண்டா என்கிற தலைப்பில்,
ஒரு புறம் தலைமைப் பேச்சாளராக
கண்ணதாசன் அவர்களும் மறுபுறம்
ம.பொ.சி அவர்களும் நடுவராக அடிகளார்
இருந்து நடத்திய பட்டி மன்றம்
மிகச் சிறப்பானது, அந்தப் பட்டி மன்றப் பேச்சுக் கூட
புத்தகமாக வந்த நினைவு இருக்கிறது

அந்த வகையில் மதுரைக்காரர்களுக்கு இந்தப்
பட்டிமன்ற விஷயத்தில் கொஞ்சம் கூடுதல்
நெருக்கம் உண்டு.அந்த வகையில்தான் எனக்கும்.

( எதற்கு இத்தனைப் பீடிகை. என்றால்
காரணம் இருக்கிறது

ஒரு மாறுபட்ட விமர்சனம் வழங்குறோம்
என்றால்அதற்கான தகுதியை கொஞ்சம் விளக்கிப்
 போனால்தானே சரியாக இருக்கும்)

விளையாட்டுப் போட்டியில் ஜெயிக்க எப்படி
அணியின் தலைவர் மிக மிக முக்கியமோ
அதைப்போல பட்டி மன்றம் சிறக்க நடுவரின்
பங்களிப்பே மிக மிக முக்கியமானது

முன்பு அடிகளார் அவர்களின் தீர்ப்புக்காகவே
பட்டிமன்றம் முடிய 11 மணிக்கு மேல்
ஆனாலும் கூட ( பத்துக்கு மேல் பஸ் கிடையாது
ஆறு கிலோ மீட்டர் நடந்துதான் ஊருக்குப்
போகவேண்டும் )இருந்து கேட்டுவிட்டுத்தான்
போவோம்

இரு அணிகளின் கருத்துக்களைத்
தொகுத்துச் சொல்வதும் அதற்கு மிக மிக
அருமையாக மறுப்புச் சொல்வதும்
இறுதி நொடி வரை எப்பக்கம் தீர்ப்பு வழங்கப் போகிறார்
என்பதை யாரும் சிறிதும் யூகித்துவிட முடியாதபடி
இறுதிச் சொற்பொழிவு இருப்பதும் மிகவும்
இரசிக்கத் தக்கதாயிருக்கும்

தற்போது பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள்
இடையிடையே கருத்துச் சொன்னாலும்
அது மிகச் சுருக்கமாக பேச்சாளரின் சிந்தனையை
தடை செய்யாவண்ணம்
சட்டென சொல்லிப் போவது போலத்தான்
அப்போதும் அடிகளார் அவர்களும்
சொல்லிப் போவார்கள்

முன்னுரை, பேச்சாளர்கள் அறிமுகம், முடிவுரை தவிர
பிற இடங்களில் நடுவரின் குறுக்கீடு அதிகம் இருக்காது

நடுவர் லியோனி அவர்களின் பேச்சில் இவையெல்லாம்
நேர் எதிர்மாறாக இருப்பது இந்தப் பட்டி மன்றத்தில்
ஒரு குறை

இடையில் நடுவர் குறுக்கிட்டுப் பேசுகையில்
எப்போது முடிப்பார் என பேச்சாளரும்
புரிந்து கொள்ளமுடியாத அளவு சில சமயம்
மிக நீண்டும் சில சமயம் மிகச் சுருக்கியும்
இருப்பதால் தாளக்கட்டைப் பிடிக்கத் திணறும்
 பாடகனின் கஷ்டம் அனைத்துப்
பேச்சாளருக்கும் இருந்தது

மிகக் குறிப்பாக அதன் காரணமாகவே
வானொலி அடுத்து தொலைக்காட்சி என்கிற
விஷயத்தில் மிக அருமையாக ஒரு கோர்வையாக
ஒரு விஷயத்தைச் சொல்ல முயன்ற
முத்து நிலவன் அவர்களால் மிகச் சரியாகச்
சொல்ல இயலவில்லை என நினைக்கிறேன்

இன்னும் நிறைய எழுத ஆசை. ஆயினும் நீளம்
கருதி ஒரே ஒரு கருத்தை மிக அழுத்தமாகப் பதிவு
செய்து முடிக்கலாம் என நினைக்கிறேன்

தொலைக்காட்சியில் தோன்றிப் பேசுவதும்
பட்டிமன்றத்திற்கென உள்ள சில ஜன ரஞ்சகமான
துணுக்குகளை அதிகம் சொல்வதும்
தலைப்பை ஒட்டியும் பேசவேண்டுமே என்கிற
விதத்தில் அது குறித்தும் கொஞ்சம்
சொல்லிப் போவதுமான இது போன்ற
பட்டிமன்ற குழுக்கள் .....

நமது முத்து நிலவன் ஐயா
போன்று, கிடைக்கிற வாய்ப்பை மிகச் சரியாக
முறையாகப் பயனபடுத்த வேண்டும்
தலைப்பை ஒட்டி விலகாது
தலைப்பை மிகவும் நீர்த்துப் போகச் செய்து விடாது
பேசவேண்டும் என்னும் கொள்கை, கோட்பாடு
கொண்டவர்களுக்கு ( ஐயா அவர்களின் பேச்சை
கேட்டவர்களுக்கு நான் சொல்ல வருகிற விஷயம்
தெளிவாகப் புரியும் ) சரிப்பட்டு வராது என்பதே
எனது ஆணித்தரமான கருத்து

வாழ்த்துக்களுடன்